Wednesday, August 7, 2024

சிலுவையடியில் தியானம்.(தொடர்ச்சி

சிலுவையடியில் தியானம்.
(தொடர்ச்சி)

தேவ சம்பந்தமான புண்ணியங்கள் மூன்று.

விசுவாசம்(Faith) 
நம்பிக்கை (Hope)
 இறையன்பு (Charity)

புண்ணியங்களுக்கு எதிரானவை பாவங்கள்.

நம்பிக்கைக்கு எதிரானது நம்பிக்கையின்மை என்னும் பாவம்.

Hope X Despair.

நாம் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும் அதற்கு மன்னிப்பு உண்டு என்று நாம் நம்ப வேண்டும்.

இயேசுவைக் கொன்றவர்களுக்கே மன்னிப்பு உண்டு என்பதை இயேசு சிலுவையில் தொங்கியபோது சொன்ன செபமே உறுதிப் படுத்துகிறது.

இயேசுவை சிலுவை மரணத்துக்குத் தீர்ப்பிட்ட பிலாத்துவே கிறிஸ்துவனாக மாறிவிட்டான் என்று வரலாறு கூறுகிறது.

https://www.catholic.com/encyclopedia/pontius-pilate

வழியே சென்று விபரத்தை அறிந்து கொள்ளலாம்.

" குளிர் காலத்திற்குமுன் வர முழு முயற்சி செய். ஆபூல், பூதன்சு, லீனு, கிளாதியா மற்ற எல்லாச் சகோதரர்களும் சகோதரிகளும் உனக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்."
(2 திமொத்தேயு 4:21)

இந்த வசனத்தில் வரும் கிளாதியா பிலாத்துவின் மனைவி.

புனித சின்னப்பரால் மனம் திருப்பப்பட்டவர்.

இப்போது இயேசுவின் வார்த்தைகளுக்கு‌ வருவோம்.

அவநம்பிக்கை என்னும் பாவத்துக்குப் பரிகாரமாகத்தான்

"இறைவா, இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?"

என்று கூறுகிறார்.

பாவம் தவிர மற்ற அனைத்து மனித பலகீனங்களையும் தன்னுடையவையாக ஏற்றுக் கொண்டதின் விளைவு இது.

அந்த வார்த்தைகளைக் கூறும் அளவிற்கு மன வேதனையை அனுபவித்தார், நம்பிக்கையின்மை என்னும் பாவத்துக்குப் பரிகாரமாக.

அவரே கடவுள். கடவுள் எப்படித் தன்னையே கைவிட முடியும்?

மனிதர்கள் தங்கள் உடல்
மூலமாகவும், மனம் மூலமாகவும் செய்த எல்லா பாவங்களுக்கும் இயேசு தனது பாடுகளின் மூலம் பரிகாரம் செய்து விட்டார்.

நாம் செய்யும் அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்பு உண்டு,

நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவற்றுக்காக வருத்தப்பட்டு, பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டியதுதான்.

அடுத்து இயேசு "தாகமாயிருக்கிறேன்". 
என்று கூறுகிறார்.

அவரது ஆன்மாக்களுக்கான தாகம் .

அவரது தாகத்தைத் தணிக்க வேண்டியது நமது கடமை.

முதலில் அவர் அருந்த நம்மையே அவருக்குக் கொடுக்க வேண்டும்.

அடுத்து நம்மால் எத்தனை ஆன்மாக்களை மனம் திருப்ப முடியுமோ அத்தனை ஆன்மாக்களை மனம் திருப்ப வேண்டும்.

இயேசு நமது அன்பர்.

அன்பே உருவான நம் கடவுள்.

அவருக்கு ஆற்றக்கூடிய மிகப்பெரிய தொண்டு இதுதான்.

இறுதியாக இயேசு கூறிய வார்த்தைகள்,

 "தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன். "

இயேசுவின் உலக வாழ்வின் இறுதி வார்த்தைகள் இவைதான்.

இந்த வார்த்தைகளோடு அவர் மரணம் அடைந்தார்.

தனது உடல் சார்ந்த மரணத்தால் நமது ஆன்மீக மரணத்தை 
வென்றார்.

பாவம்தான் நமது ஆன்மாவை மரணம் அடையச் செய்கிறது.

பாவ மன்னிப்பு பெறும் போது ஆன்மா உயிர் பெறுகிறது.

மறுநாள் ஓய்வு நாள் ஆகையால் இன்றே இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து இறக்கி விட வேண்டும்.

அவர் இறந்து விட்டார் என்பதை உறுதி செய்வதற்காக நூற்றுவர் தலைவர் இயேசுவின் விலாவை ஒரு ஈட்டியால் குத்துகிறார்.

கொஞ்சம் மீதியிருந்த இரத்தமும் வெளியேறுகிறது.

வெளியேறிய இரத்தம் நூற்றுவர் தலைவரின் கண்களில் விழுகிறது.

அவரைப் பாருங்கள்.

அவர் கண்களைத் துடைத்துக் கொண்டு இயேசுவை உற்று நோக்குகிறார்.

"இயேசுவே நன்றி. எனது கண்கள் பார்வை சரியில்லாமல் இருந்தன.
உமது இரத்தம் பட்டவுடன் கண்கள் நன்கு குணமாகி விட்டன.

உமக்குத் தீமை செய்த எனக்கு நன்மை செய்யும் விதமாக இறந்த பிறகும் புதுமை செய்திருக்கிறீர்,

நன்றி தேவனே.

உம்மை கல்வாரி மலைக்கு அழைத்து வந்த படைத் தலைவன் நான்.

இந்த வினாடி முதல் நான் உமக்கு அடிமை."


தனது சிலுவை மரணத்தின் மூலம் நமக்கு இயேசு கூறுவது என்ன?

"நான் அன்பு.
அன்புதான் நான்.

நீங்கள் எனக்கு உரியவர்கள்.
ஆனால் நீங்கள் உங்களையே பாவத்துக்கு அடிமைகள் ஆக்கிக் கொண்டீர்கள்.

என் உயிரைக் கொடுத்து உங்களைப் பாவத்திலிருந்து மீட்டிருக்கிறேன்.

இனிமேல் என்னை விட்டுப் போய் விடாதீர்கள்.

என் தந்தையின் பிள்ளைகள் நீங்கள்.

சகோதர உரிமையோடு கேட்கிறேன்.

நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பது போல 

நான் உங்களுள் இருக்கிறேன்,
நீங்கள் என்னுள் இருங்கள்.

நித்திய காலமும் ஒன்றாக இருப்போம்."


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment