Sunday, August 18, 2024

"வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்." (அரு.6:57)

' வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்." 
(அரு.6:57)

அன்பே கடவுள்.

பரிசுத்த தம திரித்துவத்தின் அன்பு வாழ்வின் மகத்துவத்தை விளக்கும் இறைவாக்கு.

ஈருடல் ஓருடலாய் வாழும் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் கூறிக் கொள்வது,

"உன்னால் நான் வாழ்கிறேன்.
நீயின்றி நானில்லை."

இவ்வாக்கியங்கள் அவர்களின் அன்பின் நெருக்கத்தை வெளிக் கொணர்கின்றன.

இருவர் வாழ்வதும் ஒரு வாழ்வுதான் என்று கூறுவதன் மூலம் இருவரும் ஒருவர்தான் 
என்று அழுத்தமாகக் கூறுகின்றன.

இயேசு "நானும் அவரால் வாழ்கிறேன்" என்று கூறும்போது

தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவின் நெருக்கத்தை வலியுறுத்துகிறார்.

தந்தை சுயம்பு, நித்தியர்.
மகன் சுயம்பு, நித்தியர்.

தந்தை நித்திய காலமாக மகனைப் பெறுகிறார்.

தந்தைக்கும் துவக்கமில்லை.
மகனுக்கும் துவக்கமில்லை.

இருவரும் ஒருவருள் ஒருவர் இருக்கும் நெருக்கத்தின் ஆழத்தை வலியுறுத்தவே

"நானும் அவரால் வாழ்கிறேன்."
என்று இயேசு கூறுகிறார்.

இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் நாம் உணவாக உட்கொள்ளும் போது,

தந்தையையும் மகனையும் போல,

நாம் (இயேசுவும் நாமும்) ஒருவருள் ஒருவராக ஒன்றாகி விடுவோம்.

நாம் திவ்ய நற்கருணை அருந்தும் போது நமக்கும் இயேசுவுக்கும் ஏற்படும் உறவின் நெருக்கத்தை தம திரித்துவத்தின் ஆட்களுக்குள் உள்ள உறவின் நெருக்கத்துக்கு ஒப்பிடுகிறார் இயேசு.

இயேசு உணவாக நம்முள் வரும்போது நாம் இயேசுவோடு ஒருவர் ஆகிவிடுகிறோம்.

When we receive Holy Communion we become one with Jesus.

"வாழ்வது நானல்ல, இயேசு என்னில் வாழ்கிறார்"  என்ற புனித சின்னப்பரின் கூற்று நமக்கும் பொருந்தும்.


'இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்."
(கலாத்தியர் 2:20)

நாம் திருவிருந்து முடிந்து வீட்டுக்கு வரும்போது இயேசுதான் வீட்டுக்கு வருகிறார். (நம் உருவத்தில்)

அன்று அன்னை மரியாளின் வீட்டுக்கு வந்த அவளுடைய மகனாகிய இயேசு நம் வீட்டுக்கு வருகிறார்.

அந்த உணர்வுடன் நற்கருணை நாதரோடு நாம் வீட்டுக்கு வந்தால் இயேசு மரியாளின் வீட்டில் எப்படி நடந்து கொண்டாரோ அதே போல் நாம் நமது வீட்டில் நடந்து கொள்வோம்.

கோவிலுக்குப் போகுமுன் கணவனுக்கும் மனைவிக்கும்‌ சண்டை.

மூஞ்சைத் தூக்கிக் கொண்டு கோவிலுக்குப் போகிறார்கள்.

பூசையும் காண்கிறார்கள்.

நன்மையும் எடுக்கிறார்கள்.

பூசை முடிந்து வீட்டுக்கு வருகிறார்கள்.

சண்டை தொடர்கிறது.

பேசிச் சண்டை போட்டு பேசாமல் மூஞ்சைத் தூக்கிக் கொண்டு ஆளுக்கொரு பக்கம் இருக்கிறார்கள்.

இயேசு இப்படி நடந்து கொள்வாரா?

மன்னிக்கும் தேவன் இயேசு.
தீமைக்கு நன்மை செய்யும் தேவன் இயேசு.

அப்படியானால் இயேசுவை உட்கொண்டவர்கள் இப்படி நடந்து கொண்டால் அவர்கள் சரியான மன நிலையில் இயேசுவை உட்கொள்ளவில்லை என்று அர்த்தம்.

குளிக்கப் போய் சேற்றை வாரிப் பூசிக் கொண்டார்கள் என்று அர்த்தம்.

இயேசுவும் தந்தையும் ஒன்றித்து வாழ்வது போல நாமும் இயேசுவும் ஒன்றித்து வாழ்ந்தால் மண்ணகத்திலேயே விண்ணக வாழ்வை வாழ ஆரம்பித்து விட்டோம் என்று அர்த்தம்.

உரிய தயாரிப்புடன் திருவிருந்தை அருந்துவோம்.

இயேசுவாக மாறுவோம்.

இயேசுவாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment