Friday, August 2, 2024

விசுவாச வாழ்வில்பழைய ஏவாளும்புதிய ஏவாளும்.

விசுவாச வாழ்வில்
பழைய ஏவாளும்
புதிய ஏவாளும்.

ஆண்டவர் நமக்குச் சொன்னவை யாவும் நிறைவேறும் என்று உறுதியாக நம்புவது விசுவாசம்.

விசுவாச வாழ்வு அர்ப்பண வாழ்வு.

A life of total surrender to the will of God.

பழைய ஏவாள் மனுக்குலத்தின் முதல் தாய்.

புதிய ஏவாள் மரியாள் கிறித்தவக் குலத்தின் முதல் தாய்.

பழைய ஏவாள் பாவமில்லாத பரிசுத்த நிலையில் படைக்கப் பட்டாள்.

புதிய ஏவாள் தன் தாயின் வயிற்றில் பாவ மாசின்றி உற்பவித்தாள்.

பழைய ஏவாள் பரிசுத்த நிலையில் படைக்கப் பட்டாலும் பாவத்தால் அதை இழந்தாள்.

புதிய ஏவாள் வாழ்நாள் முழுவதும் பாவ மாசின்றி வாழ்ந்ததோடு பரிசுத்தத் தனத்தில் வளர்ந்தாள்.

பழைய ஏவாள் தலைப் பிள்ளையாகப் பெற்றெடுத்தது ஒரு கொலைகாரனை, காயீனை.

புதிய ஏவாள் ஒரே பிள்ளையாகப் பெற்றெடுத்தது மனுக்குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகக் கொலை செய்யப்படவிருந்த இயேசுவை.

பழைய ஏவாள் ஆன்மீக ரீதியாக சாத்தானால் கொல்லப்பட்டாள். (சாவான பாவத்தில் விழுவது ஆன்மீக மரணம்.)

புதிய ஏவாள் சாத்தானின் தலையை நசுக்கினாள். (பாவத்தின் நிழல் கூட அவள்மேல் படவில்லை.)

நமது முதல் பெற்றோரைப் பாவத்தில் விழத்தாட்டிய சாத்தானைக் கடவுள் சபிக்கும்போது,


" உனக்கும் பெண்ணுக்கும்,

உன் வித்துக்கும் அவள் வித்துக்கும்

பகையை உண்டாக்குவோம்,

அவள் உன் தலையை நசுக்குவாள்." என்றார்.

சாத்தான் முதல் ஏவாளை ஏமாற்றியது.

புதிய ஏவாள் சாத்தானின் தலையை நசுக்கி, அதைச் செயலற்றதாக ஆக்கிவிட்டாள்.

இது அவளுடைய சொந்த பலத்தினால் அல்ல,

கடவுளின் விசேச வரத்தினால்.

"இதோ ஆண்டவரின் அடிமை"

என்ற‌ வார்த்தைகளின் மூலம் தன்னை‌ முற்றிலுமாக இறைப் பணிக்கு அர்ப்பணித்தாள்.

அடிமைக்குச் சுதந்திரம் கிடையாது.

ஒவ்வொரு வினாடியும் தன் தலைவருக்காக,

தலைவருக்காக மட்டும் வாழ வேண்டியது அவளின் கடமை.

அடிமையின் ஒவ்வொரு அசைவும் தனது தலைவரின் விருப்பப்படி தான் இருக்க வேண்டும்.

தனது சுதந்திரத்தை முழு மனச் சுதந்திரத்தோடு தான் மரியாள் இறைவனுக்கு ஒப்புக்‌ கொடுத்தாள்.

"இறைவா, நான் உமது அடிமை.

உமது விருப்பம் தான் எனது விருப்பம்.

நான் வாழ்வது எனக்காக அல்ல, உமக்காக மட்டுமே."

அடிமை தலைவர் சொல்வதற்கு உடனடியாகக் கீழ்ப்படிய வேண்டும்.

தலைவர் சொல்வது புரிகிறதோ, புரியவில்லையோ, ஏன், எதற்கு என்று எதிர்க் கேள்வி கேட்காமல் கீழ்ப்படிய வேண்டும்.

மரியாள் நிறைமாதக் கற்பிணி.

நாசரேத்தில் சொந்த வீட்டில் தான் இருக்கிறாள்.

ஆனால் குழந்தை பெத்லகேமில் பிறக்க வேண்டும் என்பது இறைவனது விருப்பம்.

சூசையப்பரும், மரியாளும் பெத்லகேமுக்குப் போகிறார்கள், நடைப் பயணம், 90 மைல்கள்.

உலகைப் படைத்த கடவுள் பிறப்பதற்கு சாணி நாற்றம் வீசும் மாட்டுத் தொழுவத்தைத் தேர்ந்தெடுக்கிறார்.

அங்கேயே போகிறார்கள்.

அங்கே தான் இயேசு பிறக்கிறார்.

 தன்னை நம்புவோருக்குத் தன்னையே உணவாக அளிக்கப் போவதன் முன் அடையாளமாகக் குழந்தை இயேசு தீவனத் தொட்டியில் படுக்கிறார்.

தானே நல்ல ஆயன் என்பதற்கு முன் அடையாளமாக அவரை ஆராதிக்க முதலில் ஆயர்கள் வருகிறார்கள்.

 ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, 

"நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும்." என்கிறார்.

உடனே யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

மாதாவின் கையில் இருப்பது இறைமகன்.

"கடவுள் ஒரு மனிதனுக்குப் பயந்து தப்பி ஓட வேண்டுமா?"

என்று மரியாள் தன் மகனிடம் கேட்கவில்லை.

ஏனெனில் அவள் கடவுளின் அடிமை.

"நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும்."

இஸ்ரயேல் நாட்டுக்கு வந்தார்கள்.

"கலிலேயாவுக்குப் போங்கள்."

போனார்கள்.

 நாசரேத்து கலிலேயாவில்தான் 
இருக்கிறது.

உலகைப் படைத்த கடவுளையே கையில் வைத்துக் கொண்டு

இறைத்தூதரின் சொல்லுக்கு அப்படியே கீழ்ப்படிந்தாள் மரியாள்,

ஏனெனில் அவள் கடவுளின் அடிமை.

இங்கே இயேசுவின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.

" கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்" 
(மத்தேயு.20:16)

மரியாள் தன்னைக் கடைசியானவளாகக்
(அடிமை) கருதினாள்.

முதன்மையானவளாக (கடவுளின் தாய்) மாறினாள்.

ஆண்டவரின் அடிமை = விண்ணக, மண்ணக அரசி.

12 வயதில் காணாமல் போன இயேசு தன் பெற்றோரிடம் 

 "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்றார். 

அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. 

அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்."

இயேசு கடவுள். அவர் சொல்வதும், செய்வதும் புரிகிறதோ இல்லையோ

அவற்றை அவள் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தாள்.

ஆண்டவருடைய உண்மையான அடிமை.

விசுவசிக்க வேண்டிய சத்தியங்கள் நமக்குப் புரிய வேண்டிய அவசியம் இல்லை.

சொன்னவர் கடவுள், ஆகவே விசுவசிக்கிறேன்.

குழந்தை முதன் முதலில் தாயைப் பார்த்து ஒட்டிய உதடுகளைத் திறக்கும் போதே மா என்ற சத்தம் வந்தது.

தினமும் பசியெடுக்கும் போதெல்லாம் தாயை மா என்று அழைத்தது.

அதைப் பொறுத்த வரை மா என்றால் பால் தருபவள்.

நாட்போக்கில் மா அம்மாவாயிற்று.

அம்மா அவளது கணவனைக் காண்பித்து அப்பா என்று சொல்லிக் கொடுத்தாள்.

குழந்தைக்கு அம்மா அப்பா உறவு என்றால் என்னவென்றே தெரியாது.

சொன்னாலும் புரியாது.

ஆனாலும் பால் ஊட்டியவள் சொன்னதை ஏற்றுக் கொண்டது.

அதுதான் விசுவாசம்.

மூன்று ஆட்கள் ஒரே கடவுள்.

இது புரிந்த பின்பு தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒன்று, இரண்டு, மூன்று ஆகியவை கணிதக் கருத்து.

(Mathematical concept.)

கடவுள் கணிதத்துக்கு அப்பாற் பட்டவர்.

(God is beyond Mathematics.)

அடிப்படையில் இயேசுவைக் கடவுள் என்று ஏற்றுக் கொண்டேன்.

கடவுள் சொல்வதை எல்லாம் உண்மை என்று ஏற்றுக் கொள்கிறேன்.

இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு நமது விசுவாசம் ஒரு குருட்டு நம்பிக்கை.

நமக்கு விசுவாசம் தான் உயிர்.

முழுவதையும் முழுமையாக விசுவசிக்க வேண்டும்.

புரிவதை மட்டும் ஏற்றுக் கொள்வது விசுவாசம் அல்ல,
 அறிவு.

பூமி உருண்டை என்பதை நிரூபிக்க முடியும், அதைப் பற்றித் அறிந்திருப்பது புவியியல் அறிவு.

மோட்சத்தை நிரூபிக்க முடியாது.
அதை ஏற்றுக்கொள்வது விசுவாசம்.

பழைய ஏவாளிடம் விலக்கப் பட்ட கனியைச் சாப்பிடக்கூடாது என்று கடவுள் சொன்னார் என்ற அறிவு இருந்தது. விசுவாசம் இல்லை.

புதிய ஏவாளிடம் கணவன் உதவியின்றி கன்னியால் கருத்தரிக்க முடியாது என்ற அறிவு இருந்தது.

ஆனாலும், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்ற இறைச் செய்தியை ஏற்று, கபிரியேல் தூதர் கொண்டு இறை வாக்கை ஏற்றுக் கொண்டாள், விசுவசித்தாள்.
(லூக்கா.1:37)

முழுமையாக விசுவசித்தாள். முழுமையாக வாழ்ந்தாள்.

நாம் எப்படி?

மரியாளுக்கு இயேசுவை உற்பவிக்கும்போது இருந்த விசுவாசம் அவரது பாடுகளின் போதும், மரணத்தின் போதும் இருந்தது.

நமக்கு இன்பத்தின்போது இருந்த விசுவாசம் துன்பத்தின்போது இருக்கிறதா?

வெற்றியின் போது இருந்த விசுவாசம் தோல்வியின்போது இருக்கிறதா?

விசுவசிப்போம்.

எல்லாச் சூழ்நிலைகளிலும் விசுவசிப்போம்.

மரணம் வரை விசுவசிப்போம்.

மரணத்துக்குப் பின் நமக்கு விசுவாசம் தேவையில்லை.

நாம் விசுவசித்ததை நேரில் காண்போம்.

மூன்று தேவ சம்பந்தமான புண்ணியங்களில் அன்பு மட்டும் தான் என்றென்றும் நிலைத்திருக்கும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment