Friday, August 30, 2024

"அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல."(யாக்கோபு 1:17)

"அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல."
(யாக்கோபு 1:17)

கடவுள் நிறைவானவர். (Perfect)
ஆகவே அவரால் வளரவோ, குறையவோ முடியாது.

சர்வ ஞானமுள்ளவர்.
முக்காலமும் அறிந்தவர்.

சர்வ வல்லவர். அவரால் முடியாதது எதுவுமில்லை 


 கடவுளின் இயல்பு, தன்மை மற்றும் குணங்கள் மாறாதவை,  நித்தியமானவை.

துவக்கமோ, முடிவோ இல்லாதவர்.

காலங்களுக்கும், இடத்துக்கும் அப்பாற்பட்டவர்.
(Beyond time and space)

காலமும் இடமும் அவரால் படைக்கப்பட்டவை.

கடவுள் மாற முடியாதவர் என்றால் நாம் ஏன் நமது செபத்தின் மூலம் அவரிடம் உதவி கேட்கிறோம்?

நம் ஒவ்வொருவர் குறித்தும் அவரிடம் நித்திய காலத் திட்டம் ஒன்று இருக்கும்.

அவரது திட்டத்தை நம்மால் மாற்ற முடியாது.

எல்லாம் அவரது திட்டப்படி தான் நடக்கும்.

பிறகு எதற்கு செபம்?

நம்மைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொண்டால் இந்த சந்தேகம் வராது.

நாம் கடவுளால் படைக்கப்பட்டவர்கள்.

காலத்துக்கும் இடத்துக்கும் உட்பட்டவர்கள்.

வளர வேண்டியவர்கள், ஆகவே மாறக்கூடியவர்கள்.

பரிபூரண சுதந்திரம் உள்ளவர்கள்.

நமது சுதந்திரத்தில் கடவுள் குறுக்கிட மாட்டார்.

ஆனாலும் நாம் நமது சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவோம் என்று கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

நமது சுதந்திரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துவோம் என்ற ஞானத்தின் அடிப்படையில்தான் நம்மைப் பற்றிய திட்டத்தைத் தீட்டுவார்.

நமது இன்றைய செபத்துக்கான பதில் நித்திய காலமாகத் தயாராகி விடும்.

அந்த திட்டத்தில் மாற்றம் இருக்காது.

நாம் சுதந்திரமாகச் செயல்படுவதால் நமது செயல்களுக்கு நாம் தான் பொறுப்பு.
(We are responsible for what we do.)

ஆதாம் ஏவாளைப் படைக்கத் திட்டமிட்டபோதே அவர்கள் பாவம் செய்வார்கள் என்று அவருக்குத் தெரியும்.

ஆகவே மனித குல மீட்பைப் பற்றியும் அவர் நித்திய காலமாகத் திட்டம் தீட்டி விட்டார்.

ஆகவே மனிதனைப் படைக்கும் திட்டமும், அவர் மனிதனாகப் பிறக்கும் திட்டமும் நித்தியமானவை.

நமது சுதந்திரச் செயல்பாட்டின் அடிப்படையில் நம்மைப் பற்றி திட்டமிடுவதால் அதை மாற்ற வேண்டிய அவசியமே ஏற்படாது.

யூதாசைப் படைக்கத் திட்டமிட்டபோதே அவன் அவரைக் காட்டிக் கொடுப்பான் என்று அவருக்குத் தெரியும்.

காட்டிக் கொடுத்தது அவனது சுதந்திரமான செயல்.

அவனது சுதந்திரத்தில் அவர் குறுக்கிடவில்லை.

ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கிறேன்.

நாளைக்கு நேர்காணல்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்."

இயேசுவிடம் கேட்கிறேன்.

வேலை கிடைத்தது.

நான் நேற்று செபித்ததால் வேலை கிடைத்ததா?

இயேசுவின் நித்திய காலத் திட்டத்தினால் கிடைத்ததா?

நான் நேற்று செபிக்கவிருந்தது நித்திய காலமாக இயேசுவுக்குத் தெரியும்.

 தெரிந்ததன் அடிப்படையில் அவர்  வேலை தருவதென்று நித்திய காலமாகத் திட்டமிட்டு விட்டார்.

எனது செபமும், கடவுளின் திட்டமும் தான் வேலை கிடைத்ததன் காரணம்.

கடவுள் காலத்திற்கு வெளியே இருந்து கொண்டு காலத்தைப் பார்க்கிறார்.

முக்காலமும் நடப்பது எல்லாம் அவருக்கு பார்க்கும் வினாடியில் தெரியும்.

அதன் அடிப்படையில் தான் உலகம் பற்றிய மாறாத திட்டம் இருக்கும்.

 "கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார்."
(தொடக்கநூல் 2:8)

"எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார்."
(தொடக்கநூல் 3:23)

ஏதேன் தோட்டத்தில் மனிதனை வாழ வைத்த கடவுள்,

அவன் பாவம் செய்தபின் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார். 

கடவுள் மாறவில்லையா?

கடவுள் மாறவில்லை.
மாறியது மனிதன்.

தோட்டத்தை விட்டு வெளியேற்றப் பட்டது பாவத்தின் விளைவு.

வெளியேற்றப் பட்டது கடவுளின் திட்டம் தான்.
காரணம் மனிதன் செய்த பாவம்.

கடவுள் அளவில்லாதவர்.
மனிதன் அளவுள்ளவன்.

கடவுள் தன்னை மனிதகுலத்திற்கு காலப்போக்கில் படிப்படியாக வெளிப்படுத்தினார்.

 வெளிப்படுத்துதல் (revelation). பழைய ஏற்பாட்டில் தொடங்கி இயேசு கிறிஸ்துவின் வருகையில் நிறைவடைந்தது.
 
God revealed himself to mankind gradually over time, beginning in the Old Testament and culminating in the coming of Jesus Christ: 

"மூவொரு இறைவன்" உண்மை வெளிப்படுத்துதல் இயேசு வழியாக முழுமை அடைந்தது.

கடவுளும் மாறாதவர்.
அவரைப் பற்றிய விசுவாசச் சத்தியங்களும் மாறாதவை.

ஆனால் நாம் மாற வேண்டும்.

ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment