Wednesday, July 31, 2024

மாதாவின் விசுவாசமும், வாழ்க்கைப் பயணமும்.

மாதாவின் விசுவாசமும், வாழ்க்கைப் பயணமும்.

"மரியாள் வார்த்தையைத் தன் வயிற்றில் கருவுருமுன் தன் இதயத்தில் கருவுற்றாள்."
(புனித அகுஸ்தீன்)

Mary conceived the Word in her heart, before she conceived him in her womb.
(St. Augustine)

அன்னை மரியாளின் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவையும் அவளது விசுவாசமே தீர்மானித்தது.

மோட்சத்தில் விசுவாசம் இருக்காது. ஏனெனில் நாம் உலகில் விசுவசித்த அனைத்தையும் நேருக்கு நேர் காண்போம்.

மாதா விண்ணகம் சென்ற பிறகுதான் இறைமகனை நேருக்கு நேர் பார்ப்பாள்.

அதே இறைமகன் தான் உலகில் அவள் வயிற்றில் மனுமகனாகப் பிறந்தார்.

ஆனால் அவரை மனுமகனாகப் பார்த்தாள், இறை மகன் என்று விசுவசித்தாள்.

அவரிடம் பிறந்து வாழ்ந்தது கடவுள்.

ஆனால் பெத்லகேமிலும் சரி, எகிப்திலும் சரி, நாசரேத்தில் சரி

அவளது வீட்டு வேலையை அவள்தான் பார்த்தாள்.

இயேசுவில் இறைமகனை விசுவசித்த அவளுக்கு சமையல் வேலையில் சம்மனசுக்கள் வந்து உதவி செய்யவில்லை.

வீட்டைச் சுத்தம் செய்தல், சமையல், துணிகளைத் துவைத்தல், இயேசுவுக்கும் சூசையப்பருக்கும் உணவு கொடுத்தல் போன்ற அனைத்து வேலைகளையும் அவளே செய்தாள்.

"உண்டாகுக" என்ற ஒற்றை வார்த்தையால் உலகைப் படைத்தவர் இயேசு.

ஆனால் குடும்ப வாழ்வின் போது ஒற்றை வார்த்தையால் உணவை உண்டாக்கவில்லை.

சூசையப்பர் தச்சுத் தொழில் செய்து தான் குடும்பத்தைக் காப்பாற்றினார்.

அவர் வாங்கி வந்த உணவுப் பொருட்களைக் கொண்டுதான் மாதா சமைத்து மகனுக்கும், கணவருக்கும் பரிமாறினாள்.

மரியாள் விசுவாசத்தில்தான் கடவுளாகிய தன் மகனுடன் வாழ்ந்தார்.

பொது வாழ்வின் போது 5 அப்பங்களை 5000 அப்பங்களாக மாற்றிய இயேசு வீட்டில் அப்படிச் செய்யவில்லை.

தண்ணீரை திராட்சை இரசமாகவோ, Apple juice ஆகவோ மாற்றவில்லை.

தண்ணீரைத் தண்ணீராகத்தான் குடித்தார்கள்.

அன்னை மரியாள் நம்மைப் போல சாதாரண வாழ்க்கை தான் வாழ்ந்தாள், ஆனால் ஆழ்ந்த விசுவாசத்தோடு வாழ்ந்தாள்.

பன்னிரண்டு வயதில் இயேசு காணாமல் போன போது,

"கடவுள் தானே, எங்கும் இருப்பார், நசரேத்திலும் இருப்பார்" என்று நினைத்து மாதாவும் சூசையப்பரும் வீட்டுக்குப் போகவில்லை.

மனித மகனாகிய அவரைத் தேடிக் கண்டுபிடித்து கூட்டிக்கொண்டு தான் போனார்கள்.

ஆனால் அவர்களுடைய விசுவாசம் ஆழமாக இருந்தது.

இயேசு 30 ஆண்டு காலம் உலகத்திலிருந்து மறைந்த வாழ்வு வாழ்ந்தார்,

அதாவது தான் கடவுளென்று உலகுக்குக் காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்தார். 

மாதாவைப் பொறுத்த மட்டில் கூட அது மறைவான வாழ்க்கை தான்.

பொது வாழ்வின் போது
தான் இறைமகன் என்று வெளிப் படுத்த இயேசு நிறைய புதுமைகள் செய்தார்.

ஆனால் நாசரேத்தூர் வாழ்வின் போது தன் பெற்றோரிடம் புதுமைகள் எதுவும் செய்யவில்லை.

பொது வாழ்வில் இறந்தோருக்கு உயிர் கொடுத்தார்.

ஆனால் நாசரேத் வீட்டில் தந்தை சூசையப்பர் அவர் மடியில் தான் தலை வைத்து உயிர் நீத்தார்.

இயேசு அவரைப் பிழைக்க வைக்கவில்லை.

மாதாவும் சூசையப்பரும் இயேசுவோடு விசுவாசத்தோடு தான் வாழ்ந்தார்கள்.

தங்கள் பராமரிப்பில் வாழ்ந்த இயேசு இறைமகன் என்று உறுதியாக விசுவசித்தார்கள்.

நமது விசுவாசத்துக்கும், மரியாளின் விசுவாசத்துக்கும் பாரதூர வித்தியாசம் இருக்கிறது.

அவள் வயிற்றில் இயேசு தூய ஆவியின் வல்லமையால் மட்டும் உற்பவித்ததால் அவளது விசுவாசம் நூறு சதவீதம்.  

ஊனக்கண்ணால் மனித இயேசுவைப் பார்த்தாலும் அவர் இறைமகன் என்று நூறு சதவீதம் தெரியும்.

ஏனெனில் தூய ஆவியின் வல்லமையால் உற்பவித்தவள் அவள்.

முன்னறிவித்தவர் கபிரியேல்.

நூற்றுக்கு நூறு அனுபவம் அவளுடையது.

நமக்கு இயேசுவோடு நேரடித் தொடர்பு எதுவும் இல்லை.

ஆகவே நமக்கு விசுவாசம் கட்டாயம் தேவை.

ஆனால் மரியாள் இயேசுவோடு நேரடித் தொடர்பு உள்ளவள், அவளுக்கு எதுக்கு விசுவாசம்?

 குழந்தை இயேசு துணிகளால் சுற்றப்பட்டுத் தீவனத்தொட்டியில் கிடத்தப் பட்டிருக்கிறார்.

ஆனால் அவர் அரசர்.

(அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்று கபிரியேல் அறிவித்திருந்தார்.)

தீவனத்தொட்டியில் கிடத்தப் பட்டிருக்கும் குழந்தையை அரசர் என்று ஏற்றுக் கொள்ள விசுவாசம் வேண்டும்.

மனிதப் பெண்மணியிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் குழந்தையை இறைமகன் என்று ஏற்றுக் கொள்ள விசுவாசம் வேண்டும்.

மரியாளின் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்ல ஏரோது திட்டமிடுகிறார்.

குழந்தையை ஏரோதுவிடமிருந்து காப்பாற்ற எகிப்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

தப்பிச் செல்லும் குழந்தையைக் கடவுள் என்று ஏற்றுக் கொள்ள விசுவாசம் வேண்டும்.

மரியாளிடம் விசுவாசம் இருந்தது.


நமக்கு?

 திருப்பலியின்போது வெண்ணிற அப்பம் இயேசுவாக மாறுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள

நமக்கு விசுவாசம் வேண்டும்.

நமக்குள் மூவொரு இறைவன் வாழ்கிறார் என்பதை ஏற்றுக் கொள்ள

நமக்கு விசுவாசம் வேண்டும்.

நமக்கு வரும் துன்பங்களைச் சிலுவைகளாக ஏற்றுக் கொண்டால்

நாம் இயேசுவின் சீடர்களாக மாறுவோம் என்பதை ஏற்றுக் கொள்ள

நமக்கு விசுவாசம் வேண்டும்.

குருவானவருக்கு நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள

நமக்கு விசுவாசம் வேண்டும்.

நமது மரணத்தில் தான் நமது நிலைவாழ்வு ஆரம்பிக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள

நமக்கு விசுவாசம் வேண்டும்.

ரத்தினச் சுருக்கமாக,

நல்ல கிறிஸ்தவனாய் வாழ நமக்கு விசுவாசம் வேண்டும்.

அன்னை மரியாள் விசுவாசத்தில் வாழ்ந்தது போல நாமும் விசுவாசத்தில் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment