Tuesday, July 9, 2024

"அப்படிச் செல்லும்போது "விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றுங்கள்."(மத்தேயு.10:7)

" அப்படிச் செல்லும்போது "விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றுங்கள்."
(மத்தேயு.10:7)

இயேசுவின் உலக வருகையின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாகிய யூதர்கள் அரசியல் ரீதியாக ரோமையர்களின் அடிமைத் தனத்தில் வாழ்ந்து வந்தார்கள்.

மெசியா வந்து தங்களை அரசியல் அடிமைத் தனத்திலிருந்து மீட்டு சுதந்திரமான யூத அரசை நிறுவுவார் என்று நம்பினார்கள்.

மெசியா (இயேசு) வந்தார், மக்களை அடிமைத் தனத்திலிருந்து மீட்டக,

ஆனால் அரசியல் அடிமைத் தனத்திலிருந்து அல்ல,

ஆன்மீக அடிமைத் தனத்திலிருந்து.

மனித இனம் நமது முதல் பெற்றோரின் காலத்திலிருந்தே பாவத்துக்கு அடிமைப்பட்டுக் கிடந்தது.

பாவ அடிமைத் தனத்திலிருந்து மனுக்குலத்தை மீட்டு ஒரு ஆன்மீக அரசை, விண்ணரசை நிறுவுவதற்காகவே இயேசு பிறந்தார்.

அதென்ன விண்ணரசு?

உலகைச் சார்ந்த அரசு லௌகீக அரசு. அதில் தான் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இறைவன் வாழும் விண்ணகத்தைச் சார்ந்த அரசு விண்ணரசு, அதாவது, இறையரசு.

அதன் அரசர் இறைவன்.

விண்ணரசை ஊனக் கண்களால் பார்க்க முடியாது.

அது ஆன்மீக அரசு, ஆன்மாவைக் கண்களால் பார்க்க முடியாது, அவ்வாறுதான் ஆன்மீக அரசையும்.

இறையரசில் வாழ வேண்டுமென்றால் மனிதன் பாவத்திலிருந்து விடுபட வேண்டும்.

மனிதர்களைப் பாவத்திலிருந்து மீட்பதற்காகவே மெசியா பிறந்தார்.

இறைவன் வந்து விட்டார், மக்களைப் பாவத்திலிருந்து மீட்டு இறையரசில் சேர்க்க.

இயேசு பாடுகளின் மூலம் பாவப் பரிகாரம் செய்தவுடன் மக்கள் இறையரசில் சேரத் தகுதி பெறுவர்.

அந்தக் காலம் நெருங்கி விட்டதால் தான்,

பன்னிரு சீடர்களையும் நற்செய்தி அறிவிக்க அனுப்பிய போது,

"விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றுங்கள்"

என்று கூறி அனுப்புகிறார்.

இயேசுவே, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" என்ற வார்த்தைகளோடுதான் நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார். 
(மத்தேயு.4:17)

உலக அரசு மனிதர்களால் ஆளப்படுவது.

மக்களிடையே சட்டம் ஒழுங்கு நிலையை நிலைநாட்டுவதும், உலக வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பூர்த்தி செய்வது மட்டுமே அதன் வேலை.

ஆன்மீகத்தைப் பற்றி உலக அரசு கவலைப் படாது.

விண்ணரசின் தன்மை என்ன?

1. அரசர் இறைவன். விண்ணுக்கும், மண்ணுக்கும் அரசர் அவரே.

இறைவன் தங்களோடு இருப்பதை மக்கள் உணர்ந்து, இறைப் பிரசன்னத்தில் வாழ வேண்டும்.

இறைத் திட்டத்தின்படி வாழ்ந்து, மீட்புக்காகத் தங்களைத் தயாரிப்பதே மக்களின் வேலை.

The citizens of the kingdom of heaven must live in the presence of God.

2.பழைய ஏற்பாட்டின்
தீர்க்கத்தரிசிகள் இறையரசின் வருகையை முன்னறிவித்தார்கள்.

அவர்களுடைய முன்னறிவிப்பு இயேசுவில் நிறைவேறிற்று.

இயேசு சொந்த ஊராகிய நாசரேத்தில் தொழுகைக் கூடத்தில் நற்செய்தியை அறிவித்தபோது,

பழைய ஏற்பாட்டில் அவரைப் பற்றிக் கூறப்பட்டிருந்த தீர்க்கத் தரிசனங்களை வாசித்து விட்டு,

 மக்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" என்றார். 
(லூக்கா.4:21)

3. இறையரசில் இயேசுவின் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும், மக்கள் அதன்படி வாழ வேண்டும்.

4.இறையரசு யூத இனத்துக்கு மட்டுமல்ல, உலகோர் அனைவருக்கும் உரியது.

ஆகவே உலகெங்கும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும்.

"எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்."
(மத்தேயு.28:19)

இறையரசுக்குள் நுழைய வழி இயேசு மட்டுமே.

  "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை."
(அரு.14:6)

விண்ணகம் செல்ல வேண்டுமென்றால் 

நாம் அறிய வேண்டிய உண்மையும், 

வாழ வேண்டிய வாழ்வும்,

நுழைய வேண்டிய வழியும்

இயேசு மட்டுமே.

இறையரசாகிய திருச்சபையை உலகெங்கும் பரப்பும் பொறுப்பை தனது சீடர்களுக்கும், அவர்களுடைய வாரிசுகளுக்கும்
(ஆயர்கள், குருக்கள்) இயேசு கொடுத்திருக்கிறார்.

உலகெங்கும் ஆயிரக்கணக்கான குருக்கள் இயேசுவின் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள்,

நற்செய்தியை அறிவிக்கிறார்கள்.

நமது பாவங்களை மன்னிக்கிறார்கள்.

திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்.

இறை இயேசுவை நமக்கு உணவாகத் தருகிறார்கள்.

ஆணையும் பெண்ணையும்
திருமண பந்தத்தில் இணைக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் இயேசுவே குருக்கள் மூலமாகச் செய்கிறார்.

புனித சின்னப்பர் சொல்கிறார்,

"வாழ்வது நானல்ல, கிறிஸ்து என்னில் வாழ்கிறார்."

குருவானவர் சொல்கிறார்,

"நற்செய்தியை அறிவிப்பது நானல்ல, கிறிஸ்துவே என் மூலம் அறிவிக்கிறார்.

பாவ சங்கீர்த்தனத் தொட்டியில் பாவங்களை மன்னிப்பது நானல்ல, கிறிஸ்துவே என் மூலம்
மன்னிக்கிறார்.

திருப்பலி நிறைவேற்றுவது நானல்ல, கிறிஸ்துவே என் மூலம் பலியாகிறார்.

திருவிருந்தை அளிப்பது நானல்ல, கிறிஸ்துவே என் மூலம் தன்னைத் தானே உணவாக அளிக்கிறார்.

உங்களைத் திருமண ஒப்பந்தத்தில் இணைப்பது நானல்ல, கிறிஸ்துவே என் மூலம் இணைக்கிறார்."

குருவானவர் சொல்வது நூற்றுக்கு‌ நூறு உண்மை.

"மண்ணுலகில் நீங்கள் கட்டுபவை விண்ணுலகிலும் கட்டப் பட்டிருக்கும்.

மண்ணுலகில் நீங்கள் அவிழ்ப்பவை விண்ணுலகிலும் அவிழ்க்கப் பட்டிருக்கும்."


"Amen I say to you, whatever you will have bound on earth, shall be bound also in heaven, and whatever you will have released on earth, shall be released also in heaven."
(Matthew 18:18)

ஆகவே நாம் நமது குருக்களில் இயேசுவைக் காண வேண்டும்.

நான் சிறுவனாக இருந்த போது குருவானவரைப் பார்த்தால் அவர் முன் முழங்காலில் இருந்து நெற்றியில் சிலுவை வாங்குவோம்.

பங்குக் குருவானவர் பங்கிலுள்ள
 பள்ளிக்கூடங்களை நிர்வகிப்பதற்கோ,

நிலங்களை மேற்பார்வை இடுவதற்கோ குருப் பட்டம் பெறவில்லை.

கிறிஸ்துவாக செயல்புரியவே குருப் பட்டம் பெற்றிருக்கிறார்.

சீடர்களுக்குக் குருப் பட்டம் கொடுக்க இயேசு பயன்படுத்திய வார்த்தைகள்,

"எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" 
(லூக்கா.22:19)

திருப்பலியின்போது அப்பத்தை இயேசுவின் சரீரமாகவும் இரசத்தை அவரது இரத்தமாகவும் மாற்றுவது குருவானவர் உருவில் பீடத்தில் நிற்கும் இயேசுதான்.

குருவானவரைப் பார்க்கும் போது இயேசுவைப் பார்க்கிறோம்.

குருவானவரோடு பேசும் போது இயேசுவோடு பேசுகிறோம்.

குருவானவரிடம் பாவ சங்கீர்த்தனம் செய்யும்போது இயேசுவிடம் தான் பாவ சங்கீர்த்தனம் செய்கிறோம்,

இயேசுதான் நமது பாவங்களை மன்னிகிறார்.

உலகம் முடியுமட்டும் இயேசு நம்மோடுதான் வாழ்கிறார்.

உடல் ரீதியாக நாம் உலகில் வாழ்ந்தாலும்,

ஆன்மீக ரீதியாக 
 விண்ணரசில்தான் வாழ்கிறோம்.

என்றென்றும் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசுவே உமக்கு நன்றி.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment