Monday, July 22, 2024

"மகதலா மரியா சீடரிடம் சென்று, "நான் ஆண்டவரைக் கண்டேன்" என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்." (அரு. 20:18)

"மகதலா மரியா சீடரிடம் சென்று, "நான் ஆண்டவரைக் கண்டேன்" என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்."
(அரு. 20:18)

அப்போஸ்தலர்களுக்கே அப்போஸ்தலர் புனித மகதலா மரியா.

உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்க அனுப்பப் பட்டவர்கள்
அப்போஸ்தலர்கள்.

ஆனால் அப்போஸ்தலர்களுக்கே இயேசு உயிர்த்த செய்தியை முதலில் அறிவிக்க அனுப்பப் பட்டவள் மகதலா மரியா.

இயேசுவால் ஏழு பேய்களிலிருந்து விடுதலை பெற்ற நாளிலிருந்து அவரைப் பின்பற்றத் தொடங்கிவள் மகதலா ஊரைச் சேர்ந்த மரியா.


அவளும், ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னா, சூசன்னா ஆகிய பெண்களும் தங்கள் உடைமைகளைக் கொண்டு இயேசுவுக்குப் பணிவிடை செய்துவந்தார்கள். 
(லூக்கா.8:2,3)

இதிலிருந்து அவள் தன்னுடைய உடைமைகளை
(Belongings) இயேசுவுக்குப் பணிவிடை செய்யப் பயன்படுத்தினாள் என்று தெரிகிறது.

அவளுடைய குடும்பத்தினர் மீனவர்கள். அதிலிருந்து கிடைத்த வருமானம் இயேசுவுக்குப் பணிவிடை செய்யப் பயன்பட்டது.

நமது வருமானத்தின் ஒரு பகுதியை இறைப்பணிக்கு ஒதுக்க வேண்டும் என்ற பாடத்தை அவளிடமிருந்து கற்றுக் கொள்வோம்.

இயேசுவின் பாடுகளின்போது அவரது சீடர்கள் அவரை விட்டு ஓடிப் போய் விட்டார்கள்.

ஆனால், இயேசுவின் தாயோடும், 
தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவோடும்,
மகதலா மரியாவும் சிலுவை அருகில் நின்று கொண்டிருந்தாள்.  
(அரு.19:25)

சீடர்களில் அருளப்பர் மட்டும் தான் நின்று கொண்டிருந்தார்.

இயேசு உயிர்த்தபோது அவருடைய சீடர்கள் பயந்து ஒரு அறையில் பதுங்கியிருந்தார்கள்.

ஆனால் ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் 

அவரது உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கி,

வாரத்தின் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில்  கல்லறைக்குச் வந்து விட்டார்கள். 
(மாற்கு.16:1,2)

பெண்கள் யாருக்கும் பயப்படவில்லை.

அருளப்பர் நற்செய்தியை அறிவிப்பதற்காக எபெசுக்குச் (Ephesus) சென்றபோது

மகதலா மரியாவும் அன்னை மரியாளோடு அங்கு சென்று நற்செய்தியை அறிவித்தாள்.

தங்கள் விசுவாசத்தினால் அவரைப் பின்பற்றிய பெண்களின் இறையன்பு உறுதியாக  இருந்திருக்கிறது.

சீடர்களின் விசுவாசத்தை விட மகதலா மரியாளின் விசுவாசம் அதிக உறுதியாக இருந்ததால்தான் 

 இயேசு உயிர்த்தெழுந்த பின்பு  முதலில்  அவளுக்குத் தோன்றியிருக்கிறார்.
(மாற்கு .16:9)

விசுவாசத்தையும், நம்மையும் மையமாக வைத்து இன்றைய வசனத்தின் பின்னணியில் தியானிப்போம்.

நம்மை இயேசுவின் சீடர்கள் ஆக்குவது அவர் மீது நாம் கொண்டுள்ள விசுவாசம்தான். 

அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ஆனால் நமது விசுவாசம் எவ்வளவு ஆழமானது?

"உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து" இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ" எனக் கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் " 
(மத்தேயு.17:20)

என்ற இயேசுவின் வார்த்தைகளை அளவுகோலாக வைத்து நமது விசுவாசத்தின் ஆழத்தை அளந்து பார்த்தால் 

 கடுகளவு விசுவாசம் கூட நம்மிடம் இல்லை என்று நமக்கு புரியும்.

புனித அந்தோனியார் கோடிக் கணக்கில் புதுமைகள் செய்து வருகிறார் என்றால் அதற்கு அவரிடம் இருந்த மிக ஆழமான விசுவாசமே காரணம்.

அவருடைய பைபிள் அறிவினால் இயேசு குழந்தை வடிவில் அவரிடம் இறங்கி வரவில்லை.

அவர் பைபிளின் போதனைகளைத் தனது வாழ்வாக ஆக்கியதன் காரணமாகத்தான் பைபிளின் கதாநாயகன் இயேசு அவரிடம் இறங்கி வந்தார்.

நாம் அந்தோனியாரின் பக்தர்களாக மாறுவதற்கு முன் அவரைப்போல வாழ்பவர்களாக மாற வேண்டும்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்ற வார்த்தைகளுக்கு இணங்க இயேசுவிடம் எதையாவது கேட்பதற்கு முன் விசுவாசம் சம்பந்தப்பட்ட இயேசுவின் போதனையை நமது வாழ்வாக்க வேண்டும்.

களைகளை அப்புறப்படுத்தி உரமிட்டால் தான் செடிகள் நன்கு வளரும்.

களைகளைப் பற்றி கவலைப்படாமல் உரம் மட்டும் இட்டு வந்தால் களைகள் தான் நன்கு வளரும்.

செடிகளில் வளர்ச்சி கம்மியாக இருக்கும்.

முதலில் நமது விசுவாசத்தை ஆழப் படுத்திக் கொண்டு இறைவனிடம் கேட்டால்தான் நமது செபம் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

விசுவாசப்பிரமாணத்தை மனப்பாடமாகத் சொன்னால் மட்டும் போதாது.

இயேசு இறை மகன் என்பதைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது.

அதை நம்பினால் மட்டும் போதாது.

இயேசு இறைமகன் என்று சாத்தானுக்கும் தெரியும்.

அறிவினால் மட்டும் மீட்பு பெற முடியாது.

விசுவாசம் என்றால் இறை உண்மையை அறிந்து கொள்வது மட்டுமல்ல.

விசுவசிப்பதுக்கு ஏற்ப வாழ்வது தான் உண்மையான விசுவாசம்.

விசுவாசம் = அர்ப்பண வாழ்வு.

அர்ப்பண வாழ்வு என்றால் எதை விசுவசிக்கிறோமோ அதற்காக மட்டும் வாழ்வது.

பரிசுத்த தம திரித்துவத்தை விசு வசித்தால் திரியேக கடவுளுக்காக மட்டும் வாழ வேண்டும்.

நாம் மூச்சு விடுவது,
உண்பது,
உடுப்பது,
படிப்பது,
வேலை பார்ப்பது,
சம்பளம் வாங்குவது,
சம்பளத்தைச் செலவழிப்பது

போன்ற காரியங்களைக் கூடத் திரியேக இறைவனின் மகிமைக்காக மட்டும் செய்ய வேண்டும்.

அதனால் தான் ஒவ்வொரு வேலைக்கு முன்னும், பின்னும்,

"தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால், ஆமென்."

என்று செபிக்கிறோம்.

செபத்தைச் சொன்னால் மட்டும் போதாது,

செபிக்க வேண்டும்.

சொல்வது வாயினால்,
செபிப்பது உள்ளத்தினால்.

முதலில்,"எங்கள் விசுவாசத்தை அதிகரியும், ஆண்டவரே.'' செபிப்போம்.

நமது விசுவாசம் அதிகரித்தால் நமது செபத்தின் நோக்கம் இறைவனை அடைவதாக மட்டுமே இருக்கும்.

உலகைச் சார்ந்த பொருட்களைச் கேட்டாலும் அவற்றை இறைவனின் அதிமிக மகிமைக்காக பயன்படுத்தும் நோக்கத்தோடு தான் கேட்போம்.

"நம்புங்கள், செபியுங்கள், நல்லதே நடக்கும்."

விசுவாசத்தோடு செபித்தால் என்ன நடந்தாலும் அது நமது நன்மைக்காகவே இருக்கும்.

உதாரணத்துக்கு,

பொதுத் தேர்வு எழுதப் போகும் ஒரு மாணவன் இறைவனிடம் இவ்வாறு செபித்தான்:

"இறைவா நான் பொதுத் தேர்வு எழுதப் போகிறேன். என்னால் இயன்ற மட்டும் நன்றாகப் படித்திருக்கிறேன். நான் தேர்வை நன்றாக எழுதி, நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற அருள் புரிய வேண்டுகிறேன்.

அருள் கூர்ந்து என்னுடைய மன்றாட்டைக் கேட்டருளும்."

விசுவாசத்தோடு செபித்தான்.

ஆனால் தேர்வு எழுதிய போது ஞாபக சக்தி ஒத்துழைக்க மறுத்து விட்டது.

விளைவு, தேர்வில் வெற்றி பெற இயலவில்லை.

தேர்வு முடிவுகளுக்குப் பின் இவ்வாறு செபித்தான்:

"ஆண்டவரே, நீர் நல்லவர். உம்மால் படைக்கப்
பட்டவர்களுக்கு நல்லதை மட்டுமே செய்வீர்.

நான் தேர்வில் தோல்வி அடைந்ததற்கு உமது திட்டமே காரணம்.

உமது திட்டம் நல்லதையே நோக்கமாகக் கொண்டிருக்கும்.

நான் தோல்வி அடைந்தது எனது எதிர்கால நன்மைக்கே என்பதை உறுதியாக நம்புகிறேன்.

உமக்கு எனது மனமார்ந்த நன்றி."

என்ன நேர்ந்தாலும் ஏற்றுக் கொள்வது விசுவாசம்.

இறைவனது நோக்கப்படிதான் அன்னை மரியாள் புனித சூசையப்பரை மணம் புரிந்தாள்.

மணம் புரிந்த 30 ஆண்டுகளுக்கு முன் விதவை ஆனாள்.

சூசையப்பரைக் கணவனாக ஏற்றுக் கொண்டது போல,

இறைமகனைத் தன் மகனாக ஏற்றுக் கொண்டது போல

தனது விதவைத் தன்மையையும்
ஏற்றுக்கொண்டாள்.

இதில் என்ன நன்மை?

அவளுடைய கணவர் அவளுக்கு முன்னால், 

அவளுடைய திருமகன் மனுக்குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகத் தன்னையே பலி கொடுத்த வினாடியே 

அவரோடு நித்திய பேரின்ப பாக்கியத்துக்குள் நுழைந்துவிட்டார்.

சூசையப்பரின் ஆழமான விசுவாசத்துக்குக் கிடைத்த பரிசு அவரது மகனின் மடியில் தலை வைத்து மரணம் அடைந்தது தான்.

ஆகவேதான் புனித சூசையப்பரை "நல்ல மரணத்தின் பாதுகாவலர்" என்று அழைக்கிறோம்.

மகதலா மரியாளின் ஆழமான விசுவாசத்துக்குக் கிடைத்த பரிசு

உயிர்த்த இயேசு தன்னைப் பெற்ற தாய்க்குக் காட்சி கொடுத்துவிட்டு 

அடுத்து அவளுக்குக் காட்சி கொடுத்ததுதான்.

நமது விசுவாசம் ஆழமாக இருந்தால் நித்திய காலமும் மூவொரு இறைவனை பார்த்து அனுபவிக்கும் பாக்கியம் பெறுவோம்.

விசுவாசத்தில் வளர்வோம்.

மரணம் கூட நம்மை இறைவனோடு நித்தியத்துக்கும் இணைத்து வைக்கும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment