Thursday, July 18, 2024

நாம் யாரைச் சார்ந்திருக்கிறோம்?

நாம் யாரைச் சார்ந்திருக்கிறோம்?

நாம் என்ன செய்தாலும் அதற்கு ஒரு ஆரம்பம் வேண்டும்.

நாம் யாரைச் சார்ந்திருக்கிறோம்?
என்ற கேள்விக்குரிய பதிலை எங்கே ஆரம்பிப்பது?

மரத்திலிருந்து ஆரம்பிப்போம்.

ஒரு மரம் வேறு எதனுடைய உதவியுமின்றி தானாக நின்று, வளர முடியுமா?

முடியாது.

மரம் தனது வாழ்வுக்கு அது நிற்கும் பூமியைச் சார்ந்திருக்கிறது.

அதற்கு அடியிலுள்ள நிலத்தை அப்புறப்படுத்தி விட்டால் மரம் சாய்ந்து விடும்.

நாம் குழந்தையாய்ப் பிறப்பதற்கும், வளர்வதற்கும் நமது பெற்றோரைச் சார்ந்திருந்தோம்.

வாழ்வதற்கு சமூகத்தைச் சார்ந்திருக்கிறோம்.

சமூகம் வாழ உலகத்தைச் சார்ந்திருக்கிறது.

உலகம் இயங்க சூரியனைச் சார்ந்திருக்கிறது.

சூரியன் பிரபஞ்சத்தைச் சார்ந்திருக்கிறது.

பிரபஞ்சம்?

93 billion light-years குறுக்களவும்,
1.33 × 10^56 square kilometers பரப்பளவும்,

கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் உள்ள பிரபஞ்சம் இயங்குவதற்கு (Existence)

அதை ஒன்றும் இல்லாமையிலிருந்து படைத்த இறைவனை மட்டும் சார்ந்திருக்கிறது.

பிரபஞ்சத்தின் ஒரு சிறு அங்கமான உலகமும் அதில் வாழும் அனைத்து உயிரினங்களும் வாழ ஒவ்வொரு வினாடியும் கடவுளையே சார்ந்திருக்கின்றன.

கடவுள் அவற்றை ஒரு வினாடி மறந்தாலும் (அவரால் மறக்க முடியாது) அவை எல்லாம் ஒன்றுமில்லாமை ஆகிவிடும்.

நாம் கடவுளையே சார்ந்திருக்கிறோம் என்பதைப் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நம்முடைய இருப்பு, (existence) நமது திறமைகள், சாதனைகள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருப்பவர் கடவுள் மட்டுமே.

அவருடைய அருளினாலும், வழிநடத்துதலினாலும், கொடைகளாலும் ஒவ்வொரு வினாடியும் நம்மைப் பராமரித்து வருகிறார்.

அவருடைய உதவியாலன்றி நம்மால் சுயமாக அசையக் கூட முடியாது.

நாம் செயல்புரிய வேண்டிய ஆன்ம பலத்தையும், உடல் திறனையும், ஞானத்தையும் நமக்குத் தருபவர் அவர் மட்டுமே.

இதைத் தாழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எப்படி மிதிவண்டி நாம் மிதிக்காமல் நகராதோ அப்படியே கடவுள் இயக்காமல் நம்மால் அசையக்கூட முடியாது.

கடவுளின் பராமரிப்பை ஏற்றுக் கொண்டால் மட்டும் போதுமா?

போதாது.

என்ன செய்ய வேண்டும்?

1. ஒவ்வொரு வினாடியும் நம்மைப் பராமரித்து வரும் இறைவனுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நமது நன்றியைக் கடவுளுக்குத் தெரிவிக்க வேண்டும்.

நமக்கு என்ன நேர்ந்தாலும் அது அவரது சித்தப்படி தான் நேரும்.

என்ன நேர்ந்தாலும் நன்றி கூற வேண்டும்.

துன்பங்கள் வருகின்றனவா?

நமது நன்மைக்காகத்தான் கடவுள் அவற்றை அனுமதிக்கிறார்.

வெற்றி கிடைத்தாலும் நன்றி கூற வேண்டும்,

தோல்வி வந்தாலும் நன்றி கூற வேண்டும்.

2. நாம் கேளாமலேயே நம்மைப் படைத்த கடவுள் நாம் கேளாமலேயே நம்மை வழிநடத்துவார்.

ஆயினும் அவரது பராமரிப்பை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பதற்கு அடையாளமாக அவரைப் புகழ்ந்து அவரோடு பேச வேண்டும்.

அதாவது அவரை நோக்கி செபிக்க வேண்டும்.

நமது வாழ்வே செப வாழ்வாக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பது மட்டும் செபமல்ல,

உள்ளத்தில் அவரோடு ஒன்றித்து வாழ்வதும் செபம்தான்.

செபத்துக்கு வார்த்தைகள் தேவையில்லை, வாழ்க்கையே போதும்.

3. இறைவன் மீது நம்பிக்கை வேண்டும். அவர் நம்மைச் சரியான பாதையில் வழி நடத்துவார் என்று நம்ப வேண்டும்.

தோல்வியை வெற்றிக்கு அவர் போட்ட படியாக நம்ப வேண்டும்.

ரோஜாச் செடியை நாம் கத்தரித்து விடும்போது அது ஏற்றுக் கொள்கிறது, புதிய தளிர் விட்டு வளர்ந்து பூக்கிறது.

கடவுள் நம்மிடம் உள்ள வேண்டாதவற்றைக் கத்தரித்து விடும்போது நாம் புது வாழ்வு பெறுவோம்.

4. கடவுளின் உதவியின்றி சுயமாக நம்மால் அசையக்கூட முடியாது என்ற எண்ணம் நமக்குள் தாழ்ச்சியை‌ வளர்க்க வேண்டும்.

நமது உண்மை நிலையை முழு மனதுடன் ஏற்றுக் கொள்வது தான் தாழ்ச்சி.

நமது இயலாமையையும் கடவுளின் அளவற்ற வல்லமையையும் ஏற்றுக் கொண்டால்

நாம் அவருக்காக, அவருக்காக மட்டும் வாழ்வோம்.

லூசிபர் மிகவும் ஒளி வாய்ந்த, மிக அழகான சம்மனசாக வாழ்ந்தார்.

ஆனால் தன் உண்மை நிலையை உணராமல் தன்னைக் கடவுளுக்கு நிகராக எண்ணினார்.

அந்தத் தற்பெருமை அவரைச் சாத்தானாக மாற்றியது.

தாழ்ச்சி உள்ளவர்கள் இறைவனின் மக்கள்.

தற்பெருமை உள்ளவர்கள் சாத்தானின் தோழர்கள்.

என்றும் இறைவனிடம் அவருடைய பிள்ளைகளாக வாழ 
தாழ்ச்யோடு இருப்போம்.

நமது இயலாமையை ஏற்றுக் கொள்வோம்.

சர்வ வல்லமை வாய்ந்த கடவுள் நம்மை ஒவ்வொரு வினாடியும் வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதையும் ஏற்றுக் கொள்வோம்.

5. நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் கடவுளின் கண்காணிப்பில் தான் இருக்கிறோம்.

ஆனாலும் நாம் முழு விருப்பத்தோடு நம்மையே கடவுளுக்கு அர்ப்பணித்து விட வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது தாயைப் போல பிள்ளையாக மாறுகிறோம்.

நமது அன்னை மரியாள்

"இதோ ஆண்டவரின் அடிமை," என்ற வார்த்தைகள் மூலம்

தன்னையே கடவுளாகிய தன் மகனுக்கு முழுமையாக அர்ப்பணித்தாள்.

அந்த வினாடி முதல் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கு முழுநேர ஊழியம் செய்தாள்.

கருவறை முதல் கல்லறை வரை இயேசுவோடு வாழ்ந்தவள் அன்னை மரியாள் மட்டுமே.

கருவறையை விட்டுப்
பிறந்தவுடன் மரியாளின் மடியில் இருந்த இயேசு இறந்த பின்னும் 

அன்னையின் மடியில் இருந்த பின்புதான் கல்லறைக்குள் அடக்கம் செய்யப்பட்டார்.

விண்ணகத்திலிருந்து மரியாளின் கருவறைக்குள் வந்த இயேசு

கல்லறையிலிருந்து உயிர்த்து விண்ணகம் எய்தினார்.

நாமும் விண்ணகம் செல்ல வேண்டுமா?

அன்னை மரியாளைப் போல நாமும் நம்மை இயேசுவுக்கு அர்ப்பணித்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment