Tuesday, July 2, 2024

"அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்."(மத்தேயு.9:2)

"அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்."
(மத்தேயு.9:2)

இறைமகன் இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து நம்மை மீட்பதற்காக மனிதனாகப் பிறந்தார்.

அவர் உலகுக்கு வந்ததன் நோக்கம் பாவப் பரிகாரம், பாவ மன்னிப்பு.

புதுமைகள் செய்து நோயாளிகளைக் குணமாக்க வேண்டும் என்பது அவரது நோக்கம் அல்ல.

பாவ மன்னிப்பில் தான் மீட்பு அடங்கியிருக்கிறது, உடல் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதில் அல்ல.

அப்படியானால் ஏன் அவர் தனது பொது வாழ்வில் சென்ற இடமெல்லாம் புதுமைகள் செய்து மக்களின் நோய்களைக் குணமாக்கினார்?

ஆன்மீக மீட்புக்கான அடிப்படைகளைப் போடுவதற்காக.

கட்டடம் கட்டுமுன் அதற்கான அடிப்படையைப் போடுகிறோம்.

அடிப்படையின் மேல் தான் கட்டடம் நிற்கும்.

மேல் நோக்கிக் கட்டடம் கட்ட ஏன் கீழ் நோக்கித் தோண்டுகிறோம்?

அடிப்படைக்காக.

மீட்புக்கான ஆன்மீக வாழ்வின் அடிப்படை விசுவாசம், நம்பிக்கை, இறையன்பு.

இதற்கும் புதுமைகள் செய்து நோயாளிகளைக் குணமாக்குவதற்கும் என்ன சம்பந்தம்?

நோய்களைக் குணமாக்கும் ஒவ்வொரு முறையும் இயேசு சொன்னார்,

" உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று."

குணமாக்கியவர் இயேசு.

தன்மீது விசுவாசம் உள்ளவர்களைக் குணமாக்குகிறார்.

உண்மையான விசுவாசம் இருக்கும் இடத்தில் தான் நம்பிக்கையும், இறையன்பும் இருக்க முடியும்.

நோய்களைக் குணமாக்கியதன் நோக்கமே இந்த மூன்று புண்ணியங்களையும் மக்களிடையே வளர்ப்பது தான்.

ஒவ்வொரு நோயாளியைக் குணமாக்கும் போதும் அவனுக்குள் இம்மூன்றும் விதைக்கப்படும்.

படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆன்மாவிலும் இறைவன் அவரது தூண்டுதல் (Inspiration) மூலம் இறைவன் செயல்புரிந்து கொண்டிருக்கிறார்.

முதலில் நமது ஆன்மாவில் விசுவாசத்தைத் தூண்டுவார்.

நாம் தூண்டுதலை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஏற்றுக் கொள்பவர்கள் அவரை விசுவசிப்பர்.

பாவம் தவிர மற்ற அனைத்து ஆன்மீக செயல்பாடுகளுக்கும் காரணர் கடவுள் தான்.

ஆக நோயாளிகளின் ஆன்மாவில் விசுவாசத்தைத் தூண்டுகிறார்.

அதை ஏற்றுக் கொள்வர்கள் அவரைத் தேடி வருவார்கள்.

முடக்குவாதன் குணமான புதுமையை எடுத்துக் கொள்வோம்.

"சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர்.

 இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், 

"மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்."

ஆக நோயாளியும், அவனைக் கொண்டு வந்தவர்களும் கடவுளின் விசுவாசத் தூண்டுதலை ஏற்றுக் கொண்டு, விசுவாசத்தோடு அவரைத் தேடி வருகிறார்கள்.

விசுவாசத்தோடு இருந்ததால் அவர் நோயாளியைப் பார்த்து,

"மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன"

என்கிறார்.

இயேசுவின் வார்த்தைகள் நமக்கு ஒரு உண்மையை உணர்த்தும்.

இயேசு உலகுக்கு வந்தது ஆன்மாவின் நோயைக் குணமாக்க.

ஆகவே தான் நோயாளியைப் பார்த்து,

"உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன". என்கிறார்.

அப்படியானால் பாவ மனஸ்தாபத்துக்கான தூண்டுதலையும் நோயாளி ஏற்றுக் கொண்டான் என்று அர்த்தம்

''மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ" என்றார்."
(மத்தேயு.9:6)

தான் இறைமகன் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக நோயாளியின் பாவங்களை மன்னிக்கிறார்.

தொடர்ந்து அவனைக் குணப்படுத்துகிறார்.

நோயாளிகளின் ஆன்மீக நோய் குணமான பிறகுதான் அவனது உடல் நோய் குணமானது.

ஆக, இயேசு உடல் சார்ந்த நோய்களைக் குணமாக்கியதின் நோக்கமே ஆன்மீக நோயை குணமாக்குவது தான்.

அவர் செய்த புதுமைகள் மூலம் விசுவாசம் தோன்றியது, வளர்ந்தது, உறுதிப்பட்டது.

நமது வாழ்க்கைக்கு நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம்?

நாமும் நமது உடல் சார்ந்த நோய்கள் குணமாவதற்காக இயேசுவை நாடுகிறோம்.

இயேசு நம்மிடம் சொல்கிறார்,

"முதலில் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து உங்களது ஆன்மீக நோயிலிருந்து விடுதலை பெறுங்கள்.

அதன் பிறகு உடல் சார்ந்த நோய்களிலிருந்து விடுதலை பெற விண்ணப்பியுங்கள்.

நான் உங்களை முழுமையாகக் குணப்படுத்துவேன்."

பாவ நோயிலிருந்து விடுதலை பெறாமல் உடல் சார்ந்த நோயிலிருந்து விடுதலை பெற்று வாழ்வதில் எந்த பயனும் இல்லை.

உடலில் நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு நாள் உடல் மண்ணுக்குள் போய்த்தான் ஆக வேண்டும்.

ஆகவே நமது ஆன்மா பாவத்திலிருந்து விடுதலை பெறுவதிலேயே முழுக் கவனத்தையும்  செலுத்துவோம்.

ஆண்டவர் நம்மை இரண்டு வகை நோய்களிலிருந்தும் குணமாக்குவார்.

லூர்து செல்வம்.

'' உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்."(மத்தேயு.8:34)

'' உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்."
(மத்தேயு.8:34)


இயேசு  கதரேனர் வாழ்ந்த பகுதியில் , பேய் பிடித்த இருவரைக் குணமாக்கினார். 

அதைக் காண வந்த நகர மக்கள் அவரைத் தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டினர்.

அவர்களில் இருவரை இருவரை இயேசு குணமாக்கியிருக்கிறார்.

முறைப்படி மக்கள் அவரை ஊருக்குள் வரவேற்று, அவருக்கு நன்றி கூறியிருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் நகருக்குள் வர விடாமல் தடுத்ததோடு

அவரை அவ்விடத்தை விட்டு போகச் சொல்லியிருக்கிறார்கள்.

அதற்கான காரணத்தை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

ஆனால் நாம் யூகிக்கலாம்.

கதரேனர் புறசாதியினர். பன்றி வளர்க்கும் தொழிலையும் செய்து வந்தவர்கள்.

இயேசு யூதர். அவர்கள் வளர்த்து வந்த பன்றிகளைக் கடலுக்குள் அனுப்பி விட்டார். பன்றிகள் இறந்து விட்டன.

அந்தக் கோபம் அவர்களுக்கு இருந்திருக்கும்.

அவர்கள் ஆன்மீகத் தாகம் உள்ளவர்கள் அல்ல.

தங்கள் உலகைச் சார்ந்த சொத்தைக் கடலுக்குள் அனுப்பிய ஆன்மீகவாதியை நகருக்குள் விட அவர்களுக்கு மனதில்லை.

அவர் செய்த உதவியை அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை.

இயேசுவுக்கு அவர்களுடைய மன   நிலை தெரியும்.

ஆனாலும் அவர்களைத் தேடி கடல் கடந்து வந்தார்.

இருவரைக் குணமாக்கினார்.

நகரினர் அவரை உள்ளே விடாததால் 

இயேசு படகேறி மறு கரைக்குத்  தம் சொந்த நகருக்குச் சென்றார். 

இயேசு யூதராக இருந்தாலும் இறைமகனாகிய அவர் தன்னால் படைக்கப்பட்ட அனைத்து மக்களின் மீட்புக்காகத்தான் மனிதனாகப் பிறந்தார்.

ஆகவே தான் கதரேனர்களைத் தேடி தனது சீடர்களுடன் வந்தார்.

அவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

பைபிள் நிகழ்வுகளைப் பார்க்கும் போது சினிமா பார்ப்பது போல வெளியிலிருந்து பார்க்கக்கூடாது.

நிகழ்வுக்குள்  இயேசுவோடு நாமும் இருக்க வேண்டும்.

நிகழ்வு நம்மையும் பாதிக்க வேண்டும்.

இயேசு இருவரைக் குணமாக்கும் போதும், நகரினர் அவரை நகரை விட்டு போகச் சொன்னபோதும் நாம் அங்கே நின்று இயேசுவின் முகத்தைப் பார்க்க வேண்டும்.

யாருடைய ஆன்மீக மீட்புக்காக விண்ணிலிருந்து இறங்கி மண்ணுக்கு வந்தாரோ,

யார் பேரின்ப வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக துன்பங்கள் நிறைந்த மனித சுபாவத்தையும் ஏற்றுக் கொண்டாரோ

அவர்கள் அவரைப் பார்த்து,

"நீர் எங்களிடம் வர வேண்டாம், போய்விடும் '' என்று சொன்னால் அவருடைய முகபாவனை எப்படி இருக்கும் என்பதை நாம் நேரில் பார்க்க வேண்டும்.

ஏனெனில் நாமும் அநேக சமயங்களில் அந்த மக்கள் செய்ததைத்தான் செய்கிறோம்.

நாம் எத்தனை முறை இயேசுவைப் பொறுத்த மட்டில் கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய் நடந்து கொள்கிறோம்!

திருப்பலியில் கலந்து கொள்ளும் போது எத்தனை முறை பலிபீடத்தையும், குருவானவரையும் பார்க்காமல்

 அக்கம் பக்கத்தையும், Cell phone ஐயும் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறோம்!

எத்தனை முறை வாயால் செபம் செய்துகொண்டு, சிந்தனையில் உலகெங்கும் வலம் வந்து கொண்டு இருந்திருக்கிறோம்!

எத்தனை முறை வாசகங்கள் வாசிக்கும் போதும், குருவானவர் பிரசங்கம் வைக்கும் போதும் காது கொடுத்துக் கேட்காமல் கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு, தூங்கிக் கொண்டு இருந்திருக்கிறோம்!

எத்தனை முறை திருவிருந்து அருந்திவிட்டு ஆண்டவரிடம் பேசாமல் அருகில் உள்ளவர்களோடு பேசிக் கொண்டு இருந்திருக்கிறோம்!

எத்தனை முறை காலையில் கட்டிலை விட்டு எழும்போது கடவுளை நினையாமல் காபியை நினைத்துக் கொண்டு எழுந்து இருந்திருக்கிறோம்!

பகல் 12 மணி நேரமும் எதைப்பற்றி எல்லாமோ நினைக்கும் போது கடவுளைப் பற்றி எவ்வளவு நேரம் நினைக்கிறோம்?

அந்த மக்கள் இயேசுவைத் தங்களை விட்டுப் போகச் சொன்னார்கள்.

நாம் அவரை அருகில் வைத்துக் கொண்டு அவமானப் படுத்திக் கொண்டிருக்கிறோம்!

நினைத்துப் பார்ப்போம்.

நம்மையே நினைத்துக் கொண்டிருக்கும் இயேசுவை

 நாமும் எப்போதும் நினைத்து அவருக்காகவே வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, July 1, 2024

" திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்."(மத்தேயு.8:24)

" திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்."
(மத்தேயு.8:24)

இயேசு சீடர்களோடு படகில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

சீடர்கள் விழித்திருக்கிறார்கள், ஆனால் இயேசு தூங்கிக் கொண்டிருக்கிறார்.

திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்படுகிறது. படகுக்குமேல் அலைகள் எழுகின்றன.

 சீடர்கள் அவரிடம் வந்து, "ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்" என்று சொல்லி அவரை எழுப்புகிறார்கள்.

இயேசு கடவுள்.

முக்காலமும் அறிந்தவர்.

படகில் ஏறும்போதே கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்படும் என்று அவருக்குத் தெரியும்.

தெரிந்தும் ஏன் சீடர்களோடு படகில் பயணித்தார்?

ஏன் படகில் தூங்கினார்?

இன்னொரு உண்மையும் நமக்குத் தெரிந்தால் இது புரியும்.

இயற்கையைப் படைத்தவர் அவர்.

இயற்கையின் ஒவ்வொரு அசைவையும் திட்டமிடுபவர்.

அவருடைய திட்டமின்றி அணுவும் அசையாது.

இயற்கை நிகழ்வுகள் நமக்கு எதிர்பாராதவையாக இருக்கலாம்.

உதாரணத்திற்கு சுனாமி நாம் எதிர்பார்க்காமல் நடந்தது.

ஆனால் கடவுளின் நித்திய காலத் திட்டப்படி தான் நடந்தது.

அதனால் ஏற்பட்ட விளைவுகளும் அவரது திட்டப்படி தான் ஏற்பட்டன.

நமது எண்ணப்படி சுனாமியின் விளைவு அழிவு.

ஆனால் இறைவனின் எண்ணப்படி அது மாற்றம்.

இப்போது ஒன்று புரிந்திருக்கும்.

குறிப்பிட்ட நோக்கம் இல்லாமல் கடவுள் எதையும் திட்டமிட மாட்டார்.

அப்படியானால் கடல் கொந்தளிப்பைத் திட்டமிட்டு சீடர்களை அழைத்துச் சென்று அவர் ஏன் தூங்கினார்?

என்ன நோக்கத்திற்காக?

வகுப்பில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக ஆசிரியர் திட்டம் தீட்டுவது போல

சீடர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக இயேசு திட்டமிட்டார்.

எதில் பயிற்சி?

ஆன்மீக வாழ்வுக்கு எது அத்தியாவசியமோ அதில் பயிற்சி.

ஆன்மீக வாழ்வுக்கு அடிப்படையான புண்ணியங்கள் மூன்று,

விசுவாசம், நம்பிக்கை,
 தேவசிநேகம்.

இவற்றில் முதன்மையானது விசுவாசம்.

சீடர்கள் இயேசுவை விசுவசித்து, நம்பிதான் அவர் பின்னால் வந்தார்கள், அவரை நேசித்தார்கள்.

ஆனாலும் இயேசு எதிர்பார்த்த அளவு அவர்களிடம் விசுவாசம் இல்லை.

அவர்களது விசுவாசத்தின் அளவை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதன்பின் அதை அதிகரிக்க வேண்டும்.

அதற்காகத் தான் புயலையும், கடற் கொந்தளிப்பையும் கடவுள் திட்டமிட்டார்.

அவர்களிடம் போதுமான விசுவாசம் இருந்திருந்தால்

கடலைப் படைத்த கடவுள் அவர்களோடு இருக்கும் போது 

 "ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்" என்று கத்தியிருக்க மாட்டார்கள்.

தங்களுக்கு கடல் கொந்தளிப்பால் எந்த ஆபத்தும் வராது என்று தெரிந்திருக்கும்.

அவர்கள் பயந்ததைப் பார்த்த இயேசு 

 அவர்களை நோக்கி, "விசுவாசம் குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?" என்று கேட்டார்.

  காற்றையும் கடலையும் அடக்கி அவர்களது விசுவாசத்தை அதிகப் படுத்தினார்.

மூன்று ஆண்டுகள் விடாமல் அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தும் சீடர்களுடைய விசுவாசம் போதிய அளவு வளரவில்லை.

விசுவாசம் வளர்ந்திருந்தால் அவரது பாடுகளின் போது அவரை விட்டு ஓடிப் போயிருக்க மாட்டார்கள்.

அவர் உயிர்த்தெழுந்ததை நம்பாமல் கல்லரையைப் பார்க்கப் போயிருக்க மாட்டார்கள்.

மாதா போகவில்லை.

தூய ஆவியானவரின் வருகையின் போதுதான் அவர்களுடைய விசுவாசம் உறுதியடைந்தது.

நமது விசுவாசத்தை அதிகப் படுத்ததான் கடவுள் நமக்குத் துன்பங்களை அனுமதிக்கிறார்.

நமக்குத் துன்பங்கள் வரும் போது நம்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்தும்படி இறைவனிடம் வேண்ட வேண்டும்.

கடவுள் எப்போதும் நம்மோடு இருக்கிறார், நமது ஆன்மீக நன்மைக்காகவே நமக்குத் துன்பங்களை அனுமதிக்கிறார் என்பதை விசுவசிக்க வேண்டும்.

நம்மைப் படைத்தவர் நம்மோடு இருக்கிறார் என்பதை உறுதியாக விசுவசித்தால் நாம் துன்பத்தைக் கண்டு பயப்பட மாட்டோம்.

எல்லாம் நன்மைக்கே என்று மகிழ்ச்சி அடைவோம்.

லூர்து செல்வம்.