Wednesday, March 27, 2024

மரிக்க முடியாதவர் மரித்தார்.

http://lrdselvam.blogspot.com/2024/03/blog-post_70.html


மரிக்க முடியாதவர் மரித்தார்.

"தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார்."

இது கடவுளின் ஆறு பண்புகளில் ஒன்று.

தொடக்கமும் முடிவும் இல்லாத கடவுள் ஏன் தொடக்கமும் முடிவும் உள்ள,

அதாவது

பிறப்பும் இறப்பும் உள்ள மனிதனாகப் பிறந்தார்?

சாக்கடைக்குள் விழுந்தவனைத் தூக்க வேண்டுமென்றால் சாக்கடைக்குள் குதித்து தான் ஆக வேண்டும்.

மனிதன் செய்த பாவத்துக்குப் பரிகாரம் செய்யக் கடவுள் ஆசைப் பட்டால் அவர் மனிதனாகப் பிறந்து தான் ஆக வேண்டும்.

பாவப் பரிகாரம் செய்ய வேண்டுமென்றால் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும்.

கடவுளால் கஷ்டப்பட முடியாது. கஷ்டப்பட வேண்டுமென்றால் மனிதனாகப் பிறந்து தான் ஆக வேண்டும்.

ஆனால் கடவுளால் தனது தேவ சுபாவத்தைக் கைவிட முடியாது.

ஆகவே மனித சுபாவத்தை ஏற்றுக் கொண்ட கடவுளுக்கு இரண்டு சுபாவங்கள்.

இயேசு முழுமையாகக் கடவுள்.(Fully God)
முழுமையாக மனிதன்.(Fully Man)

பரிசுத்த திரித்துவம் என்றால்
கடவுள் ஒருவர், ஆட்கள் மூவர்.


இறைமகன் ஆள் ஒன்று, சுபாவங்கள் இரண்டு.

தேவ சுபாவத்துக்குத் துவக்கம் கிடையாது.

மனித சுபாவத்துக்குத் துவக்கம் உண்டு.

தேவ சுபாவத்துக்கு மரணம் கிடையாது.

மனித சுபாவத்துக்கு மரணம் உண்டு.

தேவ சுபாவம் துன்பப்பட முடியாது

மனித சுபாவம் துன்பப்பட முடியும்.

இறைமகன் மனிதர்கள் செய்கின்ற பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் படவும் மரிக்கவுமே மனிதனாகப் பிறந்தார்.

பாவத்தினால் மனிதன் அடைந்திருந்தது ஆன்மீக மரணம்.

இயேசுவால் ஆன்மீக மரணம் அடைய முடியாது, ஏனெனில் அவரால் பாவம் செய்ய முடியாது.

இயேசு தனது உடல் ரீதியான மரணத்தினால் நமது ஆன்மீக ரீதியான மரணத்தை வென்றார்.

இயேசு தனது பாடுகளாலும் மரணத்தினாலும் நமது மீட்புக்கு வழி ஏற்படுத்தி விட்டார்.

நாம் அவ்வழியே சென்று மீட்பு அடைய வேண்டும்.

நாமும் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

நமக்கு ஏற்படும் துன்பங்களை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

இயேசு தனது பாடுகளாலும், மரணத்தினாலும் மனிதர்களின் பரிகாரச் செயல்களை கடவுளுக்கு முன்னால் மதிப்பு உள்ளவைகளாக ஆக்கியிருக்கிறார்.

 நாம் இயேசுவின் பெயரால் (In the name of Jesus) செய்யும் ஒவ்வொரு செயலுக்கும்,  

அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும்,

கடவுள் முன் மதிப்பு உண்டு.

நமது வார்த்தைகளுக்கு இறைவன் முன்னால் மதிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு செபத்தில் இறுதியிலும்

"இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். 
ஆமென்."

என்று சொல்கிறோம்.

இப்போது ஒரு கேள்வி கேட்கலாம்.

பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த அபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு தாவீது போன்றவர்களின் நல்ல செயல்களை இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லையா?

 ஒரு முக்கியமான மறை உண்மை  மனதில் இருந்தால் இந்த கேள்வி எளாது.

கடவுள் காலங்களை கடந்தவர்.

நமது காலத்தை ஒரு நீண்ட கோட்டுக்கு ஒப்பிட்டால்

இறைவனின் நித்தியத்தை ஒரு புள்ளிக்கு ஒப்பிட வேண்டும்.

மனிதனாக பிறந்த இயேசு 33 ஆண்டுகள் வாழ்ந்தார்.

ஆனால் காலங்களை கடந்த கடவுள் வாழ்கிறார்.

நமது கணக்கில் இயேசு பிறந்து 2024 ஆண்டுகள் ஆகின்றன.


ஆனால் கடவுளின் கணக்கில் 
உலகம் உண்டான நேரத்துக்கும்

2024ஆம் ஆண்டுக்கும் இடையில் நேர இடைவெளியே கிடையாது.

அதேபோல் கடவுளுடைய பார்வையில் பழைய ஏற்பாட்டு பிதா பிதாக்கள் வாழ்ந்த காலத்திற்கும் இயேசு சிலுவையில் உயிர் விட்ட நேரத்துக்கும் இடையில் நேர இடைவெளியே கிடையாது.

God is eternal. There is no duration of time in eternity.

அவர்கள் கடவுளுக்காக வாழ்ந்த வாழ்க்கையை இயேசுவின் பலியை முன்னிட்டு இறைவன்  பலன் உள்ளதாக ஆக்கினார்.

ஆனாலும் இயேசு சிலுவையில் உயிர் விட்ட வினாடி தான் அவர்கள் இறைவனை முக முகமாய்த் தரிசிக்கும் மோட்ச நிலையை அடைந்தார்கள்.

இயேசு சிலுவையில் உயிர்விடும் வரை நம்மை போல் உலகில் வாழ்ந்தார்.

உயிர்விட்ட வினாடி அவரது ஆன்மா உடலை உலகில் விட்டு விட்டு விண்ணுலகுக்குள் சென்று விட்டது.

உயிர்த்த வினாடியில் அவரது உடலும் ஆன்மாவுடன் விண்ணகம் சென்று விட்டது.

சடப்பொருளால் ஆன உடல் (Material body) ஆவிக்குரிய உடலாக (Spiritual body) மாறித்தான் உயிர்த்தது.

உலக இறுதியில் நாம் உயிர்க்கும் போதும் நமது உடல் ஆவிக்குரிய உடலாக (Spiritual body) மாறித்தான் உயிர்க்கும்.

உயிர்த்த உடல் வாழ நேரமும், இடமும் தேவையில்லை.

உயிர்த்த இயேசு மரிக்குமுன் வாழ்ந்ததுபோல உலகில் வாழவில்லை.

விண்ணிலிருந்து இறங்கி அவ்வப்போது சீடர்களுக்குக் காட்சி கொடுத்தார்.

நாற்பது நாட்களுக்குப் பின் காட்சி கொடுப்பதை நிறுத்தி விட்டார்.

ஆனால் திவ்ய நற்கருணையில் தனது ஆன்ம சரீரத்தோடு நம்மோடு வாழ்கிறார்.

அன்னை மரியாளின் வயிற்றிலிருந்து பிறந்த அதே இயேசு,

30 ஆண்டுகள் தன்னுடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்த அதே இயேசு,

மூன்று ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்த அதே இயேசு,

பாடுகள் பட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்த அதே இயேசு

இன்றும் நம்மோடு வாழ்கிறார்.

திவ்ய நற்கருணைப் பேழையின் முன் அமர்ந்து நற்கருணை நாதரை உற்று நோக்கிக் கொண்டிருந்தால் விண்ணகத்தில் அமர்ந்திருக்கும் உணர்வு ஏற்படும்.

உள்ளத்தில் இயேசுவைத் தவிர வேறு எண்ணம் இருக்கக் கூடாது.

We can have a pretaste of heaven if we sit before our Eucharistic Lord meditating on Him.

இயேசு நம்மோடு வாழ்கிறார்.

நாமும் அவரோடு வாழ்வோம்,
இன்றும், என்றும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment