Sunday, March 17, 2024

"யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். "(மத்தேயு நற்செய்தி 1:24)

"யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். "
(மத்தேயு நற்செய்தி 1:24)

அன்னை மரியாள் மூன்று வயது முதலே கோவிலில் வளர்ந்த பெண்.

சிறு வயதிலேயே தன் கற்பை இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்தவள்.

இது கோவில் குருவுக்கும் தெரியும்.

ஆனாலும் கோவில் விதிகளின் படி திருமண வயது வந்த பெண்ணைக் கோவிலில் வைத்திருக்க முடியாது.

அவளுக்குத் திருமணம் முடித்தாக வேண்டும்.

அவளது கற்பு நிலைக்கும் பங்கம் வந்து விடக்கூடாது.

ஆகவே அவளது கணவனை இறைவனே தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதற்காக திருமணம் செய்ய விரும்பும் விதவர்கள் (Widowers) மட்டும் கோவிலுக்கு வரும்படி குரு ஒரு அறிக்கை விடுத்தார்.

அதன்படி பல விதவர்கள் கோவிலுக்கு வந்தார்கள்.

அவர்களில் ஒருவர் சூசையப்பர்.

பரிசுத்த ஆவி வழி காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொருவர் கையிலும் ஒரு கோல் கொடுக்கப்பட்டது.

சூசையப்பர் கையிலிருந்த கோல் 
தளிர்த்துப் பூத்ததோடு ஒரு புறா  வந்து அமர்ந்தது.

சூசையப்பர் மரியாளின் கணவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

திருமண ஒப்பந்தம் ஆகுமுன் மரியாள் தனது கற்புக்கு சூசையப்பர் பாதுகாவலராக இருக்க வேண்டும் என்று வாக்குறுதி பெற்றுக் கொண்டாள்.

திருமண ஒப்பந்தம் முடிந்த பின் சூசையப்பர் தொழில் காரியமாக வெளியூர் சென்றிருந்தார்.

அந்த சமயத்தில் தான் கபிரியேல் தூதர் மரியாளுக்குத் தோன்றி மீட்பரின் பிறப்பு பற்றி அறிவித்தார்.

இறைவன் சித்தமே தன் சித்தம் என்று வாழ்ந்து வந்த மரியாள்,

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகக் கடவது"

எனத் தனது ஒப்புதலைத் தெரிவித்தாள்.

அந்த வினாடியே இறைமகன் மரியாளின் வயிற்றில் மனுவுரு எடுத்தார்.

இந்த நிகழ்வு சூசையப்பருக்குத் தெரியாது.

அவர் வேலை முடிந்து திரும்பிய பின் மரியாள் கருவுற்றிருப்பதை அறிந்தார்.

சூசையப்பர் நேர்மையாளர். 

அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 


அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 

"சூசையே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 

அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். 

அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். 

ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்"; என்றார். 
(மத்தேயு நற்செய்தி 1:19-22)

அந்த வினாடியே சூசையப்பர் மரியாளை ஏற்றுக் கொண்டார்.

இயேசு  பிறப்பதற்கு முன்பே மரியாள் மூலமும், சூசையப்பர் மூலமும் தனது நற்செய்தியை நமக்கு அறிவித்து விட்டார்.

"நாம் அனைவரும் ஆண்டவரின் அடிமைகள், அவரது சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது மட்டுமே நமது வாழ்க்கை.''

மொத்த பைபிளுமே

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகக் கடவது"

என்ற மரியாளின் வார்த்தைகளில் அடங்கியிருக்கிறது.

ஏவாள் இறைவனின் வார்த்தையை மீறியதால் பாவம் செய்தாள்.

மரியாள் இறைவனின் வார்த்தையை ஏற்றுக் கொண்டதால் மீட்பர் பிறந்தார்.

நாமும் இறைவனின் வார்த்தையை ஏற்று‌ நடந்தால் மீட்பு அடைவோம்.

மரியாளுக்கு கபிரியேல் தூதர் நேரடியாகத் தோன்றினார்.

சூசையப்பருக்குக் கனவில் தான் தோன்றினார்.

ஆனாலும் சூசையப்பர் அவரது வார்த்தைகளை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டார்.

இன்றைய துறவற சபையினருக்கு சூசையப்பர் ஒரு முன்மாதிரிகை.

மரியாள் கற்புக்கு வார்த்தைப்பாடு கொடுத்திருந்தாள், இன்றைய துறவற சபையினரைப்போல.

ஆனால் சூசையப்பர் தனியே வார்த்தைப்பாடு எதுவும் கொடுக்கவில்லை.

அவரே கீழ்ப்படிதல் தான்.

சூசையப்பர்  = கீழ்ப்படிதல்.

Joseph = Obedience.

தாய்த் திருச்சபையின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ்வது தான் கிறிஸ்தவ வாழ்வு. 

இவ்விசயத்தில் சூசையப்பர் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் முன்மாதிரிகை.

நாம் அன்னை மரியாளையும், சூசையப்பரையும்ன முன்மாதிரிகையாகக் கொண்டு வாழ்ந்தால் இயைசுவைப் போல் வாழ்கிறோம்.

ஏனெனில் இயேசுவும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து தான் வாழ்ந்தார்.

இயேசு கத்தோலிக்கத் திருச்சபையை நிறுவியவர்.

அன்னை மரியாள் திருச்சபையின் தாய்.

புனித சூசையப்பர் திருச்சபையின் பாதுகாவலர்.

நாம் திருச்சபையின் பிள்ளைகள்.

 பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்வது தான் பிள்ளைகளின் கடமை‌.

கீழ்ப்படிந்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment