Thursday, March 14, 2024

"எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே" என்றார்."( அரு.7:29)

"எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே" என்றார்."
( அரு.7:29)

இயேசு முழுமையாகக் கடவுள். 
(Fully God)

முழுமையாக மனிதன்.(Fully Man)

இறைமகனும், மனுமகனுமாகிய‌ இயேசு மனிதர்களோடு பேசும் போது மனித மொழியில் பேசுகிறார்.

மனிதர்களின்‌ அனுபவத்தில் உள்ள மொழியில் பேசுகிறார்.

மனிதர்கள் இடத்திற்கும், நேரத்திற்கும் உட்பட்டவர்கள்.

இறைமகன் இடத்திற்கும், நேரத்திற்கும் அப்பாற்பட்டவர்.

மனுமகன் இடத்திற்கும், நேரத்திற்கும் உட்பட்டவர்.

பெத்லகேம் என்ற இடத்தில் பிறந்து,   

உலகில் வாழ்ந்து,

கல்வாரி மலை என்ற இடத்தில் சிலுவையில் மரித்தார்.

மனுமகன் இடத்திற்கும், நேரத்திற்கும் உட்பட்ட மொழியில் பேசினாலும்

அவர் இறைமகனுமாக இருப்பதால் அவரது சொற்களை இரண்டு விதத்திலும் புரிந்து கொள்ள வேண்டும்.

"எனக்கு அவரைத் தெரியும்,"

ஏனெனில்

"நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்."
(அரு.10:30)
The Father and I are one."
(John 10:30)

"நான் அவரிடமிருந்து வருகிறேன்."

கடவுள் எங்கும் நிறைந்தவர். ஆகவே அவர் எங்கும் போக முடியாது.

ஆனால் மனித சுபாவத்தில் இடத்திற்கு உட்பட்ட பூமிக்கு அவரால் வர முடியும்.

மனிதன் மனிதனைத் தேடிப் போவது போல

தானும் மனிதனைத் தேடிப் வேண்டும் என்பதற்காகவே 

எங்கும் நிறைந்த கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

மனிதனைத் தன்னை நோக்கி ஈர்ப்பதற்காக கடவுள் மனித அனுபவத்துக்குள் வருகிறார்,

கிணற்றில் விழுந்தவனைத் தூக்க கிணற்றுக்குள் குதிப்பது போல.

அடிமையை மீட்க அடிமையின் வடிவை ஏற்றார்.

பாவிகளாகிய நம்மை மீட்க நமது பாவங்களாகிய சிலுவையைச் சுமந்தார்.

"கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. 


ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, 

 சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். 
(பிலிப்பியர் 2:6,7,8)

"என்னை அனுப்பியவரும் அவரே"

தந்தைக்கும் மகனுக்கும் ஒரே சித்தம்.

மகன் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்ற தந்தையின் விருப்பமே மகனின் விருப்பமும்.

இதை நமக்குப் புரியும் வகையில் நமது மொழியில் 

"என்னை அனுப்பியவரும் அவரே"

என்று இயேசு சொல்கிறார்.

ஆக, தன்னால் படைக்கப்பட்ட மனிதனை மீட்க 

சர்வ வல்லப கடவுள் பலகீனமான மனிதனாகப் பிறக்கிறார்.

இது எதைக் காட்டுகிறது?

மனிதர்கள் மேல் கடவுளுக்கு இருக்கும் அளவு கடந்த அன்பைக் காட்டுகிறது.

கடவுளின் இந்த செயலிலிருந்து அவருடைய பிள்ளைகளாகிய நாம் என்ன பாடம் கற்கிறோம்?

மனிதருக்கு உதவ மனிதனாகப் பிறந்தார் கடவுள்.

ஏழைகளுக்கு உதவ ஏழைகளாக மாறுகிறோமா?

அல்லது

வசதியுள்ளவன் பிச்சைக்காரனுக்குப் போடுவது போல பிச்சை போடுகிறோமா?

ஈஸ்டர் விழாவில் நமது மகிழ்ச்சியைக் கொண்டாட மட்டன் பிரியாணி உணவு தயாரித்து Dining table ல் சாப்பிட அமர்கிறோம்.

அப்போது வெளியேயிருந்து ஒரு குரல்.

"அம்மா, ஏழைக்கு ஒரு வேளை உணவு."

சொல்வது "விண்ணகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே"

என்று இயேசு அழைக்கச் சொன்னாரே அதே தந்தையின் மகன், நமது சகோதரன்.

நமது சகோதரனை வீட்டுக்குள் அழைத்து,

நம்மோடு Dining table ல் அமர்ந்து சாப்பிடச் சொல்வோமா?

அல்லது,

..........................?

இறுதித் தீர்ப்பின் போது நம்மைப் பார்த்து இயேசு,

"நான் பசியாய் இருந்தேன், நீ உணவு அளித்தாய்"

என்று கூற வேண்டும்.

''பிச்சை போட்டாய்" என்று கூறக்கூடாது.

அதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

நாம் கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அரசு நமக்கு மற்றவர்களுக்கு அளிக்கும் கல்விச் சலுகையை அளிக்க மறுக்கிறது.

அதை கிறிஸ்தவர்கள் என்ற முறையில் ஏற்றுக் கொளாகிறோமா?

சலுகையைக் கேட்டு போராடுகிறோமா?

இயேசு நற்செய்தியை அறிவித்தார் என்ற ஒரே காரணத்திற்காக யூத மதத் தலைவர்கள் அவர் மீது சிலுவையை ஏற்றினார்கள்.

இயேசு சிலுவையை ஏற்றுக் கொண்டாரா, அல்லது, எதிர்த்துப் போராடினரா?

ஒரு நிமிடம் சிந்திப்போம்.

இயேசு மனிதரை மீட்க மனிதனாகப் பிறந்தார்.

பாவிகளின் பாவங்களுக்குப் பரிகாரமாக பாவிகள் அனுபவிக்க வேண்டிய தண்டனைகள் அனைத்தையும் அவரே அனுபவித்தார்.

மனிதர்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக அவரே ஆன்மீக உணவாக மாறினார்.


நாம் சமீக காலத்தில் கொரோனா தொற்று நோய் பரவிக் கொண்டிருந்தபோது அது பரவாமல் தடுக்க என்ன செய்தோம்?

வீட்டை விட்டு வெளியே போகாமலிருந்தோம்.

போக நேர்ந்தால் முகக் கவசத்தோடு போனோம்.

யாரையும் தொடாமல் இடைவெளி தூரம் விட்டு நடந்தோம்.

கோவிலுக்குப் போகாமல் திருப்பலியைக்கூட YouTube ல் பார்த்தோம்.

இவ்வளவும் எதற்காக?

கொரோனா நம்மைத் தொற்றாமலிருக்க. 

கொரோனா பரவாமலிருக்க அல்ல.

இயேசு தன்னையே தியாகம் செய்து உலகை மீட்டார்.

நாம் உலகையே தியாகம் செய்து விட்டு நம்மைக் காப்பாற்றிக் கொண்டோம்!

இறுதித் தீர்ப்பின்போது,

"நான் கொரோனா நோயால் அவதிப்பட்டேன், 

நீ எனக்கு ஆறுதல் சொன்னாய்" என்று சொல்வாரா?

இனியாவது திருத்துவோம்.

நமது ஒவ்வொரு செயலிலும் இயேசுவை முன்மாதிரிகையாகக் கொண்டு செயல்படுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment