Monday, March 25, 2024

''இயேசு அவரிடம், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை." (அரு. 14:6"

"இயேசு அவரிடம், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை." 
(அரு. 14:6"


இயேசுவின் பாடுகளுக்கு முந்திய நாள் வியாழக்கிழமை இரவில் 
தனது சீடர்களிடம்,

"நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். 

அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். 


 நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்" என்றார். 

அப்போது தோமையார்,


"ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது.

 அப்படியிருக்க

 நீர் போகுமிடத்துக்கான வழியை

 நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?"என்று கேட்டார்.

இறைமகன் இயேசு விண்ணகவாசி.

விண்ணகத்தை விட்டு இறங்கி பூமிக்கு வந்தவர்.

ஆகவே அவருக்கு விண்ணகத்துக்கு வழி தெரியும்.

ஆனால் தோமையார் பூமியில் பிறந்து பூமியிலேயே வளர்ந்தவர்.

ஆகவே சுயமாக அவருக்கு விண்ணகத்துக்கு வழி தெரியாது.

விண்ணகத்துக்கான வழி எது என்று ஆண்டவரே சொல்கிறார்.

"வழியும், உண்மையும், வாழ்வும் நானே."

இயேசுதான் விண்ணகத்துக்கான வழி. அவர் மூலமாகத்தான் நாம் விண்ணகத்துக்கு போக முடியும்.

நமது விண்ணக வாழ்வும் அவர்தான்.

அவரோடு மட்டுமல்ல அவரில்தான் நாம் நித்திய காலம் வாழ்வோம்.

இந்த உண்மையும் அவர்தான்.

"எல்லாம் இயேசுவே,

நமக்கு எல்லாம் இயேசுவே."

பிறந்த குழந்தைக்கு அதன் அம்மாதான் எல்லாம்.

திருமணத் தம்பதியரில் மனைவிக்குக் கணவன் தான் எல்லாம், கணவனுக்கு மனைவி தான் எல்லாம்.

கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துதான் எல்லாம்.

இறைவன் நம்மைப் படைத்தது இவ்வுலகில் நிரந்தரமாக வாழ்வதற்கு அல்ல.

இறைவன் வாழும் விண்ணகமே நமது நிரந்தரமான வீடு.

நாம் இவ்வுலகில் பயணிகள் மட்டுமே, விண்ணகத்தை நோக்கி நடக்கும் பயணிகள்.

விண்ணகம் எங்கே இருக்கிறது என்று தெரிந்தால் தான் அதை நோக்கி நடக்க முடியும்.

முதலில் விண்ணகம் பற்றிய ஒரு மறையுண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் இப்போது நடை போடும் இந்த பூமி ஒரு சடப்பொருளால் (Matter) ஆன இடம். இது படைக்கப்பட்டது.
ஆகவே துவக்கம் உள்ளது.

அதாவது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் இடத்துக்கும், நேரத்துக்கும் உட்பட்டது.

நாம் நிரந்தரமாக வாழப்போகும் விண்ணகம் இடத்துக்கும், நேரத்துக்கும் அப்பாற்பட்டது.

அது வாழ்க்கை நிலை.

அந்த நிலையை நாம் அடைவதற்கான ஒரே வழி இயேசு மட்டுமே.

பயணிகள் முதலில் வழிக்குள் நுழைய வேண்டும்.

இயேசு தான் வழி என்றால் முதலில் நாம் இயேசுவுக்குள் நுழைய வேண்டும்.

இயேசுவுக்குள் நுழைவது எப்படி?

"நான் தந்தையுள்ளும் 
நீங்கள் என்னுள்ளும் 
நான் உங்களுள்ளும் இருப்பதை
 அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 

"என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். 

என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். 

நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்."
(அரு. 14:20,23)

இரண்டு வசனங்களும் நாம் எப்படி இயேசுவுக்குள் நுழைவது என்பதை விளக்குகின்றன.

முதலில் நாம் இயேசுவை முழு இருதயத்தோடு நேசிக்க வேண்டும்.

நேசித்தால் அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப்போம்.

இயேசுவின் கட்டளைகளின்படி நாம் வாழ்ந்தால் கடவுள் நமக்குள் குடியேறுவார்.

கடவுள் நமக்குள் வாழும்போது 
கடவுள் நமக்குள்ளும், நாம் கடவுளுக்குள்ளும் இருப்பதை உணர்வோம்.

இவ்வுலகில் வாழும்போதே நாம் கடவுளுக்குள்ளே வாழ ஆரம்பித்து விடுவோம்.

நமது இவ்வுலக வாழ்வின் இறுதியில் நமது உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா தொடர்ந்து கடவுளுக்குள்ளே வாழும்.

இவ்வுலகில் வாழ்வதற்கும், விண்ணுலகில் வாழப்போவதற்கும் உள்ள வித்தியாசம்,

இவ்வுலகில் கடவுளின் பிரசன்னத்தில் மட்டும் வாழ்கிறோம்.

விண்ணுலகில் கடவுளை முகத்துக்கு முகம் தரிசித்து,

அவரோடு இணைந்து, அவரில் நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

இவ்வுலக வாழ்வு முடிவுரும்.
விண்ணக வாழ்வு என்றென்றும் நிலைத்திருக்கும்.

ஆரம்பக் கல்வி ஐந்து ஆண்டுகள் மட்டும்.

மேல் நிலைக் கல்வி ஏழு ஆண்டுகள் மட்டும்.

கல்லூரிப் படிப்பு நான்கு ஆண்டுகள் மட்டும்.

வேலை 58 வயது வரை மட்டும்.

இவ்வுலக வாழ்வில் எதுவுமே நிரந்தரம் இல்லை.

நாம் ஈட்டும் பொருட் செல்வம் நிரந்தரமற்றது.

அருட் செல்வம் மட்டுமே அழியாதது.

நிரந்தரமற்ற இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு வினாடியையும் அழியாத அருட்செல்வத்தை ஈட்டப் பயன்படுத்துவோம்.

அதற்காக அருள் நிறைந்த அன்னை மரியாளின் உதவியை வேண்டுவோம்.

இயேசுவே நமது வழி.
இயேசுவே நமது வாழ்க்கை.
இயேசுவே நமக்கு எல்லாம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment