இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை.
(லூக்கா நற்செய்தி 5:31)
வரி தண்டுபவராக இருந்து இயேசுவின் அழைப்பை ஏற்று அவரை பின்பற்றிய மத்தேயு அவரை தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார்.
இயேசுவும் அழைப்பை ஏற்று பந்தியில் அமர்ந்தார்.
அவரோடு வரி தண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்தார்கள்.
பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும்
வரி தண்டுபவர்களைப் பாவிகளாக கருதினார்கள்.
அவர்கள் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், "வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?" என்று கேட்டனர்.
அவர்கள் தாங்கள் மட்டுமே திருச்சட்டத்தை அனுசரிப்பதாகவும் மற்றவர்கள் அனுசரிக்கவில்லை எனும் கருதினார்கள்.
உண்மையில் அவர்கள் திருச்சட்டத்தை அதன் வார்த்தைகளின் படி (By its words) வாழ்ந்தார்கள், கருத்தின் படி அல்ல. (Not by its spirit)
இறைவன் முன்னால் அனைவரும் பாவிகள், அவர்கள் உட்பட.
சீடரிடம் கேட்ட கேள்விக்கு இயேசு பதில் அளித்தார்.
, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை."
ஆன்மீக ரீதியாக மக்கள் அனைவரும் பாவிகளே.
(ஆன்மீக நோயாளிகள்.)
இயேசு ஆன்மீக மருத்துவர்.
, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை."
என்ற இயேசுவின் வார்த்தைகள் வரி தண்டுபவர்களுக்கு மட்டுமல்ல
பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும்
உலகில் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப் போகிற அனைத்து மக்களுக்கும் பொருந்தும்.
வசனத்தை வாசிக்கும் நாம் அதை நம்மோடு பொருத்திப் பார்க்க வேண்டும்.
நம்மை பாவ நோய் எந்த அளவுக்குப் பற்றிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டு பிடிக்க வேண்டும்.
சுகமின்மையை மட்டும் தரும் அற்பப் பாவ நோய் மட்டுமா,
ஆன்மீக மரணத்தை தரும் சாமான பாவ நோயுமா,
எந்த அளவுக்கு நோய் நம்மை பீடித்திருக்கிறது என்பதை எல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
சாமான பாவ நோயாக இருந்தால் உடனடியாக பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.
அற்பப் பாவ நோய் மட்டும் இருந்தால் அதற்காகவும் மனத்தாபப்பட்டு, மன்னிப்புப் பெற்று அது தொடராதபடி கவனமாக இருக்க வேண்டும்.
அற்பப் பாவங்களை வெட்டி எறியாவிட்டால் அவை சாவான பாவத்துக்கு வழி விட்டு விடும்.
''நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை.
நான் பாவிகளை தேடியே உலகுக்கு வந்தேன்" என்று ஆண்டவர் சொன்னால் அவர் பரிசுத்தவான்களை தேடி வரவில்லையா?
ஆதாம் ஏவாள் வழி வந்த அனைத்து மனிதர்களும் பாவிகள் தான்.
அன்னை மரியாள் விதிவிலக்கு. அவள் சென்மப் பாவம் இன்றி பிறந்தது சுய சக்தியினால் அல்ல.
இயேசு தனது சிலுவை மரணத்தின் ஆன்மீக பலனை முன் விளைவாக (pre-effect) தன் தாய்க்குக் கொடுத்து அவளை சென்மப் பாவ மாசு இல்லாமல் உற்பவிக்கச் செய்தார்.
தனது தாயை சென்மப் பாவம் இன்றி படைத்தார்.
மற்ற அனைத்து மக்களும் சென்ம பாவத்தோடு உற்பவித்ததால் அவர்கள் அனைவரும் பாவிகளே.
"நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" .
(மத்தேயு நற்செய்தி 9:13)
என்று இயேசு கூறியது உண்மைதான்.
நமது கத்தோலிக்க திருச்சபையையே
"பாவிகளின் கூடாரம்"
என்று தான் அழைக்கிறோம்.
எப்படி மருத்துவ மனைகளில் நோயாளிகள் மட்டும் குணம் அடைவதற்காக அனுமதிக்கப்படுகிறார்களோ
அதேபோல திருச்சபையில் பாவ மன்னிப்பு பெற்று பரிசுத்தவான்களாக மாறுவதற்காக பாவிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கத்தோலிக்க திருச்சபைப் பாவிகளை பரிசுத்தவான்களாக மாற்றும் கூடாரம்.
யாரும் பிறக்கும் போதே பரிசுத்தவான்களாக பிறப்பதில்லை.
இல்லாத பரிசுத்தவான்களைத் தேடி ஆண்டவர் உலகத்துக்கு வரவில்லை.
இருக்கின்ற, வாழ்கின்ற பாவிகளைத் தேடியே ஆண்டவர் உலகத்துக்கு வந்தார்.
நம்மைத் தேடியே உலகத்துக்கு வந்தார்.
இதை நாம் உணர்ந்து இயேசுவின் கையால் பாவ மன்னிப்புப் பெற்று பரிசுத்தர்களாக மாறுவோம்.
பரிசுத்தர்கள் மட்டுமே வாழும் மோட்ச வாழ்வுக்கு நம்மை உரியவர்களாக மாற்றுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment