Monday, March 31, 2025

"ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய் விட்டார்."(அருளப்பர் நற்செய்தி 5:13)



"ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய் விட்டார்."
(அருளப்பர் நற்செய்தி 5:13)

பெத்சதாக் குளக் கரையில் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமின்றி படுத்ருந்த ஒருவருக்கு இயேசு யார் என்றே தெரியாது.

அவருக்கு இயேசுவின் மேல் விசுவாசம் இருந்திருக்காது.

தெரியாத ஒருவரை எப்படி விசுவசிக்க‌ முடியும்?

ஆனாலும் அவர் கேளாமலேயே இயேசுவே முன் வந்து அவரை விசாரித்து குணமாக்குகிறார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

மக்களில் அநேகருக்கு கடவுளைப் பற்றி தெரியாவிட்டாலும் கடவுளுக்கு உலகிலுள்ள அனைவரைப் பற்றியும் தெரியும்.

ஏனெனில் அனைவரையும் படைத்தவர் அவர்.

தன்னை அறிந்து விசுவசிப்பவர்களுக்கு மட்டுமல்ல
விசுவசியாதவர்களுக்கும் கடவுள் உதவி செய்கிறார்.

உலகில் நடைபெறும் அத்தனை நன்மைகளுக்கும் காரணம் அவரே.

சுகமில்லாதவர்கள் சுகம் பெற மருத்துவ மனைக்குச் செல்கிறார்கள்.

மருந்து கொடுப்பது மருத்துவராக இருக்கலாம்.

குணமளிப்பவர் கடவுளே.

குணமாகாவிட்டால்?

அதுவும் கடவுள் சித்தம்தான்.

அவர் சித்தமின்றி அணுவும் அசையாது.

அதனால் என்ன நேர்ந்தாலும் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும்.


நீண்ட நாள் நோயாளி குணமானதை இன்னொரு கோணத்திலிருந்தும் பார்க்கலாம்.

" இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, "இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்" என்றார்."

அவர் பாவம் செய்யக் கூடாது என்று அவருக்குப் புத்திமதி சொல்லும்  நோக்கத்தோடு தான் இயேசு அவரைக் குணமாக்கியிருக்கிறார்.

அவர் நோயில் விழுந்தது கூட‌ கடவுளின் திட்டமாக இருக்கலாம்.

அவரைப் பாவ வாழ்க்கையிலிருந்து மனம் திருப்புவதற்காக அவருக்கு நீண்ட கால நோயைக் கொடுத்திருக்கலாம்.,

 பின் அவரைக் குணமாக்கி, புத்திமதி சொல்லி, 
அவரை நல்லவராக வாழ வைத்திருக்கலாம்.


நமக்கு என்ன நேர்ந்தாலும் அது நாம் கடவுளைத் தேட வைப்பதற்காக அவர் போடும் திட்டமாகத்தான் இருக்கும்.

நமக்கு துன்பம் எதுவும் வராவிட்டால் நாம் நம்மைப் படைத்தவரை மறக்க நேரிடலாம்.

அவரை மறக்காமலிருக்கவே அவர் நமக்குத் துன்பங்களை அனுமதிக்கலாம்.

எதையும் கடவுளின் கண்ணோக்கிலிருந்து பார்க்க வேண்டும்.

கடவுள் நம்பிக்கையே இல்லாத ஒருவர் பைக்கில் போகும்போது பைக் சறுக்கிக் கீழே விழுந்து விட்டார்.

விழும்போது அவர் வாயிலிருந்து அவரே அறியாமல் வந்த வார்த்தை, "கடவுளே!"

நாம் மறந்தாலும் கடவுள் நம்மை மறக்க மாட்டார்.

லூர்து செல்வம்.

Sunday, March 30, 2025

"இயேசு அவரிடம், "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்."(அருளப்பர் நற்செய்தி 4:50)


"இயேசு அவரிடம், "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்."
(அருளப்பர் நற்செய்தி 4:50)

இயேசு கலிலேயாவில் போதித்துக்  கொண்டிருந்த போது அரசு அலுவலர் ஒருவர் அவரிடம் வந்து,

சாகும் தருவாயில் இருந்த தன் மகனைக் குணமாக்க வரும்படி வேண்டினார்.

இயேசு அவரிடம்,   "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்றார்.

 அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.

அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவர் மகன் சுகம் அடைந்து விட்டான் என்ற செய்தி வந்தது.

இப்புதுமை விசுவாசத்தின் மகத்துவத்தை வலியுறுத்துகிறது.

விசுவாசம் என்றால்?

கடவுள் உண்மையே உருவானவர்.
(God is truth itself.)

அவர் தன்னை தானே வெளிப் படுத்தினாலன்றி அவரைப் பற்றி யாராலும் எதுவும் அறிய முடியாது.

இயேசுவின் வருகைக்கு முன் தன்னுடைய தீர்க்கத் தரிசிகளின் வாயிலாக கடவுள் தன்னை வெளிப்படுத்தினார்.

அவர் வெளிப்படுத்திய உண்மைகள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் அடங்கியுள்ளன.

பழைய ஏற்பாடு - 46 புத்தகங்கள்.

மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு தனது பொது வாழ்வின் போது தன்னைப் பற்றிய இறையியல் உண்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்தினார்.

அவரது வாழ்க்கையே ஒரு இறையியல் வெளிப்பாடு.

பொது வாழ்வின் போது வெளிப்படுத்திய உண்மைகள் பைபிளின் புதிய ஏற்பாட்டில்  அடங்கியுள்ளன.

புதிய ஏற்பாட்டில் - 27 புத்தகங்கள்.

பைபிளில்  73 புத்தகங்கள்.

அவர் இராயப்பரின் தலைமையில் நிறுவிய கத்தோலிக்கத் திருச்சபையின் மூலமாகவும் தன்னைப் பற்றிய‌ உண்மைகளை வெளிப்படுத்தினார்.

இவை கத்தோலிக்கத் திருச்சபையின் பாரம்பரியத்தில்
அடங்கியுள்ளன.

இறைவனால் வெளிப்படுத்தப் பட்ட உண்மைகளை ஏற்று, அவற்றின் படி வாழ்வது விசுவாச வாழ்வு.

விசுவாசத்தையும் வாழ்க்கையையும் பிரிக்க முடியாது.

விசுவாசப் பிரமாணத்தை வாயினால் சொல்லிக் கொண்டு, அதன்படி வாழாதவன் விசுவாசி அல்ல.

கடவுளிடம் கேட்டது கிடைக்க வேண்டுமென்றால் நாம் விசுவாச வாழ்வு வாழ்பவர்களாக இருக்க வேண்டும்.

நாம் வாயினால் சொல்லும் விசுவாசப் பிரமாணத்துக்கும் நமது வாழ்க்கைக்கும் சமபந்தம் இல்லாவிட்டால் 

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்ற இறை வாக்குக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாமல் போய் விடும்.

இறைவாக்கு நாம் வாழ்வதற்காகத் தரப்பட்டுள்ளது. அதை வாழாமல் இறைவனிடம் கேட்பது பாடப்புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டு அதைப் படிக்காமல்  தேர்வு எழுதுவதற்குச் சமம்.

சிலர் பாடப் புத்தகத்தை தன் தலையணையாக வைத்துக் கொண்டு தூங்கினால் பாடமெல்லாம் தலைக்குள் ஏறிவிடும் என்று நினைக்கிறார்கள்.

பைபிளைக் கையில் வைத்துக் கொண்டால் மட்டும் போதாது, அதை வாழ வேண்டும்.

ஒவ்வொரு நாளும் காலையில் பைபிளை வாசிப்போம், பகலில் அதை வாழ்வோம்.

நாம் கேட்பது கிடைக்கும்.

ஆனால் நாம் கேட்பது இறைவாக்குக்கு எதிரானதாக இருந்து விடக்கூடாது.

இறைவாக்கு, நமது வாழ்க்கை, நமது விருப்பம் மூன்றும் இணைந்திருக்க வேண்டும்.

கேட்பது இறைவாக்குக்கு ஒத்திருக்க வேண்டும்.

இறை விருப்பத்துக்கு எதிரானதாக நமது விருப்பம் இருந்து விடக்கூடாது.

அப்போது தான் நமது வாழ்க்கையும் இறைவனுக்கு ஏற்றதாக இருக்கும்.

வேலை தேடுகிறவன் செய்தித் தாளில் விளம்பரப் பகுதியைப் பார்ப்பான்.

அரசியலில் ஆர்வம் உள்ளவன்
முன்னால் TV இருந்தால் அரசியல் செய்திகளைப் பார்ப்பான்.

பொழுதுபோக முன்னால் TV இருந்தால் படம் , சீரியல் பார்ப்பான்.

ஆன்மீக வாழ்வில் ஆர்வமுள்ளவன் ஆண்டவரிடம் 
விசுவாச வாழ்வு சார்ந்த உதவிகளைக் கேட்பான்.

"தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி! " 
(லூக்கா நற்செய்தி 11:13)

விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது  உறுதி!

நாமும் கேட்போம்.

விசுவாசத்தோடு கேட்போம்.

விசுவாச வாழ்வுக்கு அவசியமான உதவிகளைக் கேட்போம்.

நாம் கேட்பது உறுதியாகக் கிடைக்கும்.

கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும்.

லூர்து செல்வம்.

Saturday, March 29, 2025

"நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்."(2 கொரிந்தியர் 5:21)



"நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்."
(2 கொரிந்தியர் 5:21)

இவை புனித சின்னப்பர் கொரிந்தியருக்கு, அதோடு நமக்கும், எழுதிய வார்த்தைகள்.

ஒரு ஊரில் ஒரு பெரிய செல்வந்தர் இருந்தார்.

அவருக்கு ஒரு தென்னந் தோப்பு இருந்தது.

ஒரு நாள் ஒரு பையன் இளநீர் குடிக்க ஆசைப்பட்டு தென்னந் தோப்புக்குப் போய் ஒரு குட்டையான மரத்தில் ஏறி, ஒரு தேங்காயைப் பறித்துப் போட்டான்.

அவன் மரத்திலிருந்து இறங்கி தேங்காயை எடுத்துக் கொண்டிருந்த போது காவல் காரன் பார்த்து விட்டான்.

அவன் பார்த்ததைப் பையன் பார்த்து விட்டான்.

உடனே தேங்காயை எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தான்.

காவல்காரன் அவனை விரட்டிக் கொண்டு ஓடினான்.

பையன் வேகமாக ஓடி வீட்டுக்குள் நுழைந்து விட்டான்.

பேப்பர் வாசித்துக் கொண்டிருந்த அப்பாவிடம் நடந்ததைச் கூறி விட்டு, அவனது அறைக்குள் புகுந்து கதவை உட்புறம் பூட்டி விட்டான்.

கொஞ்ச நேரத்தில் காவல் காரன் வந்து,

"உங்கள் பையன்  எங்கள் தோட்டத்தில் தோட்டத்தில் தேங்காய்த் திருடி விட்டான். அவனை வெளியே அனுப்புங்கள்."

"நான் இளநீர் வாங்கி வா என்று அனுப்பினேன். என் ஆசையை நிறைவேற்ற அவன் தேங்காய் திருடியிருக்கிறான்.

குற்றம் என்னுடையது.

ஏதாவது தண்டனை கொடுக்க வேண்டுமென்றால் எனக்குக் கொடுங்கள்."

"ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டுங்கள். பையனை விட்டு விடுகிறோம்."

தந்தையும் மகன் சார்பில் மன்னிப்புக் கேட்டு விட்டு ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் கட்டினார்.

"இனி பையனைத் தோட்டத்தின் பக்கம் வர விடாதீர்கள். வந்தால் பிடித்துப் போலீசிடம் ஒப்படைத்து விடுவோம்."

"இனி வர மாட்டான்."

காவல்காரன் போய் விட்டான்.

இவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த பையனுக்கு அழுகை அழுகையாய் வந்தது.

வெளியே வந்து,

"அப்பா, மன்னித்துக் கொள்ளுங்கள். நான் செய்த குற்றத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டு, நான் அனுபவிக்க வேண்டிய தண்டனையை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள்.

நான் பறித்த தேங்காயும் வேண்டாம். இனி இந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்.

மன்னித்துக் கொள்ளுங்கள்."

தேங்காயை வீசி எறிந்து விட்டான்.

"மன்னிப்புக் கேட்டு திருந்தியிருக்கிறாய்.   நல்ல பையன். இனி தப்பு செய்யக்கூடாது."

"செய்ய மாட்டேன், அப்பா.


கடவுளுக்கு விரோதமாகப் பாவம் செய்தது நாம்.

நாம் செய்ய வேண்டிய பரிகாரத்தைச் செய்தது இறைமகன்.

பரிகாரம் செய்வதற்காக மனிதனாகப் பிறந்து,

நமது பாவச் சுமையை முழுவதும் சிலுவை வடிவில் சுமந்து,

பாவச் சுமையோடு கல்வாரி மலையில் ஏறி,

அதே சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு,

சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போதே நம்மை மன்னிக்கும் படி தந்தையிடம் வேண்டி,

தன்னை நமது பாவங்களுக்காகப் பலியாக ஒப்புக் கொடுத்தார்.

இயேசு தனது தந்தையிடம் வேண்டும் விதத்தைப் பாருங்கள்.

நாம் ஏதாவது தப்பு செய்யும் போது நமது அம்மா அப்பாவிடம் நமக்காகப் பரிந்து பேசும்போது,

"பையன் தெரியாமல் செய்து விட்டான், மன்னியுங்கள்." என்று சொல்வது போல,

இயேசுவும் நம் விண்ணகத் தந்தையிடம்,

"தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார்."
(லூக்கா நற்செய்தி 23:34)

இவ்வார்த்தைகளில் இயேசு நம்மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பும், இரக்கமும் வெளிப்படுகிறது.

உலகம் உண்டான நாள் முதல் உலகம் முடியும் வரை வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப்போகும் அத்தனை கோடி மக்களின் கோடிக்கணக்கான பாவங்களும் தந்தையால் மன்னிக்கப்பட இந்த சிறு செபம் போதுமானது.

இது அவ்வளவு வல்லமை உள்ள செபம்.

அத்தனை கோடி மக்களுக்கான மன்னிப்பும் தந்தையிடம் ரெடி.

நாம் கேட்டுப் பெற வேண்டும்.

"கேளுங்கள், கொடுக்கப்படும்."

இயேசுவின் சிலுவைப் பலியால் தந்தையிடம் தயாராக உள்ள பாவ மன்னிப்பை நாம் கேட்டுப் பெற வேண்டும்.

வெயில் காலத்தில் அம்மா வெற்றுக் காலோடு வெயில் சுடச்சுட மைல்கணக்கில் நடந்து எடுத்து வந்து வீட்டில் வைத்திருக்கும் தண்ணீரை

ஒரு தம்ளரை எடுத்து கோதிக் குடிக்க மனமில்லாதவர்களை என்ன செய்யலாம்?

தந்தையின் பாவ மன்னிப்பு கத்தோலிக்க திருச்சபையையின் குருக்களிடம் தயார் நிலையில் உள்ளது.

பாவ சங்கீர்த்தனத்தின் மூலம் அதைப் பெற்று பரிசுத்தவான்களாக மாறுவோம்.

விண்ணக வாழ்வைச் சுதந்தரித்துக் கொள்வோம்.

கேட்போம்.

பெறுவோம்.

லூர்து செல்வம்.

Friday, March 28, 2025

"ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" என்றார். " (லூக்கா நற்செய்தி 18:13)


"ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" என்றார். " 
(லூக்கா நற்செய்தி 18:13)

நமது செபங்களிலே மிகச் 
சிறியதும், மிகச் சக்தி வாய்ந்ததுமான செபம்,

"கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்." என்ற மன வல்லப செபம் தான்.

இந்த சிறிய செபத்தில்,
1. நம்மைப் படைத்து பராமரித்து வரும் கடவுளை ஏற்றுக் கொள்கிறோம்.

2. நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். 

3. கடவுள் இரக்கம் உள்ளவர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். 

4. கடவுள் நமது பாவங்களை மன்னிப்பார் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். 

5. பாவத்தில் விழுந்தாலும் கடவுள் உதவியோடு எழுந்து நடக்க முடியும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். 

பாவத்தில் விழுந்தவர்கள் எழுந்து நடக்க இயேசு உதவுவார் என்பதற்கு அடையாளமாகத்தான் அவர் நமது பாவங்களுக்காகப் பரிகாரம் செய்து நம்மை மீட்பதற்காக பாரமான சிலுவையச் சுமந்து சென்ற போது மூன்று முறைகள் சிலுவையின் பாரத்தால் கீழே விழுந்து எழுந்து நடந்தார்.

"இறைவா, பாவத்தில் விழாமல் புண்ணிய வாழ்க்கை வாழ்ந்து உம்மோடு பேரின்ப வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் என்னைப் படைத்தீர்.

ஆனால் நான் உமது விருப்பத்துக்கு மாறாக பாவத்தில் வீழ்ந்தேன்.

இதற்கு எனது பலகீனத்தைக் காரணம் சொல்ல மாட்டேன்.

ஏனேனில் எனது ஆன்மீக சக்தியை அதிகரிக்க நீர் அருள் வரங்களைக் தந்து உதவுவதோடு, ஆன்மீகச் சத்துணவாக உம்மையே எனக்குத் தந்து கொண்டிருக்கிறீர்.

எனது பாவத்துக்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம்.

ஆண்டவரே நீர் அளவில்லாத இரக்கம் உள்ளவர்.

"எழுந்து வா, மகனே." என்று உதவிக் கரம் நீட்டுகிறீர்.

இவ்வளவு அன்பும் இரக்கமும் உள்ள தந்தைக்கு விரோதமாக பாவம் செய்து விட்டேனே என்று உண்மையாகவே மனத்தாபப் படுகிறேன், அப்பா.

உமது அளவு கடந்த இரக்கத்தால் என் மீது இரங்கி என் பாவங்களை மன்னியும், தேவனே.

நான்பாவி, பெரும் பாவி.

ஆனால் உமது இரக்கம் என் பாவத்தை விடப் பெரியது.

பாவிகளாகிய எங்கள் பாவங்களை மன்னிப்பதற்கென்றே நீர் நிறுவியுள்ள பாவ சங்கீர்த்தனத்தின் மூலம் என் பாவங்களை அறிக்கையிடுகிறேன்.

இனி பாவம் செய்வதில்லை என்று உறுதி கூறுகிறேன்.

என்னைப் பாவத்தில் விழாதபடி பாதுகாக்க உமது அருள் வரத்தைத் தந்தருளும், சுவாமி.

எனக்கு உத்தம மனத்தாபத்தைத் தந்து உதவிய உமக்கு நன்றி."

பாவம் கடவுளுக்கு விரோதமாகச் செய்யப் படுகிறதா?

நமது அயலானுக்கு விரோதமாகச்
செய்யப் படுகிறதா?

நமக்கு விரோதமாகச்
செய்யப் படுகிறதா?

கடவுளுக்கு விரோதமாகச் செய்யப் படுவது தான் பாவம்.

அவரது கட்டளைகளை மீறுவது தானே பாவம்.

ஆனால் கடவுள் நமது பாவத்தால் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்.

அவர் மாறாதவர்.

ஆதாம் ஏவாள் பாவம் செய்தபோது பாதிக்கப்பட்டது அவர்களும் அவர்களது பிள்ளைகளாகிய நாமும் தான்.

ஆகவே கடவுளுக்கு விரோதமாகப் பாவம் செய்யும்போது நமக்கும் விரோதமாகப் பாவம் செய்து கொண்டிருக்கிறோம்.

ஏனெனில் பாவம் இல்லாமல் இறந்தால் விண்ணக பேரின்ப வாழ்வை அடையப் போவதும், பாவத்தோடு இறந்தால் விண்ணக பேரின்ப வாழ்வை இழக்கப் போவதும் நாம்தான்.

மண்ணை அள்ளித் தன் முகத்தில் எறிந்தால் எறிந்தவன் கண் தான் தெரியாது.

பத்துக் கட்டளைகளில் முதல் மூன்று கட்டளைகள் தான் இறைவனைச் சார்ந்தவை.

மற்ற ஏழும் நமது அயலானைச் சார்ந்தவை.

அவற்றை மீறும் போது நமது அயலானுக்கு எதிராகச் செயல்படுகிறோம்.

நமது அயலான் கடவுளுடைய பிள்ளையாக இருப்பதால் அவனுக்கு எதிராகச் செயல்படும் போது கடவுளுக்கு எதிராகச் செயல்படுகிறோம்.

அயலானுக்கு எதிராகப் பாவம் செய்து விட்டால்,

அந்தப் பாவத்துக்கு மன்னிப்புப் பெற வேண்டுமென்றால் முதலில் அயலானிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு அப்புறம் கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

அயலானோடு சமாதானமானால்தான் கடவுளோடு சமாதானமாக முடியும்.

அயலான் நமக்கு எதிராகப் பாவம் செய்து விட்டால்,

அவன் நம்மிடம் மன்னிப்புக் கேட்காவிட்டாலும் நாம் அவனை மன்னித்து விட வேண்டும்.

அவனை மன்னித்தால் தான் கடவுள் நம்மை மன்னிப்பார்.

பிறர் மீது வன்மத்தை வைத்துக்கொண்டு பாவ சங்கீர்த்தனம் செய்தால் பயன் இல்லை.

"எங்களுக்கு எதிராகப் பாவம் செய்தவர்களை நாங்கள் மன்னிப்பதுபோல எங்கள் பாவங்களை மன்னியும்" என்று தினமும் கடவுளிடம் வேண்டுகிறோம்.

"ஆண்டவரே, எனக்கு எதிராகப் பாவம் செய்த அனைவரையும் நான் மன்னித்து விட்டேன். தயவுசெய்து நீர் எனது எல்லா பாவங்களையும் மன்னியும்."

லூர்து செல்வம்.

Thursday, March 27, 2025

அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது" என்று கூறினார். (மாற்கு நற்செய்தி 12:33)



அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது" என்று கூறினார். 
(மாற்கு நற்செய்தி 12:33)

"அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று இயேசுவிடம் கேட்ட மறைநூல் அறிஞர் 

இறைவனை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்க வேண்டும், நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானை நேசிக்க வேண்டும் என்று இயேசு கூறியதைக் கேட்ட பின் இவ்வாறு கூறினார்.

அவர் கூறிய வார்த்தைகளைத் தியானிப்போம்.

"கடவுடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், 

தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் 

எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது"

ஒவ்வொரு மனிதனும் முழுமையாகக் கடவுளால் படைக்கப்பட்டான்.

அவன் முழுமையாகக் கடவுளுக்குச் சொந்தம்.

அவனுடைய ஒரு சிறு முடி கூட அவனுக்குச் சொந்தமானது அல்ல.

கடவுளுக்குச் சொந்தமான ஒவ்வொரு உறுப்பையும் அவன் கடவுளுக்காக மட்டும் பயன்படுத்த அவன் கடமைப் பட்டிருக்கிறான்.

மனிதன் உயிர் வாழ நூறு சதவீதம் அத்தியாவசியமான இருதயம் முற்றிலும் கடவுளுக்குச் சொந்தம்.

இருதயம் அன்பின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது.

அப்படியானால் நமது அன்பு முழுவதும் கடவுளுக்கே சொந்தம் என்பது சொல்லாமலே விளங்கும்.

கடவுள் அன்பு மயமானவர்.

அவரது அன்பைத் தான் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடவுள் நம்மை அளவில்லாத விதமாய் அன்பு செய்கிறார்.

நாம் நமது இதயத்தை அவரை மட்டும் அன்பு செய்யப் பயன்படுத்த வேண்டும்.

ஆகவேதான் 

"உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக" என்று இயேசு கூறுகிறார்.

நமது உள்ளம் உணர்வுகளின் (Feelings, emotions) இருப்பிடம்.

மனம் எண்ணங்களின் (Thoughts) இருப்பிடம்.

எண்ணங்களும், உணர்வுகளும் தொடர்புடையவை.

ஆருயிர் நண்பனை நினைத்துப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுகளுக்கும்,

நம்மைக் கெடுப்பதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் பகைவனை நினைத்துப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுகளுக்கும்

உள்ள வித்தியாசம் நமக்குத் தெரியும்.

நமது மனது கடவுளைப் பற்றிய எண்ணங்களால் நிறைந்திருக்க வேண்டும்.

அந்த எண்ணங்கள் உள்ளத்தை பக்தி உணர்ச்சிகளால் நிறப்பும்.

நமது உள்ளத்தையும், மனதையும் முழுவதுமாகக் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

ஆற்றல்=சக்தி.

நமது முழு சக்தியையும் பயன்படுத்தி கடவுளை நேசிக்க வேண்டும்.

முழு இருதயத்தையும், முழு உள்ளத்தையும், முழு மனதையும், முழு ஆற்றலையும் கடவுளுக்குக்‌ கொடுத்தபின் நம்மையும், பிறனையும் எதைக்கொண்டு அன்பு செய்ய?

நாம் கடவுளுக்குச் சொந்தம். அவருள் வாழ்கிறோம். நாம் கடவுளை நேசிக்கும் போது அவருள் வாழும் நம்மையும் பிறனையும் சேர்த்து தான் நேசிக்கிறோம்.

 நீரால் நிறைந்த ஒரு பெரிய அண்டாவுக்குள் ஒரு சிறிய தம்ளரைப் போட்டுவிட்டால் தம்ளரும் நிறைந்து விடுகிறது அல்லவா?

நாம் கடவுளை நேசிக்கும் போது அவருள் வாழும் நம்மையும், நமது பிறனையும் நேசிக்கிறோம்.

கடவுளைக் கண்ணால் பார்க்க முடியாது.

கண்ணால் காணக்கூடிய நமது பிறனை நேசிக்கும் போது கடவுளையும் நேசிக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது பிறன்மீது நமக்கு அன்பு ஏற்படாவிட்டால் நாம் கடவுளை அன்பு செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது பிறனுக்கு நாம் செய்யும் உதவிதான் நாம் கடவுளுக்குக் கொடுக்கும் காணிக்கை.

பிறனுக்குக் கொடுக்காமல் அதை கோயில் உண்டியலில் போட்டால் உண்டியல் நிறையும், அதைக் கடவுள் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

நாம் கடவுளுக்குச் செலுத்தும் பலிகளை விட நாம் செய்யும் அன்பு தான் பெரியது.

கடவுளையும், பிறனையும் நேசிக்காமல் நாம் செலுத்தும் பலியை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் 
கடவுளையும், பிறனையும் அன்பு செய்வோம்.

அதற்குப் பின்தான் மற்றதெல்லாம்.

லூர்து செல்வம்.

Wednesday, March 26, 2025

"என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்."(லூக்கா நற்செய்தி 11:23)



"என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்."
(லூக்கா நற்செய்தி 11:23)

அரசியல் ரீதியாக கூட்டுச் பேராக் கொள்கை என்று ஒரு கொள்கை உண்டு.

எந்த அணியிலும் சேராமல் நடுநிலை வகிக்கும் கொள்கை.

நேருவின் தலைமையில் இந்தியா இந்த கொள்கையைப் பின்பற்றியது.

அமெரிக்காவும், ரஷ்யாவும் அரசியலில் போட்டி போட்டுக் கொண்டிருந்த காலம்.

இந்தியா எந்த நாட்டோடும் கூட்டுச் சேரவில்லை.

அது அரசியலில் நல்ல கொள்கை.

ஆனால் ஆன்மீகத்தில் இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாது.

மக்களை விண்ணக பேரின்ப வாழ்வுக்கு வழி நடத்தும் இயேசுவின் தலைமையில் ஒரு அணி.

மக்களை பேரிடர் நிலைக்கு வழி நடத்தும் சாத்தானின் தலைமையில் ஒரு அணி.

நம்மால் ஒரு அணியில் தான் அங்கம் வகிக்க முடியும்.

நாம் இயேசுவின் அணியில் இருந்தால் விண்ணக வாழ்வை நோக்கி நடை போடுவோம்.

சாத்தானின் அணியில் இருப்பவர்கள் பேரிடர் நிலையை நோக்கி நடை போடுவார்கள்.

இரண்டில் ஒன்றிலும் சாராமல் ஒருவன் வாழ முடியாது.

இயேசுவின் அணியில் இல்லாதவர்கள் சாத்தானின் அணியில் இருப்பார்கள்.

திருமுழுக்குப் பெற்று, சாவான பாவம்  இல்லாமல், புண்ணிய வாழ்வு வாழ்பவர்கள் இயேசுவின் அணியில் இருக்கிறார்கள்.

சாவான பாவத்தில் விழுந்த வினாடியில் சாத்தான் அணிக்கு மாறிவிடுகிறார்கள்.

பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெற்ற வினாடியில் இயேசுவின் அணிக்கு மாறிவிடுகிறார்கள்.

இதைத் தான் இயேசு 
"என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்." என்கிறார்.

"என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்."

இயேசுவோடு இணைந்து இருப்பவர்கள் மக்களுக்கு முன் மாதிரியாகயாக வாழ்வார்கள்.

இயேசுவை விட்டு விலகி வாழ்பவர்கள் தங்கள் துர்மாதிரிகையான வாழ்க்கை மூலம் மற்றவர்களையும் கெடுத்து விடுவார்கள்.

இயேசுவின் அணியில் இருப்பவர்கள் தங்கள் ஆன்மீக வாழ்வில் முன்னேறிக் கொண்டேயிருக்க வேண்டும்.

அதாவது பாவமின்றி இருந்தால் மட்டும் போதாது, நற் செயல்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் புண்ணிய வாழ்வில் முன்னேற வேண்டும்.

முன்னேறாதவன் பின்னடைகிறான்.

முன்னேறாமலும் பின்னடையாமலும்
வாழ முடியாது.

Our spiritual life cannot be static.
We keep on moving, either forward or backward.

முன்னேறிக் கொண்டே யிருப்பவர்கள் புனித நிலையை அடைவார்கள்.

பின்னடைந்து 
கொண்டிருப்பவர்கள் பாவத்தில் விழ நேரிடும்.

விவசாயி தான் பயிரிடப் போகும் நிலத்தை முதலில் பண்படுத்துகிறான். 

அதாவது பயிர்த் தொழிலுக்குக் கேடு விளைவிக்கும் முட்செடிகள், புல்பூண்டுகள், கற்கள்‌ போன்றவற்றை அப்புறப் படுத்துகிறான்.

அதன்பின் பண்படுத்தப்பட்ட நிலத்தில் பயிரிடுகிறான்.

பண்படுத்தப்பட்ட நிலத்தைப் பயிர் செய்யாமல் அப்படியே போட்டுவிட்டால் பழைய படி புல் முளைக்க ஆரம்பிக்கும்.

அதேபோல் தான் ஆன்மீகத்தில் முதலில் பாவத்திலிருந்து விடுதலை பெறுவதன் மூலம் ஆன்மாவைப் பண்படுத்த வேண்டும்.

அடுத்து புண்ணியங்கள் புரிந்து ஆன்மீகத்தில் வளர  வேண்டும்.

ஆன்மீகத்தில் வளராவிட்டால் பாவங்கள் நுழைய ஆரம்பிக்கும்.

பயிர் செய்யப்பட்ட நிலத்தில் களை எடுத்தி, கொத்திக் கொடுப்பது போல, 

ஆன்மீக வாழ்விலும் அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கப் போகும் முன் ஆன்மப் பரிசோதனை செய்து, அன்று செய்த பாவங்களுக்கு மனத்தாபப்பட்டு மன்னிப்புப் பெற்ற பின்தான் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.

இரவில் நாம் நினையாத நேரத்தில் இறைமகன் நம்மை அழைக்க வந்தால் அவருடன் போக தயார் நிலையில் தான் தூங்க வேண்டும்.

காலையில் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் கண்விழித்து பகலில் இறையன்புப் பணிகளிலும், பிறரன்புப் பணிகளிலும் ஈடுபட வேண்டும்.

அன்று பகல் முழுவதும் நாம் செய்தவற்றை இரவு செபத்தின் போது இறைவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

இப்படித் தினமும் செய்தால் ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டேயிருப்போம்.

ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டே வாழ்வோம்.

லூர்து செல்வம்

Tuesday, March 25, 2025

"எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்."(மத்தேயு நற்செய்தி 5:19)

"எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்."
(மத்தேயு நற்செய்தி 5:19)

நல்லொழுக்கப் பாட வகுப்பில் ஆசிரியர்,

"உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நல்லொழுக்கம்.

நல்லொழுக்கம் உள்ளவர்களாக வாழ ஆன்மீகம் சார்ந்த இறைவனது கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்,

மனசாட்சியின் குரலுக்கு செவி கொடுத்து அதன்படி வாழ வேண்டும்.

உடல் ஆரோக்கியம் உள்ளவர்களாக வாழ உடல் ஆரோக்கியம் சார்ந்த பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

புகை பிடித்தல், மது அருந்துதல் போன்றவை உடல் நலனுக்கு கேடு விளைவிப்பவை.

பீடி, சிகரட் போன்றவைகளைக் கையால் தொடக்கூட கூடாது......"

அன்று நண்பகல் உணவுக்குப் பின் ஒரு மாணவன் பாடத்தில் ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்ய ஆசிரியரைத் தேடி ஆசிரியர்கள் அறைக்குச் சென்றான்.

சென்றவன் திரும்பி விட்டான்.

சக மாணவன் ஒருவன்,

''என்னடா, சந்தேகம் தீர்ந்ததா?"

"இல்லை. புதியதொரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது."

''ஆசிரியரைப் பார்த்தாயா?"

"பார்த்தேன், ஆகவேதான் புதிய சந்தேகம்."

"என்னடா சொல்ற?"

"ஆசிரியர் கையில் சிகரெட். வாயிலிருந்து சுருள் சுருளாகப் புகை. அறை முழுவதுமே புகை.
அவர் போதித்ததையே செய்ய முடியாத அவரால் எப்படி நம் சந்தேகத்தைத் தீர்க்க முடியும்?"

சொல்லும் செயலும் ஒத்து வராத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல!

ஆண்டவர் இயேசு தான் போதித்ததை எல்லாம் அவரது வாழ்க்கையில் நடந்து காட்டினார்.

"ஏழைகள் பாக்கியவான்கள்" என்றார்.

அவரே ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாக மரித்தார்.

"பகைவர்களை நேசியுங்கள்." என்றார்.

நமது பாவங்களால் அவரைப் பகைத்த நம்மை நேசித்ததுமல்லாமல் நாம் செய்த பாவங்களுக்கு அவர் உயிரைக் கொடுத்து பரிகாரம் செய்தார்.

"உங்களுக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள்." என்றார்.

அவரைக் கற்றூணில் கட்டி வைத்து அடித்தவர்களையும், முள்முடி சூட்டி அடித்தவர்களையும், 
அவர்மீது பாரமான சிலுவையை ஏற்றியவர்களையும், 
சிலுவையில் அறைந்தவர்களையும், 
அவரது பாடுகளுக்குக் காரணமான அனைவரையும் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போதே மன்னித்து விட்டார்.

நாம் அவருடைய சீடர்கள். அவரது நற்செய்தியை நற்செய்தியை மற்றவர்களுக்குப் போதிக்கப் கடமைப் பட்டவர்கள்.

நாம் முதலில் நற்செய்தியை நமது வாழ்வாக மாற்றுவோம்.

அப்புறம் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்போம்.

மற்றவர்கள் நமது வாழ்வில் இயேசுவைக் காண வேண்டும்.

அப்போது தான் நாம் போதிப்பதை மற்றவர்கள் நம்புவார்கள்.

சாதித்துப் போதிப்பவர்களுக்குதான் விண்ணகத்தில் முதல் இடம்.

லூர்து செல்வம்.

Monday, March 24, 2025

பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். (லூக்கா நற்செய்தி 1:38)


பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 1:38)

"ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்."
(லூக்கா நற்செய்தி 1:26)

செக்கரியாவுக்கு இறைச் செய்தியை அறிவித்த அதே வானதூதர் கபிரியேல் 

அதிலிருந்து ஆறாம் மாதத்தில் நசரேத்தூரில் வாழ்ந்து கொண்டிருந்த மரியாளுக்கு இறைச் செய்தியை அறிவிக்க வருகிறார்.

அவர் கூறிய  வார்த்தைகள் அனைத்தும் இறைவனால் அனுப்பப்பட்டவை.

அனுப்பப்பட்ட செய்தி என்ன?

மனுக்குலத்தின் மீட்பராக உலகில் பிறக்கப் போகும் மீட்பருக்கு மரியாள் தாயாக வேண்டும்.

"நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்ற வார்த்தைகள் மூலம் இறைச்செய்தியை மரியாள் ஏற்றுக் கொள்கிறாள்.

ஆண்டவரின் அடிமை -

பிறக்கப் போகும் இயேசுவுக்கு அவள் தாய்.

அதே சமயத்தில் அவருடைய அடிமை.

பிறக்கப் போகும் மகனுக்கு அடிமையாக வாழப்போகும் தாய்.

எசமானனின் எண்ணங்களை உத்தரவுகளாக ஏற்றுக் வாழ்பவள் அடிமை.

எசமானனின் எண்ணங்களையும், சொற்களையும் அப்படியே ஏற்றுக் கொண்டு செயல் புரிபவள் அடிமை.

அப்படியானால் இயேசுவின் எண்ணங்களை மரியாள் ஆரம்பம் முதலே அறிந்திருக்க வேண்டும்.

இயேசு  உலகுக்கு வந்ததன் நோக்கம், அவர் செய்யப் போகின்றவை, அவருக்குச் செய்யப்படப் போகின்றவை அனைத்தையும் அவர் அவளோடு பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

அவரது பொது வாழ்க்கையைப் பற்றியும், தனது பாடுகளைப் பற்றியும், தனது சிலுவை மரணத்தைப் பற்றியும் அவர் அன்னையுடன் வாழ்ந்த போதே தெரிவித்திருக்க வேண்டும்.

அவர்களது முப்பது ஆண்டு கால கருத்துப் பரிமாற்றத்தில்  தன் பாடுகளின்போது எப்படிச் செயல்பட வேண்டுமென்று இயேசு அன்னையிடம் சொல்லி அவளையும் தனது பாடுகளாக்காகத் தயாரித்திருக்க வேண்டும்.

ஒருவர் தான் கோயிலில் பலியிடப் போகும் ஆட்டைத் தானே வளர்ப்பதைப் போல

இறைவனின் செம்மறியை அன்னை மரியாள் வளர்த்திருக்க வேண்டும்.

மரியாள் மூன்று வயது முதல் கோவிலில் வளர்ந்தவள்.

பைபிளின் பழைய ஏற்பாட்டு இறைச் செய்தியை எல்லாம் கோவிலில் பாடமாகப் படித்தவள்.

மெசியாவைப் பற்றி முற்றிலும் அறிந்தவள்.

அவர் எங்கே பிறப்பார், எப்படி வாழ்வார், எப்படி பலியிடப் படுவார் என்பவை பற்றிய இறை வாக்கினர்களின் முன்னறிவிப்புகளை எல்லாம் பாடமாகக் கற்று, விசுவாசமாக ஏற்றுக் கொண்டவள்.

தான் மெசியாவின் தாயாகப் போவது  அப்போது அவளுக்குத் தெரியாது.

அக்காலத்திய கன்னிப் பெண்கள் மெசியாவின் தாயாக ஆசைப் பட்டதாகக் கூறுவார்கள்.

ஆனால் மரியாளுக்கு அப்படி ஆசை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் பிறக்கப்போகும் மெசியா அவளைத்தான் தன் தாயாகத் தேர்ந்தெடுத்தார்.

மரியாள் தன்னை மட்டுமல்ல தன் மகனையும் இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்தாள்.

இயேசுவின் முப்பதாவது வயதில் மரியாள் தன் மகனை பொது வாழ்வுக்கு அர்ப்பணித்து விட்டாள்.

அதன்பின் இயேசு நசரேத்தூரில் வாழவில்லை.

அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். 
(மத்தேயு நற்செய்தி 4:13)

மரியாளுக்கு மகனைப் பார்க்க ஆசை வரும்போது அவர் போதித்துக் கொண்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்து விட்டு வருவாள்.

 "இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தபோது, சீடர்கள் பன்னிருவரும் அவருடன் இருந்தனர். 

பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், 

ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் 

ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும்

 சூசன்னாவும்

 மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள். 
(லூக்கா நற்செய்தி 8:1-3)

மேற்கூறப்பட்ட பெயர்களில் அன்னையின் பெயர் இல்லை.

ஆகவே அவள் மகனைப் பொதுவாழ்வுக்கு அர்பணித்து விட்டாள் என்பது தெளிவாகிறது.

பார்க்க ஆசை வரும்போது வந்து பார்த்து விட்டுப் போவாள்.

பாஸ்கா விழாவின் போது இரவு உணவிற்கு சீடர்கள் மட்டுமே வந்திருந்தனர்.

இயேசு இரத்த வியர்வை வியர்த்த போது மரியாள் இல்லை.

மூன்று சீடர்கள் மட்டுமே உடனிருந்தார்கள்.

இயேசு கைது செய்யப்பட்டு பிலாத்துவின் அரண்மனையில் விசாரிக்கப் பட்டதிலிருந்து கல்லறையில் அடக்கம் பண்ணப்படும் வரை மரியாள் மகனோடு இருந்தாள்.

 கற்றூணில் கட்டப்பட்டு அடிபட்டு, தலையில் மும்முடி சூட்டப்பட்டு அடிபட்ட‌ இயேசு 

மரியாள் வயிற்றில் அவளது இரத்தமும் சதையுமாக, அவள் சாப்பிட்ட உணவால் வளர்ந்த மகன், அவளது சதையும், இரத்தமும்.

ரோமை வீரர்கள் இயேசுவை‌ அடித்த ஒவ்வொரு அடியும் மரியாள் பெற்ற உடலில் விழுந்தது.


அவர்கள் மிதித்த மிதிகளை மரியாள் பெற்ற உடல் வாங்கியது.

அவர்கள் துப்பிய எச்சில் மரியாள் பெற்ற உடலில்  விழுந்தது.

அவள் பெற்ற பிள்ளைக்கு மரணத் தீர்ப்பு கிடைத்தது.

அவள் உதிரத்தில் வளர்ந்த உடலிலிருந்து இரத்தம் சிந்தி ஆறாக ஓடியது.

சிலுவையைச் சுமந்தது அவள் பெற்ற உடல்.

மூன்று முறை சிலுவையின் பார்த்தால் தரையில் விழுந்தது மரியாள் பெற்ற  உடல்.

சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டது மரியாள் பெற்ற  உடல்.

இரத்தத்தை முழுவதும் முழுவதும் சிந்திய பின் சிலுவையில் தொங்கியது மரியாள் பெற்ற  உடல்.

இயேசு பட்ட வேதனையை எல்லாம் மரியாளும் பட்டாள்.

இயேசு மரணம் அடைந்த பின் இயேசுவின் உடல் அவளுடைய மடியில் கிடத்தப் பட்டது.

33 ஆண்டுகளுக்கு முன் அவளது வயிற்றில் 10 மாதங்கள் இருந்த அதே உடல்.

பிறந்தவுடன் மடியில் தவழ்ந்த அதே உடல்.

"இது என் உடல். இது என் இரத்தம்" என்று அவள்தான் முதலில் கூறியிருப்பாள்.

இறந்த பின் மடியில் இருந்த உடலைப் பார்த்து அதே வார்த்தைகளை நினைத்திருப்பாள்.

ஆக மகனோடு சேர்ந்து அன்னையும் பாடுபட்டாள்.

இயேசு தான் பாடுபடும்போது என்னவெல்லாம் நடக்கும் என்று ஏற்கனவே தனது அன்னையிடம் கூறியிருப்பார். 

ஆகவே பாடுகள் ஆரம்பிக்கும் போது மரியாள் பிலாத்துவின் அரண்மனைக்கு வந்து விட்டாள். 

அது முதல் இயேசு பட்ட ஒவ்வொரு அடியையும், 

வாங்கிய ஒவ்வொரு மிதியையும்,

  சுமந்த சிலுவையையும், 

அவர் சிலுவையின் பாவத்தால் கீழே விழுந்ததையும், 

ஆடைகள் களையப்பட்டதையும்,

 ஆணிகளால் சிலுவையில் அறையப்பட்டதையும், ‌ 

அவர் சிலுவையில் தொங்கியதையும், 

விலாவில் ஈட்டியால்,  குத்தப்பட்டதையும்,

 இறுதியில் சிந்திய கடைசித்  துளி ரத்தத்தையும், 

அவரது மரணத்தையும் 

நமது பாவங்களுக்கு பரிகாரமாக விண்ணகத் தந்தைக்கு ஒப்புக்கொடுத்தாள்.

இயேசு தன்னையே ஒப்புக்கொடுத்தது போல, அன்னை மகனை ஒப்புக்கொடுத்தாள்.

தாய்த்திருச்சபை அன்னை மரியாளை Co-redemptrix என்று அழைப்பது சாலப் பொருந்தும்.

இயேசுதான் மீட்பர். அவர்தான் நமக்காகப் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

அதில் மாற்றுக் கருத்து இல்லை.

கடவுளின் மீட்புத் திட்டத்துடன் சுதந்திரமாக ஒத்துழைத்தவர்  கடவுளின் தாயாகிய அன்னை மரியாள்.

இயேசுவின் துன்பத்தில், குறிப்பாக சிலுவையில் அறையப்பட்டபோது, மரியாள் தன் மகனின் பாடுகளிலும் துன்பத்திலும் பங்கு கொண்டாள்.

கடவுளின் தாயாக, மரியாள் மனிதகுலத்தின் சார்பாக பரிந்து பேசுகிறாள்.

இயேசு தனது தாயை நமது தாயாகத் தந்திருகாகிறார்.

நமது மீட்புக்காக தாய் மூலமாக மகனிடம் வேண்டுவோம்.

லூர்து செல்வம்

Sunday, March 23, 2025

"அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்."(லூக்கா நற்செய்தி 4:30)



"அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்."
(லூக்கா நற்செய்தி 4:30)

இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். 

"ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர். பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் 



ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். " 

என்று வாசித்து விட்டு 

"நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" என்றார். 

"இவர் யோசேப்பின் மகன் அல்லவா? "எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினாலும் 

ஆன்மீக ரீதியாக அவர்களுக்கு விசுவாசம் ஏற்படவில்லை.

அவர்கள் அவரை யோசேப்பின் மகனாகப் பார்த்தார்கள், இறை மகனாகப் பார்க்கவில்லை.

அவர் மீது சீற்றங் கொண்டு

 எழுந்து, அவரை அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். 

ஆக அவரது சொந்த ஊரினரே அவரைக் கொல்ல முயன்றனர்.

நமக்காகத் தன் உயிரைக் கொடுக்கவே உலகுக்கு வந்தாலும் அதற்குரிய நேரம் வரும் வரை பொறுத்திருக்க வேண்டியதிருந்தது.

அவராகக் கொடுத்தாலன்றி அவர் உயிரை யாராலும் எடுக்க முடியாது.

அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார். 

அவர்களால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

அவர் மீது விசுவாசம் கொள்ள முடியாமைக்கு எது காரணமாக இருந்திருக்கும்?

அவருக்கு முப்பது வயது ஆகும் வரை அவர் அவர்களோடு யோசேப்பின் மகனாகவே வாழ்ந்திருக்கிறார். 

அன்னை மரியாளின் தங்கை மரியாளின் (குளோப்பாவின் மனைவி.யோவான் நற்செய்தி 19:25) மக்களாகிய யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோரும் அவரோடு வாழ்ந்தவர்கள் தான்.

ஆக நாசரேத்தூர் மக்கள் அவரைத் தங்களோடு வாழ்ந்தவராகத்தான் கருதினார்கள்.

இயேசு முப்பது வயது வரை வாழ்ந்தது மறைந்த வாழ்வு.

அன்னை மரியாளுக்கும், யோசேப்புக்கு மட்டுமே அவர் இறைமகன் என்று தெரியும்.

சாத்தானுக்குக் கூட தெரியாது.
ஆகவே இயேசு நாற்பது நாட்கள் நோன்பிருந்த பின்

 அவர் மனிதனாகப் பிறந்த இறைமகன் தானா என்பதை உறுதி செய்து கொள்ள அது

"நீர் இறைமகன் என்றால்" என்று சொல்லி சோதனையை ஆரம்பித்தது.

"உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' என்று சொன்னவுடன் அவர் இறைமகன் என்பதை உறுதி செய்து கொண்டது.

அதன் பின்பு அவரைக் கொல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தது.

அதாவது தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே நமது மீட்புக்கு உதவி செய்ய ஆரம்பித்தது.

எந்த சாத்தான் நம்மைப் பாவத்தில் விழத்தாட்டியதோ அதே சாத்தான் இயேசு தனது சிலுவை மரணத்தால் நம்மை மீட்க உதவியது என்றால் ஆச்சரியமாக இல்லை!!!

இதன் மூலம் கடவுள் எல்லாம் வல்லவர், தீமையிலிருந்தும் நன்மையை வரவழைக்கக் கூடியவர் என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம்.

நமது வட நாட்டில் கிறிஸ்தவ மத எதிர்ப்பாளர்கள் எத்தனை கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்திருப்பார்கள்!!!

அதனால் வேத சாட்சிகளாகக் கொல்லப் பட்ட அத்தனை பேரும் உலகத் துன்ப வாழ்வுக்கு "டாட்டா" காட்டி விட்டு நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைய அவர்கள் உதவி செய்திருக்கிறார்கள்!!!

வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை விட விசுவாசத்துக்காக மரித்தவர்கள் பாக்கியவான்கள்.

மத விரோதிகள் நம்மைக் கொன்று விடுவார்களே என்று பயப்பட வேண்டாம்.

மரணம் வரக்கூடிய நேரத்தில் தான் வரும்.

அது மத விரோதிகளால் வந்தால் நாம் பாக்கியவான்கள்.

வருவது வரட்டும்.

துன்பங்களா? நோய் நொடிகளா?

அவை உடலுக்கு வலியைக் கொடுக்கலாம், 

அவற்றைச் சிலுவைகளாக ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தால் அவை நாம் இறைவனோடு நெருக்கமாக வாழ நமக்கு உதவும் ஆசீர்வாதங்கள்.

யாரும் நம்மை அவமானப் படுத்துகிறார்களா?

அதை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தால் அது அவமானம் அல்ல, ஆசீர்வாதம்.

யாராவது நம்மைப் பற்றி தப்பாக பேசுகிறார்களா ?

பரிசேயர்கள் இயேசுவைப் பற்றி பேசியதை விடவா அதிகமாக பேசிவிடப் போகிறார்கள்? 

இயேசு நமக்காக அவற்றைப் பொறுத்துக் கொண்டார். 

நாம் அவருக்காக அனைத்தையும் பொறுத்துக் கொள்வோம்.

இயேசுவுக்காக வாழ்பவர்களுக்கு உலகமே ஒரு ஆசீர்வாதம் தான்.

நாம் இறைவனுக்காக, ‌‌இறைவனுக்காக மட்டுமே வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Saturday, March 22, 2025

"அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்" (லூக்கா நற்செய்தி 13:9)

"அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்" 
(லூக்கா நற்செய்தி 13:9)

மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்; "ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. 
(லூக்கா நற்செய்தி 13:6)

இந்த உவமையில் திராட்சைத் தோட்டம் இஸ்ரேல் நாட்டைக் குறிக்கிறது.

அத்தி மரம் அங்கு வாழ்ந்த இஸ்ரேல் மக்களைக் குறிக்கிறது.

மூன்று ஆண்டுகளாகப் பழம் இல்லாத அத்திமரம் பாவ நிலையிலிருந்து மனம் திரும்பாத மக்களைக் குறிக்கிறது.

ஆன்மீக ரீதியில் கனிகள்  ஆன்மீக நோக்கத்தோடு மக்கள் செய்யும் நற்செயல்களைக் குறிக்கும்.

இயேசு தனது நற்செய்தியால் காய்க்காத அத்தி மரத்துக்கு உரமிட்டு, தனது அருள் என்னும் நீர்ப் பாய்ச்சுகிறார்.

நற்செய்தி உரத்தை அருள் நீரால் உண்டு மரம் காய்க்க வேண்டும்,

அதாவது,

மக்கள் மனம் திரும்பி ஆன்மீகக் கனிகளாகிய நற்செயல்கள் செய்ய வேண்டும்.

தவறினால் விண்ணக வாழ்வை இழக்க நேரிடும்.

இயேசு அவர்களுக்கு மனம் திரும்ப கால அவகாசம் கொடுக்கிறார்.


 சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த யூதர்களான கலிலேயரைப் பிலாத்து கொன்ற  செய்தியை அறிவித்தபோது அவர் அத்தி மர உவமையைக் கூறினார்.

மனம் திரும்பாத மற்ற யூதர்களும் அழிவார்கள் என்ற கருத்தை எடுத்துரைக்கவே இந்த உவமை.

இது மனம் திரும்பாத  யூதர்களுக்கு மட்டுமல்ல,  மனம் திரும்பாத அனைத்து மக்களும் இந்த உவமை பொறுந்தும்.

நாம் அனைவரும் பாவிகள்தான்.

நாம் மனம் திரும்ப வேண்டும் என்று இயேசு அழைக்கிறார். 

மனம் திரும்பி நற்செயல்களாகிய கனிகளைக் கொடுக்க வேண்டும்.

அதற்கு உதவிகரமாக  இருப்பதற்காகத்தான் இயேசுவின்  நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. 

அது நம் உள்ளத்தில் செயல்புரிவதற்காக ஆண்டவர் தனது அருள் வரத்தை அளிக்கிறார்.

ஆண்டவரின் அருள் உதவியோடு நாம் நற்செய்தியை நமது வாழ்வாக்க வேண்டும். 

அதாவது நமது வாழ்வு 
நற்செயல்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

நற்செய்தியை அறிந்தும், இயேசுவின் அருளைப் பெற்றும் நற்செயல்களாகிய கனிகளைக் கொக்காதவர்களால் மீட்புப் பெற முடியாது.

தினமும் நற்செய்தியை வாசித்தால் மட்டும் போதாது. 

தினமும் திருப்பலிக்குச் சென்று 
குருவானவரின் மறை‌ உரையைக் கேட்டால் மட்டும் போதாது.

இயேசுவின் திரு உடலை உணவாகப் பெற வேண்டுமென்றால் அவருடைய நற்செய்தியை வாழ்கின்றவர்களாக இருக்க வேண்டும். 

கேட்ட நற்செய்தியும், அருந்திய திருவிருந்தும் நமது வாழ்வில் ஆன்மீக வளர்ச்சியைத் தர வேண்டும்.

ஆன்மீக உணவை அருந்திய பின்பும் நமது ஆன்மா ஆன்மீகத்தில் வளரவில்லை என்றால் நாம் தகுந்த முறையில் திரு விருந்தை அருந்தவில்லை என்று அர்த்தம்.

அறிவதற்காக மட்டுமல்ல, வாழ்வதற்காகவும் நற்செய்தியை வாசிக்க வேண்டும்.

கிடைக்கிறது என்பதற்காக அல்ல, ஆன்மீகத்தில் வளர வேண்டும் என்பதற்காக திரு விருந்தை அருந்த வேண்டும். 

திரு விருந்தை அருந்துவோம். இறையருள் பெற்று வாழ்வோம்.

வெறும் அத்தி மரமாக அல்ல, கனிதரும் அத்தி மரமாக வாழ்வோம்.

நமது வாழ்வு மறு உலகில் இறைவனோடு தொடரும். 

லூர்து செல்வம்

Friday, March 21, 2025

"இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்" என்றார். " (லூக்கா நற்செய்தி 15:32)

"இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்" என்றார். " 
(லூக்கா நற்செய்தி 15:32)

தனது பங்கு சொத்துக்களை எல்லாம் வீணாக்கிவிட்டு திரும்பி வந்த மைந்தனை வரவேற்க அளவுக்கு மீறி செலழித்த அப்பாவை பார்த்து மூத்த மகன் 

"விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்டுத்   திரும்பி வந்த      மகனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!" என்று கேட்டபோது தந்தை 

"இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்" என்றார்." 

ஊதாரி மைந்தனின் உவமை பாவிகளின் மீது கடவுள் கொண்டிருக்கும் அளவு கடந்த அன்பை நமக்குப் புரிய வைக்க இயேசுவால் கூறப்பட்டது.

பாவிகள் மீது கடவுள் கொண்டுள்ள அன்புக்கு எல்லை கிடையாது. 

 நாம் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் பயப்படாமல் இயேசுவிடம் திரும்பி வரலாம்.

நமக்கு இருக்க வேண்டியது மனத்தாபம் மட்டுமே.

அவரது மன்னிப்பின் சக்திக்கு அளவே இல்லை. 

கடவுளைக் கொன்றதை விட பெரிய பாவம் இருக்க முடியுமா? 

தன்னை கொன்றவர்களையே இயேசு மன்னித்து விட்டார்.

நாமும் நமது பாவங்களின் மூலம் அவரது கொலைக்கு காரணமானவர்கள் தான்.

அவரது சிலுவை மரணத்துக்குக் காரணமான நம்மை தேடித்தான் அவர் உலகுக்கு வந்தார்.

நமக்காகத் தான் இரவும் பகலும் நற்கருணைப் பேழையில் காத்துக் கொண்டிருக்கிறார்.

நேரப் போக்குக்காக எங்கெல்லாமோ செல்லும் நாம் தினமும் எத்தனை முறை திவ்ய நற்கருணையைச் சந்திக்கப் போகிறோம்?

எத்தனை பேர் திவ்ய நற்கருணைக்கு முன் முழங்கால் படியிட்டு இயேசுவை ஆராதிக்கிறோம்?

எத்தனை பேர் திவ்ய நற்கருணை உணவை நாவில் வாங்கி உட்கொள்கிறோம்?

பாவத்தின் விளைவு மரணம்.


பாவத்தினால் ஆன்மா மரணம் அடைகிறது.

தனது சிலுவை மரணத்தால் நமது ஆன்மீக மரணத்தை வென்றவர் இறைமகன்.

இயேசு நமது ஆன்மீக விடுதலைக்காக ஏற்படுத்திய பாவ சங்கீர்த்தனம் என்னும் திரு அருட்சாதனத்தைப் பயன்படுத்தி 

ஆன்மீக மரணத்திலிருந்து உயிர் பெற்று எழுந்து திரு விருந்தில் பங்கு பெறுவோம்.

"இப்போது நாம்  திரு விருந்தை உண்டு இன்புறுவோம்.

 ஏனெனில் என் மகன் பாவத்தால் இறந்து போயிருந்தான்; 

மீண்டும் உயிர்பெற்றுள்ளான்.

 காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்" 

என்று நமது விண்ணகத் தந்தை கூறி மகிழ்வார்.

நாமும் பாவத்தால் ஊதாரி மைந்தர்கள் தான்.

நமது விண்ணகத் தந்தை நமது வருகைக்காக ஆவலுடன் இரு கரம் விரித்து காத்துக் கொண்டிருக்கிறார்.

தந்தையிடம் திரும்புவோம்.

விண்ணக விருந்தில் பங்கு பெறுவோம்.

லூர்து செல்வம்.

Thursday, March 20, 2025

எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். (மத்தேயு நற்செய்தி 21:43)


எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். 
(மத்தேயு நற்செய்தி 21:43)

இயேசுவின் இறையாட்சி இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உரியது.

உலகில் இறையாட்சியை நிறுவ மனிதனாக பிறக்க தீர்மானித்த இறைமகன் தான் பிறப்பதற்கென்று ஒரு வம்சத்தை  தேர்ந்தெடுத்தார்.

அபிரகாமின் பேரனும், ஈராக்கின் மகனுமாகிய யாக்கோபு இஸ்ரேல் என்றும் அழைக்கப் பட்டார்.

அவரது பன்னிரண்டு மக்களின் வம்சத்தினர் இஸ்ரயேலர்கள்.


தான் மனிதனாகப் பிறக்க வேண்டிய வம்சமாக இஸ்ரேல் வம்சத்தை இறைமகன் தேர்ந்தெடுத்தார்.

இஸ்ரேல் வம்சத்தில் யூதாவின் கோத்திரத்தைத் தேர்வு செய்தார்.

தான் நிறுவவிருக்கும் இறையாட்சி அனைத்து மக்களுக்கும் உரியது என்பதற்கு முன் அடையாளமாக 

அவருடைய மூதாதையர் பட்டியலில் இஸ்ரேல் இனத்தைச் சாராத இரண்டு பெண்மணிகளுக்கு இடம் கொடுத்தார்.

ராகாப்: இவர் எரிகோ நகரைச் சேர்ந்த  கானானியப் பெண்.
இவர் திருமணத்துக்கு முன் விலை மாதமாக இருந்தவள்.

மனம் திருந்திய பின் ஒரு யூத ஆண் மகனை கணவனாக மணந்து கொண்டாள்.

இயேசு பாவிகளை நேசிப்பதற்கு அடையாளமாக தனது மூதாதையர்  பட்டியலில் ராகாப்பைச் சேர்த்துக்கொண்டார்.
 
ரூத்: இவர் மோவாபியப் பெண்.
லோத்தின் மகனாகிய மோவாப்பின் வழி வந்தவர்.

ரூத்தின் வம்சத்தில்தான் தாவீது பிறந்தார்.

தாவீதின் வம்சத்தில் இயேசு பிறந்தார்.

இயேசு யூதாவின் கோத்திரத்தில் பிறந்த யூதர்.

யூதர்களும் இஸ்ரயேலர்கள்தான்.

இஸ்ரயேலர்கள் மோசே மூலம் கடவுள் கொடுத்த திருச் சட்டத்தின் படி வாழ்ந்து வந்தார்கள்.

மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் யூத மக்களுக்கு சட்டப்படி வாழ்வதற்கான வழி காட்டி வந்தார்கள்.

ஆனால் அவர்கள் வழி காட்ட மட்டும் செய்தார்கள், அவர்கள் அவ்வழியே செல்லவில்லை.

இறையாட்சி தங்களுக்கு மட்டுமே உரியது என்று இஸ்ரயேலர்கள் எண்ணிக்  கொண்டிருந்தார்கள்.

அது அனைவருக்கும் உரியது என்பதை வலியுறுத்தவே இயேசு திராட்சைத் தோட்ட உவமையைக் கூறினார்.

திராட்சைத் தோட்டத்துக்கு உரிமையாளர் 

அதை யார் பொறுப்பில் விட்டுச் சென்றாரோ அவர்களிடம்

பழங்களைப் பெற்று வரும் படி அனுப்பிய தனது பணியாளர்களையும்,  மகனையும் 

அவர்கள் கொன்று போட்டார்கள்.

உரிமையாளர் பொறுப்பை அவர்களிடமிருந்து பிடுங்கி வேறு பொறுப்பாளவர்களிடம் ஒப்படைத்தார்.

இயேசு நிறுவிய கத்தோலிக்கத் திருச்சபை உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் உரியது.

இயேசு எந்த வம்சத்தில் பிறந்தாரோ அந்த வம்சத்தில் அநேகர் இன்னும் இயேசுவை ஏற்றுக் கொள்ளாத இஸ்ரயேலர்களாகவே இருக்கின்றனர்.

அவர்களும் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் இயேசுவின் ஆசை.

அந்த ஆசை நிறைவேற நாம் வேண்டுவோம்.

இயேசு பாவிகளைத் தேடியே உலகுக்கு வந்தார்.

உலகில் வாழும் அனைத்து மக்களும் பாவிகள் தான்.

ஆகவே உலகில் அனைவரும் இயேசுவை அறிய வேண்டும்.

அனைவரின் பாவங்களும் மன்னிக்கப் பட்டு அனைவரும் மீட்புப் பெற வேண்டும் என்பது தான் இயேசுவின் ஆசை.

அதற்காக உழைக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

இயேசுவின் ஆசை நிறைவேற அனைவரும் உழைப்போம்.

நாம் மனம் திரும்புவோம்.

அடுத்து மற்றவர்களை மனம் திருப்புவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, March 19, 2025

அதற்கு ஆபிரகாம், "மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். (லூக்கா நற்செய்தி 16:25)



அதற்கு ஆபிரகாம், "மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். 
(லூக்கா நற்செய்தி 16:25)

செல்வந்தன் இலாசர் உவமையில்

வாழ்நாளில் நலன்களையே அனுபவித்த செல்வந்தன் பேரிடர் நிலையை அனுபவிப்பதாகவும்,

இன்னல்களையே அனுபவித்த இலாசர் பேரின்ப நிலையை அனுபவிப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு உண்மையும் ஒரு மையக் கருத்தைக் கொண்டிருக்கும்.

 இந்த உண்மையின் மையக் கருத்து   பகிர்ந்து உண்ணுதல்.

செல்வந்தன் வயிறார உண்டு அனுபவிக்கிறான்.

ஏழை இலாசர் அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். 

விரும்பினார் என்று மட்டும் குறிப்பிடப் பட்டுள்ளது. விரும்பியது கிடைக்கவில்லை என்பதுதான் பொருள்.

வயிறார உண்டு அனுபவித்த செல்வந்தன் தான் உண்ட உணவை ஏழையோடு பகிர்ந்து கொள்ளவில்லை.

பிறரன்பு சிறிதும் அற்ற செல்வந்தன் பேரிடர் நிலையை அடைகிறான்.

ஏழையாகவே வாழ்ந்து ஏழையாகவே மரித்த இலாசர் பேரின்ப நிலையை அடைகிறான்.

ஒன்றைக் கவனிக்க வேண்டும், அவர்கள் செய்த வேறு பாவ புண்ணியங்கள் எதுவும் குறிப்பிடப் படவில்லை.

பகிர்ந்து கொள்ளாததே பாவம்தான்.

பிறரன்புக்கு எதிரான பாவம்.

இந்த உவமையின் மூலம் பிறரன்புடன் 

இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழ வேண்டியதன் அவசியத்தை இயேசு வலியுறுத்துகிறார் என்பது புரிகிறது.


"அதற்கு ஆபிரகாம், "மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்" என்றார்."
(லூக்கா நற்செய்தி 16:29)

உவமையில் வரும் இந்த வசனத்தின் மூலம் நம்மோடு பூமியில் வாழும் இயேசுவின் பிரதிநிதிகளாகிய குருக்களுக்கு நாம் செவிசாய்க்க வேண்டியதன் அவசியத்தை இயேசு வலியுறுத்துகிறார்.

விண்ணகப் பாதையில் நம்மை வழிநடத்தவே இயேசு கத்தோலிக்க திருச்சபையை நிறுவினார்.

(கத்தோலிக்க திருச்சபையை மட்டுமே இயேசு நிறுவினார். மற்ற சபைகள் இயேசுவால் நிறுவப் பட்டவை அல்ல.)

எந்த இராயப்பர் மேல் இயேசு திருச்சபையைக் கட்டினாரோ அந்த இராயப்பரின் தலைமையில் இயங்கும் திருச்சபை தான் கத்தோலிக்கத் திருச்சபை.

"எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."
(மத்தேயு நற்செய்தி 16:18)

திருச்சபையின் தலைவர் இராயப்பரின் வாரிசாகிய பாப்பரசர்.

அவரும், அவரின் கீழுள்ள ஆயர்களும், குருக்களும் தான் நமது ஆன்மீக வழிகாட்டிகள்.

நேரடியாக நமது தொடர்பில் உள்ளவர் நமது பங்குக் குரு.

நமது பங்குக் குருவுக்கு செவி சாய்க்கும்போது இயேசுவுக்கே செவி சாய்க்கிறோம்.

செவிசாய்க்காதவர்கள் உவமையில் வரும் செல்வந்தரின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.


"ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்" என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! "
(2 கொரிந்தியர் 9:9)

இந்த வசனம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

"உங்களுக்குச் செவி சாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார். " 
(லூக்கா நற்செய்தி 10:16)

இந்த வசனம் நமது ஞான மேய்ப்பவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

பகிர்ந்து வாழ்வோம் 
பரலோக வாழ்வடைய.

லூர்து செல்வம்

Tuesday, March 18, 2025

"அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்."(மத்தேயு நற்செய்தி 1:20)



"அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்."
(மத்தேயு நற்செய்தி 1:20) 

நான் வாசித்த பைபிள் வசனங்களில் புரிந்து கொள்ள மிகவும் கடினமான வசனம் இதுதான்.

மரியாள் கோவிலில் வளரும் போதே கற்பு வார்த்தைப்பாடு கொடுத்து விட்டாள்.

கோவில் குரு அவளது கற்புக்குப் பாதுகாவலாக இருக்கக் கூடிய கணவனாக யோசேப்பை   பரிசுத்த ஆவியின் உதவியுடன் தேர்ந்தெடுத்தார்.

யோசேப்பும் திருமண ஒப்பந்தத்தின் போதே மரியாளின் கற்புக்குப் பாதுகாவலாக இருப்பதாக வாக்களித்தார்.

யோசேப்பு தன் தொழில் காரணமாக வெளியூருக்குச் சென்றிருந்த போது கபிரியேல் தூதர்  மரியாளுக்குத் தோன்றி இறைவனின் திட்டத்தை வெளிப்படுத்தினார்.

மரியாள் இறைவனின் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் அவளது கற்புக்கு எந்த வித பாதிப்பும் இன்றி பரிசுத்த ஆவியின் வல்லமையால் இயேசுவைக் கருவுற்றாள்.

இந்த நிகழ்வு யோசேப்புக்குத் தெரியாது.

மரியாளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

யூத மதச் சட்டப்படி கணவனுக்குத் தெரியாமல் ஒரு பெண் கருவுற்றால் அவள் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும்.

வேலை முடிந்து வீடு திரும்பிய யோசேப்புக்கு மரியாள் கருத்தரித்திருப்பது தெரிய வந்தது.

அவர் அதிர்ச்சி அடைந்தார்.

யோசேப்பு சாதாரண மனிதராக இருந்திருந்தால் விபரத்தை விசாரணைக்கு கொண்டு வந்திருப்பார்.

ஆனால் அவர் நேர்மையாளர்.

பிறர் மனதை புண்படுத்த விரும்பாதவர்.

தன்னால் தன் மனைவிக்கு எந்த வித பாதிப்பும் வந்து வரக்கூடாது என்று எண்ணினார்.

நற்செய்தியாளர் கூற்றுப்படி,

"அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்."

இந்த வசனத்தை இன்றைய தியானத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

முதலில் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

யோசேப்பு நேர்மையாளர் என்பது புரிகிறது.

அவர் மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பவில்லை என்பதும் புரிகிறது.

நேர்மையாளருடைய குணம் அது.

"மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்."

அதாவது யாருக்கும் தெரியாமல், இரகசியமாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

அகராதிப்படி பொருள் பார்த்தால் இவ்வாக்கியம் புரியாது.

மரியாளை விலக்கி விட்டால் அவள் அவளது பெற்றோர் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இரகசியமாக இதைச் செய்ய முடியாது.

அல்லது யோசேப்பு விலகிச் செல்ல வேண்டியிருக்கும்.
இதையும் இரகசியமாக இதைச் செய்ய முடியாது.

இரண்டிலும் மரியாளின் பெயருக்கு பழுது ஏற்படும்.

அவர் எடுக்கும் முடிவு அவரது நேர்மைத் தன்மைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

அவர் நேர்மையாளர் என்பதை அடிப்படையாகக் கொண்டு வசனத்துக்குப் பொருள் காண ஒரு வழிதான் இருக்கிறது.

அவர்களுக்கு திருமண ஒப்பந்தம் தான் (நமது மொழியில் "நிச்சயதார்த்தம்") ஆகியிருந்தது.

யூத வழக்கப்படி திருமண ஒப்பந்தம் ஆன ஒரு வருட காலத்தில் திருமணம் நடைபெற வேண்டும்.

திருமண வாழ்க்கை திருமணம் ஆன பிறகுதான்.

"ஆகவே வேறு யாருக்கும் தெரியாமல், மரியாளின் சம்மதத்தோடு, மனைவி உறவை விலக்கி விட்டு சகோதரியாக ஏற்று, குழந்தைக்குத் தாய் மாமனாக வாழத் திட்டமிட்டார்."

இது என் மனதில் தோன்றிய விளக்கம். 

அவர்கள் வாழப் போகும் ஊரில் உலகோர் கண்களுக்கு அவர்கள் கணவன், மனைவி.

(ஏற்கனவே திருமண ஒப்பந்தத்தின் போதே திருமண உறவு இல்லாமல் இருவரும் கற்புடன் வாழத்தான் தீர்மானித்திருந்தார்கள்)

அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே தூங்கி விட்டார். ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.

அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்"; என்றார். 

யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். 
(மத்தேயு நற்செய்தி 1:21,22,24)

தூதரின் அறிவுரைக்குப் பின் யோசேப்பு தன் முடிவை மாற்றி,
மரியாளை மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

ஆயினும் வாழ்க்கை முழுவதும் சகோதர, சகோதரியாகவே வாழ்ந்தார்கள்.

அன்னை மரியாள்
கருவுறும் போதும் கன்னி.
குழந்தைப் பேற்றின் போதும் கன்னி.
குழந்தை பிறந்த பின்னும் கன்னி.

பெண்களுள் பிரசவ வேதனை சிறிதும் இல்லாமல் குழந்தையைப் பெற்ற ஒரே பெண் கன்னி மரியாள் தான்.

இயேசு மற்ற குழந்தைகள் பிறப்பது போல பிறக்கவில்லை.

ஒளி எவ்வாறு கண்ணாடியைச் சிறிதும் பாதிக்காமல் அதன் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் ஊடுருவிச் செல்கிறதோ,

அதேபோல,

குழந்தை இயேசுவும் தாயின் கன்னித் தன்மைக்கு சிறிதும் பழுது ஏற்படாமல் தாய் வயிற்றிலிருந்து பிறந்தார்.


புனித யோசேப்பிடமிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம்?

அவர் நூற்றுக்கு நூறு கடவுள் சித்தப்படி வாழ்ந்த நீதிமான்.

கடவுளின் கட்டளைகளுக்கு விளக்கம் கேட்காமல் கீழ்ப்படிந்தவர்.

அவர் ஒரு வார்த்தை கூட பேசியதாகப் பைபிளில் இல்லை.

பேசாமல் கீழ்ப்படிந்தவர்.

அவரது கீழ்ப்படிதலுக்குச் சன்மானமாக இறை மகனின் மடியில் தலை வைத்து மரிக்கும் பாக்கியம் பெற்றவர்.

நல்மரணத்தின் பாதுகாவலர்.


புனித யோசேப்பைப் போலவே நாமும் இறைச் சித்தத்துக்குக் கீழ்ப்படிந்து வாழ இறையருளைக் கேட்டு வேண்டுவோம்.

லூர்து செல்வம்.

Monday, March 17, 2025

"தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்."(மத்தேயு நற்செய்தி 23:12)


"தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்."
(மத்தேயு நற்செய்தி 23:12)

"மோசேயின் அதிகாரத்தைக் கொண்டுள்ள மறைநூல் அறிஞரும் பரிசேயரும்
 என்னென்ன செய்யும்படி  கூறுகிறார்களோ அதைச் செய்யுங்கள்,
ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள்."

என்று சொல்லிவிட்டு அவர்கள் செய்த சில செயல்களை இயேசு சுட்டிக் காட்டுகிறார்.

அவர்கள் செய்வதை நாம் செய்யக்கூடாது. 

அவர்கள் செயல்களின் எதிர்ச் செயல்கள் நாம் செய்ய வேண்டிய செயல்கள்.


 1.நாம் மற்றவர்களை ஆன்மீகப் பாதையில் வழி நடத்த வேண்டும். நாமும் அந்தப் பாதை வழியாக நடந்து மற்றவர்களுக்கு முன்மாதிரிகை காட்ட வேண்டும்.

2. மற்றவர்களுக்கு முன்மாதிரிகையாக நடக்க வேண்டும், ஆனால் மற்றவர்கள் நம்மைப் பார்த்து நம்மைப் பெருமையாகப் பேச வேண்டும் என்ற நோக்கத்தோடு நடக்கக்கூடாது.

3.மற்றவர்கள் நம்மைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 
தொழுகைக் கூடங்களில் 
முதன்மையான இருக்கைகளைத் தேடக் கூடாது.

.4.மற்றவர்கள் நம்மை  மதிப்போடு அழைக்க ஆசைப் படக் கூடாது. நாம் சாதாரண மக்கள்தான். சாதாரணமாக அழைக்கப்பட்டால் போதும்.

5.ஆன்மீகத்தில் போதகர் இயேசு மட்டுமே. உலகில் போதிப்பவர்கள் அவருடைய பிரதிநிதிகளே.

6. நமது தந்தை விண்ணகத் தந்தை மட்டுமே. நமது அருட் தந்தையர் அவருடைய பிரதிநிதிகள். அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்கும்போது நாம் விண்ணக தந்தையின் வார்த்தைகளையே கேட்கிறோம். 

7. பெரியவர்களாய் இருப்பவர்கள் சேவை மனப்பான்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு சேவை செய்வதே தலைமைப் பண்பு.

8.அனைத்துக்கும் மேலாக நாம்‌ தாழ்ச்சி உள்ளவர்களாக வாழ வேண்டும்.

தங்கள் ‌உண்மையான நிலையை உணர்ந்து தாழ்ச்சியோடு வாழ்பவர்கள் தான் ஆன்மீக வாழ்வில் உயர்ந்தவர்கள்.

அன்னை மரியாள்
 தான் கடவுளின் தாயாக இருந்தாலும் தன்னைக் கடவுளின் அடிமையாகத்தான் கருதினாள்.

ஆகவேதான் கடவுள் அவளை விண்ணக, மண்ணக அரசியின் நிலைக்கு உயர்த்தினார்.

தன்னைத் தானே கடவுளுக்கு சரிசமமாக நினைத்த லூசிபெரை சாத்தான் நிலைக்குத் தாழ்த்தினார்.

நம்மை நாமே உயர்வாக நினைக்க சாத்தான் தான் சோதனை கொடுப்பான். 

அன்னை மரியாளின் உண்மையான பக்தர்கள் தம்மைத்தாமே தாழ்வாகவே நினைப்பார்கள்.

விண்ணகத்தில் அவர்கள்தான் உயர்த்தப்பெறுவர்.

கடைசி இடத்தில் இருப்பவனை கடவுள் முதலிடத்துக்கு அழைப்பார்.

தானாக முதலிடத்துக்கு வருபவன் 
கடைசி இடத்துக்கு அனுப்பப் படுவான்.

ஆன்மீகத்தில், கடைசி நிலையில் உள்ளவர்கள் தான் முதல் நிலையினர்.

ஆகவே பணி செய்தே வாழ்வோம்,
அன்னை மரியாளைப் போலவும்,
அன்னைத் தெரசாவைப் போலவும்.

லூர்து செல்வம்.

Sunday, March 16, 2025

"கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்." (லூக்கா நற்செய்தி 6:38)


"கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்." 
(லூக்கா நற்செய்தி 6:38)

"உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்."
(லூக்கா நற்செய்தி 6:36)

அன்பும் அதன் குழந்தை இரக்கமும் தான் நாம் செய்ய வேண்டிய எல்லா அறச் செயல்களுக்கும் அடிப்படைக் காரணங்கள்.

கடவுள் அளவு கடந்த அன்பு உள்ளவராக இருப்பதால்தான் தனது அன்பை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள மனிதர்களைப் படைத்தார்.

அவருடைய இரக்கத்தின் காரணமாகத்தான்

 மனிதன் பாவம் செய்து விண்ணக வாழ்வை இழக்கும் நிலையை அடைந்தபோது

 பாவத்திலிருந்து அவனுக்கு விடுதலை கொடுத்து அவனை விண்ணகத்திற்கு அழைத்துச் செல்ல 

அவரே மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, மரித்து மனிதன் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்தார்.

கடவுள் நம்மை அவருடைய சாயலில் படைத்திருக்கிறார்.

ஆகவே அவருடைய பண்புகள் எல்லாம் நம்முடனும் இருக்கின்றன.

அவர் அன்பே உருவானவர், நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்ட அன்பு உள்ளது.

அவர் இரக்கமே உருவானவர்,  நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்ட இரக்கமும் உள்ளது.

நாம் பயன்பெறும் எல்லா நன்மைகளும் அவரால் நமக்குக் கொடுக்கப்பட்டவை.

நாம் மட்டும்  பயன்பெறுவதற்காக நமக்கு கொடுக்கப்படவில்லை,

அவர் தன்னுடையதை எப்படி நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளாரோ அதேபோல நாமும் நம்மிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இருப்பதைக் கொடுத்தால் நமக்கு இன்னும் கொடுக்கப்படும்.

"கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்." என்று அவரே சொல்கிறார்.

நாம் எந்த அளவையால் கொடுக்கிறோமோ அதே அளவையால் நமக்கும் கொடுக்கப்படும்.

நாம் தாராளமாகக் கொடுத்தால் நமக்கும் தாராளமாகக் கிடைக்கும்.

"அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடப்படும்." என்று ஆண்டவர் சொல்கிறார்.

நாம் பூமியில் வாழ்கிறோம். நமக்கு விஞ்ஞான ரீதியாக உதவிகரமாக இருப்பதற்காக கடவுள் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் படைத்துள்ளார்.

நமக்காகப் படைத்துள்ளார்.

இது அவருடைய தாராள மனதைக் காட்டுகிறது.

நமது உருவம் சிறியது.

நமக்கு ஒளி தர எவ்வளவு பெரிய சூரியன்!

நாம் சுவாசித்து வாழ எவ்வளவு அதிக காற்று!

நாம் நீர் அருந்த ஆண்டுதோறும் எவ்வளவு அதிகமாக மழை!

மேகங்களைத் தடுத்து மழை கொடுக்க எத்தனை மலைகள்!

நாம் நாடு விட்டு நாடு பயணிக்க எவ்வளவு பெரிய கடல்!

இவையெல்லாம் கடவுள் தாராளமாகத் தந்த இயற்கை வளங்கள்.

நாம் இயற்கையின் அழகை ரசித்தால் மட்டும் போதாது,

அதை பயன்படுத்தினால் மட்டும் போதாது,

அவற்றைத் தந்தமைக்காகக் கடவுளுக்கு நமது நன்றியைச் செலுத்த வேண்டும்.

வாயினால் நன்றி சொன்னால் போதாது, செயலாலும் சொல்ல வேண்டும்.

நாம் நமது அயலானுக்குத் தாராளமாகக் கொடுப்பதுதான் செயலால் கடவுளுக்கு நன்றி செலுத்தும் வழி.

தாராளமாகக் கொடுப்பவர்களுக்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையாது.

இவ்வுலகில் நாம் கொடுப்பதற்குப் பரிசாக நமக்கு கடவுளால் நித்திய பேரின்ப வாழ்வு தரப்படும்.

நாம் எவ்வளவு கொடுத்தாலும் அதற்கு ஒரு அளவு உண்டு,

ஆனால் அதற்குப் பரிசாக கடவுள் தரும் பேரின்ப வாழ்வுக்கு அளவே இல்லை.

மனிதனின் உருவம் சிறியது.

ஆனால் அவன் வாழும் உலகம் எவ்வளவு பெரியது! 

உலகில் உள்ள அத்தனை படைப்புகளையும் அவனால் ஆண்டு அனுபவிக்க முடியும். 

"படைத்தார் படைப்பெல்லாம் மனுவுக்காக" இது தமிழ்.

"மனுவைப் படைத்தார் தன்னை வணங்க." இது நமது கடமை.

"பகிர்ந்துண்டு வாழ்ந்தால் பசி தீரும்." இதுவும் தமிழ்.

"கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்." இது இறை வாக்கு.

பகிர்வோம், அயலான் பசியாற்றுவோம்.

லூர்து செல்வம்.

Saturday, March 15, 2025

அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். (லூக்கா நற்செய்தி 9:33)

அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். 
(லூக்கா நற்செய்தி 9:33)

இயேசு தாபோர் மலையில் மறுரூபமான போது எலியாவும், மோசேயும் அவரோடு பேசிக் கொண்டிருந்தாங்கள்.

அப்போது இராயப்பர் இயேசுவை நோக்கி,

"ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்றார்.

மலையில் இருந்தவர்கள் ஆறு பேர். ஆனால் இராயப்பர்  சீடர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல்,

இயேசுவையும், எலியாவையும், மோசேயையும் மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு,

"உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்றார்.

இது எதைக் காட்டுகிறது?

அவருடைய தன்னலமற்ற 
தன்மையைக் காட்டுகிறது.

அதே சமயத்தில்,

"நாம் இங்கேயே இருப்பது நல்லது." என்றார்.

அங்கே இருப்பதற்கு சீடர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்.

இது இயேசுவோடு இருந்தால் அவரே எல்லாம், தங்களுக்குத் தனி இடம் தேவையில்லை என்ற ஆன்மீக நிலையை எடுத்துக் காட்டுகிறது.

இயேசுவே நமக்கு எல்லாம்.

அவர் நம்மோடும், நாம் அவரோடும் இருக்கும் போது அவரைத் தவிர நமக்கு வேறு எதுவும் தேவையில்லை.

"எல்லாம் இயேசுவே,
எமக்கெல்லாம் இயேசுவே"

என்பது நமது ஆன்மீக நிலையாக இருக்க வேண்டும்.

 நமது வாழ்க்கை முழுவதும் இயேசுவைத் தவிர வேறு யாரைப் பற்றியும் நினைக்கக்கூடாது .

தாய் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தை தாயைத் தவிர வேறு எதையாவது நினைக்குமா?

தாயின் இடுப்பில் அமர்ந்து கொண்டு பயணிக்கும் குழந்தை எதைக் கண்டாவது பயப்படுமா?

பாம்பைக் கண்டால் கூட பயப்படாது.

குழந்தைக்குத் தாய் தான் எல்லாம்.

குழந்தைக்குத் தாய் எப்படியோ இயேசுவுக்கு நாம் அப்படியே.

நாம் இயேசுவுக்காக வாழ வேண்டும்.

எதைச் செய்தாலும்  இயேசுவுக்காகச் செய்ய வேண்டும்.

இயேசுவுக்கு ஏற்ற வாழ்வு பிறரன்பு வாழ்வு.

நமது பிறரன்பு செயல்களிலும் இராயப்பரைப் போல செயல் பட வேண்டும்.

இராயப்பர் எப்படி தன்னை மறந்து

இயேசுவுக்காகவும், எலியாவுக்காகவும், மோசேவுக்காகவும் மட்டும் கூடாரம் அமைக்க ஆசைப்பட்டாரோ

அதே போல நாம் சுயநலம் பார்க்காமல் பிறரன்புப் பணி செய்ய வேண்டும்.

தனக்குப் போக மீதியை மற்றவர்களுக்குக் கொடுப்பதை விட இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதுதான் சிறந்த பிறரன்புப் பணி.

புனித கல்கத்தா தெரசா அப்படித்தான் செய்தார்கள்.

ஒரு முறை அவர்கள் தனது பிறரன்புப் பணிக்கு ஒரு செல்வந்தனிடம் நன்கொடை கேட்டிருக்கிறார்கள்.

அவன் அவர்கள் நீட்டிய கையில் எச்சிலைத் துப்பியிருக்கிறான்.

அன்னை "இது எனக்கு. என் பிள்ளைகளுக்கு ஏதாவது கொடுங்கள்" சொல்லியிருக்கிறார்கள்.

அவன் மனம் மாறி ஒரு பெரிய தொகையை நன்கொடையாகக் கொடுத்திருக்கிறான்.

இதுதான் தன்னலம் அற்ற பிறரன்புப் பணி.

இயேசு சர்வ உலகத்துக்கும் உரிமையாளர். 

ஆனால் பொதுவாழ்வில் ஏழைகளோடு ஏழையாகத் தான் பழகினார்.

உலகில் தனக்காக வாழாமல் பிறருக்காக மட்டும் வாழ்ந்தார்.

அப்படி வாழவே தனது சீடர்களுக்கும் பயிற்சி அளித்தார்.

நாமும் அவருடைய சீடர்கள் தான்.

அவரைப் போலவே நாமும் சுயநலம் பாராமல் பிறர் பணி ஆற்றுவோம்.

நாம் பிறருக்கு ஆற்றும் பணி தான் இறையன்புப்
பணி.

லூர்து செல்வம்

Friday, March 14, 2025

ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள் (மத்தேயு நற்செய்தி 5:48)



ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள் 
(மத்தேயு நற்செய்தி 5:48)

கடவுள் நிறைவுள்ளவர். அளவுள்ள நாம் அளவில்லாத கடவுளின் அளவுக்கு நிறைவு உள்ளவர்களாக இருக்க முடியாது.

ஆனாலும் அவரைப் போல நிறைவுள்ளவர்களாய் இயேசு ஒரு வழி காட்டுகிறார்.

அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். 

நல்லவர்களுக்கு உதவி செய்வது போலவே தீயவர்களுக்கும் உதவி செய்கிறார்.

நாமும் அப்படியே செய்ய நமக்கு அறிவுறுத்துகிறார்.

"நான் உங்களுக்குச் சொல்கிறேன்; 

உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; 

உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். 

இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்."
(மத்தேயு நற்செய்தி 5:44,45)

தந்தையைப் போல் பிள்ளைகளும் செயல்பட்டால் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ள பண்புகளைப் பயன்படுத்துகிறவர்கள் ஆவோம்.

பிள்ளைகளுக்குத் தந்தையின் பண்புகள் இருப்பது இயல்பு தானே.

நம்மிடம் உள்ள தந்தையின் பண்புகளை நமது வாழ்வாக்கும்போது,

இயேசுவின் அறிவுரைப்படி தந்தையைப் போல் நிறைவு உள்ளவர்களாக இருக்க முயற்சி செய்கிறோம்.

கடவுள் அளவில்லாத விதமாய் நிறைவுள்ளவர்.

நாம் நமது அளவுக்கு ஏற்ப நிறைவு உள்ளவர்களாக இருப்போம்.

சமுத்திரம் அதன் அளவுக்கு நிறைவு உள்ளதாக இருந்தால் 

ஒரு சிறிய தம்ளர் அதன் அளவுக்கு நிறைவு உள்ளதாக இருக்கும்.

இயேசுவின் ஆசையை நிறைவேற்ற அவரிடமே உதவியைக் கேட்போம்.

லூர்து செல்வம்

Thursday, March 13, 2025

"அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்."(மத்தேயு நற்செய்தி 5:24)



"அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்."
(மத்தேயு நற்செய்தி 5:24)


"நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், 


அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்."

இவை நமது ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள்.

நம் ஒவ்வொருவருக்காகவும் கூறப்பட்டவை.

உலக சமாதானம் குழந்தை இயேசு நமக்குத் தந்த நன்கொடை.

"நன் மனதோற்குச் சமாதானம் " என்ற வாழ்த்தோடுதான் இயேசு பெத்லகேமில் பிறந்தார்.

நல்மனதோர் யார்?

நல்லதை மட்டும் நினைக்கும் மனதினர்.

இவர்கள் இறைவனையும்,  அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் நேசிப்பவர்கள்.

இவர்கள் மனதில் அன்பைச் சார்ந்த எண்ணங்கள் மட்டுமே இருக்கும்.

அனைத்து மக்களுடனும் நல்ல உறவுடன் இருப்பார்கள்.

எல்லோருடனும் நல்ல உறவுடன் இருக்கும் நிலை தான் சமாதான உறவு.

கடவுள் மனிதனைப் படைக்கும் போது தன்னுடன் சமாதான உறவு உள்ளவனாகவே படைத்தார்.

ஆனால் மனிதன் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்த போது மனிதன் சமாதான உறவை இழந்தான்.

இழந்த சமாதான உறவை மீட்டுக் கொடுக்கவே கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

நாம் பிறக்கும் போது நமது ஆன்மாவில் சென்மப் பாவம் இருப்பதால் நாம் சமாதான உறவில் இல்லை.

திருமுழுக்கப் பெறும் போது சென்மப் பாவம் மன்னிக்கப் பட்டு சமாதான உறவுக்குள் வருகிறோம்.

திருமுழுக்கப் பெறும் போது பெற்ற சமாதான உறவோடு வாழ வேண்டும்.

நாம் சாவான பாவம் செய்யும் போது நமது சமாதான உறவை இழக்கிறோம்.

இழந்த உறவை மீண்டும் பெற பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெற வேண்டும்.

கடவுளோடு சமாதான உறவில் இருப்பது போல நமது அயலானோடும் சமாதான உறவில் இருக்க வேண்டும். 

பிறரன்புக்கு எதிராகப் பாவம் செய்தால் நமது பிறனோடு உள்ள சமாதான உறவை இழக்கிறோம். 

 நாம் இறைவனிடம் மன்னிப்பு கேட்பது போல நமது பிறனிடமும் மன்னிப்புக் கேட்டு இழந்த உறவை மீட்டுக் கொள்ள வேண்டும்.

நாம் இறைவனோடும் அயலானோடும் சமாதான உறவில் இருந்தால் தான் நாம் அவருக்குக் கொடுக்கும் காணிக்கையை அவர் ஏற்றுக் கொள்வார்.

ஆகவே இறைவனோடும் அயலானோடும் சமாதான உறவை ஏற்படுத்திக் கொண்ட பிறகுதான் இறைவனுக்குக் காணிக்கை செலுத்த வேண்டும்.

பாவ நிலையில் கோவில் உண்டியலில் போடும் பணம் காணிக்கை அல்ல.


ஆகவேதான்

'நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், 

அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். 
(மத்தேயு நற்செய்தி 5:23,24)

நமது அயலான்  மீது நமக்கு கோபம் இருந்தால் மட்டுமல்ல,

அயலானுக்கு நம் மீது கோபம் இருந்தாலும் நாம் தான் சமாதான உறவை ஏற்படுத்த வேண்டும்.

கடவுள் மாறாதவர். நம்மைப் படைத்தபோது நம்மை எப்படி நேசித்தாரோ அதே அளவுதான் நாம் பாவம் செய்யும்போதும் நேசிக்கிறார்.

நாம் தான் நமது பாவத்தினால் அவரை விட்டுப் பிரிந்து வந்து விடுகிறோம்.

ஆனால் கடவுளின் அன்பில் மாற்றமில்லை.

அதனால்தான் பிரிந்து வந்தவர்களைத் திரும்பவும் தன்னோடு சேர்த்துக் கொள்ள மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டுத் தன்னையே சிலுவையில்  பலியாக்கினார்.


"உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.'' என்று சொன்ன இயேசு

அவர் மீது மனத்தாங்கலோடு இருந்த நம்மை அவருடைய நல்லுறவுக்குள் கொண்டுவர நம்மிடம் வந்தார்.

இன்றும் திவ்ய நற்கருணை மூலமாக நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவரையே நமக்கு உணவாகத் தந்து நம்மையும் வாழ வைத்துக்
கொண்டிருக்கிறார்.

நாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்புப் பெறுவதன் மூலம் அவரது உறவுக்குள் திரும்புவோம்.

நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்வோம்.

ஆன்மீக வாழ்வில் வளர்வோம். இன்றும் என்றும் அவரது உறவில் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, March 12, 2025

தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா! (மத்தேயு நற்செய்தி 7:11)


தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா! 
(மத்தேயு நற்செய்தி 7:11)

ஒரு உயர் நிலைப் நுழைவு வாயிலில் இப்படி ஒரு விளம்பரம் செய்யப் பட்டிருந்தது:

இன்று மாணவர் சேர்க்கை ஆரம்பமாகிறது.

ஒன்பதாவது வகுப்பில் சேர விரும்புவோர் வரவும்.

காலை பத்து மணிக்கே சேர்க்கை ஆரம்பமாகிவிட்டது.

பதினொரு மணியளவில் ஒரு தந்தை தன் மகனை அழைத்துக் கொண்டு பள்ளிக் கூடம் வந்தார்.

நேரே தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றார்.

"சார், என் மகனை ஒன்பதாவது வகுப்பில் சேர்க்க வேண்டும்."

"எட்டாவது வகுப்பு Record sheet ஐக் கொடுங்கள்?"

"அப்படின்னா?"

"எந்தப் பள்ளியில் எட்டாவது வகுப்புப் படித்தான்."

"அவன் இதுவரை எந்தப் பள்ளியிலும் படிக்கவில்லை."

"முதல் வகுப்பு?"

"அவன் படிக்கவேயில்லை. விளம்பரத்தைப் பார்த்து இந்தப் பள்ளியில் ஒன்பதாவது வகுப்பில் சேர்க்கலாம் என்று ஆசைப்பட்டுக் கூட்டி வந்தேன்."

"ஐயா, முதலில் பையனை ஆரம்பப் பள்ளியில் சேருங்கள்.

ஐந்தாவது வகுப்பு முடித்த பின் கூட்டி வாருங்கள். 6வது வகுப்பில் சேர்த்துக் கொள்கிறேன்"

"நீங்கள் அப்படி விளம்பரத்தில் போடவில்லையே."

"நீங்கள் நான் சொன்னபடி செய்யுங்கள்."

பையனின் தகப்பனார் பள்ளிக்கூடம் போகாதவர், அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

விளம்பரத்துக்கும் தலைமை ஆசிரியர் கூறியதுக்கும் சம்பந்தமே இல்லையே என்று நினைத்துக் கொண்டு பையனோடு வீட்டுக்குப் போனார்.

" கேளுங்கள் கொடுக்கப் படும்" என்ற பைபிள் வசனத்தை வாசித்து விட்டு, கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டு 

" கேட்டேன், கேட்டது கிடைக்க வில்லையே" என்று புலம்புவோர் இந்த தகப்பனாரைப் போன்றவர்கள் தான்.

ஒரு சவுளிக் கடையில் சேலைகள் பகுதியில்,

"எதை எடுத்தாலும் நூறு ரூபாய்."

அதை வாசித்த ஒரு மனிதர் அங்கு அமர்வதற்காக போட்டிருந்த ஒரு நாற்காலியை எடுத்து கடைக்காரரிடம், "இதை எடுத்துக் கொள்கிறேன்." என்று சொல்லிக் கொண்டு நூறு ரூபாயை நீட்டினாராம். 

"ஐயா சேலைகளில் எதை எடுத்தாலும் நூறு ரூபாய்.

நாற்காலி வந்தவர்கள் அமர்வதற்காக போடப்பட்டிருக்கிறது, விற்பனைக்காக அல்ல."

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று சொன்னவர் மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு. 

அவர் மனிதனாகப் பிறந்தது நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து அவற்றை மன்னித்து நம்மை பாவத்திலிருந்து மீட்க.

அவர் "கேளுங்கள்" என்று சொன்னது அவர் எதற்காக உலகிற்கு வந்தாரோ அது சம்பந்தப்பட்டவற்றைக் கேட்க.

அவரிடம் எதை எதை எல்லாம் கேட்கலாம்?

1. நமது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட வேண்டிய அருள் வரத்தைக் கேட்கலாம்.

2. நமது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கலாம். 

3. திரும்பவும் பாவத்தில் விழாதபடி நம்மைக் காப்பாற்ற வேண்டிய அருள் வரத்தைக் கேட்கலாம்.

4. இறைவனையும், பிறனையும் முழு மனதோடு நேசிக்கத் தேவையான அருள் வளத்தை கேட்கலாம்.

5. விண்ணக பாதையில் பாவமாசின்றிப்  பயணிக்க உதவி செய்யும்படி கேட்கலாம்.

6. சிலுவையைச் சுமக்க போதிய ஆன்மீக சக்தியைத் தரும்படி கேட்கலாம்.

7. பரிசுத்தமாக வாழ்ந்து நல்ல மரணம் அடைய வரம் தரும்படி கேட்கலாம்.

8. அவருக்காக வாழ்ந்து மறு உலகில் அவரோடு வாழ வரம் தரும்படி கேட்கலாம். 

இயேசு மீட்பர். நாம் மீட்புப் பெற கேட்க வேண்டிய ஆன்மீக உதவிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. 

இந்த உதவிகளைக் கேட்கும் படி தான் ஆண்டவர் அறிவுறுத்தினார்.

அவர்  தம்மிடம் கேட்கச்‌ சொன்னது ஆன்மீக நன்மைகளை.

இவ்வுலகைச் சார்ந்த பொருட்கள் நமது ஆன்மீக வாழ்வில் உதவுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளன.

உணவு - நான் உண்ணவும், மற்றவர்களுக்கு உண்ணக் கொடுக்கவும்.

பணம் - பிறரன்புப் பணிகளில் உதவ.

தேக ஆரோக்கியம்- தடங்கல் இன்றி இறைப் பணியாற்ற.

ஒவ்வொரு உலகப் பொருளுக்கும் ஒரு ஆன்மீகப் பணி இருக்கும்.

அவற்றை செய்ய நமக்கு உதவ பொருள் உதவி கேட்கலாம்.

ஆண்டவர் அருள் உதவியோடு பொருள் உதவியும் தருவார்.

நாம் கேட்கும் பொருள் உதவி ஆன்மீக வாழ்வுக்கு உதவாது 
என்றிருந்தால் கேட்பதைத் தர மாட்டார்.

"கேளுங்கள் தரப்படும்" என்றால் 
"உங்களது ஆன்மீக மீட்புக்கு தேவையானவற்றைக் கேளுங்கள், தரப்படும்." என்றுதான் பொருள்.


"தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!"
(மத்தேயு நற்செய்தி 7:11)

மனிதர்களாகிய நாம் நமது பிள்ளைகளுக்கு நல்லதை மட்டுமே கொடுக்க விரும்புகிறோம். 

நமது விண்ணகத் தந்தை நமக்கு எது நல்லதோ அதை மட்டுமே தருவார்.

நாம் கேட்பது நமது ஆன்மாவுக்குத் தீமை விளைவிப்பதாக இருந்தால் தரமாட்டார். 

ஆகவே நாம் கேட்டது கிடைக்காவிட்டால் 

அது நமக்கு தீமை விளைவிக்கக்  கூடியது 

ஆகவே தான் தரவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தராததுக்காக நன்றி கூற வேண்டும்.

ஆன்மீக உதவிகளை ஆர்வமுடன் கேட்போம், ஆண்டவரும் ஆசையுடன் தருவார். 

"ஆண்டவரே, நான் கேட்பது எனது ஆன்மாவுக்கு நலன் பயப்பதாக இருந்தால் தாரும்."

என்ற முன்னுரையோடு கேட்போம். 

நலன் பயப்பதாக இருந்தால் உறுதியாகக் கிடைக்கும். 

எப்போது கிடைக்கும்? 

எப்போது நமக்குத் தேவையோ அப்போது கிடைக்கும்.

லூர்து செல்வம்.

Tuesday, March 11, 2025

"இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. (லூக்கா நற்செய்தி 11:29)



 "இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. 
(லூக்கா நற்செய்தி 11:29)

இன்றைய உலகம் உண்மையை விட அடையாளங்களை நம்புகிறது.

வேலைக்கான நேர்காணலுக்குச் செல்லும்போது நாம் எவ்வளவு படித்திருந்தாலும் நாம் வாயினால் உண்மையைச் சொன்னால் நம்ப மாட்டார்கள்.

அதற்கான அடையாளத்தை
(Certificate) காண்பித்தால் தான் நம்புவார்கள்.

ஆனால் உண்மை அடையாளத்தில் இல்லை.

அடையாளம் இல்லை என்றாலும் உண்மை உண்மைதான்.

ஆன்மீகத்தில் உண்மையை ஏற்றுக் கொள்ள விசுவசிக்க வேண்டும்.

கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள உறவு ஆன்மீக உறவு. அன்பை அடிப்படையாகக் கொண்டது.

ஒரு கணவன் தன் மனைவிக்குப் பிறந்த பிள்ளையைத் தன் பிள்ளை என்று ஏற்றுக் கொள்ள அடையாளத்தைக் கேட்பதில்லை, மனைவியை நம்புகிறான்.

தாய் தன் பிள்ளையிடம்,

"அம்மா,  சொல்லு" என்று தன்னை அறிமுகப்படுத்தும் போது,

"நீங்கள் என் அம்மா என்பதற்கு என்ன அடையாளம்" என்று கேட்பதில்லை. அம்மா என்று ஏற்றுக் கொள்கிறது.

பெற்றோரை நம்பி வளரும் குழந்தைதான் உண்மையான வளர்ச்சியைப் பெறுகிறது.

ஆன்மீகத்தில் நம்பிக்கைக்கு உரியவர்கள் சொல்லும்போது நம்பி ஏற்றுக் கொள்வதுதான் விசுவாசம்.

இயேசுவின் காலத்திய நோயாளிகள் அவரை  விசுவசித்ததால் குணம் பெற்றார்கள்.

அவர்களுடைய விசுவாசம் தான் அவர்களுக்கு குணம் அளித்தது என்று இயேசுவே சொல்கிறார்.

ஆனால் இயேசுவை விசுவசிக்க விரும்பாதவர்களும் அவர் காலத்தில் இருந்தார்கள். 

பரிசேயர்கள், சது சேயர்கள், மறைநூல் அறிஞர்கள் அவரை விசுவசிக்க  விரும்பவில்லை.

விசுவசியாதவர்கள் அவரை ஏற்றுக் கொள்ள ஒரு அடையாளத்தைக் கேட்டார்கள்.

இயேசு அவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என்கிறார்.

கப்பலிலிருந்து கடலுக்குள் வீசப் பட்ட யோனாவை ஒரு பேரிய மீன் விழுங்கியது.

மூன்று நாட்கள் அவரைத் தன் வயிற்றில் வைத்திருந்து மூன்றாம் நாள் கரையில் கக்கியது.

இயேசு மரித்து அடக்கம் செய்யப் பட்டு மூன்றாம் நாள் உயிக்கப் போவதை தன்னை ஏற்றுக் கொள்ள அடையாளமாகக் கூறுகிறார்.

இயேசுவின் உயிர்ப்பு நமது விசுவாசத்தின் மையம்.

அவரது உயிர்ப்பின் மூலம் சாவை வென்றார்.

நமது ஆன்மீக சாவின் மேலான வெற்றிக்கும், அதாவது, நமது பாவத்தை வென்று மீட்படையவும்

இயேசுவின் மரணமும் உயிர்ப்பும் தான் காரணம்.

இயேசு ஒரு முறை தான் மரித்தார், ஒரு முறை தான் உயிர்த்தார்.

நாம் இயேசுவை விசுவசிக்கிறோம்.

கத்தோலிக்கத் திருச்சபை நமது தாய் என்பதையும் விசுவசிக்கிறோம்.

கத்தோலிக்கத் திருச்சபை மூலமாக இயேசு நமக்கு அறிவிப்பவை யாவற்றையும் அடையாளம் எதுவும் கேட்காமல் விசுவசிக்கிறோம்.

நமது விசுவச சத்தியங்கள் திருச்சபையால் தரப்பட்டவை.

நாம் வாசிக்கும் பைபிள் திருச்சபையால் தரப்பட்டது.

கத்தோலிக்கத் திருச்சபை மீது நமக்கு இருக்கும் விசுவாசத்தின் அடிப்படையில் பைபிள் வசனங்களுக்கு திருச்சபை கொடுக்கும் விளக்கங்களையும் ஏற்றுக் கொள்கிறோம்.

திருச்சபையின் பாரம்பரியத்தையும் விசுவசிக்கிறோம்.

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையை ஏற்றுக் விரும்பாமல் வெளியேறிய பிரிவினை சபையார் வைத்திருப்பது கத்தோலிக்கத் திருச்சபை தந்த பைபிள் அல்ல.

நாற்காலியின் ஒரு காலை எடுத்து விட்டு, "இதுதான் நாற்காலி" என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

அதில் உட்கார்ந்தால் கீழே விழ வேண்டியிருக்கும்.

கத்தோலிக்கத் திருச்சபை தந்த பைபிளில் மொத்தம் 73 புத்தகங்கள் உள்ளன.

விசுவாசத்துக்கு விசுவாசம் தான் அடிப்படை.

கத்தோலிக்கத் திருச்சபை நம்பிக்கைக்கு உரியது என்று விசுவசிக்கிறோம்.

அதன் அடிப்படையில் தான் திருச்சபை கூறுவதை விசுவசிக்கிறோம்.

'' காணாமலே விசுவசிப்பவர்கள் பேறுபெற்றோர்." 
(அரு. 20:29)

லூர்து செல்வம்.

Monday, March 10, 2025

''எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னிப்பதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்."(மத்தேயு நற்செய்தி 6:12)



''எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னிப்பதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்."
(மத்தேயு நற்செய்தி 6:12)

செபம் சொல்லும் போது வார்த்தைகள் உள்ளத்திலிருந்து வர வேண்டும்.

சிந்தனையும், சொல்லும், செயலும் ஒன்று போல் இருக்க வேண்டும்.

நமது உள்ளத்தை இறைவனை நோக்கி எழுப்புவது தான் செபம்.

நமது உள்ளமும் இறைவனின் உள்ளமும் இணைவதுதான் செபம்.

கர்த்தர் கற்பித்த செபத்தை ஒரு முறை சிந்தனை, சொல், செயல் மூன்றும் இணைய செபித்தால் நாம் புனிதர் ஆகி விடலாம்.

அதிலுள்ள ஏழு மன்றாட்டுக்களில் ஒன்றை இன்று தியானிக்க எடுத்துக் கொள்வோம்.

"எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னிப்பதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்."

"புனிதர்களின் சமூக உறவை விசுவசிக்கிறேன்."

"I believe in the communion of Saints."

எங்கெல்லாம் உள்ள புனிதர்கள்?

மோட்சம், உத்தரிக்கிற தலம், உலகம்.

உலகிலுள்ள புனிதர்கள் விசுவாசிகளாகிய நம்மை குறிக்கிறது. 

புனிதர்களாக வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

புனிதர் என்று அழைக்கப்பட நாம் பாவம் இன்றி வாழ வேண்டும், அதற்காகத்தான் ஏழு தேவத் திரவிய அனுமானங்கள்.

பாவம் செய்ய நேரிட்டால் பாவ சங்கீர்த்தனம் மூலம் பாவ மன்னிப்புப் பெற வேண்டும். 

கடவுள் நமது பாவத்தை மன்னிக்க வேண்டுமென்றால் இயேசு அதற்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார்.

நாம் பரம தந்தையிடம் பாவ மன்னிப்பு கேட்க இவ்வாறு செபிக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார்:

"எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னிப்பதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்."


இதன் உண்மையான பொருள் அதை மாற்றிச் சொன்னால் புரியும்.


"எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னிக்கா  விட்டால் எங்கள் குற்றங்களை மன்னிக்க வேண்டாம்."

நமக்கு எதிராக குற்றம் செய்பவர்கள் இறைத் தந்தையில் நமது சகோதர சகோதரிகள்.

நாம் எல்லாம் இறை உறவில் ஒரே குடும்பத்தினர்.

ஒரே குடும்பத்தினர் சமாதானமாக வாழ வேண்டுமென்றால் ஒருவரை ஒருவர் மன்னித்து வாழ வேண்டும். 

நாம் நமது சகோதர சகோதரிகளை மன்னித்தால் தான் தந்தை நமது பாவங்களை மன்னிப்பார்.

உலகினர் அனைவரும் ஒருவரை ஒருவர் மன்னித்து விட்டால் உலகில் பாவம் என்பதே இருக்காது.

நாம் ஒவ்வொருவரும் நம்மை ஆன்ம பரிசோதனை செய்வோம்.

நாம் நமக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களில் எத்தனை பேரை மனதார மன்னித்திருக்கிறோம்?

நம்மோடு பழகியவர்களில் ஒவ்வொருவராக நினைத்துப் பார்ப்போம்.

யாரையாவது மன்னியாதிருந்தால் உடனடியாக மன்னிப்போம்.

அவர் நம்மிடம் மன்னிப்புக் கேட்காவிட்டாலும் நாம் மன்னிப்போம்.

மன்னித்தால் தான் கர்த்தர் கற்பித்த செபத்தைப் பக்தியுடன் சொல்ல முடியும். 

இந்த ஒரு மன்றாட்டை சிந்தனை, சொல், செயல் மூன்றும் இணைய நாம் செபித்தால்,

அதாவது 
மனதார மன்னித்து,
சொல்லால் அதைச் சம்பந்தப் பட்டவர்களுக்குச் சொல்லி,
செயலில் நூறு சதவீதம் நட்போடு வாழ்ந்தால்
நாம் அனைவரும் புனிதர்கள் தான்.

நாமும் யாருக்கும் எதிராகக் குற்றம் செய்திருந்தால், நாம் கடவுளிடம் மன்னிப்புக் கேட்கும் முன் அவர்களிடம் மன்னிப்பு கேட்போம்.

மன்னிப்புக் கேட்கவும் வெட்கப்பட வேண்டாம். மன்னிக்கவும் தயங்க வேண்டாம்.

இயேசு தனது சிலுவை மரணத்தால் நமக்குத் தந்த மன்னிப்பு தான் மீட்பைத் தருகிறது.

மன்னிப்பு இல்லாவிட்டால் மீட்பு இல்லை.

மன்னிப்பு என்ற டிக்கெட் இல்லாமல் விண்ணக இரயிலில் ஏற முடியாது.

விவசாயி நிலத்தில் பயிரிடுமுன் அதைப் பண்படுத்துகிறான்.

நாமும் மன்னிப்பின் மூலம் ஆன்மாவைப் பண்படுத்தி,    புண்ணியப் பயிரிட்டு,
ஒன்றுக்கு நூறாய் அறுவடை செய்வோம்.

அறுவடை செய்து விண்ணகக் களஞ்சியத்தில் சேர்ப்போம்.

லூர்து செல்வம்.

Sunday, March 9, 2025

"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்."(மத்தேயு நற்செய்தி 25:40)


"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்."
(மத்தேயு நற்செய்தி 25:40)

 

"எல்லாவற்றுக்கும் மேலாக என்னை (இறைவனை) நேசியுங்கள்" 

என்று கற்பித்த இயேசு,

"நீங்கள் உங்களை நேசிப்பது போல உங்கள் அயலானையும் நேசியங்கள்"

என்றும் கற்பித்தார்.

அயலான்கள் என்று நாம் நினைப்பவர்கள் இயேசுவின் சகோதர சகோதரிகள்.

விண்ணகத் தந்தை நமது தந்தை,

அந்த உறவின் அடிப்படையில் இயேசு நமது மூத்த சகோதரர், அவரால் படைக்கப்பட்ட அனைத்து மக்களும் நமது சகோதர சகோதரிகள்.

 விண்ணிலும், மண்ணிலும் வாழும் அனைவரும் இறைக் குடும்பத்தின் உறுப்பினர்கள்.

"புனிதர்களுடைய சமூக உறவை விசுவசிக்கிறேன்."

நம்மை படைத்த இறைவனை நமது புறக்கண்ணால் பார்க்க முடியாது.

அகக் கண்ணால் மட்டுமே உணர முடியும்.

ஆனாலும் நம்மை படைத்தவரை அவரால் படைக்கப்பட்வர்களில் காணலாம்.

தந்தையை நேசிப்பவர்களால் தங்களது சகோதர சகோதரிகளை நேசிக்காமலிருக்க முடியாது.

இறைவனை நேசிக்கும் போது நமது அயலான்களையும் நேசிக்கிறோம்.

நமது அயலானை நேசிக்கும் போது இறைவனையும் நேசிக்கிறோம்.

தந்தைக்கு அன்பளிப்பாக ஏதாவது கொடுக்க ஆசைப்பட்டால் 

நமது அயலானுக்கு அதைக் கொடுத்தால் அவர்கள் மூலம் தந்தையே அதை ஏற்றுக் கொள்கிறார். 

நமது அயலானுக்குக் கொடுக்கிறோம் என்றாலும், தந்தைக்குக் கொடுக்கிறோம் என்றாலும் பொருள் ஒன்று தான்.

ஆகவே தான் இயேசு,

"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்." என்கிறார்.

அயலானுக்கு ஏதாவது கொடுக்கும்போது, அல்லது, எதையாவது செய்யும் போது அதை இறைவனுக்காக கொடுக்க வேண்டும், செய்ய வேண்டும். 

நமது சுய திருப்திக்காக அல்லது சுய விளம்பரத்திற்காக எதையும் செய்யக்கூடாது. 

படைத்தவர் இறைவன், ஆகவே புகழும், மகிமையும் அவருக்கே.

ஒருவருக்கு உரியதை மற்றவர்கள் எடுத்தால் அதற்குப் பெயர் அபகரித்தல்.


"சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்"

இவை இயேசுவின் வார்த்தைகள்.
(மத்தேயு நற்செய்தி 22:21)

கடவுளுக்கு உரியவை எவை?

நாம் வாழும் பிரபஞ்சத்தை 
"உண்டாகுக" என்ற ஒற்றை வார்த்தையால் படைத்தவர் கடவுள்.

எப்படி உலகரீதியாக ஒரு விவசாயி உழுது, விதைத்து, உரமிட்டு, நீர்ப்பாய்ச்சி பயிரிட்ட நிலத்திலுள்ள வருமானம் அவனுக்கு உரியதோ,

அதே போல

கடவுள் படைத்த பிரபஞ்சத்தில் அவருடைய அருளால் நிகழும் அத்தனை நன்மைகளுக்கும் அவர் ஒருவரே உரிமையாளர்.

விவசாயியின் உடல் உழைப்பால் வரும் வயல் வருமானம் உலகியல் ரீதியாக அவனுக்கு உரியது என்றாலும்,

ஆன்மீக ரீதியாக அது இறைவனுக்கு உரியது.

விவசாயி கடவுளுக்கு நன்றி கூற வேண்டும், ஏனைனில் நிலமும் அதிலிருந்து வருவதும் அவரது வல்லமையால் தான்.

நாம் கடவுளுக்குச் சொந்தம். நம்மைப் படைத்ததற்காகவும், பராமரித்து வருவதற்காகவும் அவருக்கு நன்றி கூற வேண்டும்.

நமது நன்றியை சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் செலுத்த வேண்டும்.

எப்படிச் செலுத்த வேண்டும்?

அதற்கும் கடவுள் வழி காட்டுகிறார்.

"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்."

"நீங்கள் எனக்குச் செய்ய வேண்டியதை என் சகோதரர், சகோதரிகளான உங்கள் அயலாருக்குச் செய்யுங்கள்."

ஆக நாம் நமது அயலாருக்கு நற்செயல் செய்து இறைவனுக்கு நம் நன்றியைத் தெரிவிப்போம்.

நமது அயலானுக்கு நன்மை செய்தால் அது இறைவனுக்கு கூறும் நன்றி.

நமது அயலானுக்கு எதிராகத் தீமை செய்தால்?

அது கடவுளுக்கு எதிரான பாவம்.

நமது அயலானை நேசித்தால் அது கடவுளுக்கு நாம் கூறும் நன்றி.

நமது அயலானை வெறுத்தால் அது கடவுளுக்கு எதிரான பாவம். 

நமது அயலானை துன்புறுத்தினால் அது கடவுளுக்கு எதிரான பாவம். 

நமது அயலானுக்கு எதிராக என்ன தீமை செய்தாலும் அது கடவுளுக்கு எதிரான பாவம் தான்.

நமது அயலானுக்கு எதிராக தீமை செய்திருந்தால் முதலில் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 

அடுத்து இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 

இறைவனுக்குச் செய்ய வேண்டியதையெல்லாம் நமது பிறருக்குச் செய்வோம்.

இரண்டு தண்டவாளங்களில் ஒன்று சரியில்லை என்றாலும் இரயில் ஓடாது.

ஆன்மீகத்திலும் அப்படித்தான்.

இயேசு தந்த இரண்டு கட்டளைகளில் ஒன்றை மீறினாலும் மீட்பு கிடைக்காது.

கடவுளை நேசிக்காமல் பிறரை நேசிக்க முடியாது.

பிறரை நேசிக்காமல் கடவுளை நேசிக்க முடியாது.

கடவுளையும், பிறரையும் நேசிப்பது தான் உண்மையான நேசம்.

லூர்து செல்வம்.