Friday, January 31, 2025

ஞாயிறு2மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். (லூக்கா நற்செய்தி 2:22)

ஞாயிறு2

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். 
(லூக்கா நற்செய்தி 2:22)

இயேசு பிறந்த எட்டாவது நாள் அன்னை மரியாளும், சூசையப்பரும் அவரைக் கோவிலுக்கு எடுத்துச் சென்று விருத்த சேதனம் செய்து,
இயேசு என்று பெயரிட்டார்கள்.

ஆண் குழந்தை பிறந்த நாற்வதாவது நாள் தாய் தூய்மைச் சடங்கை நிறைவேற்றி,  குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

குழந்தைப் பேற்றின் போது ரத்தப் போக்கினால் தாய் தீட்டு பட்டிருப்பாள்.  தீட்டு நீங்க தாய் 
தூய்மைச் சடங்கை நிறைவேற்ற வேண்டும் என்பது மோசேயின் சட்டம்.

ஆனால் அன்னை மரியாள்  குழந்தை பேற்றுக்கு முன்னும், குழந்தை பேற்றின் போதும், அதற்குப் பின்னும் முக்காலமும் கன்னியாகவே இருந்தாள்.

அவளுடைய கன்னிமைக்கு பழுது ஏற்படாமல் இயேசு பிறந்தார்.

ஒளி கண்ணாடியை எந்த விதத்திலும் பாதிக்காமல் அதை ஊடுரூவிச் செல்வது போல

இயேசு தாயின் கன்னிமைக்கு சிறிதும் பழுது ஏற்படாமல் அவள் வயிற்றிலிருந்து பிறந்தார்.

ஆகவே அவளுக்கு தீட்டு ஏற்படவில்லை.

ஆகவே அவளுக்கு தூய்மை சடங்கு தேவையில்லை.

ஆனாலும் சட்டப்படி நடக்க வேண்டும் என்பதற்காக தூய்மை சடங்குக்கு உட்பட்டாள்.

இது யூத சட்டத்திற்குத் திருக் குடும்பம் காட்டும் மரியாதையைக் காண்பிக்கிறது.

இயேசு கடவுள். கடவுளையே அவருக்கே ஒப்புக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

 ஆனாலும் சட்டத்துக்கு உட்பட்டு இயேசுவின் பெற்றோர் அவரைக் கடவுளுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தார்கள்.

"ஏனெனில், "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது."
(லூக்கா நற்செய்தி 2:23)

இது இயேசுவே கல்வாரி மலையில் தன்னையே தன் தந்தைக்குப் பலியாக ஒப்புக் கொடுத்ததை ஞாபகப்படுத்துகிறது.

நாமும்  நம்மை படைத்த இறைவனுக்கு நம்மை ஒப்புக் கொடுத்து அவரது திருப்பணிக்கு நம்மையே அர்ப்பணிக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறது.

'இதோ ஆண்டவருடைய அடிமை" என்ற வார்த்தைகளால் அன்னை மரியாள் தன்னையே அர்ப்பணித்த பின்பு தான் இறைமகன் அவள் வயிற்றில் மனு மகனாக உருப்பெற்றார்.

இப்போதும் துறவற வாழ்க்கையை தேர்ந்தெடுப்பவர்களும் இதையே செய்கிறார்கள்.

இல்லறவாசிகளாகிய நாம் நமது இல்லறத்தை இறை பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதையும் இயேசு நமக்கு நினைவூட்டுகிறார்.

இயேசு தன்னையே தனது தந்தைக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுத்தது போல நாமும் நம்மை நமது விண்ணகத் தந்தைக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுப்போம்.

காணிக்கை கடவுளுக்கே சொந்தம். ஆகவே நாம் நம்மையே கடவுளுக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுத்தபின்  நாம் வாழ வேண்டியது அவரது விருப்பப்படி, நமது விருப்பப்படி அல்ல.

நமக்கு என்ன நேர்ந்தாலும் அது அவருடைய விருப்பப்படி என்பதால் அதை முழு மனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அன்னை மரியாள் தன்னையே இறைவனுக்கு அடிமையாக ஒப்புக் கொடுத்த பின் தனக்கு ஏற்பட்ட வியாகுலங்களை மனமுவந்து ஏற்றுக்கொண்டது போலவும்,

இயேசு பாடுகளையும் சிலுவை மரணத்தையும் ஏற்றுக் கொண்டது போலவும்

நாமும் நமது வாழ்வில் வரும் சிலுவைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இயேசு தனது சிலுவை மரணத்தால் மாட்சி அமைந்தது போல 

நாமும் நமது சிலுவைகளை மனம் உவந்து சுமப்பதன் மூலம் மகிமை பெறுவோம்.

புனித வெள்ளிக்குப் பிறகுதான் உயிர்த்த ஞாயிறு,

இயேசுவுக்கு என்ன நேர்ந்ததோ அதுவே அவரது காணிக்கை பொருட்களாகிய நமக்கும் நடக்கும்.

அவர் மரித்த மூன்றாவது நாள் உயிர்த்து மகிமை அடைந்தார்.

அவருக்காக மரிக்கும் அனைவருக்கும் உயிர்ப்பின் மகிமை கிடைக்கும்.

லூர்து செல்வம்.

Thursday, January 30, 2025

சனி1"அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?" என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். (மாற்கு நற்செய்தி 4:38)

சனி1

"அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?" என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். 
(மாற்கு நற்செய்தி 4:38)

நாம் இயேசுவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் இயேசு சர்வ வல்லமை உள்ள கடவுள் என்ற நினைவு அடி மனதில் இருக்க வேண்டும்.

இவ்வுலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அவருக்கு நித்திய காலமாகத் தெரியும்.

அன்று சீடர்களோடு படகில் பயணிக்கப் போவது அவருக்கு நித்திய காலமாகத் தெரியும்.

அப்போது வீசிய புயலைப் பற்றி?

அவரின்றி அணுவும் அசையாது.

அப்போது புயல் வீச வேண்டும், தான் அப்போது நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்ற 
திட்டத்தையும் நித்திய காலமாகப் போட்டவர் அவர் தான்.

எதற்காக அந்தத் திட்டம்?

தனது சீடர்களுக்குப் பாடம் கற்பிப்பதற்காக ஒரு சூழ்நிலையை உருவாக்கத்தான்.

ஆசிரியர் பாடம் நடத்த வகுப்புக்குள் போகு முன்பே பாடத் திட்டத்தை வகுத்து விடுவார்.

எந்த சூழ் நிலையில் பாடம் கற்றுக் கொடுத்தால் மாணவர்களுக்குப் புரியும் என்பதை உணர்ந்து,

அந்த சூழ் நிலையை உருவாக்கி பாடம் கற்பிப்பார்.

இயேசு ஒரு நல்லாசிரியர்.

நம்பிக்கை என்னும் பாடத்தை அவருடைய மாணவர்களாகிய சீடர்களுக்குப் போதிப்பதற்காக அவர் வகுத்த நித்திய காலத் திட்டம் தான் புயலும், தூக்கமும்.

சீடர்கள் சரியான பயந்தாங்கொள்ளிகள் என்று அவருக்குத் தெரியும்.

அவர்களது பயத்தைப் போக்கவும், நம்பிக்கையை ஏற்படுத்தவுமே இந்தத் திட்டம்.

அவர் திட்டப்படி புயல் வீசியது, அவர் தூங்கிக் கொண்டிருந்தார்.

சீடர்களும் கத்தினார்கள்,

"போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?"

அவர் எழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, "இரையாதே, அமைதியாயிரு" என்றார். 

காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று. 

பின் அவர் அவர்களை நோக்கி, "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டார். 

அவர்கள் பேரச்சம் கொண்டு, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ!" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.

சீடர்களின் விசுவாசக் 
குறைவைப் பாருங்கள்.

இயேசு மெசியா என்பதை ஏற்றுக் கொண்டு தான் அவரைப் பின்பற்றினார்கள்.

ஆனால் அவர் செய்த புதுமையைப் பார்த்து,

"காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ!" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்!

அவரைப் பின்பற்றியபோது விசுவாசத்தின் அடிப்படி நிலையில் தான் இருந்திருக்கிறார்கள்.

அவர்களை படிப் படியாக ஏற்றி உச்சப் படிக்குக் கொண்டு வரவேண்டும்.

அதற்கான பயிற்சி வகுப்புகளைத் தான் பொதுவாழ்வின் போது இயேசு நடத்தினார்.

அந்த வகுப்புகளில் கடல் புயலில் பயணமும் ஒன்று.

இந்தப் பயிற்சி அன்றைய சீடர்களுக்கு மட்டுமல்ல, இன்று அவரைப் பின்பற்றும் நமக்கும் சேர்த்து தான்.

நமது வாழ்க்கை அனுபவங்களைச் சிறிது சிந்தித்துப் பார்த்தால் இது புரியும்.

ஒவ்வொரு முறையும் விசுவாசப் பிரமாணம் சொல்லும் போதும் கடவுள் எல்லாம் வல்ல சர்வ வல்லவர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் நடை முறையில்?

சர்வ வல்லபக் கடவுளை நமது தந்தை என்று ஏற்றுக் கொள்ளும் நாம் வாழ்க்கையில் தந்தை நம்ப வேண்டிய அளவுக்கு நம்புகிறோமா?

தந்தையின் தோளில் அமர்ந்து பயணிக்கும் குழந்தை வழியில் எதிர்ப்படும் நாயைப் பார்த்துப் பயப்படுமா?

ஆனால் நாம் பயப்படுகிறோமே!

நாம் பயத்திலிருந்து விடுபட வேண்டுமானால் தந்தையோடு நெருக்கமாக இருக்க வேண்டும்.

ஆனால் வாயால் தந்தையே என்று சொன்னாலும்  மனமார அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

நம்மை ஏற்றுக் கொள்ள வைப்பதற்காக நமக்கு நோய் நொடிகள் போன்ற துன்பங்களை அனுமதித்து விட்டு அவர் தூங்குவது போல் நடிக்கிறார்.

அவர் தூங்குவது போல் நடிப்பது நாம் அவரைத் தட்டி எழுப்ப வேண்டும் என்பதற்காகத்தான்.

தாங்க முடியாத துன்பம் வரும் போது தான் நாம் வேறு வழியில்லாமல் "விண்ணகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே" என்று உண்மையான பக்தியுடன் கூப்பிட ஆரம்பிக்கிறோம்.

நமது விசுவாசத்தை அதிகப் படுத்தும்படி வேண்ட ஆரம்பிக்கிறோம்.

செப நேரத்தை அதிகரிக்கிறோம்.

செபம் அதிகமாக அதிகமாக விசுவாசம் அதிகரிக்கிறது.  

விசுவாசம் உறுதிப்பட்டவுடன் துன்பமும் நீங்குகிறது.

துன்ப வேளையில் இறைவனை நெருங்க வேண்டும் என்ற பாடத்தை அனுபவம் மூலம் கற்கிறோம்.

துன்ப அனுபவங்களின் போது நமது விசுவாசமும் அதிகரிக்கிறது.

விசுவாசம் அதிகரிக்க அதிகரிக்க பாவங்கள் குறையும், புண்ணியங்கள் அதிகமாகும்.

நமது மீட்பும் உறுதியாகும்.

ஆண்டவர் புயலை அனுமதித்து விட்டுத் தூங்குவது நாம் அவரை எழுப்ப வேண்டும் என்பதற்காகத்தான்.

புத்தகம் மூலம் கற்கும் கல்வியை விட அனுபவம் மூலம் கற்கும் கல்வி வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

நாம் துன்ப அனுபவங்கள் மூலம் பெறும் விசுவாசம் நமது ஆன்மீக மீட்புக்கு உதவிகரமாக இருக்கும்.

நமது வாழ்க்கையை முற்றிலும் இறைவன் கையில் ஒப்படைத்து விடுவாேம்.

இறைவன் கையில் இருக்கும் போது நாம் எதற்கும் பயப்படத் தேவையில்லை.

"சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்."
(லூக்கா நற்செய்தி 12:32)

லூர்து செல்வம்.

Wednesday, January 29, 2025

வெள்ளி31"அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார்."(மாற்கு நற்செய்தி 4:33)

வெள்ளி31


"அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார்."
(மாற்கு நற்செய்தி 4:33)

ஆண்டவர் விண்ணெய்து முன்பு சீடர்களிடம் கூறியது,

உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்,

விசுவசித்து, திருமுழுக்கு பெறுபவர்கள் மீட்புப் பெறுவார்கள்.

நற்செய்தி அறிவிப்பதன் நோக்கம்?

விசுவாசம்.
திருமுழுக்கு.

திருமுழுத்தின் நோக்கம்?
பாவ மன்னிப்பு.

பாவ மன்னிப்பின் நோக்கம்?
பாவமில்லாமல் வாழ்வது.

பாவமில்லாமல் வாழ்வதன் நோக்கம்?
மீட்பு.

இரத்தின சுருக்கமாக,


நற்செய்தி அறிவிப்பதன் நோக்கம்?

பாவமின்றி வாழ்ந்து மீட்புப் பெறுதல்.

நற்செய்தியை அறிவதனால் மட்டும் ஒருவன் மீட்புப் பெற முடியாது.

சாப்பிட்டால் பசி நீங்கி விடும் என்று அறிந்தால் பசி நீங்கி விடுமா?

சாப்பிட்டால் தான் நீங்கும்.

பைபிளை வாசிப்பதனால் மட்டும் ஒருவன் மீட்பு பெற முடியாது.

கணிதத் தேர்வில் நூற்றுக்கு நூறு எடுப்பது போல ஒருவன் பைபிள் தேர்வில் நூற்றுக்கு நூறு எடுத்தால்.

அதனால் மட்டும் அவனால் மீட்புப் பெற முடியாது.

அதாவது பைபிளைப் பற்றிய அறிவு நமக்கு மீட்பைப் பெற்றுத் தராது.

அதன்படி வாழ்வதுதான் மீட்பைப் பெற்றுத் தரும்.

ஆனால் எழுத வாசிக்கத் தெரியாத ஒருவன் பைபிளை வாசிக்கா விட்டாலும்

பாவம் இல்லாமல் வாழ்ந்தால் உறுதியாக மீட்பு பெறுவான்.

நற்செய்தி அறிவு மிகுந்தவன் பாவத்தோடு வாழ்ந்தால் மீட்புப் பெற முடியாது.

ஆக மீட்பு பெறுவதற்கு அத்தியாவசியத் தேவை பாவம் இல்லாமல் வாழ்வது மட்டும்தான்.

இயேசு சாதாரண படிப்பறிவு இல்லாத மக்களுக்குப் போதிக்கும் போது கதைகள் மூலம் போதித்தார்.

கதைகள் அறிவுக்குத் தீனி போடாது. ஆனால் பாவம் இல்லாத வாழ்க்கைக்கு வழி  காட்டும்.

ஆகவேதான்  தத்துவங்களை அறிய முடியாத பாமர மக்களுக்கு இயேசு கதைகள் மூலமாகப் போதித்தார்.

அறிவை விட பாவமற்ற வாழ்க்கை தான் முக்கியம்.

மக்களின் திறமைக்கு ஏற்ப அவர்களுக்குப் புரிகிற அளவுக்கு அவர்களுக்கு கதைகள் மூலம் போதித்தார்.

அவர்கள் நல்லவர்களாக வாழ்ந்து மோட்சத்துக்குப்   போனால் போதும்.

நற்செய்தி அறிவிப்பதன் நோக்கம் மீட்புப் பெறுவதுதான், அறிவு பெறுவது அல்ல.

என்னுடைய அம்மா பள்ளிக்கூடம் பக்கத்திலேயே போனதில்லை.

எழுத வாசிக்கத் தெரியாது.

ஆகவே ஒரு நாளும் பைபிளை வார்த்ததில்லை.

அவர்களுக்கு பைபிள் பங்குச் சுவாமியாரின் ஞாயிற்றுக் கிழமை பிரசங்கம் தான்.

அவர்களுடைய வாழ்க்கையே செப வாழ்க்கைதான்.

செபம் என்றால் இறைவனோடு ஒன்றித்திருத்தல்.

அதற்கு மொழி தேவையில்லை.

உள்ளங்கள் ஒன்றித்து வாழ்வது தான் செபம்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு திருப்பலிக்கு முன் பாவ சங்கீர்த்தனம்.

வாரம் முழுவதும் பாவம் இல்லாமல் வாழ்வது.

பாவம் இல்லாமல் கடவுளையும், பிறரையும் நேசித்து வாழ்வது தான் ஆன்மீக வாழ்க்கை, ‌அதாவது மீட்பைப் பெற்றுத் தரும் வாழ்க்கை.

எழுத வாசிக்கத் தெரியாத, பைபிளே வாசிக்காத, செபத்தையே வாழ்வாக் கொண்ட ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர் தான் அருட்தந்தை G. மிக்கேல் பெர்க்மான்ஸ் சே.ச. அடிகளார்.

தன் வாழ்வை சர்வ சமய ஐக்கியப் பணிக்காக அர்ப்பணித்தவர்.

இயேசு நம்மிடம் எதிர் பார்ப்பது அறிவை அல்ல, ஞானத்தை.

ஆனாலும நற்செய்தியை அறிவிப்பவர்களுக்கு அதைப் பற்றிய ஆழமான அறிவு தேவை.

ஆகவேதான் இயேசு பாமர மக்களுக்கு கதைகள் மூலம் போதித்த பிறகு அந்த கதைகளில் உள்ள ஆழமான கருத்தை தன்னுடைய சீடர்களுக்கு 
அவர்கள் தனியாக இருக்கும் போது விளக்கினார்.

ஏனெனில் அவர்கள் போதிக்க வேண்டியவர்கள்.

ஆகவேதான் நமது தாய் திருச்சபை குருக்களுக்கு 14 ஆண்டுகள் தத்துவ சாத்திரரும், தேவ சாத்திரமும் கற்பிக்கப்படுகிறது.

அவர்கள் ஆழமாகப் படிப்பது அப்படியே நம்மிடம் சொல்வதற்கு அல்ல.

யாருக்கு எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொல்வதற்கு.

இயேசு போதித்தது போல போதிப்பதற்கு.

யார் யாருக்கு எப்படிப் போதிக்க வேண்டுமோ அப்படிப் போதிப்பதற்கு அறிவை விட ஞானம் அதிகம் வேண்டும்.

இறை ஞானத்துக்கும் உலக அறிவுக்கும் சம்பந்தம் இல்லை.

இறை ஞானம் தெய்வ பயத்திலிருந்தும், இறை அன்பிலிருந்தும் பிறக்கிறது.

அப்படியானால் பைபிள் அறிவுக்கும், இறை ஞானத்துக்கும் சம்பந்தம் இல்லையா?

இருக்கிறது.

வாழ்வாக மாறும் பைபிள் அறிவிலிருந்து ஞானம் பிறக்கும்.

தெய்வ பயமும், இறையன்பும் உள்ளவர்கள் தான் பைபிள் அறிவை வாழ்வாக்குவார்கள்.

பயமும் பக்தியும் இல்லாதவர்களுக்கு பைபிள் அறிவினால் எந்த ஆன்மீகப் பயணம் இல்லை.

பைபிள் அறிவு இல்லாவிட்டாலும் பயமும் பக்தியும் உள்ளவர்கள் மீட்பு பெறுவது உறுதி.

பாமக மக்களின் நோய்களை குணமாக்கிய போது இயேசு,

"உனது விசுவாசம் உன்னைக் குணமாகிற்று" என்றுதான் சொன்னார்.

கடவுள் எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக படைக்கவில்லை.

எல்லோருக்கும் ஒரே மாதிரியான திறமைகளை கொடுக்கவில்லை.

தாலந்து உவமையில் பத்து தாலந்துகள் பெற்றவர்களும் இருந்தார்கள்,

 ஐந்து தாலந்துகள் பெற்றவர்களும் இருந்தார்கள்,

 ஒரு தாலந்து பெற்றவனும் இருந்தான்.

 அவரவருக்குக் கொடுத்ததை அவரவர்கள் பயன்படுத்த வேண்டும்.

அதிகம் பெற்றவர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படும்.

குறைவாக பெற்றவர்களிடமிருந்து குறைவாக  எதிர்பார்க்கப்படும்.

பாமர மக்களாக இருந்தாலும் சரி,
படிப்பறிவு பெற்ற ஞானிகளாக 
இருந்தாலும் சரி

அவரவர் தகுதிக்கு ஏற்ப விசுவாச வாழ்வு வாழ வேண்டும்.

இயேசு சாதாரண மக்களுக்கு கதைகள் மூலமே போதித்தார்.

சீடர்களுக்கு ஆழமான அறிவைக் கொடுத்தார்.

இரு வகையினருக்கும் அத்தியாவசியமானது விசுவாசம்.

விசுவாசம் உள்ளவர்கள் தங்களிடம் இருப்பதை இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்வார்கள்.

உலக வாழ்க்கையில் ஏழைகளை விட செல்வந்தர்கள் அதிக மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள் என்று நினைக்கிறோம்.

ஆனால் உண்மை அது அல்ல.

ஏழைகளைப் பொருத்தமட்டில் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இருப்பிடமும் குறைந்த அளவு இருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
அவர்களுக்கு தேவைகள் அதிகம் இருக்காது.

ஆனால் அளவுக்கு மீறிய செல்வம் உடையவர்களுக்கு அதை ஈட்டவும் காக்கவும் அவர்கள் படுகிற சங்கடங்கள் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

தேவைகளும் பொறுப்புகளும் அதிகமாக அதிகமாக கவலைகள் தான் அதிகமாகும்.

ஒரு ஏழை எங்கு வேண்டுமானாலும் நிம்மதியாகத் தூங்குவான். அவரிடம் திருடப்படுவதற்கு எதுவும் இருக்காது.

ஆன்மீக வாழ்விலும் இறைவனைப் பற்றி அதிகமாக அறிந்தவர்களுக்கு குறைவாக அறிந்தவர்களை விட பொறுப்புக்கள் அதிகம்.

சாதாரண மக்களாகிய நாம் கீழ்ப்படிந்து வாழ்ந்தாலே போதும்.

குருக்கள் அவர்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு கீழ்ப்படியவும் வேண்டும், நம்மை வழி நடத்தவும் வேண்டும்.

ஆகவே நம்மை விட அவர்களுக்கு பொறுப்புகள் அதிகம்.

நம்மிடம் இருப்பதை வைத்து பெரியவர்களுக்குக் கீழ் படிந்து வாழ்ந்தாலே நமக்கு மீட்பு உறுதி.

நமக்காகத்தான் இயேசு அனேக கதைகளைக் கூறியிருக்கிறார்.

கதைகளின் கருத்துப்படி நடந்தாலே போதும், நாம் விண்ணகம் செல்வது உறுதி.

லூர்து செல்வம்.

Tuesday, January 28, 2025

வியாழன்30"இயேசு அவர்களிடம், "விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின் மீது வைப்பதற்காக அல்லவா?"(மாற்கு நற்செய்தி 4:21)

வியாழன்30

"இயேசு அவர்களிடம், "விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின் மீது வைப்பதற்காக அல்லவா?"
(மாற்கு நற்செய்தி 4:21)

தாத்தா ஒருவர் கைக்கு அடக்கமான சிறிய Size torch light ஒன்று வாங்கி பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த பத்து வயது பேரன்,  

"எனக்கும் இதே மாதிரி ஒண்ணு வேணும்"  என்று கேட்டான்.

தாத்தா அதே போன்ற ஒரு torch light வாங்கி பேரனிடம் கொடுத்து,

"பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

"சரி, தாத்தா" என்று கூறி கொடுத்ததை வாங்கிக் கொண்டான்.

மறுநாள்,

"தாத்தா, நீங்க வாங்கித் தந்த torch light அடிக்க மாட்டேங்குது" என்றான்.

" அதைக் கொண்டு வா" என்று கேட்டு வாங்கியவர் அதிர்ச்சி அடைந்தார்.

"எங்கே வைத்திருந்த?"

"பத்திரமா Fridgeகு உள்ளே வைத்திருந்தேன்."

"அட மடையா, யாராவது torch lightஅ Fridgeகுள்ள வைப்பாங்களா? இது இனி ஆகாது. குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும்."

"அம்மா பத்திரமா வைக்க 
வேண்டியதை எல்லாம் fridge க்கு உள்ளதான் வைக்கிறார்கள். எதுவும் கெடுவதில்லை. நான் வைத்தா மட்டும் கெட்டு விடுமா? நீங்க வாங்கியது தான் சரியில்லை."

எததை எங்கே வைக்க வேண்டுமோ அததை அங்கே வைக்க வேண்டும்.

விளக்கை ஏற்றி பத்திரமாக மரக்காலுக்குள்ள வைத்தா அது நமக்கு ஒளி தராது.

ஒளி எதற்காக?

பார்க்க வேண்டிய பொருட்களைப் பார்க்க.

ஒளி இல்லாத இடம் இருட்டாக இருக்கும். இருட்டாக இருக்கும் இடத்திலுள்ள எந்த பொருளையும் பார்க்க முடியாது.

இயேசு ''நானே உலகின் ஒளி" என்கிறார்.

அவர் நம்மிடம் இல்லாவிட்டால் நமது ஆன்மீக வாழ்வுக்கு வேண்டிய எதுவும் தெரியாது.

இயேசுவின் ஒளியில் தான் நாம் விண்ணக பாதையில் நடக்க முடியும்.

இயேசு நம்மைப் பார்த்து,

"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்." என்கிறார்.

 ஒளி தன்னைத் தானே மறைக்க முடியாது. தான் படும் பொருட்களையும் மறைக்க முடியாது.

நாம் சுயமாக ஒளியாய் இல்லை.

சூரிய ஒளி பட்டு நிலா இரவில் ஒளி தருவது போல,

இயேசுவாகிய ஒளி பட்டு நாம் வெளிச்சம் தர வேண்டும்.

இயேசுவாகிய ஒளி பட்டு நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இயேசுவைப் பிரதிபலிக்கும்.

நாம் செய்யும் நல்ல செயல்களை நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் பார்க்கும்போது நம்மில் இயேசு செயல் புரிவதைப் பார்ப்பார்கள்.

நமது செயல்களின் நன்மை கருதி அவர்களும் நம்மைப் போல் செயல் புரிவார்கள்.

நாம் விசுவசிக்கும் இயேசுவை அவர்களும் விசுவசிப்பார்கள்.

நம்மைப் போல் அவர்களும் மீட்படைவார்கள்.

மீட்புப் பணியில் நாம் இயேசுவின் சீடர்களாக செயல் புரிவோம்.

வியாதி இருக்கும் இடத்தில் தான் மருந்துக்கு வேலை.

அறியாமை இருக்கும் இடத்தில் தான் ஆசிரியருக்கு வேலை.

பசி இருக்கும் இடத்தில் தான் உணவுக்கு வேலை.

இருள் இருக்கும் இடத்தில் தான் ஒளிக்கு வேலை.

மருந்து வந்தவுடன் நோய் பறந்து விடும்.

ஆசிரியர் வந்தவுடன் அறியாமை பறந்து விடும்.

உணவு வந்தவுடன் பசி பறந்து விடும்.

ஒளி வந்தவுடன் இருள் பறந்து விடும்.

எங்கே கிறிஸ்துவை அறியாதவர்கள் இருக்கிறார்களோ அங்கு 
 கிறிஸ்தவனுக்கு வேலை.

நமது நட்பு வட்டத்துக்குள் சிறிஸ்தவர்கள் அல்லாதவர்களைக் கொண்டு வர வேண்டும்.

தோமையார், சவேரியார், அருளானந்தர் போன்ற வேத போதகர்கள்  சிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் மத்தியில் தான் உழைத்தார்கள்.

நாம் வாழும் இடங்களில் பெரும்பாலோர் இயேசுவை அறியாதவர்கள் தான்.

அவர்கள் மத்தியில் இயேசுவின் ஒளியாய் வாழ்வோம்.

நமது விசுவாச ஒளி அவர்கள் மீது பிரகாசிக் கட்டும்.

லூர்து செல்வம்.

Monday, January 27, 2025

புதன்29"ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன."(மாற்கு நற்செய்தி 4:8)

புதன்29

"ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன."
(மாற்கு நற்செய்தி 4:8)

உணவின் பயன் உண்பவரைப்
பொறுத்து மாறும்.

அளவோடு உண்பவன் நோய் நொடி இல்லாமல் வாழ்வாள்.
அதே உணவை அளவுக்கு மீறி உண்பவன் வயிற்று வலியால் அவதிப் படுவான்.

பாடப் புத்தகத்தின் பயன் மாணவர்களைப் பொறுத்து. மாறும்.

வாசிப்பவனை விட படிப்பவன் அதிக மதிப்பெண் பெறுவான்.

உப்பின் பயனும் அளவைப் பொறுத்து மாறும்.

அளவோடு போட்டால் உணவு ருசியாக இருக்கும்.
அளவுக்கு மீறி போட்டால் உணவை உண்ண முடியாது.

விதையின் பயன் நிலத்தைப் பொறுத்து மாறும்.

நல்ல நிலத்தில் விழுந்த விதை முளைத்து, தளிர்த்து, வளர்ந்து, மரமாகிப் பூத்து, காய்த்துப் பழுத்து பலன் தரும்.

மோசமான நிலத்தில் விழுந்த விதை முளைப்பதோடு சரி, அதோடு அதன் ஆயுள் out! 

இப்போது எதற்கு இந்தக் கதையெல்லாம்?

இறைவன் அளவற்ற வல்லவர்,
இறைவாக்கும் அளவற்ற வல்லமை உடையது.

வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்."
(லூக்கா நற்செய்தி 1:35)

இது அன்னை மரியாளுக்குக் கொடுக்கப்பட்ட இறைவாக்கு.

அவள் அதை 

 "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று கூறி ஏற்றுக் கொண்டார்.
(லூக்கா நற்செய்தி 1:38)

இறைவாக்காகிய விதை மரியாள் என்ற நல்ல நிலத்தில விழுந்தது.

மனுக் குலத்தின் மீட்பாகிய பலனைத் தந்தது.

இயேசு " என் பின்னாலே வாருங்கள்" என்று அழைக்க சீமோனையும் அழைத்தார்.

இவ்வாறு தான் பன்னிரு சீடர்களையும், யூதாஸ் உட்பட, அழைத்திருப்பார்.

ஆனால் யூதாஸ் அவர் அழைத்ததன் பலனைத் தரவில்லை.

நிலம் சரியில்லை.

இயேசு நசரேத்தூர் சென்று செபக்கூடத்தில் இறைவாக்கினர் எசாயாவின் சுருளேட்டிலிருந்து
வாசித்து விட்டு மக்களை  நோக்கி, 

"நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" என்றார். 

விளைவு என்ன?

கேட்டுக் கொண்டிருந்தவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். 

காரணம், கேட்டவர்களுடைய மனமாகிய நிலம் சரியில்லை.


மூன்று ஆண்டுகளும் இயேசு மக்களிடையே நற்செய்தி என்னும் விதையை விதைத்தார்.

சாதாரண மக்கள், நோயாளிகள் அவரை மெசியா என்று ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் பரிசேயர்களும், மறை நூல் அறிஞர்களும் எதிர் விளைவைத் தந்தார்கள்.

விதைத்தவரையே கொன்று போட்டார்கள்.

ஆனாலும் தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க வல்ல இயேசு அவர்கள் செய்த தீமையிலிருந்து உலக மீட்பு என்னும் நன்மையை வரவழைத்தார்.

ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் போதெல்லாம் குருவானவர் பிரசங்க வேளையில் நமக்குள் நற்செய்தி விதையை விதைக்கிறார்.

நாம் வீட்டில் பைபிள் வாசிக்கும் போதும் நமக்குள் நற்செய்தி விதை விதைக்கப் படுகிறது.

நாம் எப்படிப் பலன் தருகிறோம்?

சிந்தித்துப் பார்க்க அழைக்கப் படுகிறோம்.

நமக்குள்ளும் நற்செய்தி விதை விதைக்கப்படுகிறது.

ஒருமுறை மட்டும் அல்ல தினமும்.

நாம் வாசித்த, கேட்ட இறை வாக்குகளை எல்லாம் நாம் வாழ வேண்டும் என்பது தான் இயேசுவின் ஆசை.

நமக்கு எதிராக குற்றம் செய்தவர்களை எல்லாம் மன்னித்தால் அந்த வினாடியே இன்னொரு இயேசுவாக மாறிவிடுவோம்.

மன்னிக்கிறோமா?

மற்றவர்களுக்கு உதவி செய்யும் போதெல்லாம் அன்னை மரியாளாக மாறிவிடுவோம்.

உதவி செய்கிறோமா?

இயேசுவின் இடத்தில் இருந்து நம்மை வழி நடத்துபவர் நமது பங்குக் குரு. அவரது புத்திமதிக்கு எதிர்க் கேள்வி கேட்காமல் கீழ்ப்படிந்தால் நாம் சூசையப்பராக மாறி விடுவோம்.

கீழ்ப்படிகிறோமா?

ஏழ்மையை நமது தோழனாக ஏற்றுக் கொண்டால் பிரான்சிஸ் அசிசிகளாக மாறி விடுவோம்.

ஏழ்மையை ஏற்றுக் கொள்கிறோமா?

நாம் வணங்கும் புனிதர்களும் நம்மைப் போல குடும்பத்தில் பிறந்தவர்கள் தான். அவர்களின் மனம் நல்ல நிலம். அதனால்தான் அதில் விழுந்த இறைவாக்கு அவர்களைப் புனிதர்களாக மாற்றியது.

இயேசு ஆன்மீக சமாதானத்தை ஏற்படுத்தவே உலகில் பிறந்தார்.

அவர் பிறந்த அன்று வான தூதர்கள்,

"நல்ல மனதோர்க்குச் சமாதானம்" என்று பாடினர்.

நமது மனம் நல்லதாக இருந்தால் அதில் விழும் நற்செய்தி விதைகள் நம்மைப் புனிதர்களாக மாற்றும்.

கடவுள் நல்லவர். அவர் நினைவாகவே இருக்கும் மனது நல்ல மனது.

எப்போதும் கடவுளையே நினைத்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, January 26, 2025

செவ்வாய் 28தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, "இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. (மாற்கு நற்செய்தி 3:34)

செவ்வாய் 28

தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, "இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. 
(மாற்கு நற்செய்தி 3:34)

இயேசு போதித்துக் கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். 

 மக்கள் அவரிடம் "அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்" என்றார்கள்.

அவர் தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்த. சீடர்களைக் காண்பித்து 

"இதோ! என் தாயும் என் சகோதரர்களும்.

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார். 

இயேசு சொன்தைன் பொருளைப் புரிந்து கொள்ளாத நமது பிரிவினைச் சகோதரர்கள் அவரது வார்த்தைகளை அவர்களுக்குப் பிடிக்காத அன்னை மரியாளுக்கு எதிரான ஆயுதமாகப் பயன் படுத்துகிறார்கள்.

இயேசுவின் சகோதரர்கள் என்று கூறப்படுபவர்கள் அன்னை மரியாளின் தங்கை மக்கள்.

இயேசு தனது வார்த்தைகளால் தனது தாயைக் குறைத்து மதிப்பிடவில்லை.

இறைவனின் சித்தப்படி நடப்பவர்களும் தனது பெற்ற தாய்க்குச் சமமானவர்களே என்கிறார்.

மரியாளை ஏன் இயேசுவின் தாய் என்கிறோம்?

கபிரியேல் தூதர் இறைவனின் விருப்பத்தை மரியாளுக்குத் தெரிவித்த போது,

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது சொற்படியே எனக்கு ஆகட்டும்"  என்ற வார்த்தைகளால் இறைவனின் சித்தத்தை ஏற்றுக் கொண்டு, அதன்படியே இயேசுவைக் கருவுற்றுப் பெற்றெடுத்தாள்.

இறைவனின் சித்தப் படி நடந்ததால் தான் அவருக்குத் தாயானாள்.

அதைப் போல இறைவனின் சித்தத்தை ஏற்று, அதன் படி வாழ்பவர்கள் அனைவரும் அவரது தாய் போன்றவர்கள்தான்.

இறைவனின் சித்தப் படி நடப்பதின் மகிமையை விளக்கும் வகையில் அப்படிச் சொன்னாரே தவிர தன் தாயைக் குறைத்து மதிப்பிட அப்படிச் சொல்லவில்லை.

நாம் இயேசுவின் வார்த்தைகளிலிருந்து அவர் விரும்பும் பாடத்தைக் கற்றுக் கொளவோம்.

தாயைப் போல பிள்ளை என்பது தமிழ் மொழி.

நாம் அன்னை மரியை நமது அன்னையாக ஏற்றுக் கொள்கிறோம்.

அப்படியானால் நாம் அவளைப் போல நம்மை இறைவனின் அடிமைகளாக அர்ப்பணிக்க வேண்டும்.

அதாவது நமது விருப்பப்படி அன்று இறைவன் விருப்பப்படி மட்டுமே வாழ வேண்டும்.

அவரது விருப்பம் இயேசு அறிவித்த நற்செய்தியில் அடங்கியிருக்கிறது.

நற்செய்தியின்படி இறைவனையும் பிறரையும் நேசித்து, 
நமக்கு எதிராகக் குற்றம் செய்வர்களை மன்னித்து, அவர்களுக்கு நன்மை செய்து,
நம்மிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு வாழ்ந்தால்

நாம் இயேசுவின் தாய்க்குச் சமமானவர்கள்,

இயேசுவைப் போல நாமும் இறைத் தந்தையின் பிள்ளைகள்,

இயேசுவின் சகோதரர்கள்,

நித்திய பேரின்ப வாழ்வுக்கு ஏற்றவர்கள்.

இயேசு என்று சொன்னவுடனே நமது ஞாபகத்துக்கு வருவது,

ஒரு சிலுவை..

அதில் மூன்று ஆணிகளால் அறையப்பட்டு தொங்குபவர்,

உடல் முழுவதும் இரத்தம் வடிந்த வண்ணம் இருக்கும் காயங்கள்,

ஆடை இல்லை,

விலாவில் ஈட்டியால் குத்தப்பட்டு இரத்தமும், தண்ணீரும் வடியும் காயம்.

தலையில் முள்முடி.

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு நிற்கும் அன்னை மரியாள் .

விண்ணகத் தந்தையின் விருப்பப்படி வாழ்ந்த இயேசு,  அப்படியே வாழ்ந்த அன்னை மரியாள்,

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றிய மகனும், தாயும்.


கடவுளின் திருவுளப்படி வாழ்வது ரோஜாப்பூ மெத்தை அல்ல,

கல்லும, முள்ளும் நிறைந்த பாதை.

நாமும் மரியாளைப் சிலுவைப் பாதையில் நடந்தால் தான் அவளுடைய பிள்ளைகள்.

குழந்தையின் முகத்தைப் பார்க்க வேண்டுமென்றால் தாய் பிரசவ வேதனையை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

விண்ணகப் பேரின்ப வாழ்வுக்குள் நுழைய வேண்டுமென்றால் சிலுவைப் பாதையில் நடந்து தான் ஆக வேண்டும்.

இதுதான் விண்ணகத் தந்தையின் திருவுளம்.

லூர்து செல்வம்.

Saturday, January 25, 2025

திங்கள் 27. மண்ணால் ஆன பூமி என்ன தனிமங்களால் (elements ) ஆனதோ அதே தனிமங்களால் ஆனதுதான் நமது உடல்.

திங்கள் 27.

 மண்ணால் ஆன பூமி என்ன தனிமங்களால் (elements ) ஆனதோ அதே தனிமங்களால் ஆனதுதான் நமது உடல்.

1. ஆக்சிஜன் (O)*: 65% 
2. கார்பன் (C)*: 18% 
3. ஹைட்ரஜன் (H)*: 10% 
4. நைட்ரஜன் (N)*: 3% 
5.  கால்சியம் (Ca)*: 1.5% 
6. பாஸ்பரஸ் (P)*: 1% o
7.  பொட்டாசியம் (K)*: 0.4%  
8. சல்பர் (S)*: 0.3% 
9. சோடியம் (Na)*: 0.2% 
10. மக்னீசியம் (Mg)*: 0.1% 
11. இரும்பு.
12.துத்தநாகம்.
13. செம்பு.

நமது உடல் சடப்பொருளால் (Matter) ஆனது. துவக்கமும், முடிவும் உள்ளது.

ஆனால் நமது ஆன்மா கடவுளைப் போல ஆவி. (Spirit)

கடவுளுக்குத் துவக்கமும், முடிவும் இல்லை.

நமது ஆன்மா படைக்கப் பட்டது,
ஆகவே, துவக்கம் உள்ளது, ஆனால், முடிவில்லாதது.

 நமது உடல் நூறு சதவீதம் பூமியைச் சேர்ந்தது, அதாவது, மண்ணால் ஆனது.

ஒரு நாள் பூமி அழியும், அப்போது நமது உடலும் அழிந்து விடும்.

இப்போது நமது உடலை இயக்கிக் கொண்டிருப்பது நமது ஆன்மா.

ஒரு நாள் நமது ஆன்மா நமது உடலை விட்டுப் பிரியும்.

ஆன்மா பிரிந்தவுடன் நமது உடல் அதன் அதன் பெயரை இழந்து, பிணம் ஆகிவிடும்.

ஆட்டத்தை இழந்து, அடங்கி மண்ணுக்குள் போய்விடும்.

ஆன்மா அதனைப் படைத்தவரிடம் சென்று விடும்.

படைத்தவரோடு ஒன்றித்து நித்திய காலம் பேரின்ப வாழ்வு வாழ்வதற்காகப் படைக்கப் பட்டது நமது ஆன்மா.

அது நித்திய காலம் இறைவனோடு பேரின்பத்தில் வாழ வேண்டுமென்றால் அது பூமியில் இறைவனுக்காக மட்டும் வாழ்ந்திருக்க வேண்டும்.

அதாவது, உடலும், ஆன்மாவும் சேர்ந்த நாம் உலகில் கடவுளுக்காக மட்டும் வாழ்ந்தால் தான் நமது ஆன்மா அவரோடு ஒன்றித்து நித்திய பேரின்ப வாழ்வு வாழும்.

இறைவனுக்காக மட்டும் வாழ்வது என்றால் என்ன?

நாம் மூச்சு விடுவதில் ஆரம்பித்து என்ன செய்தாலும் இறைவனுக்காக செய்வது தான் இறைவனுக்காக மட்டும் வாழ்வது.

மண்ணால் ஆன நமது உடலைப் பேணுவதும் இறைவனுக்காக மட்டும் தான்.

இறையன்பிலும், பிறரன்பிலும் வளர்வதும் இறைவனுக்காக மட்டும் தான்.

நாம் என்ன செய்தாலும் 
செய்யுமுன்னும், செய்யும்போதும், செய்த பின்பும்

"எல்லாம் இறைவனுக்காக" என்ற மன நிலையில் இருக்க வேண்டும்.

இறைவனுக்காக வாழ்ந்து, இறைவனுக்காக மரித்தால் நமது ஆன்மா இறைவனிடம் சென்று விடும்.

உலக இறுதியில் நாம் உயிர்க்கும் போது நமது ஆன்மா ஒரு ஆன்மீக உடலோடு(Spiritual body) இணையும்.

ஆன்மீக உடலுக்கு இப்போது நமது சடப்பொருளாலான எதுவும் தேவைப் படாது.

ஆன்மீக உடல் இடத்துக்கும், நேரத்துக்கும் அப்பாற்பட்டது.

அது வாழ இடம் தேவை இல்லை.
அது முடிவில்லாமல் வாழும்.

நமது ஆண்டவரைப் போலவும், அன்னை மரியாளைப் போலவும் நாம் ஆன்ம, சரீரத்தோடு வாழ்வோம்.

நித்திய காலமும் நாம் ஆண்டவரைப் போலவும், அன்னை மரியாளைப் போலவும் வாழ வேண்டுமென்றால், இவ்வுலகிலும் நாம் அவர்களைப் போல வாழ வேண்டும்.

வாழ்வோம், இன்றும், என்றும்.

லூர்து செல்வம் 

-

Friday, January 24, 2025

ஞாயிறு 26"உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்."(மாற்கு நற்செய்தி 16:15)(தொடர்ச்சி)

ஞாயிறு 26

"உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்."
(மாற்கு நற்செய்தி 16:15)

(தொடர்ச்சி)

"'பேரப்புள்ள, கேள்வியைத் திரும்பச் சொல்லு."

"அவரே ஏழை. மற்றவர்கள் கொடுத்ததைத்தான் சாப்பிட்டார். அவர் எப்படி மற்றவர்களுக்குக் கொடுத்துப் போதித்தார்?"

"' முதலில் ஏழை என்ற வார்த்தையை எடுத்துக் கொள்வோம்.

ஏழை என்றால் யார்?"

"எதுவும் இல்லாதவன்."

"'எதுவும் இல்லாதவர்களெல்லாம் ஏழைகள் அல்ல. கையில் ஒரு பைசா இருக்காது.

ஆனால் மனதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு ஆசைப் பட்டுக் கொண்டிருப்பான்.

அவன் எதுவும் இல்லாத செல்வந்தன்.

இயேசு ஏழை என்ற வார்த்தையை உலகப் பொருட்கள் மீது பற்றில்லாதவர் என்ற பொருளில் தான் பயன்படுத்துகிறார்.

ஒருவன் மாதம் ஐந்து லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறான் என்று வைத்துக்கொள்வோம்.

அவனுக்கு அவன் வாங்கும் சம்பளத்தின் மீது பற்று இருந்தால் அதை யாருக்கும் கொடுக்காமல் தனக்காக மட்டும் 
பயன்படுத்துவான்.

பற்று இல்லாதவன் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகவும் பயன்படுத்துவான்.

பற்று இல்லாதவன் என்ற 
பொருளில் தான் இயேசு ஏழை எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

இப்போ சொல்லு, இயேசு எந்த அர்த்தத்தில் ஏழை?'

"தாத்தா, இயேசு கடவுள். நாம் வாழும் பிரபஞ்சத்தைப் படைத்தவர் அவர்தான்.

அப்படியானால் நாம் வாழும் உலகமும் அதில் உள்ள அத்தனை பொருட்களுக்கும் உரிமையாளர் அவர்தான்.

ஆனால் அவர் அவற்றை தான் பயன்படுத்துவதற்காகப் படைக்கவில்லை.

அவரால் படைக்கப்பட்ட நாம் பயன்படுத்துவதற்காக அவற்றை படைத்தார்.

நாம் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் அவர் உலகப் பற்றற்ற  ஏழை.

நம் மீது அவர் கொண்டுள்ள அளவு கடந்த அன்பின் காரணமாகத் தனக்கு உரியதை நாம் பயன்படுத்த நமக்கு தந்திருக்கிறார்."

'"இப்போ சொல்லு, இயேசு கொடுத்தாரா?"

"கொடுத்தார், கொடுக்கிறார், கொடுப்பார்.

அவர் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமல்ல, அவருக்கு முன்னால் வாழ்ந்தவர்களுக்கும் 
உயிர் கொடுத்தவர் அவர், உணவு கொடுத்தவர் அவர், வாழ இருப்பிடம் கொடுத்தவர் அவர்.

இன்றும் நமக்கும் கொடுத்துக் கொண்டிருப்பவர் அவர் தான்.

அவர் நம்மைப் பார்த்து "கொடுங்கள்" என்று சொல்லும் போது அவர் நமக்கு கொடுத்ததைத் தான் மற்றவர்களுக்குக் கொடுக்கச் சொல்கிறார்.

அவர் சென்ற இடம் எல்லாம் மக்களுக்கு நற்செய்தியைக் கொடுத்தார்,

நோயாளிகளுக்கு சுகம் கொடுத்தார்,

பாவிகளுக்கு மன்னிப்புக் கொடுத்தார்,

இவ்வுலக வாழ்வின் இறுதியில் சிலுவையில் தொங்கிய போது நமது பாவங்களுக்கு பரிகாரமாக தன் உயிரையே விண்ணகத்தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுத்தார்.

நித்திய காலமும் கொடுத்தே வாழ்கிறவர், மனிதனாகப் பிறந்தது கொடுப்பதற்காகத்தான்.

முக்கியமாக பாவ மன்னிப்பைக் கொடுத்து, அதன் விளைவாக மீட்பைக் கொடுப்பதற்காக."

"'திருக் குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருந்த போது தச்சு வேலை செய்து உழைத்து தான் சாப்பிட்டார்.

ஆனால் பொது வாழ்வின் போது அப்பங்களைப் பலுகச் செய்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு கொடுத்தார்.

இன்றும் நமக்கு அவரது உடலையும் இரத்தத்தையும் உணவாகத் தந்து கொண்டிருக்கிறார்.

அவர் தந்ததையும், தருவதையும், தரப்போவதையும் சொல்லிக் கொண்டே போனால் சொல்லி முடிக்க நமது வாழ்வு பற்றாது."

"இப்போ புரிகிறது, தாத்தா, இயேசு என்றாலே கொடுப்பவர் தான்.

அப்படியானால் அவரைப் பின் பற்றும் நாமும் கொடுப்பவர் களாகத்தானே வாழ வேண்டும்!"

"' ஆமா. முதலில் அனைவருக்கும் அன்பைக் கொடுப்போம்.

கட்டப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கொடுப்போம்.

உணவு இல்லாதவர்களுக்கு உணவு கொடுப்போம்.

உடை இல்லாதவர்களுக்கு உடை கொடுப்போம்.

நம்மிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வோம்."

"நம்மிடம் இல்லையென்றால்?"

"' இருக்கிற மற்றவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்வார்கள்.

எல்லாம் இருக்கிற கடவுள் மனிதனாகப் பிறந்த போது பிறக்கக் கூட இடம் இல்லாதவராய்த்தான் இருந்தார்.

யாருக்கோ சொந்தமான மாட்டுத் தொழுவம் கிடைத்தது. அங்கே பிறந்தார்.

அவர் இறந்த போது யோசேப்பு அரிமத்தியா தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார். 
(மத்தேயு நற்செய்தி 27:60)"

" ஆக இயேசு பிறக்கக் கிடைத்தது மற்றவர்களுடைய மாட்டுத் தொழுவம். 
அடக்கம் செய்யப்பட கிடைத்தது மற்ற ஒருவருக்காக வெட்டப்பட்ட கல்லறை."

"'இதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம்?"

"பகிர்ந்து வாழ்பவன் தான் உண்மையான கிறிஸ்தவன்."

லூர்து செல்வம்.

Thursday, January 23, 2025

சனி 25 "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்."(மாற்கு நற்செய்தி 16:15)

சனி 25

 "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்."
(மாற்கு நற்செய்தி 16:15)

"தாத்தா, இயேசு போதித்த முதல் நற்செய்தி எது?"

"நான் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லு. போதித்த என்றால் என்ன அர்த்தம்?"

"உங்க கேள்வி புரியல."

"'நற்செய்தியைப் போதியுங்கள் என்று ஆண்டவர் சொன்னார்.

என்ன பொருளில் சொன்னார்?"

"பறைசாற்றுங்கள் என்ற பொருளில் சொன்னார்."

"'நான் Synonym கேட்கல,  
meaning கேட்டேன்."

"என்ன தாத்தா, நீங்க கேட்கிறது புரியல. நீங்களே சொல்லிடுங்கள்."

"'மேடையில் ஏறி "இதச் செய்யுங்கள், அதச் செய்யுங்கள்" என்று சொல்வது அல்ல போதனை. 

இத சாத்தான் கூட நம்ம விட Superஆ செய்யும்.

சொல்வதை வாழ்ந்து காட்டுவது தான் போதனை.

 சிந்தித்து, பேசி, செயல்படுவதுதான் வாழ்க்கை.

சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நற்செய்தியை வாழ்ந்து காட்டுவதே உண்மையான போதனை. 

ஒரு ஆசிரியர் புத்தகத்தைப் பார்த்து இலக்கணம் நடத்தி விட்டு அவர் இலக்கணப் பிழைகளுடன் பேசினால் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?"

"ஆசிரியருக்குப் பாடம் நடத்தத் தெரியவில்லை என்று நினைப்பார்கள்."

"' பெற்றோர் வாழ்வதைப் பார்த்து தான் பிள்ளைகள் வாழ்வார்கள்.

பெற்றோர் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லாமல் வாழ்ந்தால் பிள்ளைகளும் அப்படியே வாழ்வார்கள்."

"தாத்தா, இப்போ புரிகிறது. நற்செய்தியைப் போதியுங்கள், அறிவியுங்கள், பறைசாற்றுங்கள் என்று சொன்னால்

சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் வாழ்ந்து காட்டுங்கள் என்பதுதான் பொருள்.

சீடர்கள் தூய ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கி வரும் முன் எப்படி இருந்திருந்தாலும் 

அவர் இறங்கி வந்தவுடன் முழுவதுமாக மாறிவிட்டார்கள்.

அதுவரை அவர்கள் விசுவாசத்தில் உறுதியாக இருக்கவில்லை. எதிரிகளுக்குப் பயந்தார்கள்.

ஆனால் ஆவியானவர் இறங்கியவுடன் அவர்களது விசுவாசம் உறுதிப்பட்டது. பயம் முற்றிலும் நீங்கியது.

யாருக்குப் பயந்து ஜான் மார்டின் வீட்டில் பதுங்கி இருந்தார்களோ அவர்கள் முன்னால் சென்று தைரியமாக போதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

பயமில்லாமல் மக்கள் முன் வந்ததே பெரிய போதனை.

போதிக்க ஆரம்பித்த முதல் நாளே

"அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப்பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்."
(திருத்தூதர் பணிகள் 2:41)

சீடர்களின் வாய் வார்த்தைகள் மட்டுமல்ல,

 அவர்களது உறுதியான விசுவாசமும் பயமில்லாமல் தைரியமாக பேசியதுமே 3000 பேரை மனம் திருப்பியது.

அதற்குப் பின் சீடர்கள் எந்த அளவுக்கு வாழ்ந்து, போதித்து, வேத சாட்சிகளாக மரித்தார்கள் என்பது நமக்குத் தெரியும்.

வேத சாட்சிகளின் ரத்தம் திருச்சபையின் வித்து என்று சொல்வார்கள்.

சீடர்கள் இயேசுவுக்காக சிந்திய ரத்தமே அவரை உலகெங்கும் அழைத்துச் சென்றது.

இயேசுவுக்காக மரித்ததின் மூலம் அவர்கள் நற்செய்தியை வாழ்ந்து காட்டினார்கள்.

நாமும் நற்செய்தியை போதிக்க வேண்டும்.

எப்படி போதிக்க வேண்டும்?"

"நாம் நற்செய்தியின் படி வாழ்ந்து மக்களை வாழவைக்க வேண்டும்.

நாம் ஒளியைக் காண்பிக்க அல்ல ஒளியாக வாழவே அழைக்கப்பட்டு இருக்கிறோம்.

இயேசு நம்மைப் பார்த்து நீங்கள் உலகின் ஒளி என்கிறார்.

நாம் பிரகாசிக்க வேண்டும்.

நமது ஒளியில் மக்கள் இயேசுவை காண வேண்டும்.

இயேசுவை காண்பித்து "அதோ ஒளி" என்று சொல்வதில் பயனில்லை.

இயேசு நம்மில் பிரதிபலிக்க வேண்டும்.

இயேசு உலகின் ஒளி. நாமும் அவரோடு ஒன்றித்து உலகின் ஒளியாக மாற வேண்டும்.

நம்மைப் பார்ப்பவர்களும் ஒளியாக மாறுவார்கள்.

புரிந்து கொண்டிருக்கிறேனா, தாத்தா?"

"'Very good. இயேசு எப்படி வாழ்ந்து போதித்தார் என்று சொல் பார்ப்போம்.''

"ஏழைகள் பாக்கியவான்கள் என்று சொல்வதற்கு முன்பே அவர் ஏழையாகப் பிறந்து ஏழையாக வாழ்ந்தார்.

பிறக்கக்கூட இடமில்லாமல் மாட்டுத் தொழுவில் பிறந்தார்.

பிறந்தவுடன் முதல் மூன்று வருடங்கள் வாழ இடம் இன்றி எகிப்தில் தனது பெற்றோருடன் நாடோடியாக வாழ்ந்தார்.

நாசரேத்தில் தச்சு வேலை செய்து கிடைத்த கூலியைக் கொண்டு திருக்குடும்பம் உயிர் வாழ்ந்தது.

பொது வாழ்வின் போது அவருக்கு தலை சாய்க்கக் கூட இடம் இல்லை.

ஏழையாக வாழ்ந்துதான் ஏழைகள் பாக்கியவான்கள் என்று போதித்தார்."

"தாத்தா, அவர் சுமந்த சிலுவை கூட அவருடையது அல்ல.

சிலுவையில் அறையப்படும்போது அவர் உடலில் ஆடைகள் இல்லை.

மரிக்கும்போது உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இருப்பிடமும் இல்லாத ஏழையாக இருந்தார்.

பிறந்த போது அன்னை மரியாள் அவரைத் துணிகளால் சுற்றி தீவனத் தொட்டியில் கிடத்தினாள்.

இறக்கும்போது அவள் கண் முன்னாலே எதிரிகள் அவரது ஆடைகளைக் களைந்து சிலுவையில் கிடத்தினார்கள்.

அந்த நேரம் பெற்ற மனம் என்ன பாடு பட்டிருக்கும்!

மரித்த பின் வேறு யாருக்கோ வெட்டப்பட்ட கல்லறையில் அவரை அடக்கம் செய்தார்கள்."

"' இவ்வாறுதான் தனது ஒவ்வொரு செய்தியையும் வாழ்ந்து அறிவித்தார்.

குழந்தையாக இருந்த போது அவரைக் கொல்லத் தேடிய ஏரோதுவை ஒன்றும் செய்யாமல் அவர் எகிப்துக்குப் போய் விட்டார்.

மூன்று ஆண்டுகளாக அவரைக் கொல்லத் திட்டமிட்டு இறுதியில் கொன்ற அவருடைய எதிரிகள் அனைவரையும் சிலுவையில் மரிக்கு முன் மன்னித்து விட்டார்.

"உங்களுக்குத் தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்'' என்ற நற்செய்தியையும் அவரே வாழ்ந்து காட்டினார்."

"' இப்படித்தான் தனது ஒவ்வொரு நற்செய்தியையும் அவரே வாழ்ந்தார்.

இயேசு சாதித்துப் போதித்தவர்.

அவர் மனிதர்களை எப்படிப் படைத்தார்?"

"தன் சாயலில் படைத்தார்."

"" சாயலில் என்றால்? அவர் ஆவி, உருவம் இல்லாதவர்.

மனிதருக்கு உருவம் இருக்கிறதே."

"நீங்களே சொல்லுங்கள்.'

"'சாயல் நமது ஆன்மாவில். அவர் நித்திய காலமாக அன்பு செய்து வாழ்கிறவர்.

நமது ஆன்மா ஆவி. நமது ஆன்மாவோடு தனது பண்பாகிய அன்பைப் பகிர்ந்து கொண்டார்.

அன்பு என்னும் பண்பில் நாம் அவர் சாயல்.

அவர் அன்பாய் வாழ்ந்து, நம்மையும் அன்பு செய்யச் சொன்னார்.

நித்திய காலமாக சாதித்ததைப் போதித்தார்."

"தாத்தா, இயேசு "கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும். " 
("லூக்கா நற்செய்தி 6:38")

என்று சொல்லியிருக்கிறார்.

அவரே ஏழை. மற்றவர்கள் கொடுத்ததைத்தான் சாப்பிட்டார். அவர் எப்படி கொடுத்துப் போதித்தார்?"
(தொடரும்)

லூர்து செல்வம்

Wednesday, January 22, 2025

வெள்ளி 24 "தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்."(மாற்கு நற்செய்தி 3:14)

வெள்ளி 24 

"தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்."
(மாற்கு நற்செய்தி 3:14)

இயேசு மனிதனாக வாழ்ந்த காலத்தில் நிறைய புதுமைகள் செய்தார்.

நோயாளிகளைக் குணமாக்கினார்,
இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தார்,
 அப்பங்ஙளைப் பலுகச் செய்து ஆயிரக்கணக்கான பேருக்கு உணவளித்தார்.

அவர் செய்த புதுமைகளில் மிகப் பெரிய புதுமை எது?

அவர் தேர்வு செய்த பன்னிரு சீடர்கள் தான் அவர் செய்த மிகப் பெரிய புதுமை.

அதில் என்ன புதுமை இருக்கிறது?

ஒரு அலுவலகத்தில் மிகச் சிறிய எழுத்தர் வேலை பார்ப்பதற்கு குறைந்த பட்சம் 12 வருடங்கள் பள்ளியில் படித்திருக்க வேண்டும்.

ஆனால் தனது நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச் சென்று, போதிப்பதோடு மக்களை நித்திய பேரின்ப வாழ்வுக்குத் தயாரிப்பதற்கு அவர் தேர்வு செய்த சீடர்கள் முறைப்படியான படிப்பறிவு இல்லாதவர்கள்.

வயிற்றுப் பிழைப்புக்காக வேலை செய்து கொண்டிருந்தவர்கள்.

குறைகள் பல நிறைந்தவர்கள்.

இராயப்பர் ஒரு பயந்தாங்கொள்ளி.

இயேசுவின் பாடுகளின் போது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இயேசுவை மூன்று முறை மறுதலித்தவவர்.

அனைவருமே பயந்தாங்கொள்ளிகள் தான். கெத்சமெனித் தோட்டத்தில் இயேசு கைது செய்யப்பட்ட போது அனைவரும் அவரை விட்டு ஓடி விட்டார்கள்.

ஒருவர் அவிழ்ந்து விழுந்த ஆடையைக் கூட எடுக்காமல் ஓடினார்.

அருளப்பரும் வியாகப்பரும் பதவி ஆசை பிடித்தவர்கள்.

சீமோன் தீவிரவாதிகள் குழுவைச் சேர்ந்தவர். அதாவது அரசியல் புரட்சி செய்து யூதர்களின் அரசியல் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்தவர்.

யூதாசும் அந்தக் குழுவைச் சேர்ந்தவர்தான். அதோடு பண ஆசை பிடித்தவர்.

சீடர்களை மூன்று ஆண்டுகள் தன்னுடனே வைத்திருந்து சுயமாகத் திருந்த கால அவகாசம் கொடுத்தார்.

ஆனால் சுயமாகத் திருந்தவில்லை.

அவர் சிலுவையில் அறையப்பட்டவுடன் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க ஜாண் மார்ட்டின் வீட்டில் பதுங்கிக் கொண்டார்கள். இந்த வீட்டில் தான் இயேசு அவர்களுடன் பாஸ்கா திரு விருந்து அருந்தினார்.

"மரித்த மூன்றாம் நாள் உயிர்ப்பேன்" என்று பல முறை கூறியிருந்தும் அவர்கள் அதை விசுவசிக்கவில்லை.

இயேசு உயிர்த்துவிட்டார் என்று மகதலேன் மரியாள் சொன்னபோது கூட இராயப்பரும் அருளப்பரும் அதை நம்பாமல் அதை உறுதி செய்ய கல்லறைக்கு ஓடினார்கள்.

இரண்டு சீடர்கள் அவர் உயிர்த்ததை நம்பாமல் தமாஸ்கு நகருக்குப் பயணமானார்கள்.

இத்தகைய குறைபாடு உள்ளவர்களை உலகைச் சார்ந்த ஒரு கம்பெனி கூட வேலைக்கு எடுக்காது.

இயேசு தனது ஆன்மீகப் பணிக்கு அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.

இயேசு விண் எய்திய நாற்பதாவது நாள் தூய ஆவி இறங்கி வந்தபோது தான் அவர்கள் குறைகள் நீங்கி வீரர்களாக மாறினார்கள்.

இப்படிப்பட்டவர்களைக் கொண்டு தனது திருச்சபையை உலகின் கடைசி எல்லை வரைக்கும் பரவச் செய்ததுதான் இயேசு செய்த மிகப் பெரிய புதுமை.

இப்போது ஒன்று புரிந்திருக்கும். திருச்சபை உலகெங்கும் பரவியதும், தொடர்ந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதும் மனித சக்தியினால் அல்ல, தூய ஆவியின் வல்லமையால் தான்.

நமது குடும்பங்கள் எப்படிப்பட்டவை என்று நமக்குத் தெரியும்.

இயேசு தனது பணியாற்றினார்களை அவற்றிலிருந்து தான் தேர்வு செய்கிறார்.

அவர்களோடு இருந்து அவர்களை வழி நடத்துகிறார்.

நாம் அவர்கள் மூலமாகத்தான் இயேசுவை அறிந்திருக்கிறோம்.

அவர்கள் உதவியுடன் தான் கிறித்தவர்களாக வாழ்கிறோம்.

இயேசு உலகம் முடியுமட்டும் நம்மோடு வாழ்வதற்காகத்தான் திவ்ய நற்கருணையையும், குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்.

குருக்கள் தங்கள் சொந்த வல்லமையால் அல்ல,

இயேசு கொடுத்த அதிகாரத்தினால்

நமக்கு நற்செய்தியை அறிவிக்கிறார்கள்,

நமது பாவங்களை மன்னிக்கிறார்கள்,

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக பலி ஒப்புக் கொடுக்கிறார்கள்,

இயேசுவை நமக்கு ஆன்மீக உணவாகத் தருகிறார்கள்,

நம்மை விண்ணகப் பாதையில் வழி நடத்துகிறார்கள்.

குருக்கள் காட்டும் வழி நடப்போம்.

இயேசுவுக்கு நன்றி கூறுவோம்.

லூர்து செல்வம்.

Tuesday, January 21, 2025

வியாழன் 23"ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந்தனர்."(மாற்கு நற்செய்தி 3:10)

வியாழன் 23

"ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந்தனர்."
(மாற்கு நற்செய்தி 3:10)
.
இயேசு தன்னை நம்பி வந்த நோயாளிகளைச் சொல்லால் மட்டும் அல்ல, தொட்டும் குணமாக்கியிருக்கிறார்.

அவர் மற்றவர்களை தொடும்போது மட்டுமல்ல ‌ மற்றவர்கள் அவரைத் தொடும் போதும் குணமாகியிருக்கிறார்கள்.

நோயாளிகள் குணமாவதற்கு காரணமாக இருந்தது எது? 

இயேசுவின் மீது அவர்களுக்கு இருந்த ஆழமான அசைக்க முடியாத நம்பிக்கை. 

சில நோயாளிகள் இயேசுவை நேரடியாக சந்தித்து தங்களைக் குணமாக்கும்படி கேட்காமலேயே

 அவர் போதித்துக் கொண்டிருக்கிற இடத்துக்கு வந்து 

அவருக்கு பின்னால் நின்று அவரிடம் சொல்லாமலேயே அவரை தொட்டு குணமாகியிருக்கிறார்கள்.

அவர்கள் அவரிடம் சொல்லாவிட்டாலும் தனது படைப்புகளின் ஒவ்வொரு அசைவையும் நித்திய காலமாக தெரிந்து வைத்திருக்கும் இயேசு

 அவர்களின் நம்பிக்கையின் பேரில் அவர்களை குணமாக்கினார்.

அதே இயேசு தானே இப்போதும் நம்முடன் இருக்கின்றார்! 

நாம் நாம் திருப்பலிக்குச் செல்லும் போதெல்லாம் அவர் நம்மை சந்திப்பதற்காகவே 

குருவானவர் நடுப் பூசையில் வசீகர வார்த்தைகளைச் சொல்லும்போது விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கி வருகிறார்.

அவரை குருவானவர் உயர்த்தி பிடிக்கும் போது நாம் 

"என் ஆண்டவரே என் தேவனே"

என்று கூறி அவரை ஆராதிக்கின்றோம். 

திரு விருந்தின் போது நாம் தகுதி இல்லாதவர்கள் என்று தெரிந்திருந்தும் 

நமது ஆன்மீக உணவாக நமக்குள் அதே இயேசு தானே வருகிறார்!

நாம் அவரை நாவில் வரவேற்கும் போது அவர் நம்மைத் தொடுகிறார், நாம் அவரைத் தொடுகிறோம்.

அன்பர்கள் ஒருவருக்கொருவர் முத்தங்கள் கொடுக்கும்போது 

 உதடுகளினால் மட்டுமல்ல 

 நுனி நாவினாலும் ஒருவரை ஒருவர் தொட்டு 

தங்கள் அன்பின் ஆழத்தை தெரிவித்துக் கொள்கிறார்கள்.

நாம் நமது முழு நாவினாலும் அவரைத் தொடுகிறோம்.

நாவில் தொட்டு இறங்கிய அவரை விழுங்குகிறோம்.

அவரது பிரசன்னம் நமது உடல் முழுவதும் பரவுகிறது. 

அவரும் நாமும் இரண்டறக் கலக்கிறோம்.

அந்நிமிடத்தில் உலகில் வாழ்வது நாம் அல்ல,
 நம்முள் அவர் வாழ்கிறார்.

அந்த அளவுக்கு அவரும் நாமும் ஒன்றித்து விடுகிறோம்.

அந்த ஒன்றிப்பின் போது நம்மிடம் உண்மையான விசுவாசம் இருந்தால் 

நாம் கேட்காமலேயே நம்மிடம் இருக்கும் நோய் நொடிகள்  நம்மை விட்டு தாமாகவே வெளியேறி விடும்.

அப்படி வெளியேறாமல் இருந்தால் ஒன்று நம்மிடம் உண்மையான விசுவாசம் இல்லை,

 அல்லது, 

அவை இயேசுவின் விருப்பத்திற்கு உட்பட்ட ஆசீர்வாதங்கள். 

நமது விசுவாசம் உண்மையானதாக இருந்தால் 

 நாம் நமக்கு என்ன நேர்ந்தாலும் நம்மிடம் வந்த இயேசுவுக்கு  நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.

"எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்."
(1தெசலோனிக்கர் 5:18)

ஒரு பெற்றோருக்கு ஒரு மகன்.
அவனுக்குச் சுகமில்லை.
மருத்துவம் பார்த்துக் கொண்டே இறைவனிடமும் வேண்டினார்கள்.

குணம் கிடைக்க‌ வேண்டும் என்ற நோக்கத்தோடு பல திருத்தலங்களுக்குச் சென்றார்கள்.

ஆனால் அந்த பையன் இறந்து விட்டான்.

அந்த வினாடியிலிருந்து கடவுளை மறந்தார்ஙள்.

நாம் அடிக்கடி பாடும் பாட்டு ஒன்று உண்டு.

"நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும்."

உண்மையான விசுவாசத்தோடு பாடுபவர்களுக்கு இதன் பொருள்,

"நம்பிக்கையோடு செபிப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும்."

அதாவது நமது நம்பிக்கை வாய்ந்த செபத்தின் விளைவாக எது நடந்தாலும் அது நல்லது மட்டுமே.

முக்கியம் - "எது நடந்தாலும்."

நமக்கு எது நல்லது என்று நம்மை விட கடவுளுக்கு நன்றாகத் தெரியும்.

அது மட்டுமல்ல, ஒவ்வொருவரும் 
கடவுளுக்கு மட்டுமே முழுமையாக சொந்தம்.

என் மேல் எனக்கு இருக்கும் உரிமையை விட கடவுளுக்கு தான் உரிமை அதிகம்.

இவ்வுலககும் அவருக்குச் சொந்தம், விண்ணுலகும் அவருக்குச் சொந்தம்.

ஒரு தொழில் கம்பெனிக்குப் பல இடங்களில் கிளைகள் இருந்தால் அங்கு பணிபுரிபவர்கள் எந்தக் கிளைக்கு மாற்றப்பட்டாலும் அங்கு செல்ல வேண்டும்.

விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் உரிமையாளரான கடவுள் நமக்கு மண்ணுலகிலிருந்து விண்ணுலகுக்கு Transfer கொடுத்தால் போய்த்தானே ஆக வேண்டும்.

அந்த Transferக்கு நாம் மரணம் என்று பெயர் சூட்டியுள்ளோம்.

கடவுளுக்கு அது சித்தமானால் நாம் அதற்கு முழு மனதுடன் நன்றி கூற வேண்டும்.

அதாவது, "நமக்கு என்ன நேர்ந்தாலும் நன்றி கூற வேண்டும்."

கடவுளை மையமாக வைத்துச் சிந்தித்தால் இது புரியும்.

இயேசுவை நம்பிக்கையோடு தொடுவோம்.

என்ன நேர்ந்தாலும் நன்றியுடன் ஏற்றுக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

Monday, January 20, 2025

புதன் 22 தங்களைத் தாங்களே நேசியாதவர்களால் பிறரை நேசிக்க முடியுமா?

புதன் 22

 தங்களைத் தாங்களே நேசியாதவர்களால் பிறரை நேசிக்க முடியுமா?


"உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக" 
(மாற்கு நற்செய்தி 12:31) என்பது இறைவன் கட்டளை.

"உன்மீது அன்புகூர்வாயாக" என்று இயேசு சொல்லவில்லை.

"உன்மீது நீ அன்புகூர்வது போல்" என்று சொல்கிறார்.

ஏன்?

தன்னைத் தானே அன்பு செய்கிறவர் கடவுள்.

பரிசுத்த தம திரித்துவத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள அன்பைத் தூய ஆவி என்கிறோம்.

தன்னையே அன்பு செய்யும் கடவுள் மனிதனைத் தனது சாயலில் படைத்ததால் அவன் தன்னை அன்பு செய்வது அவனது இயல்பு ஆகிவிட்டது.

ஆகவேதான் "நீ உன்னை அன்பு செய்வாயாக." என்று சொல்லாமலேயே,

"உன்மீது நீ அன்புகூர்வது போல்" என்று சொல்கிறார்.

இப்போது ஒரு கேள்வி எழும்.

கடவுள் அனைவரையும் அன்பு செய்கிறாரே, அவரால் அவருடைய சாயலில் படைக்கப்பட்ட மனிதன் ஏன் அனைவரையும் அன்பு செய்ய மறுக்கிறான்?

உண்மையைப் புரிந்து கொண்டால் இந்தக் கேள்வி எழாது.

கடவுள் தன்னுடைய அனைத்துப் பண்புகளையும் மனிதனோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதன் தனது பாவத்தினால் தன்னிடம் இருந்த இறைச் சாயலைக் பழுது செய்து விட்டான்.

ஆகவே அன்பு இருக்கிறது, பழுதடைந்த நிலையில் இருக்கிறது.

பழுதடைந்த ஒரு பொருளால் அது எதற்காகச் செய்யப்பட்டதோ அதைச் செய்ய முடியாது.

Air போன சைக்கிளில் ஏறிப் பயணிக்க முடியாது.

ஒரு கால் ஒடிந்த நாற்காலியில் உட்கார முடியாது.

கடவுள்  அவருடைய படைப்பு என்பதற்காக நம்மை நேசிக்கிறார்.

அதனால் எந்த சூழ்நிலையிலும் அவர் நம்மீது கொண்டுள்ள அன்பு மாறாது.

நாம்  நம்மைப் படைத்தவர் என்ற ஒரே காரணத்திற்காக அவரை நேசிக்க வேண்டும்.

அதுதான் உண்மையான அன்பு.

ஆனால் நமது பாவத்தினால் பழுதுபட்ட அன்பு அவரை அவருக்காக நேசியாமல் நமக்கு கேட்பது கிடைக்க வேண்டும் என்பதற்காக நேசிக்கிறோம்.

அது உண்மையான நேசம் அல்ல.

நமது பழுதடைந்த நேசத்தினால்  நாம் எப்படி நேசிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறாரோ அப்படி நேசிக்க முடியாது.

ஆக நம்மையே நம்மால் நேசிக்க முடியாது, விளைவு, நமது அயலானையும் நம்மால் நேசிக்க முடியாது.

கடவுளை உண்மையான அன்பு கொண்டு நேசிக்காததால்தான் 

நம்மால் நம்மையும் உண்மையான அன்பு கொண்டு நேசிக்க முடியவில்லை, அயலானையும் அப்படி நேசிக்க முடியவில்லை.


"சர்வேசுரா சுவாமி !.''
தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராகையால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழு மனதோடு நேசிக்கிறேன்."

என்று சொல்கிறோமே!

ஆமா, சொல்கிறோம்.‌
செபிக்கவில்லை.

உண்மையான செபம் உள்ளத்தில் உதித்து வர வேண்டும்.

மனப்பாடம் செய்து வாயிலிருந்து மட்டும் வரக்கூடாது.

உள்ளத்தில் உண்மையான அன்பை உணர்ந்து 

உத்தம மனத்தாபப்பட்டு 

பாவ சங்கீர்த்தனம் செய்து

 அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்புப் பெற்று விட்டால் 

நமது அன்பு பழுது நீங்கும்.

பழுது நீங்கிய அன்புடன் இறைவனை இறைவனுக்காக நேசித்தால்

நம்மையும் இறைவனுக்காக நேசிப்போம்.

நம்மை நாமே இறைவனுக்காக நேசித்தால் நமது அயலானையும் 
இறைவனுக்காக நேசிப்போம்.

மூன்று சக்கர வாகனத்தில் மூன்று சக்கரங்களும் ஒரே நேரத்தில் இயங்க வேண்டும்.

ஏதாவது ஒன்று நகர மறுத்தாலும் வாகனம் நகராது.

அதேபோல இறையன்பு, சுய அன்பு, பிறரன்பு மூன்றும்  அன்பு என்ற வாகனத்தை இயக்க வேண்டும்.

கடவுள் மீது நமக்குள்ள அன்பும், நம்மீது நமக்குள்ள அன்பும், பிறர் மீது நமக்குள்ள அன்பும் மூன்றறக் கலப்பது தான் உண்மையான அன்பு.

மூன்றும் ஒரே அன்பாக வேண்டும்.

எப்படி?

இறைவனை நேசிக்கும் போது நம்மையும், பிறரையும் நேசிக்கிறோம்.

நமக்குள் இறைவனும், பிறரும் இருப்பதால் நம்மை நேசிக்கும் போது இறைவனையும், பிறரையும் நேசிக்கிறோம்.

மையம் இறையன்பு.

மூன்றும் ஒரே அன்பு என்று எப்படிப் புரிந்து கொள்வது?

அன்பு கொடுக்கிறது.

"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" 
(மத்தேயு நற்செய்தி 25:40)

அன்பின் நிமித்தம் அயலானுக்குக் கொடுப்பதைக் கடவுளுக்கே கொடுக்கிறோம்.

அயலானை அன்பு செய்யும்போது கடவுளையே அன்பு செய்கிறோம்.

இறைவனையும், பிறரையும் நாம் நேசிப்பது அவர் நம்முடன் பகிர்ந்து கொண்ட அன்பினால் தான்.

நம்மை நாமே நேசிக்கா விட்டால் பிறரை நம்மால் நேசிக்க முடியாது.

நம்மை நாமே எதற்காக நேசிக்க வேண்டுமோ அதற்காகத்தான் நாம் நமது பிறரையும் நேசிக்க வேண்டும்.

கடவுள் நம்மை எதற்காக நேசிக்கிறாரோ அதற்காக நம்மை நாம் நேசிக்க வேண்டும்.

நாம் அவருடைய படைப்பு, அதற்காக அவர் நம்மை நேசிக்கிறார்.

நாமும் நாம் கடவுளுடைய படைப்பு என்பதற்காக நம்மை நாம் நேசிக்க வேண்டும்.

அதுபோல நமது பிறனும் கடவுளுடைய படைப்பு என்பதற்காக அவனை நாம் நேசிக்க வேண்டும்.

நாம் இறைவனின் கட்டளைப்படி நடக்க வேண்டும்.

நமது பிறனும் இறைவனின் கட்டளைப்படி வாழ வேண்டும் என்று நாம் ஆசைப்பட வேண்டும்.

அதற்கு நாம் உதவிகரமாய் இருக்க வேண்டும்.

நாம் இறைவனுக்கு பணி செய்ய வேண்டும்.

நமது பிறனும் இறைவனுக்கு பணி செய்ய வேண்டும் என்று நாம் ஆசைப் படுவதோடு அதற்காக அவனுக்கு உதவ வேண்டும்.

நல்ல வாழ்க்கையின் பயனாய் நாம் விண்ணக வாழ்வுக்குள் நுழைய வேண்டும்.

நமது பிறனும் விண்ணகம் வர வேண்டும் என்று நாம் ஆசைப்பட வேண்டும், அதற்கான எல்லா வித உதவிகளையும் அவனுக்குச் செய்ய வேண்டும்.

நாம் இயேசுவுக்காக அர்ப்பண வாழ வேண்டும்.

நமது பிறனும் இயேசுவுக்காக அர்ப்பண வாழ வேண்டும் என்று நாம் விரும்ப வேண்டும்.

காலம் வரும். வரும்போது நமது பிறரோடு விண்ணக வாழ்வு வாழ வேண்டும்.

விண்ணகத்தில் நாமும் நமது பிறனும் இறைவனோடு நித்தியமும் ஐக்கியமாய் வாழ 

இவ்வுலகில் நம்மை நாம் தயாரிப்போம்.

லூர்து செல்வம்.

Sunday, January 19, 2025

செவ்வாய் 21"ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார்."(மாற்கு நற்செய்தி 2:28)

செவ்வாய் 21

"ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார்."
(மாற்கு நற்செய்தி 2:28)

ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர். 

அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், "பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?" என்று கேட்டனர். 

பரிசேயர்கள் திருச் சட்டத்தை அதன் எழுத்துப்படி மட்டும் பின்பற்றி வந்தவர்கள்.

வயலில் அறுவடை செய்வது,
 திருச் சட்டத்தில் ஓய்வு நாளில் விலக்கப் பட்ட செயல்.

பரிசேயர்கள் சீடர்கள் கதிர்களைக் கொய்ததை அறுவடையாக எடுத்துக் கொண்டு அவர்கள் செய்தது திருச்சட்டத்துக்கு எதிரான செயல் என்று குற்றம் சாட்டினார்கள்.

சீடர்கள் கதிர்களைக் கொய்தது அறுவடை செய்வதற்காக அல்ல, தங்கள் பசியைப் போக்க.

இயேசு தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் 
கொடுத்ததைச் சுட்டிக் காட்டி பசியின் நிமித்தம் சீடர்கள் செய்ததில் தவறு ஏதும் இல்லை என்பதை விளக்கினார்.

ஓய்வு நாளில் கடினமான வேலை செய்யக் கூடாது.

பசியைப் போக்குவது கடினமான வேலையா?

சீடர்கள் தங்கள உடைமைகள் யாவற்றையும் விட்டுவிட்டு 
இறைப் பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்தவர்கள்.

இரவு பகலும் இயேசுவுடன் இருந்தவர்கள்.

அன்று இயேசுவும் சாப்பிட்டிருக்க மாட்டார்.  சீடர்களும் சாப்பிட்டிருக்க மாட்டார்கள்.

இயேசுவுக்கும் பசியாகத்தான் இருந்திருக்கும்.

அவருக்குப் பணி செய்து கொண்டிருந்த போது அவர்களுக்கு ஏற்பட்ட பசியைப் போக்கவே கதிர்களைக் கொய்தார்கள்.

ஆகவேதான் இயேசு "ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார்.

இயேசுவின் வார்த்தைகளைத் தியானித்தால் நமக்கு சில ஆன்மீக உண்மைகள் புலப்படும்.

நமக்கு இயேசு அளித்திருக்கும் ஓய்வு நாள் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஓய்வு நாளைப் போன்றதல்ல.

அவர்களைப் பொறுத்த மட்டில் ஆறு நாட்கள் உழைப்பு, ஒரு நாள் ஓய்வு.

கிறித்தவர்களைப் பொறுத்த மட்டில் ஓய்வு நாள் ஆண்டவருக்கான நாள்.

எல்லா நாட்களுமே ஆண்டவருக்காக வாழ வேண்டிய நாட்கள்தான்.

ஆறு நாட்களும் நாம் உலகில் வாழ்வதற்கான உலகைச் சார்ந்த பணிகளை ஆண்டவருக்காகச் செய்ய வேண்டும்.

ஏழாம் நாளில் இறை வழிபாடு சார்ந்த பணிகளை ஆண்டவருக்காகச் செய்ய வேண்டும்.

இறை வழிபாடு சார்ந்த பணிகளில் திருப்பலியும். பிறரன்புப் பணிகளும் அடங்கும்.

அநேகருக்கு ஞாயிற்றுக் கிழமை மட்டன் சாப்பாட்டு நாள்.

நல்ல மட்டன் வேண்டும் என்பதற்காகச்  திருப்பலி முடிந்தும் முடியாமலிருக்கும் போதே எழுந்து மட்டன் கடைக்குப் போய் விடுபவர்கள் இருக்கிறார்கள்.

மதிய உணவு உண்டபின் நன்கு தூங்கி விடுவார்கள். அதுதான் அவர்களுக்கு ஓய்வு.

ஆனால் ஆண்டவருடைய விருப்பம் அது அல்ல.

திருப்பலிக்குப் பின் 

ஏழைகளைச் சந்தித்து உதவுதல்,
சுகமில்லாதவர்களுக்கு ஆறுதல் கூறுதல் போன்ற பிறர் அன்புப் பணிகளை நாம் செய்ய வேண்டும் என்பது தான் இறைமகனின் ஆசை.

பழைய ஏற்பாட்டில் வாரத்தின் இறுதி நாளான சனிக் கிழமை ஓய்வு நாளாக இருந்தது.

இயேசு உயிர்த்த ஞாயிற்றுக் கிழமை நமக்கு ஓய்வுநாள். 

நமக்கு ஞாயிற்றுக் கிழமை தான் வாரத்தின் முதல் நாள்.

நாம் ஒவ்வொரு வாரத்தையும் இறை வழிபாட்டுடனும், பிறர் அன்புப் பணிகளுடனும் தான் ஆரம்பிக்கிறோம்.

ஆகவே, நம்மைப் பொறுத்த மட்டில்

ஓய்வு = இறைவழிபாடு.

 இறைவழிபாடு   = திருப்பலியும்,  பிறரன்புப் பணிகளும்.

இறைப்பணியும், பிறன்புப் பணியும் செய்து வாழ்பவர்களுக்கு வாழ்க்கையே இறை வழிபாடுதான்.

என் மனதில் ஓய்வு என்ற வார்த்தையில் ஒரு மிக முக்கிய மறையியல் உண்மை அடங்கியிருப்பது போல் தெரிகிறது.

பணிக்குப் பின்பு தானே ஓய்வு.

அப்படியானால் இவ்வலகில் நாம் செய்து கொண்டிருக்கும் இறைப்
பணிக்குப் பின் நாம் எதிர் பார்க்கும் ஓய்வு எது?

மோட்சம். நமது நிரந்தர ஓய்வு, பேரின்பம் நிறைந்த ஓய்வு. நிரந்தரமாக இறை வழிபாடு செய்யும் ஓய்வு.

மோட்சத்தில் நாம் அனுபவிக்க இருக்கும் நிரந்தர ஓய்வின் முன் அடையாளம்தான் உலகில் நாம் அனுசரிக்கும் ஞாயிற்றுக் கிழமை ஓய்வு.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை ஆரம்பிக்கிறது.

ஒவ்வொரு வாரமும் இறை வழிபாட்டில் ஆரம்பித்து நமது வார வாழ்க்கையைத் தொடர்வது போல 

உலகில் வாழும் வாழ்க்கையை விண்ணக நித்திய பேரின்ப நிரந்தர ஓய்வில் தொடர்கிறோம்.

வழிபாடு ---> வேலை ---> வழிபாடு

ஞாயிறு வழிபாடு நமது நித்திய வழிபாட்டை நினைவூட்டுகிறது.

ஞாயிறு வழிபாடு செய்யாதவர்கள் நித்திய வழிபாட்டை எதிர்பார்க்க முடியாது.

ஞாயிறு வழிபாட்டை மறந்து அன்றும் உலக வேலையைச் செய்பவர்கள் நித்திய மோட்ச வழிபாட்டையும் மறந்து விட வேண்டியதுதான்.

இயேசு பத்து  கட்டளைகளையும் இரண்டு கட்டளைகளாகச் சுருக்கித் தந்ததில் கூட இறை வழிபாட்டின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது.

1. கடவுளை முழு இருதயத்தோடு நேசித்த வேண்டும்.

முழு இருதயத்தையும் 
இறைவன்பால் திருப்புவது இறை வழிபாடு.

2. நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசித்து வாழ வேண்டும்.

நம்மையும், அயலனையும் நேசித்து வாழ்வது நமது வாழ்க்கை

இறைவனை வழிபட்டு வாழ்வர்கள் நித்திய காலம் இறைவனை வழிபட மோட்சம் செல்வது உறுதி.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நமக்கு இதை ஞாபகப் படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

நாம் ஞாயிறு திருப்பலிகுச் செல்லும்போதும் விண்ணகத்துக்கு இறைவனை வழிபடச் செல்வதாக நினைத்துக்  கொள்ள வேண்டும்.

அந்த நினைவோடு ஞாயிறு திருப்பலியில் பங்கேற்பவர்கள் வாரம் முழுவதும் மோட்சத்துக்குச் செல்லும் நல்ல கிறித்தவர்களாக வாழ்வார்கள்.

நமக்கு மிகவும் வேண்டியவர்களின் வீட்டில் ஒரு விழா என்றால், நாம் ஏதாவது ஒரு பரிசுப் பொருளை வாங்கிச் செல்கிறோம்.

எதற்காக?

அவர்கள் அப்பொருளைப் பார்க்கும்போது நம்மை நினைத்துக் கொள்வார்கள் என்பதற்காக.

இயேசு தான் உயிர்த்த ஞாயிற்றுக் கிழமையை ஏன் ஒரு பரிசாக, (அவரை வழிபடும் நாளாக) தந்திருக்கிறார்?

ஞாயிற்றுக் கிழமை வரும் போதெல்லாம் நாம் விண்ணக ஓய்வுக்காகவே உலகில் வாழ்கிறோம் என்பதை நாம் நினைத்துக் கொள்வதற்காகத் தான்.

ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் போது நாம் விண்ணகத் திருவிருந்தில் பங்கேற்கச் செல்கிறோம் என்ற நினைவோடு செல்ல வேண்டும்.

ஓய்வு நாள் மனு மகனுக்குக் கட்டுப்பட்டது என்ற நினைவோடு உலகில் வாழ்வோம்.

மனு மகன் விண்ணிலிருந்து இறங்கி வந்தது நம்மை விண்ணுலகுக்கு அழைத்துச் செல்வதற்கே என்ற உணர்வோடு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Saturday, January 18, 2025

திங்கள் 20-01-25"அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்" என்றார்."(யோவான் நற்செய்தி 3:30)

திங்கள் 20-01-25

"அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்" என்றார்."
(யோவான் நற்செய்தி 3:30)

இவை திருமுழுக்கு அருளப்பர் தனக்கும் இயேசுவுக்கும் உள்ள உறவைப் பற்றி கூறிய வார்த்தைகள்.

அருளப்பரது வார்த்தைகள் இயேசுவுக்கும் நமக்கும் உள்ள உறவுக்கும் பொருந்தும்.

நாம் உலகில் வாழ்கிறோம்.

நம்மை ஆட்கொள்ள இயேசு விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்திருக்கிறார்.

வந்திருப்பது நம்மை ஆட்கொள்ள.

ஆட்கொள்ள என்றால் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை விண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர் விண்ணக வாழ்வுக்கு ஏற்றவர்களாக மாற்ற.

அதாவது நம்மை அவரைப் போல் மாற்ற.

நாம் சமவெளியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நமக்கு மலைப் பிரதேசத்தில் வேலை கிடைத்திருக்கிறது.

சமவெளியில் வாழ்வது போல மலைப் பகுதியில் வாழ முடியாது.

சமவெளியில் வெப்பம் அதிகமாக இருக்கும். மலையில் குளிர் அதிகம் இருக்கும்.

சமவெளியில் நாம் சாப்பிடும் உணவைச் சாப்பிட்டு, சமவெளியில் அணியும் உடையை அணிந்து மலையில் வாழமுடியாது.

குளிர் தாங்க‌ முடியாமல் படுத்து விடுவோம்.

நமது , உடை, உணவு, நடை பாவனைகள் அனைத்தும் மாற வேண்டும்.

இவ்வுலக வாழ்வு மறுவுலக வாழ்வுக்கு நேர் எதிரானது.

பொருள் இருந்தால் இவ்வுலகில் வாழலாம்.

அருள் உள்ளவர்கள் மட்டுமே மறு உலகில் வாழ முடியும்.

"பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை, அருள் இல்லார்க்கு மறுவுலகு இல்லை.

விண்ணிலிருந்து வந்திருக்கும் இயேசுவோடு இணைந்து நாமும் ‌விண்ணகம் செல்ல வேண்டும் என்றால் நாம் இயேசுவைப் போல் மட்டுமல்ல மறு இயேசுவாகவே மாற வேண்டும்.

உலகைச் சார்ந்த குணங்கள் அனைத்தும் நம்மிடமிருந்து விடை பெற வேண்டும்.

இயேசுவின் பண்புகள் அனைத்தும் நமது பண்புகளாக மாற வேண்டும்.

உலகப் பொருட்கள் மீது நமக்குள்ள பற்று நீங்கி,

இறைப்பற்று உள்ளவர்களாக மாற வேண்டும்.

உலகில் எளிய உள்ளத்தவராய் வாழ வேண்டும்.

இயேசு அனைவரையும் நேசிக்கிறார்.

நாமும் இறைவனை நேசிப்பதோடு, நம்மை நேசிப்பது போல நமது பிறனையும் நேசிக்க வேண்டும்.

இயேசு அவரை நேசியாதவர்களையும் நேசிக்கிறார்.

நாம் நம்மைப் பகைப்பவர்களையும் நேசிக்க வேண்டும்.

இயேசு பாவிகளையும் பராமரிக்கிறார்.

நாமும் நமக்குத் தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும்.

இயேசு தனது பாடுகளின் போது தன்னை அடித்தவர்களைத் தடுக்கவில்லை.

அடிபட்டார், உதைப்பட்டார், துப்பப்பட்டார், கேலி செய்யப்பட்டார்,

மரிக்கு முன் தன்னை அடித்த, உதைத்த , துப்பிய, கேலி செய்த அனைவரையும் மனதார மன்னித்து விட்டார்.

நமக்கும் இந்தக் குணம் இருந்தால் தான் நாம் மறு இயேசுவாக மாற முடியும்.

இது எவ்வளவு கடினம் என்று அடிபடும் போது தான் தெரியும்.

ஆனாலும் இயேசு வாக மாற வேண்டுமென்றால் பட்டுதான் ஆக வேண்டும்.

இயேசுவாக வாழ்வது தேன் குடிப்பது போன்றதல்ல.

கசப்பான மருந்தைக் குடிப்பது போன்றது.

நோய் குணமாக வேண்டுமென்றால் மருந்து கசப்பாக இருந்தாலும் குடித்து தான் ஆக வேண்டும்.

இயேசுவின் அனைத்துப் பண்புகளையும் தங்கள் பண்புகளாக ஏற்றுக் கொண்டவர்கள் தான் இயேசுவோடு விண்ணக பேரின்ப வாழ்வு வாழ முடியும்.

நாம் தேய்வோம். நம்மில் இயேசு முழுமையாக வளர்வாராக.

இறுதி நாளில் நாம் விண்ணகம் செல்லும்போது தந்தை நம்மை பார்த்து,

"நான் ஒரு மகனைத் தான் உலகுக்கு அனுப்பினேன். இப்போது கோடிக்கணக்கான மக்கள் விண்ணகத்துக்கு வந்திருக்கிறீர்கள்.

மட்டற்ற மகிழ்ச்சி."

என்று பூரிப்படைய வேண்டும்.

லூர்து செல்வம்.

Friday, January 17, 2025

19-01-25 ஞாயிறு இயேசு அவரிடம், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார்.(யோவான் நற்செய்தி 2:4)


19-01-25 ஞாயிறு 

இயேசு அவரிடம், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார்.
(யோவான் நற்செய்தி 2:4)

கானாவூரில்  நடந்த திருமண விழாவுக்கு அழைப்புதலின் பேரில் அன்னை மரியாளும், இயேசுவும், சீடர்களும் செல்கிறார்கள்.

அருளப்பர் கானாவூரில் நடந்த திருமணத்தைப் பற்றி எழுதவில்லை.  அங்கு இயேசு செய்த புதுமையைப் பற்றி எழுதுகிறார்.

இது இயேசு பொது வாழ்வில் செய்த முதல் புதுமை.

இயேசு திருமுழுக்கு அருளப்பரிடம் திருமுழுக்குப் பெற்றதைத் தொடர்ந்து சீமோன், அந்திரேயா, அருளப்பர், யாகப்பர் பிலிப்பு, நத்தானியேல் ஆகியோர் அவரது சீடர்களாகப் 
பின்பற்றினர்.

இவர்கள் திருமண வீட்டுக்கு இயேசுவோடு சென்றிருக்க வேண்டும்.

அங்கு இயேசுவின் முதல் புதுமைக்கு முந்திய நிகழ்வை முதலில் தியானிப்போம்.

1. திராட்சை இரசப் பற்றாக்குறை
2. அன்னை மரியாளின் வார்த்தைகள்.
3. இயேசுவின் பதில்.
4. அதைத் தொடர்ந்த அன்னையின் வார்த்தைகள்.

முதலில் திராட்சை இரசத்தை எடுத்துக் கொள்வோம்.

முதல் புதுமையில் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றுகிறார்.

பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன்பு செய்த கடைசிப் புதுமையில் திராட்சை இரசத்தை தனது இரத்தமாக மாற்றுகிறார்.

இரண்டு இடங்களிலும் திராட்சை இரசம் இடம் பெறுகிறது.

ஆரம்பத்திலேயே உலகம் முடியும் மட்டும் ஒவ்வொரு வினாடியும் உலகில் நடைபெறவிருக்கும்  திருப்பலி என்னும் புதுமைக்கு கானாவூர் திராட்சை இரசம்  முன் அடையாளமாக மாறிவிட்டது.

பாடுகளுக்கு முந்திய கடைசி புதுமை என்றேன், ஏனெனில், பாடுகளின் போதும் புதுமைகள் செய்தார்.

கைது செய்யப்படும் போது இராயப்பரால் வெட்டப்பட்ட 
ஒருவனுடைய காதை ஒட்ட வைத்தார்.

சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது, செந்தூரியன் விலாவைக் குத்தும் போது சிந்திய இரத்தத்தால் அவனுடைய கண்ணைக் குணமாக்கினார்.

திராட்சை இரசம் பற்றாக்குறையானதை அறிந்த அன்னை மரியாள் மகனிடம் வந்து,

"திராட்சை இரசம் தீர்ந்து விட்டது" என்கிறாள்.

அன்னையின் வார்த்தைகளை ஆழ்ந்து தியானித்தால் அது ஒரு செபம் என்பது புரியும்.

எப்படி செபிக்க வேண்டும் என்பதும் புரியும்.

செபத்தில் கடவுளுக்கு நாம் உத்தரவு போடக்கூடாது. அவரிடம் நமது நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும். என்ன செய்வது என்று அவருக்குத் தெரியும்.

மரியாள் திருமண வீட்டினரின் சார்பாக திருமண வீட்டின் நிலையை ஏற்றுக் கொள்கிறாள்.

அவள் விரும்புவது அவள் சொல்லாமலேயே இயேசுவுக்குத் தெரியும்.

அன்னையின் வார்த்தைகளில் அவளுடைய நம்பிக்கை வெளிப்படுகிறது.

இரசம் இல்லாமையை  இயேசு எப்படி சமாளிப்பார் என்று அவளுக்கு உறுதியாகத் தெரியும்.

அன்னைக்கு இயேசு அளித்த பதிலில் ஒரு முக்கிய மறையியல் உண்மை அடங்கியிருக்கிறது.

"அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே"

நமது சாதாரண உரையாடலில் நாம் "அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்?" என்று சொன்னால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று அர்த்தம்.

ஆனால் சொன்னவர் எல்லாம் வல்ல கடவுள். ஆகவே நமது அர்த்தம் அவருக்குப் பொருந்தாது.

அதற்கான பொருள் அவரது அடுத்த வார்த்தைகளில் அடங்கியிருக்கிறது.

"எனது நேரம் இன்னும் வரவில்லையே."

அதாவது,
"எனது நேரம் வரும் போது நாம் இதைச் செய்ய முடியும்.''

எனது நேரம் என்றால்?

நான் செய்வதற்கு முன் குறித்து வைத்திருக்கும் நேரம்.

எதைச் செய்வதற்கு?

பாஸ்கா திருவிருந்துக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு இயேசு சீடர்களைப் பார்த்து,


 "மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. 

கோதுமை மணி மண்ணில்  விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 
(அரு.12:23,24)

இயேசு எதற்காக உலகிற்கு வந்தாரோ அது நடைபெற வேண்டிய நேரம்,

அதாவது அவர் பாடுகள் பட்டு மரிக்க வேண்டிய நேரம்,

இதைத்தான் இயேசு   "மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம்" என்கிறார்.

பாடுகள் எப்போது ஆரம்பிக்கின்றன?

பாஸ்கா திருவிருந்தின் போது. அதாவது புனித வியாழனன்று.

பாஸ்கா திருவிருந்துக்கு
திருமண விருந்து முன் அடையாளம்.

பாஸ்கா திருவிருந்துக்கு மட்டுமல்ல,
ஆட்டுக்குட்டியின் விண்ணக திருமண விருந்துக்கும்
(திருவெளிப்பாடு 19:9)
அது முன் அடையாளம்.

( மணவாளன் - -ஆட்டுக் குட்டியாகிய இயேசு.

மணவாட்டி -- நமது ஆன்மா)

கானாவூர்த் திருமண விருந்தில் தண்ணீர் திராட்சை இரசமாக மாறும்.

பாஸ்கா திருவிருந்தில் திராட்சை இரசம் இயேசுவின் இரத்தமாக மாறும்.


இயேசு தண்ணீரில் இறங்கி திருமுழுக்கு பெற்ற பின்தான் மீட்புப் பணியை ஆரம்பித்தார்.

தண்ணீர் --> திராட்சை இரசம்---> இயேசுவின் இரத்தம்.

தண்ணீர் - திருமுழுக்கு.

இயேசுவின் இரத்தம் - திருப்பலி .

இதுதான் இயேசுவின் வாழ்க்கை.
இதுதான் நமது வாழ்க்கையும்.

கானாவூர் திருமணம் இதற்கு முன் அடையாளம்.

இயேசுவுக்குத் தண்ணீரை இரமாக்கப் போவது தெரியும்.

தெரிந்தும் ஏன்  "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" 

என்று சொல்கிறார்.

கிடைக்கிற சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி ஆரம்பத்திலேயே தான் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தை அம்மாவுக்கு ஞாபகப் படுத்துகிறார். 

"எனது நேரம் இன்னும் வரவில்லை. வந்தவுடன் நீங்கள் கேட்டது நிறைவேறும்." என்று நினைத்துக் கொண்டு தான் அதைச் சொல்லியிருப்பார்.

என்ன கேட்டது நிறைவேறும்?

திராட்சை இரசம் சம்பந்தமாகக் கேட்டது
இயேசுவின் மனதில் இருந்த எண்ணத்தில்
 நிறைவேறும்.

அதாவது திராட்சை இரசம் அவரது இரத்தமாக மாறும்.

இயேசு வெளிப்படையாகச் சொல்லவில்லை.

ஆனால் அம்மாவுக்குப் புரிந்திருக்கும்.

அதனால்தான் அதற்கான விளக்கத்தைக் கேட்காமல்,

 பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார். 
(அரு. 2:5)

பெற்று வளர்ந்த தாய்க்கு மகனைப் பற்றித் தெரியாதா?

நசரேத் ஊரில் வாழ்ந்த போதே விண்ணகத் தந்தையின் விருப்பத்தைப் பற்றி அன்னையிடம் உறுதியாகச் சொல்லியிருப்பார்.

யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் 
தண்ணீர்கொள்ளும். 
(அரு 2:6)

ஆறு கல்தொட்டிகள் நிறைய நீரால் நிரப்ப சொல்லி அதை திராட்சை இரசமாக மாற்றினார்.

கல் தொட்டிகளிலும் ஒரு முன் அடையாளம் இருக்கிறது. 

அவை தூய்மைச் சடங்குகளுக்காக வைக்கப் பட்டிருந்தவை.

"அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை."
(லூக்கா நற்செய்தி 22:20)

திராட்சை இரசத்தை அவரது இரத்தமாக மாற்றியபோது இயேசு சொன்ன வார்த்தைகள் இவை.

இயேசு இரத்தம் சிந்தியது நமது ஆன்மாவின் தூய்மைக்காக.

இதற்கு முன் அடையாளமாகவே 

தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகளில் தண்ணீர் ஊற்றப் பட்டு, அது திராட்சை இரசமாக்கப் பட்டது.

நாமும் தூய்மையான உள்ளத்தோடு தான் இயேசுவின் திரு உடலையும், திரு இரத்தத்தையும் உட்கொள்ள வேண்டும்.

நாம் இயேசுவின் வசனங்களை வாசிக்கும் போது அவர் உலகுக்கு எதற்காக வந்தாரோ அதை மையமாக வைத்தே தியானிக்க வேண்டும்.

லூர்து செல்வம்.

Thursday, January 16, 2025

சனி. 18-01-25"இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்."(மாற்கு நற்செய்தி 2:17)

சனி. 18-01-25

"இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்."
(மாற்கு நற்செய்தி 2:17)

வரி தண்டும் தன் தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்த லேவியின் வீட்டில் அவர் விருந்து உண்ண அமர்ந்திருந்தார்.

அப்போது பரிசேயர்களால் பாவிகளாக் கருதப்பட்டவர்களும், வரிதண்டுபவர்களும்   அவரோடும் அவருடைய சீடரோடும் அமர்ந்து விருந்துண்டனர். 

ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள். 


அதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு,
அவருடைய சீடரிடம், 

"இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?" என்று கேட்டனர். 

அவர்கள் தாங்கள் மட்டும் திருச் சட்டத்தை அனுசரிப்பதாக. எண்ணிக் கொண்டு தங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பாவிகள் என நினைத்தார்கள்.

இயேசு, அவர்கள் சொன்னதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி,

 "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. 

நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். 

இயேசு தான் மனிதனாகப் பிறந்ததன் நோக்கத்தைச் சொல்லிவிட்டார்.

வரிதண்டுபவர்கள் மட்டுமல்ல,
 பரிசேயர்கள், மறை நூல் அறிஞர்கள் உட்பட, மனிதர்கள் அனைவருமே பாவிகள்.

இயேசு யார் நேர்மையாளர்கள், யார் பாவிகள் என்று சொல்லவில்லை.

நமது முதல் பெற்றோர் செய்த பாவத்தின் விளைவாக மனிதர்கள் அனைவருமே பாவிகள் தான்.

இயேசு தான் தனது சிலுவை மரணத்துக்கு முன் பயன் (Retrospective effect) கொடுத்து தனது தாயைச்  சென்மப் பாவம் இன்றி உற்பவிக்கச் செய்தார்.

அன்னை மரியாள் சென்மப் பாவ மாசின்றி உற்பவித்தது இயேசுவின் பாடுகளின் பலனாகத் தான்.

மரியாளும் ஆதாம், ஏவாளின் வாரிசுதான்.  ஆனாலும் அவள் தனது தாயாக வேண்டியிருந்ததால் கடவுள் அவளுக்கு விதி விலக்குக் கொடுத்து, சென்மப் பாவத்தில் விழாமல் காப்பாற்றினார்.

மனுக்குலத்தில் மூன்று பேருக்கு சென்மப் பாவம் இல்லை.

ஆதாம், ஏவாள் உற்பவிக்கவில்லை, பாவம் இன்றி படைக்கப் பட்டார்கள்.  அவர்கள் செய்தது கர்மப் பாவம்.

அன்னை மரியாள் சென்மப் பாவம் இன்றி உற்பவித்தாள்.

ஆகவேதான் புனிதர்களுள் அவளுக்கு முதலிடம்.

இறைவனை ஏற்கிறோம் என்று சொல்லும் சிலர் அவர் தன் அன்னைக்குக் கொடுத்த வரத்தை ஏற்க மறுக்கிறார்கள்.

யார் மறுத்தாலும் உண்மை பொய்யாகி விட முடியாது.

நாம் பாவிகள். நம்மைத் தேடித்தான் பரிசுத்தர் வந்தார்.

இயேசு பாவிகள் கூடவே இருக்கிறார் என்று சொல்வது,

 ஒரு மருத்துவரைப் பார்த்து,

"இவர் என்ன படித்து பட்டம் பெற்றவர் என்கிறார்கள். ஏன் எப்போதும் நோயாளிகள் கூடவே இருக்கிறார்?"  என்று சொல்வது போல் இருக்கிறது.

Fail ஆகும் நிலையில் உள்ள மாணவர்களுக்குதான் ஆசிரியர் அவசியம் தேவை.

படும் நிலையில் உள்ள பயிர்களுக்கு தான் மழை உடனே தேவை.

பாவிகளான நம் அனைவருக்கும் இயேசு அவசியம் தேவை.

நமக்காகத்தான் இயேசு விண்ணகம் எய்திய பின்னும் திவ்ய நற்கருணையிலும், குருக்கள் வடிவிலும் தொடர்ந்து நம்மோடு இருக்கிறார்.

இப்போது ஒரு கேள்வி.

இயேசு குருவின் உருவிலும் இருக்கிறார், 

திவ்ய நற்கருணையிலும் இருக்கிறார்.

நமக்கு இயேசுவின் இடத்தில் 
இருந்து   கொண்டு பாவ மன்னிப்புக் கொடுப்பவரும் குருவானவர்தான்,

நமது ஆன்மாவுக்கு உணவாக திவ்ய நற்கருணையைத் தருவதும் குருவானவர்தான்.

நாம் விண்ணை வாழ்வை அடைவதற்கு குருவானவர் தரும் பாவ மன்னிப்பு முக்கியமா, அவர் தரும் திவ்ய நற்கருணை முக்கியமா?

இதே கேள்வியை வேறு உருவத்தில் கேட்கிறேன்.

நமது உடல வாழ, வளர, சக்தி பெற உயிர் முக்கியமா, உணவு முக்கியமா?

இரண்டும் முக்கியம்தான், எது அதிக முக்கியம்?

உடலில் உயிர் இல்லா விட்டால் உணவால் என்ன பயன்?

குழந்தை உயிரோடு பிறந்தால் தான் தாய் அதற்குப் பால் கொடுப்பாள்.

இயேசு இறந்து விட்ட  சிறுமியை உயிரோடு எழுப்பிய பின்புதான்
அவளுக்கு உணவு கொடுக்கச் சொன்னார்.(மாற்கு .5:43)

சாவான பாவம் செய்யும் போது ஆன்மா மரணம் அடைகிறது.

மரணம் அடைந்த ஆன்மாவுக்கு, அதாவது பாவ நிலையில் உள்ள ஆன்மாவுக்கு திவ்ய நற்கருணையால் என்ன பயன்?

சாவான பாவ நிலையில் திவ்ய நற்கருணை உட்கொண்டால் அதுவே ஒரு சாவான பாவம்.

சாவான பாவம் இல்லாத நிலையில் உள்ள ஒருவர் திவ்ய நற்கருணை வாய்ப்பு இல்லாத சூழ்நிலையிலும் இறக்க நேரிட்டால் உறுதியாக விண்ணகம் செல்வார்.

ஆனால் சாவான பாவ நிலையில் உள்ள ஒருவர் பாவமன்னிப்பு பெறாமல், திவ்ய நற்கருணை உட்கொண்டு இறந்தால் விண்ணகம் செல்ல முடியாது.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

விண்ணகம் செல்ல ஒரே வழி பாவ மன்னிப்பு மட்டும்தான்.

இயேசு உலகுக்கு வந்ததன் நோக்கமே நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காகத்தான்.

அப்படியானால் இயேசுவின் இடத்திலிருக்கிற குருவானவரின் முக்கிய பணி என்ன?

இயேசு உலகில் மனிதனாக வாழ்ந்த போது
1. நற்செய்தியை அறிவித்தார்.
2. பாவங்களை மன்னித்தார்.
3.தன்னையே பலி கொடுத்தார்.
4. திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

அனைத்தையுமே குருவானவரும் செய்ய வேண்டும்.

ஆனாலும் மிக முக்கியமான பணி பாவமன்னிப்புதான்.

ஒருவர் திருமுழுக்கு பெற்று, சென்மப் பாவம் மன்னிக்கப் படும்போது தான் அவர் கிறிஸ்தவர் ஆகிறார்.

திருமுழுக்கு பெற்ற பின் நாம் பெற வேண்டிய முக்கிய திருஅருட் சாதனம் பாவசங்கீர்த்தனம்.

அதற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தான் உண்மையான கிறித்தவர்கள்.

பாவமின்றி வாழ்ந்தால் தான் ஆன்மீக வாழ்வு வாழ முடியும்.

வாருங்கள்.  இயேசு பாவ சங்கீர்த்தனத் தொட்டியில் அமர்ந்திருக்கிறார். அவரிடம் சென்று பாவ மன்னிப்புப் பெறுவோம்.

உற்சாகத்துடன் விண்ணகப் பயணத்தைத் தொடர்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, January 15, 2025

வெள்ளி 17-01-25 அதற்கு இயேசு, "நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்றார். (மத்தேயு நற்செய்தி 19:21)

வெள்ளி 17-01-25

 அதற்கு இயேசு, "நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். 
அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்றார். 
(மத்தேயு நற்செய்தி 19:21)

"நிலை வாழ்வு பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவரிடம்
இயேசு  "கட்டளைகளைக் கடைபிடியும்" என்று சொன்னார்.

"இன்னும் என்ன செய்ய வேண்டும்" என்று கேட்க

இயேசு, "நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்றார்.

இந்த வசனங்களில் நிலை வாழ்வு பெற இரண்டு வழிகளை இயேசு காண்பிக்கிறார்.

1. உலகில் வாழ்ந்து கொண்டு கட்டளைகளைக் கடைப்பிடித்தல்.

2. உலகை முற்றிலும் துறந்து முழுமையான அர்ப்பண வாழ்வு வாழ்தல்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,

1. இல்லறத்தை நல்லறமாக வாழ்தல்.

2. துறவற வாழ்வு வாழ்தல்.

கட்டளைகளைக் கடைப்பிடித்தால் போதும் என்று கருதுபவர்கள்

கட்டளைகளை மீறாத வகையில் செல்வத்தை ஈட்டலாம். 
உலகில் குடும்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, 
ஈட்டிய செல்வத்தை இறையன்புப் பணிகளிலும், பிறர் அன்புப் பணிகளிலும் செலவழிக்கலாம்.

செல்வத்தை ஈட்டும் போதும், அதைச் செலவழிக்கும் போதும் இறைவன் கட்டளைகளை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இத்தகைய வாழ்வில் முதலிடம் பெறுவது கட்டளைகள், அடுத்த இடம் பெறுவது செல்வம்.

கட்டளைகளைப் பற்றி கவலைப்  படாமல் செல்வம் ஈட்டுபவன் நிலை வாழ்வைப் பெற முடியாது.

"ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் செல்வந்தர்கள் இறையாட்சிக்கு உட்பட முடியாது என்று இயேசு கூறுவது கட்டளைகளை அனுசரியாத செல்வந்தர்களைப் பற்றிதான்.

கட்டளைகளைப் பற்றி கவலைப் படாதவன் செல்வம் சேர்க்க ஏமாற்றுவான், திருடுவான், லஞ்சம் வாங்குவான், இன்னும் இது போன்ற சட்டவிரோத செயல்களைச் செய்வான்.  இப்படிப்பட்டவன் எப்படி விண்ணகம் செல்ல முடியும்?

சீடர்கள்  "அப்படியானால் யார்தாம் மீட்புப் பெறமுடியும்?" என்று கேட்டபோது

இயேசு , " கடவுளால் எல்லாம் இயலும்" என்றார். 

அதாவது கடவுளின் வழிநடத்துதலின் படி செல்வத்தை ஈட்டி, அவர் விருப்பப்படியே செலவழிப்பவன் உறுதியாக விண்ணகம் செல்வான்.

கடவுளின் வழிநடத்துதலின் படி செல்வத்தை ஈட்டுபவன் அவரது கட்டளைகளை மீற மாட்டான்.

செல்வத்தைச் செலவழிக்கும் போது இயேசுவின் இரண்டாவது கட்டளை அவனுக்கு வழிகாட்டும்.

" உன்னை நீ நேசிப்பது போல உன் அயலானையும் நேசி.''

அயலானைத் தன்னைப் போல் நேசிப்பவன் அயலானைப் பட்டினி போட்டு விட்டு தான் மட்டும் சாப்பிடுவானா?

அயலானுக்கு உடை உடுத்தாமல் தான் மட்டும் உடுத்துவானா?

தன்னைப் போல் அயலானை நேசிப்பவன் தனக்குச் செய்வதை எல்லாம் அயலானுக்கும் செய்வான்.

கட்டளைகளின்படி நடக்கும் செல்வந்தர்களால் விண்ணகமே மண்ணகத்துக்கு வந்து விடும்.

அவர்கள் மூலமாக விண்ணகத் தந்தையின் சித்தம் நிறைவேறும்.

விண்ணகத் தந்தை நல்லவர்களுக்கும் உதவி செய்கிறார், கெட்டவர்களுக்கும் உதவி செய்கிறார்.

கட்டளைகளின் படி நடக்கும் செல்வந்தர்களும் அப்படியே செய்வார்கள்.

இறைவன் தந்த செல்வத்தை இறைவனின் கட்டளைகளின் படியே செலவழிப்பார்கள்.

"கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; 

அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்.

 நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்." 
(லூக்கா நற்செய்தி 6:38)

இந்த இறை வாக்கு இறைவனின் விருப்பம்.

இருப்பதைப் பகிர்ந்து வாழ்பவர்கள் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்கள்.

அவர்களுக்கு நிலை வாழ்வு உறுதி.

அடுத்தது துறவறம்.

தன்னிடம் இருக்கும் செல்வத்தை முற்றிலும் ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு,

உலகச் செல்வம் இல்லாத ஏழையாய்

விண்ணகக் செல்வமாகிய அருட் செல்வத்துடன் மட்டும்

இறைவனுக்காக மட்டும் வாழ்பவர் துறவி.

இறைவனின் கட்டளைகள் அனைவருக்கும் பொதுவானவை.

ஆகவே துறவிகளும் இறைவனின் 
கட்டளைகள்படிதான் வாழ வேண்டும்.

அதோடு உலகச் செல்வங்கள் இன்றி ஏழைகளாய் வாழ வேண்டும்.

ஏழை என்ற வார்த்தையைச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

இல்லாதிருப்பவன் ஏழை.

இல்லாமை இரண்டு வகைப்படும்.

1. செல்வம் இல்லாமை.
2. செல்வத்தின் மீது பற்று இல்லாமை. (Poor in spirit)

செல்வம் இல்லாதிருந்து அதன் மேல் பற்று இருந்தால் அது செல்வம் இல்லாமை ஆகாது.

பிச்சைக்காரன் கூட மனதளவில் செல்வந்தனாக வாழ்ந்து கொண்டிருப்பான்.

லட்சாதிபதி கூட மனதளவில் ஏழையாக வாழ்ந்து கொண்டிருப்பான்.

 துறவிகள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களுக்குச் சொந்தம் கொண்டாடக் கூடாது.

புகை வண்டியில் பயணிப்பவர்கள் அதற்குச் சொந்தம் கொண்டாட முடியுமா?

எளிய உள்ளத்தோராக இருக்க வேண்டும்.

திருக்குடும்பம் இல்லறத்துக்கும், துறவறத்துக்கும் எடுத்துக் காட்டு.

மரியும், சூசையும் திருமணமானவர்கள்.
இயேசு, மரி, சூசை ஆகிய மூவரும் துறவிகள்.

 மூவரும் உலகில் தச்சு வேலை செய்து பொருள் ஈட்டி வாழ்ந்தார்கள்.

மூவரும் உலகப் பொருட்கள் மீது பற்று இல்லாமல் வாழ்ந்தார்கள்.


 "நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" 
(மத்தேயு நற்செய்தி 19:21)

இயேசுவின் இந்த அழைப்பை ஏற்று உலகப் பொருட்கள் எதுவும் இல்லாமல் வாழ்பவர்கள் துறவிகள்.

இவர்களும் இரண்டு வகையினர்.

1. துறவர சபைகளைச் சேர்ந்தவர்கள். 

இவர்கள் கற்பு, கீழ்ப்படிதல், தரித்திரம் ஆகிய வார்த்தைப் பாடுகளின் அடிப்படையில் வாழ்கிறார்கள்.

2. மேற்றிராசனக் குருக்கள். இவர்கள் கற்பு 
வார்த்தைப்பாடு கொடுப்பதோடு தங்கள் ஆயருக்குக் கட்டுப்பட்டு உழைக்கிறார்கள்.

ஒருவர் உலகப் பொருட்கள் மீது பற்றில்லாதவர் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

ஒருவர் ஒரு பொருளை 
அதற்காகவே விரும்பினால் அது பொருளாசை.

அதன் பயன்பாட்டுக்காக மட்டும் அதை வைத்திருக்க வேண்டும்.

அதற்காகவே விரும்புபவர்கள் அது கிடைக்காவிட்டாலும், கிடைத்தது தொலைந்து விட்டாலும் அதற்காக வருத்தப் படுவார்கள்.

பொருளை அதன் பயன்பாட்டுக்காக மட்டும் 
வைத்திருப்பவர்களும், அது தங்கள் கையை விட்டுப் போனால் அதைப் பற்றிக் கவலைப் படாதவர்களும் பொருள் பற்று இல்லாதவர்கள்.

பற்றில்லாதவர்கள் ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்கள்.

உலகையே படைத்த இயேசுவே எந்தப் பொருள் மீதும் பற்றில்லாமல் தான் வாழ்ந்தார்.

அவர் பிறந்த மாட்டுத் தொழுவம் கூட உலக ரீதியாக அவருடையது அல்ல.

பொது வாழ்வின் போது தலை சாய்க்கக் கூட அவருக்கு சொந்த இடம் இருந்ததில்லை.

கிடைத்தால் சாப்பாடு, கிடைக்கா விட்டால் பட்டினி.

ஒரு முறை பசியின் காரணமாக அத்திமரத்தில் பழம் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தார்.

பழம் இல்லை. பட்டினிதான்.

அவரது சீடர்களின் கதியும் 
அப்படித்தான். ஒரு முறை பசி தாங்க முடியாமல் தானியக் கதிர்களைக் கசக்கித் தின்றார்கள்.

அவர் அறையப்பட்ட சிலுவையும் அவருடையதல்ல,

அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையும் அவருடையதல்ல.

வள்ளுவர் பாடிய "பற்றற்றான்" அவர் தான்.

"பற்றுக பற்றற்றான் பற்றினை."
உலகப் பற்றற்ற இயேசுவின் பாதங்களை நாம் பற்றிக் கொண்டால் நாமும் உலகப் பற்றில்லாமல் வாழலாம்.

இறைவன் மீது மட்டும் பற்று கொள்வோம்.

உலகப் பொருட்களை இறைவன் புகழுக்காகப் பயன்படுத்துவோம்.

"பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு." (350)

லூர்து செல்வம்.

Tuesday, January 14, 2025

வியாழன் 16-01-25உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு, கடின உள்ளத்தினர் ஆகாதவாறு, ஒவ்வொரு நாளும் "இன்றே" என எண்ணி, நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள். (எபிரேயர் 3:13)

வியாழன் 16-01-25

உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு, கடின உள்ளத்தினர் ஆகாதவாறு, ஒவ்வொரு நாளும் "இன்றே" என எண்ணி, நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள். 
(எபிரேயர் 3:13)

எபிரேயர்கள் யூதர்கள். அவர்களது விசுவாச வாழ்க்கையில் ஏதோ பிரச்சினைகள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

அதனால் தான் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டு வந்த இஸ்ரேலர்கள்

 பாலைவன பயணத்தின் போது கடவுளுக்கு எதிராக செய்த கிளர்ச்சிகளை ஞாபகப்படுத்தி

"நீங்கள் அப்படியே நடந்து கொள்ளாதீர்கள்'' என்று புனித சின்னப்பர் அறிவுரை கூறுகிறார்.

கடவுளே இஸ்ரேலர்களை எகிப்திலிருந்து வழிநடத்தி வந்தார்.

சரியாக உணவும் தண்ணீரும் கிடைக்கவில்லை என்று அவர்கள் கிளர்ச்சி செய்தார்கள்.

விசுவாச வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும். அவைகளுக்கு கடவுளுக்கு ஏற்ற வகையில் தீர்வு காண வேண்டுமே தவிர பாவத்திற்கு இடம் கொடுத்து விடக்கூடாது.

"பாலை நிலத்தில் சோதனை நாளன்று கிளர்ச்சியின்போது இருந்ததுபோல, உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். 

அங்கே உங்கள் மூதாதையர் நாற்பது ஆண்டுகள் என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்."
(எபிரேயர் 3:8,9)

இஸ்ரேலர்கள் நடந்து கொண்டது போல கிறிஸ்தவர்கள் நடக்கக் கூடாது என்று அறிவுரை கூறுகிறார்.


'பாவத்தால் ஏமாற்றப்பட்டு, கடின உள்ளத்தினர் ஆகாதவாறு' பார்த்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் ஒருவருக்கு ஒருவர் அறிவுரை கூறுங்கள்." என்கிறார்.

"ஒவ்வொரு நாளும் "இன்றே" என எண்ணச் சொல்கிறார்."

"அறிவுரைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும், நாளைக்கு என்று தள்ளிப் போடக்கூடாது.'' என்கிறார்.

'இன்றே' என்ற ஒற்றைச் சொல்லில் பொதிந்து கிடக்கும் பொருளைத் தியானிப்போம்.

உடல் நலம் இல்லாத காரணத்தால் மருத்துவரைப் பார்க்கிறோம்.

மருத்துவர் பரிசோதித்துப் பார்த்து விட்டு என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவ ஆலோசனை கூறுகிறார்.

உடல் நலம் பெற வேண்டுமானால் அவர் கூறுவதை உடனடியாகச் செய்ய வேண்டும்.

"இப்போது வேறு வேலை இருக்கிறது. சில நாட்கள் கழித்துப் பார்த்துக் கொள்ளலாம்" என்று நாளைத் தள்ளிப் போட்டால் சுகமாக முடியாத நிலைக்கு நோய் முற்றிவிடும்.

பாவ நிலையில் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

சுவாமியார் பிரசங்கத்தில் பாவ நிலையில் உள்ளவர்கள் உடனடியாக நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து, பாவ மன்னிப்பு பெற்று, புண்ணிய வாழ்வை ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

நாம் செய்வதை 'இன்றே' செய்ய வேண்டும்.

நமக்கு நாளை வருமோ, வராதோ தெரியாது.

நாளை வருமா என்று நாளைக்கு தான் தெரியும்.

தெரியாத நாளுக்காகக் காத்திருக்காமல் கண் முன் இருக்கும் நாளைக் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முன்பு சினிமா தியேட்டர்களில் 'இன்றே இப்படம் கடைசி' என்று போஸ்டர் ஒட்டியிருந்தால் அன்று முதல் நாள் போல கூட்டம் இருக்கும்.

'இன்று கடைசி' என்ற சொற்றொடருக்கு அவ்வளவு வலிமை.

நமது வாழ்வில் ஆரம்ப நாள் (Birthday) எது என்று கேட்டால் சொல்லி விடுவோம்.

இறுதி நாள் எது என்று கேட்டால் நமக்குத் தெரியாது.

இறுதி நாளில் சொல்ல இருக்க மாட்டோம்.

இன்றே இறுதி எண்ணி செயல்பட வேண்டும்.

இன்று இறுதி என உறுதியாகத் தெரிந்தால் விண்ணகப் பயணத்தில் முழுக் கவனத்தையும் செலுத்துவோம்.

ஒவ்வொரு நாளையும் இறுதி நாள் என்று எண்ணி வாழ்ந்தால் பாவம் செய்ய மாட்டோம்.

செய்த பாவத்துக்குப் மன்னிப்புப் பெற்று விடுவோம்.

விண்ணக வாசல் திறந்த உடனே உள்ளே நுழைய ஒவ்வொரு 
வினாடியையும் இறுதி வினாடியாக எண்ணி எதிர் பார்த்த நிலையில் இருப்போம்.

திருமணத் தம்பதியர் தாலி கட்டும் நேரத்தை எவ்வளவு ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களோ அதை விட அதிக ஆர்வத்தோடு விண்ணக மணாழனைக் காணத் தயாராக இருப்போம்.

இன்றே இறுதி என்று எண்ணி வாழ்ந்தால் இறுதி வினாடி மிகவும் மார்ச்சிகரமானதாக இருக்கும்.

ஏனெனில் மண்ணக வாழ்வின் இறுதி தான் விண்ணக வாழ்வின் ஆரம்பம்.

ஆரம்ப மகிழ்ச்சி இறுதியிலேயே ஆரம்பித்து விடும். ,

ஆரம்பமும் முடிவும் இல்லாத கடவுள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாரோ  அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்போம் இறுதியில் ஆரம்பத்தைப் பார்த்தால்.

''ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள் '
(மத்தேயு நற்செய்தி 5:48)
என்ற இறைவாக்கு நம்மில் நிறைவேறும்.

லூர்து செல்வம்.