Wednesday, September 11, 2024

" மேலும் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது; "பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா?"(லூக்கா நற்செய்தி 6:39)



' மேலும் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது; "பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா?"
(லூக்கா நற்செய்தி 6:39)

புகை‌ வண்டிப் பயணத்தின் போது நடந்த உண்மைச் 
சம்பவம்.

எதிரில் அமர்ந்திருந்த நண்பர்  Catholic Digest வாசிப்பதில் வாசிப்பதில் மூழ்கிப் போயிருந்தார்.

நான் அவரைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.

வெகு நேரம் கழித்து ஏறிட்டுப் பார்த்தார்.

''என்ன வாசித்துக் கொண்டிருந்தீர்கள்?"

பதில் சொல்லாமல் புன்னகைத்தார்.

''எந்த மாதத்துக்குறியது?"

இப்பவும் பதில் சொல்லாமல் புத்தகத்தை என்னிடம் நீட்டினார்.

நான் அதை அதை அப்படியே வாங்கி மாற்றிப் பிடித்தேன்.

ஆமா, அவர் புத்தகத்தை தலை கீழாகத்தான் பிடித்துக் கொண்டிருந்தார்.

நான் புத்தகத்தை மாற்றிப்‌ பிடித்தைப் பார்த்து விட்டார்.

ஆனாலும் புன்னகையைக் குறைக்கவில்லை.

தொடர்ந்து பேசும் போது தெரிந்தது அவருக்கு எழுத வாசிக்கத் தெரியாது என்று.

உண்மை இதுதான்.

சிலர் தாங்கள் படித்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொள்வது வழக்கம்.

இது உலகியலில்.

ஆன்மீகத்திலும் இத்தகையோர் இருக்கிறார்கள்.

எப்போதும் கையில் பைபிளோடு இருக்கும் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார், 

"நீங்கள் கத்தோலிக்கர்கள் ஒழுங்காக பைபிளே வாசிப்பதில்லையா?"

"ஏன் இந்த சந்தேகம்?"

"அன்னை மரியாளை நோக்கி செபிக்க  வேண்டும் என்று பைபிளில் எங்கே கூறியிருக்கிறது?"

"அன்னை மரியாளை நோக்கி செபிக்கக் கூடாது என்று பைபிளில் எங்கே கூறியிருக்கிறது?"

"ஆன்மீகத்தில் செய்ய வேண்டும் என்று பைபிளில் கூறப்பட்டிருப்பதை மட்டுமே செய்ய வேண்டும்."


"மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
(மத்தேயு நற்செய்தி 18:18)

இந்த வசனத்தை இயேசு யாரைப் பார்த்துக் கூறுகிறார்?"

"சீடர்களைப் பார்த்து."

"சீடர்களால் நிர்வகிக்கப்படும் திருச்சபை,  அதாவது அப்போஸ்தலிக்கத் திருச்சபை, மண்ணுலகில்  அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்.

இயேசு நேரடியாகக் கூறுவது பைபிள்.

இயேசு திருச்சபை வழியாகக் கூறுவது பாரம்பரியம். 

பைபிள் நமக்குத் தரப்பட்டதும் திருச்சபை வழியாகத்தான்.

பைபிளில் உள்ள நூல்களை எல்லாம் தொகுத்து பைபிள் என்ற பெயரில் நமக்குத் தந்ததுவும் திருச்சபையின் பாரம்பரியம்தான்.

இயேசு கொடுத்த அதிகாரத்துடன் திருச்சபை கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

இயேசுவால் நிறுவப்பட்ட ஏக கத்தோலிக்க அப்போஸ்தலிக்க திருச்சபை ஆரம்ப காலத்திலிருந்தே புனிதர்களை நோக்கி செபிப்பதை வலியுறுத்துகிறது.

திருச்சபையின் உத்தரவுப்படி 
விசுவாசப் பிரமாணத்தில்

"பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையையும் பரிசுத்தவான்களுடைய ஐக்கியத்தையும் விசுவசிக்கிறேன் " என்று சொல்கிறோம். 

உலகில் உள்ள கிறிஸ்தவர்களும்,  உத்தரிக்கிற ஸ்தலத்தில்உள்ள கிறிஸ்தவர்களும் , மோட்சத்தில் உள்ள கிறிஸ்தவர்களும் சேர்ந்து தான் ஒரே திருச்சபை.

எல்லா கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் ஞான உடலின் உறுப்புக்கள்.

மோட்சத்தில் உள்ளவர்கள் பூமியில் உள்ள நமக்காகவும், உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காகவும் இறைவனிடம் செபிக்கலாம்.

நாம் நமக்காகவும், உலகில் உள்ள மற்றவர்களுக்காகவும், உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காகவும் செபிக்கலாம்.

நாம் நமக்காக செபிக்கும் படி மற்றவர்களைக் கேட்கலாம்.

அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஆன்மீகத்தில் ஒருவரோடொருவர் இணைந்திருக்கிறோம்.

இது கத்தோலிக்க திருச்சபையின் போதனை. 

இதன் அடிப்படையில் தான் கத்தோலிக்கர்கள் அன்னை மரியாளையும் மற்ற புனிதர்களையும் தங்களுக்காக இறைவனிடம் வேண்டும் படி வேண்டுகிறோம்.

இது விடயத்தில் பைபிளுக்கு சரியான விளக்கம் கொடுக்கத் தெரியாமல், 

பைபிள் மட்டும் போதும் என்று உலகை வலம் வந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பிரிவினை சபையினர் ஆன்மீகப் பார்வையற்றவர்கள்.

அவர்களின் வழிகாட்டுதலின்படி நடப்பவர்கள் போக வேண்டிய இடத்துக்குப் போக முடியாது.

பைபிள் வசனங்களுக்கு விளக்கம் வேண்டியவர்கள் பைபிளை முதல் முதலில் தொகுத்துக் கொடுத்த கத்தோலிக்க திருச்சபையிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

பைபிளுக்கு உரிய விளக்கம் கொடுக்கத் தெரியாத பிரிவினை சபையினரிடம் சென்று விளக்கம் கேட்பது 

பார்வையற்றவர்கள் பார்வை அற்றவர்களிடம் சென்று ஊருக்கு வழி கேட்பதற்குச் சமம்.

கத்தோலிக்கர்கள் பிரிவினை சபையினர் நடத்தும் செபக் கூட்டங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். 

இது பிள்ளைகள் தாயின் மீது நம்பிக்கை இல்லாமல் பக்கத்து வீட்டில் போய் பிச்சை எடுப்பதற்குச் சமம்.

புனிதர்கள் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை திருச்சபையின் போதனை,

 அதாவது இறைவன் இயேசுவின் போதனை.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment