Thursday, June 13, 2024

"உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள்."(மத்தேயு.5:29)

" உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள்."
(மத்தேயு.5:29)

பாவச் சோதனைகளுக்குக் காரணமான பாவச் சந்தர்ப்பங்களை விலக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே

"உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள்." என்று ஆண்டவர் சொல்கிறார்.

பாவத்திற்கு ஏதுவான சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.

மழை பெய்யும் போது வெட்ட வெளியில் நின்று கொண்டு
"ஐயோ,  நனைகிறேனே" என்று கத்திப் பயனில்லை.

மேற்கூரை உள்ள இடத்தில் நின்றால் தான் நனையாமல் நிற்க முடியும்.

சினிமா பார்ப்பதை பழக்கமாகக் கொண்டவனால் கெட்ட பார்வை, கெட்ட எண்ணங்கள் போன்ற பாவங்களிலிருந்து தப்பிக்க முடியாது.

ஏனெனில் சினிமா தயாரிப்பாளர்கள் இலாப நோக்கம் கருதி அசிங்கமான காட்சிகளோடு படம் எடுத்திருப்பார்கள்.

அவர்கள் பாவத்தைப் பணமாக்குகிறார்கள்.

நாம் நமது பணத்தைப் பாவமாக்கக் கூடாது.

நாம் நமது பார்வையையும், எண்ணங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் படம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

நமது நண்பர்கள் நல்லவர்களாக இருந்தால் அவர்களது நற்குணம் நம்மையும் பற்றிக் கொள்ளும்.

கெட்டவர்களாக இருந்தால் அவர்களது கெட்ட பழக்கங்கள் நம்மையும் தொற்றிக் கொள்ளும்.

வாசிப்பதற்கு பத்திரிகைகள், புத்தகங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

வாசிக்கக் கவர்ச்சியாக இருக்கிறது என்பதற்காக அசிங்கமான புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கதாபாத்திரங்களைப் போல கெட்டுப் போவார்கள்.

Smart phone கள் கடல் மாதிரி.

கடலில் நாம் சாப்பிடுவதற்குரிய மீன்களும் உண்டு.

நம்மைச் சாப்பிடக் கூடிய திமிங்கிலங்களும் உண்டு.

அதேபோல் Smart phoneலும் நமக்குப் பயன்படக்கூடிய அம்சங்களும் உண்டு, நம்மைப் பாவ பாதாளத்தில் தள்ளிக் கூடிய அம்சங்களும் உண்டு.

அதன் நல்ல அம்சங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

மறுபக்கம் வேடிக்கைக்குக் கூட எட்டிப் பார்க்கக்கூடாது.

பார்த்தால் தொலைந்தோம்.

YouTube க்குள் நுழைந்தால் நமது கண்ணுக்கும், கருத்துக்கும் ஆன்மீக ரீதியாகப் பயன்படும் காட்சிகளை மட்டும் பார்க்க வேண்டும்.

phoneலிருந்து எப்போதும் மின் கதிர் வீச்சு வீசிக் கொண்டிருக்கும்.

அதை சட்டைப் பையில் வைத்திருந்தால் அதிலிருந்து வீசும் மின் கதிர் வீச்சு நமது இருதயத்தைப்  பாதிக்கும்.

Pants pocket ல் வைத்திருந்தால் Kidney யைப் பாதிக்கும்.

படுக்கும் போது தலையணைப் பக்கம் வைத்திருந்தால் நமது மூளையைப் பாதிக்கும்.

தொடர்ந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தால் நமது கண் பார்வையைப் பாதிக்கும்.

நாம் சாப்பிடக்கூடிய மருந்துகள் அருகில் வைத்திருந்தால் மருந்துகள் பாதிக்கப்படும்.

குழந்தைகள் அதை வைத்து நோண்டிக் கொண்டிருந்தால் அவர்களின் உடல் நலமும், ஆன்ம நலமும் பாதிக்கப் படும்.

மொத்தத்தில் அதனால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகம்.

கடவுள் படைத்தவை அனைத்தும் நல்லவை.

ஆனால் அவற்றைப் பயன்படுத்தி நாம் உண்டாகுக்கும் நவீன கண்டு பிடிப்புகள் நன்மைகளும், கெடுதிகளும் கலந்தவை.

அவற்றைக் கவனமாகப் பயன்படுத்தாவிட்டால் ஆன்மீக ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படும்.

மின் விளக்கு கண்டுபிடிக்கப் படாத காலத்தில் மனிதன் பகலில் உழைத்தான், இரவு முழுவதும் ஓய்வெடுத்தான்.

உடல் ஆரோக்கியமாக இருந்தது.

இப்போது மின் விளக்குகள் இருப்பதால் மனிதன் இரவும், பகலும் உழைக்கிறான்.

(உழைப்பைப் பற்றி சொல்லும் போது இரவுதான் முதலில் வருகிறது.)

ஆக நாமே நவீன கண்டு பிடிப்புகள் மூலம் பாவ சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்கிறோம்.

போர்களினால் ஏற்படும் தீமைகளுக்குக் காரணம் அணுகுண்டைக் கண்டு பிடித்தது தானே.

பாவ சந்தர்ப்பங்களை தவிர்க்க வேண்டும் என்று சொல்வதிலேயே

புண்ணிய சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தும் அடங்கியிருக்கிறது.

காலை 6 மணிப் பூசைக்குப் போக வேண்டுமென்றால் அதிகாலையில் எழ வேண்டும்.

அதிகாலையில் எழ வேண்டும் என்றால் இரவில் சீக்கிரம் படுக்கச் செல்ல வேண்டும்.

இறையறிவில் வளர வேண்டுமென்றால் பத்திரிகைகளையும், கதைப் புத்தகங்களையும் வாசிப்பதைத் தவிர்த்து விட்டு 

ஞான வாசகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பைபிள் வாசிப்புக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அடுத்து புனிதர்கள் வரலாறு.

ஞான வாசகத்தின் போதே நமது ஆன்மா சுத்தம் அடைவதை உணரலாம்.

அடிக்கடி திவ்ய நற்கருணையைச் சந்தித்து ஆண்டவரோடு உரையாடினால் அவர் நமது சிந்தனை முழுவதிலும் இருப்பார்.

இயேசு இருக்கும் இடத்தைப் பாவம் எட்டிக் கூட பார்க்காது.

அடிக்கடி ஆன்ம குருவானவரைச் சந்தித்துப் பேச வேண்டும்.

அவர் காட்டும் ஆன்மீக வழியில் நடக்க வேண்டும்.

நமது விண்ணகப் பாதையில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆன்மீக வழிகாட்டி (Spiritual Director) இருக்க வேண்டியது அவசியம்.

துறவற சபையில் உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட குருவை அவர்கள் வாழ்நாளெல்லாம் வழிகாட்டியாக வைத்துக் கொள்வார்கள்.

குடும்பத்தில் வாழ்வோர் தங்கள் பங்குக் குருவை வழிகாட்டியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

அவர்தான் நமது பாவங்களை மன்னிக்கவும், நம்மை புண்ணியத்தில் வளர்க்கவும் கடவுளால் தரப்பட்டவர்.

அவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாவ சந்தர்ப்பங்களைத் தவிர்ப்போம்.

புண்ணிய சந்தர்ப்பங்களில் வாழ்வோம்.

புனிதத்தில் வளர்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment