Sunday, May 19, 2024

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?

தூய ஆவியானவர் நம்மில் செயல்புரிகிறார் என்று கூறும் நாம் எப்படிச் செயல்புரிகிறார் என்பதைப் பற்றி சிந்தித்திருக்கிறோமா?

அவர் நம்மோடு செயல்புரிகிறார் என்பதை உணர்கிறோமா?

யாரோடும் நாம் நெருங்கிப் பழகினால் நம்மில் ஏதாவது மாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருந்தால் அது என்ன மாற்றம் என்பதை உணராமல் இருக்க முடியாது.

நாம் பரிசுத்த ஆவியின் மீது பக்தி உள்ளவர்களாக இருந்தால் அவர் நம்மில் செயல்புரியும்போது நாமும் அவரோடு ஒத்துழைப்போம்.

விவசாயி நிலத்தை உழுமுன் முதலில் தண்ணீர் பாய்ச்சி அதை நனைப்பான்.

நிலம் உழப்பட தகுதி பெற வேண்டுமானால் முதலில் தண்ணீரில் நனைய வேண்டும்.

நனைய வேண்டுமானால் அது தண்ணீரை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தூய ஆவியானவர் நமது ஆன்மாவில் செயல் புரிய வேண்டுமானால் முதலில் தன் அருளால் அதை நனைப்பார்.

நாம் நமது இதயத்தில் தூய ஆவியே இணைந்திருந்தால் நமக்குள் இறையருள் பாய்வதை உணர்வோம்.

எதற்காக இறையருள்?

நமது ஆன்மாவில் அவரது கொடைகளை விதைக்க.

அவருடைய கொடைகள்?

1ஞானம், (wisdom)
2மெய்யுணர்வு, (understanding)
3அறிவுரைத்திறன், (counsel)
4நுண்மதி, (fortitude)
5ஆற்றல், (knowledge)
6இறைப்பற்று, (piety)
7இறையச்சம். (fear of the Lord.)

ஒவ்வொரு கொடையைப் பற்றியும் பார்ப்போம்.

1ஞானம்.

நமக்குப் புத்தி இருக்கிறது.
நமது புத்தியின் மூலமாகவும்,‌ ஐம்புலன்கள் மூலமாகவும் நிறைய விசயங்களை அறிந்திருப்போம்.

நாம் அறிந்திருப்பதை நமது ஆன்மீக நலனுக்குப் பயன்படுத்தத் தெரியும் திறமையே ஞானம்.

உதாரணத்திற்கு,

தினமும் பைபிள் வாசிக்கிறோம்.

இறை வசனங்களை அறிகிறோம்.

நமக்கு பைபிள் அறிவு இருக்கும்.

அந்த அறிவை எப்படிப் பயன்படுத்துகிறோம்?

பைபிள் பற்றிக் கட்டுரைகள் எழுதப் பயன்படுத்துகிறோமா?

தேர்வு எழுதப் பயன்படுத்துகிறோமா?

வினாடி வினாப் போட்டியில் கலந்து கொள்ளப் பயன்படுத்துகிறோமா?

இம்மூன்றிலும் மதிப்பெண் கிடைக்கலாம்.

பெருமை கிடைக்கலாம்.

ஆனால் ஆன்மீக வாழ்வுக்கு இவற்றால் எந்த பயனும் இல்லை.

நமது பைபிள் அறிவை ஆன்மீக வாழ்வுக்கு பயன்படுத்த நமக்குள் உள்ள திறமையே ஞானம்.

உதாரணத்திற்கு ஒரு வசனத்தை எடுத்துக் கொள்வோம்.

"இயேசுவின் தாய் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார். "
(அரு. 2:5)

கானாவூர்த் திருமணத்தின்போது அன்னை மரியாள் இயேசுவிடம் கூறிய வார்த்தைகள்.

கானாவூர்த் திருமண நிகழ்ச்சியைப் பல முறை வாசித்திருப்போம்.

பொது வாழ்வின் போது இயேசு செய்த முதல் புதுமை.

பலருக்கும் பல காரணங்களுக்காக இப்புதுமை மனதைக் கவர்ந்திருக்கும்.

எக்காரணம் மனதைக் கவர்ந்ததோ அதன்பின்னால் தூய ஆவியின் தூண்டுதல் இருக்கும்.

யாருடைய ஆன்மீக வளர்ச்சிக்குப் புதுமையின் எப்பகுதி தேவையோ அது மனதைத் தொடும்படி தூய ஆவி பார்த்துக் கொள்வார்.

நமது மனதைத் இவ்வசனம் தொட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம்.

இயேசுவின் தாய் திருமண வீட்டாரைப் பார்த்துக் கூறும் வார்த்தைகள்.

நாமும் அங்கு நிற்கிறோம்.

அப்படியானால் அவ்வார்த்தைகள் நம்மைப் பார்த்துக் கூறப்படுகின்றன.

"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்"

அவற்றைப் பற்றி தியானிக்க ஆரம்பிப்போம்.

தூய ஆவியானவர் நமக்குள்ளிருந்து எண்ணங்களைத் தூண்டிக் கொண்டிருப்பார்.

சில சமயங்களில் அவை நாம் எதிர்பாராத எண்ணங்களாக இருக்கும்.

ஆனால் நமக்குத் தேவையான எண்ணங்களாக இருக்கும்.

"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்"

"கடவுள் நமக்குச் சொல்லி நாம் எதையாவது செய்யாதிருக்கிறோமா?"

என்று நம்மைப் பார்த்து கேள்வி கேட்க ஆரம்பிப்போம், தூய ஆவியின் தூண்டுதலால்.

நாம் எதிர்பாராமல் எப்போதோ ஒரு நாள் சுவாமியார் வைத்த பிரசங்கம் ஞாபகத்துக்கு வரும்.

"அயலான் யாரோடும் சமாதான உறவில் இல்லாத யாரும் இன்று காணிக்கை போடவேண்டாம்.

சமாதானம் செய்து கொண்டபின் காணிக்கை போட்டால் போதும்."

பிரசங்கத்தைப் பொருட்படுத்தாமல் நாம் காணிக்கை போட்டதும் ஞாபகத்துக்கு வரும்.

இப்போது ஆவியானவர் உள்ளிருந்து தூண்டுவார்.

"அன்று செய்யாததை இன்று செய்."

ஆவியானவரின் தூண்டுதலை‌ உடனடியாக ஏற்றுக் கொண்டு 

‍விரோதியோடு சமாதானம் செய்து கொள்கிறோம்.

இவ்வாறு வசன அறிவு வெறும் அறிவாக மட்டும் இல்லாமல் ஆன்மீக வாழ்வில் ஆக்கப்பூர்வமாக செயல் பட உதவுவது தூய ஆவியானவரின் ஞானம்.

இது ஒரு உதாரணம் மட்டுமே.


ஆவியானவரின் ஞானம் இருந்தால்

பைபிள் அறிவு மட்டுமல்ல

சாதாரண உலகியல் அறிவு கூட ஆன்மீக வாழ்வில் பயன்படும்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment