Saturday, May 18, 2024

"இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.''(அரு. 21:25)

"இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.''
(அரு. 21:25)

"பைபிள் மட்டும் போதும்" 

என்று கூறும் நண்பர்கள் இந்த பைபிள் வசனத்தை வாசித்துத் தியானிக்க வேண்டும்.

33ஆண்டுகள் உலகில் வாழ்ந்த இயேசு 3 ஆண்டுகள் தான் நற்செய்தியை வாய் மூலம் அறிவித்தார்.

ஆனால் 33 ஆண்டுகளும் வாழ்ந்து அறிவித்தார்.

ஏழைகள் பேறுபெற்றவர்கள் என்பதைப் போதிக்க

ஏழையாய்ப் பிறந்தார்,
ஏழையாய் வாழ்ந்தார்,
ஏழையாய் மரித்தார்.

கீழ்ப்படிதலைப் போதிக்க 
30 ஆண்டுகள் தனது
 பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்.

நிச்சயமாக அவர் தனது பெற்றோருடன் பேசியிருப்பார்.

தான் போதிக்கவிருப்பதையும்,
செய்யவிருப்பதையும் அவர்களிடம் சொல்லியிருப்பார்.

3 ஆண்டுகள் பொது மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.

3 ஆண்டுகளும் தனது 12 சீடர்களையும் கூடவே வைத்திருந்தார்.

பொது மக்களுக்குப் போதித்த அனைத்தையும் அவர்களுக்கு விளக்கினார்.

தான் போதித்த அனைத்துக்கும் எழுத்து வடிவம் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால்

சீடர்கள் அனைவரும் எழுதியிருப்பார்கள்.

ஆனால் அனைவரும் எழுதவில்லை.

நற்செய்தியாளர்களில் அருளப்பரும், மத்தேயுவும் மட்டுமே அப்போஸ்தலர்கள்.

 கி.பி 33 ல் சீடர்கள் நற்செய்தியைப் போதிக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால் கி.பி 40 - 70 காலக்கட்டத்தில் தான் முதல் மூன்று நற்செய்திகள் எழுதப்பட்டன.

அருளப்பர் கி.பி 90ல் தான் எழுதினார்.

கி.பி 40 வரை யார் கையிலும் நற்செய்தி நூல் இல்லை.

அருளப்பர் கி.பி 90வரை அருளப்பர் வாய் மொழியால் மட்டுமே போதித்தார்.

இப்போது பைபிள் மட்டும் போதும் என்பவர்கள் அக்காலக் கட்டத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்?

ஆதித் திருச்சபையில் வாய் மொழியால் மட்டுமே நற்செய்தி போதிக்கப்பட்டது.

வாய் மொழிப் போதனை தான் பாரம்பரியம்.

பாரம்பரியத்திலிருந்துதான் நற்செய்தி நூல்கள் பிறந்தன.

எழுதப்பட்ட போதனை - நற்செய்தி நூல்கள்.

எழுதப்படாத போதனை - பாரம்பரியம்.

நற்செய்தி நூல்களும், பாரம்பரியமும் சேர்ந்துதான் முழுமையான போதனை.

இரண்டு கால்கள் உள்ளவர்கள் இரண்டையும் பயன்படுத்தி நடந்தால்தான் இயல்பான நடை.

இராயப்பர் தான் திருச்சபையின் தலைவர் என்பதற்கு நற்செய்தி நூல்களிலும் ஆதாரம் இருக்கிறது,

பாரம்பரியத்திலும் ஆதாரம்‌ இருக்கிறது.

ஆனால் அதை பிரிவினை சபைகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இயேசுவைப் பெற்றவள் மரியாள்.

ஆனால் இயேசுவை ஏற்றுக் கொள்கிறவர்கள் மரியாளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

மரியாள் ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டதுக்கு பாரம்பரியத்தில் ஆதாரம்‌ இருக்கிறது.

ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

திவ்ய நற்கருணை என்றால் இயேசுவின் ஆன்மமும் சரீரமும் என்பதற்கு 

நற்செய்தி நூல்களிலும் ஆதாரம் இருக்கிறது,

பாரம்பரியத்திலும் ஆதாரம்‌ இருக்கிறது.

ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.


கத்தோலிக்கர்களின் விசுவாசத்துக்கு பைபிளும், பாரம்பரியமும் ஆதாரம்.

ஆனால் பிரிவினை சகோதரர்களின் விசுவாசத்துக்கு அவர்கள் தான் ஆதாரம், பைபிள் அல்ல.

பைபிள் மட்டும் ஆதாரம் என்றால் ஒரு சபைதானே இருக்க வேண்டும், ஆனால் ஆயிரக்கணக்கான பிரிவினை சபைகள் இருக்கின்றனவே!

இயேசு ஒருவர்.

அவர் நிறுவிய திருச்சபையும் ஒன்று மட்டுமே.

ஏக, 
பரிசுத்த, 
அப்போஸ்தலிக்க, கத்தோலிக்கத் திருச்சபை மட்டும்தான் இயேசு நிறுவிய திருச்சபை.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment