Monday, May 6, 2024

"தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார். "(அரு.15:26)

"தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார். "
(அரு.15:26)

இயேசுவைப் பற்றியும், அவரது நற்செய்தியையும் வாசிக்கும் போது ஒரு அடிப்படை உண்மையை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தந்தை, மகன், தூய ஆவி மூவரும் ஒரே கடவுள்.

மனிதர்களின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய மனிதனாகப் பிறந்தது இரண்டாம் ஆளாகிய இறைமகன் தான்.

ஆனால் இது நமது பரிசுத்த தம திரித்துவத்தின் திட்டம்.

தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூவரின் ஒரே சித்தத்தினால்தான் நாம் மீட்புப் பெறுகிறோம்.

இயேசுவால் தேர்வு செய்யப்பட்ட 12 சீடர்களும் மூன்று ஆண்டுகள் அவருடன் தான் வாழ்ந்தார்கள்.

அவர் சென்றவிடமெல்லாம் அவருடன் சென்றார்கள்.

அவர் செய்த புதுமைகளை எல்லாம் பார்த்தார்கள்.

அவருடைய போதனைகளை எல்லாம் கேட்டார்கள்.

அவற்றுக்கான விளக்கங்களையும் கேட்டார்கள்.

அவர் இறைமகன் என்பதையும், மெசியா என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனாலும் அவர்களுடைய விசுவாசம் முழுமையாக இல்லை.

முழுமையாக இருந்திருந்தால் அவர் பாடுகள் பட்டு, மரித்து மூன்றாம் நாள் உயிர்க்கப் போவதாகச் சொன்னது அவர்களுக்குப் புரிந்திருக்கும்.

இயேசு கைது செய்யப்பட்ட போது அவரை விட்டு ஓடிப் போயிருக்க மாட்டார்கள்.

இராயப்பர் அவரை மூன்று முறை மறுதலித்திருக்க மாட்டார்.

 மகதலா மரியா சீடர்களிடம் இயேசு உயிர்த்தெழுந்ததை அறிவித்தபோது நம்பியிருப்பார்கள்.

 ஆனால் அவர்கள் நம்பவில்லை.

"அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.''
(மாற்கு நற்செய்தி 16:11)

ஆக, இயேசுவோடு வாழ்ந்த போதும், உயிர்த்த போதும் அவர்களுடைய விசுவாசம் முழுமையாக இல்லை.

ஆனால் பெந்தகோஸ்தே திருநாள் அன்று தூய ஆவி அவர்கள் மீது இறங்கி வந்த போது அவர்களுடைய விசுவாசம் முழுமை அடைந்தது.

இறைமகனுடன் வாழ்ந்தபோது முழுமை அடையாத விசுவாசம் தூய ஆவி இறங்கி வந்தவுடன் முழுமை அடைந்தது.

இறைமகனும், தூய ஆவியும் அதே கடவுள் தான்.

இயேசு நினைத்திருந்தால் சீடர்கள் அவரோடு வாழ்ந்த போதே அவர்களுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தியிருக்கலாம்.

ஆனால் இயேசு அவர்களிடம்,

"தந்தையிடமி;ருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். 

அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். 

அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார். 

நீங்களும் சான்று பகர்வீர்கள்."
என்கிறார்.

ஏன் இயேசு தூய ஆவி வருமட்டும் அவர்களுடைய விசுவாசம் உறுதிப் படாதிருக்க அனுமதித்தார்?

ஏனெனில் அது அவருடைய சித்தம்.

தந்தையின் சித்தமும், தூய ஆவியின் சித்தமும் அதுதான்.

ஏனெனில் மூவரும் ஒரே கடவுள்.

மனித அனுபவத்துக்கும், இறை அனுபவத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை உற்று நோக்க வேண்டும்.

பிறப்பில் ஆரம்பித்து இறப்பில் முடிவடைவது மனித அனுபவம்.

ஆனால் இறைமகன் இயேசுவைப் பொறுத்த மட்டில் அவர் உலகிற்கு வந்ததன் நோக்கம் அவரது இறப்பில் தான் நிறைவேற ஆரம்பிக்கிறது.

மனித குல மீட்பு புனித வெள்ளி மாலை மூன்று மணிக்கு ஆரம்பித்தது. அப்போது தான் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக மரித்தார்.

அவர் உலகிற்கு வந்ததன் நோக்கம் அவரது இறப்பில் தான் நிறைவேற ஆரம்பித்ததன் முதல் நிரூபணம் நல்ல கள்ளன்.


சிலுவையில் தொங்கிய இயேசுவைப் பார்த்து அவன்,

 "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்றான். 

அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார். 

அவன் இயேசுவோடு சிலுவையில் தொங்கினான்.

அவரோடு மரித்தான்.

அவரோடு விண்ணகம் சென்று விட்டான்.

இயேசு உலகுக்கு வந்ததன் நிறைவேற ஆரம்பித்து விட்டது.

தொடர்ந்து நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

இயேசு அன்று பேசிய ஓவ்வொரு வார்த்தையும் நமக்கும் பொருந்தும்.

இயேசு மரித்த வினாடியே விண்ணக வாசல் திறந்து விட்டது, நமக்கும் சேர்த்து தான்.

நம்மைப் பார்த்தும் சீடர்களுக்குக் கூறிய அதே வார்த்தைகளைக் கூறுகிறார்.

"தந்தையிடமி;ருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார்.

 அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். 

அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்.''

இயேசு கூறியபடியே நாம் தேவத் திரவிய அனுமானங்களைப் பெறும்போதெல்லாம் தூய ஆவி நம்மீது இறங்கி வருகிறார், அதாவது நம்மில் செயல்புரிகிறார்.

நாம் ஞானஸ்நானம் பெற்ற போது தூய ஆவி நமது சென்மப் பாவத்தை மன்னித்து

நம்மைக் கத்தோலிக்கத் திருச்சபையின் உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டார்.

அதாவது நம்மை இயேசுவின் சீடர்களாக ஏற்றுக் கொண்டார்.

பெந்தகோஸ்தே திருநாளன்று சீடர்கள் மீது இறங்கி வந்த அதே தூய ஆவி.

தூய ஆவி.இறங்கியவுடன் சீடர்கள் என்ன செய்ய ஆரம்பித்தார்கள்?

அதுவரை பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்த சீடர்கள் பயம் நீங்கி துணிவுடன் நற்செய்தியைப் போதிக்க ஆரம்பித்தார்கள்.

கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மில் தூய ஆவி செயல் புரிந்து கொண்டிருக்கிறார்.

நற்செய்தியைப் போதிக்க ஆரம்பித்து விட்டோமா?

சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நற்செய்தியைப் போதிக்க வேண்டும்.

விருந்துக்குச் செல்லும் போது இலையில் பரிமாறப்பட்ட உணவைச் சாப்பிடாவிட்டால் அது அழைத்தவரை அவமானப் படுத்துவதற்குச் சமம்.

தூய ஆவி நம்முடன் இருக்கும் போது நாம் நற்செய்தியை அறிவிக்கா விட்டால்?

ஒவ்வொரு கிறிஸ்தவனும் பயப்படாமல் நற்செய்தியை அறிவிப்போம்.

நற்செய்தியை அறிவிப்பது குருக்களுக்கு மட்டுமே உள்ள கடமை அல்ல.

தூய ஆவியைப் பெற்ற நம் ஒவ்வொருவரின் கடமை.

சொல்லால் மட்டுமல்ல நமது முன்மாதிரிகையான வாழ்க்கையிலும் நாம் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.

செய்கிறோமா?

சுயபரிசோதனை செய்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment