Friday, May 31, 2024

" என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?"(லூக்கா.1:43)

" என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?"
(லூக்கா.1:43)

எலிசபெத் அன்னை மரியாளின் சித்தி, அன்னம்மாளின் தங்கை.

அவள் கருவுற்றிந்தது கபிரியேல் தூதர் சொல்லிதான் மரியாளுக்குத் தெரியும்.

கபிரியேல் தூதர் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே

 சக்கரியாசுக்குத் தோன்றி அருளப்பரின் பிறப்பைப் பற்றி அறிவித்து விட்டார்.

மரியாள் வாழ்ந்தது நாசரேத்.
எலிசபெத் வாழ்ந்தது ஒரு மலைநாடு.

தான் கருவுற்றிந்ததை மரியாள் எலிசபெத்துக்குச் சொல்லவில்லை.

எலிசபெத்துக்கு அது எப்படித் தெரியும்?

தூய ஆவியானவர் சொல்லித் தெரியும்.

 "எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்."
 (1:41)

மரியாளின் வயிற்றில் கருத்தரித்திருப்பது கடவுள் என்று தூய ஆவியானவர் சொல்லித்தான் எலிசபெத்துக்குத் தெரியும்.

மரியாள் எலிசபெத்தை வாழ்த்தியபோது அவர் வயிற்றிலிருந்த குழந்தை அருளப்பர் மகிழ்ச்சியால் துள்ளினார்.

 
எலிசபெத் மரியாளை,

" என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?" எனக் கூறி வாழ்த்தினார்.

மரியாள் மீட்பரின் தாய்

எலிசபெத் மீட்பரின் முன்னோடியின் தாய்.

முன்னோடி பெயருக்கு ஏற்றவாறு மீட்பருக்கு முன்னாலேயே உலகிற்கு வந்து விட்டார்.

மரியாளின் வயிற்றில் இருந்தது கடவுள் என்பதைத் தன் தாய் மூலமாக அறிவித்து விட்டார்.

முன்னோடியின் முதல் வேலை அது.

மரியாளும், எலிசபெத்தும் சந்தித்தவுடன் நடந்த நிகழ்வுகளைத் தியானிப்போம்.

1. எலிசபெத்து தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார்.

மரியாள் ஏற்கனவே தூய ஆவியால் நிறப்பப் பட்டிருந்தாள். அவருடைய வல்லமையால் தான் அவள் இயேசுவைக் கருத்தரித்தாள்.

தூய ஆவியால் நிறப்பப் பட்ட இருவர் சந்திக்கும் போது இருவரும் அவரால் இயக்கப் படுவார்கள்.

இருவருடைய செயல்பாடுகளும் அவருக்கு ஏற்றவைகளாகவே இருக்கும்.

மரியாளும் எலிசபெத்தும் நடந்து கொண்ட விதமே இதற்குச் சான்று.

மரியாள் எலிசபெத்திடம் நடந்து கொண்டது போலவும்,

எலிசபெத் மரியாளிடம் நடந்து கொண்டது போலவும்,

 நாம் நமது உறவினர்களிடம் நடக்க வேண்டும்.


2. இயேசுவும் அருளப்பரும் சந்தித்துக் கொண்டார்கள்.

மரியாளும் எலிசபெத்தும் சந்தித்துக் கொண்டது வெறும் வெளியரங்கமான சந்திப்பு அல்ல.

உணர்வுப் பூர்வமான உள்ளரங்க சந்திப்பு.

ஆகவேதான் குழந்தைகளும் சந்தித்துக் கொண்டனர்.

3. அருளப்பர் மகிழ்ச்சியால் துள்ளினார். அப்போது அவருடைய சென்மப் பாவம் மன்னிக்கப் பட்டது.

4. மரியாளும் எலிசபெத்தும் தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்கள்.

எத்தகைய மகிழ்ச்சி?

தூய ஆவி அவர்களை ஆட்கொண்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சி.

தூய ஆவியின் கனிகளில் ஒன்று மகிழ்ச்சி.

தூய ஆவி எங்கே இருக்கிறாரோ அங்கே அன்பும் அதன் விளைவான மகிழ்ச்சியும் இருக்கும்.

ஒருவரிடம் பொருள் இருந்தால் அதை மற்றவர்களுக்குக் கொடுத்தால்தான் போகும்.

ஆனால் ஒருவரிடம் மகிழ்ச்சி இருந்தால் நாம் அவர் அருகில் போன உடனே அது நம்மையும் தொற்றிக் கொள்ளும்.

தூய ஆவியின் வல்லமையால் மரியாள் இயேசுவைக் கருத்தரித்த போது அவளிடம் ஏற்பட்ட மகிழ்ச்சியுடன் மரியாள் எலிசபெத்தைப் பார்க்க வந்தாள்.

மரியாள் எலிசபெத்தைப் பார்த்தவுடன் அவளையும் தூய ஆவியானவர் ஆட்கொள்ள,

 அவளும் மகிழ்ச்சியால் நிறப்பப்பட்டாள்.

மகிழ்ச்சியை இரண்டு குழந்தைகளும் பரிமாறிக் கொண்டனர்,

இரண்டு தாய்மாரும் பரிமாறிக் கொண்டனர்.

அம்மகிழ்ச்சியின் விளைவாகத் தான் மரியாள் கடவுளைப் புகழ்ந்து பாடினாள்.

ஆண்டவரைப் போற்றிப் புகழ்கிறாள். 

 அவரை நினைத்து மனதில் பேருவகை கொள்கிறாள். 

 தான் ஒரு அடிமை என்பதையும்,  

தாழ்நிலையைக் கடவுள் எப்படி கண்ணோக்கினார் என்பதையும் நினைத்து மகிழ்கிறாள்.

மரியாளின் புகழ்ச்சிப்பாடலை
நற்செய்தி நூலில் வாசித்துப் பார்த்து

அத்தகைய எண்ணங்கள் நமது உள்ளத்தில் எப்போதாவது தோன்றியிருக்கின்றனவா என்பதையும் சிந்தித்துப் பார்ப்போம்.

மாதாவின் மகிழ்ச்சிப் பாடலை நாமும் அடிக்கடிப் பாடினால் நமது உள்ளத்திலும் அத்தகைய எண்ணங்கள் உதிக்கும்.

இப்போது ஒரு கேள்வி கேட்கலாம்.

அன்னை மரியாள் கடவுளின் தாய். அற்ப பாவ மாசு கூட இல்லாதவள்.

நாமோ பாவிகள்.

அருள் நிறைந்தவளின் மனதில் உதித்த எண்ணங்கள் பாவிகளாகிய நமது உள்ளத்தில் எப்படி உதிக்கும்? 

நாம் பாவிகள் என்பது இயேசுவுக்குத் தெரியும்.

ஆனால் நம்மைப் பார்த்து,

"ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
(மத்தேயு.5:48) 

என்று ஏன் சொன்னார்?

நமது வாழ்வின் நோக்கம் உன்னதமாக இருக்க வேண்டும்.

அதை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

35 மதிப்பெண்கள் வாங்கிக் கொண்டிருக்கும் மாணவன் 100 மதிப்பெண்களை நோக்கமாக வைத்து முயன்று படிக்க வேண்டும்.

அப்போது தான் முயற்சியின் விளைவாக 80 மதிப்பெண்களாவது எடுக்க முடியும்.

"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்."

அன்னை மரியாளை இயேசு நமக்கும் தாயாகத் தந்திருக்கிறார், 

அவளைப் போல நாமும் வாழ முயற்சிக்க வேண்டும் என்பதற்காக.

முயற்சிப்போம், தூய ஆவியின் துணையோடு.

வெற்றி பெறுவோம்.

லூர்து செல்வம்.

Thursday, May 30, 2024

"அவர் மறுமொழியாக, "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்."(அரு. 9:3)

"அவர் மறுமொழியாக, "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்."
(அரு. 9:3)

காரண, காரிய தொடர்புடையவை செயல்கள்.

காரணத்தின் தன்மைதான் காரியத்தின் தன்மையைத் தீர்மானிக்கிறது.

பாடம் படித்து விட்டு வராத மாணவனை ஆசிரியர் அடிக்கிறார்.

அவன் மீது உள்ள கோபத்தினாலா?

அவனது பெற்றோர் மீது உள்ள கோபத்தினாலா?

இரண்டுமே இல்லை.

மாணவன் மீது உள்ள அக்கறையினால்.

அவன் நன்கு படித்து, பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று

அதன் மூலமாக அவனது வாழ்க்கையில் முன்னேற வேண்டும்‌ என்பதற்காகவே ஆசிரியர் பிரம்பை எடுக்கிறார்.

நம் வாழ்க்கையில் துன்பங்களை ஏன் இறைவன் அனுமதிக்கிறார்?

அவர் ஆதி காரணர், அவரது அனுமதி இன்றி எதுவும் நடக்காது.

முதலில் நாம் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்பதற்காகத் துன்பங்களை அனுமதிக்கிறார்.

உதாரணத்திற்கு,

தலையான புண்ணியங்களுள் மட்டசனமும் ஒன்று.

அளவோடு சாப்பிடுவது மட்டசனம்.

நாம் அளவோடு சாப்பிட வேண்டும் என்பதற்காக நாம் அளவை மீறி சாப்பிடும் போது வயிற்று வலியை அனுமதிக்கிறார்.

பிறர் பொருள் மீது ஆசைப்படுபவனைத் திருத்துவதற்காக அவன் கைது செய்யப்பட  அனுமதிக்கிறார்.

நாம் சிற்றின்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக சிற்றின்பம் சம்பந்தப்பட்ட நோய்களை அனுமதிக்கிறார்.

அவர் ஒவ்வொரு வினாடியும் நம்முடன் இருந்து பராமரித்து வருவதை நாம் உணர வேண்டும் என்பதற்காக துன்பங்களை அனுமதிக்கிறார்.

துன்பங்கள் வந்தால்தான் நாம் அவரை நினைத்துப் பார்த்து, அவரிடம் வேண்டுவோம்.

ஒரு பிறவிக் குருடனைப் பற்றி சீடர்கள் ஒரு கேள்வி கேட்கிறார்கள்.

"ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்;காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?" 

அவர் மறுமொழியாக, "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார். 
(அரு. 9:2,3)

சுயமாக கடவுளைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது.

இயேசுவே தன் பொது வாழ்வின் போது தன்னைப்பற்றி வெளிப்படுத்துகிறார்.

தனது புதுமைகள் மூலம் தனது வல்லமையை மக்களுக்கு வெளிப்படுத்துகிறார்.

தன்னைப் பற்றி மக்களுக்கு வெளிப்படுத்துவது தனது சுய நலனுக்காக அல்ல.

அவர் சுயமாக அளவில்லாதவர்.

மக்களிடமிருந்து அவருக்கு எதுவும் தேவையில்லை.

ஆனால் அவரது வல்லமையை மக்கள் உணர்ந்து அவர்கள் பயன் பெறுவதற்காகத் தன்னை வெளிப்படுத்துகிறார்.

பிறவிக் குருடனுக்கு சுகம் கொடுத்தால் அவரது சுகமளிக்கும் வல்லமையை உணரும் மக்கள் அவரை விசுவசித்து, அவரைத் தேடி வருவார்கள்.

அவரைத் தேடி வருவது அவர்கள் மீட்புப் பெற அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

அவர் தன்னை வெளிப்படுத்துவதே நமது ஆன்மீக நன்மைக்காகத்தான்.

நாம் உடல் நலமின்மை காரணமாக மருத்துவ மனைக்குச் செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

தனியாக நடக்க முடியாத காரணத்தால் துணைக்கு ஒரு ஆளை அழைத்துச் செல்கிறோம்.

நாம் தடுமாறும்போது அவர் நாம் கீழே விழாதவாறு பாதுகாத்து, நம்மைப் பத்திரமாக அழைத்துச் செல்கிறார்.

நடப்பது நமது சுதந்திரம்.

உடன் வருபவர் நாம் பத்திரமாக நடக்க உதவுகிறார்.

நமது விண்ணக ஆன்மீகப் பயணத்தின் போது நமக்குத் துணையாக வருபவர் நமது ஆண்டவராகிய இயேசு.

நமது பயணப் பொறுப்பை முற்றிலும் அவர் கையில் ஒப்படைத்து விட வேண்டும்.

பயணத்தின் போது நமக்கு என்ன நேர்ந்தாலும் அதை நமது பயணத்துக்கு ஏற்றதாக மாற்றி விடுவார்.

துன்பங்கள் எதுவும் வராமல் நம்மைப் பாதுகாக்க அவரால் முடியும்.

ஆனால் நமது சுபாவம் அவருக்குத் தெரியும்.

எந்த துன்பமும், பிரச்சினையும் வராவிட்டால் காலப்போக்கில் அவரை உதவிக்கு அழைப்பதை மறந்து விடுவோம்.

ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் தான் அதற்குத் தீர்வு காண உதவ அவரைத் தேடுவோம்.

அடிக்கடி அவரைத் தேடினால் தான் நமக்கும் அவருக்கும் இடையே உள்ள உறவு வளரும், நெருக்கமாகும்.

உறவு  நெருக்கமானால்தான்  அருள் வரங்களின் வரத்து அதிகமாகும்.

அருள் வரங்களின் வரத்து அதிகமானால் தான் மீட்பு அடைவது எளிது.

ஆகவே நமக்கு என்ன நேர்ந்தாலும் அதை நன்மைக்கே என்று ஏற்றுக் கொண்டு

நாம் இயேசுவோடு செபத்தின் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்.

அவர் நாம் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துவார்.

நாம் அதன் படி நடந்து ஆன்மீகத்தில் வளர வேண்டும்.

தாய் குழந்தையை அழ விடுவது அதற்குப் பால் கொடுப்பதற்காக.

கடவுள் நமக்குத் துன்பங்களை அனுமதிப்பது நாம் அவரை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக.

லூர்து செல்வம்.

Tuesday, May 28, 2024

"இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்."(மாற்கு.10:30)

"இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்."
(மாற்கு.10:30)

இராயப்பர், "ஆண்டவரே, நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" 

இயேசு, என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் 

இம்மையில் நூறு மடங்காக அவற்றைப் பெறுவர்.

இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறுவர்."

சீடர்கள் தாங்கள் இயேசுவுக்காகத் தியாகம் செய்தவற்றை நூறு மடங்காகத் திரும்பப் பெறுவார்கள் என்று கூறியது புரிகிறது.

"இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறுவர்." என்று கூறியது தியானித்தால் தான் புரியும்.

அதுவும் சுயமாகத் தியானித்தால் புரியாது,

இயேசுவின் துணையோடு தியானித்தால் மட்டுமே புரியும்.

இயேசுவுக்காக தங்களுடைய சொந்தங்களையும் உடமைகளையும் விட்டு வருபவர்களுக்கு பிரதிபலனாக ஏன் இன்னல்கள் கிடைக்க வேண்டும்?

 யாருக்காக விட்டு வருகிறார்களோ அவர் அனுபவிப்பதைத் தானே இவர்களும் அனுபவிக்க வேண்டியிருக்கும்?

 இயேசு யார்?

பாவிகளின் மீட்புக்காக அவர்களின் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்வதற்காக,

பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரிப்பதற்காக மனிதனாகப் பிறந்த இறைமகன்.

யாருக்காக மனிதனாகப் பிறந்தாரோ அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

அவர்கள் கையில் தான் அவர் பாடுகள் பட்டு மரித்தார்.


அவரது நற்செய்தியை அறிவிப்பதற்காகத்தான் சீடர்கள் உலகெங்கும் செல்ல வேண்டும்.

இயேசுவுக்கு நேர்ந்த கதிதான் அவர்களுக்கும் நேரும்.

வீட்டு வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள்

அதை விட்டு வெளியே வந்தது உலகை அனுபவிப்பதற்காக அல்ல, 

இயேசுவின் நற்செய்தியை அறிவிப்பதற்காக,

இயேசுவைப் போல் பாடுகள் பட்டு மரிப்பதற்காக.

வேதசாட்சிகளாக மரிப்பதற்காக.

ஆனால் சீடர்கள் இயேசுவைப் பின்பற்ற ஆரம்பிக்கும்போது இந்த விபரம் எதுவும் அவர்களுக்குத் தெரியாது.

அவர் மெசியா, யூதர்களை ரோமையர்களின் அடிமைத் தனத்திலிருந்து மீட்டு சுதந்திர அரசை ஏற்படுத்துவார், அதில் மந்திரிகளாக பணி புரியலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களிடம் உண்மையைச் சொல்கிறார்.

ஆனால் அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை.

சீடர்கள் தாங்கள் தியாகம் செய்தவற்றை நூறு மடங்காகத் திரும்பப் பெறுவார்கள் இயேசு கூறியது இன்னல்கள் விசயத்திலும் உண்மை.

நாம் இப்போது தியானித்துக் கொண்டிருப்பது ஆன்மீகம்.

ஆன்மீகத்திலிருந்து இன்னல்களை, அதாவது, சிலுவையைப் பிரிக்க முடியாது.

இயேசுவின் வாழ்வில் சிலுவை இல்லாதிருந்தால் நமக்கு மீட்பே கிடைத்திருக்காது.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணம் அடைவதற்காகவே நித்திய காலம் திட்டம் தீட்டி மனிதனாகப் பிறந்தார்.

மிட்டாயைக் கடித்தால் இனிக்கும்.

பாகற்காயைக் கடித்தால் கசக்கும்.

கிறிஸ்தவத்தைச் சுவைத்தால் சிலுவை தான் கடிபடும்.

அதனால்தான் குடும்பப் பொறுப்பைத் தியாகம் செய்து விட்டு இயேசுவின் பணிக்கு வருவோர் இன்னல்களைப் பெறாமல் போகார் என்று ஆண்டவர் சொல்கிறார்.

ஆனால்,

வெள்ளிக்கிழமைக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை.

சிலுவைக்குப் பின் உயிர்ப்பு.

சிலுவை வாழ்வுக்குப் பின் நிலைவாழ்வு.

இவ்வுலகில் சிலுவை மரணப் படுக்கை.

விண்ணுலகில் அது சிம்மாசனம்.

சிலுவை வாழ்வுக்குப் பரிசாக நிலை வாழ்வைத் தரப்போவதாக இயேசு வாக்களிக்கிறார்.

நிலை வாழ்வோடு சிலுவை வாழ்வை ஒப்பிடுவது உலகில் உள்ள அத்தனை சமுத்திரங்களோடு ஒரு சொட்டுத் தண்ணீரை ஒப்பிடுவதற்குச் சமம்.

சிலுவை வாழ்வு முடிவுள்ளது.

நிலை வாழ்வு நித்தியமானது, முடிவே இல்லாதது.

சிலுவை வாழ்வு துன்பங்கள் நிறைந்தது.

நிலை வாழ்வு பேரின்பமானது.

பேரின்பத்தின் அளவோடு துன்பங்களின் அளவை ஒப்பிட முடியாது.

ஈயோடு யானையை ஒப்பிட முடியுமா?

நாம் ஈ அளவு செய்கிற சேவைக்கு யானை அளவு பரிசளிக்கிறார்.

அதற்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

லூர்து செல்வம்

Monday, May 27, 2024

"நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?"(மாற்கு.10:17)(தொடர்ச்சி)

"நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?"
(மாற்கு.10:17)

(தொடர்ச்சி)

"உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்"

என்ற வார்த்தைகள் "நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?"

என்ற கேள்விக்கு இயேசு அளிக்கும் பதில்.

தனக்கு உள்ளதை எல்லாம் பிறருக்குக் கொடுத்து விட வேண்டும் என்ற நற்செய்திக்கு கடவுள் தான் முதல் முன்னுதாரணம்.

நித்திய காலமும் தனியாக வாழ்ந்து கொண்டிருந்த கடவுள் ஒரு நாள் நாம் வாழும் பிரபஞ்சத்தைப் படைத்தார்.

அவர் நித்திய காலமும் நிறைவாக (With perfection) வாழ்பவர்.

நிறைவை அதிக நிறைவாக்க முடியாது.

Perfection cannot be made more perfect.

அவர் படைத்த பிரபஞ்சம் அவருடையது,

ஆனால் அதைத் தனக்காகப் படைக்கவில்லை.

பிரபஞ்சம் அவர் வாழத் தேவையில்லை.

அதைப் படைத்து விட்டுக் கடைசியில் படைத்த மனிதனின் பயன்பாட்டுக்குக் கொடுத்து விட்டார்.

மனிதனை ஏன் படைத்தார்?

அன்பு முதலான தனது பண்புகளையும்,

நித்திய பேரின்ப வாழ்வையும் அவனோடு பகிர்ந்து கொள்வதற்காகப் படைத்தார்.

உலகில் உள்ள அத்தனை பொருட்களையும் படைத்து விட்டு 

அடுத்து நமது முதல் பெற்றோரைப் படைத்து  

 அவர்களுக்கு ஆசி வழங்கி,

 "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார். 
(தொடக்கநூல் 1:28)

ஆக தனக்கு உரிய அத்தனையையும் மனிதனுக்குக் கொடுத்து விட்டார்.

படைத்ததைக் கொடுத்ததை விட பெரிய அதிசயம்,

தனது ஒரே மகனையும் மனுக்குல மீட்புக்காகக் கொடுத்து விட்டார்.

"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்."
(அரு. 3:16)

மனிதனாக பிறந்த இறைமகன் தான் பிறப்பதற்கு எளிய நிலையில் இருந்த ஒரு மாட்டுக் கொட்டகையையே பயன்படுத்திக் கொண்டார்.

படுப்பதற்குத் தீவனத் தொட்டியைத் தேர்ந்தெடுத்தார்.

அவர் தேர்ந்தெடுத்த தாய் அன்றாட உணவுக்காக தச்சு வேலை செய்தவருடைய மனைவி.

உலக மீட்பர் உலக பொருள்களின் மீது பற்று இல்லாதவராகப் பிறக்கக் காரணம் 

அவரைப் பின்பற்றி 

மீட்பு பெறவேண்டியவர்களும் உலக பொருள்களின் மீது பற்று இல்லாதவர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

அவரை பின்பற்றிய 12 சீடர்களும் தங்களுக்கு 
உரியனவற்றை எல்லாம் விட்டு விட்டு தான் வந்தார்கள்.

இந்த இறை வசனத்தின் அடிப்படையில் தான் திருச்சபையில் துறவற சபைகள் தோன்றின.

துறவிகள் திருமணம் முடிக்காமல் கற்பு நிலையில் வாழ்கின்றார்கள்.

தங்கள் சபைத் தலைவருக்குக் கீழ்ப்படிந்து வாழ்கின்றார்கள்.

தங்களுக்கென்று எந்தப் பொருளையும் சொந்தமாக வைத்துக் கொள்ளாமல் வாழ்கின்றார்கள்.

கற்பு, கீழ்ப்படிதல், ஏழ்மை என்ற மூன்று வார்த்தைப்பாடுகள் எடுத்துக் கொண்டு தான் துறவற வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள்

அவற்றின் அடிப்படையில் தான் வாழ்கின்றார்கள்.

நாம் நமது பெற்றோர் ஏதாவது வேலை கொடுத்தால் " ஏன்?"
என்று கேட்கிறோம்.

ஆனால் துறவிகள் தங்களுக்குக் கொடுக்கப் பட்ட வேலையை,

அது எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் சரி,

அவர்களுக்குப் பிடிக்காத வேலையாக இருந்தாலும் சரி,

 ஏன் என்று கேட்காமல் சொன்னபடி செய்ய வேண்டும். (Blind Obedience)

ஏழ்மை வார்த்தைப்பாட்டின்படி அவர்கள் பயன் படுத்தும் எந்தப் பொருளின் மீதும் உரிமை கொண்டாடக் கூடாது‌.

நாம் பயணம் செய்ய பேருந்து, புகைவண்டி, ஆகாய விமானம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம்.

‌பயன்படுத்துவதால் அவை நமக்குச் சொந்தமாகி விடுமா?

ஒரு துறவி சபை பயன்படுத்த அவருக்குக் கொடுத்திருக்கும் பொருள் மீது பற்று வைத்தால் அவர் தனது வார்த்தைப் பாட்டை மீறுகிறார்.

அவர் பயன்படுத்தும் ஒரு பென்சில் மீது கூட உரிமை கொண்டாட முடியாது.

துறவிகள் கடவுள் மீது மட்டும் உரிமை கொண்டாட முடியும்.

கடவுள் மீது மட்டும்தான் உரிமை கொண்டாட வேண்டும்.

"பற்றுக பற்றற்றான் பற்றினை."

உலகப் பொருட்கள் மீது பற்றில்லாத கடவுளை இறுகக் கட்டிப்பிடித்துக் கொள்க.

உண்மையில் கடவுளை மட்டும் கட்டிப் பிடிப்பதற்காகத்தான் மற்ற எல்லா பொருட்களையும் விட்டு விடுகிறோம்.

நாம் ஒரே நேரத்தில் கடவுளுக்கும், உலகப் பொருட்களுக்கும் ஊழியம் செய்ய முடியாது.

கடவுளுக்கு ஊழியம் செய்பவன் உலகப் பொருட்களை மறந்து விடுவான்.

கடவுள் பெயரையும் சொல்லிக்கொண்டு உலகப் பொருட்களுக்கு ஊழியம் செய்பவன் உலகுக்கான ஊழியத்தில் கடவுள் பெயரைப் பயன்படுத்துகிறான்.

அதாவது பணம் சம்பாதிக்க கடவுளை வியாபாரப் பொருளாகப் பயன்படுத்துகிறான்.

காணிக்கை பணம் பிரித்து அதில் உல்லாச வாழ்வு வாழ்வதற்காக நற்செய்திக் கூட்டங்கள் நடத்துபவர்கள்  இவ்வகையைச் சேர்ந்தவர்கள்.

இது கடவுளுக்குச் செய்யும் துரோகம்.

கடவுளுக்கு ஊழியம் செய்வதற்கு உலகப் பொருட்களைப் பயன்படுத்தலாம், பயன்படுத்த வேண்டும்.

உலகப் பொருட்களை இறைப்பணியிலும், பிறர் அன்புப் பணியிலும் பயன்படுத்த வேண்டும்.

கையில் இருக்கும் பணத்தை அயலானுக்கு உதவப் பயன்படுத்த வேண்டும்.

அது தான் இறைப்பணி.

"அதற்கு அரசர், "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனப் பதிலளிப்பார்." 
(மத்தேயு. 25:40)

நமது அயலானுக்குக் கொடுப்பதை இயேசுவுக்கே கொடுக்கிறோம்.

உலகப் பற்றை உதறி விட்டு இறைவனைப் பற்றிக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, May 26, 2024

"நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?"(மாற்கு.10:17)

"நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?"
(மாற்கு.10:17)

இயேசுவின் போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் அவரிடம்,

"போதகரே நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?"

என்று கேட்டார்.

இயேசு,  "உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? "கொலைசெய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட"

அவர் இயேசுவிடம், "போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்" 

அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்"


இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. 

உலகியல் ரீதியாக உலகில் உயிர் வாழ்வதற்கு மூச்சு விட்டாலே போதுமானது.

ஆனால் யாரும் மூச்சு விடும் நிலையில் மட்டும் வாழ விரும்ப மாட்டார்கள்.

உணவு உண்டு உற்சாகமாக வாழ விரும்புவார்கள்.

உண்ணும் உணவின் சத்துக்கு ஏற்ப உற்சாக வாழ்க்கை நிலை மாறும்.

ஏழைகளின் வாழ்க்கை நிலைக்கும் வசதி படைத்தவர்களின் வாழ்க்கை நிலைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்கூடாக பார்க்கிறோம்.

வருமானம் குறைவாக உள்ளவர்களுக்கும் வருமானம் அதிகமாக உள்ளவர்களுக்கும் உள்ள வாழ்க்கை நிலையில் வித்தியாசத்தைப் பார்க்கிறோம்.

அத்தகைய நிலை வித்தியாசம் ஆன்மீக வாழ்விலும் இருக்கிறது.

ஆன்மீக வாழ்வின் அடிப்படை பாவம் இல்லாதிருத்தல்.

கடவுளின் கட்டளைகளை அனுசரிக்கிறவன் பாவம் இன்றி வாழ்கிறான்.

ஆனால் பாவம் இன்றி வாழ்வது மட்டும் போதாது.

புண்ணியத்தில் வளர வேண்டும்.

எவ்வளவுக்கு எவ்வளவு புண்ணியத்தில் வளர்கிறானோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆன்மீக வாழ்விலும் வளர்கிறான்.

தற்பெருமை இல்லாதிருந்தால் மட்டும் போதாது,   தாழ்ச்சி உள்ளவனாகவும் இருக்க வேண்டும்.

தாழ்ச்சியின் அளவு ஆளுக்கு ஆள் மாறுபடலாம்.

அன்னை மரியாள் தாழ்ச்சியின் உச்சக்கட்டம்.

கடவுளின் தாயாகிய அவள் தன்னை கடவுளின் அடிமையின் நிலைக்குத் தாழ்த்தினாள்.

அவளைப் போல் தாழ்ச்சி உள்ளவர்கள் உலகில் யாரும் இல்லை.

தங்களை தாங்களே தாழ்த்துகிறவர்கள் விண்ணகத்தில் உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படுவார்கள் என்று ஆண்டவர் சொன்னார்.

 விண்ணக மண்ணக அரசியின் நிலைக்கு உயர்த்தப்பட்டவள் அன்னை மரியாள் மட்டுமே.

அதிலிருந்து அவள் அளவுக்கு தாழ்ச்யுள்ளவர்கள் யாரும் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தலையான பாவங்கள் ஏழு.

தலையான புண்ணியங்கள் ஏழு.

எல்லா  பாவங்களிலிருந்தும் விடுதலை பெற்று எல்லா புண்ணியங்களிலும் வளர வேண்டும்.

கொலை செய்யாது இருப்பாயாக என்பது கட்டளை.

நாம் யாரும் யாரையும் கொலை செய்யவில்லை.

ஆகவே ஐந்தாம் கட்டளைக்கு விரோதமாக சாவான பாவம் செய்யவில்லை.

ஆனால் நமக்கு சில சமயங்களில் கோபம் வருகிறது, கோபம் வரும்போது நமது சகோதரர்களை திட்டுகிறோம்.

இவற்றைச் செய்யாமல் யார் மீது நமக்கு கோபம் வருகிறதோ அவர்களுக்காக கடவுளிடம் வேண்டினால் நாம் புண்ணிய வாழ்வில் வளர்கிறோம்.

நாம் யாரும் விபச்சாரம் செய்வதில்லை என்று வைத்துக் கொள்வோம்.

ஆகவே சாவான பாவம் செய்யவில்லை.

ஆனால் மனதில் கூட கெட்ட எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல்,

அவை வரும்போது இறை இரக்கத்தின் செப மாலையை மனதில் சொன்னால் நாம் புண்ணிய வாழ்வில் வளர்கிறோம்.

கடவுளின் பத்து கட்டளைகளை கடைப்பிடிப்பதோடு, அவற்றைச் சார்ந்த நல்ல செயல்களை செய்யும்போது புண்ணிய வாழ்வில் வளர்கிறோம்.

"கடவுளின் திருப்பெயரை வீணாகச் சொல்லாதே."

கடவுளின் திருப்பெயரை வீணாகச் சொல்வது பாவம்.

சிலர் எதற்கெடுத்தாலும் கடவுள் மேல் சத்தியம் செய்வார்கள்.

சிலர் கடவுள் பெயரால் பொய்ச் சத்தியம் செய்வார்கள்.

இதெல்லாம் பாவம்.

நாம் கடவுள் பெயரை வீணாகச் சொல்லாவிட்டால் பாவம்  செய்யவில்லை.

ஆனால் அதோடு நிறுத்திக் கொண்டால் புண்ணிய வாழ்வில் வளர முடியுமா?

பாவமில்லாத வாழ்க்கை  வாழலாம்.

புண்ணியம் வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் அடிக்கடி கடவுள் பெயரைப் பக்தியுடன் சொல்ல வேண்டும்.

"தந்தை மகன் தூய ஆவியின் பெயரால், ஆமென்."

"இயேசுவே இரட்சியும்."

"தூய ஆவியே எழுந்தருளி வாரும்."

"தந்தையே, எனது துன்பங்களை எனது பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக ஒப்புக் கொடுக்கிறேன்."

"விண்ணகத் தந்தையே, உமது திருமகனின் வேதனை நிறைந்த பாடுகளைப் பார்த்து என் மேல் இரக்கமாயிரும்."

போன்ற மன வல்லப செபங்களை அடிக்கடி பக்தியுடன் சொல்லிக் கொண்டிருந்தால்

நம் மீது இறை அருள் மழை பெய்து கொண்டேயிருக்கும்.

அருள் நீரால் நமது ஆன்மீக வாழ்வு ஆழ வேர் விட்டு வளரும்.

ஆக, கட்டளைகளைக் கடைப்பிடித்தால் பாவமின்றி வாழலாம்.

ஆனால் அது மட்டும் போதுமா?

போதாது. புண்ணிய வாழ்வில் வளர வேண்டும்.

ஆயிரக்கணக்கில் சம்பாதித்தால் பணக்காரன்.

இலட்சக்கணக்கில் சம்பாதித்தால் இலட்சாதிபதி.

கோடிக்கணக்கில் சம்பாதித்தால் கோடீஸ்வரன்.

இந்த ஒப்புமையை ஞான வாழ்வுக்குப் பொருத்திப் பார்த்தால் ஒரு உண்மை புரியும்.

சம்பாதிக்கும் அருள் அளவுக்கு ஏற்ப அருள் வாழ்விலும் படி நிலைகள் உண்டு.

அன்பு வாழ்வுதான் அருள் வாழ்வு.

இறை அன்பிலும், பிறர் அன்பிலும் வளர்கிறவன் அருள் வாழ்வில் வளர்கிறான்.

பிறர் அன்பில் வளர்வதில் பல படி நிலைகள் உண்டு.

1. பிறரை நேசிக்க வேண்டும்.

2. பிறர் சிநேகத்தைச் சொல் மூலம் தெரியப் படுத்த வேண்டும்.

3.பிறரன்பை செயல்கள் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.

4.நம்மிடம் உள்ளதைப் பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

5.நம்மிடம் உள்ளதை எல்லாம் பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஐந்தாவது படிநிலை தான் பிறரன்பு வாழ்வின் உச்சக்கட்டம்.

"உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்"

என்ற இயேசுவின் வார்த்தைகள் இதை நிரூபிக்கும்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?(தொடர்ச்சி)7

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?
(தொடர்ச்சி)7

தூய ஆவியின் ஏழு கொடைகளுள் ஏழாவது கொடை தெய்வ பயம்.
( Fear of God.)

தெய்வ பயமே ஞானத்தின் ஆரம்பம்.

Fear of God is the beginning of wisdom.

தூய ஆவியானவரின் கொடைகளுள் முதன்மையானது ஞானம்.

ஆக, முதன்மைக்கும் முதன்மையானது தெய்வ பயம்.

தெய்வ பயம்‌ என்றால் தெய்வத்துக்குப் பயப்படுவது அல்ல.

கடவுள் அன்பு மயமானவர்.

யாராவது அன்பைப் பார்த்து பயப்படுவார்களா?

மகன் தாயைப் பார்த்து பயப்பட‌ மாட்டான்.

ஆனால் தாய்க்குப் பிடிக்காத ஒன்றைப் பார்த்து பயப்படுவான்.

ஒரு நாள் ஒரு மகனை அவனது நண்பன் மதுக்கடைக்கு அழைக்கிறான். 

ஆனால் அவன் "எனக்குப் பயமாக இருக்கிறது. வரவில்லை." என்கிறான்.

"மது அருந்த என்ன பயம்?"

"நான் மது அருந்தினால் அது என் அம்மாவுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற பயம்."

"நாம் பாவம் செய்தால் அது நம்மை நேசிக்கும் கடவுளுக்கு எதிராகி விடுமே" என்ற பயம் தான் தெய்வ பயம்‌.

நமது செயல் கடவுளின் விருப்பத்துக்கு எதிராகி விடுமோ என்ற பயம்.

கடவுளின் மனதை நோகடித்து விடுவோமே என்ற பயம்.

கடவுளின் அன்பை நித்திய காலமும் அனுபவிக்க முடியாமல் ஆகிவிடுமே என்ற பயம்.

கடவுளோடு உள்ள அன்புத் தொடர்பு அறுந்து விடுமே என்ற பயம்.

கடவுளைப் பற்றிய நமது அறிவு ஞானமாக மாற வேண்டுமென்றால் நம்மிடம் தெய்வ பயம்‌ இருக்க வேண்டும்.

தெய்வ பயம்‌ இல்லாதவர்கள் பாவம் செய்வார்கள்.

பாவம் செய்தால் இறைவனோடு உள்ள அன்புறவு பாதிக்கப்படும்.

இறைவனோடு உள்ள அன்புறவு பாதிக்கப்பட்டால் அவரைப் பற்றிய அறிவைச் சரியாக பயன்படுத்த முடியாது.

அறிவு வெறும் அறிவாக மட்டும் இருக்கும்.

பாவம் செய்யாதவனுக்குதான்,

அதாவது, தெய்வ பயம்‌ உள்ளவன் தான் ஞானத்தோடு வாழ்வான்

பாவம் செய்தவர்கள் இறைவனின் அன்பு உள்ளத்தை நோகடித்து விட்டோமே வருந்தினால்

அதற்குப் பெயர் தான் மனஸ்தாபம்.

மனஸ்தாபத்தோடு பாவ சங்கீர்த்தனம் செய்யும்போது நமது பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன.

பாவமற்ற தூய உள்ளத்தோடு வாழ வேண்டுமென்றால் நம்மிடம் தெய்வ பயம்‌ இருக்க வேண்டும்.

பயப்படுபவன் பயப்பட மாட்டான்.

கடவுளுக்கு எதிதாகப் பாவம் செய்யப்  பயப்படுபவன் வேறு எதற்கும் பயப்பட மாட்டான்.

தெய்வ பயம்‌ உள்ளவன் உலகத்துக்குப் பயப்பட மாட்டான்.

துன்பப்படப் பயப்பட மாட்டான்.

இயேசுவின் விரோதிகளுக்குப் 
பயப்பட மாட்டான்.

அவன் இயேசுவின் சீடன் என்பதற்காக இயேசுவின் விரோதிகள் அவனை என்ன செய்தாலும்,

அவனைத் திட்டினாலும்,

அடித்தாலும், உதைத்தாலும், அவனைக் கொலை செய்தாலும்

பயப்பட மாட்டான்

இயேசுவை நேசிக்கும் நாம் பாவத்துக்குப் பயப்படுவோம்,

பாவத்துக்கு மட்டும் பயப்படுவோம்,

வேறு எதற்கும் பயப்பட வேண்டாம்.

லூர்து செல்வம்.

Friday, May 24, 2024

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?(தொடர்ச்சி)6

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?
(தொடர்ச்சி)6

தூய ஆவியின் ஏழு கொடைகளுள் ஆறாவது கொடை இறைப்பற்று. (piety)

இறைவன் மீது நமக்கு இருக்கும் அன்பை இறைப்பற்று, கடவுள் பக்தி என்ற வார்த்தைகளால் குறிப்போம்.

பற்று என்றாலும், பக்தி என்றாலும் அன்பு என்றுதான் பொருள்.

கணவன் மனைவிக்கிடையே நிலவும் அன்பை பதிபக்தி என்போம்.

இறையன்புக்குள் பிறரன்பும் அடங்கும்.

நமது இறையன்பை பிறரன்பினால் தான் வெளிப்படையாகக் காட்ட முடியும்.

கடவுளை நேசிப்பவன் தனது பிறரையும் நேசிப்பான்.

பிறனை நேசிக்காதவனால் கடவுளை நேசிக்க முடியாது.

தூய ஆவி அன்பின் கடவுள்.

காற்று வீசுகிறது.
மழை பெய்கிறது.
கடவுள் நேசிக்கிறார்.

காற்றின் வேலை வீசுவது.
மழையின் வேலை பெய்வது.
கடவுளின் வேலை நேசிப்பது.

கடவுள் தனது அன்பை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

நமது வேலையும் நேசிப்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.

மிட்டாயைப் பார்த்தவுடன் நாக்கில் உமிழ்நீர் ஊறுகிறது.

அயலானைப் பார்த்தவுடன் இதயத்தில் அன்பு ஊற வேண்டும்.

கடவுளை நினைத்தவுடன் இதயத்தில் அன்பு ஊற வேண்டும்.

அன்பு ஒரு பொருளல்ல.
Love is not a matter.

அன்பு ஒரு பண்பு.
Love is a quality.

அன்பை புறக் கண்ணால் பார்க்க முடியாது.

அன்பு செய்பவர் அதை உணர முடியும்.

அன்பு செய்யப்படுபவர் செய்பவருடைய அன்பை உணர வேண்டுமானால் அவரது அன்பு சொல் வடிவமோ, செயல் வடிவமோ பெற வேண்டும்.

இறைவன் நமக்கு உடலையும் ஆன்மாவையும் தந்து,

நாம் பயன்படுத்த உலகத்தையும் தந்து

 தன் அன்பை நமக்கு வெளிப்படுத்தினார்.

நம் உடலை நாம் பார்க்கும் போதெல்லாம் இறைவன் மீது நமக்கு அன்பு ஊற வேண்டும்.

நமது உள்ளத்தில் அவரை நினைக்கும் போதெல்லாம் அவர் மீது நமக்கு அன்பு ஊற வேண்டும்.

அதாவது எப்போதும் நம்முள் கடவுள் மீது அன்பு ஊற வேண்டும்.

நாம் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் அவரால் படைக்கப்பட்டவை.

எந்தப் பொருளைப் பார்த்தாலும் கடவுள் மீது அன்பு ஊற வேண்டும்.

இறைவன் மீதான அன்பு அவரது கட்டளைகளைக் கடைபிடிப்பதில் செயல் வடிவம் பெற வேண்டும்.

நமது அயலானைப் பார்க்கும் போது கடவுள் மீதும், அயலான் மீதும் அன்பு ஏற்பட வேண்டும்.

அந்த அன்பும் சொல் வடிவமோ, செயல் வடிவமோ பெற வேண்டும்.

செயல் இல்லாத அன்பு செத்த அன்பு.
 
இறைவனை நினைத்துப் பார்க்கவும், அவரை வாயினால் வாழ்த்தவும் உதவ அவரால் படைக்கப்பட்ட ஒரு சிறிய புல் போதும், ஒரு அணு கூட போதும்.

ஒரு அணுவின் அமைப்பை நினைத்துப் பார்த்தாலே கடவுளின் அளவு கடந்த வல்லமை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

அண்டமே அணுவுக்குள் அடங்கியிருக்கிறது.

உள்ளே வலம் வந்து கொண்டிருக்கும் எலெக்ட்ரான்ஸ், நியூட்ரான்ஸ், புரோட்டான்ஸ் ஆகியவை நட்சத்திரங்களையும், அவைகளை வலம் வந்து கொண்டிருக்கும் கிரகங்களையும் ஞாபகப் படுத்துகின்றன.

தூய ஆவியானவரின் பக்தி என்ற கொடை நம்முள் இருந்தால் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் கடவுளின் வல்லமையை நமக்கு உணர்த்துவதோடு

நமது இறைப்பற்றை அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.

நமது இறைப்பற்றின் எல்கை வட்டத்துக்குள் புனிதர்களும், உத்தரிக்கிற ஆன்மாக்களும் வருவார்கள்.

அவர்கள் ஒவ்வொருவரும் நமது அயலான்தானே.

அயலானை நேசிக்க வேண்டியது இறைக் கட்டளைகளுக்குள் அடங்கும்.

புனிதர்களுக்கு நமது உதவி தேவைப் படாது.

ஏனெனில் அவர்கள் நித்திய பேரின்ப வாழ்வை அடைந்து விட்டார்கள்.

ஆனால் அவர்களின் உதவி நமக்குத் தேவைப் படும்.

மண்ணுலகில் வாழும் நமக்கு
விண்ணுலகில் வாழும் அவர்களால் என்ன உதவிகள் செய்ய முடியும்?

நமக்காக இறைவனிடம் பரிந்து பேசி எல்லா வகையான உதவிகளும் செய்ய முடியும்.

ஏனெனில் உதவி செய்பவர் சர்வ வல்லமை உள்ள கடவுள்.

என்னென்ன உதவிகளைக் கேட்கலாம்?

நமது ஆன்மீக வாழ்வுக்கு இடையூறு இல்லாத,

ஆன்மீக உதவிகரமாய் இருக்கக்கூடிய எந்த உதவியையும் கேட்கலாம்.

நாம் எந்த புனிதர் மீது அதிக பக்தி வைத்திருக்கிறோமோ அவரைப் போல ஆன்மீகத்தில் வாழ வரம் பெற்றுத் தரும்படி கேட்கலாம்.

உதாரணத்திற்கு, அன்னை மரியாளின் பக்தர்கள் அவளைப் போல ஆண்டவரின் அடிமைகளாய் அர்ப்பண வாழ்வு வாழ உதவும்படி வரம் பெற்றுத் தர மன்றாடலாம்.

புனித அந்தோனியாரின் பக்தர்கள்

 அவரைப் போல விவிலிய ஞானத்திலும்,

 நற்கருணை பக்தியிலும்,

 நற்செய்தியை அறிவிக்கும் ஆர்வத்திலும் 

வளர வேண்டிய அருள் வரங்களைப் பெற்றுத் தர மன்றாடலாம்.

உத்தரிக்கிற ஆன்மாக்கள் தங்களுக்காக செபிக்க முடியாது, 
நமக்காக செபிக்கலாம்.

நாம் நமக்காகவும் செபிக்கலாம்,

அவர்களுக்காகவும் செபிக்கலாம்.

அவர்கள் சீக்கிரம் மோட்ச பாக்கியத்தை அடைய அவர்களுக்காக செபிக்கலாம்.

நாம் படும் துன்ப துயரங்களையும்,

தான தர்மங்களையும் அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஒப்புக் கொடுக்கலாம்.

நம்முடைய உடல் உறுப்புக்கள் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்து கொள்வது போல

இயேசுவின் திருச்சபையின் உறுப்பினர்கள் அனைவரும்  ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருக்க வேண்டும்.

நாம் அனைவரும் இறையன்பிலும், பிறரன்பிலும் வளர வேண்டிய அருள் வரங்களைக் கேட்டு இறைவனை மன்றாடுவோம்.

லூர்து செல்வம்.

Thursday, May 23, 2024

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?(தொடர்ச்சி)5

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?
(தொடர்ச்சி)5

தூய ஆவியின் ஏழு கொடைகளுள் ஐந்தாவது கொடை ஆற்றல். (fortitude)

உலகியலிலும், ஆன்மீகத்திலும் செயல்களை உற்சாகத்துடன் செய்யத் தேவையானது சக்தி, தைரியம், ஆற்றல்.

உலகியலில் உடல் ஆற்றல் பெற சரிவிகித உணவை உண்கிறோம்.

ஆன்மீகத்தில் ஆற்றல் பெற உறுதிப்பூசுதல் என்னும் அருட்சாதனத்தைப் பெறுவதோடு

அதற்கான அருள் வரம் கேட்டு தினமும் தூய ஆவியை மன்றாடுகிறோம்.

உடலில் சக்தி இல்லாவிட்டால் எழுந்து நடமாட முடியாது.

ஆன்மீகத்தில் ஆற்றல் விண்ணகப் பாதையில் வேகமாக நடக்க முடியாது.

கிறிஸ்துவைப் பின்பற்றுதல் பஞ்சு மெத்தையில் படுத்து உறங்குவதைப் போன்றதல்ல,

முட்கள் நிறைந்த பாதை வழியாக நடந்து செல்வதற்குச் சமம்.

கரடு முரடான பாதை.

கவனம் இல்லாமல் நடந்தால் விழ நேரிடும்.

துன்பங்களும் ஆபத்துக்களும் நிறைந்த   பாதையில் நடந்து செல்ல தைரியமும், பொறுமையும் வேண்டும்.

என்ன துன்பங்கள்?

நோய் நொடிகள், சுய விருப்பங்கள் நிறைவேறாமை, பொருளாதார பற்றாக்குறை போன்றவை.

என்ன ஆபத்துக்கள்?

சோதனைகள். சோதனையில் தோற்றால் பாவத்தில் விழ நேரிடும்.

வாழ்க்கையே சோதனைகளுக்கு எதிரான போராட்டம்தான்.

துன்பங்களுக்கும், சோதனைகளுக்கும் மத்தியில் கிறிஸ்துவுக்கு ஏற்ற வாழ்வு வாழ வேண்டுமென்றால் 

ஆற்றல் (Fortitude) வேண்டும்.

ஆற்றல் உள்ளவனால்தான் கடவுள் முன் எது சரியாக இருக்கிறதோ,

அது எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் அதன்படி வாழ முடியும்.

கிறிஸ்தவத்துக்கு எதிரானவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகில்

அவர்களுக்கு மத்தியில் கிறிஸ்துவுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கிறிஸ்துவின் எதிரிகள் நம்மைத் தள்ளி வைக்கலாம்,

 நம்மை வார்த்தைகளால் காயப்படுத்தலாம், 

நமக்கு உடல் ரீதியான துன்பங்களை, 

மரணத்தைக் கூட தரலாம்.

ஆனாலும் நாம் வாழ்ந்தே ஆகவேண்டும்.

ஒரு சாதாரண விவசாயத் தொழிலாளியை எடுத்துக் கொள்வோம்.

இரவு பகல் என்று பாராமல்,

மழை வெயில் என்று பாராமல்,

வெப்பம் குளிர் என்று பாராமல்,

பசி பட்டினி என்று பாராமல், 

உடல் வலியைப் பற்றி கவலைப் படாமல்,

உள்ளத்தில் வலியோடு

உழைக்கிறான், உழைக்கிறான்,
உழைத்துக் கொண்டேயிருக்கிறான்.

பலன்?

அதிகம் கிடைத்தாலும் கிடைக்கும்,

குறைவாகக் கிடைத்தாலும் கிடைக்கும்,

எதுவும் கிடைக்காமல் போனாலும் போகும்.

உறுதி இல்லாத ஒரு பலனுக்காக இப்படிக் கஷ்டப்பட்டு விவசாயி உழைக்கிறானே,

உறுதியாக நிலை வாழ்வும், நித்திய பேரின்மும் பெறப்போகும் நாம் எவ்வளவு 
கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்!


கடவுளின் பிள்ளைகளாகிய நாம்

  நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றோடு 

விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.

 நிலைவாழ்வே நமது நோக்கம்.

 அதற்காகவே விசுவாசத்தை அறிக்கையிட அழைக்கப்பட்டிருக்கிறோம்.

நாம் கிறிஸ்து இயேசுவின் நல்ல படை வீரனைப் போல துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும். 

படைவீரர்கள் பிழைப்புக்காகப் போரிடுவதில்லை.

பம்மைப் படையில் சேர்த்துக்கொண்ட இயேசுவின் வெற்றிக்காகவே போரிடவேண்டும் 

விளையாட்டு வீரர்கள் விதி முறைகளுக்குட்பட்டு விளையாடினால் மட்டுமே வெற்றிவாகை சூட முடியும். 

நாமும் ஆன்மீக வெற்றி பெற இயேசுவின் கட்டளைகளுக்கு உட்பட்டு வாழ வேண்டும்.

இப்போது சிறிது காலம் நாம் பல்வகைச் சோதனைகளால் துயருற வேண்டியிருககும். 

 ஆனால் மறுவுலகில் நமக்காக நித்திய பேருவகை காத்துக் கொண்டிருக்கிறது. 


அழியக்கூடிய தங்கம் நெருப்பினால் புடமிடப்படுகிறது. 

அதைவிட விலையுயர்ந்த நாம் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறோம்.

உலக இறுதியில் இயேசு கிறிஸ்து வரும்போது

 அந்நம்பிக்கை நமக்குப் பேரின்ப வாழ்வைப் பெற்றுத் தரும். 

வாழ்க்கை ஒரு போராட்டம் தான், ஆனால் வெற்றியில் முடியப்போகும் போராட்டம்.

வீரத்தோடு போராடத் தேவையான ஆற்றலைத் தந்து உதவ தூய ஆவியானவரை மன்றாடுவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, May 22, 2024

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?(தொடர்ச்சி)4

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?
(தொடர்ச்சி)4

தூய ஆவியின் ஏழு கொடைகளுள் நான்காவது கொடை 

நுண்மதி (Spirit of Knowledge)

சரியான ஆன்மீகப் பாதையில் நடக்க,

பிரச்சினைகள் (Problems) வரும்போது விசுவாசம் சார்ந்த காரியங்களில் இறைவனுக்கேற்ற முடிவெடுத்தல்.

நுண்மதி என்றால் கூர்மையான ஆன்மீக அறிவு.

ஆன்மீகம் சார்ந்த எல்லா நடவடிக்கைகளுக்கும் நமது ஆண்டவர் முன்மாதிரிகை காட்டியிருக்கிறார்.

இயேசுவின் பேச்சில் குற்றம் கண்டு பிடிக்கப் பரிசேயர்கள் சதா அவரைப் பின் தொடர்கிறார்கள்.

ஒரு முறை அவரிடம் ஒரு கேள்வி கேட்கிறார்கள்.

 "போதகரே, சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா?" 
(மாற்கு.12:14)

அவர்கள் எதிர்பார்த்தது

செலுத்துங்கள் என்பார், அல்லது செலுத்த வேண்டாம் என்பார்.

செலுத்துங்கள் என்று சொன்னால் அவர் ரோமை மன்னரின் ஆட்சியை ஏற்றுக் கொள்கிறார் என்று அர்த்தம்.

ஏற்றுக் கொண்டால் அவர் மெசியாவாக இருக்க முடியாது.

மெசியா ரோமையர்களின் அடிமைத்தனத்திலிருந்து யூதர்களை மீட்பார் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

செலுத்த வேண்டாம் என்று சொன்னால் அவர் அரசுக்கு எதிராகப் பேசுகிறார், அரசை அவர் மீது நடவடிக்கை எடுக்க வைக்கலாம்.

அவருக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுப்பதில் தான் அவர்கள் குறியாக இருந்தார்கள்.

ஆனால் இயேசு நுண்மதியோடு பதில் சொன்னார்.

 "சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" 

உரியதைக் கொடுக்கச் சொல்வதில் தவறு காண முடியாது.

அது மட்டுமல்ல, தான் அரசியல்வாதி அல்ல, ஆன்மீகவாதி என்பதைத் தெளிவாக்கி விட்டார்.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!

 ஒரு முறை இயேசுவின் பதிலில்‌ குற்றம் கண்டு பிடிப்பதற்காக 

மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, 

 "போதகரே, 

இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசேயின் கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?" என்று கேட்டனர். 

கல்லால் எறியச் சொன்னால் அவர் இரக்கமற்றறவர், போதனைக்கும் செயலுக்கும் சம்பந்தம் என குற்றம் சாட்டலாம்.

எறியக் கூடாது என்று சொன்னால் அவர் மோசேயின் சட்டத்தை மீறுகிறார் என குற்றம் சாட்டலாம்.

அவரைக் குற்றவாளி ஆக்குவது மட்டுமே அவர்கள் குறிக்கோள்.

ஆனால் இயேசு நுண்மதியோடு பதில் சொன்னார்,

 "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" 

அவர் மோசேயின் சட்டத்தையும் மீறவில்லை, 

பாவி மீது கொண்ட இரக்கத்தையும் விடவில்லை.


அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள்.

 இயேசு பெண்ணைப் பார்த்து,

 "நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்" என்றார்.

விசுவாசத்தை அடுத்த நமது வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் விசுவாசத்துக்கு பாதிப்பு இல்லாமல் நுண்மதியோடு செயல்பட வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை கடன் பூசை.

பூசைக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.

வழியில் ஒரு ஆள் ரோட்டில் மயங்கிக் கிடக்கிறான்.

நமது மனதில் இரக்கம் இயங்க ஆரம்பிக்கிறது.

மயங்கிக் கிடக்கிறவனை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லவா?

மனைக்கு எடுத்துச் சென்றால் பூசைக்குச் செல்ல முடியாது.

நுண்மதியோடு சிந்திக்க வேண்டும்.

இயேசு ஓய்வு நாளிலும் நோயாளிகளைக் குணமாக்கினார்.

மயங்கிக் கிடப்பவன் இயேசுவின் சகோதரன்.

இயேசு ஓய்வு நாளுக்கும் ஆண்டவர்.

அவருடைய சகோதரனுக்கு உதவி செய்ய வேண்டியது நமது முதல் கடமை.

அக்கடமையை நிறைவேற்ற முடிவெடுப்போம்.

கோவில் புதுப்பிக்கும் வேலைக்கு சுவாமியார் நன்கொடை பிரித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு தொகையைத் தருவதாக வாக்குக் கொடுத்து விட்டோம்.

பணத்தையும் எடுத்து வைத்து விட்டோம்.

ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவ‌ மனையில் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அறுவை சிகிச்சை செய்ய கையில் பணம் இல்லை.

அறுவை சிகிச்சை செய்தால் பிழைத்துக் கொள்வார்.

செய்யாவிட்டால் மரணம் உறுதி.

நாம் கோவிலுக்குக் கொடுக்க எடுத்து வைத்திருக்கும் பணத்தைக் கோவிலுக்குக் கொடுக்கவா?

வைத்தியம் பார்க்கக் கொடுக்கவா?

நுண்மதியைப் பயன்படுத்துவோம்.

மருத்துவ மனையில் இருப்பது பரிசுத்த ஆவியின் உயிருள்ள ஆலயம்.

உயிருள்ள ஆலயத்தை உடனடியாகக் காப்பாற்ற வேண்டியது நமது முதல் கடமை.

கடமையைச் செய்வோம்.

சாலமோன் மன்னரிடம் ஒரு வழக்கு வருகிறது.

இரண்டு பெண்கள் ஒரு குழந்தைக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.

உண்மையான தாயிடம் குழந்தையை ஒப்படைக்க வேண்டும்.

அப்போது DNA Test வசதியெல்லாம் கிடையாது.

மன்னரின் நுண்மதி வேலை செய்கிறது.

பணியாளரை அழைத்து,

"குழந்தையை இரண்டாக வெட்டி ஆளுக்குப் பாதியாகக் கொடு."

ஒரு பெண் அலறினாள்,

"ஐயா, குழந்தையை வெட்டாதீர்கள். முழுக் குழந்தையையும் அவளிடமே கொடுங்கள். எங்கிருந்தாலும் நல்லா இருந்தால் சரி."

யார் உண்மையான தாய் என்று மன்னர் கண்டு பிடித்து விட்டார்.

குழந்தையை அவளிடமே கொடுத்து விட்டார்.

ஆன்மீக வாழ்வில் நுண்மதியுடன் செயல் புரிய அருள் வரம் கேட்டு தூய ஆவியானவரிடம் வேண்டுவோம்.

லூர்து செல்வம்.

Tuesday, May 21, 2024

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?(தொடர்ச்சி)3

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?
(தொடர்ச்சி)3

தூய ஆவியின் ஏழு கொடைகளுள் மூன்றாவது கொடை 

அறிவுரைத்திறன்.(counsel)

அறிவுரைத்திறன் என்றால் என்ன?
சொல்லிலேயே பொருள் இருக்கிறது.

இருவருக்கிடையே நிகழும் அறிவுரை நிகழ்வு.

ஒரு நபர் தனது வாழ்வில் ஏதாவது பிரச்சினை ஏற்படும் போது அதற்குத் தீர்வு காண அதற்காக பயிற்சி பெற்ற மற்றொரு நபரிடம் ஆலோசனை கேட்பது.

அதை மூன்று கோணங்களிலிருந்து (Points of view) பார்ப்போம்.

1.கடவுள் நம்மோடு.
2.நாம் நம் அயலானோடு.
3.அயலான் நம்மோடு.

1.கடவுள் நம்மோடு.

இயேசு கூறிய உவமை

; "ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. 

எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், "பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?" என்றார். 

தொழிலாளர் மறுமொழியாக, "ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். 

அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்" என்று அவரிடம் கூறினார். " 

அத்தி மரம் ஏன் கனி தரவில்லை?

ஏனெனில் அதன் வேர்கள் பூமியிலிருந்து மரத்திற்கு வேண்டிய உணவை எடுத்துக் கிளைகளுக்கு அனுப்பவில்லை.

அதனால்தான் தொழிலாளி. ''நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருப் போடுவேன்." என்கிறார்.

நமது ஆன்மீக வாழ்வில் பலன் எதுவும் ஏற்படவில்லை என்றால் நமது ஆன்மீக வேர் இறைவனோடு தொடர்பில் இல்லை என்று அர்த்தம்.

தொடர்பை ஏற்படுத்தி நம்மை ஆன்மீகப் பலன் பெற வைக்கவே

அறிவுரைத்திறன்.(counsel) என்னும் ஆவியானவரின் கொடை.

கடவுள் எப்போதும் நம்மை நினைத்துக் கொண்டு தான் இருக்கிறார்.

நாம் நினையாததால்தான் தொடர்பு இல்லாதிருக்கிறது.

ஆவியானவரின் கொடை நம்மை நினைக்க வைக்கிறது.

நாம் பலன் தர ஆரம்பிப்போம்.

அத்தி மரம் தான் வளர்ந்து காய்ப்பதற்கு வேண்டிய உணவை நிலத்திலிருந்து எடுப்பது போல,

நாம் ஆன்மீகத்தில் வளர்ந்து பலன் தர வேண்டிய அருள் வரங்களை இறைவனிடமிருந்து பெற வேண்டும்.

நாம் ஆன்மீகத்தில் வளர்வதற்கான அறிவுரைகளை இறைவனை தருவார்.

இறைவன் நமது மனச்சான்றின் மூலமாகவும் ஆலோசனை நல்குவார்.

நாம் நமது மனச்சான்றின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும்.

நமக்கு உள்ளிருந்து நம்மோடு பேசும் இறைவன் அவர் நிறுவிய திருச்சபை மூலமாகவும் பேசுவார்.

நாம் மீட்புப் பெற வேண்டுமானால் திருச்சபையின் குரலுக்கும் செவிசாய்க்க வேண்டும்.

நமது ஆன்மீக குரு (Spiritual Director) சொற்படியும் நடக்க வேண்டும்.

பாவ சங்கீர்த்தனத் தொட்டியில் குருவானவர் கொடுக்கும் அறிவுரை இறைவன் நமக்குத் தரும் அறிவுரை.

சுருக்கமாக பத்துக் கட்டளைகளுக்கும், திருச்சபையின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

அவைகள் கட்டளைகள் என்பதற்காக அல்ல, இறைவனின் விருப்பம் என்பதற்காக.

நாம் இறைவனுடைய அறிவுரைப்படி நடந்தால் இறைவன் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம்.


நாம் நம் அயலானோடு.

நாம் நம்மை நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்பது இறைவனுடைய விருப்பம்.

நாம் மீட்பு பெற விரும்புகிறோம். நமது அயலானும் மீட்பு பெற நாம் விரும்ப வேண்டும்.

அதற்காக அவனுக்கு மீட்பு சம்பந்தமாக அறிவுரைகளை கூறி வழி நடத்த வேண்டும் என்பது நமது கடமை.

நாம் பிறருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்பது இதற்கு மற்றொரு பெயர்.

இறைவன் நம் மூலம் அவனோடு பேசுகிறார்.

நாம் நமது வாய்வழி மூலமான அறிவுரையோடு நமது முன்மாதிரிகையான வாழ்க்கை மூலமும் நமது ஆன்மீக அறிவுரையைக் கூற வேண்டும்.

நாம் ஒழுங்காக ஞாயிற்றுக்கிழமைப் பூசைக்கு வருவதை பார்த்து நமது பக்கத்து வீட்டுக்காரரும் பூசைக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

நாம் பாவ சங்கீர்த்தனம் செய்வதைப் பார்த்து நமக்கு அருகில் இருப்பவர் பாவ சங்கீர்த்தனம் செய்ய வாய்ப்பு இருக்கிறது.

3.அயலான் நம்மோடு.

கடவுள் நமக்குள்ளிருந்து நம்மோடு நேரடியாகப் பேசுவதோடு திருச்சபை மூலமாகவும், நமது அயலான் மூலமாகவும் பேசுகிறார்.

முதலில் நாம் நல்ல நண்பர்களோடு பழக வேண்டும்.

நமது ஆன்மீக வளர்ச்சிக்காக அவர்கள் தரும் அறிவுரைகளை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும்.

அதற்கு நமக்கு தாழ்ச்சி தேவை.

அன்னை மரியாள் கடவுளின் தாயாக இருந்தாலும் எலிசபெத்தம்மாளுக்கு சேவை செய்யவும், அவளது வாழ்த்துரையை ஏற்றுக் கொள்ளவும் தாழ்ச்சியோடு தயாராக இருந்தாள்.

நமது நண்பர்கள் மூலமாகவும் தூய ஆவியானவர் நம்மோடு பேசுவார் என்பதை நாம் ஏற்றுக் கொண்டால் நாம் அவர்களின் குரலுக்கு செவி கொடுப்போம்.

அவர்களாலும் மீட்பின் பாதையில் நம்மை வழி நடத்த‌ முடியும்.

 திருச்சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

உலகியல் ரீதியான குடும்பத்தில் பிள்ளைகள் அனைவரும் பெற்றோர் கொடுக்கும் தின்பண்டங்களை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து உண்கிறோம்.

இயேசுவின் தலைமையிலான ஆன்மீக குடும்பத்தில் வாழும் நாம் இறைவன் நமக்குத் தருவதை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்வது இயல்பு தானே.

நமது விண்ணகப் பயணத்தின்போது கிறித்தவர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து நடப்போம்.

ஒருவரையொருவர் தாங்கி வாழ்வோம், தூய ஆவியின் அருள் கொடையால்.

லூர்து செல்வம் 

Monday, May 20, 2024

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?(தொடர்ச்சி)

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?
(தொடர்ச்சி)


மெய்யுணர்வு

ஒரு மாம்பழத்தைக் கையில் எடுத்துக் கொள்வோம்.

மாம்பழம் உடலுக்கு நல்லது என்று மருத்துவர் கூறியிருக்கிறார்.

மாம்பழத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அதன் அழகை கண்ணால் இரசித்துக் கொண்டு,

நறுமணத்தை மூக்கினால் நுகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் உடலுக்கு நல்லதா?

உடலுக்கு நல்ல மாம்பழப் பகுதி கண்ணுக்குத் தெரியாது.

மேல் தோல் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.

அதைப் பார்ப்பதால் உடலுக்கு எந்தப் பயனும் இல்லை.

அதற்கு உள்ளே இருப்பது தான் உடலுக்கு நல்லது என்பதை முதலில் உணர வேண்டும்.

அதுதான் மெய்யுணர்வு.

மெய் + உணர்வு = உண்மையை உணர்வது.

மாம்பழத்தைப் பற்றிய உண்மையை உணர்ந்தால் தான் அதை வெட்டி, உள்ளே உள்ளதைச் சாப்பிடுவோம்.

உடல் பயன்பெறும்.

நமது ஆன்மாவின் மீட்புக்குத் தேவையான விசுவாசச் சத்தியங்களை அறிய வேண்டியிருக்கிறது.

நாமும் அறிந்திருக்கிறோம்.

அவை அடங்கியுள்ள விசுவாசப் பிரமாணத்தை தினமும் அடிக்கடி சொல்கிறோம்.

ஆனால் உணர்ந்து சொல்கிறோமா,

அல்லது மாம்பழத்தின் மேற்பகுதியை மட்டும் பார்ப்பது போல வார்த்தைகளை மட்டும் சொல்கிறோமா?

வார்த்தைகள் உள்ளத்திலிருந்து வருகின்றனவா,

அல்லது,

உதட்டிலிருந்து மட்டும் வருகின்றனவா?

விசுவாச சத்தியங்களை உணர்ந்தால் தான் அவை நமது ஆன்மீக வாழ்க்கைக்குப் பயன்படும்.

அவற்றின் உணர்த்தும் படி தூய ஆவியிடம் வேண்ட வேண்டும்.

விசுவாச சத்தியத்தின் உட்பொருளை உணர்ந்தால் அது ஆன்மீக வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படும் என்று பார்ப்போம்.

பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கையே கிடையாது.

பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு விட்டால் பிரச்சினைகள் காணாமல் போய் விடும்.

ஆனால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயல்வதே பெரிய பிரச்சினை.

இரண்டு பையன்கள்.

ஒருவனுடைய பெற்றோர் வசதி படைத்த பணக்காரர்கள்.

அடுத்தவனுடைய பெற்றோர் அன்றாடக் கூலிகள்.

கூலிகளுடைய பையன் எதிர் கால வாழ்க்கையைப் பற்றிக் கவலைப் படுவதில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது.

ஆனால் பணக்கார வீட்டுப் பையன் கவலைப் பட்டால் என்ன அர்த்தம்?

அவனுக்குப் பெற்றோர் மேல் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.

"பரலோகத்தையும், பூலோகத்தையும், காணப்படுபவை, காணப்படாதவை ஆகிய எல்லாவற்றையும் படைத்த சர்வ வல்லபரான பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்."

நம்மைப் படைத்த கடவுள் சர்வ வல்லவர்.

சர்வ வல்லவர். அவரால் செய்ய முடியாதது எதுவும் இல்லை.

சர்வ வல்லவர் உட்பொருளை உணர்ந்திருந்தால் நமது அகராதியில் கவலை என்ற வார்த்தையே இருக்காது.

ஏனெனில் சர்வ வல்லவரின் பிள்ளைகள்.

வாழ்வில் விருப்பங்கள் இருக்கும், ஆனால் விருப்பங்கள் நிறைவேறுமா, நிறைவேறாதா என்ற சந்தேகமே வராது.

ஏனெனில் நமது விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய நமது தந்தை எல்லாம் வல்லவர்.

நமது விருப்பங்கள் நிறைவேறுமா நிறைவேறாதா என்ற சந்தேகம் நமக்கு வந்தால் நாம் நம்மைப் படைத்த கடவுள் சர்வ வல்லவர் என்று ஏற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.

விசுவாசப் பிரமாணத்தைச் சொல்ல ஆரம்பிக்கும் போதே எல்லாம் வல்ல நமது தந்தையின் மடியில் ஏறி உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

நாள் முழுவதும் அந்த உணர்வுடன் வாழ்ந்தால் என்ன பிரச்சினைகள் வந்தாலும் உண்மையான மகிழ்ச்சி நம்மை விட்டு அகலாது.

நோய் நொடிகள் வந்தாலும் நமது ஆன்மீக மகிழ்ச்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது,

ஏனெனில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தந்தை பார்த்துக் கொள்வார்.

இருந்தாலும் இறைவன் மடியில், இறந்தாலும் இறைவன் மடியில்,

கவலைக்கு எங்கே இடம் இருக்கிறது?

நமது எல்லா நோக்குகளிலும் நமக்கு மெய்யுணர்வைக் கொடையாகத் தந்து ஆசீர்வதிக்க ஆவியானவரை வேண்டுவோம்.

லூர்து செல்வம்.


.



"

Sunday, May 19, 2024

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?

தூய ஆவியானவர் நம்மில் செயல்புரிகிறார் என்று கூறும் நாம் எப்படிச் செயல்புரிகிறார் என்பதைப் பற்றி சிந்தித்திருக்கிறோமா?

அவர் நம்மோடு செயல்புரிகிறார் என்பதை உணர்கிறோமா?

யாரோடும் நாம் நெருங்கிப் பழகினால் நம்மில் ஏதாவது மாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருந்தால் அது என்ன மாற்றம் என்பதை உணராமல் இருக்க முடியாது.

நாம் பரிசுத்த ஆவியின் மீது பக்தி உள்ளவர்களாக இருந்தால் அவர் நம்மில் செயல்புரியும்போது நாமும் அவரோடு ஒத்துழைப்போம்.

விவசாயி நிலத்தை உழுமுன் முதலில் தண்ணீர் பாய்ச்சி அதை நனைப்பான்.

நிலம் உழப்பட தகுதி பெற வேண்டுமானால் முதலில் தண்ணீரில் நனைய வேண்டும்.

நனைய வேண்டுமானால் அது தண்ணீரை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தூய ஆவியானவர் நமது ஆன்மாவில் செயல் புரிய வேண்டுமானால் முதலில் தன் அருளால் அதை நனைப்பார்.

நாம் நமது இதயத்தில் தூய ஆவியே இணைந்திருந்தால் நமக்குள் இறையருள் பாய்வதை உணர்வோம்.

எதற்காக இறையருள்?

நமது ஆன்மாவில் அவரது கொடைகளை விதைக்க.

அவருடைய கொடைகள்?

1ஞானம், (wisdom)
2மெய்யுணர்வு, (understanding)
3அறிவுரைத்திறன், (counsel)
4நுண்மதி, (fortitude)
5ஆற்றல், (knowledge)
6இறைப்பற்று, (piety)
7இறையச்சம். (fear of the Lord.)

ஒவ்வொரு கொடையைப் பற்றியும் பார்ப்போம்.

1ஞானம்.

நமக்குப் புத்தி இருக்கிறது.
நமது புத்தியின் மூலமாகவும்,‌ ஐம்புலன்கள் மூலமாகவும் நிறைய விசயங்களை அறிந்திருப்போம்.

நாம் அறிந்திருப்பதை நமது ஆன்மீக நலனுக்குப் பயன்படுத்தத் தெரியும் திறமையே ஞானம்.

உதாரணத்திற்கு,

தினமும் பைபிள் வாசிக்கிறோம்.

இறை வசனங்களை அறிகிறோம்.

நமக்கு பைபிள் அறிவு இருக்கும்.

அந்த அறிவை எப்படிப் பயன்படுத்துகிறோம்?

பைபிள் பற்றிக் கட்டுரைகள் எழுதப் பயன்படுத்துகிறோமா?

தேர்வு எழுதப் பயன்படுத்துகிறோமா?

வினாடி வினாப் போட்டியில் கலந்து கொள்ளப் பயன்படுத்துகிறோமா?

இம்மூன்றிலும் மதிப்பெண் கிடைக்கலாம்.

பெருமை கிடைக்கலாம்.

ஆனால் ஆன்மீக வாழ்வுக்கு இவற்றால் எந்த பயனும் இல்லை.

நமது பைபிள் அறிவை ஆன்மீக வாழ்வுக்கு பயன்படுத்த நமக்குள் உள்ள திறமையே ஞானம்.

உதாரணத்திற்கு ஒரு வசனத்தை எடுத்துக் கொள்வோம்.

"இயேசுவின் தாய் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார். "
(அரு. 2:5)

கானாவூர்த் திருமணத்தின்போது அன்னை மரியாள் இயேசுவிடம் கூறிய வார்த்தைகள்.

கானாவூர்த் திருமண நிகழ்ச்சியைப் பல முறை வாசித்திருப்போம்.

பொது வாழ்வின் போது இயேசு செய்த முதல் புதுமை.

பலருக்கும் பல காரணங்களுக்காக இப்புதுமை மனதைக் கவர்ந்திருக்கும்.

எக்காரணம் மனதைக் கவர்ந்ததோ அதன்பின்னால் தூய ஆவியின் தூண்டுதல் இருக்கும்.

யாருடைய ஆன்மீக வளர்ச்சிக்குப் புதுமையின் எப்பகுதி தேவையோ அது மனதைத் தொடும்படி தூய ஆவி பார்த்துக் கொள்வார்.

நமது மனதைத் இவ்வசனம் தொட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம்.

இயேசுவின் தாய் திருமண வீட்டாரைப் பார்த்துக் கூறும் வார்த்தைகள்.

நாமும் அங்கு நிற்கிறோம்.

அப்படியானால் அவ்வார்த்தைகள் நம்மைப் பார்த்துக் கூறப்படுகின்றன.

"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்"

அவற்றைப் பற்றி தியானிக்க ஆரம்பிப்போம்.

தூய ஆவியானவர் நமக்குள்ளிருந்து எண்ணங்களைத் தூண்டிக் கொண்டிருப்பார்.

சில சமயங்களில் அவை நாம் எதிர்பாராத எண்ணங்களாக இருக்கும்.

ஆனால் நமக்குத் தேவையான எண்ணங்களாக இருக்கும்.

"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்"

"கடவுள் நமக்குச் சொல்லி நாம் எதையாவது செய்யாதிருக்கிறோமா?"

என்று நம்மைப் பார்த்து கேள்வி கேட்க ஆரம்பிப்போம், தூய ஆவியின் தூண்டுதலால்.

நாம் எதிர்பாராமல் எப்போதோ ஒரு நாள் சுவாமியார் வைத்த பிரசங்கம் ஞாபகத்துக்கு வரும்.

"அயலான் யாரோடும் சமாதான உறவில் இல்லாத யாரும் இன்று காணிக்கை போடவேண்டாம்.

சமாதானம் செய்து கொண்டபின் காணிக்கை போட்டால் போதும்."

பிரசங்கத்தைப் பொருட்படுத்தாமல் நாம் காணிக்கை போட்டதும் ஞாபகத்துக்கு வரும்.

இப்போது ஆவியானவர் உள்ளிருந்து தூண்டுவார்.

"அன்று செய்யாததை இன்று செய்."

ஆவியானவரின் தூண்டுதலை‌ உடனடியாக ஏற்றுக் கொண்டு 

‍விரோதியோடு சமாதானம் செய்து கொள்கிறோம்.

இவ்வாறு வசன அறிவு வெறும் அறிவாக மட்டும் இல்லாமல் ஆன்மீக வாழ்வில் ஆக்கப்பூர்வமாக செயல் பட உதவுவது தூய ஆவியானவரின் ஞானம்.

இது ஒரு உதாரணம் மட்டுமே.


ஆவியானவரின் ஞானம் இருந்தால்

பைபிள் அறிவு மட்டுமல்ல

சாதாரண உலகியல் அறிவு கூட ஆன்மீக வாழ்வில் பயன்படும்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

தூய ஆவியானவர்.

தூய ஆவியானவர்.

கடவுள் எப்படி இருப்பார்?

கற்பனை செய்து பார்க்க முடியுமா?

முடியும்.

எப்படி?

கடவுள் நம்மை அவரது சாயலில் படைத்தார்.

கடவுளின் சாயலைப், (நம்மை) பார்த்தாலே அவர் எப்படி இருப்பார் என்பதைக் கண்டு பிடித்துவிடலாமே.

சிந்தனை, சொல், செயல் மூன்றுக்கும் உரியவர்கள் நாம்.

அப்படியானால் கடவுளும் இந்த மூன்றுக்கும் உரியவர்.

இறைமகனை வார்த்தை (சொல்) என்று அருளப்பர் நற்செய்தி கூறுகிறது.

"ஆதியில் வார்த்தை இருந்தார்."

நாம் சிந்திக்கும்போது உள்ளத்தில் வார்த்தை பிறக்கிறது.

கடவுள் சிந்திக்கும் போது வார்த்தை பிறக்கிறார்.

கடவுளின் சிந்தனையில் பிறக்கும் வார்த்தை தான் மகன், இறைமகன், இறைவனின் மகன்.

தந்தைக்கும் மகனுக்கும் என்ன வேலை?

தந்தைக்கும் மகனுக்கும் அன்பு செய்வதுதான் வேலை.(செயல்)

அன்பு தான் தூய ஆவி.

நித்திய காலமாக கடவுளின் சிந்தனையில் மகன் பிறக்கிறார்.

நித்திய காலமாக தந்தையாகிய கடவுள் மகனை அன்பு செய்கிறார்.

தந்தை - கடவுள்.
மகன் - கடவுள்.
அன்பாகிய தூய ஆவி - கடவுள்.

மூவரும் மூன்று ஆட்கள்.

மூவரும் ஒரே கடவுள்.

நாம் சிந்திக்கிறோம், வார்த்தை பிறக்கிறது.

சிந்தனையும் வார்த்தையும் செயலில் இறங்குகின்றன.

கடவுள் சிந்திக்கிறார்.
வார்த்தை பிறக்கிறார்.

தந்தையும் மகனும் செய்யும் செயல்தான் அன்பு, தூய ஆவி.

நம்மைப் பொறுத்த மட்டில்

சிந்தனை, சொல் ,செயல் மூன்றும் ஒரு ஆள்.

கடவுளைப் பொறுத்த மட்டில் தந்தை, மகன், தூய ஆவி மூன்று ஆட்களும் ஒரு கடவுள்.

தந்தை அன்பு செய்வதற்காக மனிதர்களை படைத்தார்.

அவர்களுக்கு அவர் கொடுத்திருக்கும் கட்டளை, 

"அன்பு செய்யுங்கள்.

என்னை அன்பு செய்யுங்கள், என்னால் படைக்கப்பட்டவர்களையும் அன்பு செய்யுங்கள்.

நான் நித்திய காலமும் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் அன்பு செய்து கொண்டிருக்கிறேன்.

நீங்களும் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் அன்பு செய்யுங்கள்."

என்று கட்டளை கொடுத்திருக்கிறார்.

மனிதனின் வேலை அன்பு செய்வது மட்டும் தான்.

மனிதன் கட்டளையை மீறி விட்டான்.

அன்புக்கு எதிராக பாவம் செய்துவிட்டான்.

மனிதனை பாவத்திலிருந்து மீட்பதற்காக இறை மகன் மனிதனாகப் பிறந்து, 
பாடுகள் பட்டு, 
சிலுவையில் மரித்து

 மனிதர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்தார்.

தனது மீட்புப் பணியைத் தொடர்ந்து செய்வதற்காக திருச்சபையை ஏற்படுத்தினார்.

அவர் ஏற்படுத்திய திருச்சபையை அன்பின் தேவனாகிய தூய ஆவி வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

இறைமகன் ஏற்படுத்திய கத்தோலிக்கத் திருச்சபையை பெந்தகோஸ்தே திருநாளன்று தூய ஆவி இயக்க ஆரம்பித்தார்.

இயேசுவின் சீடர்கள் மீது இறங்கி வந்து,

அவர்களைத் தன் அருளால் நிறப்பி, 

நற்செய்தியை அறிவிக்க உற்சாகப்படுத்தியதோடு,

அவர்கள் யார் மீது கை வைத்தார்களோ அவர்கள் மீதும் இறங்கியதோடு அவர்களின் பாவங்களை மன்னித்தார்.

நாம் ஞானஸ்நானம் பெரும்போது நம் மேல் இறங்கி வந்து நமது சென்பப் பாவத்தை மன்னித்தவர் தூய ஆவியானவர்.

உறுதிப்பூசுதலின் போது நம் மேல் இறங்கி வந்து தனது அருள் வரத்தால் நம்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்தியது தூய ஆவியானவர்.

நாம் பாவ சங்கீர்த்தனம் செய்யும்போது குருவானவர் மூலமாக நமது பாவங்களை மன்னிப்பது தூய ஆவியானவர்.

திருப்பலியில் குருவானவர் வசீகர வார்த்தைகளை சொல்லும்போது 

அப்பத்தை இயேசுவின் சரீரமாகவும் 

ரசத்தை இயேசுவின் இரத்தமாகவும் மாற்றுவது தூய ஆவியானவர்.

மெய்விவாகத்தின்போது திருமண தம்பதிகளை குடும்பமாக இணைப்பது தூய ஆவியானவர்.

பாப்பரசர், ஆயர்கள், குருக்கள் ஆகியோர் மூலமாக திருச்சபையை ஒவ்வொரு வினாடியும் ஆண்டு நடத்துபவர் தூய ஆவியானவர்.

திருச்சபை ஆரம்பித்த நாளிலிருந்து ஒவ்வொரு வினாடியும் திருச்சபையின் ஒவ்வொரு உறுப்பினரையும் வழிநடத்திக் கொண்டிருப்பவர் தூய ஆவியானவர்.

ஆனால் ஒரு மறை உண்மையை நினைவில் கொள்ள வேண்டும்.

"என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்."
(அரு. 14:9) என்று இயேசு சொல்கிறார்.

"இயேசுவை காண்பவர்கள் தந்தையை காண்கிறார்கள்."

இயேசுவின் இந்த வார்த்தைகள் மூன்று ஆட்களுக்கும் பொருத்தும்.

இயேசுவைக் காண்கிறவர்கள் தந்தையையும், தூய ஆவியையும் காண்கிறார்கள்.

தந்தையைக் காண்கிறவர்கள் இயேசுவையும், தூய ஆவியையும் காண்கிறார்கள்.

தூய ஆவியைக் காண்பவர்கள் தந்தையையும், இயேசுவையும் காண்கிறார்கள்.

ஏனெனில் மூவரும் ஒரே கடவுள்.

திருச்சபை தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் இயங்குகிறது.

குருவானவர் ஒவ்வொரு திரு அருட்சாதனத்தையும் தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் ஆரம்பித்து

தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் முடிக்கிறார்.

மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு, நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்து நம்மை மீட்டவர் இறைமகன் இயேசு என்றாலும்,

மீட்பில் செயல் புரிவது பரிசுத்த தம திரித்துவக் கடவுள்தான்.

கடவுள் நம்மை படைத்தார்.

நாம் கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்தோம்.

நம்மை மீட்பதற்காக கடவுள் மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு, சிலுவையில் மரித்தார்.

கடவுள் நம்முடன் இருந்து நம்மை வழி நடத்துகிறார்.

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால், ஆமென்.

லூர்து செல்வம்.

Saturday, May 18, 2024

"இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.''(அரு. 21:25)

"இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.''
(அரு. 21:25)

"பைபிள் மட்டும் போதும்" 

என்று கூறும் நண்பர்கள் இந்த பைபிள் வசனத்தை வாசித்துத் தியானிக்க வேண்டும்.

33ஆண்டுகள் உலகில் வாழ்ந்த இயேசு 3 ஆண்டுகள் தான் நற்செய்தியை வாய் மூலம் அறிவித்தார்.

ஆனால் 33 ஆண்டுகளும் வாழ்ந்து அறிவித்தார்.

ஏழைகள் பேறுபெற்றவர்கள் என்பதைப் போதிக்க

ஏழையாய்ப் பிறந்தார்,
ஏழையாய் வாழ்ந்தார்,
ஏழையாய் மரித்தார்.

கீழ்ப்படிதலைப் போதிக்க 
30 ஆண்டுகள் தனது
 பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்.

நிச்சயமாக அவர் தனது பெற்றோருடன் பேசியிருப்பார்.

தான் போதிக்கவிருப்பதையும்,
செய்யவிருப்பதையும் அவர்களிடம் சொல்லியிருப்பார்.

3 ஆண்டுகள் பொது மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.

3 ஆண்டுகளும் தனது 12 சீடர்களையும் கூடவே வைத்திருந்தார்.

பொது மக்களுக்குப் போதித்த அனைத்தையும் அவர்களுக்கு விளக்கினார்.

தான் போதித்த அனைத்துக்கும் எழுத்து வடிவம் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால்

சீடர்கள் அனைவரும் எழுதியிருப்பார்கள்.

ஆனால் அனைவரும் எழுதவில்லை.

நற்செய்தியாளர்களில் அருளப்பரும், மத்தேயுவும் மட்டுமே அப்போஸ்தலர்கள்.

 கி.பி 33 ல் சீடர்கள் நற்செய்தியைப் போதிக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால் கி.பி 40 - 70 காலக்கட்டத்தில் தான் முதல் மூன்று நற்செய்திகள் எழுதப்பட்டன.

அருளப்பர் கி.பி 90ல் தான் எழுதினார்.

கி.பி 40 வரை யார் கையிலும் நற்செய்தி நூல் இல்லை.

அருளப்பர் கி.பி 90வரை அருளப்பர் வாய் மொழியால் மட்டுமே போதித்தார்.

இப்போது பைபிள் மட்டும் போதும் என்பவர்கள் அக்காலக் கட்டத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்?

ஆதித் திருச்சபையில் வாய் மொழியால் மட்டுமே நற்செய்தி போதிக்கப்பட்டது.

வாய் மொழிப் போதனை தான் பாரம்பரியம்.

பாரம்பரியத்திலிருந்துதான் நற்செய்தி நூல்கள் பிறந்தன.

எழுதப்பட்ட போதனை - நற்செய்தி நூல்கள்.

எழுதப்படாத போதனை - பாரம்பரியம்.

நற்செய்தி நூல்களும், பாரம்பரியமும் சேர்ந்துதான் முழுமையான போதனை.

இரண்டு கால்கள் உள்ளவர்கள் இரண்டையும் பயன்படுத்தி நடந்தால்தான் இயல்பான நடை.

இராயப்பர் தான் திருச்சபையின் தலைவர் என்பதற்கு நற்செய்தி நூல்களிலும் ஆதாரம் இருக்கிறது,

பாரம்பரியத்திலும் ஆதாரம்‌ இருக்கிறது.

ஆனால் அதை பிரிவினை சபைகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இயேசுவைப் பெற்றவள் மரியாள்.

ஆனால் இயேசுவை ஏற்றுக் கொள்கிறவர்கள் மரியாளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

மரியாள் ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டதுக்கு பாரம்பரியத்தில் ஆதாரம்‌ இருக்கிறது.

ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

திவ்ய நற்கருணை என்றால் இயேசுவின் ஆன்மமும் சரீரமும் என்பதற்கு 

நற்செய்தி நூல்களிலும் ஆதாரம் இருக்கிறது,

பாரம்பரியத்திலும் ஆதாரம்‌ இருக்கிறது.

ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.


கத்தோலிக்கர்களின் விசுவாசத்துக்கு பைபிளும், பாரம்பரியமும் ஆதாரம்.

ஆனால் பிரிவினை சகோதரர்களின் விசுவாசத்துக்கு அவர்கள் தான் ஆதாரம், பைபிள் அல்ல.

பைபிள் மட்டும் ஆதாரம் என்றால் ஒரு சபைதானே இருக்க வேண்டும், ஆனால் ஆயிரக்கணக்கான பிரிவினை சபைகள் இருக்கின்றனவே!

இயேசு ஒருவர்.

அவர் நிறுவிய திருச்சபையும் ஒன்று மட்டுமே.

ஏக, 
பரிசுத்த, 
அப்போஸ்தலிக்க, கத்தோலிக்கத் திருச்சபை மட்டும்தான் இயேசு நிறுவிய திருச்சபை.

லூர்து செல்வம்.

Friday, May 17, 2024

"தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன். "(அரு. 17:15)

" தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன். "
(அரு. 17:15)

பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன்

இரவு உணவிற்குப் பின்

 இயேசு தனது தந்தையை நோக்கி சீடர்களுக்காகச் செபிக்கிறார்.

"உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். 

நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.

 ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது. 


அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை;

 தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன். 


 நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. 
( 17:14-16)

எதற்காக இந்த செபம்?

சீடர்கள் நற்செய்தியை அறிவிக்க உலகெங்கும் செல்ல வேண்டும்.

சாத்தானும் அவனுடைய தோழர்களும் உலவிக் கொண்டிருக்கும் உலகம்.

சாத்தான் இயேசுவையே சோதித்தது.

சீடர்களை விடுமா?

தீயோனிடமிருந்து (சாத்தானிடமிருந்து) அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறார்

இயேசுவின் செபம் நமக்கும் பொருந்தும், ஏனெனில் நாமும் அவருடைய சீடர்கள்தான்.

நம்மையும் சாத்தானிடமிருந்து
காத்தருள வேண்டுமென்று தந்தையை வேண்டுகிறார்.

சாத்தான் யார்?

தன்னைக் கடவுளுக்கு நிகராக எண்ணியதால் மோட்சத்தை இழந்த லூசிபர் என்ற சம்மனசு.

அவனால் நமக்கு என்ன பிரச்சினை?

அவன் இழந்த மோட்சத்திற்குள் மனிதர்கள் யாரும் போகக்கூடாது என்பதைக் குறியாக வைத்து

அவனும் அவனுடைய சகாக்களும் உலகை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் குறிக்கோளை நிறைவேற்ற என்ன செய்கிறார்கள்?

நாம் மோட்சத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் இயேசுவின் நற்செய்தியின் படி வாழ வேண்டும்.

அவ்வாறு வாழ விடாதவாறு நம்மைச் சோதிப்பது அவர்கள் வேலை.

பள்ளிக்கூடம் செல்லும் மாணவனை போகவிடாதபடி TV ல் காட்டப்படும் Cricket match சோதிப்பது போல,

ஆன்மீக வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர்களை லௌகீக வாழ்வின் இன்பங்களால் சோதிப்பார்கள்.

லௌகீக வாழ்வின் கவர்ச்சியால் ஈர்க்கப் படுகின்றவர்கள் ஆன்மீக வாழ்வில் அக்கறை காட்ட மாட்டார்கள்.

இவர்களின் சோதனையால்

 காலையில் தந்தை, மகன், தூய ஆவியின் பேரால் எழ வேண்டியவர்கள் 

Bed coffee, please என்று கூறிக்கொண்டு எழுவார்கள்.

செபமாலையை எடுக்க வேண்டிய கையால் TV remote ஐ எடுப்பார்கள்.

காலை செபம் சொல்வதற்கு பதிலாக Smart phoneல் YouTube க்குள் நுழைவார்கள்.

ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு செல்வார்கள், ஆனால் உடல் தான் கோவிலில் இருக்கும், உள்ளம் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும்.

நற்செய்தியை அறிவிப்பதற்காக பிரசங்கம் வைப்பது குருவானவரின் வேலை.

அதைக் கேட்க விடாதபடி தூக்கத்தைக் கொடுப்பது சாத்தானின் வேலை.

கோவிலில் எத்தனை பேர் இருக்கின்றார்களோ அத்தனை குட்டிச் சாத்தான்களும் கோவிலில் இருக்கும்.

திவ்ய நற்குணையை தின்பண்டத்தை வாங்குவது போல் வாங்கி வாயில் போடுவார்கள்.

அப்படியே அரட்டை அடிக்க கோவிலை விட்டு வெளியேறி விடுவார்கள்.

சுய பெருமையை காட்டிக் கொள்வதற்காகப் பிறருக்கு உதவி செய்வார்கள்.

பகைவரை நேசிக்கும் படி நற்செய்தி கூறும்.

பழிக்குப்பழி வாங்கும் படி சாத்தான் சோதிப்பான்.

கிறிஸ்தவர்களாக வாழ்வார்கள் ஆனால் கிறிஸ்தவ வாழ்வு வாழ மாட்டார்கள்.

"எங்களை சோதனையில் விழ விடாதேயும்" என்று நாம் தந்தையை நோக்கி செபிக்க இயேசு கற்றுத் தந்திருக்கிறார்.

தீயோனின் சோதனையில் விழாமல்,

லௌகீக கவர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல்

ஆர்வமுடன் ஆன்மீக வாழ்வு வாழ்வோம்.

நித்திய பேரின்ப வாழ்வைப் பரிசாகப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

Thursday, May 16, 2024

"யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?"

"யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?"

இயேசு இராயப்பரைப் பார்த்து இந்தக் கேள்வியை‌ மூன்று முறைக் கேட்டார்.

மூன்று முறையும், "நான் அன்பு செலுத்துகிறேன்." என்ற பதிலையே இராயப்பர் சொன்னார்.

எதற்காக இந்தக் கேள்விகள்?

கேள்வி பதில்களின்போது

"என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்"

"என் ஆடுகளை மேய்"

 "என் ஆடுகளைப் பேணி வளர்" 

என்ற வார்த்தைகள் மூலம் அவரைத் திருச்சபையின் தலைவராக நியமித்தார்.

அவர் திருச்சபையின் தலைவராக நியமிக்கப்பட பொருத்தமானவரா என்பதைச் சோதிக்கவா இந்தக் கேள்விகளைக் கேட்டார்?

தலைமைப் பதவி அவரது அன்புக்குப் பரிசா?

"நீ பாறை, இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. "
(மத். 16:18)

என்ற வார்த்தைகள் மூலம் அவரைத் தலைவராக்க ஏற்கனவே தீர்மானித்து விட்டார்.

தலைமைப் பதவியை விட வேறொரு முக்கியமான பரிசைக் கொடுப்பதற்காக இந்தக் கேள்விகளைக் கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

நாம் நம்மை நேசிப்பவர்களுக்கு நமது அன்பைத் தெரிவிப்பதற்கும், அன்பில் வளர்வதற்கும் பரிசுகள் கொடுப்பது வழக்கம்.

 "நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். 

உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். 

வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் " 
(அரு. 21:18)

இதுதான் இயேசு இராயப்பருக்கு வாக்களித்த அன்புப் பரிசு.

துன்பம். (Suffering)


இப்போது வார்த்தைகள் மூலம் தெரிவித்த அன்பை இராயப்பர் இயேசுவுக்காக மரணிப்பதன் மூலம் வெளிப்படுத்துவார் என்று இயேசு சொல்கிறார்.

இயேசு சொன்ன படியே இராயப்பர் அவரது அன்பைக் காட்ட வேதசாட்சியாக மரித்தார்.

அதுவும் இயேசுவைப் போலவே சிலுவையில் அறையப்பட்டு கொல்லப் பட்டார்.

அவர் அறையப்பட்ட சிலுவை அவர் விருப்பப்படி தலைகீழாக நடப்பட்டது.

அன்பைப் பற்றிய இயேசுவின் கருத்து சாதாரண மனிதர்களின் கருத்துக்கு நேர் எதிர்மாறானது.

தன் மீதுள்ள அன்பை  இராயப்பர் தனது வேத சாட்சிக்குரிய மரணத்தின் மூலம் வெளிப்படுத்தப் போவதை இயேசு ஏற்றுக் கொள்கிறார்.

உலகியல் ரீதியாகச் சிந்திப்போர் தங்களால் நேசிக்கப் படுகின்றவர்கள் துன்பப்படக் கூடாது என்றே விரும்புவர்.

துன்பப்பட நேர்ந்தால் அதிலிருந்து அவர்களை விடுவிக்கவே ஆசைப்படுவர்.

ஆனால் இயேசுவின் ஆசை அதற்கு எதிர் மாறானது.

அன்புக்காக துன்பப்படுவதன் மூலம் தான் நமது அன்பை வெளிப்படுத்த வேண்டும்.

அவரே நம் மீது கொன்டுள்ள அன்பின் மிகுதியால் நமக்காக பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

தனது பாடுகளின் மூலமும் சிலுவை மரணத்தின் மூலமும்தான் அவருடைய அன்பை வெளிப்படுத்தினார்.


இயேசுவைப் பொருத்தமட்டில் அன்பும், துன்பமும் எதிரிகள் அல்ல,  நண்பர்கள்.

அன்பு இருக்கும் இடத்தில் துன்பமும் இருக்கும்.

ஆனால் துன்பம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அப்படின்னா?

நமது நண்பனுக்காக நாம் துன்பத்தை ஏற்றுக் கொண்டால் அது அன்பின் தோழன்.

நண்பனுக்காக அல்லாமல் நோய் நொடிகளின் காரணமாகவோ, தோல்விகளின் காரணமாகவோ ஏற்பட்டால் அது வெறும் துன்பமே.

அதனால் எந்த ஆன்மீக பயனும் இல்லை. 

உலகியல் ரீதியாக நமக்கு ஏற்படும் துன்பங்களை ஆன்மீகமாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?

நமக்கு ஏற்படும் துன்பங்களை நமது பாவங்களுக்கோ,

நமது குடும்பத்தினர் பாவங்களுக்கோ, 

உலகின் பாவங்களுக்கோ பரிகாரமாக ஏற்றுக் கொண்டால்

 அவை ஆன்மீக ரீதியாக இறையன்பின் தோழனாக மாறிவிடும்.

அதாவது துன்பங்கள் இயேசு சுமந்த சிலுவையாக மாறிவிடும்.

சிலுவை தான் இயேசு அரசரின் சிம்மாசனம்.

சிலுவையில் தான் நமக்கு மீட்பு பிறந்தது.

சிலுவையில் தான் நமது நித்திய பேரின்பம் குடியிருக்கிறது.

சிலுவை கிறிஸ்தவத்தின் அடையாளம்.

சிலுவையில் தான் இயேசு தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார்.

நமது துன்பத்தை நாமும் பலியாக ஒப்புக் கொடுக்கும் போது நாம் நம்மையே நமது இயேசுவுக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கிறோம்.

இயேசு யார் தன்னை அதிகம் நேசிக்கிறார்களோ அவர்களுக்கு அதிக துன்பங்களை அனுமதிக்கிறார்.

அவர் மிக அதிக வியாகுலங்களை‌ அனுமதித்தது அவரைப் பெற்ற அன்னைக்குத்தான்.

நமது வாழ்வில் ஏற்படும் துன்பங்களை நமக்கும் இயேசுவுக்கும் இடையில் நிலவும் அன்பின் அடையாளமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

துன்பங்கள் வரும்போது நாம் அவற்றை எப்படி நோக்குகிறோம் என்பதை வைத்தே நாம் நமது ஆன்மீக வாழ்வில் என்று அளவிற்கு வளர்ந்திருக்கிறோம் என்பதைக் கண்டு கொள்ளலாம்.

நாம் அவற்றிலிருந்து விடுதலை பெற விரும்புகிறோமா?

அல்லது அவை நாம் பரிசுத்தத் தனத்தில் வளர உதவியாக இருக்கும் என்று அவற்றை மனதார ஏற்றுக் கொள்கிறோமா?

நமது துன்பங்கள் மற்றவர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோமா?

நமக்காக மட்டுமல்ல யாருடைய ஆன்மீக வளர்ச்சிக்காக அவற்றை இறைவனுக்கு ஒப்புக்கொள்கிறோமோ 

அவர்களுடைய ஆன்மீக வாழ்க்கைக்கும் அவை உதவியாக இருக்கும். 

நமது துன்பங்களின் உதவியால் உத்தரிக்கிற ஆன்மாக்களை மோட்சத்திற்கு அனுப்பலாம்.

துன்பங்களை இயேசு எப்படி நோக்கினாரோ  அப்படியே நாமும் நோக்க வேண்டும்.

உலக மக்களின் ஆன்மீக‌ மீட்புக்காக இயேசு துன்பங்களைப் பயன்படுத்தினார்.

அந்த நோக்கத்தோடு துன்பப்படுவதற்கென்றே அவர் மனிதனாகப் பிறந்தார்.

என்ஜினில் கோர்க்கப்பட்ட இரயில் பெட்டிகள் என்ஜின் செல்லும் இடமெல்லாம் செல்லும்.

நாம் நமது துன்பங்களை இயேசு பாடுபட்டு மரித்த சிலுவையோடு கோர்த்து விடுவோம்.

இயேசுவின் விருப்பங்களை அவை நிறைவேற்றும்.

இயேசுவுக்காகத் துன்பப்படுகின்றவர்கள் பாக்கியவான்கள்

ஏனெனில் அவர்கள் உலகம் மீட்புப் பெற உதவுகிறார்கள்.

லூர்து செல்வம்

Wednesday, May 15, 2024

கடவுள் பாவிகளைத் தண்டிப்பாரா?

கடவுள் பாவிகளைத் தண்டிப்பாரா?

சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றுக்கும் உரியவன் மனிதன்.

மனதில் சிந்திப்பவன்,
சிந்தித்ததைப் பேசுபவன்,
சிந்தித்ததைச் செய்பவன்
மனிதன்.

சிந்தனை சொல் வடிவில் வெளி வருகிறது.

சொல்லுக்கு உரிய பொருளும் சிந்தனையிலிருந்துதான் வருகிறது.

ஒருவனின் குணத்தை (Charector) நிர்ணயிப்பது அவனது சிந்தனை தான்.

நல்ல மனது உள்ளவன் (நல்லதைச் சிந்திப்பவன்) நல்லவன்.

கெட்ட மனது உள்ளவன் கெட்டவன்.

ஒருவனுடைய வார்த்தைகளுக்குப் பொருளை அறிய வேண்டுமென்றால் முதலில் அவனுடைய குணத்தை அறிய வேண்டும்.

தினமும் பைபிள் வாசிக்கிறோம்.

பைபிள் என்றால் இறைவார்த்தை.
இறைச் சிந்தனையின் வெளிப்பாடு.

இறைவன் என்றாலே அன்பு.
அன்பே இறைவன்.

அன்பால் இயங்குபவர்.

ஒருவர் எதிர் எதிரான பண்புகளின் உருவமாக இருக்க முடியாது.

அன்பே உருவான கடவுள் அன்புக்கு எதிரான பண்பின் உருவமாக இருக்க முடியாது.

இரக்கம், பரிவு, மன்னிக்கும் தன்மை ஆகியவை அன்போடு தொடர்புடைய பண்புகள்.

வெறுப்பு, கோபம், பழிவாங்கும் தன்மை, தண்டிக்கும் தன்மை ஆகியவை அன்புக்கு எதிரான பண்புகள்.

தொடர்புடைய பண்புகளும், எதிரான பண்புகளும் சேர்ந்திருக்க முடியாது.

கடவுளால் யாரையும் வெறுக்க முடியாது, 

யாரோடும் கோபமாக இருக்க முடியாது,

யாரையும் பழிவாங்க முடியாது,

யாரையும் தண்டிக்க முடியாது.

கடவுளைப் பற்றிய வசனங்களில் இவற்றைப் பற்றிய குறிப்புகள் இருந்தால் அவற்றுக்கு கடவுள் அன்பு மயமானவர் என்ற பின்னணியில் பொருள் காண வேண்டும்.

இயேசு தான் போதித்ததைச் சாதித்தவர்.

"ஏழைகள் பேறுபெற்றவர்கள் " என்று சொன்னது மட்டுமல்ல,

அவரே ஏழையாகப்‌ பிறந்தார், ஏழையாக வாழ்ந்தார், ஏழையாக மரித்தார்.

 "உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்.

 உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்."

என்று சொன்னது மட்டுமல்ல, சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது தனது பாடுகளுக்குக் காரணமானவர்களை மன்னிக்கும் படி தந்தையிடம் வேண்டினார்.

'பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். 

 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை."
(மத். 25:41,42)

என்று இயேசு சொல்கிறாரே,
இது எப்படி?

சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது தனது பாடுகளுக்குக் காரணமானவர்களை மன்னிக்கும் படி தந்தையிடம் வேண்டிய இயேசு,

இறுதித் தீர்ப்பு நாளில்

தனக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களை நரகத்தில் தள்ளப் போவதாகச் சொல்கிறாரே,

இது அவருடைய போதனைக்கு எதிராக இல்லையா?
என்று கேட்கலாம்.

இயேசுவின் வார்த்தைகளுக்கு

கடவுள் அன்பு மயமானவர் என்ற பின்னணியில்தான் பொருள் காண வேண்டும்.

அன்பு மயமானவர் தன்னால் படைக்கப்பட்டவர்களை நரகத்தில் தள்ளுவாரா?

தள்ளமாட்டார்.

அப்படியானால் அவரது வார்த்தைகளுக்கு விளக்கம்?

ஒரு தகப்பனார் மது அருந்துவதைப் பழக்கமாகக் கொண்டத் தன் மகனிடம்,

".மது அருந்தாதே, அருந்தினால் உடல் நலம் கெடும்." என்கிறார்.

அவர் சொன்னபடியே மகனுடைய உடல்நலம் கெட்டுவிட்டது.

மகனுடைய உடல்நலம் கெடக் காரணமாக இருந்தது தகப்பனாரின் வார்த்தைகளா?
அல்லது அவனா?

குடி தன்னிலே கெடுதியானது, தகப்பனாரின் வார்த்தைகளால் அல்ல.

குடி உடல் நலத்தைக் கெடுக்கும் என்ற உண்மையைச் சொன்னவர் மட்டுமே தந்தை.

கெடுதியானதைக் குடித்ததால் உடல் நலம் கெட்டது, தந்தை சொன்னதால் அல்ல.

மோட்சம் என்றால் என்ன?
நரகம் என்றால் என்ன?

இரண்டுமே நம் உலகைப் போன்ற இடங்கள் அல்ல.

நித்திய காலம் இறைவனோடு வாழும் பேரின்ப நிலை மோட்சம்.

நித்திய காலம் இறைவனைப் பிரிந்து வாழும் பேரிடர் நிலை நரகம்.

நித்திய காலமும் தன்னோடு பேரின்ப நிலையில் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் மனிதனைப் படைத்தார்.

ஆனால் அவனை முழுமையான சுதந்திரத்தோடு படைத்தார்.

கடவுளோடு சேர்ந்து வாழ வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு எடுக்க வேண்டியது மனிதன் தான்.

யாருடைய சுதந்திரத்திலும் கடவுள் குறுக்கிட மாட்டார்.

பாவம் கடவுளுக்கு எதிரானது.

பாவம் செய்தால் கடவுளோடு சேர்ந்து வாழ முடியாது.

இது மனித புத்திக்குத்  தெரியும்.

தெரிந்தும் மனிதன் பாவம் செய்தால் என்ன அர்த்தம்?

கடவுளோடு வாழ அவனுக்குப் பிரியமில்லை என்று அர்த்தம்.

வேண்டுமென்றே பாவ நிலையில் ஒருவன் வாழ்ந்தால் 

கடவுள் வேண்டாம் அவன் தீர்மானித்து விட்டான் என்று அர்த்தம்.

வேண்டுமென்றே பாவ நிலையில் வாழும் ஒருவன் அந்த நிலையிலேயே இறந்து விட்டால் 

அவன்தான் கடவுளை விட்டுப் பிரிந்து போகிறான், கடவுள் போகச் சொல்லவில்லை.

தன்னோடு வாழ வேண்டும் என்று படைத்த மனிதனைக் 

கடவுள் தன்னை விட்டுப் போகச் சொல்ல மாட்டார், 

தானாகப் போகிறவனைத் தடுக்கவும் மாட்டார்.

ஏனெனில் இது அவனுடைய சுதந்திரமான தேர்வு, 

கடவுள் சுதந்திரத்தை மதிக்கிறார்.

அப்படியானால் இறுதி தீர்ப்பு பற்றிய பைபிள் வசனங்களுக்கு என்ன பொருள்?

சுருக்கமாகச் சொல்வதானால்,

"என்னோடு வாழ விரும்புகிறவர்கள் என்னிடம் வாருங்கள்.

விரும்பாதவர்கள் உங்கள் விருப்பப்படி செல்லுங்கள்."

இயேசுவே இப்படிச் சொல்லியிருக்கலாமே?

"சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்." என்று ஏன் சொன்னார்?

இயேசு மனிதர்களிடம் மனித மொழியில், அவர்கள் பேசும் பாணியில் பேசினார்.

குற்றவாளிகளை விசாரித்து, தண்டனை வழங்கும் பழக்கம் மனிதர்களிடையே இருந்தது, இப்போதும் இருக்கிறது.

தண்டனை கிடைக்கும் என்று சொன்னால் தான் மக்கள் குற்றம் செய்யப் பயப்படுவார்கள்.

மனிதர்கள் பாவம் செய்யப் பயப்பட வேண்டும்.

பயந்தால் தான் பாவம் செய்ய மாட்டார்கள்.

பாவம் செய்யாதிருந்தால் தான் புண்ணிய வாழ்வில்‌ வளர முடியும்.

ஆகவே தான் அவர்கள் பாணியில் பேசினார்.

நாம் இயேசுவின் வார்த்தைகளை அவரது தன்மையின் (Nature) பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும்.

வகுப்பில் ஆசிரியர் மாணவர்களை நோக்கி,

"இன்று இரவு வீட்டுப்பாடம் படிக்காதவர்கள் நாளை காலையில் எழுந்து மாடு மேய்க்கப் போகலாம்."

என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

காலையில் ஒரு மாணவன் தன்னுடைய தந்தையை நோக்கி,

"இன்று பள்ளிக்கூடம் வர வேண்டாம், மாடு மேய்க்கப் போங்கள்" என்று ஆசிரியர் சொல்லி இருக்கிறார்"

என்று சொன்னால் அவனைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?

இறை வசனங்களுக்கு தங்கள் இஷ்டப்படி பொருள் கொடுப்பவர்கள் இந்த பையனைப் போன்றவர்கள் தான்.

முதலில் பாவிகளுக்காக தனது உயிரையே பலி கொடுத்த இயேசுவைப் புரிந்து கொள்வோம் அப்புறம் பைபிள் வாசிப்போம்.

மோட்சம் வேண்டுமா, 
நரகம் வேண்டுமா என்று மனிதன் தான் தேர்வு செய்ய வேண்டும்.

 நாம் மோட்சத்தைத் தேர்வு செய்வோம்.

இயேசுவின் விருப்பப்படி வாழ்வோம்.

லூர்து செல்வம்

Tuesday, May 14, 2024

சமாதானமா? உலகமா?

சமாதானமா? உலகமா?

"என் சமாதானத்தை உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் சமாதானம் உலகம் தரும் சமாதானம் போன்றது அல்ல."
(அரு. 14:27)

உலகம் தரும் சமாதானத்திற்கு ஒரு உதாரணம்,

முதல் உலகப் போர் முடிந்தவுடன் வென்ற நாடுகளும் தோற்ற நாடுகளும் வெர்செய்ல்ஸ் (Versailles) சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டன.

இதுவே இரண்டாம் உலகப் போருக்கு முதல் காரணம்.

ஏனெனில் இந்த ஒப்பந்தம் வென்ற நாடுகள் தோற்ற நாடுகளைப் பழி வாங்கும் விதமாய் அமைந்திருந்தது.

போர் ஓய்ந்திருந்த காலத்தில் தோற்ற நாடுகள் அடுத்த உலகப் போருக்குத் தங்களைத் தயாரிக்க ஆரம்பித்தன.

படை பலத்தைப் பெருக்கிக் கொண்டு இரண்டாம் உலகப் போரை ஆரம்பித்தன.

உலகம் தரும் சமாதானம் உண்மையில் சமாதானம் அல்ல.

இறைவன் தரும் சமாதானம்.

மனிதன் தனது பாவத்தினால் இறைவனோடு இருந்த உறவை முறித்துக் கொண்டான்.

அவனோடு சமாதானம் செய்து கொள்ள 

இறைவன் மனிதனாகப் பிறந்து

 அவரே தனது சிலுவை மரணத்தின் மூலம் 

மனிதனுடைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்ததோடு

 அவனுடைய பாவங்களை மன்னித்தார்.

இறைவன் தரும் சமாதானத்தின் அடிப்படை மன்னிப்பு.

உலக அரசு குற்றவாளியைக் கைது செய்து நீதிமன்றத்தில் விசாரிக்கும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கொடுக்கும்.

மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

இறையரசர் குற்றவாளி குற்றத்தை ஏற்றுக் கொண்டு, வருந்தி மன்னிப்புக் கேட்டால் உடனே மன்னிப்பார்.

குற்றவாளி தான் செய்த குற்றத்திற்கு பரிகாரம் செய்தால் போதும். தண்டனை கிடையாது.

இயேசு சமாதானத்தின் தேவன்.

நல்ல மனது உள்ளவர்களுடன் தனது சமாதானத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

"நன்மனதோற்குச் சமாதானம் உண்டாகுக." இது மீட்பர் பிறந்த அன்று விண்ணிலிருந்து நமக்கு வந்த நற்செய்தி.

இறைவனுக்கும் நமக்கும் இடையில் நிலவும் அன்பு உறவைத்தான் சமாதானம் என்கிறோம்.

இறைவன் மாறாதவர்.

எந்த சூழ்நிலையிலும் அவரது அன்பும், சமாதானமும் மாறாது.

மாறுபவர்கள் நாம்தான்.

நாம் பாவம் செய்யும்போது நாம் இறைவனோடு நமக்குள்ள உறவை முறிக்கிறோம்.

முறிந்த உறவை மீண்டும் பெற நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.

செய்த பாவத்துக்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

உடனே மன்னிப்புக் கிடைக்கும்.

இறைவனோடு நமது உறவு தொடரும்.

எத்தனை முறை மன்னிப்புக் கேட்கலாம்?

கணக்கே கிடையாது.

எத்தனை முறை பாவம் செய்கிறோமோ அத்தனை முறையும் மன்னிப்புக் கேட்கலாம்.

உலக அரசிடம் இது செல்லுபடி ஆகுமா?

உலக அரசுக்கு தண்டனை கொடுக்க மட்டுமே தெரியும்.

மன்னிக்கத் தெரியாது.

கடவுள் நம்மை அவரது சாயலில் படைத்திருக்கிறார்.

அப்படியானால் நமக்கும் மன்னிக்கத் தெரிய வேண்டும்.

நமது அயலான் நமக்கு எதிராகக் குற்றம் செய்தால் அதை நாம் முழு மனதோடு மன்னிக்க வேண்டும்.

கொடுப்பவர்களுக்கு மட்டுமே கேட்க உரிமை உண்டு.

"விண்ணகத் தந்தையே, எங்களுக்கு எதிராக குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னித்தருளும்."

இதுதான் இயேசு காட்டும் சமாதானத்திற்கான வழி.

சமாதானம் என்றால் நல்லுறவு.

உறவு ஏற்பட்டால் மட்டும் போதாது, வளர வேண்டும்.

இறைவன் எப்போதும்,

நாம் பாவ நிலையில் இருக்கும்போது கூட, 

நம்முடன் உறவுடன் இருக்கிறார்.

கடவுள் பாவிகளை எப்போதும் நேசிக்கிறார்.

இறைவன் அளவில்லாதவர், அவருடைய உறவும் அளவில்லாதது.

கடவுள் நம்மை அளவில்லாத விதமாய் நேசிக்கிறார்.

நாம் சென்மப் பாவத்துடன் இருக்கும்போது நமக்கு இறைவனுடன் உறவு இல்லை.

திருமுழுக்கு பேறும்போது சென்பப் பாவம் மன்னிக்கப்பட்டு நமக்கு இறைவனோடு உறவு ஏற்படுகிறது.

ஏற்கனவே இருக்கும் இறை உறவோடு நமது உறவு இணைகிறது.

இது அவருடைய அருள் வரத்துக்கு வழி செய்கிறது.

நாம் இறைவனோடு உள்ள உறவில் வளர வேண்டும்.

நமது செப வாழ்வின் மூலமும், பிறர் அன்பு செயல்களின் மூலமும் இறைவனோடு நமக்குள்ள உறவு வளர்கிறது.

செபவாழ்வு என்றால் இறைவனோடு நமக்குள்ள அன்பின் வாழ்வு.

எவ்வளவுக்கு எவ்வளவு நாம் இறையன்பிலும் பிறர் அன்பிலும் வளர்கிறோமோ

அவ்வளவுக்கு அவ்வளவு இறைவனோடு நமக்குள்ள உறவும் வளரும்.

அதாவது உறவின் நெருக்கம் அதிகமாகும்.

இறைவனோடு உள்ள உறவின் நெருக்கம் அதிகமாக அதிகமாக இறைவனுடைய அருளின் நாம் வளர்வோம்.

அன்னை மரியாளுக்கு இறைவனோடு உள்ள உறவின் நெருக்கம் மிக மிக அதிகம்.

ஆகவேதான் அவள் அருள் நிறைந்த மரியாள்.

நாம் இறை அன்னையை நோக்கி ''அருள் நிறைந்த மரியே வாழ்க"

 என்று வாழ்த்தும் போதெல்லாம் நாமும் இறை அருளில் வளர்வோம்.

நாம் தாயைப் போல பிள்ளையாக மாற வேண்டும் என்றால் அடிக்கடி பக்தியுடன் செபமாலை செபிக்க வேண்டும்.

நாம் இறை அருளில் வளரவும்,
நமது குடும்பம் இறை அருளில் வளரவும்,
உலகம் இறை அருளில் வளரவும்,

நமது செபமாலை செபம் உதவும்.

உலக சமாதானமும் வளரும்.

 அயலானை மன்னிப்போம்.

ஆண்டவரின் மன்னிப்பைப் பெறுவோம்.

ஒருவருக்கொருவர் உதவி செய்து‌ வாழ்வோம்.

இறைவனின் சமாதானத்தில் வளர்வோம்.

அனைவருக்கும் சமாதானம் உண்டாகுக.

லூர்து செல்வம்.