Tuesday, July 2, 2024

"அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்."(மத்தேயு.9:2)

"அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்."
(மத்தேயு.9:2)

இறைமகன் இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து நம்மை மீட்பதற்காக மனிதனாகப் பிறந்தார்.

அவர் உலகுக்கு வந்ததன் நோக்கம் பாவப் பரிகாரம், பாவ மன்னிப்பு.

புதுமைகள் செய்து நோயாளிகளைக் குணமாக்க வேண்டும் என்பது அவரது நோக்கம் அல்ல.

பாவ மன்னிப்பில் தான் மீட்பு அடங்கியிருக்கிறது, உடல் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதில் அல்ல.

அப்படியானால் ஏன் அவர் தனது பொது வாழ்வில் சென்ற இடமெல்லாம் புதுமைகள் செய்து மக்களின் நோய்களைக் குணமாக்கினார்?

ஆன்மீக மீட்புக்கான அடிப்படைகளைப் போடுவதற்காக.

கட்டடம் கட்டுமுன் அதற்கான அடிப்படையைப் போடுகிறோம்.

அடிப்படையின் மேல் தான் கட்டடம் நிற்கும்.

மேல் நோக்கிக் கட்டடம் கட்ட ஏன் கீழ் நோக்கித் தோண்டுகிறோம்?

அடிப்படைக்காக.

மீட்புக்கான ஆன்மீக வாழ்வின் அடிப்படை விசுவாசம், நம்பிக்கை, இறையன்பு.

இதற்கும் புதுமைகள் செய்து நோயாளிகளைக் குணமாக்குவதற்கும் என்ன சம்பந்தம்?

நோய்களைக் குணமாக்கும் ஒவ்வொரு முறையும் இயேசு சொன்னார்,

" உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று."

குணமாக்கியவர் இயேசு.

தன்மீது விசுவாசம் உள்ளவர்களைக் குணமாக்குகிறார்.

உண்மையான விசுவாசம் இருக்கும் இடத்தில் தான் நம்பிக்கையும், இறையன்பும் இருக்க முடியும்.

நோய்களைக் குணமாக்கியதன் நோக்கமே இந்த மூன்று புண்ணியங்களையும் மக்களிடையே வளர்ப்பது தான்.

ஒவ்வொரு நோயாளியைக் குணமாக்கும் போதும் அவனுக்குள் இம்மூன்றும் விதைக்கப்படும்.

படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆன்மாவிலும் இறைவன் அவரது தூண்டுதல் (Inspiration) மூலம் இறைவன் செயல்புரிந்து கொண்டிருக்கிறார்.

முதலில் நமது ஆன்மாவில் விசுவாசத்தைத் தூண்டுவார்.

நாம் தூண்டுதலை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஏற்றுக் கொள்பவர்கள் அவரை விசுவசிப்பர்.

பாவம் தவிர மற்ற அனைத்து ஆன்மீக செயல்பாடுகளுக்கும் காரணர் கடவுள் தான்.

ஆக நோயாளிகளின் ஆன்மாவில் விசுவாசத்தைத் தூண்டுகிறார்.

அதை ஏற்றுக் கொள்வர்கள் அவரைத் தேடி வருவார்கள்.

முடக்குவாதன் குணமான புதுமையை எடுத்துக் கொள்வோம்.

"சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர்.

 இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், 

"மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்."

ஆக நோயாளியும், அவனைக் கொண்டு வந்தவர்களும் கடவுளின் விசுவாசத் தூண்டுதலை ஏற்றுக் கொண்டு, விசுவாசத்தோடு அவரைத் தேடி வருகிறார்கள்.

விசுவாசத்தோடு இருந்ததால் அவர் நோயாளியைப் பார்த்து,

"மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன"

என்கிறார்.

இயேசுவின் வார்த்தைகள் நமக்கு ஒரு உண்மையை உணர்த்தும்.

இயேசு உலகுக்கு வந்தது ஆன்மாவின் நோயைக் குணமாக்க.

ஆகவே தான் நோயாளியைப் பார்த்து,

"உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன". என்கிறார்.

அப்படியானால் பாவ மனஸ்தாபத்துக்கான தூண்டுதலையும் நோயாளி ஏற்றுக் கொண்டான் என்று அர்த்தம்

''மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ" என்றார்."
(மத்தேயு.9:6)

தான் இறைமகன் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக நோயாளியின் பாவங்களை மன்னிக்கிறார்.

தொடர்ந்து அவனைக் குணப்படுத்துகிறார்.

நோயாளிகளின் ஆன்மீக நோய் குணமான பிறகுதான் அவனது உடல் நோய் குணமானது.

ஆக, இயேசு உடல் சார்ந்த நோய்களைக் குணமாக்கியதின் நோக்கமே ஆன்மீக நோயை குணமாக்குவது தான்.

அவர் செய்த புதுமைகள் மூலம் விசுவாசம் தோன்றியது, வளர்ந்தது, உறுதிப்பட்டது.

நமது வாழ்க்கைக்கு நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம்?

நாமும் நமது உடல் சார்ந்த நோய்கள் குணமாவதற்காக இயேசுவை நாடுகிறோம்.

இயேசு நம்மிடம் சொல்கிறார்,

"முதலில் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து உங்களது ஆன்மீக நோயிலிருந்து விடுதலை பெறுங்கள்.

அதன் பிறகு உடல் சார்ந்த நோய்களிலிருந்து விடுதலை பெற விண்ணப்பியுங்கள்.

நான் உங்களை முழுமையாகக் குணப்படுத்துவேன்."

பாவ நோயிலிருந்து விடுதலை பெறாமல் உடல் சார்ந்த நோயிலிருந்து விடுதலை பெற்று வாழ்வதில் எந்த பயனும் இல்லை.

உடலில் நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு நாள் உடல் மண்ணுக்குள் போய்த்தான் ஆக வேண்டும்.

ஆகவே நமது ஆன்மா பாவத்திலிருந்து விடுதலை பெறுவதிலேயே முழுக் கவனத்தையும்  செலுத்துவோம்.

ஆண்டவர் நம்மை இரண்டு வகை நோய்களிலிருந்தும் குணமாக்குவார்.

லூர்து செல்வம்.

'' உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்."(மத்தேயு.8:34)

'' உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்."
(மத்தேயு.8:34)


இயேசு  கதரேனர் வாழ்ந்த பகுதியில் , பேய் பிடித்த இருவரைக் குணமாக்கினார். 

அதைக் காண வந்த நகர மக்கள் அவரைத் தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டினர்.

அவர்களில் இருவரை இருவரை இயேசு குணமாக்கியிருக்கிறார்.

முறைப்படி மக்கள் அவரை ஊருக்குள் வரவேற்று, அவருக்கு நன்றி கூறியிருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் நகருக்குள் வர விடாமல் தடுத்ததோடு

அவரை அவ்விடத்தை விட்டு போகச் சொல்லியிருக்கிறார்கள்.

அதற்கான காரணத்தை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

ஆனால் நாம் யூகிக்கலாம்.

கதரேனர் புறசாதியினர். பன்றி வளர்க்கும் தொழிலையும் செய்து வந்தவர்கள்.

இயேசு யூதர். அவர்கள் வளர்த்து வந்த பன்றிகளைக் கடலுக்குள் அனுப்பி விட்டார். பன்றிகள் இறந்து விட்டன.

அந்தக் கோபம் அவர்களுக்கு இருந்திருக்கும்.

அவர்கள் ஆன்மீகத் தாகம் உள்ளவர்கள் அல்ல.

தங்கள் உலகைச் சார்ந்த சொத்தைக் கடலுக்குள் அனுப்பிய ஆன்மீகவாதியை நகருக்குள் விட அவர்களுக்கு மனதில்லை.

அவர் செய்த உதவியை அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை.

இயேசுவுக்கு அவர்களுடைய மன   நிலை தெரியும்.

ஆனாலும் அவர்களைத் தேடி கடல் கடந்து வந்தார்.

இருவரைக் குணமாக்கினார்.

நகரினர் அவரை உள்ளே விடாததால் 

இயேசு படகேறி மறு கரைக்குத்  தம் சொந்த நகருக்குச் சென்றார். 

இயேசு யூதராக இருந்தாலும் இறைமகனாகிய அவர் தன்னால் படைக்கப்பட்ட அனைத்து மக்களின் மீட்புக்காகத்தான் மனிதனாகப் பிறந்தார்.

ஆகவே தான் கதரேனர்களைத் தேடி தனது சீடர்களுடன் வந்தார்.

அவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

பைபிள் நிகழ்வுகளைப் பார்க்கும் போது சினிமா பார்ப்பது போல வெளியிலிருந்து பார்க்கக்கூடாது.

நிகழ்வுக்குள்  இயேசுவோடு நாமும் இருக்க வேண்டும்.

நிகழ்வு நம்மையும் பாதிக்க வேண்டும்.

இயேசு இருவரைக் குணமாக்கும் போதும், நகரினர் அவரை நகரை விட்டு போகச் சொன்னபோதும் நாம் அங்கே நின்று இயேசுவின் முகத்தைப் பார்க்க வேண்டும்.

யாருடைய ஆன்மீக மீட்புக்காக விண்ணிலிருந்து இறங்கி மண்ணுக்கு வந்தாரோ,

யார் பேரின்ப வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக துன்பங்கள் நிறைந்த மனித சுபாவத்தையும் ஏற்றுக் கொண்டாரோ

அவர்கள் அவரைப் பார்த்து,

"நீர் எங்களிடம் வர வேண்டாம், போய்விடும் '' என்று சொன்னால் அவருடைய முகபாவனை எப்படி இருக்கும் என்பதை நாம் நேரில் பார்க்க வேண்டும்.

ஏனெனில் நாமும் அநேக சமயங்களில் அந்த மக்கள் செய்ததைத்தான் செய்கிறோம்.

நாம் எத்தனை முறை இயேசுவைப் பொறுத்த மட்டில் கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய் நடந்து கொள்கிறோம்!

திருப்பலியில் கலந்து கொள்ளும் போது எத்தனை முறை பலிபீடத்தையும், குருவானவரையும் பார்க்காமல்

 அக்கம் பக்கத்தையும், Cell phone ஐயும் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறோம்!

எத்தனை முறை வாயால் செபம் செய்துகொண்டு, சிந்தனையில் உலகெங்கும் வலம் வந்து கொண்டு இருந்திருக்கிறோம்!

எத்தனை முறை வாசகங்கள் வாசிக்கும் போதும், குருவானவர் பிரசங்கம் வைக்கும் போதும் காது கொடுத்துக் கேட்காமல் கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு, தூங்கிக் கொண்டு இருந்திருக்கிறோம்!

எத்தனை முறை திருவிருந்து அருந்திவிட்டு ஆண்டவரிடம் பேசாமல் அருகில் உள்ளவர்களோடு பேசிக் கொண்டு இருந்திருக்கிறோம்!

எத்தனை முறை காலையில் கட்டிலை விட்டு எழும்போது கடவுளை நினையாமல் காபியை நினைத்துக் கொண்டு எழுந்து இருந்திருக்கிறோம்!

பகல் 12 மணி நேரமும் எதைப்பற்றி எல்லாமோ நினைக்கும் போது கடவுளைப் பற்றி எவ்வளவு நேரம் நினைக்கிறோம்?

அந்த மக்கள் இயேசுவைத் தங்களை விட்டுப் போகச் சொன்னார்கள்.

நாம் அவரை அருகில் வைத்துக் கொண்டு அவமானப் படுத்திக் கொண்டிருக்கிறோம்!

நினைத்துப் பார்ப்போம்.

நம்மையே நினைத்துக் கொண்டிருக்கும் இயேசுவை

 நாமும் எப்போதும் நினைத்து அவருக்காகவே வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, July 1, 2024

" திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்."(மத்தேயு.8:24)

" திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்."
(மத்தேயு.8:24)

இயேசு சீடர்களோடு படகில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

சீடர்கள் விழித்திருக்கிறார்கள், ஆனால் இயேசு தூங்கிக் கொண்டிருக்கிறார்.

திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்படுகிறது. படகுக்குமேல் அலைகள் எழுகின்றன.

 சீடர்கள் அவரிடம் வந்து, "ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்" என்று சொல்லி அவரை எழுப்புகிறார்கள்.

இயேசு கடவுள்.

முக்காலமும் அறிந்தவர்.

படகில் ஏறும்போதே கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்படும் என்று அவருக்குத் தெரியும்.

தெரிந்தும் ஏன் சீடர்களோடு படகில் பயணித்தார்?

ஏன் படகில் தூங்கினார்?

இன்னொரு உண்மையும் நமக்குத் தெரிந்தால் இது புரியும்.

இயற்கையைப் படைத்தவர் அவர்.

இயற்கையின் ஒவ்வொரு அசைவையும் திட்டமிடுபவர்.

அவருடைய திட்டமின்றி அணுவும் அசையாது.

இயற்கை நிகழ்வுகள் நமக்கு எதிர்பாராதவையாக இருக்கலாம்.

உதாரணத்திற்கு சுனாமி நாம் எதிர்பார்க்காமல் நடந்தது.

ஆனால் கடவுளின் நித்திய காலத் திட்டப்படி தான் நடந்தது.

அதனால் ஏற்பட்ட விளைவுகளும் அவரது திட்டப்படி தான் ஏற்பட்டன.

நமது எண்ணப்படி சுனாமியின் விளைவு அழிவு.

ஆனால் இறைவனின் எண்ணப்படி அது மாற்றம்.

இப்போது ஒன்று புரிந்திருக்கும்.

குறிப்பிட்ட நோக்கம் இல்லாமல் கடவுள் எதையும் திட்டமிட மாட்டார்.

அப்படியானால் கடல் கொந்தளிப்பைத் திட்டமிட்டு சீடர்களை அழைத்துச் சென்று அவர் ஏன் தூங்கினார்?

என்ன நோக்கத்திற்காக?

வகுப்பில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக ஆசிரியர் திட்டம் தீட்டுவது போல

சீடர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக இயேசு திட்டமிட்டார்.

எதில் பயிற்சி?

ஆன்மீக வாழ்வுக்கு எது அத்தியாவசியமோ அதில் பயிற்சி.

ஆன்மீக வாழ்வுக்கு அடிப்படையான புண்ணியங்கள் மூன்று,

விசுவாசம், நம்பிக்கை,
 தேவசிநேகம்.

இவற்றில் முதன்மையானது விசுவாசம்.

சீடர்கள் இயேசுவை விசுவசித்து, நம்பிதான் அவர் பின்னால் வந்தார்கள், அவரை நேசித்தார்கள்.

ஆனாலும் இயேசு எதிர்பார்த்த அளவு அவர்களிடம் விசுவாசம் இல்லை.

அவர்களது விசுவாசத்தின் அளவை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதன்பின் அதை அதிகரிக்க வேண்டும்.

அதற்காகத் தான் புயலையும், கடற் கொந்தளிப்பையும் கடவுள் திட்டமிட்டார்.

அவர்களிடம் போதுமான விசுவாசம் இருந்திருந்தால்

கடலைப் படைத்த கடவுள் அவர்களோடு இருக்கும் போது 

 "ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்" என்று கத்தியிருக்க மாட்டார்கள்.

தங்களுக்கு கடல் கொந்தளிப்பால் எந்த ஆபத்தும் வராது என்று தெரிந்திருக்கும்.

அவர்கள் பயந்ததைப் பார்த்த இயேசு 

 அவர்களை நோக்கி, "விசுவாசம் குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?" என்று கேட்டார்.

  காற்றையும் கடலையும் அடக்கி அவர்களது விசுவாசத்தை அதிகப் படுத்தினார்.

மூன்று ஆண்டுகள் விடாமல் அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தும் சீடர்களுடைய விசுவாசம் போதிய அளவு வளரவில்லை.

விசுவாசம் வளர்ந்திருந்தால் அவரது பாடுகளின் போது அவரை விட்டு ஓடிப் போயிருக்க மாட்டார்கள்.

அவர் உயிர்த்தெழுந்ததை நம்பாமல் கல்லரையைப் பார்க்கப் போயிருக்க மாட்டார்கள்.

மாதா போகவில்லை.

தூய ஆவியானவரின் வருகையின் போதுதான் அவர்களுடைய விசுவாசம் உறுதியடைந்தது.

நமது விசுவாசத்தை அதிகப் படுத்ததான் கடவுள் நமக்குத் துன்பங்களை அனுமதிக்கிறார்.

நமக்குத் துன்பங்கள் வரும் போது நம்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்தும்படி இறைவனிடம் வேண்ட வேண்டும்.

கடவுள் எப்போதும் நம்மோடு இருக்கிறார், நமது ஆன்மீக நன்மைக்காகவே நமக்குத் துன்பங்களை அனுமதிக்கிறார் என்பதை விசுவசிக்க வேண்டும்.

நம்மைப் படைத்தவர் நம்மோடு இருக்கிறார் என்பதை உறுதியாக விசுவசித்தால் நாம் துன்பத்தைக் கண்டு பயப்பட மாட்டோம்.

எல்லாம் நன்மைக்கே என்று மகிழ்ச்சி அடைவோம்.

லூர்து செல்வம்.

Sunday, June 30, 2024

"இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார்." (மத்தேயு.8:20)

"இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார்." 
(மத்தேயு.8:20)


 மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்" என்றார். 


இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார்." 

தனது வாழ்க்கையின் கஷ்டங்களை எடுத்துக் கூறி,

''நீர் அவற்றைத் தாங்குவது கடினம், ஆகவே என்னுடன் வரவேண்டாம். உமது குடும்ப வாழ்க்கையில் நான் சொல்வதை அனுசரியும்."

என்ற பொருள் பட அவ்வாறு கூறினார்.

மற்றொருவரை இயேசு தன்னுடன் வரும்படி கூறினார்.

அவர், "ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும்" என்றார். 

இயேசு அவரிடம் , 

"நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்" என்றார். 

இயேசுவின் வார்த்தைகளைத் தியானித்தால் நாம் அறிய வரும் செய்திகள்,

நமது ஆன்மீக வாழ்க்கைக்கான இறைவனின் அழைப்பை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. நாம் பிறந்து வளரும் குடும்பத்தில் இருந்து கொண்டே இயேசுவின் நற்செய்தியை வாழ்வது, வாழ்க்கையின் மூலம் போதிப்பது.

2. குடும்பத்தையும், சொந்த பந்தங்களையும், உடைமைகளையும் துறந்து,
100 சதவீதம் நம்மை நற்செய்திப் பரப்புப்‌ பணிக்காக அர்ப்பணித்து வாழ்வது.

வழக்கமாக நாம் இரண்டாவது அழைப்பைத் தேவ அழைத்தல் என்போம்.

ஆனால் உண்மையில் இரண்டுமே தேவ அழைத்தல் தான்.

நாம் ஒன்றுமில்லாமையாக இருக்கும் போது அவரை நேசித்து அவருக்குப் பணி புரிய நம்மை அழைத்தார், அதாவது, நம்மைப் படைத்தார்.

குடும்பத்தில் தான் நம்மைப் படைத்தார்.

குடும்பத்தில் இருந்து கொண்டே அவருக்குப் பணி புரிவது முதல் அழைப்பு.

குடும்பத்தைத் துறந்து வாழும் அர்ப்பண வாழ்வு இரண்டாவது அழைப்பு.

இரண்டாவது அழைப்பில் சிலர் துறவிகளாக மட்டும் வாழ அழைக்கப் படுகின்றார்கள்.

துறவற சகோதரர்கள், துறவற சகோதரிகள் இவ்வகையினர்.

சிலர் துறவற வாழ்வோடு குருத்துவ வாழ்வும் வாழ அழைக்கப் படுகின்றார்கள்.

நமது குருக்கள், ஆயர்கள், பாப்பரசர் இவ்வகையினர்.

குடும்ப வாழ்வு, துறவற வாழ்வு இவற்றில் எது சிறந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஏனெனில் இரண்டுமே இறைவனுடைய அழைப்பு தான்.

திருக்குடும்ப உறுப்பினர்களில் மூவருமே துறவிகள் தான்.

குடும்பத்தில் இருந்துதான் துறவிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.

துறவறம் நாற்று என்றால் குடும்பம் நாற்றங்கால்.

குடும்பம் சிறந்ததாக இருந்தால்தான் அதிலிருந்து எடுக்கப் படும் துறவிகளும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

மரத்தின் தன்மையைப் பொறுத்து தான் கனிகளின் தன்மை அமையும்.

குடும்ப வாழ்வு.
----------------------------

குடும்பத்தினர் எப்படி வாழ வேண்டும்?

நல்ல கிறிஸ்தவர்களாக வாழ வேண்டும்.

திருமணம் ஒரு தேவத்திரவிய அனுமானம்.

திருமணத்தின் நோக்கம் வெறும் சிற்றின்ப வாழ்க்கை மட்டும் வாழ்வது அல்ல,

நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வதற்காக மக்களைப் பெற்று, அதற்காகவே அவர்களை வளர்ப்பது தான் திருமண வாழ்வின் நோக்கம்.

திருமண வாழ்வுக்கான பிள்ளைகளையும்,

துறவற வாழ்வுக்கான பிள்ளைகளையும்

பெற்றோர்தான் பெற்று வளர்க்கிறார்கள்.

பெற்றோரின் முன்மாதிரிகையான கிறிஸ்தவ வாழ்க்கை எதிர்கால நல்ல குடும்பங்களுக்கும், நல்ல துறவிகளுக்கும் பிறப்பிடமாக அமைய வேண்டும்.

தங்கள் பிள்ளைகளைத் துறவற வாழ்க்கைக்கு அனுப்பிய பின் அவர்களைப் பரிபூரணமான துறவற வாழ்க்கை வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும்.

அதற்கு குடும்பத்தினர் சிறிதளவு கூட இடையூறாக இருக்கக் கூடாது.

அவர்களிடமிருந்து ஆன்மீக உதவியைத் தவிர வேறு எந்த வித உதவியையும் எதிர்பார்க்கக் கூடாது.

துறவற வாழ்க்கை.
---------------------------------

துறவிகள் முற்றிலும் தங்கள் சபைக்குச் சொந்தமானவர்கள்.

குருக்கள் முற்றிலும் அவர்கள் பணிபுரியும் மேற்றிராசனத்துக்குச் சொந்தமானவர்கள்.

"நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்"

என்ற இயேசுவின் வார்த்தைகள் ஞாபகத்தில் இருக்க வேண்டும்.

அவர்கள் பிறந்து வளர்ந்த
குடும்பத்தை முற்றிலும் துறந்து வந்ததை மறந்து விடக்கூடாது.

குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டியது அவர்களுடைய செப உதவியை மட்டும் தான்.

இயேசுவே அதற்கு முன்மாதிரிகை.

அவரது 33 ஆண்டுகள் வாழ்க்கையில் 30 ஆண்டுகள் தனது பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

3 ஆண்டுகள் முற்றிலும் பொது வாழ்க்கைக்கு அர்ப்பணித்து விட்டார்.

பொது வாழ்வின் போது இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்த அவர், குடும்ப வாழ்வின் போது இறந்த சூசையப்பருக்கு உயிர் கொடுக்கவில்லை.

பொது வாழ்வின் போது அப்பங்களைப் பலுகச் செய்து மக்களுக்கு உணவளித்த அவர் 

குடும்பத்தில் தச்சு வேலை செய்துதான் பெற்றோருக்கு உணவளித்தார்.

பொது வாழ்வின் போது பொது மக்கள் தான் அவரைக் கவனித்துக் கொண்டார்கள்.

பரிசேயர்கள் கூட அவருக்கு உணவு அளித்திருக்கிறார்கள்.

இலாசர் குடும்பத்தினர் உணவு அளித்திருக்கிறார்கள்.

மேலும் "பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் 

ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்."
(லூக்கா.8:3)

இயேசுவுக்காக அர்ப்பணித்து வாழும் குருக்களைக் கவனிக்க வேண்டியவர்கள் பொது மக்களாகிய நாம் தான், அவர்களுடைய குடும்பத்தினர் அல்ல.

நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும்.

நாம் இவ்வுலகில் வாழ்வதே தேவ அழைத்ததினால் தான்.

எந்த வாழ்வுக்கு அழைக்கப் பட்டாலும் அதை இறைவன் விருப்பம் போல் சிறப்பாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Saturday, June 29, 2024

"ஏனெனில், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" என்று அப்பெண் எண்ணிக் கொண்டார்."(மாற்கு.5:28)

"ஏனெனில், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" என்று அப்பெண் எண்ணிக் கொண்டார்."
(மாற்கு.5:28)

 பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண் குணமாக விரும்புகிறார்.


அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தேடி வருகிறார்.


இயேசு தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவரது மகளைக் குணமாக்கப் போய்க்கொண்டிருக்கிறார்.

பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இரத்தப் போக்குள்ள பெண் தன்னைக் குணமாக்கும் படி இயேசுவிடம் கேட்கவில்லை.

 அவருடைய ஆடையைத் தொட்டாலே குணம் கிடைக்கும் என்று அப்பெண் உறுதியாக நம்புகிறாள்.

இயேசுவுக்குப் பின்னால் வந்து அவருடைய மேலுடைத்‌ தொடுகிறாள்.

பூரணக்‌ குணமடைகிறாள்.

அவளுடைய நம்பிக்கையின் ஆழத்தைப் பாருங்கள்.

தனக்குச் சுகமில்லை என்று இயேசுவிடம் அவள் சொல்லவில்லை.

தான் சொல்லாமலேயே அவருக்குத் தெரியும் என்று உறுதியாக நம்புகிறாள்.

கடவுளுக்கு மட்டும் நாம் சொல்லாமலேயே நம்மைப் பற்றித் தெரியும்.

ஆகவே இயேசு கடவுள் என்று உறுதியாக நம்புகிறாள்.

குணமாக்குபவர் அவர்தான்.

ஆகவே அவருடைய ஆடையைத் தொடப்போவதும் அவருக்குத் தெரியும்.

ஆகவே அவரிடம் சொல்லாமலே அவருடைய மேலாடையைத் தொடுகிறாள்.

அவளது ஆழமான நம்பிக்கை அவளுக்குச் சுகத்தைக் கொடுக்கிறது.

மேலாடையைத் தொட்டுக் குணமான பெண்ணிடமிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

நமது அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்வதை விட மற்றவர்களின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்வது எளிது.

இயேசு கடவுள் என்று நம்புகிறோம்.

கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்று நம்புகிறோமா?

நமது ஆன்மீக வாழ்வுக்கு என்னவெல்லாம் தேவை என்று கடவுளுக்குத் தெரியும் என்று நம்புகிறோமா?

நாம் கேளாமலேயேயே நம்மைப் படைத்த கடவுள் நமக்கு தேவையானவற்றை நாம் கேளாமலேயே தருவார் என்று நம்புகிறோமா?

நாம் கடவுளின் விருப்பப்படி வாழ்ந்து கொண்டிருந்தால் நமக்கு தேவையானவற்றைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று நம்புகிறோமா?

கடவுளுடைய விருப்பப்படி வாழ்வது ஒன்றுதான் நமது வாழ்க்கையின் நோக்கம் என்று நம்புகிறோமா?

கடவுளை எல்லாவற்றுக்கும் மேலாக அன்பு செய்து அவருக்காகவே வாழ்ந்து வந்தால் நமக்குத் தேவையானவற்றை அவரே நாம் கேளாமல் தருவார் என்று நம்புகிறோமா?

இந்த கேள்விகளுக்கு நம்புகிறோம் என்று பதில் வந்தால் நாம் நம்மைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லையே!!

நாம் நாம் நம்மைப் பற்றி கவலைப்பட ஆரம்பித்தால் நமக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றுதானே அர்த்தம்.

சுகமில்லாத பெண்மணி இயேசுவின் மேலாடையை மட்டுமே தொட்டாள்.

 அவள் குணமடைந்தாள்.

நாம் இயேசுவையே நாவால் வாங்கி உட்கொள்கிறோம்.

திவ்ய நற்கருணை உட்கொள்ளும்போது நாமும் இயேசுவும் ஒரே உடலாக இணைந்து விடுகிறோம்.

திவ்ய நற்கருணை நமக்கு விருந்து மட்டுமல்ல, 

மருந்தும் கூட.

திவ்ய நற்கருணையை அருந்தும் நாம் நமது உடலால் அவர் உடலைத் தொடுவதால்

நம்மைப் பற்றி கவலைப்படாமல் அவருக்காகவே வாழ்வோம்.

நாம் நோய்கள் என்று கருதுபவற்றைப் புனிதர்கள் நோய்களாகவே கருதவில்லை.

 அருள் ஈட்டித்தரும் சிலுவைகளாகவே கருதினார்கள்.

உடலில் வரும் நோய்களால் ஏற்படும் துன்பங்களை இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுத்துவிட்டு

 அவைகளுக்கு ஈடாக நித்திய பேரின்பத்தை பெற்றுக் கொண்டார்கள்.

நாமும் அப்படியே செய்யலாமே!

லூர்து செல்வம்.

Friday, June 28, 2024

"எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."(மத்தேயு.16:18)

"எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."
(மத்தேயு.16:18)

இயேசு " நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று தனது சீடர்களைக் கேட்டபோது. 

 சீமோன் பேதுரு 

, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று கூறினார். 

அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். 

நான் உனக்குக் கூறுகிறேன்; 

உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.

 பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."

இப்போது மட்டுமல்ல.

முதன் முதல் அந்திரேயா சீமோனை இயேசுவிடம் அழைத்துச் சென்றபோது 

 இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, "நீ யோவானின் மகன் சீமோன். இனி "கேபா" எனப்படுவாய் என்றார். 

"கேபா" என்றால் "பாறை" என்று அருளப்பர் எழுதுகிறார். 
(அரு.1:42)

இயேசு சீமோனுக்குப் பாறை என்று பெயரிட்டுருப்பதும்,

அந்தப் பாறையின்மேல்தான்,

அதாவது சீமோனின் தலைமையில் தான் தனது திருச்சபையை நிறுவப் போவதாகச் சொன்னதும்

பைபிளில் இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டிருந்தும்

பைபிளை மட்டும் கையில் வைத்துக் கொண்டு வாழும் நமது பிரிவினை‌‌ சபையினர் இராயப்பரின் தலைமையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

வசனத்திற்கு தங்கள் விருப்பம் போல் பொருள் கொடுக்கிறார்கள்.

"பாறை" இயேசுவைக் குறிக்கும் என்கிறார்கள்.

"கேபா எனப்படுவாய்." சீமோனைப் பார்த்து சொல்லப் பட்ட வார்த்தைகள் எப்படி இயேசுவைக் குறிக்கும்?

இயேசுவின் வார்த்தைகளை பன்னிரு சீடர்களும் எப்படிப் புரிந்து கொண்டார்களோ அப்படித்தான் நாமும் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் இராயப்பரைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டார்கள்.

இராயப்பர் எங்கு ஆயராக இருந்தாரோ (உரோமாபுரி) அதையே கிறிஸ்தவத்தின் தலை நகராக ஏற்றுக் கொண்டார்கள்.

இயேசுவின் திருச்சபை 'அப்போஸ்தலிக்கத் திருச்சபை.

இயேசுவால் நிறுவப்பட்டு அப்போஸ்தலர்கள் வழியாக நமக்கு வந்திருக்கும் திருச்சபை.

இயேசு நற்செய்தியை அறிவித்தார்.

நற்செய்தி நூல்கள் இயேசுவைப் பற்றியவை.

ஆகவே அவர் கையில் நற்செய்தி நூல்கள் இல்லை.

பைபிளை நமக்குத் தந்தது "அப்போஸ்தலிக்க கத்தோலிக்கத் திருச்சபை,"

பிரிவினை சபைகள் அல்ல.

 இயேசுவின் கத்தோலிக்கத் திருச்சபையை விட்டு வெளியேறியவர்கள்

எதற்காக கத்தோலிக்கத் திருச்சபை தந்த பைபிளை மட்டும் கையில் எடுத்துச் செல்ல வேண்டும்?

குடும்பத்தை விட்டு வெளியேறிய மகன் பெற்றோரிடமிருந்து பெற்ற வாயை அவர்களைத் திட்ட பயன்படுத்துவது போல,

கையை அவர்களை அடிக்கப் பயன்படுத்துவது போல

கத்தோலிக்கத் திருச்சபையின் பைபிளைக் கையில் வைத்துக் கொண்டு

அதைக் கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள்.

அவர்களின் நோக்கம் கத்தோலிக்கர்களைத் தங்களை நோக்கி ஈர்ப்பது தான்.

இதில் வருந்தக்கூடிய விசயம் என்னவென்றால் நம்மவர்கள் அவர்களுடைய ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து,

அவர்கள் நடத்தும் சுகமளிக்கும் கூட்டங்களில் கலந்து கொள்வதுதான்.

நம்மவர்கள் விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

காலையில் நமது ஆலயத்தில் திருப்பலியில் கலந்து விட்டு,   

மாலையில் பிரிவினை சபையாரின் கூட்டங்களுக்குப் போகும் நம்மவர்கள் சிந்திக்க வேண்டும்.

கேட்டால் அவர்களும் இயேசுவைத்தானே வழிபடுகிறார்கள் என்பார்கள்.

அவர்கள் வழிபடுவது நமது இயேசுவை அல்ல.

மக்களுக்கு பாவமன்னிப்புத் தருவதற்காக உலகிற்கு வந்தவர் நம் இயேசு.

அதற்காகத் தான் தனது சீடர்களுக்குப் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைக் கொடுத்து, பாவசங்கீர்த்தனம் என்னும் திரு அருட்சாதனத்தை நிறுவினார்.

நமது ஆன்மீக உணவாகிய தேவ நற்கருணையை நிறுவியவர் நம் இயேசு.

புனித வியாழனன்று திருப்பலி நிறைவேற்றி, உலகம் முடியுமட்டும் திருப்பலி நிறைவேற்ற குருத்துவத்தை நிறுவியவர் நம் இயேசு.

எங்கே பாவசங்கீர்த்தனம் இருக்கிறதோ,

எங்கே திருப்பலி நிறைவேற்றும் குருக்கள் இருக்கிறார்களோ,

எங்கே திவ்ய நற்கருணை இருக்கிறதோ

அங்கு மட்டும் தான் இறைமகன் இயேசு இருக்கிறார்.


பிரிவினை சகோதரர்களிடையே பாவசங்கீர்த்தனம் இல்லை, திருப்பலி இல்லை,
திவ்ய நற்கருணை இல்லை.

ஆகவே அவர்கள் வழிபடுவது இறைமகன் இயேசுவை அல்ல.

இயேசு என்னும் பெயரை வைத்திருப்பவர்கள் எல்லாம் இறைமகன் இயேசு ஆகிவிட முடியாது.

அவர்கள் இறைமகன் இயேசுவையும், அவரது நற்செய்தியையும் வியாபாரப் பொருளாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் செய்யும் வியாபாரத்தில் நாம் பங்கு பெறலாமா?

அவர்கள் நடத்தும் வியாபாரக் கூட்டங்களுக்கு நம்மவர்கள் போகக்கூடாது.

ஆனால் நாம் அவர்களை வெறுக்கக் கூடாது.

விண்ணகத் தந்தையில் அவர்களும் நம்முடைய சகோதரர்கள்.

விண்ணகத் தந்தை அவர்களையும் நேசிக்கிறார்.

நாமும் அவர்களை நேசிக்க வேண்டும்.

அவர்கள் மனம் திரும்பி இறைமகன் இயேசுவிடம் திரும்பி வர அவர்களுக்காக தந்தையிடம் வேண்ட வேண்டும்.

நம்மைப் பகைப்பவர்களையும் நேசிப்பது தான் உண்மையான கிறிஸ்தவ அன்பு.

லூர்து செல்வம்.

Wednesday, June 26, 2024

"அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, "ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்றார்."(மத்தேயு.8:2)

"அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, "ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்றார்."
(மத்தேயு.8:2)


தொழுநோயாளியின் செபத்திலிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

 இயேசுவினால் அவனது வியாதியைக் குணமாக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் அவரைத் தேடி வந்திருக்கிறான்.

ஆனால் "என்னைக் குணமாக்கும்" என்று அவன் வேண்டவில்லை.

"நீர் விரும்பினால் 

எனது நோயை நீக்க உம்மால் முடியும்."
என்றுதான் செபித்தான்.


இயேசுவின் வல்லமையில் அவனுக்கு நம்பிக்கை இருக்கிறது. ("உம்மால் முடியும்.")

ஆனால் அவருடைய வல்லமையைப் பயன்படுத்துவதும், பயன்படுத்தாதிருப்பதும் அவர் விருப்பம்.

யாராலும் கட்டாயப் படுத்தப் பட்டு அவர் பிரபஞ்சத்தைப் படைக்கவில்லை.

நம்மைப் படைக்க வேண்டும் என்று நாம் அவரிடம் கேட்கவில்லை.

அவர் விரும்பினார், பிரபஞ்சத்தைப் படைத்தார்

அவர் விரும்பினார்,
நம்மைப் படைத்தார்.

ஒன்றுமில்லாமையிலிருந்து படைக்கப் பட்ட நமக்கு சுயமாக ஒன்றுமில்லை.

நம்மிடம் இருப்பதெல்லாம் அவர் விரும்பித் தந்தது, நாம் விரும்பிக் கேட்டது அல்ல.

என்னை இந்தியாவில் படையுங்கள் என்று நான் அவரைக் கேட்கவில்லை.

எனது பெற்றோரை நான் தேர்ந்தெடுக்கவில்லை.

நான் பிறக்க வேண்டிய காலத்தையும், நேரத்தையும் நான் தேர்ந்தெடுக்கவில்லை.

நான் இறக்க வேண்டிய நாளையும்  தேர்வு செய்ய என்னால் முடியாது.

பாவம் தவிர மற்ற எல்லாம் அவர் விருப்பப்படி தான் நடந்தது, நடக்கிறது, நடக்கும்.

நாம் எதையாவது விரும்பினால், அதை அவரும் விரும்பினால் அது நடக்கும்.

நாம் மன மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமென்றால் அவர் விரும்புவதை நாமும் விரும்ப வேண்டும்.

ஆனால் அவர் என்ன விரும்புகிறார் என்று நமக்குத் தெரியாது.

ஆகவே நாமே முழு மனதுடன் நம்மை அவரது விருப்பத்துக்கு விட்டு விட வேண்டும்.

அப்போ நாம் எதையும் விரும்பக் கூடாதா?

விரும்பலாம்.

"ஆண்டவரே, நான் தேர்வு எழுதியிருக்கிறேன்.

முதல் தரமான மதிப்பெண் பெற்று வெற்றி பெற விரும்புகிறேன்.

ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உமது விருப்பப்படியே நடக்கட்டும்."

நம்மை அவரது விருப்பத்துக்கு உட்படுத்தி விட்டால்

தேர்வு முடிவு எப்படி வந்தாலும் கவலைப் பட மாட்டோம்.

மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வோம்.

"ஆண்டவரே, வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறேன்.

வேலை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆனாலும் உமது விருப்பப்படியே நடக்கட்டும்."

இந்த மனநிலையோடு செபித்தால் வேலை கிடைத்தாலும் நன்றி கூறுவோம்,

கிடைக்காவிட்டாலும் நன்றி கூறுவோம்.

"கேளுங்கள் தரப்படும்" என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.

ஆகவே நாம் விரும்புவதைக் கேட்போம்.

நமக்கு எதிர் காலம் தெரியாது.

நாம் இப்போது விரும்புவது எதிர்காலத்தில் நன்மை பயக்குமா பயக்காதா என்று நமக்குத் தெரியாது.

ஆனால் கடவுளுக்குத் தெரியும்.

" ஆண்டவரே, நான் விரும்புவது உமது விருப்பத்துக்கு உட்பட்டிருந்தால் நான் கேட்டதைத் தாரும்.

இல்லாவிட்டால் நீர் விரும்புவதைத் தாரும்."

என்று செபித்தால் என்ன கிடைத்தாலும் மகிழ்ச்சி அடைவோம்.

எதுவுமே கிடைக்காவிட்டாலும் நமது மகிழ்ச்சி குறையாமல் இருக்கும்.

"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்."

ஒரு நோய் வருகிறது.
மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறோம்.

சுகம் கிடைத்தாலும் இறைவனுக்கு நன்றி.

மரணம் வந்தாலும் இறைவனுக்கு நன்றி.


 தொழுநோயாளர் இயேசு பணிந்து, "ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்றார். 


இயேசு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு,

 "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்று சொன்னார். 

உடனே அவரது தொழுநோய் நீங்கியது. 


நாமும் இறைவனை வேண்டும்போது,  

" தந்தையே, நான் கேட்பது உமக்கு விருப்பமானால் அதைத் தாரும்.

அது உமக்கு விருப்பம் இல்லாவிட்டால்

உமக்கு விருப்பமானதைத் தாரும்.

எதைத் தந்தாலும் உமக்கு நன்றி."

நமது விருப்பத்தை இறைவனுடைய விருப்பத்துக்கு விட்டு விடுவோம்.

"இறைவா, உமது விருப்பம் எதுவாக இருந்தாலும் அது என்னில் நிறைவேறட்டும்."

லூர்து செல்வம்.

Tuesday, June 25, 2024

"என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்."(மத்தேயு.7:21)

"என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்."
(மத்தேயு.7:21)

ஒரு நாள் என் வகுப்பு மாணவன் ஒருவனின் தந்தை நான் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது வகுப்புக்கு வந்தார்.

"என்ன சார், பையனைப் பார்க்க வேண்டுமா?''

"இல்லை சார், உங்களைத்தான் பார்க்கணும்."

"சொல்லுங்க, என்ன விசயம்?"

''பைனனைக் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்.

மாதத் தேர்வில் பாஸ் பண்ணல."

" கொஞ்சமல்ல, நிறையவே கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

அவன் வீட்டில் பாடங்களைப் படிப்பதாகத் தெரியவில்லை."

"உண்மைதான், வீட்ல TVய விட்டு எழுந்திருக்கவே மாட்டேன் என்கிறான்."

"நான் உங்கள் வீட்ல வந்து பையனை எழுப்பி விட வேண்டுமா?"

"அப்படிச் சொல்லவில்லை. கண்டித்து படிக்க வையுங்கள் என்றேன்."

" வகுப்பில் பையனுக்கு விளங்கும்படி பாடம் நடத்த வேண்டியதும், 

படிக்காவிட்டால் கண்டிக்க வேண்டியதும் என் பொறுப்பு.

வீட்டில் அவனைப் படிக்க வைப்பது பெற்றோர் பொறுப்பு.

பையனின் படிப்பு முடியுமட்டும் வீட்ல TVய அப்புறப்படுத்துங்கள்.

பையன் படிக்க ஆரம்பித்து விடுவான்."

மாணவன் பள்ளிக்கூடத்துக்கு வந்தால் மட்டும் போதாது, பாடங்களைப் படிக்க வேண்டும்.

பெற்றோர் மகனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினால் மட்டும் போதாது, வீட்டில் படிக்க வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

ஆன்மீக விசயத்திலும் பையனைப் போலவும், அவனுடைய அப்பாவைப் போலவும் நடந்து கொள்கிறோம்.

செய்ய வேண்டியதைச் செய்வதில்லை.

செய்ய எளிதானதை மட்டும் செய்கிறோம்.

காலையிலும் மாலையிலும் செபம் சொல்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்குப் போகிறோம்.

திவ்ய நற்கருணையை உட்கொள்கிறோம்.

நமது ஆண்டவர் எல்லா ஆன்மீக காரியங்களிலும் நமக்கு முன் மாதிரியாகக் நடந்து கொண்டார்.

அவரே கடவுளாக இருந்தாலும் இரவு முழுவதும் தந்தையை நோக்கி செபித்தார்.

அதோடு தனது தந்தையின் சித்தத்தை நிறைவேற்றினார்.

மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு, சிலுவையில் மரித்து நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்பது தந்தையின் சித்தம்.

அதை நிறைவேற்றினார்.

நாமும் மீட்புப் பெற வேண்டுமென்றால்

செபிப்பதோடு தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவும் வேண்டும்.

திருப்பலி கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரப்பூர்வமான செபம்.

திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும்.

காலை மாலை செபிக்க வேண்டும்.

ஆனால் அது மட்டும் போதாது.

தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டும்.

தந்தையின் சித்தத்தை எப்படி அறிவது?

எல்லாருக்கும் பொதுவான தந்தையின் சித்தம் நல்ல கிறித்தவனாய் வாழ்வது.

அவரை நேசிப்பதோடு அவரால் படைக்கப் பட்ட அனைவரையும் நேசிக்க வேண்டும்.

நமது நேசம் நற்செயல்கள் மூலம் வெளிப்பட வேண்டும்.

கடவுள் அவரது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டது போல, நம்மிடம் உள்ளதை நமது பிறனோடு பகிர்ந்து வாழ வேண்டும்.

நமது அயலானுக்கு என்ன தேவை என்பதை அறிந்தபின்னும் அதை நம்மால் இயன்ற அளவு பூர்த்தி செய்யா விட்டால் நாம் நமது கடமையில் தவறியவர்கள் ஆவோம்.

நம்மைப் பகைப்பவர்களை நேசிக்க வேண்டும் என்பது தந்தையின் சித்தம்.

நேசிப்பது மட்டுமல்ல அவனுக்கு நம்மால் இயன்ற நன்மையைச் செய்ய வேண்டும்.

' நான் நிலை வாழ்வைப் பெற வேண்டுமென்றால், கட்டளைகளைக் கடைபிடிப்பது போக வேறென்ன செய்ய வேண்டும்" என்று கேட்டவனிடம் இயேசு 

, "நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், 

உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும்.

 அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். 

பின்பு வந்து என்னைப் பின்பற்றும்"" என்று சொன்னார். 
(மத்தேயு.19:21)

இறைவனின் இந்த சித்தத்துக்குப் பெயர் 'தேவ அழைத்தல்.'

இது எல்லோருக்கும் கொடுக்கப் படுவதில்லை.

அழைக்கப் பட்டவர்கள் தங்கள் உடைமைகளை எல்லாம் விட்டு விட்டு இறைப்பணி ஆற்றச் செல்ல வேண்டும்.

பெண்கள் கன்னிமை வாழ்வு வாழ அழைக்கப்படுவதும் தேவ அழைத்தல் தான்.

ஆக விண்ணரசில் நிலையாக வாழ விரும்புவோர்

இயேசுவை நோக்கி செபிப்பதோடு,

விண்ணகத் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவும் வேண்டும்.

நமது ஆன்மீக வாழ்வின் குறிக்கோள் அதுதான்.

லூர்து செல்வம்.

"இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்."(மத்தேயு.7:20)

"இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்."
(மத்தேயு.7:20)

ஒரு மரம் எப்படிப்பட்டது என்பதை அது தரும் கனிகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஒரு ஆள் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய செயல்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நன்றாகப் பேசுபவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று கூறி விட முடியாது.

அவர்களுடைய சிந்தனையில் என்ன உள்ளது என்று யாருக்கும் தெரியாது.

அவர்களுடைய செயல்களை வைத்து தான் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கண்டு பிடிக்கலாம்.

சொல்லிலும் செயலிலும் மாறுபட்டவர்களைக் காண எங்கேயும் தேடிப் போக வேண்டாம்.

நமது அரசியல் வாதிகளைப் பார்த்தாலே போதும்.

தேர்தல் சமயத்தில் அவர்கள் பேசியதை இப்போது அவர்களுடைய செயல்களோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மை புரியும்.

ஓட்டு வாங்குமுன் கொடுத்த வாக்குறுதிகளை ஓட்டு வாங்கிய பின் மறந்து விடுவார்கள்.

அவர்களுடைய சிந்தனைப்படி செயல்படுகிறார்கள், வாக்குப்படி அல்ல.

அவர்கள் வாக்கு கொடுத்த போது அவர்கள் சிந்தனையில் என்ன இருந்தது என்று நமக்குத் தெரியாது.

அவர்கள் செயல்களைப் பார்த்து தான் சிந்தனையில் என்ன இருந்தது என்பதை கண்டு கொள்கிறோம்.

சிந்தனையும், சொல்லும், செயலும் ஒன்றாக இருப்பவர்களை சத்தியவான்கள் என்போம்.

அரசியல் வாதிகளில் நமக்குத் தெரிந்த சத்தியவான் காமராஜர்.

மற்றவர்களும் அவரைப் போல இருக்க இறைவனை வேண்டுவோம்.

" போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்."

என்று ஆண்டவர் கூறுகிறார்.

போலி இறைவாக்கினர் என்றால் யார்?

தாங்கள் போதித்த இறைவாக்கின்படி வாழாத
இறைவாக்கினர்.

இவர்கள் இறைவாக்கை அறிந்து வைத்திருப்பது அதன்படி தாங்கள் வாழவோ அல்லது மற்றவர்கள் வாழ்வதற்காகவோ அல்ல.

அதைப் பணம் ஈட்டும் தொழிலாகப் பயன்படுத்த.

கையில் பைபிளை வைத்துக்கொண்டு இறைவாக்கை மக்களுக்குப் போதிப்பார்கள்.

இறைவனின் பெயரால் மக்கள் கொடுக்கும் காணிக்கை அவர்களுக்கு வருமானம்.

ஆனால் அவர்கள் போதித்த இறைவாக்கின்படி வாழ மாட்டார்கள்.

அவர்களுடைய போதனையையும், வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நமக்கு தெரியும்.

தங்கள் இஷ்டப்படி வாழ்வதற்கு வசதியாக இயேசுவால் நியமிக்கப்பட்ட தலைவரை தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அவர்களுக்கு தலைவர் அவர்கள் தான்.

பைபிள் மட்டும் போதும் என்று சொல்லிக்கொண்டு அதற்கு தங்கள் விருப்பம் போல் விளக்கம் அளிப்பார்கள்.

அப்படிப்பட்டவர்களுடைய போதனைக் கூட்டங்களுக்கு கத்தோலிக்கர்களாகிய நாம் செல்லக்கூடாது.

'போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். 

ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். 

ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். 


அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள்.

 முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? 

நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்.

 கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும்.

நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும்."
(மத்தேயு.7:15-19)

என்று ஆண்டவர் சொல்கிறார்.

அரைகுறை பைபிளை முழு பைபிள் என்று கூறிக்கொண்டு,

இயேசு நிறுவிய திருச்சபையை விட்டு வெளியேறி,

பைபிள் வசனங்களுக்கு தங்கள் விருப்பப்படி பொருள் கூறிக்கொண்டு,

காணிக்கைக்காக மட்டுமே போதித்துக் கொண்டிருக்கும் பிரிவினை சபையார்
 விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


நமது இல்லங்களுக்கு வருவார்கள்.

"இயேசு தான் நம்மை இரட்சித்தார். 

மாதாவை ஏன் வணங்குகிறீர்கள்?

மாதா படங்களை அப்புறப்படுத்துங்கள். 

நாங்கள் உங்களுக்காக ஜெபிப்போம். 

நீங்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வீர்கள். 

கடன் தொல்லைகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள்."

என்று என்னவெல்லாமோ சொல்வார்கள்.

அவர்களிடம் பேச்சுக் கொடுக்காமல் அவர்களை வெளியேற்ற வேண்டும்.

அவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடக்கூடாது.

அவர்கள் மனம் திரும்ப இறைவனிடம்  நாம் வேண்ட வேண்டும்.

சுகம் அளிக்கும் கூட்டங்கள் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு சென்று விடக்கூடாது.

நாமும் இயேசுவின் சீடர்கள்.

நாமும் இயேசுவின் நற்செய்தியை உலகோருக்கு அறிவிக்க வேண்டும்.

நாம் அறிவிக்கும் நற்செய்தியை நாம் வாழ வேண்டும்.

நாம் போலி இறைவாக்கினராக மாறிவிடக்கூடாது.

இயேசுவை அறிவோம்.

இயேசுவை வாழ்வோம்.

இயேசுவை அறிவிப்போம்.

லூர்து செல்வம்.

Monday, June 24, 2024

"ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்." .(மத்தேயு.7:12)

" ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்."
(மத்தேயு.7:12)

விண்ணகத் தந்தை மனுக்குலத்தின்‌ தந்தை.

மனிதர்கள் அனைவரும் உடன் பிறந்த ககோதர சகோதரிகள்.

மனுக்குலம் ஒரு குடும்பம்.

குடும்பத்தினர் அனைவரும் அன்பு என்னும் கயிற்றால் பிணைக்கப் பட்டிருக்கிறார்கள்.

அனைவரும் ஒருவரையொருவர் அன்பு செய்ய வேண்டும்.

ஒவ்வொருவரும் தன்னை நேசிப்பது போல மற்றவர்களை நேசிக்க வேண்டும்.

மற்றவர்களை நேசிப்பது போல் தான் தங்களை நேசிக்க வேண்டும்.

மற்றவர்கள் நம்மை நேசிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

மற்றவர்கள் நம்மை எப்படி நேசிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அப்படியே நாமும் அவர்களை நேசிக்க வேண்டும்.

நேசம் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் தன்னை வெளிக்காட்ட வேண்டும்.

ஒருவருக்கொருவர் உதவி செய்வதைத் தான் அன்புச்‌ செயல் என்கிறோம்.

பிறர் நமக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ

அதே உதவியை நாம் பிறருக்குச் செய்ய வேண்டும்‌.

அனைவரும் இவ்வாறு செய்தால் மனிதர்கள் அனைவரும் அன்புக் கடலில் அன்புதவிகள் என்னும் படகுகளில் பயணித்து மகிழ்வார்கள்.

வெறுப்பு, பொறாமை, கோபம், பழிக்குப்பழி வாங்குதல் போன்ற எதிர்மறைக் குணங்கள் மனித சமுதாயத்தில் இருக்கவே இருக்காது.

சினிமாவில் கூட வில்லன் இருக்க மாட்டான்.

அனைவர் மனதிலும் அன்பு மட்டுமே இயக்க சக்தியாக இருந்தால் உலகில் பாவத்தின் நிழல் கூட படாது.

பூலோகமே மோட்சமாக மாறிவிடும்.

கடவுள் அன்பு மயமானவர்.

பரிசுத்தர்.

பூவுலகில் வாழும் போது யாரெல்லாம் அன்பிலும், பரிசுத்தத்தனத்திலும் வாழ்கிறார்களோ  

அவர்கள் மட்டும் தான் மோட்சத்தில் இறைவனோடு ஒன்றித்து வாழ்வார்கள்.

மோட்சவாசிகளின் ஒரே வேலை அன்பு செய்வதும், உலகில் வாழும் நமக்காக தங்கள் செபத்தின் மூலமாக உதவி செய்வது மட்டும் தான்.

அவர்களுக்கு நம்முடைய உதவி தேவையில்லை.

ஆனால் நமக்கு அவர்களுடைய உதவி தேவை.

கடவுள் தான் நம்முள் வாழ்கிறாரே,

கேளுங்கள் தரப்படும் என்று சொல்லியிருக்கிறாரே, 

நாம் அவரிடம் கேட்டால் போதாதா

எதற்காக புனிதர்களிடம் கேட்க‌ வேண்டும் 

என்று பிரிவினை சபையினர் கேட்கிறார்கள்.

தந்தையிடம் செபிக்க இயேசுவே கற்றுத் தந்திருக்கிறார்.

ஆனாலும் விண்ணில் வாழ்பவர்களும், மண்ணில் வாழ்பவர்களும் ஒரே குடும்பத்தினர் என்ற உணர்வு நம்மிடம் இருக்க வேண்டும்.

ஒரு குடும்ப‌ உறுப்பினர்கள் பெற்றோருடன் மட்டுமல்ல தங்களுக்குள்ளேயும் தொடர்பில் இருப்பது தானே குடும்ப வாழ்க்கை.

" எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! 

தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல்

 அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! 

நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன். 

இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக.

 இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல்

 அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும்."

இது இயேசு தந்தையை நோக்கி வேண்டிய செபம்.

தந்தை, மகன், தூய ஆவி  மூவரும் ஒருவருக்குள் ஒருவர் ஒன்றாய் இருக்கிறார்கள்.

கடவுளுடைய பிள்ளைகளாகிய நாம் நமக்குள் ஒன்றாய் இருப்பதோடு

அவரோடும் ஒன்றித்து வாழ வேண்டும்.

விண்ணக வாசிகளும், மண்ணக வாசிகளாகிய நாமும் ஒரே இறைக் குடும்பத்தின் உறுப்பினர்கள்.

ஆகவே இறைவனும், விண்ணக வாசிகளும்,   நாமும் ஒருவரோடு ஒருவர் செபத் தொடர்பில் இருக்க வேண்டும்.

விண்ணக வாசிகள் இறைவனுள் இருப்பதால் நாம் அவர்களை நோக்கி வேண்டும் செபம் அவர் வழியாகத்தான் அவர்களை அடையும்.

நாம் ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக செபிக்கும் போது புனிதர்களும் அதே கருத்துக்காக இறைவனிடம் செபிப்பார்கள்.

நமது செபத்தின் வலு அதிகமாகும்.

இயேசுவின் விருப்பப்படி 

நமது சகோதரர்களாகிய புனிதர்களோடும்,

நமது தந்தையாகிய இறைவனோடும் ஒன்றித்திருப்போம்.

இயேசுவின் விருப்பப்படி நாம் செயல்படும் போது நமது செபத்தின் வலிமை அதிகமாகும்.

அதாவது இறைவனுக்கேற்ற செபமாக இருக்கும்.

யாருடன் அதிகம் பழகுகிறோமோ அவர்களுடைய குணநலன்கள் நம்மையும் பற்றிக் கொள்ளும்.

புனித அந்தோனியாரை நினைத்து செபித்தால் நமது விசுவாசம் அதிகரிக்கும்.

புனித பிரான்சிஸ் அசிசியாரை நினைத்து செபித்தால் அவரைப் போல எளியவர்களாக வாழ்வோம்.

புனித அல்போன்சாளை நினைத்து செபித்தால் துன்பங்களை நேசிக்க ஆரம்பிப்போம்.

அன்னை மரியாளை நினைத்து செபித்தால் அவளைப் போல நாமும் இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்வோம்.

புனிதர்களை நோக்கி செபிக்கும் போது அவர்களைப் பற்றி தியானித்துக் கொண்டே செபிக்க வேண்டும்.

நண்பர்களுக்குக் கடிதம் எழுதும் போது கடைசியில் 

"எனக்காக செபியுங்கள்" என்று ஒரு வரி எழுதுவோம்.

நல்ல பழக்கம் தான்.

நாமும் அவர்களுக்காக செபிக்க வேண்டும்.

பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறோமோ 

அதை நாம் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.

லூர்து செல்வம்.

Sunday, June 23, 2024

குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்."(லூக்கா.1:80)

"குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்."
(லூக்கா.1:80)

திருமுழுக்கு அருளப்பர் இயேசுவின் முன்னோடி.

முன்னோடியாக இருந்ததால் தான் இயேசு பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே அவர் பிறந்து விட்டார்.

வீட்டில் தான் பிறந்தார்.

வீட்டில் பிறந்த அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வரக் காரணம் என்ன?

இயேசு தனது பெற்றோருடன் எகிப்துக்குச் சென்றதுக்கு எது காரணமோ அதுதான் அருளப்பர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்ததற்கான காரணம்.

குழந்தை இயேசுவைக் கொல்லும் நோக்கோடு ஏரோது மன்னன் 

பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி 

இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்லக் கட்டளையிட்டான். 

அந்தக் கொலையிலிருந்து தப்பிப்பதற்காகத் தான்

எலிசபெத் தன் மகனை மனிதர்கள் வாழாத பாலைவனப் பகுதிக்கு எடுத்துச் சென்றாள்.

குழந்தையை எங்கே என்று கொலை வீரர்கள் சக்கரியாவிடம் கேட்டபோது அவர் சொல்ல மறுத்து விட்டதால்

அவர்கள் அவரைக் கொன்று விட்டார்கள்.

மாசில்லாக் குழந்தைகளோடு சக்கரியாவும் இயேசுவுக்காக வேத சாட்சியாக மரித்தார்.

மகனை இயேசுவுக்காக வாழ வைப்பதற்காக தந்தை மரித்தார்.

ஆன்மீக ரீதியாக இயேசுவுக்காக வாழ விரும்புகிறவர்கள்

 அவருக்காக இவ்வுலக மரணத்திற்குத் தயாராக இருக்க வேண்டும் 

என்ற பாடத்தை நாம் சக்கரியாவின் மரணத்திலிருந்து கற்றுக் கொள்கிறோம்.

இயேசு மனிதனாகப் பிறந்தது நாம் மறுவுலகில் அவரோடு நிரந்தரமாக வாழ வேண்டும் என்பதற்காக.

மறுவுலகில் நிரந்தரமாக வாழ வேண்டுமென்றால் தற்காலிகமான இவ்வுலக வாழ்வை இழந்து தான் ஆக வேண்டும்.

இயேசு நமது துன்ப துயரங்களில் இருந்து விடுதலை தருவார்,

நமது கடன் தொல்லைகளைத் தீர்த்து வைப்பார்,

குழந்தை வரம் தருவார்,

நம்மைச் செல்வச் செழிப்புடன் வாழ வைப்பார்.

ஆகவே இயேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நாம் மற்றவர்களிடம் போதிக்கக் கூடாது.

இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமக்கத் தயாராக இருப்பவர்கள் மட்டுமே அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

விண்ணக வாழ்வுக்காகத்தான் இயேசுவைப் பின்பற்றுகிறோம்.

ஆனால் சிலுவை இல்லாமல் விண்ணுலக வாழ்வு இல்லை.

இயேசு சர்வ வல்லவர்.

அவர் நினைத்திருந்தால் ஏரோது ஒருவனை அழிப்பதின் மூலம் மாசில்லாக் குழந்தைகளையும், சக்கரியாவையும் சாவிலிருந்து காப்பாற்றியிருக்கலாம்.

தன் பெற்றோரையும் எகிப்துக்கு நடக்கவும், அங்கு அகதிகள் போல் வாழவும் விடாமல் காப்பாற்றியிருக்கலாம்.

அருளப்பரையும் பாலை நிலத்தில் காட்டுத் தேனையும், வெட்டுக்கிளியையும் சாப்பிடாமல் 

வீட்டில் நல்ல உணவு சாப்பிடும்படிச் செய்திருக்கலாம்.

ஆனால் அவர் அப்படியெல்லாம் செய்யவில்லை.

ஏன்?

கிறிஸ்தவம் என்றாலே சிலுவைகள் நிறைந்த வாழ்வு என்பதை வாழ்ந்து காட்டவே

இயேசு தாயின் வயிற்றில் உற்பவித்த வினாடியிலிருந்தே சிலுவையைச் சுமக்க ஆரம்பித்து விட்டார்.

நாம் கற்க வேண்டிய பாடம் துன்பங்கள் வரும்போது அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்,

அவற்றை நமது பாவங்களுக்கும் உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக கடவுளுக்கு ஒப்புக் கொடுப்போம்.

அருளப்பர் பாலை நிலத்தில் தன் தவ வாழ்வின் மூலம் மன வலிமை பெற்றது போல

நாமும் தவ வாழ்வின் மூலம் ஆன்மீக வலிமை பெறுவோம்.

சிலுவை இயேசு அரசரின் சிம்மாசனம்.

சிலுவையை ஏற்றுக் கொள்பவர்கள் தங்கள் மீட்பை ஏற்றுக் கொள்கிறார்கள்.

லூர்து செல்வம்.

Saturday, June 22, 2024

"அவர்கள் பேரச்சம் கொண்டு, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ!" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்." (மாற்கு.4:41)

"அவர்கள் பேரச்சம் கொண்டு, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ!" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்." 
(மாற்கு.4:41)

இயேசு கடலில் வீசிய புயலையும், ஓங்கி எழுந்த‌ அலைகளையும் தனது வார்த்தைகளால் அமர்த்திய போது

அவருடைய சீடர்கள் பேரச்சம் கொண்டு, 

"காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ!" 

என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.

சீடர்களுடைய செயல்களைப் பார்க்கும் போது நமக்குச் சிரிப்பு வருகிறது.

சீடர்கள் இயேசுவால் அழைக்கப் பட்டவர்கள்.

அழைக்கப் பட்டவுடன் தங்கள் குடும்பத்தையும், சொத்து சுகங்களையும் விட்டு விட்டு அவரே கதி என்று அவரைப் பின் தொடர்ந்தவர்கள்.

அவர் செய்த புதுமைகளைக் கண்ணால் பார்த்தவர்கள்.

அவரை இறைமகன் என்றும், யூதர்களின் விடுதலைக்காக அவர்கள் எதிர்பார்த்த மெசியா என்றும் நம்பினார்கள் என்று‌ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அவர் புயலையும் கடலையும் வார்த்தைகளால் அடக்கிய புதுமையைப் பார்த்து  

"காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! 

இவர் யாரோ!" 

என்று வியப்புடன் கூறுகின்றனர்.

கப்பர்நாகுமில் முடக்குவாதக் காரனைக் குணமாக்கிய போது,

"மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப் பட்டன." என்று கூறியதைக் காதால் கேட்டவர்கள்.

கடவுளால் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியும்.

ஆனால் இப்போது "இவர் யாரோ!" என்று வியக்கிறார்கள்.

அவர்களுடைய விசுவாசத்தின் அளவைப் பார்க்கும் போது நமக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

அவர்களை விட்டு விடுவோம்.

நம்ம கதைக்கு வருவோம்.

நமக்கு இயேசு யார் என்று தெரியுமா?

இயேசு யார் என்று நம்மிடம் யாராவது கேட்டால் மனப்பாடமாகச் சொல்லி விடுவோம்,

" நம்மைப் பாவத்திலிருந்து மீட்க மனிதனாகப் பிறந்த‌ 
தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன்."

ஞானோபதேச வகுப்பில் படித்ததை ஒப்பித்து விடுவோம்.

ஆனால் உண்மையில் இயேசு யாரென்று நமக்குத் தெரியுமா?

எங்கள் வீட்டு விழாவுக்கு Video coverage செய்த Studioவுக்கு Photo album தயாரிப்பது சம்பந்தமாக phone message அனுப்பினேன்.

இரண்டு நாட்கள் ஆகியும் பதில் வரவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து Studio owner க்கு Phone செய்து Message பற்றி விசாரித்தேன்.

அவர் கொடுத்த பதில் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

அவரிடம் இருந்தது Apple Phone.

அவர் சொன்னார், "Phone ல் பேச மட்டும் தான் தெரியும். Message பற்றி எதுவும் தெரியாது.

எதுவும் சொல்ல வேண்டுமென்றால் Phone ல் சொல்லுங்கள், அல்லது, நேரில் வந்து சொல்லுங்கள்." என்றார்.

அவரிடம் Phone இருந்தது.‌ அது மட்டும் தெரியும். அதைப் பயன்படுத்தத் தெரியாது.

Phone இருந்து என்ன பயன்?

இப்போது நமது கேள்விக்கு வருவோம்.

"இயேசு யார்?" என்ற கேள்விக்குப் பதில் நமது மனதில் இருக்கிறது.

எல்லாருக்கும் வருவது போல நமது வாழ்வில் ஒரு துன்பம் வருகிறது.

நாம் என்ன செய்வோம்?

ஞானோபதேச வகுப்பில் ஆசிரியர் கூறியிருக்கிறார்,

''இறை மகன் இயேசு நம்மை நமது பாவத்திலிருந்து மீட்பதற்காக மனிதனாகப் பிறந்து

 பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்து 

பாவப் பரிகாரம் செய்தார்.

நமது வாழ்வில் நமக்கு ஏதாவது துன்பம் வந்தால்

நாம் அதைப் பாவப் பரிகாரமாக தந்தை இறைவனுக்கு ஒப்புக்‌ கொடுக்க வேண்டும்.

அப்போது தான் இயேசு பட்ட பாடுகளின் பலன் நமக்குக் கிடைக்கும்."

ஆசிரியர் கூறிய வார்த்தைகள் நமது மனதில் இருக்கின்றன.

யாராவது "நமக்குத் துன்பம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டால்

நமது மனதில் உள்ள வார்த்தைகளை அப்படியே ஒப்பித்து விடுவோம்.

ஆனால் நாம் நமது துன்பம் உடல் ரீதியான நோயாக இருந்தால் மருத்துவரைத் தேடுவோம்.

பணம் சம்பந்தப் பட்டதாக இருந்தால் வங்கிக்குப் போவோம்.

நிலம்  சம்பந்தப் பட்டதாக இருந்தால் வக்கீலைப் பார்ப்போம்.

ஆனால் அதைப் பாவப் பரிகாரமாக பரம தந்தைக்கு ஒப்புக் கொடுப்போமா?

துன்பத்தை சிலுவையாக ஏற்றுக் கொண்டு அதைப் பாவப் பரிகாரமாக தந்தைக்கு ஒப்புக் கொடுத்தால் இயேசுவைப் பற்றி நமக்குத் தெரியும் என்று நாம் சொல்லலாம்.

இயேசுவைப் பற்றி நமக்குத் தெரிந்ததை நாம் வாழ்ந்தால் தான் தெரிந்ததால் நமக்குப் பயன்.

வாழாவிட்டால் தெரிந்தாலும் தெரியாதது மாதிரி தான்.

நமது வாழ்க்கையை நாமே கூர்ந்து நோக்கினால்

 இயேசுவைப் பற்றி நமக்கு ஏதாவது தெரியுமா அல்லது ஒன்றும் தெரியாதா என்பதைக் கண்டு கொள்ளலாம்.

அநேக சமயங்களில் இயேசுவைப் பற்றித் தெரியாதவர்களாகத் தான் வாழ்கிறோம்.

இயேசு எங்கு இருக்கிறார் என்று கேட்டால்

நமது உள்ளத்தில் இருக்கிறார் என்று சொல்வோம்.

இது சாமியாருடைய பிரசங்கத்தில் கேட்டது.

ஆனால் அதே உள்ளத்தில் ஆயிரம் கவலைகளைக் குடியேற்றியிருப்போம்.

இயேசு இருக்கும் இடத்தில் கவலைகள் இருக்கலாமா?

அப்போ நமது வாழ்க்கையில் இயேசு இல்லை!

"நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர் சீடர்களிடம் கேட்டபோது


சீமோன் பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார். 

இயேசு அவரைப் புகழ்ந்ததுமல்லாமல்


 "உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்."

என்று பெருமையாகச் சொன்னார்.

ஆனால் அதே இராயப்பர் 


 இயேசு தாம் படவேண்டிய பாடுகளைப் பற்றிக் கூறிய போது 


 "ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" என்று கூறினார். 


 இயேசு அவரைப் பார்த்து, "என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்று கூறினார். 

நாமும் சில சமயங்களில் இராயப்பரைப் போலவே நடக்கிறோம்.

இயேசுவை நமது மீட்பர் என்று கூறி விட்டு 

 அவர் நம்மில் செயல்படத் தடையாய். இருக்கிறோம். 

.
 கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறோம்.

அவரை மீட்பர் என்று கூறி விட்டு அவருக்கு ஏற்றவை பற்றி எண்ணாவிட்டால் எப்படி மீட்பு கிடைக்கும்?

இயேசுவைப் பற்றிய நமது அறிவை வாழ்வாக்கினால் தான் நமது அறிவு உண்மையான அறிவு.

வாழாவிட்டால் நமது அறிவு அறிவல்ல.

இயேசுவை அறிவோம்.

அறிந்ததை வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Thursday, June 20, 2024

"ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் ‌கொடுக்கப்படும்."(மத்தேயு.6:33)

''ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத்தேயு.6:33)

ஒரு பெற்றோருக்கு ஒரு மகன்.

படித்து, பட்டம் பெற்று, ஒரு வேலையில் அமர்ந்து, நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறான்.

அவனுக்குத் திருமணம் முடித்து வைக்க வேண்டுமென்று பெற்றோர் தீர்மானிக்கிறார்கள்.

அதற்காக அவர்கள் 

திருமணத்திற்கென்று loan போட்டு பணம் ஏற்பாடு செய்து விட்டார்கள்.

ஜவுளிக் கடைக்குச் சென்று எல்லோருக்கும் துணிமணிகள் எடுத்து விட்டார்கள்.

கல்யாண மண்டபம் ஏற்பாடு செய்து விட்டார்கள்.

சமையல்காரர் பார்த்து விட்டார்கள்.

சமையலுக்கு உரிய பொருட்கள் எல்லாம் வாங்கி விட்டார்கள்.

கல்யாண தேதியையும் குறிப்பிட்டு விட்டார்கள்.

குறிப்பிட்ட தேதியில் கல்யாணம் நடக்குமா?

எப்படி நடக்கும்?

பெண் பார்க்கவில்லையே!

மேற்சொல்லப்பட்ட எதுவும் இல்லாமல் பெண் பார்த்து விட்டால் திருமணத்தை முடித்து விடலாம்.

பெண் பார்க்காமல் வேறு எதைப் பார்த்தாலும் திருமணம் நடக்காது.

நாம் எதற்காகப் பிறந்திருக்கிறோம்?

அறுசுவை உணவு சாப்பிடவா?

 உடை அணியவா?

படித்து பட்டம் பெறவா?

நல்ல வேலையில் அமரவா?

சம்பளம் வாங்கவா?

வீடு கட்டவா?

இவற்றை எல்லாம் எல்லோரும் செய்கிறோம்.

தப்பே இல்லை.

ஆனால் இவற்றுக்காக நாம் மனிதராகப் பிறக்கவில்லை.

நாம் பிறந்திருப்பதன் ஒரே நோக்கம் புண்ணியங்கள் நிறைந்த ஆன்மீக வாழ்வு வாழ்ந்து,

இவ்வுலக வாழ்வு முடிந்தவுடன் முடிவில்லா பேரின்ப வாழ்வு வாழவே மனிதனாகப் பிறந்திருக்கிறோம்.

இதை மறந்து உலகில் எல்லா விதமான வசதிகளுடன், எவ்வளவு செல்வச் செழிப்பான வாழ்வு வாழ்ந்தாலும் ஒரு பயனும் இல்லை.

இவ்வுலகில் நாம் தேட வேண்டியது உணவையும், உடையையும், வீட்டையும், வேலையையும், சம்பளத்தையும் அல்ல.

அனைத்திற்கும் மேலாக இறைவனது ஆட்சியையும்,

 அவருக்கு ஏற்புடையவற்றையும் தேட வேண்டும். 

மற்றவை அனைத்தையும் இறைவனே நமக்கு ஏற்பாடு செய்வார்.

மற்றவை அனைத்தும் இவ்வுலகில் வாழ நமக்குத் தேவை.

ஆனால் மறுவுலக வாழ்க்கைக்குத் தேவையானது அருள் நிறைந்த வாழ்வு மட்டும் தான்.

இவ்வுலக வசதிகள் எதுவும் இல்லாமல் இறையருளோடு மட்டும் வாழ்பவன் நித்திய பேரின்ப வாழ்வை ஈட்டுவான்.

அருள் இல்லாமல் பொருளோடு மட்டும் வாழ்பவனுக்கு பேரின்ப வாழ்வு கிட்டாது.

அருளோடு வாழ்வது எப்படி?

இறை அருளின் ஊற்று இயேசு ஏற்படுத்திய தேவத் திரவிய அனுமானங்கள்.

இவற்றைப் பெறும் போது தூய ஆவியானவர் தனது அருள் வரங்களோடு நம்மீது இறங்குவார்.

நாம் தூய வாழ்வு வாழவும், நற்செயல்கள் புரியவும் வேண்டிய அருள் வரங்களை நம்மீது பொழிவதோடு

நம்மை விண்ணகப் பாதையில் வழி நடத்திச் செல்வார்.

நாம் பாவம் செய்யாமல் வாழ வேண்டும்.

பலகீனத்தின் காரணமாக பாவத்தில் விழ நேர்ந்தால்

அதற்காக வருந்தி, பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெற வேண்டும்.

அடிக்கடி திருப்பலியிலும், திரு விருந்திலும் கலந்து கொள்ள வேண்டும்.

பாவமின்றி நாம் உண்ணும் திவ்ய நற்கருணை நமக்கு ஆன்மீக சக்தியைத் தரும்.  

நற்கருணை நாதரின் துணை எப்போதும் நம்மோடு இருக்கும்.

நமது பிறர் அன்புச் செயல்கள் மூலம் இறைவனுக்குச் சேவை செய்ய வேண்டும்.

இயேசுவின் நற்செய்தியை நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் வாழ்வாக்க வேண்டும்.

இவ்வாறு அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுவோம்.

நமது தேவைகளை அவரே பூர்த்தி செய்வார்.

லூர்து செல்வம்.

Wednesday, June 19, 2024

Hail Mary, full of grace.

Hail Mary, full of grace.

 

Our Lady, Mother Mary , was conceived without original sin.

“I will put enmities between thee and the woman, and thy seed and her seed: she shall crush thy head, and thou shalt lie in wait for her heel.” .(Gen. 3:15)

  God   said   these words to Satan while cursing him for his temptation to Eve to eat the forbidden fruit.

Here ‘woman’ refers to Mother Mary. God said that she would crush Satan’s head, which means that she would always be free from sin.

It was a special gift of God to His Mother.

God is pure; so the woman who is to conceive Him also should be pure, free from even a small stain of sin.

God is pure by Himself; His Mother was pure by His special gift.

As she was pure by God’s grace, Angel Gabriel greeted her saying, “Hail, full of grace.”( Luke.1:28)

The words ‘full of grace’ explain her stainless purity.

When a cup ‘full with water’ there can be nothing else in it. There won’t be space for anything else in it.

When Our Lady is ‘full of grace’ anything other than grace can’t be in her.

Our Mother was free from even a stain of sin all her life right from her conception.

She was conceived without original sin.

I cannot understand why some people who call themselves Christians accept Christ, but reject His mother whom Christ Himself has accepted.

Lourdu Selvam.

ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்."(மத்தேயு.6:31)

"ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்."
(மத்தேயு.6:31)

கவலை என்றால் அர்த்தமற்ற பயம்.

Worry is meaningless fear.

சிறு குழந்தைகள், "உலகில் பிறந்து விட்டோமே, எப்படி வாழப் போகிறோமோ!" என்று நினைத்து கவலைப் படுவதில்லை.

அவை செய்வதெல்லாம் பசித்தால் அம்மாவைப் பார்த்து அழும்.

வயிறு நிறைந்து விட்டால் யாரைப் பார்த்தாலும், பார்க்கா விட்டாலும், சிரிக்கும்.

அவற்றின் தேவைகளுக்கு அம்மா.

அம்மா அருகில் இருக்கும் போது அவை எதற்கும் கவலைப் படுவதில்லை.

கடவுள் முன் நாம் அவருடைய குழந்தைகள் தானே.

அவர் எப்போதும் நம்முடன் தானே இருக்கிறார்.

எல்லாம் வல்ல தந்தை நம்முடன் இருக்கும் போது நாம் எதற்குக் கவலைப் பட வேண்டும்?

"ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; 

உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். 

உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? 

 வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; 

அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. 

உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். 

அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! 

 கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? 

உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?

 காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; 

அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. 


நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் 

உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?"

என்று நம்மைப் படைத்துப் பராமரித்து வரும் நமது ஆண்டவர் சொல்லுகிறார்.

கவலைப் படுவதற்காக அவர் நம்மைப் படைக்கவில்லை.

வாழ்வதற்காகப் படைத்தார்.

அன்பு செய்து வாழ்வதற்காகப் படைத்தார்.

இவ்வுலகிலும், மறுவுலகிலும் அன்பு செய்வது மட்டுமே நமது வேலை.

நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும்

கடவுளையும், பிறனையும் அன்பு செய்வது மட்டுமே நமது வேலை.

எவ்வளவு இனிமையான வேலை!

What can be sweeter than love? 

God Himself is Love.

அன்பு செய்யும் வேலையை மட்டும் நாம் ஒழுங்காகச் செய்தால் போதும்.

நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய நம்மைப் படைத்த நமது தந்தை நம்மோடு இருக்கிறார்.

பணம் இருந்தால் தானே உலகில் வாழ முடியும்!

அன்பு செய்து கொண்டேயிருந்தால் செலவுக்குப் பணம் தானே வந்து விடுமா?

வந்து விடும்.

விடிந்தது முதல் அடையும் வரை கடவுளை நோக்கி செபித்துக் கொண்டிருந்தால்

உண்ண உணவும், உடுக்க உடையும் வந்து விடுமா?

வந்து விடும்.

எப்படி?

செபம் என்றால் என்ன?

எதைச் செய்தாலும் இறைவனுடைய மகிமைக்காக செய்வது தான் செபம்.

நமது அந்தஸ்தின் கடமைகளை இறைவனுடைய மகிமைக்காகச் செய்தால் அது செபம்.

நாம் படிப்பது, தேர்வு எழுதுவது, அதில் வெற்றி பெறுவது, அலுவலகத்தில் பணி புரிவது, அதற்காக ஊதியம் பெறுவது, பயிர்த் தொழில் செய்வது, வியாபாரம் செய்வது போன்ற

அந்தஸ்தின் கடமைகளை இறைவனுடைய மகிமைக்காகச் செய்தால் அது செபம் தானே.

அந்த செபத்தை ஒழுங்காகச் செய்தால் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க வீடும், மற்றவர்களுக்கு உதவியாகக் கொடுக்க பொருளும் தானே வந்து விடுமே!

நமது கடமையை ஒழுங்காகச் செய்வது செபம் தான்.

இந்த செபத்தைச் செய்யக் கவலை எதற்கு?

கவலைப் படுவதால் நமக்கு வளர்ச்சி ஏற்படாது.

எல்லாவற்றுக்கும் கடவுள் பொறுப்பு என்ற உணர்வோடு நமது கடமைகளை இறைவனுடைய மகிமைக்காகச் செய்தால் போதும்.

மற்றவற்றைக் கடவுள் பார்த்துக் கொள்வார்.

இப்போது மனதில் ஒரு கேள்வி எழும்.

கடவுளைப் பற்றி நினைக்கவே செய்யாதவர்கள்,

இலஞ்சம் வாங்குபவர்கள், திருடர்கள், எல்லா விதமான பாவங்களையும் செய்பவர்கள்

எல்லா விதமான வசதிகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கடவுளையே நினைத்து அவருக்காக வாழ்பவர்களுக்கு அவ்வளவு வசதிகள் கிடைக்காதது மட்டுமல்ல,

துன்பங்களோடு அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!

இது ஏன்?

ஒரு ஒப்புமை.

ஒரு விவசாயி இரவும் பகலும் நிலத்தில் கஷ்டப்பட்டு உழைக்கிறான்.

இன்னொரு விவசாயி வயல் பக்கமே போகாமல் ஜாலியாக ஊர் சுற்றுகிறான்.

வட்டிக்குக் கடன் ஹோட்டலில் ருசியாகச் சாப்பிடுவது, சினிமாவுக்குப் போவது, டாஸ்மாக் கடைக்குப் போவது என்று ஆனந்தமாக வாழ்கிறான்.

ஆண்டின் இறுதியில் வயலில் கஷ்டப்பட்டு உழைத்தவன் அறுவடை முடிந்து ஆனந்தமாக வீட்டுக்கு வருவான்.

ஜாலியாக ஊர் சுற்றியவன் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் ஜெயிலுக்குப் போவான்.

இவ்வுலகில் ஜாலியாக வசதிகளோடு வாழ்பவன் மறுவுலகில் பேரிடர் வாழ்வு வாழ்வான்.

இவ்வுலகில் குறைந்த வசதிகளோடு துன்பங்கள் சூழ இறைவனுக்காக வாழ்பவன் 

மறுவுலகில நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வான்.

இவ்வுலகில் வாழ குறைந்த வசதிகள் போதும்.

உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க வீடும் மட்டும் போதும்.

வேறு வசதிகள் எதுவும் இல்லாவிட்டாலும் கடவுளுக்காக வாழலாம். 

அவருக்காக வாழ நமக்கு என்னென்ன தேவை என்று கடவுளுக்குத் தெரியும்.
  
நம்மை அவர் கையில் ஒப்படைத்து விட்டால் நமக்கு வேண்டியதை நாம் கேளாமலே தருவார்.

நாம் விண்ணக வாழ்வை அடைவதற்கு இவ்வுலகில் நமக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் உறுதியாகத் தருவார்.

எதெல்லாம் நமது விண்ணகப் பயணத்தில் நமக்கு இடைஞ்சலாக இருக்குமோ அதையெல்லாம் உறுதியாகத் தரமாட்டார்.

மருத்துவரிடம் வைத்தியம் பார்க்கும்போது அவர் தரும் மருந்தைச் சாப்பிட வேண்டும், நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது.

ஆன்மீக வாழ்வில் நமக்கு என்னென்ன தேவை என்பதைத் தீர்மானிப்பதை இறைவன் கையில் விட்டு விடுவோம்.

அதுதான் நமக்கு நல்லது.

லூர்து செல்வம்.

Tuesday, June 18, 2024

"உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்."(மத்தேயு.6:21)

"உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்."
(மத்தேயு.6:21)

நமது செல்வம் இருவகை,

உலகியல் செல்வம்.
ஆன்மீகச் செல்வம்.

உலகியல் செல்வம் இவ்வுலகைச் சார்ந்த பொருட்களால் ஆனது.

நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, வாழும் வீடு, நிலபுலன்கள், பணிபுரியும் அலுவலகம், பணிக்காகப் பெறும் சம்பளம் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை.

ஆன்மீகச் செல்வம் விண்ணகத்தைச் சார்ந்தது.

ஆன்மீக வாழ்வில் நம்மை இயக்கும் இறையன்பு, பிறரன்பு, இறையருள், நமது நல்வாழ்வால் நாம் ஈட்டும் புண்ணியங்கள் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை.

உலகியல் செல்வம் நமது ஐம்புலன்களால் உணரப் படக்கூடியது.

ஆன்மீகச் செல்வம் நமது ஆன்மாவினால் உணரப் படக்கூடியது.

உலகியல் செல்வம் அழியக் கூடியது.

ஆன்மீகச் செல்வம், பாவத்தினால் அல்லாமல், அழிய முடியாதது.

நாம் பாவமின்றி வாழ்ந்தால் நமது ஆன்மீகச் செல்வம் என்றென்றும் அழியாது.

நாம் உடலும் ஆன்மாவும் சேர்ந்தவர்களாகையால் நம்மால் இருவகைச் செல்வங்களையும் ஈட்ட முடியும்.

ஆனால் நமது ஆன்மா உடலை விட்டுப் பிரியும் போது ஆன்மீகச் செல்வம் மட்டும் அதனுடன் செல்லும்.

உலகியல் செல்வம் உடன் வராது, உலகில் தங்கி விடும்.

உலகியல் செல்வத்தால் நமக்கு எந்த வித ஆன்மீகப் பயனும் இல்லையா?

அதை இறைப்பணிக்காகப் பயன்படுத்தினால் அது ஆன்மீகச் செல்வத்தைத் தருவதாக மாறிவிடும்.

உதாரணத்திற்கு, 

பணம் உலகியல் செல்வம். அதைப் பிறரன்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தினால்

அது இறைவனிடமிருந்து ஆன்மீகச் செல்வமாகிய இறையருளை ஈட்டித் தரும்.

உலகியல் செல்வம் நம்மோடு வராது, ஆனால் அது ஈட்டிய இறையருள் நம்மோடு என்றென்றும் தங்கும்

இறைவன் உலகியல் செல்வத்தை நமக்குத் தருவதே அதை அவரது பணியில் பயன்படுத்துவதற்காகத் தான்.

கட்டடம் ஒரு உலகியல் செல்வம்.

அதை நாம் தங்கப் பயன்படுத்தினால் வீடு,

இறை வழிபாட்டுக்குப் பயன்படுத்தினால் அது கோவில்.

பெத்லகேமில் மாட்டுத் தொழுவம் கூட கோவிலாக மாறிய வரலாறு நமக்குத் தெரியும்.

மாடுகள் மட்டும் தங்கியபோது அது மாட்டுத் தொழுவம்.

அங்கு கடவுள் மனிதனாகப் பிறந்தபோது அது கோவில்.

இயேசுவின் பாடுகளுக்கு முன் சிலுவை ஒரு தண்டனைக் கருவி.

இயேசு அதில் அறையப்பட்ட பின் அது நமது மீட்பின் அடையாளம்.

நமது உள்ளத்தை சரக்கு அறை (Store room) மாற்றுவதும், கோவிலாக மாற்றுவதும் நமது கையில் தான் இருக்கிறது.

உள்ளத்தில் உலகைச் சார்ந்த எண்ணங்களுக்கு மட்டும் இடம் கொடுத்தால் அது சரக்கு அறை.

இறைவனுக்கு மட்டும் இடம் கொடுத்தால் அது கோவில்.

அதற்குள் வரும் உலகைச் சார்ந்த எண்ணங்களை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்து,

அவற்றைக் காணிக்கையாக மாற்றிவிட வேண்டும்.

பணத்தை நாம் நமக்காகப் பயன்படுத்தினால் அது பணம்.

அதையே கோவில் உண்டியலில் போட்டால் அது காணிக்கை.


நமது செல்வம் எங்கு உள்ளதோ அங்கே நமது உள்ளமும் இருக்கும்.

நமது செல்வத்தை இறைவனிடம் கொடுத்து விட்டால் நமது உள்ளம் இறைவனிடம் இருக்கும்.

உள்ளத்தில் இறைவன் வாழ்ந்தால் அது கோவில்.

உள்ளம் இறைவனிடம் வாழ்ந்தால் அது மோட்சம்.

Heaven is our eternal union with God.

"உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்." என்று நமது ஆண்டவர் சொல்லுகிறார்.

நமது செல்வம் முழுவதையும் ஆன்மீகச் செல்வமாக மாற்றி அதை ஆண்டவரிடம் கொடுத்து விடுவோம்.

நாம் நித்திய காலமும் ஆண்டவருடனே இருப்போம்.

நாம் படைக்கப் பட்டிருப்பதே அதற்காகத்தான்.

லூர்து செல்வம்.

“He was putting him to the test.”


“He was putting him to the test.”

 

Just before feeding five thousand people with five loaves and two fish, “Jesus said to Philip, Whence are we to buy bread for these folk to eat?

  6 In saying this, he was putting him to the test; he himself knew well enough what he meant to do.” (John. 6:5,6)

Jesus wanted to feed all the people who were listening to His words Himself.

 Before doing it He wanted to test the faith of His Apostles.

He asked Philip from where they could get enough of bread to feed all the people.

 He expected an answer based on his faith.

Philip was His disciple and he was with Jesus when He turned water into wine at Cana to feed the people who had come for a marriage which Jesus attended with His mother and disciples.

 “Two days afterwards, there was a wedding-feast at Cana, in Galilee; and Jesus’ mother was there. 2 Jesus himself, and his disciples, had also been invited to the wedding.”(John. 2:1,2)

This miracle at Cana made His disciple believe in Him.

“ So, in Cana of Galilee, Jesus began his miracles, and made known the glory that was his, so that his disciples learned to believe in him.”

If Philip’s faith in Jesus had been real and strong, he should have answered, ‘You are God.

You can feed them Yourself without buying bread.’

 But did he give this answer? 

No.

Even Satan knew that God can change even stone into bread.

“If thou art the Son of God, bid this stone turn into a loaf of bread.” 

He knew that God had turned earth into man.

Instead of giving the expected answer, ‘Philip answered him, Two hundred silver pieces would not buy enough bread for them.’

So Philip failed in the test.

We are also Philips in this respect.

God tests our faith in a number of ways.

When we meet with problems in our life we should surrender ourselves before God in a strong belief that He will solve them.

We should not resort to solutions contrary to the will of God.

 Our problems are God’s test paper for us.

We cannot solve them ourselves.

Only God can solve them.

We should give Him a free hand.

 By solving them He will make us win the test.

I had a friend. (To put his name here I should first get his permission. But I have no time for that.)

He was very pious and strong in faith.

His parents compelled him to marry his sister’s daughter. But as it was against church rules he refused.

But his parents continued to compel him.

 To solve the problem he put his faith in God and escaped from his parents and went to one Rev. Father and served under him for a few years.

With the salary received from him he underwent teacher’s training and got appointment as a teacher in a R.C School.

As a teacher he married a teacher and settled well in life. God blessed him with a happy and prosperous life for not breaking a church rule.

His faith in God solved his life-problem.

Can worry solve a problem?

 No.

Then why should we worry?

But trust in God can solve all the problems in our life.

When we suffer in life we must remember how Jesus suffered for us.

His sufferings brought us salvation.

 We must offer our sufferings too for our salvation.

Our sufferings are only a test to our faith.

 If we offer them to God together with the sufferings of His Son Jesus, we win the test.

We will be rewarded with eternal life in union with God.

Lourdu Selvam.

Monday, June 17, 2024

திரு இருதய பக்தி.

திரு இருதய பக்தி.

இருதயம் நமது உடலின் மிக முக்கியமான உள்ளுருப்பு.

ஏன் மிக முக்கியமான?

இருதயம் இயங்கினால் தான் நமது உடல் இயங்கும், அதாவது, உயிரோடு இருக்கும்.

இருதயம் நின்று விட்டால் நமது இவ்வுலக வாழ்வு முடிந்து விடும்.

இருதயம் இயங்க மறுக்கும் நேரம் தான் நமது மரண நேரம்.

இருதயம் தனது இயக்கத்தினால் நமது இரத்தம் நமது உடலெங்கும் சுற்றி வருகிறது.

உடல் உறுப்பாகிய இருதயத்துக்கு ஒரு ஆன்மீக முக்கியத்துவம் இருக்கிறது.

உடல் உயிர் வாழ்வதற்கு மையமானது இருதயம்.

ஆன்மீக வாழ்வுக்கு மையமானது அன்பு.

 நமது வாழ்வுக்கு, 

அதாவது, நமது உடலும் ஆன்மாவும் சேர்ந்த வாழ்வுக்கு,

மையம் அன்பு தான்.

உடல் வாழ்வுக்கு மையமான இருதயத்தை அன்பின் இருப்பிடமாகப் பாவிக்கிறோம்.

டில்லி என்றவுடன் இந்தியா ஞாபகத்துக்கு வருவது போல,

சென்னை என்றவுடன் தமிழ்நாடு ஞாபகத்துக்கு வருவது போல,

இருதயம் என்றவுடன் அன்பு ஞாபகத்துக்கு வருகிறது.

அன்பின் இருப்பிடம் இருதயம்.

எதையாவது நினைத்துப் பார்க்கும்போது நமது மூளையில் உணர்ச்சி ஏற்படும்.

யாரையாவது அன்பு செய்யும் போது நமது இருதயத்தில் உணர்ச்சி ஏற்படும்.

இருதயம் என்றால் அன்பு.

அன்பு என்றால் இருதயம்.

கடவுள் அன்பு மயமானவர்.

இயேசு கடவுள்.

ஆகவே இயேசு அன்பு மயமானவர்.

இயேசு என்றவுடன் நினைவுக்கு வரவேண்டியது அன்பு.

இயேசுவின் அன்பு= இயேசுவின் இருதயம்.

இயேசுவின் இருதயம் = இயேசுவின் அன்பு.

 இயேசு நம் மீது கொண்டிருக்கும் அன்பின் மிகுதியால் 

அவரது பாடுகளின் போது சிந்திய இரத்தம் அவருடைய இருதயத்திலிருந்து வந்தது தான்.

மிகக் கொஞ்சமாக மீதியிருந்த இரத்தத்தையும் ரோமைப் படைத்தளபதி செந்தூரியன் ஒரு ஈட்டியால் குத்தி வெளியேற்றி விட்டான்.

 நமது கடவுள் மீது அன்பின்மை என்னும் பாவத்துக்குப் பரிகாரமாக இயேசுவின் இருதயம் ஈட்டியால் குத்தப்பட்டது.

இயேசு நம்மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பை நமக்குள் ஏற்றுவதற்காகத்தான் 

தாய்த் திருச்சபை நமக்கு இயேசுவின் திரு இருதய பக்தி இருக்க வேண்டுமென்று போதிக்கிறது.

இயேசுவின் அன்பும், நமது அன்பும் ஒன்றிணைய வேண்டும்.

இயேசுவின் அளவு கடந்த அன்பு நமது இருதயத்தை நிறப்பி பொங்கி வடிய வேண்டும்.

" என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது."
(திருப்பாடல்கள்.23:5)

கடவுள் தரும் விருந்து அவரின் அன்பு தான்.

நமது இருதயமாகிய பாத்திரம் நிரம்பி வழியும் அளவுக்கு அவரது அன்பை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

நமது மீட்பர் இயேசு.

அவர் நம்மை மீட்கக் காரணமாய் இருப்பது அவருடைய அன்பு.

அன்பில்லையேல் மீட்பு இல்லை.

இயேசுவின் அன்பின் மீது உள்ள பக்தி தான் இயேசுவின் திரு இருதய பக்தி.

நமது திரு இருதய பக்தியின் அடையாளமாகத்தான் நமது 
பங்குக் குரு மூலமாக நமது வீட்டில் திரு இருதயப் படத்தை ஸ்தாபித்திருக்கிறோம்.

அதாவது இயேசுவை நமது வீட்டின் அரசராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் இயேசுவின் திரு இருதய படத்தின் முன் குடும்பத்தோடு முழந்தாள் படியிட்டு செபம் சொல்ல வேண்டும்.

இயேசு நமது இல்லத்தை தனது அன்பினால் ஆள்பவர்.

இவ்வுலக அரசர்கள் தங்கள் அதிகாரத்தைக் கொண்டு நாட்டை ஆள்வதோடு

முப்படைகளின் உதவியுடன் அதை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கிறார்கள்.

இயேசு அரசரின் அதிகாரம் அவருடைய அன்பு.

நமது ஆன்மாவின் எதிரிகளிடமிருந்து நம்மைப் பாதுகாப்பதும் அவருடைய அன்பு தான்.

நமது அரசருக்கும் நமக்கும் இடையே உள்ள உறவும் அன்பு தான்.

நமது ஆன்மா உயிர் வாழ அவசியமான உணவும் இயேசுவின் அன்பு தான்.

தனது அன்புடன் தான் இயேசு தன்னையே நமக்கு உணவாகத் தருகின்றார்.

நமது ஆன்மா அன்பில் வளரும் போது நலம் பெறுகிறது.

பாவத்தினால் அன்பை இழக்கும் போது மரணம் அடைகிறது.

பாவ மன்னிப்பு பெறும் போது உயிர் பெறுகிறது.

சர்வமும் அன்பு மயம்.

இயேசுவின் திரு இருதயத்தின் மீது பக்தி உள்ளவர்கள் 

தங்கள் குடும்பத்தை முழுமையாக திரு இருதயத்துக்கு ஒப்புக் கொடுத்து விடுவார்கள்.

முழுமையான அன்புடன் இயேசுவுக்காக மட்டும் வாழ்வார்கள்.

முழுமையான அன்புடன் வாழ்ந்தால் 

குடும்ப உறுப்பினர்களிடையே அன்புக்கு எதிரான எந்த உணர்வும் இருக்காது.

அன்பின் குழந்தைகளான இரக்கம், கனிவு, பொறுமை, மன்னிக்கும் தன்மை, விட்டுக் கொடுக்கும் தன்மை போன்ற பண்புகளால் நிறப்பப்பட்டிருப்பார்கள்.

இவற்றுக்கு எதிர்ப் பண்புகள் எதுவும் அவர்களிடம் இருக்காது.

எல்லோரும் அன்பினால் இயக்கப் படுவதால் குடும்பத்திலும், பக்கத்து வீட்டாருடனும் சண்டை, சச்சரவு, கோள், புறணி போன்ற 

அன்புக்கு எதிரான எதுவும் இருக்காது.

இயேசுவோடு இணைந்த இவர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்.

முன்மாதிரியாக வாழ்வது என்றால் வாழ்க்கை மூலம் நற்செய்தியை அறிவித்தல் என்று பொருள்.

இவர்களைச் சுற்றி வாழ்வோரிடமும் திரு இருதய பக்தி பரவும்.

விண்ணகப் பேரின்ப வாழ்வின் போது இவர்களின் முன்மாதிரிகையால் மனம் திரும்பிய ஒரு சமூகமே இவர்களுடன் வாழும்.

நாம் அனைவரும் இயேசுவின் திரு இருதயத்துக்கு நமது கூடும்பங்களை ஒப்புக் கொடுத்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.

I am Bible speaking.

        I am Bible speaking.

 

First I must introduce myself as exactly what I am, because many people fail to identify me as I am.

They mistake what I am not as me due to their ignorance.

Let me explain. What am I?

I am the ‘word’ of God. 

By word I refer to the ‘message’ that God intends to give you.

I say this first because ‘word’ has another reference also.

‘The word’ refers to the Son of God.

“In the beginning was the Word: and the Word was with God: and the Word was God.” (John.1:1) 

Here ‘The Word’ refers to the Son of God , The Second Person of the Holy Trinity, who became man to amend for our sins .

“And the Word was made flesh and dwelt among us (and we saw his glory, the glory as it were of the only begotten of the Father), full of grace and truth.”( John. 1:14) 

        1. ‘The word’ is God.

       2. ‘Word’ is His message.

In this article, ‘Bible’ refers the message of God.

Hope I am clear: I am the message of God.

I was translated into human language through the inspiration of the Holy Spirit.

Though human beings wrote me in their language, Holy spirit is my real Author.

I am a concept.

To be able to be communicated to all the people first I took a linguistic form and then I was put down into writing.

The book that contains me is also called Bible.

 But neither the book nor the words found in it is me.

It is the message that the words convey is me.

The trouble is many people carry ‘The book’ with them when they go to church, but don’t care about me (The message).

They read the words without grasping the real message they convey.

 Some people interpret me according to their own whims and fancies and use me to suit their own purpose.

Such people don’t use me; they misuse me.

Before proceeding further I must make one thing clear.

The first part of me was written by prophets in order to predict the birth, life, death and resurrection of Jesus.

The second part of me was written by the disciples of Jesus to give you His message.

So the whole of me revolves around Jesus.

 Jesus is my centre.

He being my centre and His being all the messages, He alone knows the correct interpretation of the messages contained in me.

Before His ascension into Heaven He passed on the power of spreading His message to His Apostles.

“ Then he enlightened their minds, to make them understand the scriptures;” (Luke.24:45)

The enlightenment is for interpreting me correctly.

  “19.Therefore, go forth and teach all nations, baptizing them in the name of the Father and of the Son and of the Holy Spirit,

20. teaching them to observe all that I have ever commanded you. And behold, I am with you always, even to the consummation of the age.". .(Matthew.28:19,20)

Jesus empowered Peter to feed His lambs, tend His shearlings and feed His sheep. .(John. 21:15-17)

The authority to preach His message with correct interpretation was given to His Apostles headed by St. Peter on whom Jesus built His Church. 

It goes without saying that they are the ones who were empowered to interpret the message.

So, only the Catholic Church, under the leadership of the Pope, who is the successor of St. Peter, has the right to interpret me.

 Interpretations of those who are outside the Catholic Church need not be correct.

 So please come into the Catholic Fold to understand me as Jesus intended me to be understood.

Lourdu Selvam.

Sunday, June 16, 2024

நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?"(மத்தேயு.5:47)

" நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?"
(மத்தேயு.5:47)

நடை உடை பாவனைகளில் சிறு பிள்ளைகளுக்கும், பெரியவர்களுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும்.

சிந்தனை சொல் செயலில் படித்தவர்களுக்கும், படியாதவர்களுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும்.

ஒரு பள்ளிக்கூட மாணவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டவே அவர்களுக்கு சீருடை (Uniform dress) கொடுத்திருக்கிறார்கள்.

இயேசுவைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்களுக்கும்,
உலகைப் பின் பற்றுபவர்களுக்கும் வாழ்க்கை முறைகளில் வித்தியாசம் இருக்க வேண்டும்.

நான் கிறிஸ்தவன் என்று கூறிக்கொண்டு கிறிஸ்துவை அறியாதவர்களைப் போல் வாழலாமா?

இயேசுவின் நற்செய்தியை விசுவசித்து அதன்படி வாழ்பவன் தான் கிறிஸ்தவன்.

"எளிய மனத்தோர் பேறுபற்றோர்" என்பது நற்செய்தி.

எளிய மனத்தோர் என்றால் உலகப் பொருட்கள் மீது பற்றில்லாதவர்கள் என்பது பொருள்.

நாம் பயன்படுத்துவதற்காக இறைவன் உலகைப் படைத்திருக்கிறார்.

பயன்படுத்துவது வேறு, பற்று வைத்திருப்பது வேறு.

பற்று என்றால் ஆசை.

சுகம் இல்லாதவன் சுகம் பெறுவதற்காக மாத்திரைகளைச் சாப்பிடுகிறான், அவற்றின் மீது உள்ள ஆசையினால் அல்ல.

உணவு உண்பவன் உடல் வளர்ச்சி பெறுவதற்காக உண்ண வேண்டும்.

உணவின் மீது உள்ள ஆசையினால் சாப்பிட்டுக் கொண்டே இருக்கக் கூடாது.

உணவின் மீது உள்ள ஆசையினால் அளவுக்கு மீறி உண்பவன் போசனப்பிரியன்.

போசனப்பிரியம் தலையான பாவங்களில் ஒன்று.

உணவு ஒரு உலகப் பொருள்.

அதை கடவுள் தந்த உடலைப் பேணப் பயன்படுத்துவது ஆன்மீகம்.

அதை ஆன்மீக நோக்கம் இல்லாமல் ருசியினால் கிடைக்கும் இன்பத்திற்காக மட்டும் பயன்படுத்துவது லௌகீகம்.

கிறிஸ்தவர்கள் ஆன்மீக வாதிகள்.

கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு லௌகீக வாழ்வு வாழலாமா?

சிந்திப்போம்.

"ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்."
(மத்தேயு.5:44)

இது நற்செய்தி,

 வாசிப்பதற்காக மட்டுமல்ல,

வாழ்வதற்கும் ஆனது.
 

பகைவர்களை நேசிப்பவன்தான் நற்செய்தியை வாழும் கிறிஸ்தவன்.

நேசத்தை சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்ட வேண்டும்.

நம்மைப் பகைப்பவர்கள் நம்மைத் துன்புறுத்துவார்கள். இது பகைமையின் இயல்பு.

ஆனால் அன்பின் இயல்பு அவர்களை நேசிப்பதும், அவர்களுக்கு உதவி செய்வதும் தான்.

நமது நலனுக்காகக் கடவுளை வேண்டுவதுபோல நம்மைப் பகைப்பவர்களின் நலனுக்காகவும் கடவுளிடம் வேண்ட வேண்டும்.

சிலுவையில் தொங்கும் போது இயேசுவும் அதைத் தான் செய்தார்.

நாமும் அதையே செய்ய வேண்டும்.

''ஆண்டவரே, எங்களைத் துன்புறுத்துபவர்களை  மன்னிப்பதன் மூலம் 

நாங்கள் உமது சீடர்கள் என்பதை உறுதி செய்கிறோம்.

எங்களுக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல 

நாங்கள் உமக்கு விரோதமாக செய்த பாவங்களை மன்னித்தருளும்."

நாம் பாவிகள்.

கடவுள் பரிசுத்தர்.

பரிசுத்தராகிய கடவுள் பாவிகளாகிய நம்மை நேசிக்கிறார்.

பாவிகளாகிய நாம் சக பாவிகளாகிய நமது பிறரை நேசிப்பது முற்றிலும் முறையானது.

'அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்."
(மத்தேயு.5:9)

"சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர்."

இது நற்செய்தி.

அனைவரையும், "உங்களுக்கு சமாதானம் உண்டாகுக" என்று முழு மனதுடன் வாழ்த்துவதன் மூலமும்,

அனைவருடனும் சமாதானமாக வாழ்வதன் மூலமும்

இந்த நற்செய்தியை வாழ்வோம்.

லூர்து செல்வம்.

I am not joking!

      I am not joking!

Parish Priest, “When you come for next Sunday Mass, each head of the family should bring with him a cross to be blessed; the blessed cross must be placed on a prominent place in the house.”

One gentle man forgot to bring a cross.

At a particular point of time during the Mass the Priest said, “Lift up your cross.” 

All those who had brought the crosses lifted them.

Our gentleman didn’t know what to do.

 Suddenly reacting to a thought that flashed in his mind, he caught hold of his wife who was on her knees by his side and lifted her up with both his hands.

 The people around him were astonished. How dared he to accept such a truth in public!

This is not a joke!

The rightness or wrongness of what our gentleman did is a different question .The reality contained in this incident is that the cross we have to carry in our life may be in different forms. As per Our Lord’s instruction, we have to take up our cross and follow Him.          

 Jesus also said to his disciples, If any man has a mind to come my way, let him renounce self, and take up his cross, and follow me.(Matthew.16:24”)

             Jesus came to this world to sacrifice Himself on the Cross as atonement for our sins.

He carried the Cross Himself to Mount Calvary to be crucified there.

On the way of the Cross one Simon helped Him a bit.

Just as Jesus carried His Cross, we, His followers, should carry our crosses.

By cross Jesus does not refer to the wooden Cross that He carried. 

He refers to the sufferings in our life.

There is no one in this world without suffering in one form or other.

  We must accept the suffering for the love of Jesus.

We must remember that Jesus accepted His Cross out of love for us. 

We too must carry our cross out of our love for Jesus.

Jesus has asked us to carry ‘our cross’.

 I have stressed ‘our cross’.

We need not go in search of a cross to carry.

It is more than enough if we carry the cross that comes on our way.

The cross that comes across us is our cross. It may be in different forms.

It may be in the form of people we meet with, the things we use, physical illness and failures.

Whatever is against our wish is a cross.

The people around us may think and act against our wish; that may result in our physical or mental pain.

We must accept that pain for the love of Jesus and offer it to God as atonement for our sins.

 Any act of our neighbours, whether they are our family members, relatives or friends, which give us physical or mental pain, may be offered to God as atonement for our sins.

 Even failures in our life can be turned into meritorious acts if we offer them to God.

Suppose we fail in our school examinations, in spite of our hard work, we can accept it as God’s will and offer it for His greater glory and thus turn our worldly failures into spiritual success. The failure is a cross that offers itself to be carried by us in our spiritual journey.

 Cross may come in the form of physical illness. We must bear it patiently and offer it to God, turning our physical pain into spiritual joy.

 Whatever is against our temporal welfare can become supportive to our spiritual welfare if we carry it as a cross and follow Jesus.

Jesus carried His cross to redeem us.

Let us carry our cross to be redeemed by Jesus.

Lourdu Selvam.