Friday, December 30, 2022

மரியாள் கடவுளின் தாய்.


மரியாள் கடவுளின் தாய்.

"தாத்தா, அன்னை மரியாள் நமது மீட்பர் இயேசுவின் தாய்.

இயேசு மெய்யாகவே கடவுள், மெய்யாகவே மனிதர்.

தேவசுபாவத்தில் அவர் துவக்கமும், முடிவும் இல்லாதவர்.

மனித சுபாவத்தில் பிறப்பும் மரணமும் உள்ளவர். 

துவக்கமும், முடிவும் இல்லாத இறைமகன் மரியாளின் வயிற்றில் மனிதவுரு எடுத்து, மனிதனாய்ப் பிறந்தார்.

இயேசு மரியாளின் வயிற்றில் மனிதவுரு எடுத்து, மனிதனாய் பிறந்ததால் அவள் மனிதனின் தாய் தானே,

 அவளை ஏன் கடவுளின் தாய் என்று அழைக்கிறோம்?"

"'உனது கேள்வியிலேயே பதில் இருக்கிறதே.

கன்னி மரியின் வயிற்றில் மனு உரு எடுத்தது யார்?"

"கடவுளாகிய இறைமகன்."

"'ஒரே வார்த்தையில் சொல்லு."

"கடவுள். "

"'மரியாளின் வயிற்றில் கடவுள் மனுவுரு எடுத்தார். சரியா?"

"சரி."

""மரியாளின் வயிற்றிலிருந்து
கடவுள் மனிதனாகப் பிறந்தார். சரியா?"

"சரி."

"'மனிதனாகப் பிறந்தது யார்?"

"கடவுள்"

"' கடவுள் மரியாள் மூலமாக  மனிதனாகப் பிறந்ததால் மரியாள் கடவுளின் தாய் தானே."

"ஆனால், தாத்தா, கடவுள் மனிதனாகத் தானே பிறந்தார்.

கடவுளாகப் பிறக்கவில்லையே.

அப்போ மனிதனின் தாய்தானே."

"'நன்கு கவனி.

இறைமகன் ஒரே ஆள், இரண்டு சுபாவங்கள்.

தேவ ஆளுக்கு தேவ சுபாவம், மனித சுபாவம் ஆகிய இரண்டு சுபாவங்கள்.

எந்த சுபாவத்தில் செயல்பட்டாலும் செயல்படுவது தேவ ஆள் தான்.

தேவ ஆளாகிய இறைமகன் மனித சுபாவத்தில் கன்னிமரியின் வயிற்றில் பிறந்தார்.

நன்கு கவனி.

பிறந்தது தேவ ஆளாகிய இறைமகன்.

தேவ சுபாவத்தில் பிறக்கவில்லை,

 மனித சுபாவத்தில் பிறந்தார்.

எந்த சுபாவத்தில் பிறந்தாலும் பிறந்தது இறை மகன் ஆகிய தேவ ஆள்தான்.

பெற்றவள் கன்னி மரியாள் தான்.

மரியின் வயிற்றில் மனிதனாக உரு எடுத்தது இறை மகனாகிய கடவுள்.

கடவுள் மனித உரு எடுத்தார்.

கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

கடவுள் மனிதனாக வளர்ந்தார்.

கடவுள் மனித சுபாவத்தில் நமக்காகப் பாடுபட்டார்.

கடவுள் மனித சுபாவத்தில் நமக்காகச் சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

கடவுள் தேவ சுபாவத்தில் பாடுகள் பட்டு மரிக்க முடியாது என்பதால் தான்,

மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு மரித்தார்.

கடவுள் நம் மீது கொண்ட அளவில்லாதபாடுகள் அன்பின் காரணமாக 

நாம் செய்த பாவங்களுக்கு அவரே பரிகாரம் செய்ய தீர்மானித்தார்.

தேவ சுபாவத்தில் பாடுகள் பட்டு, மரித்து பரிகாரம் செய்ய முடியாது. 

ஆகவேதான் மனித சுபாவத்தில் பாடுகள் பட்டு, மரித்து பரிகாரம் செய்தார்.

மனித சுபாவத்தில்  பாடுகள்  பட்டு மரித்து பரிகாரம் செய்யக் கடவுள் மரியாளின் வயிற்றிலிருந்து பிறந்ததால் மரியாள் கடவுளின் தாய் தான்.

புரிகிறதா? புரியவில்லையா?"

"உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.

அவர் மேன்மை மிக்கவராயிருப்பார்.

 உன்னதரின் மகன் எனப்படுவார்.''

கபிரியேல் தூதர் மரியின் வயிற்றில் கருத் தரிப்பது உன்னத கடவுளின் மகன் என்பது நன்கு புரிகிறது,

இயேசு கடவுளாகையால் அவரைப் பெற்றவர் கடவுளின் தாய்தான்."

"'மரியாள் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள்.

கடவுள் பரிசுத்தர்.

பரிசுத்தரான கடவுளை வயிற்றில் தாங்க  வேண்டியதிருந்ததால் கடவுள் தனது தாயையும் பரிசுத்தராகவே படைத்தார்.

தனது தாயின் வயிற்றில் மரியாள் சென்பப் பாவ மாசு மரு இன்றி உற்பவித்துப் பிறந்தாள்.

தனது வாழ்நாளிலும் ஒரு சிறு பாவம் கூட மரியாள் செய்ததில்லை.

ஆகவே அவளை "அருள் நிறைந்த மரியே" என்று அழைக்கிறோம்.

அருளால் நிறைந்த அவளுடைய இருதயத்தில் ஒரு சிறு பாவ மாசு கூட இருக்க முடியாது.

இருந்தால் அவளை அருள் நிறைந்தவள் என்று கூற முடியாது.

இயேசு நற்செய்தி அறிவித்த காலத்தில் 

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத். 5:48)
என்று சொன்னார்.
 
தான் பின்னால் சொன்னது போல தனது தாயை நிறைவுள்ளவராய்ப் படைத்தார்.

 இயேசு கூறியபடி 

நமது வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, 

நாமும் இருக்க வேண்டுமென்றால்

நமக்கும் தாயாகிய அன்னை மரியாளைப் போல நாமும் வாழ வேண்டும்.

மரியாளைப் பொருத்தமட்டில் 
பிள்ளையைப் போல தாய்.

நம்மை பொருத்தமட்டில் தாயைப் போல் பிள்ளை. 

நாம் நமது தாயைப்போல வாழ்ந்தால்,

நாம் இயேசுவின் ஆசைப்படி மாறுவோம். 

நாசரேத் ஊரில் தாயின் சொற்படி  நடந்த இயேசு,

கானாவூர் திருமணத்தில் தாயின் சொல்லைத் தட்டாத இயேசு

விண்ணகத்திலும் தாயின் சொல்லைத் தட்ட மாட்டார்.

இயேசுவிடம் கேட்க வேண்டியதை தாயின் மூலம் கேட்போம்.

அவள் மூலம் கடவுளிடம் கேட்பது உறுதியாகக் கிடைக்கும்.

"சிலுவையடியில் எங்களைப் பெற்றெடுத்த அன்னையே,

 மாட்டுத் தொழுவத்தில் பெற்றெடுத்த உமது திருமகனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment