Sunday, December 11, 2022

பெத்லகேமிலிருந்து எகிப்துக்கு.(தொடர்ச்சி)

பெத்லகேமிலிருந்து எகிப்துக்கு.
(தொடர்ச்சி)

,"மற்றொரு நாள் திருக்குடும்பத்தை  சில திருடர்கள் வழி மறித்திருக்கிறார்கள்.

வழிப்போக்கர்களிடமிருந்து அகப்பட்டதைச் சுருட்டுவது தான் அவர்களுடைய வாழ்க்கை. 

அதற்காகத்தான் திருக் குடும்பத்தை அவர்கள் மறித்தார்கள்.

நெருங்கி வந்த போது ஒரு திருடன் அன்னை மரியாளின் கையில் இருந்த குழந்தையைப் பார்த்தான்.

அதன் அழகு அவனைக் கவர்ந்தது.

அன்னையைப் பார்த்து,

"குழந்தையை ஒரு நிமிடம் என்னிடம் தருகின்றீர்களா. அதற்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு திருப்பி தருகிறேன்." என்றான்.

குழந்தை இயேசு அவனைப் பார்த்து புன்முறுவல் பூத்தார்.

அன்னை மரியாளும் பயப்படாமல் குழந்தையை அவனிடம் கொடுத்தாள்.

அவன் குழந்தையை கையில் வாங்கி அதன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்.

"அம்மா நாங்கள் திருடர்கள்.

 உங்களிடம் ஏதாவது இருந்தால் பறிப்பதற்காகத்தான் உங்களை மறித்தோம். 

ஆனால் குழந்தையைப் பார்த்தவுடன் அதற்குச் சொந்தமான  உங்களிடம் உள்ளதை பறிக்க விரும்பவில்லை." 

என்று கூறி குழந்தையை அன்னையிடம் கொடுத்தான்.

அன்னை மரியாள் அவனைப் பார்த்து,

''நீ செய்த உதவியை என் மகன் மறக்க மாட்டார். திருட்டுத் தொழிலை விட்டு விடுங்கள்"

திருடர்கள் அவர்களை விட்டு விட்டார்கள். ஆனால், தொழிலை விடவில்லை.

ஆனாலும் இயேசு அவருக்கு முத்தம் கொடுத்தவனை மறக்கவேயில்லை.

அந்த திருடனைப் பார்த்துதான் இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது,

"இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்" என்று சொன்னார்!"

"நாம் செய்யும் ஒரு மிகச்சிறிய நற்செயலையும் இயேசு மறக்க மாட்டார்."

 அவருடைய சீடர் என்பதற்காக நமது அயலானுக்கு ஒரு டம்ளர் தண்ணீரைக் கொடுத்தால் கூட அதை நமது ஆண்டவர் நித்திய காலமும் மறக்க மாட்டார்."

"தாத்தா, திருக்குடும்பம் எத்தனை நாட்களில் எகிப்துக்கு சென்றிருக்கும்?"

",தெரியவில்லை. கணக்குப் பார்க்கவும் முடியாது. 

மொத்த தூரத்தை அவர்கள் நடந்த வேகத்தால் வகுத்தால் பிரயாண நேரம் கிடைக்கும். அது கணக்குக்கு.

முழு தூரத்தையும் ஒரே வேகத்தில் நடக்க அவர்கள் இயந்திரம் அல்ல.

நிறைய நாட்கள் ஆகி இருக்கும்.

எகிப்துக்குச் சென்ற பின் அங்கு மூன்று ஆண்டுகள் தங்க வேண்டியிருந்தது."

"மூன்று ஆண்டுகளும் ஒரே இடத்திலா தங்கினார்கள்?"

", இல்லை. அது அவர்களுக்கு வெளிநாடு.

ஆகவே அகதிகளாகவே அங்கு வாழ்ந்தார்கள்.

 இடம் பெற்று இடம் சென்று அங்கங்கே சில நாள் தங்கினார்கள், 

சூசையப்பர் அங்கங்கே கிடைக்கும் வேலையைச் செய்து மரியாளையும் குழந்தையையும் காப்பாற்றினார்.

நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக நம்மை படைத்தவர் தானே தன் மீது அனேக கஷ்டங்களை வரவழைத்துக் கொண்டார்.

நாமும் பாவங்களுக்கு பரிகாரமாக கடினமான வாழ்க்கை வாழ்ந்து அதை நம்மைப் படைத்தவருக்கு ஒப்புக்கொடுத்தால்தான் நமக்கு மீட்பு எளிதில் கிடைக்கும்.

இதை இயேசு குழந்தையாக இருக்கும்போதே நமக்கு வாழ்ந்து காட்டினார்.''

"எப்போது ஊருக்கு திரும்பினார்கள்?"

",ஏரோது மன்னன் இறந்து விட்டான் என்ற செய்தியை வான தூதர் மூலம் அறிந்து ஊருக்குத் திரும்பினார்கள்.

ஆனால் ஏரோதுவின் மகன் கொடுங்கோலனான அர்கெலாவு யூதேயாவை ஆள்வதாக கேள்விப்பட்டு,

வானதூதரின் அறிவுரைப்படி கலிலேயாவில் உள்ள நாசரேத்துக்கு வந்து அவர்கள் இல்லத்தில் வாழ்ந்தார்கள்.

சூசையப்பர் அவரது தொழிலாகிய தச்சு தொழிலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார்."

"தாத்தா, இயேசு தன்னுடைய ஒவ்வொரு செயலையும் நித்தியகால திட்டத்தின்படி தான் செய்வார்.

ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு காரணம் இருக்கும்.

நம் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பை நமக்கு வெளிப்படையாக காட்டுவதற்காக பாடுகள் பட்டு மரிக்க நித்திய காலமாக திட்டமிட்டார். 

அதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் மூன்று ஆண்டுகள் எகிப்தில் அகதிகள் போல வாழ வேண்டும் என்று ஏன் திட்டமிட்டார்.

பெத்லகேமில் பிறந்து நேரடியாக நசரேத்துக்கு வந்திருக்கலாமே.

உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?"

",அளவில்லாத ஞானமுள்ள கடவுளின் திட்டங்களை புரிந்து கொள்ள முயல்வது அளவுள்ள நம்மால் இயலாத காரியம்.

நமது வாழ்வில் அவர் போடும் திட்டங்களைக் கூட நம்மிடம் அவர் முன்கூட்டியே தெரிவிப்பதில்லை.

திட்டங்களில் விளைவினை பார்த்த பிறகு தான் நமக்குப்  புரியும்.

நீ கேட்ட கேள்விக்கு உரிய பதிலை யூதிக்க வேண்டுமானால் செய்யலாம்.

நமது யூகம் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது."


" தாத்தா, பொடியன் நான் கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கிறேன்.

கடவுளுக்கு விரோதமாக நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்வதற்காகத்தான் இறை மகன் மனு உரு எடுத்தார்.

விதவிதமான பாவங்களுக்கு விதவிதமாக அவரே பரிகாரம் செய்தார்.

உலகில் பெரும்பான்மையான பாவங்கள் கீழ்படியாமையினால்தான் செய்யப்படுகின்றன.

அதற்கு பரிகாரம் செய்யும் முகமாகத்தான் சர்வ வல்லவர் கடவுள் முப்பது ஆண்டுகள் தன்னைப் பெற்ற அன்னை மரியாளுக்கும் வளர்த்த சூசையப்பருக்கும் கீழ்ப் படிந்து வாழ்ந்தார்.

நமது அறியாமையால் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக ஆன்மீக அறிவூட்டும் விதமாக மூன்று ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்தார்.

இறைவனுடைய சித்தத்தை அறிந்திருந்தும் அதை நிறைவேற்ற நாம் தயங்குவதற்குப் பரிகாரமாக பூங்காவனத்தில் ரத்த வியர்வை வியர்த்தார்.

"என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்" என்று நமக்கு அறிவுரையாக அவரே செபித்தார்.

உடலினால் நான் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக கற்றூணிலே கட்டப்பட்டு உடல் முழுவதும் அடி வாங்கினார்.

நமது சிந்தனை, பார்வை, கேள்வி, பேச்சு, நுகர்வு சம்பந்தமாக நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக
மூளை, கண், காது, வாய், மூக்கு ஆகிய உறுப்புகள் உள்ள தலையில் முள் முடி சூட்டப்பட்டு அடிபட்டார்..

நமக்கு இறைவன் அனுப்புகின்ற சிலுவைகளிலிருந்து நாம் தப்பிக்க முயற்சி செய்வதற்கு பரிகாரமாக பாரமான சிலுவையைச் சுமந்தார்.

உலகம் முழுவதும் வாழும் சகலவிதமான மக்களும் செய்த எல்லாவிதமான பாவங்களுக்கும் பரிகாரமாகத்தான் சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

இன்னும் ஒரு பாவம் பாக்கி இருக்கிறதே, அதை நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்."

",பொடியன் நீயே சொல்லிவிடு."

"கத்தோலிக்க திருச்சபையிலே பிறந்து வளர்பவர்களில் சிலர் பிற சபைகளின் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டு

 அவர்களுடைய கூட்டங்களுக்குச் சென்று தாங்கள் பிறந்த சபைக்கு துரோகம் இழைக்கிறார்களே 

அவர்கள் செய்து கொண்டிருக்கிற பாவங்களுக்கு பரிகாரமாகத்தான்

 இயேசு அவர் பிறந்த நாடாகிய யூதேயாவை விட்டு 

ஒரு காலத்தில் யூதர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த

 எகிப்து என்னும் பிற நாட்டில் மூன்று ஆண்டுகள் பல கஷ்டங்கள் பட்டு 

குடும்பத்தோடு அகதியாக வாழ்ந்து பரிகாரம் செய்தார். 


ஆக மனுக்குலம் செய்த அத்தனை பாவங்களுக்கும் இயேசு பரிகாரம் செய்தார்.

அவர் செய்த பரிகாரத்தை ஏற்றுக் கொண்டு தந்தை இறைவன் நாம் செய்கின்ற பாவங்களை மன்னிக்கிறார்."

",அப்போ நாம் பரிகாரம் செய்ய வேண்டாமா?''

"நாம் செய்த பாவங்களுக்கு நாமும் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்,

நமது சிலுவையை நாம் சுமந்து,
 நமக்காக சிலுவையைச் சுமந்த அவரை பின்பற்ற வேண்டும் என்று இயேசு சொல்லியிருக்கிறார்."

", Very good. நாம் இயேசுவை விசுவசித்தால் மட்டும் போதாது.

பாவப் பரிகாரமாக நற்செயல்கள் புரிந்து இறைவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ வேண்டும்.

விசுவசிப்போம். 

பாவப்பரிகார வாழ்வு வாழ்வோம்.

பாவங்களுக்கு மன்னிப்பு பெறுவோம்.

இயேசுவின் துணையோடு விண்ணக வாழ்வுக்கு ஏற்றவர்களாக மாறுவோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment