Monday, December 12, 2022

இயேசுவும், ஏழ்மையும்.

இயேசுவும், ஏழ்மையும்.

"தாத்தா, இயேசு ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாக மரித்தார் என்று கூறுகிறீர்கள். உண்மையிலேயே இயேசு ஏழையா?"

", ஏன் இந்த சந்தேகம்?"

" இயேசு மனிதனாக மட்டும் இருந்தால் இந்த சந்தேகம் வராது.

ஆனால் இயேசு கடவுள்.

முழுமையாக கடவுள். (Fully God)

அவரால் படைக்கப் பட்டவை அனைத்தும் அவருக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும்போது அவர் எப்படி ஏழையாக இருக்க முடியும்?"

",அவர் முழுமையாக மனிதன் (Fully man) என்பதை மறந்து விட்டாயா?"

''அதெப்படி மறக்க முடியும்?

ஆனாலும் முழுமையான மனித சுபாவத்துக்கு உரிய அவர் தேவ ஆள்தானே.

ஒரே கடவுள் மூன்று ஆட்கள்.

அதாவது 

சுபாவம் ஒன்று, ஆட்கள் மூன்று.

ஒரே தேவ சுபாவம், 
மூன்று தேவ ஆட்கள்.

இயேசுவைப் பொறுத்த மட்டில்,

ஆள் ஒன்று, சுபாவம் இரண்டு.

ஆள் - பரிசுத்த தமதிரித்துவர்வத்தின் இரண்டாம் ஆள்.

சுபாவங்கள் - தேவ சுபாவம்.
                           மனித சுபாவம்.
                   
தமதிரித்துவர்வத்தின் இரண்டாம் ஆளாகிய இறைமகன்தான் மனிதனாகப் பிறந்தார்.


மனிதனாகப் பிறந்தவர் கடவுள்.
சகலத்தையும் படைத்த கடவுள்.

"ஆதியிலே வார்த்தை இருந்தார்:

 அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார்,

 அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்.

அவர் ஆதியிலே கடவுளோடு இருந்தார்.

 அவர்வழியாகவே அனைத்தும் உண்டாயின: உண்டானதெதுவும் அவராலேயன்றி உண்டாகவில்லை."
(அரு.1:1-3)

தாத்தா நல்லா கவனியுங்க.

"அவர்வழியாகவே அனைத்தும் உண்டாயின: உண்டானதெதுவும் அவராலேயன்றி உண்டாகவில்லை."

சகலத்தையும் படைத்த வார்த்தை தான் மனிதனாய்ப் பிறந்தார்.

அப்படியானால் படைக்கப்பட்ட அனைத்துக்கும் உரிமையாளர் மனிதனாய் பிறந்த கடவுள் தானே.

படைக்கப்பட்ட அனைத்துக்கும் உரிமையாளரை எப்படி ஏழை என்கிறீர்கள்?"

", பேரப்புள்ள, பைபிள் மனித மொழியில் எழுதப்பட்ட இறைவாக்கு.

இறைவாக்குக்கு உரிய பொருளை
இறைவாக்கின் மூலமாகத்தான் பார்க்க வேண்டும்.

"Blessed are the poor in spirit.''
"எளிய மனத்தோர் பேறுபெற்றோர்."

மனதில் எந்த பொருள் மீதும் பற்று இல்லாதவர்கள் தான் இறைவாக்கின் படி ஏழைகள்.

அவர்கள் பாக்கியவான்கள்.

உனது அப்பா எங்கே பணிபுரிகிறார்?"

"Bank ல."

", அங்கே என்ன வேலை?"

''Cashier."

",வங்கி பணம் எல்லாம் அவர் மூலமாகத்தான் உள்ளே போகும் வெளியே வரும். சரியா?"

"சரி."

",அவர் வழியாக எத்தனை கோடிகள் உள்ளே போனாலும் வெளியே வந்தாலும் அவருக்கு அந்த பணத்தின் மீது பற்று இருக்கலாமா? அதை தனது பணம் என்று அவரால் கூற முடியுமா?"

"நிச்சயமாக அந்த பணத்தின் மீது அவருக்கு எந்த உரிமையும் இல்லை.

உரிமை இல்லாத பொருள் மீது எப்படி பற்று இருக்க முடியும்?"

",நீ இந்த உலகில் பிறந்திருக்கிறாய்.

இந்த உலகின் மீது உனக்கு எவ்வளவு உரிமை உண்டு?"

"எந்தவித உரிமையும் இல்லை.
 உலகில் வாழும் வரைக்கும் 
அதை பயன்படுத்திக் கொள்ள மட்டும் உரிமை உண்டு."

",உலகின்மீது நீ உரிமை கொண்டாடினால், உன்னை என்னவென்று அழைக்கலாம்?"

"சொந்தமில்லாத பொருள் மீது உரிமை கொண்டாடினால் என்னை திருடன் என்று கூட அழைக்கலாம்."

",உலகில் அநேகர் கடவுளுக்கு சொந்தமான உலகப் பொருட்களை தங்களுக்கு சொந்தம் என்று நினைக்கிறார்களே அவர்களைப் பற்றி உன் கருத்து என்ன?"

"கடவுளுக்கு துரோகம் செய்பவர்கள், துரோகிகள்."

",உலகப் பொருள்கள் மீது உனக்கு பற்று உண்டா இல்லையா?" 

"அதாவது நான் துரோகியா,
 இல்லையா என்று கேட்கிறீர்கள்.

நிச்சயமாக துரோகி இல்லை.

நான் கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல் நீங்கள் பேசிக் கொண்டிருப்பது போல் தெரிகிறது.

நான் கேட்டது உலகை படைத்த இயேசுவை பற்றி.

உலகம் முழுவதும் அவருக்கு உரியது.

உலகின் சொந்தக்காரரை எப்படி ஏழை என்று அழைக்கிறீர்கள் என்றுதான் கேட்டேன். 

அதற்குத்தான் பதில் வேண்டும்."

",பேரப்புள்ள, எதற்கும் அவசரப்படக்கூடாது.

மாவிதையை பூமியில் போட்ட உடனே மாம்பழம் வந்து விடாது.

இயேசு மனிதனாய் பிறந்தது நம்மை பாவத்திலிருந்து மீட்டு விண்ணகத்திற்கு அழைத்துச் செல்ல.

நமது பாவங்களுக்கு காரணமே இவ்வுலக பொருட்கள் மீது நமக்குள்ள பற்று தான்.

அதுதான் இறைவன் மீது நமக்கு இருக்க வேண்டிய பற்றினை இல்லாமல் செய்து விடுகிறது.

உலகத்திற்கு ஊழியம் செய்பவனால் இறைவனுக்கு ஊழியம் செய்ய முடியாது.

இறைப்பணிக்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்தவன் உலகத்தின் மீது பற்று வைக்க மாட்டான்.

இயேசு தான் போதித்ததை தனது வாழ்வில் செய்து காட்டி முன்மாதிரிகையாக வாழ்ந்தார்.

உலக பொருள்களின் மீது பற்று இல்லாமல் நாம் வாழ வேண்டுமானால் அவரும் வாழ்ந்து காட்ட வேண்டும்.

நாம் எப்போது ஒரு பொருளின் மீது பற்று வைப்போம்?"

"அது நமக்குத்
 தேவைப்படும் போது."

 ",நடந்து போகும்போது வழியில் சாணி கிடக்கிறது. அதன் மேல் உனக்கு ஆசை வருமா?"

"வராது. அது எனக்குத் தேவையில்லை."

",கடவுள் நிறைவானவர். 

நாம் நம்மிடம் கொஞ்சம் இருப்பதை அதிகப்படுத்துவதற்காகத் தான் 
ஆசைப்படுகிறோம்.

நிறைவை அதிகரிக்க முடியாது.

தனது தேவையை பூர்த்தி செய்ய அவர் உலகை படைக்கவில்லை.

அளவு கடந்த அவரது அன்பை பகிர்ந்து கொள்வதற்காகத்தான் மனிதனை படைத்தார்.

மனிதனும் அன்பை பயன்படுத்தி ஆன்மீகத்தில் வளர வேண்டும்.

இறைவனை நேசிக்க வேண்டும்.
தனது அயலானை நேசிக்க வேண்டும்.

மனிதன் இறைப்பணியிலும், 
பிறர் பணியிலும் பயன்படுத்துவதற்காகத் தான் உலகத்தையும் அதில் உள்ள பொருட்களையும் படைத்தார்.

உலகப் பொருள்கள் மீது அதிகமான பற்று உள்ளவன் அவற்றை தனக்கு மட்டும்தான் பயன்படுத்துவான்.

உலகப் பொருள்கள் மீது பற்று இல்லாதவனைத் தான் இயேசு ஏழை என்று குறிப்பிடுகிறார்.

மனிதனுக்கு முன்மாதிரிகை காட்டுவதற்காக பற்று இல்லாதவன் எப்படி வாழ வேண்டுமோ அப்படி இயேசு வாழ்ந்து காட்டினார்.

அதற்காகத்தான் மாட மாளிகையில் பிறக்காமல் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.

உழைத்து உழைப்பினால் கிடைத்த பொருளை மட்டும் வாழ்க்கைக்கு பயன்படுத்தினார்.

அவர் நினைத்திருந்தால் உணவுப் பொருள்களை உழைக்காமலே படைத்திருக்கலாம்.

ஐந்து அப்பங்களை கொண்டு 5000 பேருக்கு உணவு கொடுத்தவர் அவர்.

அவரால் முடியாதது எதுவும் இல்லை.

ஆனால் மனிதனுக்கு முன்மாதிரிகை காட்டுவதற்காக 

கடவுளாகிய அவர்,

முழுக்க முழுக்க மனிதனாக வாழ்ந்தார்.

நமக்காக பற்றில்லாத ஏழையாக வாழ்ந்தார்.

உலகம் முழுவதும் அவருக்கு உரிமையானது தான்.

ஆனாலும் அவர் ஏழையாக வாழ்ந்தார்.

ஒரு ஏழை படக்கூடிய எல்லா கஷ்டங்களையும் அவர் ஏற்றுக் கொண்டார்."

"இப்போ புரிகிறது. 

நாம் நமது உடம்பில் உள்ள நோய் குணமாக நோன்பு இருக்கிறோம்.

அவர் நமது பாவத்துக்கு பரிகாரமாக நோன்பு இருந்தார்.

தேவ சுபாவத்தில் அவரால் கஷ்டப்பட முடியாது, சிலுவையில் மரிக்க முடியாது.

நமக்காக பாடுகள் படவும் சிலுவையில் மரிக்கவுமே அவர் மனிதனாகப் பிறந்தார்.

நமக்காகவே அனைத்துக்கும் உரிமையாளரான அவர்

 ஏழையாகப் பிறந்தார், 

ஏழையாக வாழ்ந்தார்,

ஏழையாக மரித்தார்."

',நாமும் எளிய மனதோடு வாழ்வோம்.

விண்ணரசுக்கு உரியவர்கள் ஆவோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment