Wednesday, March 17, 2021

*இராயப்பரோடு ஒரு Interview* 2

  *இராயப்பரோடு ஒரு Interview* 2

"உமக்கு வீட்டில் எந்த வேலையும் இல்லையா?"

",நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்று 25 ஆண்டுகள் ஆகின்றன."

"அது வாத்தியார் வேலையில் இருந்து. வீட்டில் எந்த வேலையும் இல்லையா?"

", இதோ இப்போது செய்து கொண்டிருக்கிறேனே, இதற்கு வேறு என்ன பெயர்?"

"அரட்டை."

",என்னை பொருத்தமட்டில் இதுதான் வேலை.

வந்த வேலையைப் பார்ப்போமா?"

"நீர் வாத்தியார்தானே?"

", அதில் உமக்கு என்ன சந்தேகம்!"

"வாத்தியார்னா முதலில் பாடம் நடத்துவார், அப்புறம்தான் கேள்வி கேட்பார்.

 நீர் வந்த நேரத்திலிருந்து என்னிடம் கேள்விகள் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறீர். அதனால் தான் சந்தேகம் வந்தது."

", நீங்கள் குருப்பட்டம் பெறுவதற்காக எத்தனை ஆண்டுகள் பயிற்சி பெற்றீர்கள்?"

"மூன்றே மூன்று ஆண்டுகள். எங்களுக்கு பயிற்சி கொடுத்தவர் சர்வ வல்லவர் கடவுள்."

", பயிற்சி முடிந்த அன்று இரவு "அவர் யாரென்றே எனக்குத் தெரியாது" என்று சொன்னீர்களாம்!"

"அன்று பயிற்சி முடியவில்லை.

பெந்தகோஸ்தே திருநாள் அன்றுதான் முடிந்தது.

முடிந்த அன்றே கொடுக்கப்பட்ட வேலையை செய்ய ஆரம்பித்துவிட்டேன்."

", இப்பொழுதெல்லாம் எங்கள் குருக்களுக்குப் பயிற்சி கொடுக்க 14 ஆண்டுகள் எடுக்கிறார்கள்!

அப்படி என்ன தான் படிப்பார்கள்?''

"தேவ சாஸ்திரம், தத்துவ சாஸ்திரம், பைபிள் விளக்கம், திருச்சபை வரலாறு... இன்னும் நிறைய பாடங்கள் இருக்கின்றன."


", நிறைய படித்துவிட்டு எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தருகிறார்கள், அதுவும் பிரசங்கத்தில் மட்டும்!"

"ஏன்யா, டாக்டருக்குப் படித்தவன் ஒவ்வொரு நோயாளியிடமும் தான் படித்தது எல்லாவற்றையுமா சொல்லிக் கொண்டிருப்பான்?

 அந்தந்த நோயாளிக்கு வேண்டியதை மட்டும்தானே சொல்வான்!

உங்களுக்கு ஏதாவது தெரியவேண்டும் என்றால் தனியாகச் சென்று கேட்டுக் கொள்ள வேண்டியது தானே!"

", மக்கள் அதற்கெல்லாம் சாமியாரிடம் போக மாட்டார்கள்.

டாக்டரிடம் செல்பவன் வைத்தியம் பார்க்க தானே செல்ல வேண்டும்!

எங்கள் ஆட்கள் பாவமன்னிப்பு பெறுவதற்காக சாமியாரிடம் போகமாட்டார்கள்.

 அவர் நடத்தும் பள்ளிக்கூடங்களில் வேலை கிடைக்குமா,

 அவர் கண்காணிப்பில் உள்ள நிலங்கள் குத்தகைக்கு கிடைக்குமா,

 ஏதாவது சிபாரிசு கடிதம் கிடைக்குமா

 போன்றவற்றை கேட்கத்தான் போவார்கள்! 

பள்ளிக்கூட பொறுப்புகள்

 நில பொறுப்புகள் போன்ற

 ஆன்மீக சம்பந்தமில்லாத பொறுப்புகளைக் குருக்களிடம் கொடுக்கக் கூடாது.

அவை அவர்களது ஆன்மிக பணிக்கான நேரத்தைச் சாப்பிட்டு விடுகின்றன!

அவற்றை யாரிடம் கொடுக்க?"

", நிர்வாகப் பொறுப்பை பங்குப் பேரவையிடம் ஒப்படைத்துவிட்டு குருக்கள் ஆன்மீகப் பணியை மட்டுமே பார்க்க வேண்டும்.

இவ்வுலக வைத்தியருக்கும், ஆன்மீக வைத்தியருக்கும் பணியில் வித்தியாசம் இருக்கிறது.

 உலக வைத்தியர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு மட்டும் வைத்தியம் பார்ப்பார்.

 ஆனால் ஆன்மீக வைத்தியர் ஆன்மீக நோயாளிகளை, அதாவது, பாவிகளைத் தேடிச்சென்று அவர்களுக்கு ஆன்மீக மருத்துவம் பார்க்க வேண்டும்.


 இயேசு அதைத்தானே செய்தார் அவர் பள்ளிக்கூடங்கள் கட்டவில்லை.

 மருத்துவமனைகள் கட்டவில்லை.

 ஆனால் ஒவ்வொரு நபரையும் அவராகவே சந்தித்து ஆன்மீக உதவிகளை செய்தார்.

"சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்" (லூக். 19:5)

என்று இயேசுவே சொன்னார்.

 குருக்களும் இயேசுவை அப்படியை பின்பற்ற வேண்டும்.

குருக்களின் பணி முழுக்கமுழுக்க ஆன்மீகப் பணி, நிருவாகப் பணி அல்ல.

பங்கில் உள்ள ஒவ்வொருவர் மீதும் பங்குக் குரு தனி கவனம் செலுத்தி வந்தால்

 பிரிவினைக்
 சகோதரர்கள் நம்மை கவ்விக்கொண்டு போக வாய்ப்பு இருக்காது.

இயேசு அப்போஸ்தலர்களுக்கு நிர்வாக பயிற்சி அளிக்கவில்லை. போதனையிலும், விசுவாச வாழ்விலும் மட்டுமே பயிற்சி அளித்தார்.

அதனால்தான் பரிசுத்த ஆவி இறங்கி வந்த விநாடியிலிருந்து எல்லோரும் போதனையில் இறங்கிவிட்டார்கள்.

மனிதர்களை பிடிக்கும் பணியில் இறங்கி விட்டார்கள்."

"திருச்சபையின் சொத்துகளை யார் கவனிப்பது?"

", பொதுநிலையினர். (The laity)

பள்ளிக்கூட நிர்வாகம், நில நிர்வாகம் போன்றவற்றை பொதுநிலையினர் வசம் ஒப்படைத்து விட்டால் குருக்களுக்கு ஆன்மீகப் பணியாற்ற நிறைய நேரம் கிடைக்கும்.

கவலைகள் (Worries) குறையும்."

"பொதுநிலையினர் நிலைமை எப்படி இருக்கிறது?"


", கவலைக்கிடமாக இருக்கிறது.

தனக்கு இருக்கும் வியாதியை ஒத்துக் கொள்பவன்தான் மருத்துவம் பார்க்க செல்வான்,
 குணம் பெறுவான்.

தன்னிடம் வியாதியே இல்லை என்று சொல்லிக்கொண்டு

 இஷ்டப்படி நடப்பவன் எப்படி குணம் பெறுவான்?

பொது நிலையினர் நிலையும் இப்படித்தான் இருக்கிறது.

இந்நிலை மாற வேண்டும் என்றால் குருக்கள் முழுநேர ஆன்மீகப் பணியாளர்களாக மாற வேண்டும்.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் தனக்கென்று ஒரு ஆன்மீக வழிகாட்டியை (Spiritual Director) தெரிவு செய்துகொள்ள வற்புறுத்தப்படவேண்டும்.

ஒவ்வொரு ஞாயிறும் பூசைக்கு முன்னால் அரை மணி நேரமாவது பங்குக் குரு பாவ சங்கீர்த்தன தொட்டியில் அமர வேண்டும்.

அதை பார்த்தாவது பலர் பாவசங்கீர்த்தனம் செய்ய வருவார்கள்.

பாவசங்கீர்த்தன வசதியின்றி பூசைகளின் எண்ணிக்கையை அதிகரித்துப் பயனில்லை.

சாவான பாவம் செய்தவர்கள் மட்டும்தான் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்று சட்டம் இல்லை.

 அற்ப பாவம் செய்தவர்களும் பாவசங்கீர்த்தனம் செய்யலாம்.

 பாவசங்கீர்த்தனம் என்ற அருள் அடையாளத்துக்கென்று உள்ள இறையருளை மிகுதியாக பெற்று ஆன்மீக வளர்ச்சி அடையலாம்.

இன்றைய திருச்சபையின் மிக முக்கியமான தேவை பொது நிலையினருக்கான பாவமன்னிப்பு.

முன்பெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் பொது நிலையினருக்காக மூன்று நாள் மௌன தியானம் இருக்கும்.

அதில் விசுவாசிகள் ஆர்வத்தோடு பங்கெடுத்துக் கொள்வார்கள்.

இப்போது தவக்காலத்தில் அரை நாள் தியானம். அதிலும் மக்கள் முழுமையாக பங்கேற்க மாட்டார்கள்.

தியான முடிவில் சாப்பாடு போட்டால் சாப்பாட்டிற்கு நிறைய பேர் வருவார்கள்!''

"இங்கு மோட்சத்தில் சாப்பாடெல்லாம் கிடையாது!''

", உங்களுக்கு வாயும் இல்லை, வயிறும் இல்லை. எப்படிச் சாப்பிடுவீர்கள்!"

"இன்றைக்கு உங்களுடைய வேண்டுகோள் என்ன?"

''பாவசங்கீர்த்தனத்தின் அவசியத்தை 

மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்,

குருக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை அவர்களுக்கு உணர்த்தும்படி எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்."


''வேண்டிக் கொள்கிறேன்."

", Bye!"

லூர்து செல்வம்.
.

No comments:

Post a Comment