Tuesday, March 23, 2021

"அருள் நிறைந்தவளே வாழ்க,"(லூக். 1:28)

"அருள் நிறைந்தவளே வாழ்க,"
(லூக். 1:28)


"ஹலோ சார்! ஒரு சின்ன சந்தேகம். கபிரியேல் தூதர் அன்னை மரியாளை,

"அருள் நிறைந்தவளே வாழ்க,"
என்று வாழ்த்தினாரா?

,“அருள்மிகப் பெற்றவரே வாழ்க!"
என்று வாழ்த்தினாரா?''


",கபிரியேல் கடவுளின் தூதர். அவருக்கு எல்லா மொழிகளும் தெரிந்திருக்கும்.

ஆனால் நிச்சயமாக மரியாளுக்குத் தமிழ் தெரியாது.

ஆகவே தமிழில் வாழ்த்தியிருக்க மாட்டார். மாதாவுக்குத் தெரிந்த மொழியில்தான் வாழ்த்தியிருப்பார்."

"சார், எனது சந்தேகம் மொழி சம்பந்தப் பட்டது அல்ல. பொருள் சம்பந்தப்பட்டது.

மாதா அருள் நிறைந்தவளா? 
அருள் மிகுந்தவளா?"

"நிச்சயமாக அருள் நிறைந்தவள்தான்.

மாதாவிடம் அருளோடு சம்பந்தப் படாத பாவ மாசு சிறிது கூட கிடையாது.

அவள் தாய் வயிற்றில் உற்பவிக்கும்போதே சென்மப்பாவ மாசு இன்றி உற்பவித்தாள்.

 ஆகவே அருள் நிறைந்தவள்தான்.

மிகுந்த என்றால் நிறைந்த என்ற பொருள் வராது.

மிகுந்த என்றால் அதிகமான என்று மட்டுமே பொருள்.

ஒரு பாத்திரம் நிறைய நெல் இருந்தால் அதில் வேறொரு தானியம் இருக்க முடியாது.

முக்கால் பாத்திரம் நெல் இருந்தால் மிகுதியாக உள்ளது. ஆனால் மீதி கால் பாத்திரத்தில் வேறு பொருளும் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

 மாதாவிடம் அருள் தவிர பாவ மாசு சிறிதேனும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை ஆகவே அவள் அருள் நிறைந்தவள்தான்.''

"மாதா பாவமாசற்றவள் என்பதற்கு பைபிள் ஆதாரம் கேட்பவர்களுக்கு என்ன பதில்?"

"அவள் உன் தலையை நசுக்குவாள்: நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார். " (ஆதி. 3:15)

என்ற ஆதியாகமம் வசனமும், 

"அருள் நிறைந்தவளே வாழ்க," என்ற கபிரியேல் தூதரின் வாழ்த்துரையுமே மாதா ஜென்ம பாவமாசற்றவள் என்பதற்கான பைபிள் ஆதாரங்கள்.''

"ஆனால் புதிய மொழிபெயர்ப்பில் நீங்கள் கூறுகிற இரண்டு ஆதாரங்களும் இல்லையே.


3-15.உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்.

,“அருள்மிகப் பெற்றவரே வாழ்க!"

என்றல்லவா இருக்கின்றன!"

", மொழிபெயர்ப்பு விவகாரத்தில் இறங்கினல் நமது பொன்னான நேரத்தை எல்லாம் அதுவே விழுங்கிவிடும்.

 அதை இன்னொரு நாள் வைத்துக்கொள்வோம்.

இப்பொழுது நமது பணி நமது அன்னையைப் பற்றி தியானிப்பது.

இறைமகன் இயேசு பரிசுத்த தம திரித்துவத்தின் 2ஆவது ஆள்.
தேவ ஆள்.

நித்திய காலமாக பரிசுத்தர்.

மனித உரு எடுப்பதற்காக தனது தாயாக நாசரேத் ஊரில் வாழ்ந்த மேரி என்ற கன்னிப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறார்.

மேரி பிறந்தபின் அவளை தேர்ந்தெடுக்கவில்லை.

தேர்ந்தெடுத்த பின்தான் அவள் உற்பவித்தாள்.

 அவர் நித்தியர்.

 அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் நித்திய காலமாக தீர்மானிக்கப்படுபவை.

பரிசுத்தரான அவர் தன்னை பெற்றெடுக்க போகும் தாயும் பரிசுத்தராகவே இருக்க வேண்டும் என்று தீர்மானித்து 

அதன்படி அவளைப் படைத்தார்.

இதற்கு வெளி ஆதாரம் எதுவும் தேவை இல்லை.

மனுவுரு எடுக்கப் போகிறவர் ஒரு பரிசுத்தர் என்ற ஆதாரம் மட்டுமே போதும்.

நாம் தங்க ஒரு வீடு கட்டும்போது எவ்வளவு கவனமாக திட்டம் போடுகிறோம்!

பரிசுத்த சர்வ வல்லவர் தேவன் தனக்கு ஒரு தாயை படைக்கும் போது என்ன திட்டமெல்லாம் போட்டிருப்பார்!

பரிசுத்தரை உற்பவிக்கும் பெண் பரிசுத்தமானவளாகத்தானே இருக்க வேண்டும்!

இதை நம்பாதவர்கள் பரிசுத்த கடவுளையே நம்பாதவர்கள்.

இறைவனே தனக்கு தாயாகப் போகும் பெண்ணை ஜென்ம பாவ மாசு மருவின்றி படைத்தார். 

நாம் மரியன்னையை கடவுளின் தாயாகப் பார்க்கிறோம்.

 ஆகவே நம்மால் அவளை ஒரு சாதாரண பெண்ணாக கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

 அவள் நம்மை போல ஒரு சாதாரண பெண்தான் என்று கூறுபவர்கள் அவளை கடவுளின் தாயாக பார்க்கவில்லை.

பரிசுத்தர் ஒரு பரிசுத்தமான பெண்ணைப் படைத்து அவள் வயிற்றிலேயே மனுவுரு எடுக்கிறார்.

பரிசுத்தரைக் கருத்தரித்த வயிற்றில் பாவமாசுள்ள உயிர் கருத்தரிக்கக் கூடாது என்பதால்தான் 

தன் அன்னை 
முக்காலமும் கன்னியாகவே இருக்க இறைவன் ஏற்பாடு செய்தார். 

இயேசுவின் சகோதரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அன்னை மரியாளின் வயிற்றில் பிறந்தவர்கள் அல்ல.

அன்னை மரியாளின் உடன் பிறந்த சகோதரியும் நசரேத்தூரில்தான் வசித்து வந்தாள்.

அவள் பெயரும் மேரிதான்.

"இயேசுவின் சிலுவையருகில் அவருடைய தாயும், 

அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும், 

மதலேன் மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
அரு 19:25

அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாள்தான் யாகப்பன், சூசை, சீமோன், யூதா ஆகியோரின் தாய்.

இந்த நால்வரையும்தான் இயேசுவின் சகோதரர்கள்(cousins) என்று கூறுகிறோம்.


(Jerome (347-420), 

writing Against Helvidius in defense of perpetual virginity of the mother of Jesus, 

argued that the brothers of Jesus (James, Simon, Jude, and Joses or Joseph) were children of Mary of Clopas, the sister of the mother of Jesus, making them first cousins of Jesus..)

ஆக,

அன்னை மரியாள் பாவ மாசு மரு அற்றவள், ஆகவே அருளால் நிறைந்தவள்.

அவளது வயிற்றில் கருவாகி உருவெடுத்து பிறந்தது இயேசு மட்டும்தான். 

அவள்‌ இயேசுவைக் கருத்தரிக்கும் போதும் பெறும்போதும்

 அவளது கன்னிமைக்கு எந்தவித பழுதும் ஏற்படவில்லை.

 இயேசுவை உற்பவிக்கும் முன்னும் அவள் கன்னி.

 உற்பவிக்கும் போதும் அவள் கன்னி.

 பெறும்போதும் அவள் கன்னி.

 பெற்ற பின்பும் அவள் கன்னி.

 வாழ்நாள் முழுவதும் அவள் கன்னி."

"தன்னைப் படைத்த கடவுளுக்கே தாய் ஆகப் போகிறோம் என்று தெரிந்தவுடனே அவளுடைய மனது எப்படி இருந்திருக்கும்?"


'', கபிரியேல் தூதர் சொன்ன செய்தியை ஏற்றுக் கொண்டவுடன் அன்னைமரியாள் சொன்ன முதல் வார்த்தைகள், 

"இதோ ஆண்டவருடைய அடிமை."

மரியாள் மூன்று வயது முதல் கோவிலில் வளர்ந்தவள். 

நிறைய விவிலிய அறிவு பெற்றிருப்பாள். 

மெசியா எதற்காக பிறக்கப் போகிறார் என்பது அவளுக்கு நன்கு தெரியும். 

மெசியாவின் பாடுகள் மரணம் பற்றிய தீர்க்கதரிசனங்களை நன்கு அறிந்திருப்பாள்.

தன் வாழ்நாள் முழுவதும் துன்பப்பட போகிற
ஒருவருக்குத்தான் நான் தாயாக போகிறோம் என்பது தெரிந்தும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறாள்.

கடவுளுக்கு தாயாவதால் தனக்கு உலக வசதிகள் எதுவும் வராது என்பது அவளுக்குத் தெரியும்.

ஆகவே பிறக்கப்போகும் கடவுளின் பணிக்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து விட்டாள்.

நாம் பாவிகள். நாம் செய்த பாவங்களுக்காக பரிகாரமாக துன்பப்படுவதில் அர்த்தம் இருக்கிறது.

ஆனால் பாவமாசே இல்லாத இயேசு நாம் செய்த பாவங்களுக்காக துன்பப்பட்டது போலவே 

 நம் அன்னையும் நாம் செய்த பாவங்களுக்காகவே இயேசுவோடு சேர்ந்து துன்பங்களை ஏற்றுக் கொண்டாள்.

வாழ்நாள் முழுவதும் வியாகுல மாதாவாகவே வாழ்ந்தாள்.

உலகத்திற்கு அதிபதியான கடவுள் அவள் வயிற்றில் இருக்கும்போதே அவள் ஏழ்மை நிலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

பெத்லகேமில் நாற்றம் நிறைந்த ஒரு மாட்டுத் தொழுவத்தில் இயேசுவைப் பெற்று தீவனத் தொட்டியில் கிடத்தும் போதும் அவள் அவள் மனது என்ன பாடு பட்டிருக்கும்! 

சர்வத்தையும் படைத்த கடவுளுக்கு பிறக்க வசதியான இடம் கிடைக்கவில்லை.

மாட்டுத் தொழுவம் தான் கிடைத்தது.

படுக்க மெத்தை கிடைக்கவில்லை. மாட்டின் தீவனத் தொட்டி தான் கிடைத்தது.

இயேசு சர்வ வல்லப கடவுள் என்று தெரிந்திருந்தும், ஏரோதுவால் கடவுளை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்திருந்தும்

 இறைவரின் தூதர் சொன்னதற்கு கீழ்ப்படிந்து குழந்தையை எகிப்திற்கு எடுத்து செல்கிறார்.

 பயத்தினால் அல்ல, கீழ்ப்படிதலினால்.

இயேசுவுக்கு 30 வயது ஆகும்வரை அவரை ஏழ்மையில்தான் வளர்க்கிறார்.

இயேசு பாடுகள் படும் பொழுதும், சிலுவையில் அறையப்பட்டு மரணிக்கும் போதும், கூடவே இருந்து நமது பாவங்களுக்காக அவரைப் பலியாக ஒப்புக்கொடுக்கிறாள்.

தன் வாழ்நாளில் ஒரு வினாடி கூட தனக்காக வாழவில்லை.

அவள் பிறந்ததும் இயேசுவுக்காக. வளர்ந்ததும் இயேசுவுக்காக.
வாழ்ந்ததும் இயேசுவுக்காக.
அதுதான் முழுமையான அர்ப்பண வாழ்வு.

மாதா வாழ்ந்தது இயேசுவுக்காக.
இயேசு வாழ்ந்தது நமக்காக.
ஆகவே மாதா வாழ்ந்ததும் நமக்காக.

இன்று விண்ணகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதும் நமக்காக தன் மகனிடம் பரிந்து பேசுவதற்காக.

அருள்நிறைந்த அன்னையை பின்பற்றி நாமும் இயேசுவுக்காக வாழ்வோம்.

அன்னையை வாழ்த்துவோம்.

அருள்நிறைந்த மரியே வாழ்க!

நன்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்வோம்: 

'அருள்மிகப் பெற்றவரே' அல்ல.

அருள் நிறைந்தவளே.

Hail Mary full of grace!

Ave Maria, gratia plena!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment