Saturday, March 20, 2021

"யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்! என்னில் விசுவாசங்கொள்பவன் குடிக்கட்டும்!'(அரு.7:37)

"யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்! என்னில் விசுவாசங்கொள்பவன் குடிக்கட்டும்!'(அரு.7:37)


இயேசு கலிலேயாவில் போதித்துக் கொண்டிருந்த நேரம்.

 யூதேயாவில் கூடாரத் திருநாள் நெருங்கிக்கொண்டு இருந்தது.

 அங்கே அவர் சென்று போதிக்க வேண்டும் என்பது அவருடைய 

சித்தி (அன்னை மரியாளின் உடன்பிறந்த சகோதரி) மக்கள் ஆலோசனை கூறினார்கள்.

யாகப்பன், சூசை, சீமோன், யூதா 
ஆகிய நால்வரில் மூவர் இயேசுவின் சீடர்கள்.

இயேசு அவர்களிடம்

"இத்திருவிழாவிற்கு நீங்கள் போங்கள், நான் வரவில்லை. எனக்குக் குறித்த காலம் இன்னும் நிறைவாகவில்லை"

யூதர்கள் அவரைக் கொல்லத் தேடியதால் யூதேயாவில் அவர்களுக்குத் தெரியும்படி நடமாட விரும்பவில்லை.

இயேசு தனது மரணத்திற்கு
 தான் நித்திய காலமாக குறித்து வைத்திருந்த நேரம் வரும்போது அவராகவே தன்னை யூதர்களிடம் கையளிப்பார்.

அந்த நேரம் இன்னும் வரவில்லை.
ஆகவே கூடாரத் திருநாளுக்கு மறைவாகவே செல்ல இயேசு திட்டமிட்டிருந்தார்.

தன் திட்டப்படி

 அவருடைய சகோதரர்கள் திருவிழாவுக்குப் போனபின், இயேசு வெளிப்படையாகப் போகாமல் 
மறைவாகச் சென்றார்.

பாதித் திருவிழா முடிந்தபின், இயேசு கோயிலுக்குச் சென்று போதிக்கத் தொடங்கினார்.

அவருடைய போதனையைக் கேட்டு அனைவரும் வியப்பு அடைந்தார்கள்.

திருவிழாவின் இறுதியான பெருநாளிலே, 

இயேசு எழுந்துநின்று உரத்த குரலில், "யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்!

 என்னில் விசுவாசங்கொள்பவன் குடிக்கட்டும்!

மறைநூல் கூறுவதுபோல்,

 அவனுடைய உள்ளத்திலிருந்து உயிருள்ள நீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்" என்றார்.

இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போது

"தாகமாயிருக்கிறது"
என்று சொன்னார். 

இங்கு தாகம் என்ற வார்த்தை தண்ணீர் மேலே அவருக்கு இருந்த தாகத்தைக் குறிக்கவில்லை.

 ஆன்மாக்கள்மேல் இருந்த தாகத்தையே குறிக்கிறது.

தனது பாடுகளின் பலனை ஏற்றுக்கொள்ள ஆன்மாக்கள் வேண்டுமே என்ற தாகம்.

சமாரியப் பெண்ணிடம் இயேசு
 "எனக்குத் தண்ணீர் கொடு"

என்று கேட்டபோது அவர் கிணற்று தண்ணீரை குடிக்க கேட்கவில்லை.


கடவுளுடைய கொடை இன்னதென்பதையும், 

" தண்ணீர் கொடு " என்று கேட்டவர்

சாதாரண மனிதர் அல்ல,

மனிதன் முடிவில்லா வாழ்வடைய அவனுக்குள் பொங்கியெழ வேண்டிய 

இறையருள் ஊற்றாகிய 
ஆன்மீக தண்ணீரை தரவல்ல மெசியா என்பதை அவளுக்கு உணர்த்தவுமே அவ்வாறு கேட்டார்.

அவ்வாறேதான் இங்கேயும் 

"தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்!"

என்று கூறியபோது 

தம்மில் விசுவாசங்கொள்வோர் பெறப்போகும் பரிசுத்த ஆவியானவரைக்குறித்து, அவர் இவ்வாறு சொன்னார்.

அதாவது 

"பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் மீது தாகமாக உள்ளவர்கள் என்னிடம் வாருங்கள்."

அதாவது, பரிசுத்த ஆவியானவரைத் தருவேன் என்ற பொருளில் கூறினார்.


இயேசு "யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வாருங்கள்."

இயேசு குறிப்பிடுவது ஆன்மீக தாகம்.

நம்மிடமும் இயேசு விரும்புகிற தாகம் இருக்க வேண்டும்.

1. உலகில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் கட்சிக்கு ஆள்சேர்ப்பதிலும்,

 தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடுபவர்களை சேர்ப்பதிலும் குறியாக இருப்பது நமக்குத் தெரியும்.

நாம் இறை இயேசுவின் விண்ணக கட்சியை சேர்ந்தவர்கள். நற்செய்தியை அறிவிப்பதின் மூலமும்,

முன்மாதிரியான வாழ்க்கையின் மூலமும் 

விண்ணகம் செல்ல ஆன்மாக்களை சேகரிப்பதில் நமக்கு தணியாத தாகம் இருக்க வேண்டும்.

இப்பணியை வெற்றிகரமாக செய்ய வேண்டிய அருள் வரங்களைத் தர இறை இயேசுவிடம் கேட்க வேண்டும்.

2. நல்ல செயல்கள் மூலம் இறை பணியும், பிறர்பணியும் ஆற்றிட   
தாகம் இருக்க வேண்டும்.

இந்த தாகம் தணியாதிருக்க அருள் வரம் வேண்டி இயேசுவிடம் மன்றாட வேண்டும். 

3."என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்." என்பது இறைமகனின் வாக்கு.

திவ்விய நற்கருணையை அடிக்கடி வாங்கி நமது ஆன்மாவிற்கு உணவாக ஊட்டிட தணியாத தாகம் இருக்க வேண்டும். 

 தினமும் திருப்பலியிலும், திரு விருந்திலும் பங்கேற்று இத்தாகத்தை அதிகரிக்க வேண்டும்.

இத்தாகம் தணியாதிருக்க இறையருளை வேண்ட வேண்டும்.

4.பிறர் குற்றங்களை மன்னிக்கவும், நமது குற்றங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்கவும், தணியாத தாகம் இருக்க வேண்டும்.

5. பரிசுத்த ஆவியானவரின் அருள் வரங்கள் மீது தணியாத தாகம் இருக்க வேண்டும்.

அருள் வரங்களை குடிக்க குடிக்க தாகம் தணியக்கூடாது. 


6. பகைவரை நேசிக்கவும், தீமைக்கு பதில் நன்மை செய்யவும் தணியாத தாகம் இருக்க வேண்டும்.


7.நீதியின்பால் தணியாத பசியும் தாகமும் இருக்க வேண்டும். 

உலக செல்வங்களைப் பொறுத்தமட்டில் போதுமென்ற மனது வேண்டும் என்பார்கள்.

அருள் செல்வத்தை பொறுத்தமட்டில் போதுமென்ற மனமே கூடாது.

ஏனெனில் நாம் நிறைவை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

விண்ணக வாழ்வில் நுழைந்த பின்பு தான் நாம் நிறைவிற்குள் நுழைவோம்.

விண்ணகவாழ்வில் இறைவனோடு இணைந்த பின்பு தான் நமது ஆன்மீக தாகம் தணியும்.

அதுவரை நமது ஆன்மீக வளர்ச்சிக்கான தாகம் தணிய கூடாது.

இவ்வுலகில் நமது ஆன்மீக வளர்ச்சிக்கு  உச்சநிலை (Ceiling) கிடையாது.

தொடர்ந்து நாம் ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வினாடியும் இறைவனின் அருள் வரங்களை எவ்வளவு பெற முடியுமோ அவ்வளவு பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

பெற்ற அருள் வரங்களால் நமது ஆன்மாவை நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

எவ்வளவு நிரப்பினாலும் இன்னும் இடம் இருக்கும்.

அருள் வரங்களைப் பெற்றுத் தரும் நற்சிந்தனை, நற்சொல், நற்செயல்கள் ஆகியவை நமது இறுதிநாள் வரை தொடர வேண்டும்.

விண்ணகம் சென்ற பின்பு தான் நமது ஆன்மீக வளர்ச்சி பூர்த்தி அடையும்.

அதுவரை இயேசுவின் அருள் உதவியால் வளர்வோம், வளர்ந்து கொண்டே இருப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment