"உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்."
(மாற்கு.16:15)
உலகெங்கும் சென்று நற் செய்தியை அறிவிக்க நமக்கு கட்டளை கொடுத்தவர் நமது ஆண்டவர் இயேசு.
"விசுவசித்து திரு முழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்."
(மாற்று.16:16)
"அனைவருக்கும் நற் செய்தியை அறிவியுங்கள்,
விசுவசிப்பவர்களுக்குத் திருமுழுக்கு கொடுங்கள்."
நாம் அனைவருக்கும் நற்செய்தியைச் சொல்லாலும் செயலாலும் அறிவிக்க வேண்டும்.
விசுவசிப்பவர்களுக்கு மட்டுமே திருமுழுக்குக் கொடுக்க வேண்டும்.
நற் செய்தியை விசுவசிப்பவர்கள் திருமுழுக்கு பெற ஆசைப்படுவார்கள்.
திருமுழுக்கு வேண்டும் என்று கேட்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.
இங்கே கட்டாய மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இயேசு கடவுள், நம்மைப் படைத்தவர்.
கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதற்காகவே நாம் இவ்வுலகில் படைக்கப்பட்டிருக்கிறோம்.
கடவுளின் கட்டளைகளுக்கு எதிராக யார் கட்டளை கொடுத்தாலும்,
அது நம்மை ஆண்டு கொண்டிருக்கும் லௌகீக அரசாக இருந்தாலும்
அதற்கு நாம் கீழ்ப்படியக் கூடாது.
மத்தியில் நம்மை ஆண்டு கொண்டிருக்கும் இந்துத்துவா அரசு நாம் இயேசுவின் நற்செய்தியை போதிப்பதை விரும்பவில்லை.
அவர்கள் எதை விரும்புகிறார்கள், எதை விரும்பவில்லை என்பதைப் பற்றி நமக்கு கவலை இல்லை.
நாம் கிறிஸ்தவர்கள். கிறிஸ்துவின் வழியே நடப்பவர்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசிப்பவர்கள்.
நம்மை நாம் நேசிப்பது போல மற்றவர்களையும் நேசிப்பவர்கள்.
நாம் மீட்படைய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
இயேசுவின் கட்டளைப்படி மற்றவர்களும் மீட்படைய வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்.
அந்த ஆசையின் படி தான் நாம் மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கிறோம்.
அவர்கள் விரும்பினால் மற்றும் திருமுழுக்கு கொடுக்கிறோம்.
ஆகவே கிறிஸ்தவர்கள் கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள் என்ற மத்திய அரசின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது.
கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களில் அரசாங்க பாடத்திட்டத்தின் படி தான் கல்வி போதிக்கப்படுகிறது.
கிறிஸ்தவ மாணவர்களுக்கு மட்டும்தான் ஞானோபதேசம் போதிக்கப்படுகிறது.
மட்டமானவர்களுக்கு நல்லொழுக்கம் போதிக்கப்படுகிறது.
புனித கல்கத்தா தெரேசா அவர்களின் வாழ்நாளின் போது "உன்னைப்போல் உனது அயலானையும் நேசி" என்ற இயேசுவின் கட்டளைப் படி
தனது பிறர் அன்பு செயல்களின் மூலம் மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்கள்.
அன்புச் செயல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
அவர்களுடைய அன்புச் செயல்களுக்கு காரணமாக இருந்தது இயேசுவின் மேல் அவர் கொண்டிருந்த விசுவாசமும், அன்பும்.
அவர்கள் செய்தது மிகப்பெரிய மறைப்பணி.
வேத போதகக் குருக்களுக்கு ஈடாகப் பணியாற்றி எண்ணில்லாத ஆன்மாக்கள் மீட்புப் பெற பாடுபட்டார்கள்.
ஒவ்வொரு கிறிஸ்தவனும் நல்ல கிறிஸ்தவனாக வாழ்வதே ஒரு நற் செய்தி அறிவிப்புப் பணிதான்.
இயேசு வார்த்தைகளை விட அவருடைய வாழ்க்கையால் தான் அதிகமாக நற் செய்தியை அறிவித்தார்.
அவர் வாழ்ந்தது 33 ஆண்டுகள்.
வாய் மொழியாக போதித்தது மூன்று ஆண்டுகள் தான்.
மூன்று ஆண்டுகளிலும் அவரது வார்த்தைகளை விட அவர் செய்த அன்புச் செயல்களே அதிகம்.
அதிலும் வாழ்வின் இறுதி நாளில் வெள்ளிக்கிழமை அன்று தனது சிலுவை மரணத்தின் மூலம் அவர் அறிவித்த நற்செய்தி தான் மிகவும் சக்தி வாய்ந்தது.
இயேசுவைப்போல நாமும் நமது வாழ்க்கையில் நற்செய்தியை அறிவிப்போம்.
அவருக்குச் சித்தமானால் புனித தோமையாரை போல, புனித அருளானநாதரைப் போல, புனித தேவ சகாயத்தைப்போல
நாமும் வேத சாட்சிகளாக மரித்து நற் செய்தியை அறிவிப்போம்.
நமது சாட்சியத்தால் மக்களை மனம் திருப்புவோம், அவர்கள் விருப்பப்படி.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment