Sunday, August 31, 2025

சீமோன் மறுமொழியாக, "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார். (லூக்கா .5:5)



சீமோன் மறுமொழியாக, "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார். 
(லூக்கா .5:5)


சீமோன் இரவு முழுவதும் மீன் பிடிக்க முயன்றும் எதுவும் கிடைக்காததால் படகைக் கரையில் கொண்டு வந்து விட்டு விட்டு வெறும் வலையை அலசிக் கொண்டிருந்தார்.

அங்கு வந்த இயேசு சீமோனுடைய படகைக் தண்ணீருக்குள் தள்ளச் சொல்லி 

அதன்மீது ஏறி மக்களுக்குப் போதித்தார்.

போதித்து முடித்தபின் சீமோனை நோக்கி 

 "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார். 

சீமோன் மறுமொழியாக, "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை;

 ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார். 

சீமோன் மீனவர். அவரது தொழிலே அதுதான்.

தொழில் ரீதியாக இயேசு தச்சர்.

ஆனால் அவர் மீது சீமோன் வைத்திருந்த உறுதியான விசுவாசம் காரணமாக அவர் சொன்ன படி செய்தார்.

 வலைகள் கிழியக்கூடிய அளவுக்கு, பெருந்திரளான மீன்கள் அகப்பட்டன. 

இதைக் கண்ட சீமோன், இயேசுவின் கால்களில் விழுந்து,

 "ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்றார். 

சீமோனின் வார்த்தைகளைத் தியானத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

சீமோன் தன்  சகோதரர் அந்திரேயாவுடன் இயேசுவை முதன்முதல் சந்தித்தது யோர்தான் நதி கரையில் உள்ள பெத்தானியாவில்.

முதல் சந்திப்பிலேயே இயேசு சீமோனை நோக்கி 

 "நீ யோவானின் மகன் சீமோன். இனி "கேபா" எனப்படுவாய் என்றார். 

"கேபா" என்றால் "பாறை" என்பது பொருள். 

 முதல் சந்திப்புலேயே யாரும் சொல்லாமலேயே சீமோனின் தந்தை யாரென்று இயேசு கூறி விட்டார்.

அதோடு அந்திரேயா இயேசுவோடு தங்கி அவரே மெசியா என்பதை அறிந்து சீமோனிடம் கூறியிருக்கிறார்.

அப்போது ஏற்பட்ட விசுவாசம் தான் கெனசரேத் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவரை இயக்கியிருக்கிறது.

''இரவு முழுவதும் முயன்றோம். ஒரு மீன் கூட கிடைக்கவில்லை.  ஆனாலும் உம்மை நான் விசுவசிக்கிறேன். ஆகவே நீர் சொன்னபடி வலையைப் போடுகிறேன்."

என்று இயேசுவின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தார்.

இத்தகைய விசுவாசம் நம்மிடமும் இருக்க வேண்டும்.

நாம் ஆண்டவரிடம் ஏதாவது கேட்டால் அது கிடைத்து விட்டது என்று விசுவசிக்க வேண்டும்.


"ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்.''
(மாற்கு.11:24)

படகுகள் மூழ்கும் அளவுக்கு மீன் கிடைத்தவுடன் சீமோன் எப்படி எதிர்வினை ஆற்றினார்?

How did he react?

"இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, "ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்றார். 

அவர் உலகியல் ரீதியாக மகிழ்ச்சிக் கடலில் நீந்தவில்லை.    

மாறாக ஆன்மீக ரீதியாக பரிசுத்தராகிய இயேசுவின் முன் பாவியாகிய தான் நிற்க அருகதை அற்றவன் என்பதை உணர்ந்ததோடு தனது உணர்வை ஆண்டவரோடு பகிர்ந்து கொள்கிறார்.

தலையான புண்ணியங்களுள் முதன்மையானது தாழ்ச்சி.

தான் பாவி என்று ஏற்றுக் கொள்வது புண்ணியம்.

"தன்னைத் தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப் படுவான் என்பது இயேசுவின் போதனை.

அவரது தாழ்ச்சிக்குப் பரிசாகத் தான் இயேசு அவரைத் திருச்சபையின் தலைவராக்கினார்.

அவ்வளவு மீன்களைப் பிடிக்க உதவி விட்டு இயேசு அவரை நோக்கி,

"இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்."

என்று சொன்னவுடனே சீமோன் பிடித்த அத்தனை மீன்களையும், படகையும், வலைகளையும் அப்படியே விட்டு விட்டு இயேசுவின் பின் சென்றார்.

அந்திரேயாவும், அருளப்பரும் யாகப்பரும் அப்படியே செய்தார்கள்.

சீமோனுடைய மாமியார் வீடு கப்பர்நாகூமில் இருந்தது.

அங்கிருந்து தான் அவர் மீன் பிடிக்கும் தொழிலைச் செய்து வந்தார்.

இராயப்பர் இயேசுவின் சீடர் ஆனபின் இயேசு கப்பர்நாகூம் நகரையே‌ தன் தங்குமிடமாகத் தேர்வு செய்து கொண்டார்.

இந்த விபரங்கள் எல்லாம் இப்போது எதற்காக?

சீமோனின் வார்த்தைகள் எந்த அளவுக்கு நமது ஆன்மீகப் பாதையில் நம்மை வழி நடத்த உதவுகின்றன என்பதைப் பற்றி தியானிப்பதற்காக.


"இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்."

பிறந்த காலத்திலிருந்தே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருக்கும் எனக்குத் தெரியாதது 30 ஆண்டுகள் தச்சு வேலை செய்த உங்களுக்குத் தெரியுமா என்று அவர் கேட்கவில்லை.

நம்மால் முடியாததும்  இயேசுவால் முடியும் என்று நம்பினார்.

"மனிதரால்  இயலாதது எல்லாம்  கடவுளால்  இயலும்." 

என்ற மறை உண்மையை நம்
மனதில் ஆழமாகப் பதிய வைப்போம்.

நமது ஆன்மீகப் பாதையில் வழி நடக்கும் போது ஏதாவது செயல் நம்மால் முடியாது என்று தோன்றினால் முழுமையான விசுவாசத்தோடு இறைவனை நோக்கி செபிக்க வேண்டும்.

இங்கு மற்றொரு உண்மையையும் மனதில் கொள்ள வேண்டும்.

சீமோன் அந்திரேயாவுடன் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொண்ட பின்புதான் முதன் முதலில் பெத்தானியாவில் சந்தித்தார்.

அப்போது ஏற்பட்ட அர்ப்பண உணர்வு கெனசரேத் ஏரியில் மீன் பிடிக்கும் போதும் நீடித்தது.

ஆகவேதான் அவரால் இயேசு சொன்னவுடன் சொன்னபடி செய்ய முடிந்தது.

ஆகவே 

"அனைத்திற்கும் 
மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். 

அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத்தேயு.6:33)

என்று இறை வாக்குக்கு ஏற்ப சீமோனைப் போல் இறையரசை முதலில்‌ தேடுவோம்.

நாம் நினைத்தது நினைத்தது நிறைவேற இறைவனே உதவுவார்.

   "ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்ற சீமோனின் வார்த்தைகள் நமது ஆன்மீக வாழ்வில் எப்படி உதவும்?

இந்த வார்த்தைகள் குறிக்கும் தாழ்ச்சியை நமது ஆன்மீகப் பாதையில் ஊன்று கோலாகப் பயன்படுத்தி நடக்க வேண்டும்.

"ஆண்டவரே, நீர் பரிசுத்தர் நான் பாவி, உமது அருகில் வர அருகதை அற்றவன்.  ஆகவே எனது பாவங்களை மன்னித்து என்னை ஏற்றுக் கொள்ளும்."

என்று அடிக்கடி செபிக்க வேண்டும்.

"ஆண்டவரே, என் நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதி அற்றவன்.  ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லி அருளும் என் ஆன்மா குணமடையும்."

என்ற செபத்துக்கும், சீமோனின் செபத்துக்கும் நோக்கம் ஒன்றுதான். 

திவ்ய நற்கருளை வாங்கும் முன் நாம் இதை செபித்ததும் இயேசு நமது இல்லத்திற்கு வருகிறார்.

சீமோன் செபித்த பின் இயேசு அவரை அழைத்துக்கொண்டு போகிறார்.

தாழ்ச்சியுடன் இயேசு நம்மை வழிநடத்த விட்டு விடுவோம்.

அவ்வளவு மீன்பாடு கிடைத்தும்,   

அதை அனுபவிக்க முழு சுதந்திரம் இருந்தும்,

இயேசு அழைத்தவுடன் அனைத்தையும் ஏரிக்கரையில் விட்டு விட்டு அவரோடு சென்று விடுகிறார்.

சீமோனைப் பின்பற்றி நாமும் இயேசு அழைக்கும் போது இருப்பதை விட்டு விட்டு அவர் பின்னால் செல்வோம்.

தருவதும் அவரே, அழைப்பதும் அவரே,

நமக்கு அனைத்திலும் அவரே, அவர் மட்டுமே முக்கியம்.

பைபிளை 
வாசிப்போம்,
யோசிப்போம்,
வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Saturday, August 30, 2025

பைபிளும் பரிணாம வளர்ச்சியும்



பைபிளும் பரிணாம வளர்ச்சியும் 

 பைபிள் என்றால் இறை வாக்கு.

பைபிள் மூலம் இறைவன் தனது எண்ணங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

இறைவன் நமக்கு அறிவிக்கும் செய்திதான் பைபிள்.

இறைவன் அறிவிக்கும் செய்தியை நாம் நற் செய்தி என்கிறோம்.

பைபிளில் வார்த்தைகள் இருக்கின்றன, வசனங்கள் இருக்கின்றன, அதிகாரங்கள் இருக்கின்றன. புத்தகங்கள் இருக்கின்றன.

இவை எல்லாவற்றிலும் இறைச் செய்தி இருக்கிறது.

நமக்கு ஐம்பொறிகள் சேர்ந்த உடல் இருக்கிறது.  உடலுக்குள் ஆன்மா இருக்கிறது. 

 
"கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, 

அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்."
(தொடக்கநூல் 2:7)

மண்ணால் ஆன உடல்.
அதற்குள் உயிர் மூச்சான ஆன்மா.

இவை இரண்டில் எதற்காக எது?
ஆன்மாவுக்காகத்தான் உடல்.

இரண்டில் அதிக முக்கியத்துவம் பெறுவது ஆன்மா.

அப்படியே பைபிளில் வசனங்கள் இருக்கின்றன.

வசனங்களில் உள்ள வார்த்தைகளைவிட அதிக முக்கியத்துவம் பெறுவது அவற்றில் உள்ள இறைச் செய்தி.

நாம் பேசுகிறோம். பேசுவதற்கு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம்.

வார்த்தைகளுக்குப் பொருள் கொடுப்பது எது, அகராதியா? அல்லது, பேசுபவரின் குணமா?

பைபிளில் உள்ள வசனங்களுக்கு இறைவனின் பண்புகளின் அடிப்படையில் தான் பொருள் கொடுக்க வேண்டும், நமது விருப்பப்படி அல்ல.

பைபிள் மட்டும் போதும் என்பவர்கள் தங்கள் விருப்பப்படி பொருள் கொடுத்து 40,000 பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்.

இப்போது விடயத்துக்கு வருவோம்.

பைபிள் நாம் வாழும் பிரபஞ்சமும், அதில் வாழும் உயிர்ப் பிராணிகளும், மனிதர்களும் நேரடியாகப் படைக்கப் பட்டனர் என்று சொல்கிறது.

விஞ்ஞானம், பெருவெடிப்புக் கோட்பாட்டின் படி (Big Bang theory) 

ஏறக்குறைய 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பிரபஞ்சம் மிகவும் அடர்த்தியான, வெப்பமான,  சிறிய புள்ளியாக இருந்தது. 

பிறகு, அந்தப் புள்ளி திடீரென்று வேகமாக விரிவடைந்தது,

 இந்த விரிவடைதல் இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்றும்,

அதில் வாழும் உயிரினங்கள்
பரிணாம வளர்ச்சிப்படி மாறி வாழ்கின்றன என்றும் கூறுகிறது.

குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தான் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

இப்போ பைபிள் கூறுவது உண்மையா?

அறிவியல் கூறுவது உண்மையா?

உண்மை ஒன்றுதான் அனைத்தையும் படைத்தவர் இறைவன் மட்டுமே.

 உலக வரலாற்று நூல்கள்:  , குறிப்பிட்ட நபர்கள், நிகழ்வுகள் மற்றும் அவை நடந்த காலங்கள் போன்ற உண்மைகளைச் சரிபார்த்து, அறிவியல் பூர்வமாகப் பதிவு செய்கின்றன. 

இவற்றின் நோக்கம் கடந்த காலத்தை முடிந்தவரை துல்லியமாகப் பதிவு செய்வது. 

  விவிலியம் நாம்  விசுவசிக்க வேண்டிய உண்மைகளையும், ஆன்மீகக் கருத்துக்களையும் மக்களுக்குக் கற்பிக்க எழுதப்பட்டது. 

 இதன் நோக்கம், பிரபஞ்சத்தின் படைப்பு, 
மனித வாழ்வின் நோக்கம், மற்றும் இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான உறவு 
போன்ற ஆழமான உண்மைகளை எடுத்துரைப்பது.



 விவிலியத்தின் தொடக்க நூல் (Genesis), படைப்பைப் பற்றிய ஒரு நேரடியான, காலவரிசைப்படியான அறிவியல் விளக்கத்தைக் கொடுப்பதற்காக எழுதப்படவில்லை. 

மாறாக, 

பிரபஞ்சமும், அதில் உள்ள அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவை. 

மனிதன் இறைவனது  கட்டளையை மீறி பாவம் செய்தான்.

இறைவன் மீட்பரை அனுப்ப வாக்களித்தார்.

இந்த மறை உண்மைகளே‌ தொடக்க நூலின் முதல் மூன்று அதிகாரங்களிலும் எழுதப்பட்டுள்ளன.

முதல் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாட்கள் 24 மணி நேர நாட்கள் அல்ல. 

ஒரு நிகழ்வுக்கும் அடுத்த நிகழ்வுக்கும் இடைப்பட்ட காலத்தை குறிக்கும் நாட்கள். 

எவ்வளவு காலம் கடந்திருக்குமோ அவ்வளவு காலம்.

அறிவியல் ரீதியான பரிணாம வளர்ச்சியை நாம் ஏற்றுக் கொண்டாலும் அதில் இறைவனின் திட்டம் இருந்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும். 

 அறிவியல் ரீதியாகப் பிரபஞ்சம் பரிணாம வளர்ச்சிப் பாதையில் வந்திருந்தாலும்,

 அந்த வளர்ச்சிப் பாதையின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைவனின் வல்லமை இருந்தது என்பதையே விவிலியம்  உணர்த்துகிறது. 

அதாவது, பரிணாமம் என்பது கடவுளின் படைப்புச் செயலுக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

நம்மை படைக்க நமது பெற்றோரை கடவுள் கருவியாகப் பயன்படுத்துவதை நினைவில் கொள்வோம். 

படைப்பவர் கடவுளே.


எனவே, அறிவியல்  ரீதியான பரிணாம வளர்ச்சிக் கோட்பாடும், (Theory)

 இறையியல் ரீதியான பைபிள் போதனையும்   ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல.

 மாறாகப் பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மையை வெவ்வேறு கோணங்களில்  விளக்குகின்றன. 

நாம் உண்ணும் உணவு எவ்வாறு சீரணம் ஆகிறது என்பதை உடற்கூற்றைச் சார்ந்த அறிவியல் விளக்குகிறது.

நமது உடலைச் சார்ந்த ஒவ்வொரு நிகழ்வும் இறை வல்லமையால் தான் நடக்கிறது என்பது ஆன்மீக உண்மை.

திருமணத் தம்பதியர் குழந்தை வரம் கேட்டு திருத்தலங்களுக்குச் செல்வத்திலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம்.

அறிவியல் நிகழ்வுகளுக்கும் காரண கர்த்தா இறைவன் தான்.

நோவேயின் காலத்தில் உலகின் பெரும் பகுதியை நீர்ப் பெருக்கால் அழித்தது  யார்?

கடவுள்.

பழைய ஏற்பாட்டு யோசைப்பின் காலத்தில் எகிப்தில் ஏழு ஆண்டுகள் வளத்துக்கும், ஏழு ஆண்டுகள் பஞ்சத்துக்கும் காரணம் யார்?

கடவுள்.

ஒவ்வொரு நிகழ்வுக்கும் விஞ்ஞானிகள் அறிவியல் ரீதியான காரணத்தைக் கூறுவார்கள்.

இறையியலார் ஆன்மீக ரீதியான காரணத்தைக் கூறுவார்கள்.

அறிவியல் விதிகளைப் படைத்தவரே கடவுள் தான்.

அனைத்துக்கும் ஆதி காரணர் கடவுள்தான்.

பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொள்ளலாமா?

கடவுளை மையமாக வைத்து ஏற்றுக் கொள்ளலாம்.

இயற்கையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் இறைவனால் மட்டும் ஏற்படுகிறது.

இயற்கையைப் படைத்தவர் இறைவன்.

லூர்து செல்வம்.

Friday, August 29, 2025

நித்திய காலமாகத் தீர்மானிக்கப் பட்ட இறைவனின் மீட்புத் திட்டம்.




நித்திய காலமாகத் தீர்மானிக்கப் பட்ட இறைவனின் மீட்புத் திட்டம்.


ஈசாக்குக்கு இரண்டு பிள்ளைகள், மூத்தவன் ஏசா, இளையவன் யாக்கோபு.

ஈசாக்கு ஏசாவுக்குக் கொடுக்க ஆசைப்பட்ட ஆசீர்வாதங்களை யாக்கோபு தந்தையை ஏமாற்றி வாங்கிக் கொண்டான்.

ஏமாற்றுவது பாவம்.

சாக்கடையில் விழுந்தவரைக் காப்பாற்ற சாக்கடைக்குள் குதிப்பது போல் பாவிகளை மீட்க வந்த இயேசு ஏமாற்றிய அந்தப் பாவியின் வம்சத்தில் தான் மனிதனாகப் பிறந்தார்.

இயேசுவும், திரு முழுக்கு யோவானும் யாக்கோபின் வம்சத்தினர்.

ஆனால் ஏரோது மன்னர்கள் ஏசாவின் வம்சத்தில் பிறந்தவர்கள்.

ஒரு ஏரோது இயேசுவைக் கொல்ல முயன்றான்.

அந்த முயற்சியில் மாசில்லாக் குழந்தைகளைக் கொன்றான்.

இன்னொரு ஏரோது திரு முழுக்கு யோவானைக் கொன்றான் 

நம்மைப் பாவத்திலிருந்து மீட்கப் பிறந்த இயேசுவும், அவரின் முன்னோடி திரு முழுக்கு யோவானும், வில்லனாகச் செயல் புரிந்த ஏரோதும் ஒரே வம்சத்தினர்,
ஈசாக்கின் வம்சத்தினர்.


இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆன்மீகப் பாடம் ஏதாவது இருக்கிறதா?

தியானிப்போம்.


யாக்கோபு பாவம் செய்தவன்.

அவனுடைய வம்சத்தில் இயேசுவும், யோவானும் பிறந்தது இயேசு பாவத்தை வெறுத்தாலும் பாவியை நேசிக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

நாம் எவ்வளவு பெரிய பாவத்தை எத்தனை முறைகள் செய்தாலும் நம்மீது கடவுள் கொண்டுள்ள அன்பு இம்மி அளவு கூட குறையாது.

ஒருவன் கடவுளை வெறுத்தாலும் அவர் அவன்மீது அன்பு செய்து கொண்டுதானிருப்பார்.

சாத்தானைக் கூட கடவுள் நேசிக்கிறார்.  ஏனெனில் அவர் மாறாதவர். தன் அன்பின் காரணமாகத்தான் அவர் லூசிபெரைப் படைத்தார்.

லூசிபெர் சாத்தானாக மாறியிருக்கலாம். ஆனால் அவரைப் படைக்கக் காரணமான இறை அன்பு மாறாது.

நாம் தவறு செய்தாலும், கடவுள் நம்மை தன் திட்டங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்தது பாவம்.

பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் இயேசுவின் பாடுகளுக்குக் காரணமாக இருந்தது பாவம்.

ஆனால் அவர்களைத் தனது மீட்புப் பணிக்குப் பயன்படுத்திக் கொண்டார்.

  ஏசா வழிவந்த ஏரோது மன்னர்கள், இயேசுவையும் யோவானையும் எதிர்த்தனர்.

ஏசா குடும்பத்தில் பிறந்த காரணத்தினால் ஏரோது கெட்டவனாக மாறவில்லை.

எந்தக் குடும்பத்தில் பிறந்தாலும் அவனவன் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ மாறுவதற்கு அவனவன்தான் பொறுப்பு.

அனைவரையும் படைப்பவர் கடவுள்.

யாக்கோபின் வம்சத்தில் மனிதனாகப் பிறந்த அதே இறைமகன் தான் ஏசாவின் வம்சத்தில் ஏரோதுவைப் படைத்தார்.

ஏரோது தன்னைக் கொல்லத் தேடுவான் என்றும், ஆயிரக்கணக்கான மாசில்லாக் குழந்தைகளை கொல்வான் என்றும் அவருக்கு நித்திய காலமாகத் தெரியுமே!

ஏரோதுவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்,

நாம் எப்படிப் பட்ட குடும்பத்தில் பிறந்தாலும் நாம் நல்லவர்களாக வாழ வேண்டும்.

ஒரு மனிதன் எந்த வம்சத்தில் பிறந்தாலும், அவனது செயல்களும் தெரிவுகளுமே அவனது ஆன்மீக நிலையைத் தீர்மானிக்கின்றன.


 ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், ஒருவர் தவறான பாதையில் செல்ல முடியும்.

 அதேபோல, குறைபாடுகள் உள்ள குடும்பத்தில் பிறந்தாலும், ஒருவர் கடவுளுக்கு உகந்தவராக மாற முடியும்.

யாக்கோபு ஏமாற்றியது பாவம், ஆனால் கடவுள் அந்தப் பாவத்தையும் தன் மீட்புத் திட்டத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டார்.

 இது, கடவுளின் அளவற்ற இரக்கத்தையும், மனிதர்களின் குறைகளைத் தாண்டிச் செயல்படும் அவரது வல்லமையையும் காட்டுகிறது.


மேலும், ஒரு குறிப்பிட்ட வம்சத்தில் பிறந்த ஒருவரைக் கொல்வதற்கு அதே வம்சத்தைச் சேர்ந்த இன்னொருவர் முயன்றது,

பாவத்தின் விளைவுகளை எடுத்துக் காட்டுகிறது.

 வம்சாவளி ஒற்றுமையைக் கூட, பாவத்தால் ஏற்படும் விளைவு சீர்குலைத்து விடுகிறது.


நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆன்மீகப் பாடங்கள்.


 மனிதர்களின் தவறுகளைத் தாண்டியது கடவுளின் திட்டம்.

 நாம் தவறு செய்தாலும், கடவுள் நம்மைக்  கைவிடுவதில்லை. 

 நம்மையும் தன் மீட்புத் திட்டத்தில் பயன்படுத்துகிறார்.

யாக்கோபு இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.


  நாம் எந்தக் குடும்பத்தில் பிறந்தாலும், நல்லவராகவும் கெட்டவராகவும் மாறுவதற்கான சுதந்திரம் நமக்கு உண்டு. 

ஏரோது மன்னர்களின் வரலாறு, நம்முடைய சொந்தத் தேர்வுகள்தான் நம்முடைய ஆன்மீக வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்பதை உணர்த்துகிறது.

கடவுள் நித்தியர். நித்திய காலமும் நடந்தவை, நடக்கின்றவை, நடக்கப் போகின்றவை அனைத்தையும் அறிந்தவர்.

பாவம் தவிர மற்ற அனைத்தும் அவரது திட்டப்படி தான் நடக்கின்றன. அவரது விருப்பத்துக்கு எதிர் மாறான பாவத்தைக் கூட தனது திட்டத்திற்கு அவர் பயன்படுத்திக் கொள்கிறார்.

ஏசா, யாக்கோபு ஆகியோரின் வம்ச வரலாறு இதைத்தான் சுட்டிக் காண்பிக்கிறது. 

லூர்து செல்வம்.

Thursday, August 28, 2025

"நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்" என்றும் ஆணையிட்டுக் கூறினான். (மாற்கு.6:23)



"நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்" என்றும் ஆணையிட்டுக் கூறினான். 
(மாற்கு.6:23)

ஏரோது தன் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளை வைத்திருந்தான்.

அது தவறு என்று திரு முழுக்கு யோவான் சுட்டிக்காட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த ஏரோதியாள் அவரைக் கைது செய்யும்படி ஏரோதுவைக் கேட்டுக் கொண்டாள்.

அவளைத் திருப்திப் படுத்துவதற்காக அவரைக் கைது செய்தான்.

ஏரோதியாளைத் திருப்திப் படுத்துவதற்காக யோவானைக் கைது செய்தது போலவே நடனமாடிய அவளது மகளைத் திருப்திப் படுத்துவதற்காக,

"நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்" என்றும் ஆணையிட்டுக் கூறினான்.

இது சிந்திக்காமல் உணர்ச்சிவசப்பட்டு கொடுத்த வாக்குறுதி.

அவள் தனது தாயின் விருப்பப்படி யோவானின் தலையைக் கேட்டாள்.

ஏரோது இதை எதிர்பார்க்கவில்லை.

ஆனால் வாக்குறுதி கொடுத்தது  கொடுத்ததுதானே.

வேறு வழியின்றி தனது விருப்பத்துக்கு மாறாக யோவானின் தலையை வெட்டச் செய்தான்.

சிந்தியாமல் கொடுத்த வாக்குறுதிக்காக அவனுக்குக் கிடைத்த தண்டனை இது.

பைபிளில் இது ஏரோதுவுக்கு கிடைத்த தண்டனை என்று நேரடியாகக் கூறப்படாவிட்டாலும், 

இந்தச் செயல் அவனது மனதிற்குப் பெரும் வேதனையையும், குற்றவுணர்வையும் அளித்திருக்க வேண்டும்.

பிறர் செய்த தவறுகளிலிருந்தும் நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

கடவுளுடைய கட்டளையை நமது முதல் பெற்றோர் மீறியதால் அவர்களுடைய பிள்ளைகளுடைய வாழ்வு பாதிக்கப்பட்டது.

குடும்பத்தில் பெற்றோர் செய்கிற பாவங்கள் துர்மாதிரிகையாக செயல்பட்டு குடும்பத்தினர் அனைவரின் ஆன்மீக வாழ்வையும் பாதிக்கும் என்று பெற்றோர் உணர வேண்டும்.

குடிகாரத் தந்தையின் மகனும் குடிகாரனாக மாறுவதை அனுபவப் பூர்வமாக பார்க்கிறோம்.

ஏரோதுவின் அனுபவத்திலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்?

உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் எந்த முடிவும் சரியான விளைவுகளைத் தராது.

ஏரோது உணர்ச்சி வசப்பட்டு வாக்குக் கொடுத்ததால்
அவன் காப்பாற்ற ஆசைப்பட்ட  யோவானை அவனே கொன்று விட்டான்.

நமது அன்றாட வாழ்க்கை அனுபவத்தில் கோபம், பொறுமை இன்மை, பேராசை போன்ற வேண்டாத குணங்களின் காரணமாக நாம் எடுக்கும் அவசர முடிவுகள் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும்.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஒரு சிறு வாக்குவாதம். 

மனைவி விலை உயர்ந்த பட்டுச்சேலை ஒன்று வாங்க ஆசைப்படுகிறாள். 

கணவனின் பொருளாதாரம் நிலை அதற்கு ஒத்து வரவில்லை. 

இதன் காரணமாக அவர்களே வாக்குவாதம் ஏற்படுகிறது. 

வாக்குவாதம் சண்டையாக மாறுகிறது. 

மனைவி உணர்ச்சிவசப்பட்டு,

"ஒரு சேலை கூட எடுத்துத்  தர வக்கில்லாத உங்களோடு வாழ்வதும் ஒன்றுதான், சாவதும் ஒன்றுதான். 

இனி உங்களோடு வாழப்போவதில்லை. 

எங்கள் அம்மா வீட்டுக்கு போகிறேன். 

உயிர் போனாலும் திரும்பி வர மாட்டேன். 

இதுதான் உங்களோடு பேசும் கடைசி வார்த்தை." என்று உணர்ச்சிவசப்பட்டு கூறிவிட்டு தனது பொருட்களையும் எடுத்துக் கொண்டு தாய் வீட்டுக்குப் போய் விடுகிறாள்.

அதே கோப உணர்வோடு நாட்கள் கடக்கின்றன. 

நாட்கள் மாதம் ஆகிறது. 

கோபம் போய்விட்டது.

ஆனால் தன்மான உணர்ச்சி இருவரையும் கட்டி போட்டு விட்டது. 

உணர்ச்சி வசப்பட்டு பேசியதற்காக வருந்தினாலும் மாதங்கள் கடந்தும் ஒன்று சேர முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதியர் உலகில் உள்ளனர். 

காரணம் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிற முடிவுதான்.

உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் எந்த முடிவும் நல்ல விளைவுகளைத் தராது.


ஏரோது தன் அற்பமான கௌரவத்திற்காக யோவானைக் கொன்றான். 

ஒரு அரசனாக, அவன்
 தான் கொடுத்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கலாம். 

ஆனால் உணர்ச்சிவசப்பட்டு வாக்குக் கொடுத்ததால், அவன் ஒரு தவறான முடிவை எடுத்து, பின்னர் வருந்தினான்.


 தம்பதியரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு  நம் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல சூழ்நிலைகளுக்குப் பொருந்தும்.

 கோபம், பொறுமையின்மை அல்லது பேராசை போன்ற உணர்வுகள் நம்மை அவசரமான, முதிர்ச்சியற்ற முடிவுகளை எடுக்கத் தூண்டுகின்றன.


உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளைத் தவிர்ப்பது எப்படி?

 ஒரு நிமிடம் அமைதியாக இருப்போம்.

கோபம் அல்லது மன வருத்தம் ஏற்படும்போது, உடனே பதில் அளிக்க வேண்டாம். 

ஒரு நிமிடம் அமைதியாக இருந்து, நமது மனதை அமைதிப்படுத்திக் கொள்வோம். 


 பின்விளைவுகளை யோசிப்போம். 

நாம் எடுக்கப்போகும் முடிவின் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி யோசிப்போம்.

நமது வார்த்தைகள் அல்லது செயல்கள் மற்றவர்களை எப்படி பாதிக்கும் என்பதை சிந்திப்போம். .
 
மன்னிப்பு கேட்போம்.

 உணர்ச்சிவசப்பட்டு தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தால், தயங்காமல் மன்னிப்பு கேட்போம். 

இது நமது உறவை காப்பாற்ற உதவும்.

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வோம். 

 நாம் எடுத்த முடிவுகள் சரி என்று பிடிவாதம் பிடிக்காமல், நமது முடிவுகளை மாற்றிக்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக்கொள்வோம்.

இது நமது வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும்.

கணவனும் மனைவியும் தங்கள் கோப உணர்வைக் கட்டுப்படுத்தியிருந்தால்,

 அந்தப் பட்டுச் சேலை பிரச்சனையாக மாறியிருக்காது.

 உறவை பாதித்திருக்காது. 

இது ஒரு உதாரணம்.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கத் தூண்டும் சந்தர்ப்பங்கள் நிறைய வரும்.

அப்போதெல்லாம் ஏரோதுவையும், திரு முழுக்கு யோவானையும் நினைத்துக்  கொள்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, August 27, 2025

"விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. "(மத்தேயு .24:42)



"விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது."
(மத்தேயு .24:42)

 மாணவர்களில் இரண்டு வகையினர் இருக்கின்றார்கள். 

எல்லோருமே ஆண்டு இறுதித் தேர்வுக்குத் தயாரிப்பவர்கள் தான்.

சிலர் கல்வி ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே தயாரிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆண்டு முழுவதும் தயாரிப்பார்கள்.

சிலர் ஆண்டின் இறுதியில் தேர்வுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்புதான் தயாரிக்க ஆரம்பிப்பார்கள்.

இதற்குக் காரணம் இறுதித் தேர்வின் கால அட்டவணை ஆரம்பித்திலேயே கொடுக்கப் பட்டு விடுவது தான்.

நமது வாழ்வை இறுதித் தேர்வுக்குத் தயாரிக்கும் பள்ளிக் கூடமாகக் கற்பனை செய்து கொள்வோம்.

ஆனால் இறுதித் தேர்வுக்கான கால அட்டவணை கொடுக்கப் படவில்லை.

ஆண்டின் எந்த நாளிலும் முன் அறிவிப்பு இன்றி தேர்வு நடக்குமானால் நாம் என்ன செய்வோம்?

ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே தேர்வுக்குத் தயாரிக்க ஆரம்பித்து விடுவோம்.

நமது பிறப்பு ஆரம்பம்.

இறப்பு இறுதித் தேர்வு.
இறப்பு ஆண்டவர் நம்மை அழைக்க வரும் நாள்.

ஆண்டவர் வாழ்வின் எந்த நேரத்திலும் நம்மை  அழைக்க வரலாம்.

நமது குழந்தைப் பருவத்தில் வரலாம், 
இளமைப் பருவத்தில் வரலாம்,  
வாலிபப் பருவத்தில் வரலாம், 
முதிர்ந்த வயதில் வரலாம்.

எந்த வினாடியில் வருவார் என்று நமக்குத் தெரியாது.

ஆகவே ஒவ்வொரு வினாடியும் நாம் ஆண்டவருடைய வருகைக்குத் தயாராக இருக்க வேண்டும்.

எப்படித் தயாராக இருக்க வேண்டும்?

விண்ணக வாழ்வுக்கு ஏற்ற விதமாய், அதாவது, ஆன்மாவில் பாவம் இல்லாமல் பரிசுத்த நிலையில் தயாராக இருக்க வேண்டும்.

நமது உடலில் நோய் எதுவும் இல்லையே, நோய் வராமல் சுகாதாரத்தோடு வாழ்ந்தால் முதிர்ந்த வயதில் தான் மரணம் வரும்,

அதுவரை விருப்பம் போல் ஜாலியாக வாழலாம், வயதான பின் பாவ மன்னிப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று எண்ணி வாழ்ந்தால் 

வாலிபப் பருவத்திலேயே எதிர் பாராத நேரத்தில் மரணம் வரலாம்.

உடல்நலத்தோடு இருப்பவர்களுக்கு மரணம் வராது என்று கூற முடியாது.

விபத்தினால் வருவதை நம்மால் தடுக்க முடியாது.

எனக்குத் தெரிந்த மாணவன் ஒருவன் ஆண்டு இறுதித் தேர்வு எழுதப் போய்க் கொண்டிருக்கும் போது வழியிலேயே விபத்தில் இறந்து விட்டான்.

அவன் கவனமாகத் தான் போனான்.

ஆனால் எதிரில் பைக்கில் வந்தவன் கவனமில்லாமல் வந்ததால் இவன் இறந்து விட்டான், அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை.

எதுவும் நமது கையில் இல்லை.

இவனை அழைக்க வந்த ஆண்டவர் அந்த விபத்தைப் பயன் படுத்திக் கொண்டார்.

நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு ஆண்டில் மூன்று நாள் தியானம் முடிந்து 

நான்காவது நாள் காலையில் மாணவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது ஒரு மாணவன் எதிர் பாராத விதமாய் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டான்.

அவன் ஆன்மா தயார் நிலையில் இருந்த போது ஆண்டவர் அவனை அழைத்துச் சென்று விட்டார்.

இதுவும் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நடந்தது.

எங்களுக்குத் தெரிந்த குருவானவர் ஒருவர் ‌எங்களோடு பேசிக்கொண்டிருந்ந போது 

"என் தம்பி இன்னும் ஆறு மாதங்களில் குருப்பட்டம் பெறுகிறார்" என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து அவரைச் சந்திக்க நேர்ந்த போது மாணவர்கள் அவரிடம்,

"சுவாமி, உங்கள் தம்பி எப்போது வருவார்?" என்று கேட்டோம்.

"ஆண்டவரது சித்தம் வேறு மாதிரி இருந்திருக்கிறது."

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

பட்டம் பெறவிருந்தது இமய மலையில் உள்ள கர்சியாங்கில்.

பட்டம் பெற வேண்டிய நாளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பட்டம் பெற வேண்டிய குரு மாணவர்களோடு சில குருக்கள் மலையிலுள்ள காட்டுப் பகுதிக்கு picnic போயிருக்கிறார்கள்.

அவர் தனியாக மலை மேல் ஏறியிருக்கிறார்.

திரும்பி வரவில்லை.

எவ்வளவோ தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஒரு ஆண்டு கழித்து அவரது உடல் காடுகளின் நடுவில் உள்ள பாறையில் சாய்ந்து இருந்தது கண்டறியப்பட்டது.

அதற்கு மேல் ஏறவும் முடியாமல், இறங்கவும் முடியாமல் பாறையில் சாய்ந்தபடி பட்டினி கிடந்து இறந்திருக்க வேண்டும் என்று யூகித்தார்கள்.

உடல் அழுகி விட்டது. முகம் மாறிவிட்டது. கையில் வாட்சின் உதவியுடன் அவர்தான் என்பதை உறுதி செய்தார்கள்.

ஆண்டவர் அவரை இமய‌ மலைக் காட்டில் அழைக்க வந்திருக்கிறார்.

அவர் இதைக் கூறிய போது எங்களுள் ஏற்பட்ட உணர்ச்சியைக் கூற வார்த்தைகள் இல்லை.

மூன்று நாள் தியானம் செய்த உணர்வு ஏற்பட்டது.

நாம் நமது எதிர்காலத்தைப் பற்றி ஆயிரம் கனவுகள் வைத்திருப்போம்.

 நாம் கேட்காமலேயே நம்மை உலகுக்கு அனுப்பிய கடவுள் நம்மைக் கேட்காமலேயே அழைக்க வருவார் .

நம்மை எப்பொழுது அழைக்க வரவேண்டும் என்பதை நித்திய காலமாக தீர்மானித்திருப்பார். 

எப்போது வேண்டுமானாலும் வரலாம். எந்த சூழ்நிலையிலும் வரலாம். 

நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது முன் அறிவிப்பு இன்றி வந்து நம்மை அழைத்துச் செல்லலாம்.

நான் சாப்பிடும் போது வரலாம். 

அவருக்குத் திருப்பலி ஒப்புக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது வரலாம். 

பயணத்தின் போது வரலாம். 

அலுவலகத்தில் வரலாம். 

நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது வரலாம். 

எப்போது வந்தாலும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். 

அவரையும், நமது பிறனையும் அன்பு செய்து கொண்டு இருக்க வேண்டும். 

சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் அவர் நினைவாகவே இருக்க வேண்டும்.

இக்கட்டுரையை எழுதி முடிக்கு முன்பே ஆண்டவர் என்னை அழைக்க வரலாம்.

நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

லூர்து செல்வம்.

Tuesday, August 26, 2025

"இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்."(லூக்கா .7:15)


"இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்."
(லூக்கா .7:15)

ஒரு ஏழை விதவைத் தாய்க்கு ஆறுதலாக இருந்த ஒரே மகன் இறந்து விட்டான்.

இயேசு அவள் மீது பரிவு கொண்டு இறந்தவனுக்கு உயிர் கொடுத்து, அவனை அவனது தாயிடம் ஒப்படைத்தார்.

இயேசு கடவுள் என்ற கோணத்திலிருந்து இதைப் பற்றி தியானிப்போம்.

இதை தியானிப்பதற்கு முன் இன்னொரு இறை வசனத்தைக் குறிப்பிட வேண்டும்.

ஒரு நாள் இயேசு சீடர்களோடு சென்றுகொண்டிருந்தபோது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். 

சீடர்கள் இயேசுவிடம் 

"ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்;காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?" என்று  கேட்டார்கள். 

அவர் மறுமொழியாக, "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்."

இவ்வார்த்தைகளைக் கூறியவர் கடவுள். 

அவரின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்.

அவன் குருடனாக பிறந்ததற்கு காரணம் அனைத்துக்கும் ஆதி காரணராகிய கடவுள்தான்.

 அவரது மகிமை வெளிப்படும்பொருட்டே அவனை அப்படி பிறக்கச் செய்தார்.


Suppose,

இதே கேள்வியைச் சீடர்கள் விதவை தாயின் இறந்த மகனைப் பற்றியும் கேட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

"இந்தப் பையன் இறந்ததற்கு இவன் செய்த பாவம் காரணமா? இவனுடைய அம்மா செய்த பாவம் காரணமா?"

என்று கேட்டால் ஆண்டவர் என்ன பதில் சொல்லியிருப்பார்?

"இவர் செய்த பாவமும் அல்ல; இவர் அம்மா செய்த பாவமும் அல்ல; 

கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே இப்படி இறந்தார்."

என்றுதான் சொல்லியிருப்பார்.

அனைத்தையும் படைப்பவர் கடவுள். 

பாவம் தவிர, மற்ற அனைத்தும் அவரது விருப்பப்படி தான் நடக்கின்றன.

பாவம் மட்டும் அவருடைய விருப்பத்திற்கு எதிரானது.

நாம் பிறந்தது, வளர்ந்தது. கற்றது, நோய் வாய்ப்பட்டது, சுகமானது, நோயிலையே தொடர்வது, விழுவது, எழுவது போன்ற அனைத்தும் அவரது விருப்பப்படிதான் நடக்கின்றன. 

நடப்பது அனைத்தும் அவரது மகிமை வெளிப்படவே.

செழிப்பு, பஞ்சம், புயல், வெள்ளம், நில நடுக்கம், சுனாமி, தொற்று நோய்கள்... எதுவும் அவரது அனுமதியின்றி நம்மைத் தாக்க முடியாது.

அவை யாவும் அவரது மகிமை வெளிப்படவே அனுமதிக்கப்படுகின்றன. 

வேளாங்கண்ணியில் நடக்க முடியாத படி ஒரு பையனை ஏன் கடவுள் படைத்தார்? 

அன்னை மரியாள் மூலம் அவரது மகிமை வெளிப்படுவதற்காக. 

எது நடந்தாலும் இறைவனாலேயே என்ற விசுவாசம் நமது மனதில் ஆழமாக பதிந்திருந்தால், 

நமக்கு என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றி கூறுவோம். 

என்ன நேர்ந்தாலும் இறைவனது மகிமைக்காக அவருக்கே ஒப்புக் கொடுப்போம்.

பாவம் அவரது விருப்பத்திற்கு எதிரானதாகையால் நாம் பாவம் செய்ய மாட்டோம்.

பாவத்துக்கு  நாம்தான் பொறுப்பு.

பாவம் கடவுளின் விருப்பத்துக்கு எதிரானது.

ஆனாலும்  மனிதனைத் தன் சாயலாகப் படைத்த கடவுள் பரிபூரண சுதந்திரம் என்ற தனது பண்பையும் அவனோடு பகிர்ந்து கொண்டார். 


மனிதன் சுதந்திரத்தைத் தவறாக பயன்படுத்தி பாவம் செய்தான். 

ஆனால் சுதந்திரம் கடவுளால் கொடுக்கப்பட்டிருப்பதால் அதில் அவர் தலையிடவில்லை. 

தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை.

ஆனாலும் மனிதன் செய்த பாவத்தையும் தனது மகிமை வெளிப்பட கடவுள் பயன்படுத்திக் கொண்டார். 

தீமையிலிருந்தும் நன்மையை வரவழைக்க அவர் வல்லமை பெற்றவர். 

மனிதனாக பிறந்து, 
பாடுகள் பட்டு, 
சிலுவையில் மரித்து மனிதனுடைய பாவத்துக்குப் பரிகாரம் செய்ததின் மூலம் அவன் மேல் அவருக்கு இருந்த அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தினார்.

பாவிகளை மன்னித்து அவருடைய மகிமைக்காக அவர்களை வாழச் செய்தார்.

தனது அன்பின் மிகுதியால் பாவிகளைக்கூட புனிதர்களாக மாற்றினார். 

புனித அகுஸ்தீனார் 30 ஆண்டுகள் பாவியாக வாழ்ந்தவர். 

மனம் திரும்பி  புனிதரானார்.

மன்னிக்கப்பட்ட பாவிகளுக்கு நித்திய பேரின்ப வாழ்வை அளிப்பதன் மூலம் அவரது அளவு கடந்த அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நமது நோய் மருத்துவருடைய திறமையை வெளிக் கொணர்வது போல, 

நமது பாவம் கடவுளுடைய அன்பை நாம் உணரும்படி செய்திருக்கிறது. 

தனது மரணத்தால் நமது பாவத்தை வென்றதோடு 

தனது உயிர்ப்பால் அவரது மகிமையை நாம் உணரும்படி செய்திருக்கிறார். 

பாவம் செய்பவர்கள் அதற்காக வருந்துவது மூலம் பாவ மன்னிப்புப் பெற்று நித்திய பேரின்ப வாழ்வை ஈட்ட நமக்கு வரம் தந்திருக்கிறார்.

கடவுள் நித்திய காலமும் மகிமையோடு வாழ்பவர். 

உலகில் நிகழும் எல்லா நிகழ்வுகளும் அவரது மகிமையை நாம் அறியச் செய்கின்றன. 

பாவிகளாகிய நாம் பாவ மன்னிப்பு பெறும்போது அவரது அளவுகடந்த அன்பை உணர்கிறோம்.

இயற்கையைப் படைத்தவர் அவர். 

அது அவருக்கு கட்டுப்பட்டது. 

எத்தகைய இயற்கை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் நாம் அதில் கடவுளுடைய மகிமையைக் காண வேண்டும்.

என்ன நேர்ந்தாலும் நன்றி கூற வேண்டும்.

மரணம் நேர்ந்தால்?

மகிழ்ச்சியோடு நன்றி கூற வேண்டும், ஏனெனில் மரணம் தான் விண்ணக வாழ்வுக்கான நுழை வாயில்.

இவ்வுலக வாழ்வு முடியும்போது விண்ணக வாழ்வு ஆரம்பிக்கிறது. 

"இறைவா, உமக்கு நன்றி."

லூர்து செல்வம்.

Monday, August 25, 2025

"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்."(மத்தேயு.23:25)



"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்."
(மத்தேயு.23:25)

யூத மக்களை மத ரீதியாக வழிநடத்தி வந்த மறை நூல் அறிஞர்கள்,  பரிசேயர்கள் ஆகியோரின் வாழ்க்கையின் உட்புறம் பாவங்கள் நிறைந்ததாகவும் 

வெளிப்புறம் தூய்மையானது போல தோற்றம் அளிப்பதாகவும் இருக்கிறது என்று கூறிய 

இயேசு உட்புறம் தூய்மையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

நாம் சாப்பிடப் பயன்படுத்தும் பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாக இருந்து உட்புறம் அசுத்தமாக இருந்தால் 

அந்த பாத்திரங்களில் நாம் உண்ணும் உணவு உடல் வளர்ச்சியைத் தருவதற்கு பதிலாக நோய்களையே உற்பத்தி செய்யும்.

அதுபோல அழகான உடலுக்குள் பாவங்கள் நிறைந்த ஆன்மா வசிக்குமானால் அப்படிப்பட்டவர்கள்
 நிலைவாழ்வை அடைய மாட்டார்கள். 

ஆன்மீகத்தில் புறத் தூய்மையை விட அகத்தூய்மையே முக்கியம்

அகத்தில் அசுத்தத்தை வைத்துக்கொண்டு புறத்தில் தூய்மையானவர்களைப் போல நடிப்பவர்களை இயேசு வெளிவேடக்காரர்கள் என்கிறார்.

மனிதர்களுக்கு நம்முடைய புறம் மட்டும் தான் தெரியும், அகம் தெரியாது.

ஆகவே நமது புறத்தை வைத்து நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தீர்மானித்து விடுவார்கள்.

ஆகவே நமது நடிப்பால் அவர்களை ஏமாற்றி விடலாம்.

ஆனால் கடவுளுக்கு நமது அகமும் தெரியும், புறமும் தெரியும்.

கடவுளை ஏமாற்ற முடியாது.

கடவுளைப் பொருத்த மட்டில் நமது அகம், அதாவது, ஆன்மா தூய்மையாக இருப்பதே முக்கியம்.

ஆன்மா தூய்மையாக இருக்கிறது என்றால் அது பாவம் இன்றி பரிசுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம்.

நமது ஆன்மாவைத் தூய்மையாக வைத்துக் கொள்வதுதான் ஆன்மீகம்.

ஆன்மாவைப் பொருத்த மட்டில் நோய் என்பது பாவம்.

ஆன்மா நோய் இல்லாமல் இருக்க வேண்டும்.

ஆன்மா நோய்வாய்ப் பட்டால், அதாவது, நாம் பாவம் செய்ய நேரிட்டால் ஆன்மீக மருத்துவராகிய குருவானவரை அணுகி, பாவ மன்னிப்புப் பெற்று குணமாக
வேண்டும்.

உடல் நோய்வாய்ப் பட்டால், அது ஆன்மாவை எந்த வகையிலும் பாதிக்காது.

மாறாக உடல் நோயை சிலுவையாக ஏற்றுக் கொண்டு, சிலுவையைச் சுமந்து ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்தால் நமது ஆன்மா அதிக பரிசுத்தமாக மாறும்.

விண்ணகத்தில் நமது பேரின்பம் அதிகரிக்கும்.

நாம் உலகில் பிறந்ததே பாவம் இல்லாமல் பரிசுத்தமாக வாழ்ந்து விண்ணக வாழ்வை ஈட்டுவதற்காகத் தான்.

பர்ணஞானம் அல்போன்சா சகோதரி தன் வாழ்நாள் முழுவதும் உடல் ரீதியாக நோய்வாய்ப்பட்டு, நோயின் உதவியால்தான் புனித அல்போன்சாவாக மாறினாள்.

புனித பிரான்சிஸ் அசிசியார் தனது பரிசுத்தமான வாழ்வுக்கு பரிசாக இயேசுவிடமிருந்து ஐந்து காய வரம் பெற்றார்.

காயங்களின் வேதனையை இயேசுவுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தார்.

நமது உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருப்போம்.

தூய்மையான உள்ளத்தில் தூய்மையான சிந்தனை பிறக்கும்.

சிந்தனை தூய்மையானால் சொல்லும், செயலும் தூய்மையாக இருக்கும்.

சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் தூயவர்களாக வாழ தூய ஆவியின் வரம் கேட்டு வேண்டுவோம்.

லூர்து செல்வம்

Sunday, August 24, 2025

"குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா?"(மத்தேயு .23:17)



"குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா?"
(மத்தேயு .23:17)

 மறைநூல் அறிஞர்களும், பரிசேயரும், 

"திருக்கோவிலின்மீது ஆணையிட்டால். ஒன்றுமில்லை; 

ஆனால் அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள்."

என்று கூறிய வார்த்தைகளை மேற்கோள் காட்டி 

இயேசு அவர்களைப் பார்த்து,

"குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா?"

என்கிறார்.

கோவில் என்றால் என்ன?

 இறைவனை அனைவரும் பொதுவாக வழிபடுவதற்காக மக்கள் ஒன்று கூடும் இடம். 

அவரவர் வீட்டில் தனித்தனியே வழிபடுபவர்கள் கிறிஸ்தவ சமூகம் எந்த முறையில் எல்லோரும் ஒன்று கூடி ஒரே குடும்பமாக வழி படுவதற்காக கட்டப்பட்டிருப்பது தான் கோவில், ஆலயம்.

நமது ஆலயத்தில் மனுமகனான இறைமகன் திவ்ய நற்கருணையில் வாசம் செய்கிறார். 

ஆகவே ஆலயம் இறைவன் வாழும் வீடு. நாம் இறைவனின் பிள்ளைகள், ஆகவே ஆலயம் நமது வீடு.

வீட்டின் பராமரிப்புக்காகவும் அதில் வாழும் மக்களின் பராமரிப்புக்காகவும் தேவைப்படும் பணத்தை ஈட்ட மக்கள் வேலைக்குச் செல்கிறார்கள். 

ஆலயத்தைப் பொருத்தமட்டில் ஆலய பராமரிப்புக்காக நாம் காணிக்கை செலுத்துகிறோம். 

நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது,

ஆலய பராமரிப்புக்காக நாம் காணிக்கை செலுத்துகிறோம்,

காணிக்கைக்காக ஆலயம் பராமரிக்கப்படுவதில்லை. 

வாழ்வதற்காகச் சாப்பிடுகிறோம்,

சாப்பிடுவதற்காக வாழவில்லை. 

சாப்பிடுவதற்காக வாழ்பவன் மடயன், அதாவது, புத்தியைப் பயன்படுத்த தெரியாதவன்.

ஆண்டவர் பரிசேயர்களை நோக்கி, 

"குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா?"

என்று சொல்கிறார். 

அவர்கள் கோவிலை விட அங்கு வசூலாகும் காணிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

"யாராவது திருக்கோவிலின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; 

ஆனால் அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள்."

என்று மக்களுக்குப் போதித்தார்கள்.

கோவிலை விட அங்குள்ள பொன்னுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். 

ஆகவேதான் அவர்களை இயேசு "குருட்டு மடையர்கள்" என்கிறார். 

ஆன்மீக ரீதியாக அவர்களுக்கு கண்ணும் தெரியவில்லை, புத்தியை பயன்படுத்தவும் தெரியவில்லை. 

அவர்கள் இப்போது இல்லை. 

இயேசுவின் வார்த்தைகளை வாசிக்கும் நாம் இப்போது வாழ்கிறோம். 

நாம் ஆலயத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட 

அங்கு செலுத்தப்படும் பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் ஆண்டவரது வார்த்தைகள் நமக்கும் பொருந்தும்.

திருப்பலியின் போது ஏன் காணிக்கை செலுத்துகிறோம்? 

திருப்பலியில் நமது பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காக. 

உண்டியலில் நாம் ஏன் காணிக்கை போடுகிறோம்? 

ஆலய பராமரிப்புக்காக.

கோவிலுக்கு ஏன் நன்கொடைகள் கொடுக்கிறோம்? 

ஆலய பராமரிப்புக்காகவும், இறை மக்களுக்கு ஆலயம் செய்யும் உதவிகளுக்காகவும்.

நிதித் திரட்டுவது நோக்கம் அல்ல, ஆலயப் பராமரிப்பு தான் நோக்கம். 

நாம் கடவுளிடம் ஏதாவது உதவி கேட்கும் போது நேர்ச்சை செய்கிறோம். 

நாம் கேட்பது கிடைத்துவிட்டால் இவ்வளவு தொகை ஆலயத்திற்கு காணிக்கையாகக் கொடுத்து விடுகிறோம் என்று.

காணிக்கையின் நோக்கம் இறைவனைக் கவர்வது அல்ல.

உலகில் உள்ள அனைத்தும், அதில் வாழும் மக்கள் உட்பட, அவருக்கே சொந்தம். 

அவருக்கு சொந்தமானதை அவரிடம் கொடுப்பதில் என்ன பெருமை இருக்கிறது? 

காணிக்கை கொடுப்பதில் மூலம் நாம் இறை அரசின் குடிமக்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். 

நாம் இறைவனால் தான் வாழ்கிறோம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். 

காணிக்கை நமது தாழ்ச்சிக்கான அடையாளம்.

ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதாக நேர்வதும் கூட ஒரு காணிக்கை தான். 

கோவில் உண்டியலில் போடுவது எப்படி காணிக்கையோ,  அப்படியே கோவில் முன்னால் கையேந்தி நிற்கும் ஏழைகளுக்குக் கொடுப்பதும் காணிக்கைதான்.

இறைவனால் படைக்கப்பட்டவர்களுக்கு நாம் எதைக் கொடுத்தாலும் இறைவனுக்கே கொடுக்கிறோம். 

கோவிலில் அசன விருந்து அளிப்பது இந்த நோக்கத்தோடு தான்.

வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை அயலானுக்கு என்று ஒதுக்குபவர்கள் பாக்கியவான்கள்.

அவர்களுக்கு இறைவன் தன்னை முழுமையாகக் கொடுத்து விடுவார்.

இறைவன் வாழும் வீடு ஆலயம்.

அனைவருடைய உள்ளங்களிலும் இறைவன் வாழ்கிறார்.

அப்படியானால் அனைவரும் இறைவனுடைய ஆலயங்கள் தான்.

ஆலயங்களைப் பராமரிப்பது நம் அனைவரின் கடமை.

ஆனாலும் ஒன்றை நினைவில் கொள்வோம்.

பராமரிப்புக்கு நாம் கொடுப்பதை விட ஆலயங்கள் தான் முக்கியம். 

ஆகவே நமது அயலானை நிபந்தனையின்றி, சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நேசிப்போம். 

லூர்து செல்வம்

Saturday, August 23, 2025

"இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்." (லூக்கா.13:24)



"இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்."
(லூக்கா.13:24)

ஆன்மீக நடைப் பயணத்தில் இரண்டு விதமான பாதைகளை விவிலியம் குறிப்பிடுகின்றது.

ஒன்று அகலமான பாதை. விருப்பம்போல் ஆடிப் பாடி ஜாலியாகப் பயணிக்க ஆசைப்படுபவர்கள் இதன் வழியே செல்வர்.

இறைவனுடைய விருப்பத்தைப் பற்றிக் கவலைப் படாமல் தங்கள் விருப்பப்படி வாழ்பவர்கள் பாவ வாழ்க்கை வாழ்வார்கள்.

பாவத்தையே வாழ்க்கையாக கொண்டவர்களுக்கு விண்ணகத்தில் இடம் இல்லை.

ஆக அகலமான பாதை விண்ணக வாழ்வுக்குள் இட்டுச் செல்லாது.

அடுத்தது இடுக்கமான பாதை. அகலம் குறைந்தது.

மறை நூல் படி வாழ்பவர்களுக்கான பாதை.

அதன் அகலம் நூல் அளவு தான் இருக்கும்.

மறை நூல் பாதையில் நடப்பவர்களால் ஆடிக்கொண்டு நடக்க முடியாது.

அங்கு இங்கு சாயாமல் நேராக, நேர்மையாக நடப்பவர்கள் தான் இதன் வழியே நடக்க முடியும்.

இதன் வழியே நடப்பவர்கள் உலக ஆசைகளையும், பாவங்களையும் முற்றிலுமாக விட்டுவிட வேண்டும்.

சொந்த விருப்பத்துக்கு இங்கே இடம் இல்லை.

கடவுளின் விருப்பம் தான் அவர்களுடைய விருப்பமாக வேண்டும்.

 கடவுளின் கட்டளைப்படி மட்டுமே வாழ  வேண்டும்.

மக்கள் தங்கள் விருப்பம் வாழ முடியாத வாழ்க்கை  கடினமானது.

வாழ்க்கைப் பாதையும் கடினமானது.

பாதை குறுகலாக இருப்பதால் தலையைக் கூட அங்கும் இங்கும் ஆட்ட முடியாது. 

ஆட்டினால் தலை அகலமான பாதைக்கு சென்று விடும்.

நேராக பார்த்து தான் நடக்க வேண்டும்.

மனதில் விண்ணக வாழ்வு மட்டும் தான் இருக்க வேண்டும். 

கண்கள் விண்ணக அரசை நோக்கியதாகவே இருக்க வேண்டும்.

காதுகள் விண்ணரசின் செய்திகளை மட்டுமே கேட்க வேண்டும். 

விண்ணரசைச் சார்ந்த வார்த்தைகள் மட்டுமே வாயில் வர வேண்டும்.

கால்களை அகல எடுத்து வைத்தால் அகலமான பாதைக்குள் செல்ல நேரிடும்.
ஆகவே குறுகலான பாதை வழியே மட்டும் நடக்க வேண்டும். 

சிலுவைப் பொறியில் ஐம்புலன்களையும் அவித்த நமது ஆண்டவர் நடந்த பாதை. 

நடக்கக் கடினமாக தான் இருக்கும்.

ஆனாலும் குறுகலான சிலுவைப் பாதை வழியே நடந்தால் தான் இயேசு வாழும் விண்ணகத்துக்குள் நுழைய முடியும்.

ஐம்புலன்களின் ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் இயேசுவின் விருப்பத்தை மட்டும் மனதில் கொண்டு குறுகலான பாதை வழியே நடப்போம்.

 விடாமுயற்சியோடும், அர்ப்பணிப்பு உணர்வுடனும், 
சுயக் கட்டுப்பாட்டோடும், தியாக உணர்வோடும்,  உறுதியான விசுவாசத்தோடும் 
குறுகலான பாதை வழியே நடந்து விண்ணகம் செல்வோம்.


குறுகலான  வாயில் வழியே நுழைவோம்.

இயேசுவோடு ஒன்றித்து நித்திய காலம் அவரோடே வாழ்வோம். 

லூர்து செல்வம்

Friday, August 22, 2025

"உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்." (மத்தேயு.23:11)



"உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்."
(மத்தேயு.23:11)

இயேசு இறைமகன்.
அனைத்தையும் படைத்தவர்.
அனைவரிலும் பெரியவர்.

நாம் அவருடைய தொண்டர்கள்.

நமது தலைவராகிய அவர் என்ன செய்தார்?

அவருடைய தொண்டர்களாகிய நம்மைப் போல மனிதனாகப் பிறந்தார்.

பிறந்து 30 ஆண்டுகள் தன்னால் படைக்கப்பட்ட யோசேப்புக்கும் மரியாளுக்கும் கீழ்ப்படிந்து நடந்தார்.

மூன்று ஆண்டுகள் சாதாரண மக்களுக்கு சேவை செய்து கொண்டே நற்செய்தியை அறிவித்தார். 

அவர் செய்த முக்கியமான சேவைகள் நோயாளிகளைக் குணமாக்கியது, இறந்தவர்களை உயிர்ப்பித்தது, பசித்தவர்களுக்கு உணவு கொடுத்தது,
பாவங்களை மன்னித்ததன் மூலம்  ஆன்மாக்களைப் பரிசுத்தமாக்கியது
போன்றவை.

தலைவராக இருப்பவர் தொண்டர்களுக்குத்
 தொண்டு செய்ய வேண்டும் என்பதற்கு அடையாளமாக புனித வியாழன் அன்று தன்னுடைய சீடர்களின் பாதங்களைக் கழுவினார்.

தனது வாழ்வின் இறுதி நாளில் தலைவராகிய அவர் தொண்டர்களாகிய நமது பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

தொண்டு என்றால் சேவை.

இன்று நமக்கு ஆன்மீக சேவை செய்து கொண்டிருப்பவர்கள் யார்? 

நமது தலைவராகிய இயேசுவின்  பிரதிநிதிகள். 

இயேசுவாக நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். 

திருப்பலியின் போது அவர்கள் கூறும் 

"இது என் சரீரம்"
"இது என் ரத்தம்"

என்ற வார்த்தைகளும்,

பாவ சங்கீர்த்தனத் தொட்டியில் அவர்கள் கூறும், 

"நான் உன் பாவங்களை மன்னிக்கிறேன்"

என்ற வார்த்தைகளும் 

தனது குருக்களின் மூலம் இறைமகன் இயேசுவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை நமக்கு விளக்குகின்றன.

அதாவது குருக்களின் உருவத்தில் மக்களிடையே தொண்டாற்றிக் கொண்டிருப்பவர் இறை மகன் இயேசுவே. 

தலைவர் அவருடைய தொண்டர்களுக்குத் தொண்டு புரிகிறார்.

தொண்டர்கள் என்ன செய்ய வேண்டும்? 

தலைவருக்குத் தொண்டு செய்பவன் தான் தொண்டன். 

நாம் நமது அயலானுக்குத் தொண்டு செய்யும் போது நமது தலைவருக்குத் தொண்டு செய்கிறோம். 

அயலானுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்றால் அவனை நாம் நேசிக்க வேண்டும். 

ஆகவே நாம் அயலானை நேசிக்கிறோம். 

நேசிக்கும் போது நேசத்தின் உருவாகிய இயேசுவைப் பிரதி பலிக்கிறோம்.

நாம்  அயலானை நேசித்து அவனுக்கு வேண்டிய உதவிகள் செய்யும்போது மற்றவர்கள் நம்மில் இயேசுவைக் காண்பார்கள். 

அதாவது நமது தலைவரைக் காண்பார்கள். 

இப்போது ஒரு உண்மை புரிந்திருக்கும். 

நாம் மற்றவர்களுக்குத் தொண்டு செய்யும்போது மற்றவர்கள் நம்மில் நமது தலைவராகிய இயேசுவைக் காண்பார்கள். 

மற்றவர்கள் நம்மில் இயேசுவைக் காண வேண்டுமென்றால் நாம் அவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும்.

"உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்."

நாம்  மற்றவர்களுக்குத் தொண்டு செய்யும் போது  பெரியவர்களாக மாறுகிறோம்.

இயேசு தன்னை நேசிப்பது போல நம்மையும் நேசிக்கிறார். 

அவரைப் பின்பற்றி நாமும் நம்மை நேசிப்பது போல நமது பிறரை நேசிக்க வேண்டும். 

இயேசு நம்மை நேசிப்பதன் காரணமாக நமக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறார். 

நாமும் இயேசுவைப் பின்பற்றி நமது பிறருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். 

கிறிஸ்துவைப் போல் வாழ்ந்தால்தான் நாம் கிறிஸ்தவர்கள்.

கிறிஸ்தவர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Thursday, August 21, 2025

"உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள்."(மாற்கு.16:15)



 "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்."
(மாற்கு.16:15)

உலகெங்கும் சென்று நற் செய்தியை அறிவிக்க நமக்கு கட்டளை கொடுத்தவர் நமது ஆண்டவர் இயேசு.

"விசுவசித்து திரு முழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்."
(மாற்று.16:16)

"அனைவருக்கும் நற் செய்தியை அறிவியுங்கள்,

 விசுவசிப்பவர்களுக்குத் திருமுழுக்கு கொடுங்கள்."

நாம் அனைவருக்கும் நற்செய்தியைச் சொல்லாலும் செயலாலும் அறிவிக்க வேண்டும்.

விசுவசிப்பவர்களுக்கு மட்டுமே திருமுழுக்குக் கொடுக்க வேண்டும்.

நற் செய்தியை  விசுவசிப்பவர்கள் திருமுழுக்கு பெற ஆசைப்படுவார்கள். 

திருமுழுக்கு வேண்டும் என்று கேட்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். 

இங்கே கட்டாய மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. 

இயேசு கடவுள், நம்மைப் படைத்தவர்.

கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதற்காகவே நாம் இவ்வுலகில் படைக்கப்பட்டிருக்கிறோம். 

கடவுளின் கட்டளைகளுக்கு எதிராக யார் கட்டளை கொடுத்தாலும்,

அது நம்மை ஆண்டு கொண்டிருக்கும் லௌகீக அரசாக இருந்தாலும்

அதற்கு நாம் கீழ்ப்படியக்  கூடாது.

மத்தியில் நம்மை ஆண்டு கொண்டிருக்கும் இந்துத்துவா அரசு நாம் இயேசுவின் நற்செய்தியை போதிப்பதை விரும்பவில்லை. 

அவர்கள் எதை விரும்புகிறார்கள், எதை விரும்பவில்லை என்பதைப் பற்றி நமக்கு கவலை இல்லை.

நாம் கிறிஸ்தவர்கள்.  கிறிஸ்துவின் வழியே நடப்பவர்கள். 

எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசிப்பவர்கள். 

நம்மை நாம் நேசிப்பது போல மற்றவர்களையும் நேசிப்பவர்கள். 

நாம் மீட்படைய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

இயேசுவின் கட்டளைப்படி மற்றவர்களும் மீட்படைய  வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும். 

அந்த ஆசையின் படி தான் நாம் மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கிறோம். 

அவர்கள் விரும்பினால் மற்றும் திருமுழுக்கு கொடுக்கிறோம்.

ஆகவே கிறிஸ்தவர்கள் கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள் என்ற மத்திய அரசின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. 

கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களில் அரசாங்க பாடத்திட்டத்தின் படி தான் கல்வி போதிக்கப்படுகிறது. 

கிறிஸ்தவ மாணவர்களுக்கு மட்டும்தான் ஞானோபதேசம் போதிக்கப்படுகிறது. 

மட்டமானவர்களுக்கு நல்லொழுக்கம் போதிக்கப்படுகிறது. 

புனித கல்கத்தா தெரேசா அவர்களின் வாழ்நாளின் போது "உன்னைப்போல் உனது அயலானையும் நேசி" என்ற இயேசுவின் கட்டளைப் படி 

தனது பிறர் அன்பு செயல்களின் மூலம் மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்கள். 

  அன்புச் செயல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். 

அவர்களுடைய அன்புச் செயல்களுக்கு காரணமாக இருந்தது இயேசுவின் மேல் அவர் கொண்டிருந்த விசுவாசமும், அன்பும். 

அவர்கள் செய்தது மிகப்பெரிய மறைப்பணி.

வேத போதகக் குருக்களுக்கு ஈடாகப் பணியாற்றி எண்ணில்லாத ஆன்மாக்கள் மீட்புப் பெற பாடுபட்டார்கள்.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் நல்ல கிறிஸ்தவனாக வாழ்வதே ஒரு நற் செய்தி அறிவிப்புப் பணிதான்.

இயேசு வார்த்தைகளை விட அவருடைய வாழ்க்கையால் தான் அதிகமாக நற் செய்தியை அறிவித்தார்.

அவர் வாழ்ந்தது 33 ஆண்டுகள். 

வாய் மொழியாக போதித்தது மூன்று ஆண்டுகள் தான்.

மூன்று ஆண்டுகளிலும் அவரது வார்த்தைகளை விட அவர் செய்த அன்புச் செயல்களே அதிகம்.

அதிலும் வாழ்வின் இறுதி நாளில் வெள்ளிக்கிழமை அன்று தனது சிலுவை மரணத்தின் மூலம் அவர் அறிவித்த நற்செய்தி தான் மிகவும் சக்தி வாய்ந்தது. 

இயேசுவைப்போல நாமும் நமது வாழ்க்கையில் நற்செய்தியை அறிவிப்போம். 

அவருக்குச் சித்தமானால் புனித தோமையாரை போல, புனித அருளானநாதரைப் போல, புனித தேவ சகாயத்தைப்போல

நாமும் வேத சாட்சிகளாக மரித்து நற் செய்தியை அறிவிப்போம்.

நமது சாட்சியத்தால் மக்களை மனம் திருப்புவோம், அவர்கள் விருப்பப்படி. 

லூர்து செல்வம்

Wednesday, August 20, 2025

"அரசர் அவனைப் பார்த்து, "தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?" என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான்." (மத்தேயு .22:12)



"அரசர் அவனைப் பார்த்து, "தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?" என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான்."
(மத்தேயு .22:12)


அரசரின் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் திருமண வீட்டுக்குகா கூட்டி வந்தனர். 

வந்தவர்களில் ஒருவர் திருமண உடை அணிந்திருக்கவில்லை.

மாணவர்கள் வீட்டில் எந்த உடை அணிந்திருந்தாலும் பள்ளிக்கூடம் போகும்போது சீருடை அணிந்து போக வேண்டும்.

அல்லது வெளியே அனுப்பப் படுவார்கள்.

அதேபோல தெருவில் சுற்றும்போது என்ன உடை அணிந்திருந்தாலும் திருமண விருந்துக்கு வரும்போது அதற்குரிய உடை அணிய வேண்டும்.

இல்லாவிட்டால் உள்ளே அனுமதிக்கப் படமாட்டார்கள்.

இந்த உவமை விண்ணுலக விருந்துக்கு அழைக்கப் பட்டவர்களைப் பற்றி பேசுகிறது.

லௌகீகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் எப்படி இருந்திருந்தாலும் ஆன்மீகத்துக்குள் நுழையும் போது உண்மையான ஆன்மீக வாதிகளாக மாற வேண்டும்.

லௌகீகத்தில் வாழும் போது அவர்களிடம் உலகப் பொருட்களின் மீது பற்று இருந்திருக்கலாம். 

 ஆனால் ஆன்மீகத்திற்குள் நுழைந்த வினாடி உலகப் பற்றை முற்றிலும் விட்டு விட வேண்டும்.

லௌகீகத்தில் வாழும் போது பொருளைத் தேடி அலைந்திருக்கலாம் 

ஆனால் ஆன்மீகத்திற்குள் நுழைந்த வினாடி முதல் அருளைத் தேடி புறப்பட வேண்டும். 

இறை அருளோடு வாழ்வது என்றால் பாவம் இல்லாமல் வாழ்வது. 

பாவம் இல்லாமல் வாழ்பவன் தான் உண்மையான ஆன்மீகவாதி. 

இறைவனிடம் அருள் வரம் கேட்பவன் ஆன்மீகவாதி. 

பொருள் வரம் மட்டும் கேட்பவன்?

அறம் செய்வதற்காக பொருளை ஈட்டுபவனும் ஆன்மீகவாதி தான். 

ஆனால் பொருளை அனுபவிப்பதற்காக மட்டும் ஈட்டுபவன் லௌகீகவாதி.

 விண்ணக விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் இறை அருளோடு வாழ வேண்டும்.

அதுதான் அவர்கள் அணிந்திருக்கும் திருமண உடை.

புனிதர்களுக்கு விழா எடுக்கிறோம்.

முதல் நாள் கொடி ஏற்றி நவநாள் கொண்டாடி பத்தாவது நாள் விழாவை முடிக்கிறோம்.

கொடி ஏற்றுவது எதற்காக? 

நாம் திருவிழாவை ஆரம்பிக்கிறோம் என்பதற்கு அடையாளமாக. 

நல்லது. 

நவநாட்கள் எதற்காக? 

திருவிழாவை இறைவனது விருப்பத்தின் படி கொண்டாட அவரது அருளை வேண்டுவதற்காக. 

நாம் நவ நாட்களில் என்ன செய்ய வேண்டும்? 

இறைவனுக்கு எதிரான லௌகீக நாட்டங்கள் நம்மிடம் இருந்தால் அவற்றைக் கழைந்து விட்டு ஆன்மீக நாட்டங்களால் நம்மை நிரப்ப‌ வேண்டும். 

பத்து நாட்கள் விழா கொண்டாடப்பட்டு முடியும் போது நாம் இறை அருளால் நிறைந்திருக்க வேண்டும். 

அதற்காக பத்து நாட்களும் நாம்   இறைவனோடு  ஒன்றித்து ஆன்மீக வாழ்வை வாழ்வதற்கான அருள் வரங்களை அவரிடம் மன்றாடிக் கேட்க‌ வேண்டும்.

இதற்காகத்தான்  
நவநாள் ஜெபங்கள்,
தியானம்,
பாவ சங்கீர்த்தனம்,
திருப்பலி, 
திருவிருந்து போன்ற ஆன்மீக காரியங்கள்.

சிறிது சிந்தித்துப் பார்ப்போம்.

நாம் திருவிழாக் காலங்களில் ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா?

அல்லது,

திருவிழா வரி,
ஆடம்பரம்,
அலங்காரம்,
விளம்பரம்,
சாப்பாடு,
புது ட்ரஸ்
போன்ற ஆன்மீகத்துக்கு சம்பந்தம் இல்லாத காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா? 

இறைவன் முன் நமது ஆன்மீக அழகுதான் அழகு, 

வெளி அழகுக்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தம் இல்லை. 

திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் நமது ஆன்மாவின் பரிசுத்தத்தனம் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

திருவிழா நாட்களில் நமது ஆன்மாவை நாம் இழந்துவிட்டால் திருவிழா கொண்டாடி என்ன பயன்?

விண்ணக விருந்தில் கலந்து கொள்ளும் போது அதற்கான ஆன்மீக ஆடை அணிந்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வோம். 

ஆன்மாவின் பரிசுத்த நிலை தான் நமது ஆன்மீக ஆடை. 

லௌகீகத்தில் ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன் என்பார்கள். 

ஆன்மீகத்தில் ஆடை இல்லாத மனிதன் அந்த பெயருக்கே அருகதை அற்றவன்.

லூர்து செல்வம்

Tuesday, August 19, 2025

"இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும். "என்றார். (மத்தேயு.19:6)



"இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும். "என்றார். 
(மத்தேயு.19:6)

"இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்."
(தொடக்கநூல் 2:24)

முதலில் படைக்கப்பட்டது ஆதாம். ஒரு உடல், ஒரு ஆன்மா.

ஆதாமின் உடலிலிருந்து ஏவாள் படைக்கப்பட்டாள்.

ஏவாளின் உடல் ஆதாமின் உடலுக்கு உரியது. 

அப்பொழுது மனிதன், "இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்' என்றான். 
(தொடக்கநூல் 2:23)

ஆகவே இருவருக்கும் ஒரு உடல்.  ஆனால் ஆன்மாக்கள் இரண்டு.

ஆணும், பெண்ணுமாகிய இருவர் ஒரு உடலாக இருப்பது தான் குடும்பம்.

ஆணையும் பெண்ணையும் ஒரு உடலாக இணைத்தது கடவுள். அதைப் பிரிக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை.

"கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்."

இறைவனுடைய பிரதிநிதி குருவானவர்.

அவருடைய முன்னிலையில் இறைவன் இணைத்த திருமணத் தம்பதிகளை யாராலும் பிரிக்க முடியாது.

அதாவது எந்த சட்டமும் அவர்களுக்கு மணவிலக்கு (Divorce) கொடுக்க முடியாது.

கத்தோலிக்கத் திருச்சபையில் மணவிலக்கு(Divorce) என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஒரு திருமணம் சட்டப்பூர்வமானதாக இருக்க வேண்டிய நிபந்தனைகள் யாவை?

1.மணமக்கள் இருவரும் எந்தவிதமான கட்டாயமோ, பயமுறுத்தலோ இல்லாமல்,
 முழு மனதுடன் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

சம்மதம் இன்றி கட்டாயமாக நடத்தப்படும் திருமணம் செல்லாது.

 திருமணத்தின் அர்த்தத்தையும், கடமைகளையும் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். 

 மனநலக் கோளாறு உள்ளவர்களாக இருக்கக் கூடாது.

தம்பதியர் இருவரில் ஒருவருக்கு மன நிலைக் கோளாறு இருந்தாலும் திருமணம் செல்லாது.

2.திருமண வயது:

 இந்திய அரசின்‌சட்டப்படி,  ஆணுக்கு 21 வயது, பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும்.

3.திருமண விக்கினங்கள் 

ஞான உறவு
Spiritual relationship):

 திருமுழுக்கு பெறும்போது ஏற்பட்ட உறவு.

ஒருவர் தன்னுடைய ஞானத் தாயையோ ஞானத் தந்தையையோ திருமணம் செய்ய முடியாது.

இரண்டாங்கால் மட்டும் இரத்த உறவு (Second degree consanguinity): 

கத்தோலிக்கத் திருச்சபையின் சட்டப்படி, இரத்த உறவில் உள்ள நெருங்கிய உறவினர்கள் திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

 இந்தத் தடை, "இரண்டாங்கால் மட்டும் இரத்த உறவு" வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரண்டாங்கால் என்றால் தந்தை அல்லது தாயுடன் பிறந்தவர்களின் மக்கள்.

அத்தை பிள்ளைகள் 
மாமா பிள்ளைகள், 
சித்தப்பா பிள்ளைகள் 
சித்தி பிள்ளைகள் 
ஆகியோர் இதில் அடங்குவர்.

ஆனாலும் தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் ஆயர் அவர்களின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளலாம்.

4.ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் திரும்பவும் திருமணம் செய்ய முடியாது.

5.பாலுறவு கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்கள் திருமணம் செய்ய முடியாது.

6.வாழ்நாள் முழுவதும் இணைபிரியாத பந்தத்தை ஏற்படுத்தி, 

ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருந்து, குழந்தைகளைப் பெற்று அவர்களை கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்ப்பதற்கு இருவரும் முழு மனதுடன் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மேற்கூறப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடக்கும் திருமணம் தான் செல்லுபடியாகும்.

ஏதாவது ஒரு நிபந்தனையை மீறியிருந்தாலும் திருமணம் செல்லாது.

இந்த நிபந்தனைகள் பூர்த்தியாகாத பட்சத்தில், ஒரு திருமணம் annulment செய்யப்பட வாய்ப்புள்ளது.

அதாவது திருமணம் செல்லாது என்று அறிவிக்கப் படலாம்.

பணத்துக்கு ஆசைப்பட்டு நிபந்தனைகளை மீறினால் பணமும் போய்விடும், திருமணமும் போய்விடும்.

நமக்கு முக்கியம் ஆன்மீக வாழ்வும், நிலை வாழ்வும் தான்.

லூர்து செல்வம்

Monday, August 18, 2025

" மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்; செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்." (மத்தேயு.19:24)



"மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்; செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்."
(மத்தேயு.19:24)

"இயேசு தம் சீடரிடம், "செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன்."
என்று சொல்லி விட்டு அதை உறுதிப்படுத்த  

"மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்; 

செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்கிறார்.

"ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது". என்றால் என்ன?

ஊசியின் காதில் நூல் மட்டும் நுழைய முடியும் என்பது நமது அனுபவம்.

ஆனால் இயேசு குறிப்பிடுவது நமது ஊசியை அல்ல.

 இயேசுவின் காலத்தில் எருசலேம் நகரின் சுவர்களில் இருந்த ஒரு சிறிய நுழைவாயிலுக்கு ஊசியின் காது என்று பெயர்.

இந்த வாயில், இரவில் கோட்டைக்கு வெளியே செல்லும் ஒட்டகங்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் பயன்படுத்தப்பட்டது. 

இந்த வாயில் வழியாக முதுகில் பாரம் உள்ள ஒட்டகம் நுழைவது மிகக் கடினம். 

 ஒட்டகத்தின் முதுகில் உள்ள பாரத்தை இறக்கி வைத்த பிறகே அது வாயில்  நுழைய முடியும்.

செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது கடினம். (எளிது அல்ல.)

ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது.

"ஊசியின் காதுக்குள் கூட ஒட்டகம் எளிதில் நுழைந்து விடலாம், செல்வத்தின் மீது பற்று உள்ளவர்கள் விண்ணரசில் நுழைவது  கடினம்."

 செல்வத்தின் மீது பற்று உள்ளவர்கள் விண்ணரசில் நுழைவது எவ்வளவு கடினம் என்பதை எடுத்துக்காட்ட இயேசு இவ்வாறு கூறுகிறார்.

செல்வர் இறையாட்சிக்குள் நுழைய முடியாது என்று இயேசு சொல்லவில்லை, கடினம் என்று சொல்கிறார்.


ஊசியின் காது வழியாக முதுகில் பாரம் உள்ள ஒட்டகம் நுழைவது மிகக் கடினம். பாரத்தை இறக்கி வைத்து விட்டால் நுழைவது எளிது.

செல்வர்களைப் பொறுத்த மட்டில் செல்வத்தின் மீது உள்ள பற்றுதான் பாரம்.

இப்போது ஒப்புமை புரியும்.

முதுகில் பாரத்தோடு ஒட்டகத்தால் ஊசியின் காதுவழியே நுழைவது கடினம்.

பாரத்தை இறக்கி வைத்து விட்டால் நுழைவது எளிது.

செல்வத்தின் மீது உள்ள பற்று என்ற பாரத்தோடு இறையாட்சிக்குள் நுழைவது கடினம்.

பற்றை விட்டு விட்டால் நுழைவது எளிது.

சிலருக்கு கையில் பைசா இருக்காது, ஆனால் மனம் நிறைய ஆசை இருக்கும்.
அவர்களும் மனதளவில் செல்வர்கள் தான்.

சிலருக்கு கையில் நிறைய பணமிருக்கும், பணத்தின் மீது பற்று இருக்காது. அவர்கள் மனதளவில் ஏழைகள் தான்.

ஏழைகள் பாக்கியவான்கள் என்று சொன்னாலும்,

எளிய மனத்தோர் பாக்கியவான்கள் என்று சொன்னாலும் ஒரே பொருள் தான்.

இப்போது நண்பர் ஒருவர் கேட்கிறார்.

செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது கடினம் என்று சொல்கிறார், முடியாது என்று சொல்லவில்லை.

அப்படியானால் கஷ்டப்பட்டாவது இறையாட்சிக்குள் நுழைந்து விடலாமா?

அதற்கும் இயேசு பதில் சொல்கிறார்.


 "மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்" என்றார். 
(மத்தேயு.19:26)

எப்படி இயலும்?

கடவுளால் எல்லாம் இயலும், நமக்கு வேண்டியது விசுவாசம்.

பற்றுள்ளவன் தன்னைப் பற்றிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று விசுவாசத்தோடு வேண்ட வேண்டும்.

அவனது விசுவாசத்துக்குப் பரிசாக புதுமை செய்தாவது பற்றிலிருந்து விடுதலை பெற கடவுள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பார்.

உதாரணத்திற்கு,

செல்வத்தின் மீது பற்றுள்ள ஒருவன் கடவுளிடம் வேண்டுகிறான்,

"கடவுளே, நான் பைபிள் வாசித்தேன்.

நான் வாசித்த வசனம்,


மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்; செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார். 

சீடர்கள் இதைக் கேட்டு, "அப்படியானால் யார்தாம் மீட்புப் பெறமுடியும்?" என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள். 

இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, "மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்" என்றார். 
(மத்தேயு.19:24,25,26)

நான் செல்வத்தின் மீது பற்றுள்ளவன். ஆனால் உமது ஆட்சிக்குள் வரவேண்டும். நீர் நினைத்தால் முடியும்."
என்று வேண்டினான்.

சில தினங்கள் கழித்து அவனுக்குச் சுகமில்லை.
டாக்டரைப் பார்த்தான். குணப்படுத்த சில இலட்சங்கள் ஆகும் என்றார்.

உடனே அவன் மனதில் ஓடிய எண்ணம்,

"என்னிடம் பணம் இருப்பதால் தான் இந்த நோய் வந்தது. வைத்தியத்துகுக் கொடுக்கும் பணத்தை ஒரு ஏழைக்குக் கொடுத்தாலும் பயன் உண்டு."

 என்று எண்ணிக் கொண்டு படுத்தான்.

காலையில் எழுந்து டாக்டரிடம் போனான்.

அவர் ஆச்சரியத்தோடு "இன்று உனக்கு நோய்க்கு உரிய அறிகுறியே இல்லை. எப்படியோ குணமாகி விட்டது." என்றார்.

அவன், " டாக்டர், பணம் இல்லாததால் வைத்தியம் பார்க்க முடியாத யாரும் இருந்தால் அவனுக்குரிய வைத்தியச் செலவை நானே ஏற்றுக் கொள்கிறேன்." என்று கூறி விட்டு, 

கோவிலுக்குச் சென்று திவ்ய நற்கருணை நாதருக்கு நன்றி கூறினான்.

அன்று முதல் பற்றற்றான் பற்றினைப் பற்றி வாழத் தொடங்கினான்.

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு." (350)

லூர்து செல்வம்.

Sunday, August 17, 2025

" அதற்கு இயேசு, "நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்றார்."(மத்தேயு.19:21)

"அதற்கு இயேசு, "நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்றார்." 
(மத்தேயு.19:21)

நிலை வாழ்வை அடைய விரும்புகிறவர்கள் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.(17)

நிறைவுள்ளவர்களாக வாழ விரும்புகிறவர்கள் தங்கள் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு இயேசுவைப் பின்பற்ற வேண்டும். (21)

நிலை வாழ்வை அடைவதற்கும்,    
நிறைவுள்ளவர்களாக வாழ்வதற்கும் என்ன வித்தியாசம்?

அரசு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றால் போதும் என்றால், 

நூற்றுக்கு 35 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

முதல் தரத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் 60க்கு மேல் மதிப்பெண்கள் பெற வேண்டும்.

தனிச் சிறப்புடன் (With Distinction) வெற்றி பெற வேண்டுமென்றால் 
80 க்கு மேல் மதிப்பெண்கள் பெற வேண்டும்.

35 மதிப்பெண்கள் பெற்றால் Pass.

34 மதிப்பெண்கள் பெற்றால்
Fail.

ஆன்மீகத்தில் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்தால் மோட்சம்.

கீழ்ப்டியா விட்டால் நரகம்.

நிலை வாழ்வு பெற குறைந்த பட்சம் பாவம் இல்லாமல் வாழ வேண்டும்.

பாவத்தை விலக்குவதோடு புண்ணிய வாழ்வு வாழ்ந்தால் மோட்சத்தில் பேரின்பம் அதிகரிக்கும்.

நிறைவாழ்வு (Perfect life) வாழ்ந்தால்மோட்ச பேரின்பம் மிகவும் அதிகரிக்கும்.

உலகியல் ரீதியாக ஒப்பிட்டால்

அன்றாடக் கூலிக்குச் செலவுக்குப் பணம் போதாது.

மாதச் சம்பளக்காரனிடம் செலவுக்குப் பணமிருக்கும்.

 இலட்சாதிபதியிடம் செலவு போக மிச்சம் இருக்கும்.

 கோடிஸ்வரனிடம் மிச்சம் மிக அதிக பணம் இருக்கும்.

தேர்வில் Pass பண்ணினால் போதுமா?

அல்லது,

Distinction எடுத்து Pass பண்ண வேண்டுமா?

மாணவன் முடிவு எடுக்க வேண்டும்.

நிலை வாழ்வை அடைந்தால் மட்டும் போதுமா? 

அல்லது, 

மிக அதிகமான பேரின்பத்தை அனுபவிக்க கூடிய நிறை வாழ்வு  வேண்டுமா?

தீர்மானிக்க வேண்டியது ஆன்மீகவாதி தான். 

நிலைவாழ்வு என்றாலே பேரின்ப வாழ்வு தான். 

அவரவருக்கு பேரின்பம் முழுமையானது தான்.

ஆனால் அவரவர் ஆன்மாவின் பரிசுத்த நிலைக்கு ஏற்ப பேரின்பத்தின் அளவு மாறுபடும்.

வீட்டில் உள்ள எல்லா பாத்திரங்களிலும் நீர் நிரம்பி உள்ளது. 

ஆனாலும் பாத்திரத்தின் அளவுக்கு ஏற்ப நீரின் அளவு மாறுபடும். 

விவசாயி நிலத்தை புல் பூண்டுகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருந்தால் மட்டும் போதாது. 

அதில் பயிர் ஏற்ற வேண்டும். 

ஆன்மாவை பாவம் இல்லாமல் வைத்திருந்தால் மட்டும் போதாது. 

அதில் புண்ணியமாகிய பயிரை ஏற்ற வேண்டும்.

நாம் போடும் உரத்துக்கும், பாய்ச்சும் நீருக்கும் ஏற்ப மகசூலின் அளவு இருக்கும்.

அதே போல் தான் உலகில் நாம் செய்யும் நற்செயல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நமது விண்ணக பேரின்பத்தின் அளவு இருக்கும்.

நிறைவுள்ளவராக வாழ்வது என்றால் என்ன?

நம்மைப் பரிபூரணமாக இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்வது நிறைவான வாழ்வு. 

அன்னை மரியாள் அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

உலகப் பொருள்களின் மீது இம்மி அளவு கூட பற்று இருக்கக் கூடாது.

பற்று இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இயேசு உனக்கு உள்ளதை எல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடு என்கிறார்.

சுயநலமின்றி, ஏழைகள் மற்றும் உதவி தேவைப்படுபவர்களுக்கு மனமுவந்து உதவ வேண்டும். தன்னிடம் உள்ளதை தேவைப் படுவோர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கடவுளை முழுமையாக நம்ப வேண்டும்.    கடவுளின் பராமரிப்புக்கு நம்மை முழுமையாக அர்ப்பணித்து விட வேண்டும்.

அதற்காகத்தான் "பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்றார். 

கடவுள் மேலும், அயலான் மேலும் நிபந்தனையற்ற அன்பு கொண்டிருக்க வேண்டும்.

நமக்கு என்ன நேர்ந்தாலும், 

நாம் கேட்டது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் 

இறைவன் மீதும் அயலான் மீதும் நாம் கொண்டுள்ள அன்பு குறையக் கூடாது.

''உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
(மத்தேயு.5:48)

பணிக்குருத்துவப் பணிக்கு அழைக்கப்படுபவர்கள்  எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை விளக்கவே

 இயேசு, "நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்று கூறுகிறார்.

நம்மை ஆன்மீக பாதையில் வழி நடத்தும் நமது குருக்களுக்கு உலகியல் ரீதியாகச் சொந்தமானது எதுவுமே இல்லை.

நாம்தான் அவர்களுக்கு எல்லாம்.

குருக்களைப் போல நாமும் புண்ணிய வாழ்வில் வளர்வோம்.

நமது ஆன்மீக வாழ்வுக்கு அன்னை மரியாளை முன் மாதிரிகையாகக் கொள்வோம்.

லூர்து செல்வம் 
.

Saturday, August 16, 2025

"மண்ணுலகில் சமாதானத்தை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்." (லூக்கா.12:51)



"மண்ணுலகில் சமாதானத்தை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்."
(லூக்கா.12:51)

சமாதானம் என்றால் நல்லுறவு.

இறைவன் நமது முதல் பெற்றோரைப் படைத்த போது அவர்கள் இறைவனோடு சமாதான உறவில்தான் இருந்தார்கள்.

ஆனால் அவர்கள் பாவம் செய்ததால் உறவை விட்டு வெளியேறி விட்டார்கள்.

ஆனால் இறைவன் மாறாதவர்.

அவர்களைப் படைத்த போது எந்த சமாதான நிலையில் இருந்தாரோ அதை விட்டு மாறவில்லை.

மாறியது மனிதன் மட்டும் தான்.

அவரது உறவுக்குள் மீண்டும் மனிதனைக் கொண்டு வரவே அவர் மனிதனோடு சம தானத்துக்கு (சம இடத்துக்கு) இறங்கினார்.

அதாவது மனிதனாகப் பிறந்தார்.

சமாதானத்தின் தேவன் மீண்டும் மனிதனைச் சமாதான உறவுக்குள் ஏற்றுவதற்காக இறங்கி வந்தார்.

நாம் விண்ணகம் ஏற அவர் மண்ணகம் இறங்கி வந்தார்.

இருவரிடையே சமாதானம் நிலவ வேண்டுமென்றால் இருவரும் சம தானத்தில் (சம நிலையில்) இருக்க வேண்டும்.

அதாவது ஆன்மீகத்தில் இருவரும் பரிசுத்த நிலையில் இருக்க வேண்டும்.

இறைவன்  பரிசுத்தர்.

மனிதனும் பரிசுத்தமாக இருந்தால் தான் அவன் பரிசுத்தரோடு சமாதானமாக இருக்க முடியும்.

பாவம் செய்த மனிதன் பாவ மன்னிப்பு பெற்றால்தான் பரிசுத்தமாக முடியும்.

நமக்கு மன்னிப்பு தருவதற்காகவே இறைமகன் மனுமகனாகப் பிறந்தார்.

மனிதனை சமாதான உறவுக்குள் அழைக்க வந்த இறைவன் 

ஏன் "மண்ணுலகில் சமாதானத்தை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்"
என்று  சொல்கிறார்?

இயேசு சொல்வது புரிய வேண்டும் என்றால் அவரது இன்னொரு வாக்கையும் மனதில் கொள்ள வேண்டும்.

"நான் உங்களுக்குத் தரும் சமாதானம் உலகம் தரும் சமாதானம் போன்றது அல்ல." 
(அரு.14:27)

நாம் எதைச் சமாதானம் என்கிறோம்?

இரண்டு பேர் சண்டை போடாமல் இருந்தால் அவர்கள் சமாதானமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறோம்.

முதல் உலகப் போரின் இறுதியில் வென்ற நாடுகளும்,
தோற்ற நாடுகளும் வெர்சேய்ல்ஸ் நகரில் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

இதன் நோக்கம் மீண்டும் உலகப்போர் ஏற்படுவதைத் தவிர்ப்பது.

ஆனால் வெர்சேய்ல்ஸ் சமாதான ஒப்பந்தம் தான் இரண்டாம் உலகப் போருக்குக் காரணம் என்று வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும்.

உண்மையான சமாதானத்துக்கும், 
உலகம் நினைக்கும் சமாதானத்துக்கும் சம்பந்தமே இல்லை.

 நாடுகளுக்கு இடையே, அல்லது, மக்களிடையே சண்டை இல்லாதிருந்தால் சமாதானம் என்பது உலகம் நினைக்கும் சமாதானம்.

ஆனால் எங்கே இறையன்பும் பிறரன்பும் நிலவுகிறதோ அங்கே தான் உண்மையான சமாதானம் நிலவ முடியும்.

சமூகத்தின் சிறு அலகான குடும்பத்தை எடுத்துக் கொள்வோம்.

குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் லௌகீகவாதிகள்

பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

அனைவரும் ஒரே கொள்கை உடையவர்கள்.

ஆகவே பண விடயத்தில் அவர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை.

பணம் ஈட்டும் வேலையை ஒற்றுமையாகச் செய்பவர்கள்.

அவர்களுக்கு இயேசுவின் நற் செய்தி அறிவிக்கப்படுகிறது.

பிள்ளைகள் நற் செய்தியை ஏற்றுக்கொள்கிறார்கள்.
லௌகீக பாதையை விட்டு விட்டு ஆன்மீக பாதைக்கு வருகிறார்கள்.

பணம் ஈட்டுவதை விட இறை அன்புக்கும் பிறர் அன்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

ஆனால் பெற்றோர் நற் செய்தியை ஏற்கவில்லை, மனம் திரும்பவில்லை.

பணமே எல்லாம் என்று நினைப்பதிலிருந்து மாறவில்லை.

இப்போ குடும்பத்தில் என்ன நடக்கும்?

கருத்து வேறுபாடு தலை தூக்கும்.

பணவிசயத்தில் பெற்றோர் சொல்வதைப் பிள்ளைகள் கேட்க மாட்டார்கள்.

'தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர். " 
(லூக்கா.12:53)

இதைத் தான் இயேசு

'மண்ணுலகில் சமாதானத்தை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்" என்கிறார்.

லௌகீக வாதிகள் நினைக்கிற சமாதானம் வேறு, ஆன்மீக வாதிகள் நினைக்கிற சமாதானம் வேறு.

லௌகீகத்தில் கூட கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக செயல் பட்டால் அதுவே லௌகீக வாதிகளுக்கு சமாதானம் தான்.

ஆனால் ஆன்மீக வாதிகள் லௌகீக வாதிகளோடு ஒத்துப் போக முடியாது.

கடவுளுக்கும் அவர்களுக்கும் இடையில் நிலவும் சமாதானமே உண்மையான சமாதானம்.

ஆண்டவர் நற் செய்தியை அறிவித்த போது யூத மக்களிடையே பிரிவினை ஏற்பட்டு விட்டதே.

பரிசேயர்களும், மறை நூல் அறிஞர்களும் இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக் கொள்ளவேயில்லையே.

அதன் காரணமாகத்தானே இயேசு பாடுகள் படவும், சிலுவையில் மரிக்கவும் நேரிட்டது.

இந்திய மொத்த மக்கள் தொகையில் 1.57சதவீதம் பேரே கத்தோலிக்கக் கிறித்தவர்கள். 

நாம் சிறுபான்மையினர்.

மற்ற மக்களிடமிருந்து நம்மைப் பிரித்து வைத்திருப்பதே நாம் பின்பற்றும் இயேசுவின் போதனை தான்.

இயேசுவின் போதனைப் படி அனைவரையும் நேசிக்கிறோம். 

ஆனால் நமது வாழ்க்கை இயேசுவின் நற்செய்தியின் படியானது. 

ஆகவே மற்றவர்களுடைய வாழ்க்கையிலிருந்து விட வித்தியாசமானது.

நாம் வாழும் இயேசுவின் சமாதானம் உலகம் தரும் சமாதானத்தைப் போன்றது அல்ல.

இதைத் தான் இயேசு "மண்ணுலகில் சமாதானத்தை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்" என்று சொல்கிறார்.

லூர்து செல்வம்.

Friday, August 15, 2025

"ஆனால் இயேசு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது" என்றார்." (மத்தேயு.19:14)




"ஆனால் இயேசு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது" என்றார்." 
(மத்தேயு.19:14)

சிறு பிள்ளைகளைப் போன்றவர்களுக்கே விண்ணக வாழ்வு உரியது.

இயேசு பிறந்தவுடனே அவருக்காக தங்கள் உயிரைக் கொடுத்தவர்கள் மாசில்லாக் குழந்தைகள்தான்.

மாசில்லாத் தன்மை சிறு பிள்ளைகளுக்கு மட்டுமே உரிய பிறவித் தன்மை.

பெரியவர்களுக்குத் தெரிவது போல சிறுவர்களுக்கு பாவத்தைப் பற்றியும் புண்ணியத்தைப் பற்றியும் எதுவும் தெரியாது.

ஆகவே அவர்களால் பாவம் செய்ய முடியாது.

சிறு வயதிலேயே மரிப்பவர்களும் பாக்கியவான்கள்.

சிறுவர்களைப் போல் மாசில்லாமல் வாழும் பெரியவர்களும் பாக்கியவான்கள்.

அன்னை மரியாள் தாயின் வயிற்றில் உற்பவிக்கும் போதே சென்மப் பாவ மாசில்லாமல் உற்பவித்தாள்.

 அது கடவுள் அவளுக்கு அளித்த விசேச வரம்.

நாம் திரு முழுக்குப் பெறும்போது நமது சென்மப் பாவம் மன்னிக்கப் பட்டு மாசற்றவர்களாய் மாறுகிறோம்.

இந்த மாசற்ற தன்மையை நாம் இறுதிவரைப் பாதுகாக்க வேண்டும்.

ஆனால் நாம் வளர வளர பாவத்தினால் மாசற்றத் தன்மையை இழந்து விடுகிறோம்.

பாவம் என்றால் என்ன என்று தெரிந்த பிறகு அதில் விழாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

சிறுவர்களின் மற்றொரு நல்ல குணம் பெரியவர்கள் கூறும் உண்மையை எதிர்க் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வது.

இயேசுவின் போதனையை சிறுவனைப் போன்ற மனப்பக்குவம் உள்ள சாதாரண மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் சட்டம் படித்த பரிசேயர்களும், மறைஏற்நூல் அறிஞர்களும் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.ஏற்றுக் கொள்ள மறுத்தது மட்டுமல்ல அவரது வார்த்தைகளில் குறை கண்டு பிடிக்கவே அவரது பின்னால் சென்றார்கள்.

சென்றது மட்டுமல்ல அவரது சிலுவை மரணத்துக்கு அவர்களே காரணமானார்கள்.

சிறு பிள்ளைகளைப் போல நம்மை வழிநடத்துபவர்கள் கூறுவதைக் கேட்டு அதை‌ நம்பி அதன் வழி நடப்பவர்கள் மீட்புப் பெறுவார்கள்.

ஞாயிறு திருப்பலியின் போது குருவானவர் வைக்கும் பிரசங்கத்தை 

அதைப் பின்பற்றுவதற்காகக் கேட்காமல் 

அதிலுள்ள பிழைகளைக் கண்டு பிடித்து விமர்சனம் செய்வதற்காகவே கேட்பவர்களும் நம்மில் இருக்கிறார்கள்.

தாய் கூறுவதைக் குழந்தைகள் போல இறை வாக்கைக் கேட்பவர்கள் பாக்கியசாலிகள்.

குழந்தைகளுடைய மற்றொரு தன்மை அவர்களுடைய தாழ்ச்சி.

எந்தக் குழந்தையும் தன் தாயை விட தான் சிறந்தது என்று எண்ணாது.

தன்னுடைய இயலாமையை முழுவதும் உணர்வதால் தான் அது முழுக்க முழுக்க தன் தாயைச் சார்ந்திருக்கிறது.

அதன் செயல்கள் அனைத்தும் தாயின் சொற்படி தான் நடக்கும்.

அதன் நடவடிக்கைகளுக்கு தாய் தான் பொறுப்பு.

ஆகவே குழந்தை தவறாக நடக்க வாய்ப்பே இல்லை.

ஆன்மீகத்தில் குழந்தைகளைப் போல் இருப்பவர்கள் தங்களால் சுயமாக எதையும் செய்ய முடியாது என்பதையும்,

தங்கள் நற்செயல்களுக்கு முழுக்க முழுக்க கடவுளை மட்டும் சார்ந்திருப்பதையும் உணர்வார்கள்.

அந்த நிலைதான் ஆன்மீக வாழ்வின் ஆரம்பம்.

என்னால் எல்லாம் முடியும் என்று எண்ணுபனால் ஆன்மீக வாழ்வு வாழவே முடியாது.

எல்லாம் வல்ல இறைவன் கையில் தன்னை ஒப்படைத்து விட்டு வாழ்பவன்‌ எக்ஸ்பிரஸ் வண்டியில் பயணிப்பவனுக்குச் சமம்.

அவன் வண்டியில் அமர்ந்திருந்தாலே போதும்.

எக்ஸ்பிரஸ் வண்டியில் ஏறாதவன் நடந்தே பயணிக்க வேண்டும்.

களைத்துப் போய் வழியில் உட்கார்ந்தால் ஊர்ப்போய்ச் சேர முடியாது.

நம்மால் சுயமாகச் செய்ய முடியாது என்பதை உணர்வோம்.

நம்மை முற்றிலும் கடவுளிடம் ஒப்படைப்போம்.

"நான் எங்கே வாழ்கிறேன், கடவுள் தான் என்னில் வாழ்கிறார்"

என்று புனித சின்னப்பரோடு நாமும் சேர்ந்து சொல்வோம்.

நாமும் இறைவனிடம் நம்மை முழுவதும் அர்ப்பணிப்போம்.

"இறைவா, இதோ நான் உமது அடிமை."

அடிமை இறைவன் சொன்னதைச் செய்தால் போதும்.

இறைவன் திருப்தி அடைவார்.

நமது நித்திய பேரின்ப வாழ்வுக்கு இறைவனின் திருப்தியே போதும்.

லூர்து செல்வம்

Thursday, August 14, 2025

"என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?"(லூக்கா.1:43)



"என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?"
(லூக்கா.1:43)

மனுமகனான இறைமகன் தன் நற் செய்திப் பணியை ஆற்ற பிறக்கும் வரைக் காத்திருக்கவில்லை.

அவர் மனிதனாக உற்பவிக்கும் முன்பே மரியாள் தன்னை அவரது அடிமையாக அர்ப்பணித்து விட்டாள்.

உற்பவித்த உடனே தனது அடிமையை நற் செய்திப் பணிக்கு அனுப்பி வைத்தார்.

நற்செய்தி வாயாலும், வார்த்தைகளாலும் மட்டும் அறிவிக்கப்படுவதல்ல.

செயலாலும் அறிவிக்கப் படுவது.

"நீ உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசி"

"உனது அயலானுக்கு என்ன செய்கிறாயோ அதை எனக்கே செய்கிறாய்."
 இது இயேசுவின் நற்செய்தி.

"இறைச் சிந்தனை, இறைச்சொல், நற்செயல் ஆகிய மூன்றின் உருவம்தான் மரியாள்.

மரியாள் தன் வயிற்றில் அப்போது தான் உற்பவித்திருந்த மகனால்
 உந்தப்பட்டு,

அவரது பிறரன்பு பற்றிய நற்செய்தியைத் தன் சொல்லாலும் செயலாலும் நடைமுறைப் படுத்தப் புறப்பட்டு விட்டாள்.

யூதேயாவின் மலை நாட்டில் எருசலேம் ஆலயத்திலிருந்து கொஞ்ச தூரத்தில் தன் கணவர் சக்கரியாவுடன் வாழ்ந்து வந்த எலிசபெத் என்னும் உறவினர் 

முதிர்ந்த வயதில் கருத்தரித்திருப்பதாக கபிரியேல் தூதர் மூலம் அறிந்த மரியாள் 

அவளை வாழ்த்தவும், அவளுக்கு சேவை செய்யவும் புறப்பட்டு விட்டாள்.

நாசரேத்திலிருந்து எலிசபெத்தின் வீட்டுக்குத் தூரம் 120 கி.மீ.

இன்றைய போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத அந்தக் காலத்தில்,

14 வயது பெண் வயிற்றில் அப்போதுதான் உற்பவித்த குழந்தையுடன் 

மலை நாட்டில் நடைப்பயணம், தனியே.

மிகக் கடினமான பயணம், வேறு வழியின்றி செல்பவர்களுக்கு.

விருப்பமாகச் செய்பவர்களுக்கு கல் சுமையும் கரும்புச் சுவைதான்.

அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்ததும் எலிசபெத்தை வாழ்த்தினார். 

மரியாளின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. 

எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். 

எலிசபெத் உண்டாகியிருப்பது கபிரியேல் மூலம் மரியாளுக்குத் தெரியும்.

மரியாள் உண்டாகியிருப்பதை தூய ஆவியின் தூண்டுதலால் மட்டுமே எலிசபெத் அறிந்தாள்.


 அவர் உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! 

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? 

உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. 

ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்று கூறி வாழ்த்தினார்.

பைபிள் மட்டும் போதும் என்று கூறும் நமது பிரிந்த சகோதரர்களில்சிலர்,

மரியாள் இயேசுவின் தாய், இறைவனின் தாய் அல்ல என்கிறார்கள்.

மரியாள் ஆண்டவரின் தாய் என்பதைத் தூய ஆவியே எலிசபெத் மூலம் உறுதிப்படுத்தி விட்டார்.

இறைப் பணிக்கு தங்களை முற்றிலும் அர்ப்பணித்தவர்கள் தூய ஆவியால் தான் வழி நடத்தப் படுகிறார்கள்.

தூய ஆவி அன்பின் தேவன்

கடவுள் ஒருவர்,

ஆட்கள் மூவர்.

முதல் ஆள் தந்தை.
இரண்டாம் ஆள் மகன்.
மூன்றாம் ஆள் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிலவும் அன்பு.

அன்பின் காரணமாக நடக்கும் எல்லா செயல்களுக்கும் தூய ஆவியை காரணராகக் குறிப்பிடுகிறோம்.

தந்தை மனுக்கலத்தைப் படைத்தார்.

 மனுக்குலத்தை மீட்க மகன் மனிதனாப் பிறந்தார்.

மனித குலத்தின் மீது கொண்ட அன்பின் காரணமாக அவர் மனித உரு எடுத்ததால்

அவர் தூய ஆவியின் வல்லமையால் மனித உரு எடுத்ததாகக்‌ குறிப்பிடுகிறோம்.

கத்தோலிக்கத் திருச்சபை இறையன்புப் பணிகளைச் செய்து கொண்டிருப்பதால் அதைத் தூய ஆவி வழி நடத்துவதாகக் குறிப்பிடுகிறோம்.

ஆனாலும் கடவுள் ஒருவரே என்ற மறை உண்மை மனதில் இருக்க‌ வேண்டும்.

கடவுள் உலகைப் படைத்தார்.
கடவுள் உலகை மீட்டார்.
கடவுள் திருச்சபையை வழி நடத்துகிறார், என்பது மறை உண்மை.

மரியாள் இறைவனின் தாய் என்ற மறை உண்மையை எலிசபெத்துக்கு வெளிப்படுத்தியது அவரை ஆட்கொண்ட தூய ஆவியானவர்.

தூய ஆவி நம்மை வழிநடத்துகிறார் என்பது பற்றி தியானிப்போம்.

இறைமகன் மரியின் வயிற்றில் மனிதனாகப் பிறந்து,

30 ஆண்டுகள் திருக்குடும்பத்தில் கீழ்ப்படிந்து வாழ்ந்து,

மூன்று ஆண்டுகள் நற் செய்தியை அறிவித்து,

சீடர்களுக்குப் பயிற்சி கொடுத்து

நமக்காகப் பாடுகள் பட்டு சிலுவையில் மரித்து

இராயப்பரின் தலைமையில் கத்தோலிக்கத் திருச்சபையை நிறுவினார்.

ஆனாலும் தூய ஆவி சீடர்கள் மேல் இறங்கி வந்த பெந்தகோஸ்து நாளையே திருச்சபையின் பிறந்த நாளாகக் கருதுகிறோம்.

சீடர்கள் இயேசுவின் கையில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றிருந்தாலும் பயிற்சி முழுமையானது தூய ஆவியின் வருகையின்போது தான்.

அது வரை தாங்கள் அமர்ந்து செபித்துக் கொண்டிருந்த ஜான் மாற்கின் இல்லத்தை‌ விட்டு வெளியே வர பயந்து கொண்டிருந்தார்கள்.

 உலகின் பல பகுதிகளிலிருந்தும் இஸ்ரேல் மக்கள் எருசலேமில் கூடும் பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியானவர் சீடர்கள் மீது இறங்கி வர தீர்மானித்தார்.

ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரே நேரத்தில் நற் செய்தியை அறிவிக்க அது வசதியாக இருக்கும்.

இயேசு விண்ணகம் எய்திய பின் அன்னை மரியாள் தான் சீடர்களுக்குப் 
பாதுகாவலியாக இருந்து செயல்பட்டாள்.

தூய ஆவி இறங்கி வந்தவுடன் சீடர்கள் விசுவாசத்தில் உறுதி அடைந்தார்கள், பயம் நீங்கி போதிக்கத் திடன் பெற்றார்கள்.

பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியால் ஆட்கொள்ளப் பட்ட சீடர்கள் நற் செய்தியை போதித்த முதல் நாளே மூவாயிரம் பேர் திரு முழுக்குப் பெற்றார்கள்.

பன்னிரு சீடர்களும் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று நற் செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார்கள்.

அன்னை மரியாள் அருளப்பரின் பாதுகாப்பில் அவர் நற் செய்தியை அறிவித்த எபேசு நகரில் தங்கியிருந்தாள்.

கி.பி.48ஆவது ஆண்டு அன்னை மரியாளுக்குச் சுகமில்லை.

தூய ஆவியால் இச்செய்தி அனைத்து சீடர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

தோமையாரைத் தவிர அனைவரும் எபேசு நகருக்கு வந்து விட்டார்கள்.

மரியாள் மரணம் அடைந்தாள்.

மறுநாள் அன்னையை கிறித்தவ முறைப்படி நல்லடக்கம் செய்தார்கள்.

அடக்கம் செய்த மறுநாள் தோமையார் வந்து சேர்ந்தார்.

"நான் அன்னையின் முகத்தைப் பார்க்க வேண்டும்" என்று பிடிவாதம் செய்தார்.

அவருக்காகக் கல்லறையைத் திறந்தார்கள்.

உள்ளே அன்னையின் உடல் இல்லை.

தாயின் உடல் மண்ணுக்கு இறையாவதை மகன் விரும்பவில்லை என்பதை உணர்ந்தார்கள்.

அன்னை மகனால் விண்ணக வாழ்வுக்கு ஆன்ம சரீரத்தோடு எடுத்துச் செல்லப் பட்டாள் என்று தீர்மானித்தார்கள்.

அக்காலம் முதல் அன்னையின் விண்ணேற்பு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

எல்லாம் தூய ஆவியின் செயல்.

சீடர்களை வழி நடத்திச் சென்றவர் தூய ஆவி.

அவர்களுடைய போதனையில் தவறு எதுவும் ஏற்படாதபடி அவர்தான் பாதுகாத்தார்.

அவர்கள் போதிக்க ஆரம்பிக்கும்போது  அவர்கள் கையில் நற் செய்தி நூல்கள் இல்லை.

இயேசு மரித்தது கி.பி. 33 ல்.

மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார்.

உயிர்த்த 50 வது நாளில் சீடர்கள் மேல் தூய ஆவி இறங்கினார்.

சீடர்கள் போதிக்கத் துவக்கிய நாளில் திருச்சபையின் பாரம்பரியம் ஆரம்பித்தது.

நற் செய்தி நூல்களும், நிருபங்களும் கி.பி 65 ற்குப் பிறகு தான் எழுதப்பட்டன.

அதாவது இயேசுவின் போதனை எழுத்து வடிவம் பெற்றது கி.பி.65க்குப் பிறகுதான்.


கி.பி 382ல்தான் கத்தோலிக்கத் திருச்சபை 72 புத்தகங்களைத் தொகுத்து பைபிளை உருவாக்கியது.

பைபிள் தொகுக்கப்பட்ட நான்காம் நூற்றாண்டு வரை திருச்சபையின் பாரம்பரியத்தில் மட்டும் தான் இயேசுவின் போதனை மக்களை அடைந்தது.

பைபிளைப் பெற்றதே பாரம்பரியம் தான்.

பாரம்பரியத்தின் உதவி இல்லாமல் பைபிளைப் புரிந்துகொள்ள முடியாது.

அதனால்தான் பாரம்பரியத்தை ஏற்றுக் கொள்ளாத பிரிவினை சபையினர் பைபிளுக்குத் தப்புத் தப்பாக பொருள் கொடுக்கின்றன.

பாரம்பரியத்திலும், பைபிளிலும் தூய ஆவியின் வழி நடத்துதல் இருக்கிறது.

தூய ஆவியின் வழி நடத்துதலின்படிதான் சீடர்கள் போதித்தனர்.

திருச்சபையின் தலைவர் பாப்பரசர் தூய ஆவியின் வழி நடத்துதல்படி தவறா வரத்துடன் திருச்சபையை ஆள்கிறார்.

தொடர்ந்து நமது ஆயர்களையும், குருக்களையும், நம்மையும் தூய ஆவி தான் வழி நடத்தி வருகிறார்.

நாம் திரு அருட்சாதனங்களைப் பெறும் போது நம்முள் இயங்கும் தூய ஆவியின் வரங்களின் உதவியால் நாம் ஆன்மீகப் பாதையில் வழி நடத்தப் படுகிறோம்.

தூய ஆவி தனது வரங்களாலும்,  தூண்டுதலாலும் 
(Inspiration) நம்மை  விண்ணகப் பாதையில்  வழி நடத்தி வருகிறார்.

நாம் விண்ணக வாழ்வுக்குள் நுழையும் வரை அவரது வழி நடத்துதல் தொடரும்.

விண்ணகத்தில் பரிசுத்த தம திரித்துவத்தோடு ஒன்றித்து நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

நாமும் ஒருநாள் ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் செல்வோம்.

லூர்து செல்வம்

Wednesday, August 13, 2025

"அதற்கு அரசர், "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனப் பதிலளிப்பார்."(மத்தேயு.25:40)



"அதற்கு அரசர், "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனப் பதிலளிப்பார்."
(மத்தேயு.25:40)

இறையன்பும், பிறரன்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.

இறையன்பு இருக்கும் இடத்தில் பிறரன்பும் இருக்கும்.

ஒன்று இல்லாத இடத்தில் அடுத்ததும் இருக்காது.

நாம் நமது அயலானுக்கு செய்யும் உதவி கடவுளுக்கு நாம் கொடுக்கும் காணிக்கை.

நமது பிறனுக்குச் செய்வதை நாம் இறைவனுக்கே செய்கிறோம்.


நாம் நினைத்தது நடந்தால் ஆயிரம் ரூபாய் கோவிலில் காணிக்கை போடுவதாக நேர்ந்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

நினைத்தது நடந்தது.

காணிக்கை போடக் கோவிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.

சுகமில்லாத ஏழை ஒருவன் பிழைக்க வேண்டுமென்றால் மருத்துவம் பார்க்க ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.

இறைவனுக்காக வைத்திருந்த பணத்தை அவனுக்குக் கொடுத்து விட்டோம்.

நாம் இறைவனுக்கு நேர்ச்சையை நிறைவேற்றி விட்டோமா?

கோவிலுக்கும் காணிக்கை போட்டுத்தான் ஆக வேண்டுமா?

நமது அயலானுக்குக் கொடுப்பதை இறைவனுக்கே கொடுக்கிறோம்.

நமது அயலானில் நாம் இறைவனைக் காண வேண்டும்.

கோவில் காணிக்கையும் மக்கள் பணிக்காகத்தான் செலவழிக்கப் படுகிறது.

கடவுள் நமது அயலானுக்கு நம் மூலமாகத்தான் உதவி செய்கிறார்.

நாம் கடவுளின் கரங்களாகச் செயல்பட வேண்டும்.

"கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். "
(1அரு .4:12)

கடவுள் எப்போதும் அவரால் படைக்கப் பட்டவர்களின் உருவில் நம்மோடு இருக்கிறார்.

அவர்களை அன்பு செய்யும் போது கடவுளை அன்பு செய்கிறோம்.

தாய் குழந்தைக்குப் பாலூட்டும் போது அன்னை மரியாள் செய்ததைச் செய்கிறாள்.

தந்தை தன் மகனை வளர்க்கும் போது புனித யோசேப்பு செய்ததைச் செய்கிறார்.

அயலான் கட்டத்தில் இருக்கும் போது கண்டு கொள்ளாதவன் இராயப்பரைப் போல் இயேசுவை மறுதலிக்கிறான்.

தனது அயலானைத் துன்பத்துக்கு உள்ளாக்குகிறவன் பரிசேயர்களைப் போல் நடந்து கொள்கிறான்.

அயலானின் கண்ணீரைத் துடைப்பவன் புனித வெரோனிக்காவை போல் நடந்து கொள்கிறான்.

அயலானைக் காட்டிக் கொடுக்கிறவன் யூதாசை போல் நடந்து கொள்கிறான்.

யாரெல்லாம் நோயாளிகளைத் தேடிச் சென்று அவர்கள் குணமடைய உதவுகிறார்களோ அவர்கள் இயேசுவாகவே வாழ்கிறார்கள்.

பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடக்கும் அனைவரும் இயேசுக்களே.

உயிர்த்த இயேசுவை உலகிற்கு அறிவிப்பவர்கள் மகதலா மரியாள்கள்.

வாழ் நாளெல்லாம் இயேசுவாக வாழ்வோம்.

சிலுவையைச் சுமந்து சென்று மரிப்போம்.

ஒரு நாள் உயிர்ப்போம்.

உயிர்த்த இயேசுவோடு ஒன்றித்து முடிவில்லா காலம் வாழ்வோம்.

லூர்து செல்வம்.