Wednesday, October 16, 2024

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். (திருப்பாடல்கள்.145:10)

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 
(திருப்பாடல்கள்.145:10)

இவை இன்று பாட வேண்டிய திருப்பாடல் வரிகள்.

நன்றி உணர்வோடு பாட வேண்டிய வரிகள்.

உருவாக்கப்பட்ட அனைத்தும் எல்லாம் வல்ல இறைவனது வல்லமையால் உருவாக்கப்பட்டன.

இறைவன் ஆறாம் நாளில் மனிதனைப் படைக்குமுன் அவனது பயன்பாட்டுக்காக உலகம் உள்ளிட்ட முழு பிரபஞ்சத்தைப் படைத்தார்.

படைப்புகள் அனைத்தும் படைத்தவரின் வல்லமையையும், படைப்புக்குக் காரணமான அன்பையும் பிரதிபலிக்கின்றன.

விழா நாட்களில் நமக்கு வரும் பரிசுகளின் தன்மையை பரிசு அளித்தவரின் தன்மையைத் தீர்மானிக்கிறோம் அல்லவா,

அதைப் போல படைப்புகளின் தன்மையை வைத்து, படைத்தவரின் தன்மையைத் தீர்மானிக்கலாம்.

நாம் தொட்டு உணரக்கூடிய நமது உடலின் அற்புதமான அமைப்பை வைத்தும்,

உடலின் பொறிகள் ஐந்தாயினும் அவை இணைந்து இசைந்து செயல்படும் விதத்தை வைத்தும்

அதைப் படைத்தவரின் அளவிட முடியாத ஞானத்தை யூகித்துக் கொள்ளலாம்.

மனிதன் வாழும் பிரபஞ்சத்தின் உறுப்புகளான சூரிய சந்திர நட்சத்திரங்களுக்கு மனிதனுக்குரிய புத்தி அறிவு இல்லாவிட்டாலும்,

கடவுளால் கொடுக்கப்பட்ட இயற்கை விதிகளையும்,

அவற்றின்படி அணுபிசகாமல் கோடிக்கணக்கான ஆண்டுகளாக அவை இயங்கிக் கொண்டிருக்கும் விதத்தையும் பார்த்தால் 

எல்லாம் வல்ல இறைவனின் எல்லையற்ற ஞானம் அவற்றில் பிரதிபலிப்பதைக் காணலாம்.

இயைற்கை விதிகள்படி இயங்கிக் கொண்டிருப்பதன் மூலம் தங்கள் நன்றி உணர்வைக் கடவுளுக்குக் காட்டுகின்றன.

அவை அறிவற்ற சடப்பொருட்கள்.

அவற்றால் விதிகளை மீற முடியாது என்பது உண்மைதான்.

ஆனால் அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளலாமே,

அவை இயற்கை விதிகளின்படி இயங்குவது போல நாம் இறைவனின் சித்தப்படி வாழ வேண்டுமென்று!

இறைவனின் சித்தப்படி வாழ்வதன் மூலம் நாம் நம்மைப் படைத்தவருக்கு நமது நன்றி உணர்வைத் தெரிவிக்க வேண்டும்.

உள்ளத்திலிருந்து எழும் வார்த்தைகளால் அவரைப் போற்றுவதோடு நமது நற்செயல்களால் நமது நன்றியை வெளிப்படுத்த வேண்டும்.

இயற்கையின் ஒவ்வொரு செயலிலும் இறைவனின் மகிமையைக் காணலாம்.

 இறைவனை அன்பு செய்யும்  நாம் அவரைப் போற்றி மகிமைப் படுத்த வேண்டும்.

 இறைவனை நேசிப்பவர்கள் யாருடைய அறிவுரையும் இன்றியே அவரைப் போற்றுவார்கள்.

 தங்கள் வாழ்வில் அவர் செய்து கொண்டு வருகிற நன்மைகளுக்காக அவரைப் புகழ்வார்கள்.

நம்மைப் படைக்குமுன் இயற்கையைப் படைத்ததே அவர் நமக்குச் செய்த முதல் நன்மை.

இங்கு ஒரு முக்கியமான உண்மையைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

நமது நண்பர் நம்மீது கொண்ட அன்பின் காரணமாக நமக்குத் தரும் பரிசுப் பொருளை 

அவர் முன்னாலேயே போட்டு உடைத்தால் அவருக்கு எப்படி இருக்கும்?

ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நாம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

கடவுள் நம்மை அளவில்லாத விதமாய் நேசிக்கும் நமது தந்தை.

நம்மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக நாம் பயன்படுத்துவதற்காக அவர் நமக்குத் தந்துள்ள அன்புப் பரிசு தான் நாம் வாழும் உலகம்.

மலைகளும், காடுகளும் , குன்றுகளும், ஆறுகளும், நீர்வீழ்ச்சிகளும், ஆறுகள் ஓடும் சமவெளிகளும்,  தண்ணீர் தேங்கி நிற்கும் ஊருணிகளும், குளங்களும், குட்டைகளும், ஏரிகளும் உலகை அழகுபடுத்தும் இயைற்கை வளங்கள்.

இயற்கை உலகில் வாழும் நமக்குத் தந்த அன்புப் பரிசு.

நாம் பயன்படுத்துவதற்காகத் தந்த அன்புப் பரிசு.

இந்த பரிசைப் பயன்படுத்துகிறோமா?

அல்லது பாழ் படுத்தி அழிக்கிறோமா?

இயற்கையைப் பயன்படுத்தி வாழ்வதற்குப் பதில் அழித்து வாழ்கிறோம்.

காடுகள் மலைகளின் வளம்.
பருவக்காற்றுகளைத் தடுத்து மழை பெய்யக் காரணமாக இருப்பவை மலைக்காடுகள்.

மரங்களை வெட்டாமல் இயற்கை வளத்தை அனுபவிக்க மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும்.ண

மனிதன் இயற்கைக் காடுகளை அழித்து செயற்கையாக தோட்டங்கள் போட்டான்.

இதுதான் கேரளா வயநாட்டில் ஏற்பட்ட அழிவுக்குக் காரணம்.


அநேக இடங்களில் பருவ மழை ஒழுங்காகப் பெய்யாமைக்குக்
காடுகள் அழிப்புதான்.

இயற்கையை அழிக்கும் மனிதன் அதனாலே அழிவான்.

இயல்பிலேயே இயற்கை சுத்தமானது.

இயற்கையாக உள்ள சுத்தமான காற்றைச் சுவாசித்துதான் உயிர் வாழ்கிறோம்.

மனிதனால் மாசு படுத்தப்பட்ட காற்றைச் சுவாசிப்பதுதான் நமது அநேக நோய்களுக்குக் காரணம்.

கண்ட இடங்களில் குப்பைகளைக் கொட்டுதல், வாகனங்களிலிருந்தும், தொழிற்சாலை களிலிருந்தும் வரும் புகை, சாக்கடைகள் ஆகியவற்றால் காற்று மாசுபடுகிறது.

அனைத்து வீடுகளிலும் நாம் அமைத்திருக்கும் septic tanks நிலத்தடிநீர் மாசுபடக் காரணமாக உள்ளன.

இயற்கையை நாம் மாசுபடுத்தினால் அது நம்மை மாசுபடுத்தும்.

இயற்கை அழகை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

எப்படிப் பரிசுப் பொருளைப் பார்த்தவுடன் கொடுத்தவர் ஞாபகத்துக்கு வருகிறாரோ  

 அதுபோல இயற்கையைப் பார்த்தவுடன் அதைப் படைத்த இறைவன் ஞாபகத்துக்கு வரவேண்டும்.

இயற்கையைப் படைத்த இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.

எப்போதாவது நாம் சுவாசிக்கும் காற்றைத் தந்த இறைவனுக்கு நன்றி கூறியிருக்கிறோமா?

இறைவன் படைத்த இயற்கையினால்தான் நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் உயிர் வாழும் ஒவ்வொரு வினாடியும் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும்.

"ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவற்றுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம்,

 உம்முடைய அன்பர்களாகிய நாங்கள் உம்மைப் போற்றிப்
புகழ்கின்றோம்."

என்று இறைவனை நன்றியோடு பாடித் துதிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment