Tuesday, October 15, 2024

"ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்" என்றார். (லூக்கா நற்செய்தி 11:52)

"ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 11:52)

அறிவுக் களஞ்சியம் என்றால் என்ன?

இறைவனைப் பற்றிய அறிவைத் தருகின்ற திருவிவிலியம்.

இறைவன் தீர்க்கக் தரிசிகளின் மூலமாக நமக்கு அறிவித்த நற்செய்திகள் திருவிவிலியத்தில் அடங்கியுள்ளன.

திருவிவிலியம் இறைவனது வார்த்தை.


திருவிவிலியம் நம் வாழ்வின் அனைத்து கேள்விகளுக்கும் பதில்களைத் தரும் ஒரு அறிவுக் களஞ்சியம் போன்றது.

நாம் மீட்புப் பெற திருவிவிலிய அறிவு இன்றியமையாதது.

திறவுகோல்?

வீட்டிற்குள் செல்ல வேண்டுமென்றால் வீட்டுக் கதவைத் திறக்க வேண்டும்.

கதவைத் திறக்க திறவுகோல் வேண்டும்.

இயேசுவின் காலத்தில் திருவிவிலியம் திருச்சட்ட அறிஞர்கள் கையில் இருந்தது.

அதைத் திறக்க வேண்டிய திறவுகோல் அவர்கள் தான்.

இறைவார்த்தைக்கு அவர்களும் சரியான விளக்கத்தைக் காண்பதுமில்லை, (நீங்களும் நுழைவதில்லை.)

சாதாரண மக்களை சரியான விளக்கத்தைக் அறிய 
விடுவதுமில்லை. (நுழைவோரையும் தடுக்கிறீர்கள்.)

அதை வாசித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டியவர்கள் அவர்கள்தான்.

மக்களுக்கு சுயமாக எதுவும் தெரியாதாகையால் அவர்கள் கொடுத்ததுதான் விளக்கம்.

அவர்கள் சரியான விளக்கத்தைக் கொடுப்பதுமில்லை,

சாதாரண மக்களைச் சரியான விளக்கத்தைப் பெற விடுவதுமில்லை.

அவர்கள் தங்கள் கடமையைச் செய்யாததால்தான்

இயேசு, "திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு!"

என்று கூறுகிறார்.

ஏன்"நீங்களும் நுழைவதில்லை."
என்கிறார்?

திருச்சட்டங்கள் எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டனவோ அதைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதில்லை.

சட்டத்தின் எழுத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

அதற்கும் விருப்பம் போல் பொருள் கொடுத்தார்கள்.

ஓய்வு நாளில் வேலை செய்யக் கூடாது என்பது சட்டம்.

ஒரு முறை சீடர்கள் வயல்வெளியில் கதிர்களைக் கொய்து கசக்கியதையே செய்யக்கூடாத வேலை என்றார்கள்.

இயேசு ஓய்வு நாளில் குணமாக்கியதையே ஓய்வு நாளில் செய்யக்கூடாதது என்றார்கள்.

ஓய்வு நாளின் கடவுளையே ஓய்வு நாள் கடமையை மீறுவதாகக் குற்றம் சாட்டினார்கள்.

திருச்சட்ட அறிவைக் கொண்டு மக்களை தவறான பாதையில் இட்டுச் சென்றார்கள்.

 இறைவனின்  இரக்கத்தை விட சட்டங்களை மிகவும் முக்கியமாகக் கருதினார்கள்.

இரக்கத்தின் காரணமாக இயேசு நோயாளிகளைக் குணமாக்கினார்.

அதைத் தவறு என்றார்கள்.

இந்தக் கால நிலைமையின் அடிப்படையில் இந்த வசனத்தைக் தியானிப்போம்.

மீட்படைய பைபிள் அத்தியாவசியமானது இப்போதும் அனைவரும் நம்புகிறோம்.

ஆனால் நாம் பைபிளை எப்படிப் பயன்படுத்துகிறோம்?

பைபிளைச் சரியாகப் பயன் படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்,

தவறாகப் பயன் படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.

விண்ணுலக வாழ்வை அடைய 
பயன் படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.

இவ்வுலகில் வசதியாக வாழப் 
பயன் படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.

அருளை ஈட்டப் பயன் படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.

பொருளை ஈட்டப் பயன் படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.

இறைச்செய்தியை அறிவதற்காக இதுதான் பைபிள் என்று உலகுக்குத் தொகுத்துக் கொடுத்தது இறைமகன் இயேசு நிறுவிய கத்தோலிக்கத் திருச்சபை.

அது கொடுத்த பைபிளுக்கு மொத்தம் 73 புத்தகங்கள்.

பழைய ஏற்பாடு 46.
புதிய ஏற்பாடு.    27.

துவக்கத்திலிருந்தே பைபிள் செய்திகளை மக்களுக்குப் போதித்து அவற்றுக்கு உரிய விளக்கத்தைக் கொடுத்து வந்தது கத்தோலிக்கத் திருச்சபைதான்.

பதினாறாம் நூற்றாண்டு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.

தாய்த் திருச்சபையின் பைபிள் போதனையைக் கேட்டு மக்கள் அதன்படி வாழ்ந்து வந்தனர்.

பதினாறாம் நூற்றாண்டில் சீர்திருத்தவாதிகள் என்று தங்களையே அழைத்துக் கொண்ட சிலர் 

கத்தோலிக்க பைபிளிலிருந்து தங்களுக்கு விருப்பமில்லாத ஏழு புத்தகங்களை நீக்கி விட்டு,

 அதற்குப் பைபிள் என்ற பெயரை வைத்துக் கொண்டு,

 பைபிள் வசனங்களுக்கு தங்கள் விருப்பம் போல் பொருள் கொடுத்து போதிக்க ஆரம்பித்தார்கள்.

 அவர்கள் வைத்திருந்தது  உண்மையான பைபிள் அல்ல,

வசனங்களுக்கு அவர்கள் கொடுத்த விளக்கம் உண்மையான விளக்கமும் அல்ல.

அவர்கள் பைபிளை சரியாகப் பயன்படுத்தவில்லை.

ஒரு மாணவன் வீட்டுப் பாடமாக ஔவையார் எழுதிய ஆத்திச்சூடியைப் பாராப் பாடமாக படித்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய அம்மா அவனுடைய ஆத்திச்சூடி அறிவைச் சோதிக்க விரும்பி,

"ராஜா, ஊக்கமது கைவிடேல் என்ற பாட்டுக்கு அர்த்தம் சொல்லு."

பையன் பதம் பிரித்து பொருள் சொன்னான்,

"ஊக்கம் = ஊக்கம் தரக்கூடிய,
மது = மதுவை,
கைவிடேல்= விட்டு விடாதே.

மது அருந்தும் பழக்கத்தை விட்டு விடாதே, ஏனெனில் மது அருந்தினால் ஊக்கம் கிடைக்கும்."

பைபிள் வசனங்களுக்கு இதைப் போல் சொன்னால் எப்படி இருக்கும்?

அப்படித்தான் சிலர் பைபிள் வசனங்களுக்கு தப்பும் தவறுமாய் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

பைபிளை மட்டும் கையில் வைத்துக் கொண்டு  வசனங்களுக்கு விருப்பம் போல் பொருள் சொலலும் பிரிவினை சபைகள் ஏறத்தாழ 45000 உள்ளன.

இவர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் பாரம்பரியத்தை ஏற்றுக் கொள்வதில்லை.

இவர்கள் ஏற்றுக் கொள்வது ஏழு புத்தகங்கள் இல்லாத பைபிளை.

இவர்களில் பலர் காணிக்கை வசூலுக்காக மட்டுமே பைபிள் போதகம் செய்கிறார்கள்.

இவர்களுக்கு பைபிள் ஒரு வியாபாரப் பொருள்.

இவர்கள் பைபிள் பணி புரிவது அருள் ஈட்ட அல்ல, பொருள் ஈட்ட.

இயேசு சட்ட நூல் அறிஞர்கள் செய்ய தவற்றினைக் சுட்டிக் காண்பித்தது நாம் அப்படிப் பட்ட தவறுகளைச் செய்யக்கூடாது என்பதற்காகத்தான்.

பைபிளை வாசிக்கும் போது

 வசனங்களின் உண்மையான பொருளை

பைபிளைத் தந்த கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைப்படி புரிந்து கொண்டு 

அதன்படி வாழ்வோம்.

கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைப்படி வாழ்வோம்.

ஒவ்வொரு திருப்பலியின் போதும் பைபிள் வாசகங்களுக்கு குருவானவர் கொடுக்கும் விளக்கத்தைக் கூர்ந்து கவனிப்போம்.

இறைவாக்கு நமது வாழ்வாகட்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment