Thursday, October 17, 2024

"நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை மானிடமகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக் கொள்வார். (லூக்கா நற்செய்தி 12:8)

 "நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை மானிடமகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக் கொள்வார். 
(லூக்கா நற்செய்தி 12:8)

இயேசுவை அறிதல்,‌ வாழ்தல், அறிவித்தல்- மூன்றும் சேர்ந்தது தான் கிறிஸ்தவ வாழ்வு.

நற்செய்தி வழியாக இயேசுவை அறிய வேண்டும்,

நற்செய்தியை வாழ்வது மூலமாக இயேசுவை வாழ வேண்டும்,

நற்செய்தியை அறிவித்தல் மூலமாக இயேசுவை அறிவிக்க வேண்டும்.‌

உலக மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக இயேசுவை மீட்பர் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வெறுமனே சொல்லால் ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது,

வாழ்க்கையாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அப்படி நாம் ஏற்றுக் கொண்டால் இயேசுவும் மோட்சத்தில் கடவுளின் சம்மனசுக்கள் முன்னால் நம்மை அவருடைய சீடர்களாக ஏற்றுக் கொள்வார்.

சுருக்கமாகச் சொல்வதானால் 

 மக்கள் முன்னால் இயேசுவை ஏற்றுக் கொள்பவர்ளை அவர் தனது சம்மனசுக்களின் முன்னால் ஏற்றுக் கொள்வார்.

வசனத்தின் அடிப்படையில் நமது வாழ்க்கையை மூன்று நிலைகளாகப் பிரித்து தியானிப்போம்.

1. ஏற்றுக் கொள்ளுதல்.

2. கொடுத்தல்.

3. ஏற்றுக் கொள்ளப் படுதல்.

1.ஏற்றுக் கொள்ளுதல்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாம் எங்கு இருந்தோம்?

எங்குமே இல்லை.

நாமே இல்லை.
We were nothing.

இல்லாத நம்மை இருப்பவர்கள் ஆக்கியவர் கடவுள்.

முதலில் நம்மை ஆக்கியவரை நாம் ஆக்கியவராக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவர்தான் நமக்கு எல்லாம்.
அவரின்றி நாம் இல்லை.

நாம் நமக்குச் சொந்தமில்லை, நம்மைப் படைத்தவருக்குச் சொந்தம்.

இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவர் நமக்குச் சொந்தம், நாம் அவருக்குச் சொந்தம்.

அவருக்குச் சொந்தமான நம்மை அவரிடமிருந்து பிரிக்க யாருக்கும் உரிமை இல்லை. பிரிந்து வர நமக்கே உரிமை இல்லை.

இந்த உண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் அவருக்காக வாழ வேண்டும், அவருக்காக மட்டுமே வாழ வேண்டும்.

இந்த உண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

"எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே

எல்லாம் உமக்காக.

எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்,

எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும்,

எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும்,

உந்தன் அதிமிக மகிமைக்கே."

இந்த உண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவருக்குச் சொந்தமான நாம் அவருக்காக வாழ வேண்டும் என்றால் அதோடு இணைந்திருக்கும் மற்றொன்று உண்மையையும் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் என்ற வார்த்தையால் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களையும் குறிக்கிறோம்,

கர்த்தர் கற்பித்த செபத்தில் 
"எங்கள் தந்தையே" என்பது போல.

படைக்கப்பட்ட அனைவரும் அவருக்குச் சொந்தம்.

இப்போது சொல்லாமலே புரியும், 

அவரை நேசிக்க வேண்டும் என்று சொல்லும் போது அவருக்குச் சொந்தமான அனைவரையும் நேசிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

கடவுளை நேசிக்கும் போது நம்மையும்,(ஒவ்வொருவரும் அவரவரையும்), நமது பிறரையும் நேசிக்க வேண்டும்.

நான் என்னை நேசிப்பது போல என் அயலானையும் நேசிக்க வேண்டும்.

அப்படியே ஒவ்வொருவரும்.

இறையன்பும் பிறரன்பும் பிரிக்க முடியாதவை.

இறைவனை நேசிப்பவன் நிச்சயம் பிறரையும் நேசிப்பான்.

பிறரை நேசிக்காதவன் இறைவனையும் நேசிக்கவில்லை.

நாம் கோவிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.

ஒரு ஏழை அவசரமான மருத்துவச் செலவுக்காகக் கொஞ்சம் பணம் கேட்கிறான்.

நம்மிடம் காணிக்கை போடுவதற்காகப் பணம் இருக்கிறது.

அவனிடம் கொடுத்து விட்டால் காணிக்கை போட முடியாது.

உண்மையில் ஏழையின் மூலம் பண உதவி கேட்பவர் கடவுள் தான்.

ஏழைக்கு உதவாமல் பணத்தைக் காணிக்கைப் பெட்டியில் போட்டால் அதைக் கடவுள் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

தீர்ப்பு நாளில் நம்மைப் பார்த்து,

"நான் மருத்துவச் செலவுக்குப் பணம் கேட்டேன், நீ தரவில்லை"

என்பார்.

இறைவனுக்காகப் பிறருக்குச் செய்யும் பணி இறைப்பணி.

இறைவனைத் தந்தையாகவும், பிறரைச் சகோதரர்களாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

2. கொடுத்தல்.

ஏற்றுக் கொள்வதோடு நெருங்கிய தொடர்புடையது கொடுத்தல்.

ஏற்றுக் கொள்ளாமல் கொடுக்க முடியாது.

ஏற்றுக் கொள்வதே வாழ்ந்து கொடுப்பதற்காகத்தான்.

நாம் ஏற்றுக் கொண்ட இயேசுவையும், அவருடைய நற்செய்தியையும்‌ அது வரை ஏற்றுக்கொண்டிராத மக்களுக்குக் கொடுக்க வேண்டும்.

இயேசுவை அறியாதவர்களும் அவரை அறிந்து ஏற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.

வார்த்தையினாலும், நமது முன்மாதிரிகையான வாழ்க்கையினாலும் இதைச் செய்ய வேண்டும்.

3. ஏற்றுக் கொள்ளப் படுதல்.

இவ்வுலக வாழ்வின் போது நமது முழுநேர வேலையே நாம் இயேசுவை ஏற்றுக் கொள்வதும், அவரை மற்றவர்களுக்குக் கொடுப்பதும்தான்.

இவ்வேலையைச் சிறப்பாகச் செய்தால் இவ்வுலக வாழ்க்கையின் முடிவில் இறைமகன் இயேசு மோட்சவாசிகளின் முன்பாக நம்மை நித்திய பேரின்ப வாழ்வுக்குள் ஏற்றுக் கொள்வார்.

இயேசுவை ஏற்றுக் கொள்வோம்.

அவரை அனைவருக்கும் கொடுப்போம்.

அவரோடு நிலைவாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment