Monday, October 14, 2024

"ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே. "(லூக்கா நற்செய்தி 11:43)

 "ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே. "
(லூக்கா நற்செய்தி 11:43)

இயேசு அன்றைய பரிசேயர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டுவதன் நாம் எப்படி குறைகள் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்பதை நமக்கு உணர்த்த விரும்புகிறார்.

பரிசேயர்கள் ஆலயத்தில் முதன்மையான இருக்கைகளில் அமர விரும்பினார்கள்.

வெளியிடங்களில் மக்கள் தங்களை வணங்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

கோவிலில் எல்லா இருக்கைகளும் மக்கள் அமர்வதற்காகத்தான் போடப் பட்டுள்ளன.

முதல் வரிசையில் யாரும் அமரக்கூடாது என்று இயேசு சொல்லவில்லை.

ஒரு செயல் சரியானதா, தவறானதா என்று தீர்மானிப்பது செய்பவரின் நோக்கம் தான்.

கோவிலுக்கு நன்கொடை கொடுப்பது சரியா? தவறா?

இறையன்பின் அடிப்படையில் கொடுத்தால் அது நற்செயல்.
அதற்கு விண்ணகத்தில் பலன் உண்டு.

ஆனால் சுய விளம்பரத்துக்க்கக் கொடுத்தால் 
அது நற்செயல் அல்ல, 
அதற்கு விண்ணகத்தில் என்ன பலனும் இல்லை.

கடவுளுக்கு நமது செயல்களின் அந்தரங்க நோக்கம் தெரியும்.

பரிசேயர்கள் மற்றவர்கள் தங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காக முதல் இருக்கைகளைத் தேடினார்கள்.

அது தவறு.

சுத்தமான உடை அணிந்து கோவிலுக்கு வருவது சரி.

மற்றவர்கள் தங்களைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சிகரமான உடை அணிந்து கோவிலுக்கு வருவது தவறு.

அவர்கள் தங்களது தவற்றின் மூலம் மற்றவர்களைப் பாவத்தில் விழ வைக்கிறார்கள்.

நாம் மற்றவர்களை வணங்க வேண்டும்.

வணங்கும் போது மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கிறோம்.

நாம் தாழ்ச்சி என்னும் புண்ணியத்தில் வளர்கிறோம்.

மற்றவர்கள் வணங்குவதை நட்பின் அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறோம்.

வணங்குவதும், வணக்கத்தை ஏற்றுக் கொள்வதும் சரி.

ஆனால் நாம் உயர்ந்தவர்கள், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற தற்பெருமை உணர்வுடன் பிறரின் வணக்கத்தை எதிர் பார்ப்பது தவறு.

இதைச் சுட்டிக்காட்டவே இயேசு பரிசேயர்களைப் பார்த்து,

" நீங்கள் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்கள்." என்கிறார்.

பரிசேயர்கள் மக்களுக்கு முன்னால் தங்களை புனிதர்களாக காட்டிக்கொள்ள விரும்பினர்.

மக்களின் பாராட்டை பெற ஆசைப்பட்டனர். சந்தை வெளிகளில் நடந்து செல்லும் போது, மக்கள் தங்களை வணங்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.

அன்றைய பரிசேயர்களைப் போல இன்றும் மக்கள் இருக்கிறார்கள் என்பதை நமது அனுபவத்தில் அறிகிறோம்.

நாம் அப்படிப் பட்டவர்களாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

 தங்களை நல்லவர்கள் என்று காட்டிக்கொள்ள, சமூக வலைதளங்களில் தங்களது நல்ல செயல்களை பகிர்ந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

தாங்கள் தாராள குணம் உள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ள கோயில்களுக்கு நிறைய நன்கொடைகள் தருபவர்களும் 
இருக்கிறார்கள்.

 உள்ளத்தில் பக்குவம் இல்லாதவர்கள்தான் இப்படிச் செய்வார்கள்.

நாம் நற்செயல்கள் செய்ய வேண்டும்.

நமது விசுவாசம் நமது நற்செயல்களில்தான் வெளிப்பட வேண்டும்.

செயல்கள் இல்லாத விசுவாசம் செத்த விசுவாசம் என்று இறைவாக்கு கூறுகிறது.

நமது செயல்கள் விசுவாசத்தின் பிள்ளைகளாக இருக்க வேண்டும், தற்பெருமையின் பிள்ளைகளாக அல்ல.

நாம்  மற்றவர்களை விட மேலானவர்கள் என்று உள்ளத்தில் நினைப்பதே தவறு.

அப்படி நினைப்பது நமக்கும் மற்றவர்களுக்கும் இடையே இடைவெளியை உண்டாக்குகிறது.

நல்லவர்கள் தாழ்ச்சியின் பிள்ளைகள்.

சிந்தனையிலும், சொல்லிலும், 
செயலிலும் 
பரிசுத்தர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment