Thursday, October 3, 2024

"இருவரும் ஒரே உடலாய் இருப்பர். 'இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்."(மாற்கு நற்செய்தி 10:8)

"இருவரும் ஒரே உடலாய் இருப்பர். 'இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்."
(மாற்கு நற்செய்தி 10:8)

  "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம்.
(தொடக்கநூல் 1:26)

இவை மனிதனைப் படைக்கும் போது கடவுள் கூறிய வார்த்தைகள்.

நமது முதல் பெற்றோரைக் கடவுள் ஒரு குடும்பமாகப் படைத்தார்.

இது கடவுள் நேரடியாக நடத்தி வைத்த முதல் திருமணம்.

கடவுள் உருவாக்கிய குடும்பத்தில் கடவுளின் சாயல் எங்கே இருக்கிறது?

மூன்று ஆட்கள், ஒரே கடவுள்.

இரண்டு ஆட்கள், ஒரே குடும்பம்.

இரண்டு ஆட்களும் சேர்ந்து பெறும் குழந்தைகளும் அவர்களோடு ஒரே குடும்பம்தான்.

கடவுள் நித்திய காலமும் மூவொரு கடவுள் தான்.

திருமணமான தம்பதியர் வாழ்நாளெல்லாம் 
ஈருயிர் ஓருடல்தான்.

அன்பே உருவானவர் கடவுள்.
அன்பால் ஒன்றானவர்கள் திருமணமான தம்பதியர்.

மூன்று ஆட்கள் ஒரே கடவுள்,
ஆனால் கடவுளை மூன்றாகப் பிரிக்க முடியாது.

மூவரும் ஒருவருள் ஒருவராக இருக்கின்றனர்.

திருமணத்தில் ஈருயிர் ஓருடல் ஆன தம்பதியரையும் எக்காரணத்தை முன்னிட்டும் பிரிக்க முடியாது.

தந்தை மகன் தூய ஆவியைப் போல தாங்களும் வாழ வேண்டும் என்று கணவனும் மனைவியும் தீர்மானித்து, அப்படியே வாழ்ந்தால்,

குடும்பத்தில் அன்புக்கும், சமாதானத்துக்கும் பஞ்சமே இருக்காது.

தந்தையின் சித்தத்தை மகன் நிறைவேற்றுகிறார்.

மகன் நிறுவிய திருச்சபையைத் தூய ஆவி வழி நடத்துகிறார்.

தம திரித்துவத்தைப் போல் வாழும் குடும்பத்தில் கணவனின் விருப்பத்தை மனைவி நிறைவேற்றுவாள்,

மனைவியின் விருப்பத்தை கணவன் நிறைவேற்றுவார்.

தம திரித்துவத்தைப் போல் கணவனும் மனைவியும் அன்பில் ஒன்றித்து வாழ்வார்கள்.

ஒன்றை மனதில் கொள்ள வேண்டும்.

அசல் அசல்தான்.

சாயல் அசல் ஆகாது. அசலைப் போலிருக்கும்.

தாயைப் போல் பிள்ளை,

ஆனால் பிள்ளை தாய் ஆகாது.

தந்தை மகன் தூய ஆவிக்கு ஒரே விருப்பம்.

கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே மாதிரியான விருப்பம்‌ இருக்கலாம், ஒரே விருப்பம் இருக்க முடியாது.

தமதிரித்துவத்தின் மூன்று ஆட்களுக்கும் ஒரே தேவ சுபாவம், ஒரே ஞானம், ஒரே சித்தம்,

ஆகவேதான் ஒரே கடவுள்.

மனிதனைப் படைக்க வேண்டும் என்று தந்தை விரும்பினார், மகன் விரும்பினார், தூய ஆவி விரும்பினார்.

மூவருக்கும் ஒரே மாதிரியான விருப்பம் அல்ல, ஒரே விருப்பம்.

மகன் மனிதனாகப் பிறக்க வேண்டுமென்று தந்தை விரும்பினார், மகன் விரும்பினார், தூய ஆவி விரும்பினார், ஒரே விருப்பம்.

ஆனால் ஆட்கள் தனித் தனி.
மூவரின் ஒரே விருப்பப்படி
மகன் மட்டும் தான் மனிதனாகப் பிறந்தார்.

மகன் முழுமையாகக் கடவுள்,  ஆகவே கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

ஒரே கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

மகன் முழுமையாகக் கடவுள்,
முழுமையாக மனிதன்.

மனிதனாகப் பிறந்த மகன் மூவரில் ஒருவர்.

ஆனால் மனிதனாகப் பிறந்தது மூன்றில் ஒரு கடவுள் அல்ல.
கடவுளைப் பிரிக்க முடியாது.

நம்மைப் படைத்த ஒரே கடவுள் நமக்காக மனிதனாகப் பிறந்தார்.

இறைமகன் மனிதனாகப் பிறந்தார்.

இறைமகன் முழுமையாகக் கடவுள்.

இது அசல்.

இரண்டு உயிர்கள் ஒரு குடும்பமாக இருப்பதால் குடும்பம் கடவுளின் சாயல்.

தமதிரித்துவத்தில் மூவரும் ஒரே அன்பில் ஒன்றித்திருப்பது போல

தம்பதியர் அன்பால் இணைந்திருப்பதால் கடவுளின் சாயல்.

ஆனால் தமதிரித்துவத்தின் அன்பு ஒரே அன்பு.

குடும்பத்தில் கணவனின் 
அன்பும், மனைவியின் அன்பும் இணைந்துள்ளன.

இருவருக்கும் ஒரே அன்பு அல்ல.

ஒரே மாதிரியாக இருக்கலாம், தன்மையிலும் அளவிலும் வித்தியாசமானவைகளாகவும் இருக்கலாம்.

கடவுளின் அன்பு அளவில்லாதது.

மனித அன்பு அளவுள்ளது.
கணவனின் அன்பு அதிகமா, மனைவியின் அன்பு அதிகமா என்பது கஷ்டங்கள் வரும்போது தான் தெரியும்.

அளவைப் பற்றிக் கவலைப் படாமல் இருவரும் ஒருவரை ஒருவர் இயன்ற அளவு அன்பு செய்ய வேண்டும்.

இறைமகன் இயேசு நம்மீது கொண்ட அன்பின் மிகுதியால்  தன்னையே சிலுவையில் தியாகம் செய்தார்.

அதேபோல கணவனும் மனைவியும் ஒருவருக்காக ஒருவர் தன்னையே தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

தமதிரித்துவத்தில் மூவருக்கும் ஒரே சித்தம்.

ஆனால் குடும்பத்தில் இருவருக்கும் வெவ்வேறு விருப்பங்கள், ரசனைகள் இருக்கலாம்.

அன்பை மையமாக வைத்துக்கொண்டு மற்றவற்றில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போக வேண்டும்.

இருவருடைய விருப்பங்கள் வித்தியாசமாக இருந்தாலும் ஒருவர் மற்றவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டினால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு எதிராக எதுவும் உள்ளே நுழைய முடியாது.

வித்தியாசமான குணங்கள் உள்ளவர்களும் உண்மையான அன்பு இருந்தால் ஒருவரை ஒருவர் முழுமையாக ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழலாம்.

"ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
(மத்தேயு நற்செய்தி 5:48)

தூய ஆவியின் துணையுடன் இயேசுவைப் போல் வாழ்ந்தாலே நமது அளவுக்கு தந்தையைப் போல் நிறைவுள்ளவர்களாய் வாழலாம்.

கடலைப் போல தம்ளர் நிறைவு உள்ளதாக இருக்க முடியுமா?

முடியும்.

தம்ளர் சிறியதாக இருக்கலாம்.

கடல் அதன் அளவுக்கு நிறைவுள்ளதாக இருப்பது போல தம்ளரும் அதன் அளவுக்கு நிறைவுள்ளதாக இருக்கலாம்.

அன்னை மரியாள் அருள் நிறைந்தவளாய் வாழ்ந்தாள்.

அருள் மிகப் பெற்ற மரியாள் அல்ல,

அருள் நிறைந்த மரியாள்.
(Mary, full of grace)

நாமும் கடவுளின் சாயலில் வாழ்வோம். 

சாயலுக்குப் பங்கம் ஏற்படாமல் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment