Saturday, October 5, 2024

அதற்கு திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார். (லூக்கா நற்செய்தி 10:37)

அதற்கு திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார். 
(லூக்கா நற்செய்தி 10:37)

இயேசு நல்ல சமாரித்தன் உவமையைக் கூறுவதற்கு முன்னால் முன்னுரையாக அமைந்த இரண்டு வசனங்களைக் கவனிக்க வேண்டும்.

"திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், "போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்."


"அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று இயேசுவிடம் கேட்டார்."
(லூக்கா நற்செய்தி 10:25,29)

கேள்வி கேட்டவர் திருச்சட்ட அறிஞர்.

மோயீசன் மூலமாக இறைவன் அளித்த சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர்.

அவர் அறிஞராகையால் அவரது கேள்விக்கு அவருக்குப் தெரியாதிருந்திருக்க முடியாது.

அவர் கேள்வி கேட்டது இறைவனிடம், அவர் இறைவன் என்று ஏற்றுக் கொள்ளாத இயேசுவிடம்.

கேள்வி கேட்டது பதில் அறிந்து கொள்ள அல்ல, இயேசுச் சோதிக்கும் நோக்குடன்.

இயேசு பதிலைச் சொன்னதும் அடுத்த கேள்வியைக் கேட்கிறார், இதுவும் பதில் தெரிந்து கொள்ள அல்ல, 

தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி.

கடவுளையே சோதிக்க விரும்புகிறவனும், தன்னை நேர்மையாளர் என்று காட்டிக் கொள்ள விரும்புகிறவனும் உண்மையான ஆன்மீகவாதியாக இருக்க முடியாது.

அவனது கேள்விகளின் தன்மையை அறிந்தும் இயேசு பொறுமையாகப் பதில் சொல்கிறார்.

நல்ல சமாரித்தன் உவமை மூலம் பதில் சொல்கிறார்.

நல்ல சமாரித்தன் உவமையாக ஆன்மீக ரீதியாகத் தியானிப்போம்.


 ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகிறார்.

போகும்போது கள்வர் கையில் அகப்படுகிறார். 

அவர்கள் அவருடைய ஆடைகளை  உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போகிறார்கள். 

அவ்வழியே வரநேர்ந்த குருவும், லேவியரும் அவரைக் கண்டும் காணாதது போல் போய்விடுகிறார்கள்.

அவ்வழியே வரும் சமாரித்தர் அவருக்கு உதவுகிறார்.

சமாரித்தர் அவரைத் தனது அடுத்திருப்பவராக ஏற்றுக் கொண்டு உதவுகிறார்.


திருச்சட்ட நூலில் வரும் 

"உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" என்ற வசனத்தை விளக்குவதற்காகவே இந்த உவமை.

அடுத்திருப்பவரை நாம் அயலான் என்று கூறுகிறோம்.

இயேசுவின் உவமைகளைக் கூர்ந்து தியானித்தால் ஒவ்வொரு உவமையிலும் இரண்டு கருத்துருக்கள் இருப்பது புரியும்.

நல்ல சமாரித்தன் உவமையிலும் இரண்டு கருத்துருக்கள் உள்ளன.

முதலாவது நமது அயலானை நேசிக்க வேண்டும், அவனுக்கு உதவ வேண்டும்.

இன்னொரு கருத்தைத் தியானிப்போம்.

எருசலேம் கோவில் நகரம்.
கடவுளுக்கு ஏற்ற ஆன்மீக வாழ்வைக் குறிக்கும்.

எரிக்கோ வியாபார நகரம்.
லௌகீக வாழ்வைக் குறிக்கும்.

முழுக்க முழுக்க இறைவனோடு ஒன்றித்து ஆன்மீக வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவனிடம் சாத்தானின் வேலை எடுபடாது.

ஆன்மீக வாழ்வை விட்டு விட்டு லௌகீக வாழ்க்கையில் ஒருவன் ஆர்வம் காட்ட ஆரம்பித்தால் சாத்தான் அவனது வேலையைக் காட்ட ஆரம்பிப்பான்.

ஒருவன் எருசலேமிலிருந்து எரிக்கோவுக்குப் போகும் வழியில் கள்வர் கையில் அகப்பட்டான்.

அதாவது ஆன்மீக வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த ஒருவனுக்கு லௌகீக வாழ்வில் ஆசை வந்த போது சாத்தானால் சோதிக்கப்பட்டான்.

சாத்தான் அவனைப் பாவ வாழ்க்கையில் விழ வைத்தான்.

அயலான் மீது அன்பு இல்லாதவர்களால் அவனுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

ஆனால் அவ்வழியே வந்த நல்ல சமாரித்தனாகிய இயேசு அவனுக்கு உதவி செய்து,  அவனைக் குணப்படுத்தும் முழுப் பொறுப்பையும் கத்தோலிக்க திருச்சபையிடம் (சாவடி) ஒப்படைத்தார்.

அவன் குணமடைய உதவியாக பாவ சங்கீர்த்தனம், நற்கருணை 
(இரு தெனாரியம்) ஆகிய திரு அருட்சாதனங்களைக் கொடுத்தார்.

லௌகீக வாழ்க்கையில் ஆசை கொண்டவன் ஆன்மீக வாழ்வுக்குத் திரும்பி விட்டான்.

இறை மகன் இயேசு தன்னை நேசிப்பது போல அவருக்கு அயலான் ஆகிய நம்மை நேசிக்கிறார்.

பிறரன்புக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தார்.

அவர் தனது சிந்தனையால் மட்டுமல்ல, 

சொல்லாலும், (நற்செய்தி),

செயலாலும் (சிலுவை மரணம்)

பாவத்திலிருந்து மீட்டிருக்கிறார்.

நாமும் அவரைப் பின்பற்றி 

சிந்தனையாலும் 
(உள்ளத்தில் அன்பு)

சொல்லாலும் 
(நற்செய்திப் பணி)

செயலாலும் (ஆன்மீக வாழ்வில் செய்யும் உதவிகள்)

நாமும் மீட்புப் பணி செய்வோம்.

லூர்து செல்வம்

Friday, October 4, 2024

" கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பியபோது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழி நடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே.". (எபிரேயர் 2:10)

" கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பியபோது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழி நடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே."
(எபிரேயர் 2:10)

இறை வசனத்தைக் கருத்துக்களின் அடிப்படையில் பிரித்து தியானிப்போம்.

"கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார்."

"படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவைப் படைத்தான் தனை வணங்க."

கடவுள் அனைத்து சூரிய நட்சத்திரக் கூட்டங்கள் உட்பட்ட பிரபஞ்சத்தைப் படைத்துவிட்டு இறுதியில் மனிதனைப் படைத்தார்.

பிரபஞ்சத்தை எதற்காகப் படைத்தார்?

மனிதனுக்காக. பிரபஞ்சத்தைப் பார்த்து அதைப் படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்பதை அறிந்து, அவர்தான் தன்னையும் படைத்தார் என்பதை மனிதன் புரிந்து கொள்வதற்காக.

மனிதனை எதற்காகப் படைத்தார்?

அவரை அறிந்து, அவரை அன்பு செய்வதற்காக.

சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அன்பு செய்வதற்காக.

அன்பு செய்கின்ற அவரை அன்பு செய்வதற்காக.

தமிழ் நாட்டில் குலத் தொழில் என்ற சொற்றொடர் உண்டு.

தந்தை செய்யும் தொழிலையே மகனும் செய்வது.

நம்மைப் படைத்த கடவுளாகிய தந்தையின் தொழிலையே நாமும் செய்வது நமது குலத்தொழில்.

கடவுள் என்ன தொழில் செய்கிறார்?

நித்திய காலமாக அன்பு செய்கிறார்.

அன்பு செய்வதற்காகவே நம்மைப் படைத்தார்.

அவர் நித்திய காலமும் அன்பு செய்வது போல, நாம் வாழ்நாள் முழுவதும் அன்பு செய்ய வேண்டும்.

நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அன்பு செய்ய வேண்டும்.

அதற்கு உதவிகரமாக இருப்பதற்காகவே நாம் வாழும் பிரபஞ்சம்.

ஆக, நாம் உட்பட பிரபஞ்சம் முழுவதையும் கடவுள் 
தானே, தனக்காகவே படைத்தார்.

நாம் வாழும் பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களை இறைவனுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும்.

நாம்தான் பயன்படுத்த வேண்டும், ஆனால் சுய மகிழ்ச்சிக்காக அல்ல, கடவுளின் மகிமைக்காக.

நாம் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாதா?

இருக்க வேண்டும், ஆனால் நமது மகிழ்ச்சியைக் கடவுளின் மகிமைக்காக ஒப்புக் கொடுக்க வேண்டும்.

கடவுள் தான் உலகைப் படைத்தார்,

கடவுள் தான் அதைக் காப்பாற்றுகிறார்,

கடவுள் தான் அதை ஆள்கிறார்.

அவரது தெய்வீகமும், இறையாண்மையும் அவரது படைப்புகள் அனைத்திலும் பிரதிபலிக்கின்றன.

ஆகவே அனைத்தும் அவரது மகிமைக்காகவே.


"அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பியபோது"

கடவுள் தமது தந்தை,  நாம் அவரது மக்கள்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் மக்களை ஏதாவது ஒரு குறிக்கோளை நோக்கமாக வைத்துதான் வளர்ப்பார்கள், அதற்கான பயிற்சியைக் கொடுப்பார்கள்.

நிலபுலன்கள் நிறைய உள்ளவர்கள் பயிர்த்தொழிலை நோக்கமாக வைத்துக் கொண்டு அதற்கேற்ற முறையில் பயிற்சி கொடுத்து வளர்ப்பார்கள்.

டாக்டர் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அத்தொழிலை மையமாக வைத்து வளர்ப்பார்கள்.

நித்திய பேரின்ப மகிமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுள் 

அவரது மக்களாகிய நம்மை

 நித்திய பேரின்பத்தையும்,
அவரது மாட்சிமையையும், அதாவது, மகிமையையும் மையமாக வைத்தே  

பராமரித்து வருகிறார்.

அவரது நித்திய பேரின்பத்திலும், மாட்சியிலும் பங்குகொள்ள அழைத்துச் செல்வதையே குறிக்கோளாகக் கொண்டு நம்மைப் பராமரித்து வருகிறார்.

அதாவது நமது வாழ்வின் நோக்கம் விண்ணகத்தில் நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வது.

மகிமையோடு வாழும் இறைவனோடு ஒன்றித்து வாழ்வது.


"அவர்களது மீட்பைத் தொடங்கி வழி நடத்துபவரை"

அவரது மக்களாகிய நாம் பாவம் சேற்றில் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.

அதிலிருந்து விடுதலை பெற்று புண்ணிய வாழ்வில் வளர்ந்தால் தான் நம்மால் விண்ணகப் பேரின்ப வாழ்வில் பங்கு பெற முடியும்.

நம்மைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக தந்தை இறைவன் தன் ஒரே மகனை பூமிக்கு அனுப்பினார்.


"துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார்."

தந்தையால் அனுப்பப்பட்டு மண்ணகம் வந்த இறைமகன் தனது பாடுகளின் மூலமும், சிலுவை மரணத்தின் மூலமும் நம்மை மீட்டார்.

நம்மை மீட்பதற்காக அவர் வாழ்ந்த வாழ்வு துன்பங்கள் நிறைந்த வாழ்வு.

வாக்கிய அமைப்பைப் பாருங்கள்,

"துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார்."

நம்மைப் படைத்த தந்தை நம்மை மீட்பின் அருளால் நிரப்புவதற்காக 

தனது ஒரே மகனின் வாழ்வைத்
துன்பங்களால் நிரப்பினார்.

நமக்கு நித்திய பேரின்ப வாழ்வைப் பெற்றுத் தர

இறைமகன் வேதனை மிகுந்த பாடுகளை ஏற்றுக் கொண்டார்.

இதிலிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

பிரசவ வலி இல்லாமல் பிள்ளை இல்லை.

கடின உழைப்பு இல்லாமல் வெற்றி இல்லை.

புனித வெள்ளி இல்லாமல் உயிர்த்த ஞாயிறு இல்லை.

சிலுவை இல்லாமல் மீட்பு இல்லை.

துன்பம் இல்லாமல் இன்பம் இல்லை.

ஆகவே நமது வாழ்வில் துன்பங்கள் வரும்போது நாம் கவலைப் படக்கூடாது.

அதை விண்ணகத்துக்கு ஏற்றிவிடும்‌ ஏணியாக ஏற்று மகிழ வேண்டும்.


"இது ஏற்ற செயலே."


இயேசு அனைத்தையும் படைப்பவராகவும் பராமரிப்பவராகவும் இருப்பதாலும், 

 நம்மை விண்ணக மகிமைக்குள் அழைத்துச் செல்பவராக இருப்பதாலும் 

நமது மீட்பின் வேலையை  நிறைவு செய்ய 

தான் துன்பங்களை ஏற்றுக் கொள்வது ஏற்ற செயல் என அவர் கருதி அவர் பாடுகள் பட்டு மரித்தார்.

துன்பங்களை ஏற்றுக் கொள்வது மீட்புக்கு ஏற்ற செயல் நாமும் கருதுவோம்.

வாழ்க்கைக் கடலில் புயல் வீசிக் கொண்டிருப்பதால்,

இராயப்பர் படகில் எவ்வளவு துன்பங்கள் நிறைந்திருந்தாலும்
அதில் ஏறிக் கரை சேர்வோம்.

லூர்து செல்வம்.

Thursday, October 3, 2024

"இருவரும் ஒரே உடலாய் இருப்பர். 'இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்."(மாற்கு நற்செய்தி 10:8)

"இருவரும் ஒரே உடலாய் இருப்பர். 'இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்."
(மாற்கு நற்செய்தி 10:8)

  "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம்.
(தொடக்கநூல் 1:26)

இவை மனிதனைப் படைக்கும் போது கடவுள் கூறிய வார்த்தைகள்.

நமது முதல் பெற்றோரைக் கடவுள் ஒரு குடும்பமாகப் படைத்தார்.

இது கடவுள் நேரடியாக நடத்தி வைத்த முதல் திருமணம்.

கடவுள் உருவாக்கிய குடும்பத்தில் கடவுளின் சாயல் எங்கே இருக்கிறது?

மூன்று ஆட்கள், ஒரே கடவுள்.

இரண்டு ஆட்கள், ஒரே குடும்பம்.

இரண்டு ஆட்களும் சேர்ந்து பெறும் குழந்தைகளும் அவர்களோடு ஒரே குடும்பம்தான்.

கடவுள் நித்திய காலமும் மூவொரு கடவுள் தான்.

திருமணமான தம்பதியர் வாழ்நாளெல்லாம் 
ஈருயிர் ஓருடல்தான்.

அன்பே உருவானவர் கடவுள்.
அன்பால் ஒன்றானவர்கள் திருமணமான தம்பதியர்.

மூன்று ஆட்கள் ஒரே கடவுள்,
ஆனால் கடவுளை மூன்றாகப் பிரிக்க முடியாது.

மூவரும் ஒருவருள் ஒருவராக இருக்கின்றனர்.

திருமணத்தில் ஈருயிர் ஓருடல் ஆன தம்பதியரையும் எக்காரணத்தை முன்னிட்டும் பிரிக்க முடியாது.

தந்தை மகன் தூய ஆவியைப் போல தாங்களும் வாழ வேண்டும் என்று கணவனும் மனைவியும் தீர்மானித்து, அப்படியே வாழ்ந்தால்,

குடும்பத்தில் அன்புக்கும், சமாதானத்துக்கும் பஞ்சமே இருக்காது.

தந்தையின் சித்தத்தை மகன் நிறைவேற்றுகிறார்.

மகன் நிறுவிய திருச்சபையைத் தூய ஆவி வழி நடத்துகிறார்.

தம திரித்துவத்தைப் போல் வாழும் குடும்பத்தில் கணவனின் விருப்பத்தை மனைவி நிறைவேற்றுவாள்,

மனைவியின் விருப்பத்தை கணவன் நிறைவேற்றுவார்.

தம திரித்துவத்தைப் போல் கணவனும் மனைவியும் அன்பில் ஒன்றித்து வாழ்வார்கள்.

ஒன்றை மனதில் கொள்ள வேண்டும்.

அசல் அசல்தான்.

சாயல் அசல் ஆகாது. அசலைப் போலிருக்கும்.

தாயைப் போல் பிள்ளை,

ஆனால் பிள்ளை தாய் ஆகாது.

தந்தை மகன் தூய ஆவிக்கு ஒரே விருப்பம்.

கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே மாதிரியான விருப்பம்‌ இருக்கலாம், ஒரே விருப்பம் இருக்க முடியாது.

தமதிரித்துவத்தின் மூன்று ஆட்களுக்கும் ஒரே தேவ சுபாவம், ஒரே ஞானம், ஒரே சித்தம்,

ஆகவேதான் ஒரே கடவுள்.

மனிதனைப் படைக்க வேண்டும் என்று தந்தை விரும்பினார், மகன் விரும்பினார், தூய ஆவி விரும்பினார்.

மூவருக்கும் ஒரே மாதிரியான விருப்பம் அல்ல, ஒரே விருப்பம்.

மகன் மனிதனாகப் பிறக்க வேண்டுமென்று தந்தை விரும்பினார், மகன் விரும்பினார், தூய ஆவி விரும்பினார், ஒரே விருப்பம்.

ஆனால் ஆட்கள் தனித் தனி.
மூவரின் ஒரே விருப்பப்படி
மகன் மட்டும் தான் மனிதனாகப் பிறந்தார்.

மகன் முழுமையாகக் கடவுள்,  ஆகவே கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

ஒரே கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

மகன் முழுமையாகக் கடவுள்,
முழுமையாக மனிதன்.

மனிதனாகப் பிறந்த மகன் மூவரில் ஒருவர்.

ஆனால் மனிதனாகப் பிறந்தது மூன்றில் ஒரு கடவுள் அல்ல.
கடவுளைப் பிரிக்க முடியாது.

நம்மைப் படைத்த ஒரே கடவுள் நமக்காக மனிதனாகப் பிறந்தார்.

இறைமகன் மனிதனாகப் பிறந்தார்.

இறைமகன் முழுமையாகக் கடவுள்.

இது அசல்.

இரண்டு உயிர்கள் ஒரு குடும்பமாக இருப்பதால் குடும்பம் கடவுளின் சாயல்.

தமதிரித்துவத்தில் மூவரும் ஒரே அன்பில் ஒன்றித்திருப்பது போல

தம்பதியர் அன்பால் இணைந்திருப்பதால் கடவுளின் சாயல்.

ஆனால் தமதிரித்துவத்தின் அன்பு ஒரே அன்பு.

குடும்பத்தில் கணவனின் 
அன்பும், மனைவியின் அன்பும் இணைந்துள்ளன.

இருவருக்கும் ஒரே அன்பு அல்ல.

ஒரே மாதிரியாக இருக்கலாம், தன்மையிலும் அளவிலும் வித்தியாசமானவைகளாகவும் இருக்கலாம்.

கடவுளின் அன்பு அளவில்லாதது.

மனித அன்பு அளவுள்ளது.
கணவனின் அன்பு அதிகமா, மனைவியின் அன்பு அதிகமா என்பது கஷ்டங்கள் வரும்போது தான் தெரியும்.

அளவைப் பற்றிக் கவலைப் படாமல் இருவரும் ஒருவரை ஒருவர் இயன்ற அளவு அன்பு செய்ய வேண்டும்.

இறைமகன் இயேசு நம்மீது கொண்ட அன்பின் மிகுதியால்  தன்னையே சிலுவையில் தியாகம் செய்தார்.

அதேபோல கணவனும் மனைவியும் ஒருவருக்காக ஒருவர் தன்னையே தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

தமதிரித்துவத்தில் மூவருக்கும் ஒரே சித்தம்.

ஆனால் குடும்பத்தில் இருவருக்கும் வெவ்வேறு விருப்பங்கள், ரசனைகள் இருக்கலாம்.

அன்பை மையமாக வைத்துக்கொண்டு மற்றவற்றில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போக வேண்டும்.

இருவருடைய விருப்பங்கள் வித்தியாசமாக இருந்தாலும் ஒருவர் மற்றவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டினால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு எதிராக எதுவும் உள்ளே நுழைய முடியாது.

வித்தியாசமான குணங்கள் உள்ளவர்களும் உண்மையான அன்பு இருந்தால் ஒருவரை ஒருவர் முழுமையாக ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழலாம்.

"ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
(மத்தேயு நற்செய்தி 5:48)

தூய ஆவியின் துணையுடன் இயேசுவைப் போல் வாழ்ந்தாலே நமது அளவுக்கு தந்தையைப் போல் நிறைவுள்ளவர்களாய் வாழலாம்.

கடலைப் போல தம்ளர் நிறைவு உள்ளதாக இருக்க முடியுமா?

முடியும்.

தம்ளர் சிறியதாக இருக்கலாம்.

கடல் அதன் அளவுக்கு நிறைவுள்ளதாக இருப்பது போல தம்ளரும் அதன் அளவுக்கு நிறைவுள்ளதாக இருக்கலாம்.

அன்னை மரியாள் அருள் நிறைந்தவளாய் வாழ்ந்தாள்.

அருள் மிகப் பெற்ற மரியாள் அல்ல,

அருள் நிறைந்த மரியாள்.
(Mary, full of grace)

நாமும் கடவுளின் சாயலில் வாழ்வோம். 

சாயலுக்குப் பங்கம் ஏற்படாமல் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, October 2, 2024

"என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்" என்று கூறினார். (லூக்கா நற்செய்தி 10:22)

"என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்" என்று கூறினார். 
(லூக்கா நற்செய்தி 10:22)

கிறிஸ்தவ வாழ்வின் மையம் 
பரிசுத்த தம திரித்துவம்.

மூன்று ஆட்கள், ஒரே கடவுள்.

தந்தை, மகன், தூய ஆவி, மூன்று ஆட்கள்,
ஒரே கடவுள்.

மூவொரு கடவுள்.

இறைமகன் இயேசு தமதிரித்துவம் பற்றிய மறை உண்மையை ஒரே நேரத்தில் கேள்வி பதில் மூலமாக வெளிப்படுத்தவில்லை.

அதை வாழ்ந்து படிப்படியாக வெளிப்படுத்தினார்.

கபிரியேல் தூதர் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்ன நாளிலிருந்து, 

தூய ஆவி சீடர்கள் மீது இறங்கி வந்த நாள் வரை உள்ள

 நற்செய்தி அறிவிப்புக்குள் பயணம் செய்தால்தான்

 தமதிரித்துவம் பற்றிய மறை உண்மை முழுமையாக தெரியவரும்.


வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்."
லூக்கா நற்செய்தி 1:35

இந்த மங்கள வார்த்தை வசனம் தூய ஆவியைப் பற்றியும், இறை மகனைப் பற்றியும் வெளிப்படையாகக் 
குறிப்பிடுகிறது.

மகனைப் பற்றி குறிப்பிடும் போது தந்தையைப் பற்றி நாம் யூகித்துக் கொள்ளலாம்.

நாம் தியானிப்பதற்காக எடுத்துக் கொண்ட இன்றைய வசனம் பரிசுத்த தம திரித்துவத்தின் முக்கிய பண்புகளை வெளிப்படுத்துகிறது.


"என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்."

இந்த வார்த்தைகள் நமக்குப் புரிய வைப்பது 

மூன்று ஆட்களும் வெவ்வேறானவர்கள்.

தந்தை மகன் அல்ல, தூய ஆவியும் அல்ல.
(தந்தை மகனிடம் ஒப்படைத்த இருக்கிறார்)

மகன் தூய ஆவி அல்ல, தந்தையும் அல்ல.

தூய ஆவி தந்தையும் அல்ல, மகனும் அல்ல.

தந்தை முழுமையாகக் கடவுள்.
மகன் முழுமையாகக் கடவுள்.
தூய ஆவி முழுமையாகக் கடவுள்.

 மூவரும் சமமானவர்கள்.
(Three coequal and coeternal 
persons)

மூவரும் முழுமையாக ஒரே கடவுள்.

"தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்."

இந்த வார்த்தைகள் நமக்குப் புரிய வைப்பது,

 பரிசுத்த தம திரித்துவத்தின் ஆட்களின் உறவு பற்றிய விவரம் கடவுளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. 

தந்தையைப் பற்றி மகனுக்கும் தூய ஆவிக்கும் மட்டுமே தெரியும்.

மகனைப் பற்றி தந்தைக்கும் தூய ஆவிக்கும் மட்டுமே தெரியும். 

தூய ஆவியைப் பற்றி தந்தைக்கும் மகனுக்கும் மட்டுமே தெரியும். 

மூவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிவர், ஏனெனில் மூவரும் ஒரே கடவுள்.

கடவுளைப் பற்றி அவருக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும்.

"மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும்."

இந்த வார்த்தைகள் நமக்குப் புரிய வைப்பது,

யாரும் சுயமாக அறிய முடியாத இந்த மறை உண்மையை மனிதனாகப் பிறந்த இறைமகன் தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு அறிவித்தார். 

ஆகவே நமக்கு இப்போது தெரிகிறது. 

கடவுள் அளவில்லாதவர்.

நாம் அளவுள்ளவர்கள். 

அளவுள்ள நம்மால் அளவில்லாத கடவுளைப் பற்றிய மறை உண்மையை முழுவதும் புரிந்து கொள்ள முடியாது.

ஆனாலும் கடவுளே நமக்கு அதை வெளிப்படுத்தி இருப்பதால் அதை ஏற்றுக் கொள்கிறோம்.

"வேறு எவரும் தந்தையை அறியார்" 

இந்த வார்த்தைகள் நமக்குப் புரிய வைப்பது,

இயேசுவையும், அவரது நற்செய்தியையும் அறிந்தவர்களை தவிர வேறு யாருக்கும்  தமதிரித்துவத்தின் மறை உண்மை தெரியாது.

இயேசுவின் நற்செய்தியை நாம் உலகோர் அனைவருக்கும் அறிவிக்க வேண்டும் என்றும், 

நற்செய்தியை ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் பரிசுத்த தமதிரித்துவத்தின் பெயரால் 
திருமுழுக்குக் கொடுக்க வேண்டுமெஎன்றும்

இயேசு நமக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்.

இயேசு கொடுத்த கட்டளைப்படி நாம் நற்செய்தியை அறிவிக்கிறோமா?

எப்படி அறிவிக்கிறோம்?

சொல் மூலமா, வாழ்க்கை மூலமா?

நாம் எதைச் செய்தாலும் தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் செய்ய வேண்டும்.

அதாவது தமதிரித்துவத்தை வாழ்ந்து நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.

தமதிரித்துவத்தை எப்படி வாழ்வது?

தந்தை மகன் தூய ஆவி எப்படி வாழ்கிறார்களோ
அப்படி வாழ்வது,

அதாவது 

இறைவன் எப்படி வாழ்கிறாரோ அப்படி வாழ்வது.

இறைவன் எப்படி வாழ்கிறார்.

தந்தையின் சிந்தனையில் நித்திய காலமாகப் பிறக்கும் வார்த்தையே மகன்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே நித்திய காலமாக நிலவும் அன்புதான் தூய ஆவி.

கடவுள் என்றாலே அன்புதான்.

கடவுள் நித்திய காலமும் செய்யும் வேலை அன்பு செய்வது மட்டும்தான்.

தன்னைத் தானே அன்பு செய்வதோடு,

அன்பு செய்வதற்கென்றே படைத்த மனிதர்களையும் அன்பு செய்கிறார்.

சிந்தனையிலும் செயலிலும் அன்பாகவே வாழும் தமதிரித்துவத்தைப் போல

நாமும் நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அன்பு மட்டும் செய்து வாழ்வோம்.

அதுவே நற்செய்தி வாழ்வு.

அதுவே நற்செய்திப் பணி.

லூர்து செல்வம்.

Tuesday, October 1, 2024

" புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். (லூக்கா நற்செய்தி 10:3)

"புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். 
(லூக்கா நற்செய்தி 10:3)

தந்தை தன் மகனுக்கு ஏதாவது ஒரு பணியைக் கொடுக்கும் போது 

அதைச் செய்யும் போது ஏற்படும் பிரச்சினைகளையும் சொல்லி விடுவது வழக்கம்.

அப்போதுதான் எதிர்பார்த்த பிரச்சினைகளைச் சந்திக்கும் போது பணி செய்பவர்க்கு மனச் சோர்வு ஏற்படாது.

நமது ஆண்டவர் தனது சீடர்களை நற்செய்தி அறிவிக்க அனுப்பும்போது,

"ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்." 
என்று கூறுகிறார்.

"நீங்கள் செய்யப் போகும் பணி பஞ்சு மெத்தையில் படுத்து உறங்குவது போல் இருக்காது.

முட்செடிகள் மேல் செருப்பு இல்லாமல் நடப்பது போலிருக்கும்.

நீங்கள் நற்செய்தி அறிவிக்கப் போகும் மக்கள் உங்களை வரவேற்று உபசரித்து வாழ்த்தக் கூடியவர்களாக இருக்க மாட்டார்கள்.

ஆடுகளைக் கடித்து உண்ணும் ஓநாய்களைப் போலிருப்பார்கள்.

நீங்கள் எதிர்ப்புகளையும், ஆபத்துக்களையும் சந்திக்க நேரிடும்.

எனது சீடர்கள் எதிர்ப்புகள் மத்தியிலும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியுடனும் உழைக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

இறுதி வெற்றி உங்களுக்கு தான்."

நாம் இயேசுவின் சீடர்கள். 

நமது பணியும் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நற்செய்தி அறிவிப்பது தான்.

ஓநாய்களால் ஆடுகளுக்கு ஏற்படும் அத்தனையும் நமக்கும் ஏற்படும்.

"நற்செய்தியை அறிவியுங்கள் பார்ப்போம்" என்று சவால் விடுவார்கள்.

அடி, உதை, கொலை... ஆண்டவர் சந்தித்த அத்தனையையும் சந்திக்க நேரிடும்.

நாம் வழிபாடு செய்யும் ஆலயங்கள் இடிக்கப் படலாம்.

இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில் நாம் எப்படிச் செயல்பட வேண்டும்?

தைரியத்தோடு செயல்பட வேண்டும்.

ஒரு வீடு பற்றி எரிகிறது என்று வைத்துக் கொள்வோம்.

தகப்பனார் வெளியே.

குழந்தை உள்ளே.

குழந்தையைக் காப்பாற்ற தந்தை எப்படிச் செயல்படுவார், நாம் அப்படிச் செயல்பட வேண்டும்.

நோக்கம் மட்டும் நம் கண் முன் இருக்க வேண்டும்.
செயல்பாட்டின் போது ஏற்படும் துன்பங்கள் துன்பங்களாகத் தெரியக்கூடாது.

போர்க்களத்தில் வீரன் எதிரிகள் மேல் மட்டும் கண்ணாய் இருப்பான்.

தன் மீது பாயும் குண்டைப் பற்றிக் கவலைப் பட மாட்டான்.

நற்செய்தி அறிவிப்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்.

நமக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி கவலைப் படக் கூடாது.

மரணத்தால் கூட நம்மைத் தடுக்க முடியக் கூடாது.

"வேத சாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து."

ஒரு மரணத்தால் ஆயிரம் பேரை மனம் திருப்ப முடியும்.

வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு செயல் புரிய வேண்டும்.

எல்லாம் வல்ல கடவுள் நம் பக்கம் இறுக்கும் போது நம்மைத் தோற்கடிக்க யாரால் முடியும்?

கடவுள் நம்மை வழி நடத்துகிறார்.

கடவுள் நம்மை இடறி விழாமல் காப்பாற்றுகிறார்.

கடவுள் நம்மைப் பாதுகாக்கிறார்.

கடவுள் நமக்குத் தைரியத்தைத் தருகிறார்.

கடவுள் எதிரிகளின் சவால்களைச் சமாளிக்க நமக்கு உதவுகிறார்.

ஒன்றை மனதில் கொள்ள வேண்டும்.

நாம் செயல்புரிவது பரிசுத்த தம திரித்துவத்தின் பெயரால்.

தந்தையின் சித்தப்படி மகன் நம்மை அனுப்புகிறார்.

தூய ஆவி நம்மை வழி நடத்துகிறார்.

மூவொரு கடவுள் நம்மோடு இருக்கும் போது நாம் எதற்கு அஞ்ச வேண்டும்?

கடவுளின் துணையுடன் நற்செய்தியை வாழ்வோம்.

கடவுளின் துணையுடன் நற்செய்தியை அறிவிப்போம்.

கடவுளின் துணையுடன் வெற்றி பெறுவோம்.

நம்முடன் நம்மால் நற்செய்தி அறிவிக்கப்பட்ட அனைவரும் நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்.