Friday, February 23, 2024

அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, "இறந்து உயிர்த்தெழுதல்" என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்."(மாற்கு . 9:10)

"அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, "இறந்து உயிர்த்தெழுதல்" என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்."
(மாற்கு . 9:10)

இயேசுவும் அவருடைய சீடர்களான இராயப்பரும், அருளப்பரும், யாகப்பரும் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது 

அவர், "மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். 

"அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, "இறந்து உயிர்த்தெழுதல்" என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்."

இந்த வசனத்தை வாசிக்கும்போது இரண்டு கேள்விகள் மனதில் எழுகின்றன.

1. இயேசு சீடர்களிடம் கூறும் சில முக்கியமான விசயங்கள் ஏன் அவர்களுக்குப் புரியவில்லை?

2.இப்படிப்பட்ட மக்குகளை ஏன் இயேசு சீடர்களாகத் தேர்ந்தெடுத்தார்?

உலகின் மக்கள் ஏதாவது ஒரு அமைப்பை நிறுவினால் அதை நிர்வகிக்க படித்து பட்டங்கள் பெற்று, சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவர்களை நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுப்பார்கள்.

ஆனால் இயேசு உலகமெங்கும் பரப்பப்பட வேண்டிய தனது திருச்சபையை நிர்வகிக்க 

படிக்காத பாமர மக்களை, 

அதிலும் தங்கள் உணவுக்காக மட்டும் உழைத்துக் கொண்டிருந்தவர்களைத் தனது சீடர்களாகத் தேர்ந்தெடுத்தார்.

இதைப்பற்றி தியானித்தால் மனதில் படுவது,

இயேசு கடவுள். சர்வ வல்லமை வாய்ந்தவர்.

அவர் நிறுவவிருக்கும் திருச்சபை மனிதர்களுக்காக என்றாலும்

அது அவருடைய ஞான உடல்.

திருச்சபையின் உறுப்பினர்கள் யாவரும் அவருடைய ஞான உடலின் உறுப்புகள்.

உலகில் அதற்கொரு தலைவர் நியமிக்கப் படுவார்.

ஆனால் அதைப் பரிசுத்த ஆவியைக் கொண்டு வழிநடத்தவிருப்பது 

ஞானஉடலின் தலையாகிய இயேசுவே.

திருச்சபை ஒரு தெய்வீக நிறுவனம்.

உலகில் அதை நிர்வகிக்கப் போகிறவர்கள் மனிதர்கள் தான்.

ஆனால் அதைத் தவற விடாமல் பாதுகாப்பது உலகம் முடியும் மட்டும் அதோடு இருக்கப் போகும் இயேசுவும், பரிசுத்த ஆவியும் தான்.

பரிசுத்த ஆவி சீடர்கள் மேல் இறங்கிய பின்புதான் திருச்சபை இயங்க ஆரம்பித்தது.

இதை நமக்கு உணர்த்தவே சுயமாக சிந்திக்கத் தேரியாதவர்களைத் தனது சீடர்களாகத் தேர்ந்தெடுத்தார்.

இப்போது நமது ஆன்மீக வழிகாட்டிகள் (Spiritual Directors) யார்?

நமது குடும்பங்களிலிருந்து இயேசுவால் அழைக்கப் பட்ட நம்மைப் போன்ற மனிதர்கள்.

தவறும் இயல்புள்ள குடும்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தவறும் இயல்புள்ள மனிதர்களை இயேசு தனது சீடர்களாகத் தேர்ந்தெடுத்து,

 அவர்கள் மூலமாக இயேசு நம்மை ஆன்மீகத்தில் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

அவர்கள் மூலமாக நமது பாவங்களை மன்னிக்கிறார்.

அவர்கள் மூலமாகத் தனது கல்வாரிப் பலியைத் தினமும் இரத்தம் சிந்தாத விதமாகத் தினமும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

அவர்கள் மூலமாகத் தன்னையே நமக்கு ஆன்மீக உணவாகத் தருகிறார்.

அவர்கள் வசீகர வார்த்தைகளால் உருவாக்கும் திவ்ய நற்கருணை மூலமாகத்தான் 

உலகம் முடியும் மட்டும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர்கள் நம்மைப் போல் சாதாரண மனிதர்களாக இருக்கலாம்.

ஆனால் அவர்கள் மூலமாக செயல் படுவது இயேசுதான்.

ஆன்மீக விசயமாக நாம் அவர்களிடம் பேசும் போது இயேசுவுடன்தான் பேசுகிறோம்.

அவர்களிடம் தான் நமது பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கிறோம்.

அவர்கள் வழி நடத்துகிறபடி நாம் நடக்கும் போது

இயேசு வழி நடத்துகிறபடி தான் நடக்கிறோம்.

அவர்கள் காட்டுகிறபடி நாம் நடந்தால் நாம் மோட்சத்துக்குப் போவது உறுதி.

2024 ஆண்டுகளுக்கு முன் யூதேயாவில் நடந்த அதே இயேசுதான் தமது குருக்கள் உருவில் நம்மிடையே வாழ்கிறார்.

அவர்கள் நன்றாகப் படித்தவர்களா என்பது நமது பிரச்சினை அல்ல.

அவர்கள் இயேசுவின் பிரதிநிதிகள் என்பது தான் நமக்கு முக்கியம்.

இதை நமக்கு உணர்த்தவே அவர் படிக்காத பாமர மக்களைத் தனது சீடர்களாகத் தேர்ந்தெடுத்தார்.

இயேசுவின் பாடுகளின் போது பயத்தால் அவரை விட்டு ஓடிப் போனவர்கள் தான்

பரிசுத்த ஆவி இறங்கியவுடன் தைரியமாக நற்செய்தியைப் போதித்ததோடு 

பயமின்றி இயேசுவுக்காக உயிரைக் கொடுத்தார்கள்.

இயேசு சிந்திய இரத்தத்தில் திருச்சபை பிறந்தது.

அவரது சீடர்கள் சிந்திய இரத்தத்தில் திருச்சபை வளர்ந்தது.

வளர்த்தவர் பரிசுத்த ஆவி.

 "இறந்து உயிர்த்தெழுதல்" என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டவர்கள்தான்

பரிசுத்த ஆவி இறங்கியவுடன் 

" கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். 

நீங்கள் திருச்சட்டம் அறியாதார் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்துக்கொன்றீர்கள். 


ஆனால் கடவுள் அவரை மரணவேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச்செய்தார்.

 ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. 

கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். "
(திருத்தூதர் பணிகள் 2:23,24,32)

என்று போதித்தார்கள்.

முதல் நாளில் மட்டும் திருமுழுக்குப் பெற்றவர்கள் ஏறக்குறைய மூவாயிரம் பேர்.

படிப்பறிவற்ற சீடர்கள் மூலமாக நற்செய்தியைப் போதித்தவர்,

இன்றும் போதித்து வருபவர் பரிசுத்த ஆவியே.

பரிசுத்த ஆவி திருச்சபையோடு இருப்பதால் தான் 

 பாதாளத்தின் வாயில்களால் அதன்மேல் வெற்றி கொள்ள முடியவில்லை. 

பரிசுத்த ஆவி திருச்சபையோடு இருப்பதால் தான் 

சாதாரண மனிதர்களால் அதை உலகம் முழுவதும் பரப்ப முடிகிறது.

பரிசுத்த ஆவி திருச்சபையோடு இருப்பதால் தான் 

40,000 பிரிவினை சபையினர் எவ்வளவோ முயன்றும் அதை அழிக்க முடியவில்லை.

பரிசுத்த ஆவியின் வல்லமையால் தான் கத்தோலிக்கத் திருச்சபை வாழ்கிறது, வளர்கிறது,

மனித முயற்சியால் அல்ல,

என்பதை நிரூபிக்கவே இயேசு சாதாரண பாமர மக்களை அப்போஸ்தலர்களாகத் தேர்ந்தெடுத்தார்.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment