Thursday, February 29, 2024

"என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்." (யோவான் 2:16)

என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்." 
(யோவான் 2:16)

 யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்.

 கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் 

அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்; 

 அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்.

ஆடு மாடுகளையும் விரட்டினார்.

 நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார். 

அவர் புறா விற்பவர்களிடம், "இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்", என்று கூறினார்.

எதற்காக இப்படிச் செய்தார்?

"என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்" (யோவான். 2:16)

கோவில் இறைவனின் இல்லம்,
வியாபாரக்கூடம் அல்ல.

இறைவனை வழிபட வேண்டிய இடத்தில் கூட வேண்டியது இறை மக்கள், வியாபாரிகள் அல்ல.

மக்கள் இறைவனுக்கு காணிக்கை செலுத்த வேண்டிய பொருட்களைத் தான் வியாபாரிகள் விற்றுக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவை விற்கப்பட வேண்டிய இடம் கோவில் அல்ல.

காணிக்கை செலுத்தப்பட வேண்டிய இடத்தில் அவை விற்கப்பட்டதால் தான் 

இயேசு விற்றவர்களை விரட்டினார்.

இயேசுவின் இந்த செயலில் கூட ஏழைகளின் மேல் அவர் கொண்டிருந்த இரக்கம் வெளிப்படுகிறது.

மற்ற எல்லாரையும் சாட்டையால் விரட்டியவர் புறா விற்பவர்களிடம் மட்டும்

 "இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்", என்று கூறினார்.

ஏனெனில் புறாக்கள் ஏழைகளின் காணிக்கைப் பொருள்.

அன்னை மரியாளும், சூசையப்பரும் குழந்தை இயேசுவை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க எருசலேமுக்குக் கொண்டு சென்றபோது,

ஏழைகளாகிய அவர்கள் 
 இரு புறாக்குஞ்சுகளைப் பலியாகக் கொடுத்தது ஞாபகத்துக்கு‌ வருகிறது. 
(லூக். 2:24)

ஏழைகளாகிய நாம் பாக்கியவான்கள்,

ஏனெனில் நாம் இயேசுவின் இரக்கத்தைப் பெற்றவர்கள்!

அவருடைய ஆட்சி நமக்கு உரியதே!

கோவிலில் இயேசு செய்ததிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம்?

ஒரு முறை ஒரு பங்குக் குருவானவர் பங்குக் கோவிலைப் புதுப்பிப்பதற்காக நன்கொடை 
வசூலிக்கப் புறப்பட்டார்.

ஒரு நபர் 4000 ரூபாய் நன்கொடையாகக் கொடுப்பதாகச் சொன்னார்.

அப்போது 5000 ரூபாய் அல்லது அதற்கு மேல் கொடுப்பவர்களின் பெயர்கள் கோவில் கல்வெட்டில் பொறிக்கப்படும் என்று கூறப் பட்டது.

உடனே 5000 ரூபாய் கொடுப்பதாக ஏற்றுக் கொண்டார்.

முதலில் ஏற்றுக் கொண்டது காணிக்கை.

இரண்டாவது ஏற்றுக் கொண்டது சுய விளம்பரம்.

இயேசுவின் சாட்டைக்கு வேலை கொடுக்கக் கூடியது.

காணிக்கையை காணிக்கையாக மட்டும் கொடுக்க வேண்டும்.

ஒரு ஆள் ஞாயிற்றுக்கிழமை பூசையில் காணிக்கை போடுவதற்கென்றே ஒரு பழைய கிழிந்த ஐந்து ரூபாய் நோட்டைப் பத்திரமாக வைத்திருந்தாராம்.

பூசையில் காணிக்கை வசூலித்த போது Pants pocket லிருந்து அதை எடுத்துப் போட்டாராம்.

அவர் போட்ட பின், ‌ பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு ஆள் ஒரு 500 ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்தாராம்.    

அதை வாங்கி காணிக்கைப் பையில் போட்டாராம்.

பூசை முடிந்து வெளியே வந்த பின் 
500 ரூபாய் காணிக்கை போடத் தந்தவரைப்  பாராட்டினாராம்.

அவர் இவரைப் பார்த்து,

"நான் 500 ரூபாய் காணிக்கை போடத் தரவில்லை.

நீங்கள் உங்கள் பாக்கெட்டிலிருந்து காணிக்கை போட ரூபாய் எடுத்தபோது 

500 ரூபாய் நோட்டு உங்கள் ‌பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்தது. 

அதை எடுத்து உங்களிடம் தந்தேன்.

 நீங்கள் அதையும் காணிக்கையாகப் போட்டு விட்டீர்கள். 

உங்களைத்தான் நான் பாராட்ட வேண்டும் என்றாராம்.

அப்போது இவர் மூஞ்சி எப்படிப் போயிருக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள்!

இது சிரிப்பதற்கு அல்ல, ‌சிந்திப்பதற்கு. 

பிறருக்கு உதவி செய்வதும் இறைவனுக்குக் கொடுக்கும் காணிக்கை தான்.

வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் கொடுக்க வேண்டும்.

"நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்."
(மத்தேயு. 6:3)

மிருகங்களிடமிருந்து மனிதனை வேறுபடுத்துவது அவனிடமுள்ள புத்தி.

புத்தியைப் பயன்படுத்தி தான் மனிதன் அறிவை வளர்க்க வேண்டும்.

மிருகத்துக்கு அறிவு இல்லை.

மனிதன் புத்தியை ஒழுங்காகப் பயன்படுத்தி அறிவை வளர்க்க உதவுவதற்காகத் தான் பள்ளிக் கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன.

பள்ளியின் மூலம் பெற்ற அறிவை இறைப் பணியில் பயன்படுத்த உதவுவது ஞானம்.

ஞானம் உள்ளவர்கள் தான் கடவுளுக்காக வாழ முடியும்.

இறைவனை வழிபட கற்றுக் கொடுக்கும் பள்ளிக்கூடங்கள் 

கோவிலுக்கு அடுத்த படி பரிசுத்தமானவை,

பள்ளிக்கூடங்களில் இறைவனைப் பற்றி கற்கிறோம்,

கோவில்களில் இறைவனை வழிபடுகிறோம்,

இரண்டையும் ஒழுங்காகச் செய்தால்தான் உலகில் இறைவனுக்காக வாழ முடியும்.

ஆனால் இன்று பள்ளிக்கூடங்களும் வியாபாரக் 
கூடங்களாக மாறிவிட்டன.

அங்கே பணம்தான் முழு விளையாட்டையும் விளையாடிக் கொண்டிருக்கிறது.

பாடத் திட்டம் இறைவனை மறந்து விட்டது.

இறைவனை மறந்த கல்வியில் ஒழுக்கத்திற்கு இடமில்லை.

மதிப்பெண்களுக்கு மட்டுமே இடமிருக்கிறது.

கல்வி கற்று விட்டுதான் அனைவரும் பொது வாழ்வுக்குள் நுழைகிறார்கள்.

உலகில் லஞ்சமும், வஞ்சமும், ஒழுக்கக் கேடும் தலை விரித்து ஆடுவதற்கு வியாபாரக் கூடங்களாக மாறிவிட்ட  
பள்ளிக்கூடங்கள் தான் காரணம்.

இறை பக்தி உள்ளவர்கள் இயேசு பயன்படுத்திய சாட்டையை அவைகளுக்கு எதிராக எடுக்க வேண்டும்.

எடுப்பார்களா?

இயேசுவிடம் தான் வேண்ட வேண்டும்.

நமது குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை.

தந்தைதான் அதன் பாப்பரசர்.

குட்டித் திருச்சபை மட்டுமல்ல, ஒரு குட்டி ஆலயமும் கூட.

(Infant Church)

இயேசு நிறுவிய திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தையர், ஆயர்கள், குருக்கள், கன்னியர் ஆகிய அனைவரும் இங்கேதான் பிறந்து வளர்கிறார்கள்.

இயேசுவே திருக்குடும்பத்தில் தான் பிறந்து வளர்ந்தார்.

தனது 33 ஆண்டு கால வாழ்க்கையில் 30 ஆண்டுகள் திருக்குடும்பத்தில் தான் வாழ்ந்தார்.

ஆலய வழிபாடும் குடும்பத்தில் தான் ஆரம்பிக்கிறது.

ஆலயம் பணிக் குருத்துவத்தின் கையில், குடும்பம் பொதுக் குருத்துவத்தின் கையில்.

திருச்சபை வயல் என்றால் குடும்பம் நாற்றங்கால்.

நாற்றங்காலில் பிறக்கும். நாற்றுகள் தரமானவையாக இருந்தால் தான் வயலில் வளரும் பயிர் தரமானதாக
இருக்கும், விளைச்சலும் நன்றாக இருக்கும்.

குடும்பத்தின் தரத்துக்கு குடும்பத் தலைவர் தான் பொறுப்பு.

குடும்பத்தினர் விசுவாசத்தில் வளர வேண்டும்.

குடும்பத்தில் வழிபாடு சிறப்பாக நடைபெற வேண்டும்.

பொதுக் குருத்துவத்தினர் வாழும் குடும்பம் தலைமைக் குருவாகிய இயேசுவின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விசுவாசத்திலும், வழிபாட்டிலும் வாழ்கிறதா?

வாழ்ந்தால் மகிழ்ச்சி.

வாழாவிட்டால் சாட்டையை எடுக்க வேண்டியது யார்?

பணிக்குருத்துவத்தினர் தான்.

YouTube ல் ஒரு மறையுரையில் கேட்ட ஒரு ஒப்புமை நினைவுக்கு வருகிறது.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குப்பைத் தொட்டி இருக்கும்.

வீட்டில் விழும் குப்பைகளைப் பெருக்கி அதில் போடுவார்கள்.

ஒவ்வொரு தெரு எல்லையிலும் ஒரு பெரிய பஞ்சாயத்துக் குப்பைத் தொட்டி இருக்கும்.

ஒவ்வொரு நாள் காலையிலும் வீட்டுக் குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகளைப் பஞ்சாயத்துக் குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்கள் ..

வீட்டுக் குப்பைத் தொட்டி சுத்தமாகிவிடும்.

தினமும் இதைச் செய்வார்கள்.

வீட்டில் குப்பையைச் சேர விட மாட்டார்கள்.

இது ஒப்புமை.

நாம் ஒவ்வொருவரும் ஒரு குப்பைத் தொட்டிதான்.

நம்மில் சேரும் குப்பை நாம் செய்யும் பாவங்கள்.

பாவக் குப்பையை அதிகம் சேர விடக்கூடாது.

பாவக் குப்பையை எங்கே கொண்டு போய்க் கொட்ட வேண்டும்?

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கோவிலுக்குக் கொண்டு போய் பாவ சங்கீர்த்தனக் குப்பைத் தொட்டியில் கொட்டி விட வேண்டும்.

அப்போது தான் நாம் பரிசுத்தமாவோம்.

நாம் பாவங்களைக் கொட்ட வேண்டுமானால் பாவ சங்கீர்த்தனத் தொட்டியில் பாவத் தொட்டி இருக்க வேண்டும்.

இல்லா விட்டாலும்,

இருந்தும் பாவக் குப்பையைக் கொட்டா விட்டாலும் 

தாய்த் திருச்சபை சாட்டையை எடுக்க வேண்டும்..

லூர்து செல்வம்.

"இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" . (லூக். 19:5)

"இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" . 
(லூக். 19:5)


 வரிதண்டுவோருக்குத் தலைவராக இருந்த சக்கேயு இயேசுவைப் பார்க்க விரும்பினார்.

அதற்காக அவர் வரும் வழியில் 
ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். 

 அவ்வழியே வந்த இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன்,

 அண்ணாந்து பார்த்து அவரிடம், "சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" என்றார். 

வரிதண்டுவோர் எல்லாம் பாவிகள் எனக் கருதப்பட்ட காலம் அது.

பாவி எனக் கருதப்பட்ட சக்கேயு பரிசுத்தராகிய இயேசுவைக் காண விரும்பினார்.

இயேசுவும் அவன் விருப்பத்தை ஏற்றுக் கொண்டார்.

இயேசுவைப் புரியாதவர்கள் "பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர்" என்று முணுமுணுத்தனர். 

ஆனால் இயேசு விருப்பமுடன் அவர் வீட்டுக்குச் சென்றார்.

 சக்கேயு இயேசுவைப் பார்த்து,

"ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; 

எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால்

 நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்"
 என்றார். 

 இயேசு அவரை நோக்கி, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! 

இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்" என்று சொன்னார்."

இயேசு கூறிய வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும்.

இயேசு அபிரகாமின் வம்சத்தினர்.

மனம் திரும்பிய சக்கேயுவை,

"இவரும் ஆபிரகாமின் மகனே!"
என்கிறார். (லூக். 19:9)

அதாவது சக்கேயுவைத் தனது சகோதரராக ஏற்றுக் கொள்கிறார்.

சக்கேயு மட்டுமல்ல, நாமும் பாவிகள்.

நமது இல்லத்துக்கு இயேசு எழுந்தருளி வரத் தகுதி அற்றவர்கள் என்று நாமே கூறிக் கொள்கிறோம்.

ஆனால் திரு விருந்தின் போது இயேசு நம் ஆன்மாவாகிய இல்லத்திற்கு வருகிறார்.

நம் இல்லத்திற்கு வரும் இயேசுவிடம் சக்கேயு கூறிய வார்த்தைகளை நாம் கூறுகிறோமா?

கூறினால்தான் நாம் இயேசுவின் சகோதரர்கள் ஆகத் தகுதி பெறுவோம்.

திருவிருந்தின்போது நம்முள் வந்த இயேசு நாம் எங்கு சென்றாலும் நம்மோடு தான் வருகிறார்.

நாம் வீட்டிற்கு வந்து சாப்பிடும் போதும்,

பணி புரிய அலுவலகம் செல்லும் போதும்,

சிற்றுண்டி உண்ண ஹோட்டலுக்குச் செல்லும் போதும்

விளையாட மைதானத்திற்குச் செல்லும் போதும்,

நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போதும்,

நாம் என்ன செய்து கொண்டிருந்தாலும் இயேசு நம்மோடு தான் இருக்கிறார்.

நாம் அவருடைய பிரசன்னத்தில் இருப்பதை உணர்கிறோமா?

நாம் ஏதாவது தவறு செய்தாலும், பாவம் செய்தாலும் இயேசு நம்மோடு தான் இருக்கிறார்.

இதை உணர்கிறோமா?

உணர்ந்தால் நாம் பாவமே செய்ய மாட்டோம்.

இயேசுவை அருகில் வைத்துக் கொண்டு பாவம் செய்ய முடியுமா?

மாறாக இயேசுவை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக அவருக்கு விருப்பமானவற்றைச் செய்வோம்.

உணவு தேவைப் படுகிறவர்களுக்கு உணவு கொடுப்போம்.


உடை தேவைப் படுகிறவர்களுக்கு உடை கொடுப்போம்.

தவிப்பவர்களூக்குத் தண்ணீர் கொடுப்போம்.

கவலைப் படுகிறவர்களுக்கு ஆறுதல் சொல்வோம்.

யாருக்கு என்ன தேவைப் பட்டாலும் இயேசுவுக்காகக் கொடுப்போம்.

இப்படியெல்லாம் நாம் செய்தால்,

"நீங்களும் அபிரகாமின் பிள்ளைகள் தானே."

அதாவது,

"எனது சகோதரர்கள் தானே"

என்று நம்மிடம் சொல்லுவார்.

அவருடைய விண்ணக வீட்டுக்கு நாமும் பங்காளிகள் ஆகிவிடுவோம்.

இயேசுவின் சகோதரர்களாக வாழ்வோம்.

விண்ணக வீடு நம் வீடு.

லூர்து செல்வம்.

Wednesday, February 28, 2024

"அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். "(லூக். 16:22)

"அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். "
(லூக். 16:22)

 இப்போது நாம் வாழும் உலகமும்,
மரணத்துக்குப் பின் வாழவிருக்கும் மறுவுலகமும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை.

இவ்வுலகம் நேரம், இடத்துக்கு உட்பட்டது.

மறுவுலகத்தில் நேரமும், இடமும் கிடையாது.

இவ்வுலகம் நேரத்துக்கு உட்பட்டதால் அதற்கு துவக்கமும் முடிவும் உண்டு.

ஆகவே மண்ணக வாழ்வு தற்காலிகமானது.

மறுவுலகத்துக்கு துவக்கமும் முடிவும் இல்லாததால் அது நித்தியமானது, நிரந்தரமானது, அழிவில்லாதது.

மண்ணகத்தில் வாழ்வோர் அவரவர் விருப்பம் போல் வாழ்கிறார்கள்.

அவரவர் வாழ்வின் தன்மை அவர்களின் விண்ணக வாழ்வின் தன்மையைத் தீர்மானிக்கிறது.

மண்ணகத்தில் நல்லவர்களாக வாழ்வோர் விண்ணகத்தில் நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வார்கள்.

மண்ணகத்தில் தங்கள் விருப்பம் போல் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வோர் விண்ணக பேரின்ப வாழ்வுக்குச் செல்ல மாட்டார்கள்.

நித்திய பேரிடர் வாழ்வுக்குச் செல்வார்கள்.

இயேசு கூறிய செல்வந்தன் ஏழை இலாசர் உவமையில்

பூமியில் இஷ்டம்போல் உண்டு வாழ்க்கையை அனுபவித்த செல்வந்தன் மறுவுலகில் நித்திய பேரிடர் வாழ்வுக்குள் நுழைகிறான்.

ஏழை இலாசர் மறுவுலகில் நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைகிறான்.

இவ்வுலகில் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்குப் போதிக்கவே இயேசு இந்த உவமையைக் கூறினார்.

பலமுறை இந்த உவமையை வாசித்திருப்போம், ஏதாவது பாடம் கற்றிருக்கிறோமா?

அல்லது நமது விருப்பம் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

நமது விருப்பம் போல் வாழ கடவுள் நம்மைப் படைக்கவில்லை.

அவர் விருப்பம் போல், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்படிந்து வாழவே நம்மைப் படைத்திருக்கிறார்.

நமது விருப்பம் போல் வாழ்வது நமக்கு எளிது.

கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வது எளிதல்ல, கடினம்தான்.

ஆனாலும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்பவர்கள் தான் மறுவுலகில் நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வார்கள்.

பூவுலகில் செல்வந்தர்களாக இருப்பது பாவமல்ல,

ஆனால் செல்வத்தைப் பயன்படுத்த வேண்டிய விதமாய்ப் பயன்படுத்தாததுதான் பாவம்.

கடவுள் நமக்குச் செல்வத்தைத் தந்திருப்பது நாம் சிற்றின்பத்தில் வாழ்ந்து வீணடிப்பதற்காக அல்ல,

இல்லாதாரோடு அதைப் பகிர்ந்து அவர்களையும் வாழ வைப்பதற்காக.

நம்மைப் போல நம்மிடம் உள்ள செல்வமும் கடவுளால் படைக்கப்பட்டதுதான்.

கடவுளால் படைக்கப்பட்டதை அவர் விருப்பப்படி பயன்படுத்துவதுதான் முறை.

நம்மிடம் இருப்பதை இல்லாதாரோடு பகிர்ந்துண்டு வாழ்வோம்.

இறைவனோடு நித்திய பேரின்ப வாழ்வில் பங்கு பெறுவோம்.

லூர்து செல்வம்.

Tuesday, February 27, 2024

"இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார். "(மத்தேயு. 20:28)

" இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார். "
(மத்தேயு. 20:28)



 இயேசு தனது பன்னிரு 
சீடர்களோடு எருசலேமை நோக்கிச்
சென்று கொண்டிருந்தார்.

 எருசலேமில் தான் படப்போகும் பாடுகள் பற்றியும்,

அடையப் போகும் மரணம் பற்றியும்,

அவர் மூன்றாம் நாள் உயிர்க்கப் போவது பற்றியும். கூறினார்.

 சீடர்களுடைய நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது அவர் கூறியதை அவர்கள் புரிந்து கொண்டது போல் தெரியவில்லை.

அருளப்பர், வியாகப்பர் ஆகியோரது தாய் அவர்களுடன் வந்து 

"நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்" என்று வேண்டினார்கள். 

இயேசு தனது பாடுகளைப் பற்றிக் கூறியது புரிந்திருந்தால் சீடர்கள் இருவரும் இப்படிக் கேட்கச் சம்மதித்திருப்பார்களா?

பாடுகளிலும், மரணத்திலும் பங்கு கேட்டிருப்பார்கள் 

அவர்கள் கேட்டதை வைத்துப் பார்க்கும்போது அவர்கள் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டுதான் அவருடைய சீடர்களாக இருந்திருப்பது போல் தெரிகிறது.

 "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை." என்று இயேசுவே சொன்னார்.


" நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?" என்று அவர் கேட்டபோது

அவர்கள் "எங்களால் இயலும்" என்றார்கள். 

ஆனாலும் அவர்கள் கேள்வியின் பொருள் புரிந்து பதில் சொன்னார்களா,

புரியாமல் சொன்னார்களா என்பது நமக்குப் புரியவில்லை.

ஆனால் ஒன்று புரிகிறது, இருவருக்கும் பதவி ஆசை இருந்தது என்பது புரிகிறது.

இயேசுவின் வார்த்தைகளையும், சீடர்களின் ஆசையையும்,
இன்றைய நமது ஆசையையும் வைத்துப் பார்க்கும்போது

நமக்கு என்ன புரிய வேண்டும்?

இயேசுவின் வார்த்தைகள் நமக்கும் புரியவில்லை என்பதும்,

சீடர்களைப் போல்தான் நாமும் ஆசைப்படுகிறோம் என்பதும் புரிய வேண்டும்.

ஞானஸ்நானம் பெற்றதால் நாம் இயேசுவின் சீடர்களாக மாறிவிட்டோம்.

இயேசு எதிர் பார்க்கிறபடி நாம் சீடர்களாக வாழ்கிறோமா?

அல்லது

நமது எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்காக சீடர்களாக வாழ்கிறோமா?

திவ்ய நற்கருணை நாதரைச் சந்திக்கும்போது அவரிடம் என்ன வேண்டுகிறோம்?

திருப்பலியின் போது திருப்பலியை என்ன கருத்துகளுக்காக ஒப்புக் கொடுக்கிறோம்?

அன்னை மரியாளின், மற்றும் புனிதர்களின் திருத்லங்களுக்கு என்ன கருத்துக்கள் நிறைவேற திருயாத்திரைகள் செல்கிறோம்?

சிறிது நேரம் சிந்தித்துப்
 பார்ப்போம்.

" தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது." (லூக். 14:27)

இயேசுவின் சீடர்களாக இருக்க விரும்புவோர் தங்களது சிலுவையைச் சுமந்து கொண்டு அவர் பின் செல்ல வேண்டும்.

சிலுவையைச் சுமக்க விரும்பாதவர்,

அதாவது,

துன்பங்கள் வரும்போது அவற்றிலிருந்து விடுதலை பெற விரும்புவோர்

இயேசுவின் சீடர்களாக இருக்க முடியாது.

திருப்பலியின் போதும்,
திருத்தலங்களுக்குத் திருயாத்திரை போகும் போதும்

நோய் நொடிகளையும், துன்பங்களையும் கேட்டு செபிக்கிறோமா,

அவற்றிலிருந்து விடுதலை பெற செபிக்கிறோமா?

மனசாட்சியைத் தொட்டுப் பதில் சொல்லுவோம்.

புனித அல்போன்சா துன்பங்களைக் கேட்டு செபித்ததாக அவளது வரலாற்றில் வாசிக்கிறோம்.

கோடிக்கணக்கில் புதுமைகள் செய்து மற்றவர்களுக்கு சுகம் பெற்றுக் கொடுத்த புனித அந்தோனியார்,

தான் சுகமில்லாமல் படுத்தபோது தனக்கு சுகம் கேட்டு செபிக்கவில்லை.

36 வயதிலேயே சுகமின்மை காரணமாக இறந்தார்.

நாம் அந்தோனியார் பக்தர்கள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறோம்.

பக்தர்கள் என்ற வார்த்தைக்கு நமக்குப் பொருள் தெரியவில்லை.

நாம் மாதா பக்தர்கள் என்றும் சொல்லிக் கொள்கிறோம்.

அவளுடைய மகன் சிலுவையைச் சுமந்தபோது அவரை அவள் தடுக்கவில்லை.

சிலுவைப் பாதையில் அவருடனே நடந்து சென்று, 

அவர் இறந்த பின் அவரை அடக்கம் செய்துவிட்டுதான் இல்லத்துக்குச் சென்றாள்.

அவர் உயிர்ப்பார் என்பதை உறுதியாக விசுவசித்தாள்.

ஆகவேதான் மூன்றாம் நாள் அவள் கல்லறைக்கு வரவில்லை.

உயிர்த்த இயேசு தன் அன்னைக்கு தான் முதலில் காட்சி கொடுத்தார்.

நாம் நமது அன்னையைக் போலவும்,

மற்ற புனிதர்களைப் போலவும் சிலுவை வரம் கேட்டு செபிப்போம்.

சிலுவைக்குப் பின்புதான் உயிர்ப்பு.

லூர்து செல்வம்.

Monday, February 26, 2024

"உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்."(மத்தேயு. 23:11)/

" உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்."
(மத்தேயு. 23:11)

விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்தவர் இயேசு.

அவரது போதனைகள் விண்ணைச் சார்ந்தவை.

அவரது போதனைகள் மண்ணைச் சார்ந்தவையாக இருந்தால் அவற்றால் விண்ணுக்கு வழி காட்ட முடியாது.

ஆகவே அவரது போதனைகள் மண்ணைச் சார்ந்த போதனைகளுக்கு நேர் எதிரானவை.

மண்ணக எண்ணப்படி பெரியவனாக இருப்பவன்

விண்ணக எண்ணப்படி சிறியவன்.

மண்ணக எண்ணப்படி சிறியவனாக இருப்பவன்

விண்ணக எண்ணப்படி பெரியவன்.

விண்ணகத்தில் பெரியவனாக இருக்க விரும்புகிறவன்

மண்ணகத்தில் தொண்டனாக இருக்க வேண்டும்.

ம. தொண்டன் = வி. பெரியவன்.

" தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர். "
(மத்தேயு . 23:12)

அதாவது

பூமியில் தம்மைத்தாமே உயர்த்துகிறவர் மோட்சத்தில் தாழ்த்தப்பெறுவர்.

பூமியில் தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் மோட்சத்தில் உயர்த்தப்பெறுவர்.

அன்னை மரியாளே இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மரியாள் பூமியில் தன்னைத்தானே அடிமையாகத் தாழ்த்தினார்.

மோட்சத்தில் அரசியாக உயர்த்தப் பட்டாள்.

பிதா பிதாக்களின் அரசியே,
தீர்க்கத்தரிசிகளின் அரசியே,
அப்போஸ்தலர்களின் அரசியே,
 எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,

என்று தினமும் அவளை நோக்கி செபிக்கிறோம்.

விண்ணில் வாழும்
மறைசாட்சிகளுக்கும்
துதியர்களுக்கும்
கன்னியர்களுக்கும்
சகல புனிதர்களுக்கும்

மட்டுமல்ல,

விண்ணுக்காக மண்ணில் வாழும் நமக்கும் அவள்தான் அரசி.


விண்ணக, மண்ணக அரசி.

நாம் விண்ணுக்காக வாழ்கிறோமா, மண்ணுக்காக வாழ்கிறோமா?

மண்ணுக்காக வாழ்ந்தால் நமது சிந்தனை, சொல், செயல் அனைத்தும் மண்ணைச் சார்ந்தவையாகவே இருக்கும்.

விண்ணுக்காக வாழ்ந்தால் நமது சிந்தனை, சொல், செயல் அனைத்தும் விண்ணைச் சார்ந்தவையாகவே இருக்கும்.

மண்ணுலக வாழ்வு தற்காலிகமானது.

மண்ணுக்காக நாம் ஈட்டும் அனைத்தும் தற்காலிகமானவையே.

தற்காலிகமான நமது வாழ்வின் முடிவில் நாம் மண்ணுக்காக ஈட்டிய அனைத்தும் நம் கையை விட்டுப் போய் விடும்.

விண்ணுலக வாழ்வு நிரந்தரமானது, அழியாதது.

அதற்காக நாம் மண்ணுலகில் ஈட்டும் அருட் செல்வம் அழியாதது.

தற்காலிகமான இவ்வுலக வாழ்வு முடிந்து நாம் விண்ணுலகுக்குள் நுழையும் போது நாம் ஈட்டிய அருட்செல்வம் அனைத்தும் நம்முடன் வந்து,

நித்திய காலமும் நம்மோடிருக்கும்.

இவ்வுலக வாழ்வின் போது அழியாத அருட்செல்வத்துக்காக உழைக்க வேண்டுமா?

அழிந்து போகும் பொருட்செல்வத்துக்காக உழைக்க வேண்டுமா?

சிந்தித்துப்போம், செயல்படுவோம்.

லூர்து செல்வம்.

Saturday, February 24, 2024

நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும். " (லூக். 6:38)

"நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும். " 
(லூக். 6:38)


நமது நித்திய பேரின்பத்தின் அளவு நமது பிறரன்பின் அளவில் தீர்மானிக்கப்படும் என்று இயேசு சொல்கிறார்.

நாம் நம்மை நேசிப்பதைப் போல் நம் அயலானையும் நேசிக்க வேண்டும்.

அன்பு இருக்கும் இடத்தில் இரக்கம் இருக்கும்.

நமது அயலான்மீது இரக்கமாய் இருக்க வேண்டும்.

நாம் அடிக்கடி "இயேசுவே இரக்கமாய் இரும்" என்று செபிக்கிறோம்.

"எங்களுக்குத் தீமை செய்தோரை நாங்கள் பொறுப்பது போல
எங்கள் பாவங்களை பொறுத்தருளும்." என்று விண்ணகத் தந்தையை நோக்கி செபிக்கிறோம்.


மன்னிப்புக்கு இருக்கும் விதி இரக்கத்துக்கும் பொருந்தும்.

"நாங்கள் எங்கள் அயலான்மீது இரக்கமாய் இருப்பது போல் எங்கள் மீது இரக்கமாய் இரும்."

என்பது நமது செபமாய் இருக்க வேண்டும்.

 நமது விண்ணகத் தந்தை இயல்பிலேயே இரக்கம் உள்ளவர்.

நம்மை அவர் சாயலில் படைத்திருக்கிறார்.

அவரது சாயலுக்கு பங்கம் ஏற்படாதிருக்க வேண்டுமென்றால் நாமும் இரக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஆகவே தான் இயேசு

 " உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். "
என்று கூறியிருக்கிறார்.

எல்லோரையும் அன்பு செய்யும் உரிமை நமக்கு இருக்கிறது.

எல்லோர் மீதும் இரக்கமாய் இருக்கும் உரிமை நமக்கு இருக்கிறது.

ஆனால் யாரையும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கும் உரிமை நமக்கு இல்லை.

தீர்ப்பளிக்கும் உரிமை படைத்தவருக்கு மட்டுமே உண்டு.

நாம் தவறு செய்யும் போது கடவுள் நம்மீது இரங்கி, தீர்ப்பிடாமல் நம்மை மன்னிக்க வேண்டுமென்றால்

நாம் மற்றவர்கள் மீது தீர்ப்பளிக்கக் கூடாது. மன்னிக்கும் மனப்பக்குவத்துடன்தான் மற்றவர்களின் பிரச்சனையை அணுக வேண்டும்.

நாம் அளிக்கும் தீர்ப்பு சரியாகவும் இருக்காது.

நமக்கு செயல் புரிபவரின் புறம் மட்டுமே தெரியும்.

ஒரு செயலின் தன்மையைக் தீர்மானிப்பது செய்பவரின் அக எண்ணங்களே.

கடவுளுக்கு மட்டுமே அனைவரின் அகமும் புறமும் தெரியும்.

அக எண்ணங்கள் நமக்குத் தெரிந்தால்கூட தீர்ப்பிடுவது
நமது உரிமைக்கு அப்பாற்பட்டது.

யாரையும் கண்டிக்கும் உரிமையும் நமக்கு இல்லை.

யாராவது நமக்கு விரோதமாக தவறு செய்தால் அவர்களைக் கண்டிக்காமல் மன்னித்தால்தான்

கடவுள் நமது பாவங்களை மன்னிப்பார்.

நாம் நமது அயலானுக்கு எப்படிக் கொடுக்கிறோமோ அப்படியே கடவுள் நமக்குக் கொடுப்பார்.

நாம் தாராளமாகக் கொடுத்தால் நமக்கும் தாராளமாகக் சட்டம் 

தேவையானது கிடைப்பதற்குப் பஞ்சமே இருக்காது.

கொடுப்போம், நமக்கும் கொடுக்கப்படும்.

எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு நமக்கும் கொடுக்கப்படும்.

தாராளமாக் கொடுப்போம்.

இப்போது நண்பர் ஒருவர் ஒரு கேள்வி எழுப்புகிறார்.

நமக்குப் பதிலுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொடுக்க வேண்டுமா? 

அல்லது

எதையும் எதிர்பாராமல் கொடுக்க வேண்டுமா? 

ஆன்மீக ரீதியாகச் சிந்தித்தால் ஒரு உண்மை புரியும்.

நாம் இவ்வுலகில் வாழ்வது ஆன்மீக வளர்ச்சிக்காக.

நமக்கு ஆன்மீக வளர்ச்சி ஏற்படாவிட்டால் நாம் வாழ்ந்தும் பயனில்லை.

நமது செப, தவ, தர்ம
 வாழ்க்கையின் நோக்கமே ஆன்மீக வளர்ச்சி தான்.

நாம் எவ்வளவுக்கு எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம் ஆன்மீக வளர்ச்சிக்கான அருள் வரங்களைப் பெறுவோம்.

அருள் நிறைந்த ஆன்மாவுடன் விளங்கியது தான் அன்னை மரியாளுக்குக் கிடைத்த பெருமை.

நர்மமாக மற்றவர்களுக்குக் கொடுப்பது ஒரு ஆன்மீகச் செயல், ஆண்டவர் தருவது அவருடைய அருள்.

நர்மமாக பணத்தைக் கொடுத்தால் பதிலுக்கு பணம் கிடைக்கும் என்று எதிர் பார்க்கக் கூடாது.

பதிலுக்கு இறையருள் கிடைக்கும் என்று எதிர் பார்க்க வேண்டும்,

ஏனெனில் நாம் வாழ்வதே இறைவனுடைய அருளுக்காகத்தான்.

பொருளைக் கொடுப்போம்,

அருளைப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

Friday, February 23, 2024

அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, "இறந்து உயிர்த்தெழுதல்" என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்."(மாற்கு . 9:10)

"அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, "இறந்து உயிர்த்தெழுதல்" என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்."
(மாற்கு . 9:10)

இயேசுவும் அவருடைய சீடர்களான இராயப்பரும், அருளப்பரும், யாகப்பரும் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது 

அவர், "மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். 

"அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, "இறந்து உயிர்த்தெழுதல்" என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்."

இந்த வசனத்தை வாசிக்கும்போது இரண்டு கேள்விகள் மனதில் எழுகின்றன.

1. இயேசு சீடர்களிடம் கூறும் சில முக்கியமான விசயங்கள் ஏன் அவர்களுக்குப் புரியவில்லை?

2.இப்படிப்பட்ட மக்குகளை ஏன் இயேசு சீடர்களாகத் தேர்ந்தெடுத்தார்?

உலகின் மக்கள் ஏதாவது ஒரு அமைப்பை நிறுவினால் அதை நிர்வகிக்க படித்து பட்டங்கள் பெற்று, சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவர்களை நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுப்பார்கள்.

ஆனால் இயேசு உலகமெங்கும் பரப்பப்பட வேண்டிய தனது திருச்சபையை நிர்வகிக்க 

படிக்காத பாமர மக்களை, 

அதிலும் தங்கள் உணவுக்காக மட்டும் உழைத்துக் கொண்டிருந்தவர்களைத் தனது சீடர்களாகத் தேர்ந்தெடுத்தார்.

இதைப்பற்றி தியானித்தால் மனதில் படுவது,

இயேசு கடவுள். சர்வ வல்லமை வாய்ந்தவர்.

அவர் நிறுவவிருக்கும் திருச்சபை மனிதர்களுக்காக என்றாலும்

அது அவருடைய ஞான உடல்.

திருச்சபையின் உறுப்பினர்கள் யாவரும் அவருடைய ஞான உடலின் உறுப்புகள்.

உலகில் அதற்கொரு தலைவர் நியமிக்கப் படுவார்.

ஆனால் அதைப் பரிசுத்த ஆவியைக் கொண்டு வழிநடத்தவிருப்பது 

ஞானஉடலின் தலையாகிய இயேசுவே.

திருச்சபை ஒரு தெய்வீக நிறுவனம்.

உலகில் அதை நிர்வகிக்கப் போகிறவர்கள் மனிதர்கள் தான்.

ஆனால் அதைத் தவற விடாமல் பாதுகாப்பது உலகம் முடியும் மட்டும் அதோடு இருக்கப் போகும் இயேசுவும், பரிசுத்த ஆவியும் தான்.

பரிசுத்த ஆவி சீடர்கள் மேல் இறங்கிய பின்புதான் திருச்சபை இயங்க ஆரம்பித்தது.

இதை நமக்கு உணர்த்தவே சுயமாக சிந்திக்கத் தேரியாதவர்களைத் தனது சீடர்களாகத் தேர்ந்தெடுத்தார்.

இப்போது நமது ஆன்மீக வழிகாட்டிகள் (Spiritual Directors) யார்?

நமது குடும்பங்களிலிருந்து இயேசுவால் அழைக்கப் பட்ட நம்மைப் போன்ற மனிதர்கள்.

தவறும் இயல்புள்ள குடும்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தவறும் இயல்புள்ள மனிதர்களை இயேசு தனது சீடர்களாகத் தேர்ந்தெடுத்து,

 அவர்கள் மூலமாக இயேசு நம்மை ஆன்மீகத்தில் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

அவர்கள் மூலமாக நமது பாவங்களை மன்னிக்கிறார்.

அவர்கள் மூலமாகத் தனது கல்வாரிப் பலியைத் தினமும் இரத்தம் சிந்தாத விதமாகத் தினமும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

அவர்கள் மூலமாகத் தன்னையே நமக்கு ஆன்மீக உணவாகத் தருகிறார்.

அவர்கள் வசீகர வார்த்தைகளால் உருவாக்கும் திவ்ய நற்கருணை மூலமாகத்தான் 

உலகம் முடியும் மட்டும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர்கள் நம்மைப் போல் சாதாரண மனிதர்களாக இருக்கலாம்.

ஆனால் அவர்கள் மூலமாக செயல் படுவது இயேசுதான்.

ஆன்மீக விசயமாக நாம் அவர்களிடம் பேசும் போது இயேசுவுடன்தான் பேசுகிறோம்.

அவர்களிடம் தான் நமது பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கிறோம்.

அவர்கள் வழி நடத்துகிறபடி நாம் நடக்கும் போது

இயேசு வழி நடத்துகிறபடி தான் நடக்கிறோம்.

அவர்கள் காட்டுகிறபடி நாம் நடந்தால் நாம் மோட்சத்துக்குப் போவது உறுதி.

2024 ஆண்டுகளுக்கு முன் யூதேயாவில் நடந்த அதே இயேசுதான் தமது குருக்கள் உருவில் நம்மிடையே வாழ்கிறார்.

அவர்கள் நன்றாகப் படித்தவர்களா என்பது நமது பிரச்சினை அல்ல.

அவர்கள் இயேசுவின் பிரதிநிதிகள் என்பது தான் நமக்கு முக்கியம்.

இதை நமக்கு உணர்த்தவே அவர் படிக்காத பாமர மக்களைத் தனது சீடர்களாகத் தேர்ந்தெடுத்தார்.

இயேசுவின் பாடுகளின் போது பயத்தால் அவரை விட்டு ஓடிப் போனவர்கள் தான்

பரிசுத்த ஆவி இறங்கியவுடன் தைரியமாக நற்செய்தியைப் போதித்ததோடு 

பயமின்றி இயேசுவுக்காக உயிரைக் கொடுத்தார்கள்.

இயேசு சிந்திய இரத்தத்தில் திருச்சபை பிறந்தது.

அவரது சீடர்கள் சிந்திய இரத்தத்தில் திருச்சபை வளர்ந்தது.

வளர்த்தவர் பரிசுத்த ஆவி.

 "இறந்து உயிர்த்தெழுதல்" என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டவர்கள்தான்

பரிசுத்த ஆவி இறங்கியவுடன் 

" கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். 

நீங்கள் திருச்சட்டம் அறியாதார் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்துக்கொன்றீர்கள். 


ஆனால் கடவுள் அவரை மரணவேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச்செய்தார்.

 ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. 

கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். "
(திருத்தூதர் பணிகள் 2:23,24,32)

என்று போதித்தார்கள்.

முதல் நாளில் மட்டும் திருமுழுக்குப் பெற்றவர்கள் ஏறக்குறைய மூவாயிரம் பேர்.

படிப்பறிவற்ற சீடர்கள் மூலமாக நற்செய்தியைப் போதித்தவர்,

இன்றும் போதித்து வருபவர் பரிசுத்த ஆவியே.

பரிசுத்த ஆவி திருச்சபையோடு இருப்பதால் தான் 

 பாதாளத்தின் வாயில்களால் அதன்மேல் வெற்றி கொள்ள முடியவில்லை. 

பரிசுத்த ஆவி திருச்சபையோடு இருப்பதால் தான் 

சாதாரண மனிதர்களால் அதை உலகம் முழுவதும் பரப்ப முடிகிறது.

பரிசுத்த ஆவி திருச்சபையோடு இருப்பதால் தான் 

40,000 பிரிவினை சபையினர் எவ்வளவோ முயன்றும் அதை அழிக்க முடியவில்லை.

பரிசுத்த ஆவியின் வல்லமையால் தான் கத்தோலிக்கத் திருச்சபை வாழ்கிறது, வளர்கிறது,

மனித முயற்சியால் அல்ல,

என்பதை நிரூபிக்கவே இயேசு சாதாரண பாமர மக்களை அப்போஸ்தலர்களாகத் தேர்ந்தெடுத்தார்.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

லூர்து செல்வம்.

''ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."(மத்தேயு 5:48)

'ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
(மத்தேயு 5:48)

நமது விண்ணகத் தந்தை அவரது எல்லா பண்புகளிலும் நிறைவானவர்.

அளவில்லாத அன்பு,
அளவில்லாத நீதி,
அளவில்லாத ஞானம்,
அளவில்லாத. வல்லமை etcetera.

பண்புகளில் அளவில்லாத அவர் சர்வ வியாபி, எங்கும் நிறைந்தவர்.

நித்தியர், துவக்கமும், முடிவும் இல்லாதவர்.

அவரால் படைக்கப்பட்ட நாம் அளவுள்ளவர்கள்.

காலத்துக்கும், இடத்துக்கும் உட்பட்டவர்கள்.

ஆனால் நமது விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நாமும் நிறைவுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று நமது ஆண்டவராகிய இயேசு விரும்புகிறார்.

இயேசு இறை மகன்.
விண்ணகத் தந்தையின் ஒரே மகன்.

நாம் அவரால் படைக்கப்பட்டவர்கள், பெறப்பட்டவர்கள் அல்ல.

ஆனால் தனது தந்தையை 
"உங்கள் விண்ணகத் தந்தை" இயேசு சொல்கிறார்.

அவருடன் பிறக்காத,
அவரால் படைக்கப்பட்ட நம்மைத் தனது சகோதரர்களாக ஏற்றுக் கொள்கிறார்.

அளவில்லாத அவருக்கு நாம் அளவுள்ளவர்கள் என்று தெரியும்.

நிறைவான அவருக்கு நாம் குறைவானவர்கள் என்று தெரியும்.

ஆனால் "உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."

என்று அவர் சொல்கிறார்.

நம்மைப் பற்றிய இயேசுவின் ஆசைக்குக் காரணம் நம்மேல் அவர் கொண்டுள்ள அளவு கடந்த அன்பு,

அளவுள்ள நம்மேல் அவர் கொண்டுள்ள அளவு கடந்த அன்பு.

நம்மேல் அவர் கொண்டுள்ள அளவு கடந்த அன்பின் காரணமாக

அவர் அளவுள்ள நம்மைப்போல்  அளவுள்ள மனிதனாகப் பிறக்க ஆசைப்படுகிறார்.

இறைமகன் பரிசுத்த தம் திரித்துவத்தின் இரண்டாம் ஆள்.

நித்திய காலமுதல் அவரிடம் இருந்தது தேவ சுபாவம்.

நம்மீது அவர் கொண்டுள்ள அன்பின் காரணமாக மனித சுபாவத்தையும் சேர்த்துக்கொள்ள ஆசைப்படுகிறார்.

அந்த ஆசையின் காரணமாக மனிதப் பிறவியான மரியாளின் வயிற்றில் மனுவுரு எடுக்கிறார்.

மனுவுரு எடுத்த நொடி முதல் இறை மகனுக்கு இரண்டு சுபாவங்கள்,

தேவ சுபாவம்,
மனித சுபாவம்.

ஆள் ஒன்று, சுபாவங்கள் இரண்டு.

தேவ ஆளாகிய இயேசு

முழுமையான கடவுளாகவும்,
முழுமையான மனிதனாகவும்
இருக்கிறார்.

Jesus is fully God and fully Man.

அளவுள்ள நம்மீது அவர் கொண்டுள்ள அளவற்ற அன்பின் காரணமாக

 அளவில்லாத அவர் பிறப்பும், இறப்பும் உள்ள அளவுள்ள மனிதனாகப் பிறந்தார்.

பாவம் தவிர நம்முடைய மற்ற குறைகளை எல்லாம் தனது குறைகளாக ஏற்றுக் கொண்டார்.

துன்பமே பட முடியாத அவர் துன்பங்களை ஏற்றுக் கொண்டார்.

நிறைவான அவர் குறைவான மனித சுபாவத்தையும் ஏற்றுக் கொண்டார்.

இது அவரால் முடியும், ஏனெனில் அவர் சர்வ வல்லவர்.

ஆனால் நம்மால் எப்படி விண்ணகத் தந்தையைப் போல் நிறைவுள்ளவர்களாய் இருக்க முடியும்?

குறைவு எப்படி நிறைவாக இருக்க முடியும்?

நாம் அளவுள்ளவர்கள்.
ஆனால் நமக்கு அறிவுரை கூறுபவர் அளவில்லாதவர்.

ஒன்றுமில்லாமையிலிருந்து நம்மைப் படைத்த அவரால் 

அவரது விருப்பப்படி நம்மை இருக்கச் செய்ய முடியாதா?

முடியும்.

நிறைவான அவர் ஏன் குறைவான மனிதனாகப் பிறந்தார்?

அவருக்கு எதிராகத் தீமை செய்தவர்களை அவர் அன்பு செய்ததால்.

நாமும் அதையே செய்தால் நம்மால் அவரது விருப்பப்படி இருக்க முடியும்.

"ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்;

 உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; 

உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். 


 "இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். 

ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார்.

 நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். "
(மத். 5:44,45)

இது தான் அவர் காட்டும் வழி.

தாயைப் போல பிள்ளை.

நாம் விண்ணகத் தந்தையின் மக்களாக வேண்டுமென்றால் 


நமது பகைவரிடமும் அன்பு கூரவேண்டும்.  

நம்மைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்ட வேண்டும்.

தந்தை நல்லோரையும் தீயோரையும் 

 நேர்மையுள்ளோரையும் நேர்மையற்றோரையும் நேசிப்பது போல 

நாமும் அனைவரையும் நேசிக்க வேண்டும்.

நல்லோரையும், நேர்மையுள்ளோரையும் நேசிப்பது எளிது.


ஆனால் தீயோரையும், நேர்மையற்றோரையும் நேசிப்பது நமது இயல்புக்கு எதிரானது.

ஆனால் நமது விண்ணகத் தந்தைக்கு அது இயல்பானது.

நாம் தீயோரையும் நேர்மையற்றோரையும் நேசிக்க ஆரம்பித்தால் விண்ணகத் 
தந்தையின் இயல்பில் பங்கு பெறுகிறோம்.

நஞ பகைவரிடமும் அன்பு கூர்ந்து, நம்மைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டும்போது,

"உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."

என்ற நமது ஆண்டவர் இயேசுவின் ஆசையை நிறைவேற்றுகிறோம்.

இயேசு அவருக்கு விரோதமாக பாவம் செய்த நம்மை நேசிப்பது போல

பகைமை உணர்வுடன் நமக்கு விரோதமாக செயல்படுபவர்களை நாம் நேசிப்போம்.

அப்படி செயல்படும்போது நாம் இயேசுவைப் போலாகிறோம்.

இயேசுவும், தந்தையும் ஒரே கடவுள் தானே.

இயேசுவைப் போலாகும் போது தந்தையைப் போலவும் ஆகிறோம்.

கடவுள் அவரைப் பகைப்பவர்களை நேசித்து அவர்களுக்கு நன்மை செய்வது போல

நாமும் நம்மைப் பகைப்பவர்களை நேசித்து அவர்களுக்கு நன்மை செய்வோம்.

நமது பகைவர்களை நேசித்து அவர்களுக்கு நன்மை செய்வதன் மூலம் 

இயேசுவின் விருப்பப்படி

 விண்ணகத் தந்தையைப் போல நிறைவுள்ளவர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, February 21, 2024

அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். "(மத்தேயு 5:24)

"அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். "
(மத்தேயு  5:24)

நல்லுறவு = சமாதானம்.

இறைவன் நமது முதல் பெற்றோரைப் படைத்த போது

அவருக்கும் அவர்களுக்கும் இடையே நல்லுறவு, அதாவது, சமாதானம் நிலவியது.

ஆனால் அவர்கள் விலக்கப்பட்ட கனியைத் தின்று பாவம் செய்ததால் அவர்கள் அவரோடு கொண்டிருந்த உறவு முறிந்தது.

அதாவது 

அவர்களுக்கு அவர் மேல்  மனத்தாங்கல் ஏற்பட்டது.

ஆனால் கடவுள் மாறாதவர்.

அவர்  அவர்களோடு கொண்டிருந்த உறவு முறியவில்லை.

அவர் அவர்களைப் படைத்த போது எப்படி நேசித்தாரோ அப்படியே தொடர்ந்து நேசித்தார்.

அவர்கள் முறித்த நல்லுறவை மீண்டும் ஏற்படுத்த 

அவர்களைப் போல் மனுவுரு எடுத்து அவர்களைத் தேடி உலகுக்கு வந்தார்.

நல்லுறவை மீண்டும் ஏற்படுத்துவதற்காக

தனது பாடுகள் மூலமும், சிலுவை மரணத்தின் மூலமும்

அவர்களது பாவத்துக்கு அவரே பரிகாரம் செய்தார்.

அவரது சிலுவை மரணத்தின் பலனாகிய பாவ மன்னிப்பை 

ஞானஸ்நானத்தின் மூலமும், பாவ சங்கீர்த்தனத்தின் மூலமும் நாம் பெறுகிறோம்.

கடவுளை நாம் நேசிப்பது போலவே நமது அயலானையும் நாம் நேசிக்க வேண்டுமென்பது அவரது கட்டளை.

அதாவது நமக்கும் நமது அயலானுக்குமிடையே நல்லுறவு, அதாவது சமாதானம் நிலவ வேண்டும்.

நமது அயலானுக்கு நம்மீது மனத்தாங்கல் ஏற்பட்டிருப்பதாக நாம் அறிந்தால்

நாமே அவனைத் தேடிச் சென்று சமாதான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்விசயத்தில் நாம் கடவுளைப் போலவே நடந்து கொள்ள வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

கடவுள் நமக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. 

நாம்தான் அவருக்கு எதிராகப் பாவம் செய்தோம்.

ஆனால் அவர்தான் நம்மைத் தேடி வந்தார்.

அதேபோல

நமக்கு நமது அயலான்மீது மனத்தாங்கல்  எதுவும் இல்லாவிட்டாலும்,

அவனுக்கு நம்மீது மனத்தாங்கல் இருப்பதாகத் தெரிந்தால்

 நாமே அவனைத் தேடிச் சென்று நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமது அயலானோடு நல்லுறவை ஏற்படுத்திக் கொண்ட பிறகு தான் கோயிலில் நமது காணிக்கையைச் செலுத்த வேண்டும்.

"ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,

அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். "
(மத்தேயு  5:23,24) 
என்று இயேசு சொல்கிறார்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ணவர்கள் பாடிய கீதம்,

"விண்ணுலகில் இறைவனுக்கு மகிமை,

மண்ணுலகில் நல்மனதோர்க்குச் சமாதானம்."

விண்ணுலகில் இறைவன் நித்திய காலமாக மகிமையோடுதான் வாழ்கிறார்.

அவர் அளவில்லாத மகிமையுள்ளவர்.

அவருடைய மகிமையை நம்மால் கூட்டவோ குறைக்கவோ முடியாது.

அவரது மகிமைக்காக நாம் செயல் புரியும் போது பயனடைவது நாம் தான், அவரல்ல.

அளவில்லாத மகிமையை எப்படிக் கூட்ட முடியும்?

அவரது அதிமிக மகிமைக்காக நாம் வாழ்ந்தால் நமது விண்ணகப் பேரின்பத்தின் அளவு அதிகரிக்கும்.

நமது செயல்களின் தன்மையால் நேரடியாகப் பயன் பெறப் போவதோ,

 எதிர்மறையாகப் பாதிக்கப் படப்போவதோ நாம் தான்.

லூசிபரும் அவனது சகாக்களும் இறைவனை எதிர்த்த போது இழந்தவர்கள் அவர்கள் தான்.

பூவுலகில் நாம் நல்மனதுடன் வாழ்ந்தால் நமக்கு இறைவனோடு சமாதானம் ஏற்படும்.

சமாதானத்திற்கான சன்மானம் நித்திய பேரின்ப வாழ்வு.

நல்மனதின் தரத்திற்கேற்ப நமது பேரின்பத்தின் அளவும் இருக்கும்.

விண்ணுலகில் மனிதர்களுள்  மிக அதிகமான பேரின்பத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பது நமது அருள் நிறைந்த  அன்னை மரியாள் தான்.

இறைவனின் பேரின்பம் அளவில்லாதது.

இறைவனின் அன்பு தன்னலமற்றது.

அவர் நினைப்பதும், செயல் புரிவதும் நமது நன்மைக்காக மட்டுமே.

நம்மை நித்திய மரணத்திலிருந்து காப்பாற்றவே அவர் சிலுவையில் மரணம் அடைந்தார்.

நம்மை நித்திய வேதனையிலிருந்து காப்பாற்றவே அவர் பாடுகளின் வேதனையை ஏற்றுக் கொண்டார்.

அவர் நமக்குச் செய்தது போல நாம் நமது அயலானுக்குச் செய்ய வேண்டும்.

நாம் உண்ணா நோன்பிருந்து நமது அயலானுக்கு உணவு கொடுக்க வேண்டும்.

நாம் நடந்து சென்றாவது நடக்க முடியாத நமது அயலானுக்கு உதவ வேண்டும்.

நம்மிடம் உயர்ந்த விலைக்கு உடை வாங்க பணம் இருந்தாலும்,

நமக்குக் குறைந்த விலைக்கு உடை வாங்கிக் கொண்டு அயலானுக்கும் உடை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

இயேசு நமக்காகத் தியாகம் செய்தார்.

நாம் நமது அயலானுக்காகத் தியாகம் செய்யும் போது இயேசுவுக்காகவே தியாகம் செய்கிறோம்.

நாம் நமது அயலானுக்கு என்ன செய்தாலும் அதை இயேசுவுக்காகவே செய்கிறோம்.

அயலானோடு சமாதானமாக வாழ்ந்தால் இயேசுவோடே சமாதானமாக வாழ்கிறோம்.

பாவமில்லாத நல்ல மனதுடன் சமாதானமாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, February 20, 2024

"எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. "(மத். 16:18)

" எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. "
(மத். 16:18)

 " நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று இயேசு கேட்ட கேள்விக்கு 

 சீமோன் பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று கூறினார். 

அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். 

ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். 


எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."

இயேசு சீமோனைப் பாறை என்று அழைத்தது இது முதல் முறையல்ல.

முதல் முறை சீமோன் தன் சகோதரர் அந்திரேயாவுடன் இயேசுவைச் சந்தித்தபோது 

  இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, "நீ யோவானின் மகன் சீமோன். இனி "கேபா" எனப்படுவாய் என்றார். 

"கேபா" என்றால் "பாறை" என்பது பொருள். (அரு.1:42)

இயேசு இறைமகன்.

நித்தியர்.

அவரது எண்ணங்கள் நித்தியமானவை, அதாவது, துவக்கமும் முடிவும் இல்லாதவை.

ஆக யோவானின் மகன் சீமோன் பாறை என்று அழைக்கப்பட வேண்டுமென்று நித்திய காலமாகத் தீர்மானித்து விட்டார்.

அதை வெளிப்படையாகக் கூறியது அவரை முதல் முறைச் சந்தித்த போதும்,

சீமோன் "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று கூறியபோதும்.

பாறை உறுதியானது.

உறுதியான "இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."
(மத்தேயு 16:18) என்று இயேசு சொல்கிறார்.

இயேசுவின் திருச்சபை பாறையின் மீது கட்டப்பட்ட வீடு.

எந்த சக்தியாலும் அதை அசைக்க முடியாது.

இயேசுவின் வார்த்தைகளிலிருந்து
எந்த சக்தியாலும்  அசைக்க முடியாத திருச்சபையின் தலைவர் சீமோன் இராயப்பர் என்பது உறுதியாகிறது.

மேலும்,

"என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்" 

 "என் ஆடுகளை மேய்" . 

"என் ஆடுகளைப் பேணிவளர். 
(அரு. 21:15,16,17)

என்று இயேசு இராயப்பரைப் பார்த்து கூறிய வார்த்தைகள் இதை உறுதிப் படுத்துகின்றன.

ஆக இயேசு இராயப்பரின் தலைமையில் தான் தனது திருச்சபையை நிறுவினார்.

இயேசு ஒரே திருச்சபையைத் தான் நிறுவினார்.

இயேசு நிறுவிய ஏக, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்கத் திருச்சபையின் முதல் தலைவர், அதாவது, முதல் பாப்பரசர் புனித இராயப்பர்.  

பதினாறாம் நூற்றாண்டில் மார்ட்டின் லூதர் தலைமையில் ஒரு பிரிவினர் பாப்பரசரின் தலைமையை ஏற்க மறுத்து கத்தோலிக்க திருச்சபையை விட்டு வெளியேறினர்.

கத்தோலிக்க பைபிளிலிருந்து தங்களுக்குப் பிடித்தமில்லாத ஏழு புத்தகங்களை அப்புறப்படுத்தி விட்டு,

மீதிப் புத்தகங்களை மட்டும் பைபிள் என்று கூறிக்கொண்டு

"மீட்புக்கு பைபிள் மட்டும் போதும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமையும், பாரம்பரியமும் வேண்டாம்"

எனக் கூறிக்கொண்டு தனித்து இயங்க ஆரம்பித்தனர்.

அதன் பிறகு பாப்பரசரின் தலைமையை ஏற்க மறுத்தவர்கள் தனித்தும், குழுவாகவும் நிறையவே வெளியேறினார்கள்.

இன்று பைபிளை மட்டும் வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கும் பிரிவினை சபைகள் 40,000 க்கும் மேல் உள்ளன.

அவைகள் தங்கள் இஷ்டப்படி பைபிளை மொழி பெயர்த்துக் கொள்வதோடு 

தங்கள் தவறான போதனைகளுக்கு

(பைபிள் வசனங்களுக்கு தங்கள் இஷ்டம்போல் விளக்கம் கொடுப்பதன் மூலம்)

பைபிளிலிருந்தே ஆதாரம் காண்பிக்கின்றனர்.

ஆண்டவர் " எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு;

 இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.

 பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. 
(மத்தேயு 16:18)


"உன் பெயர் 'பேதுரு; இந்தப்' பாறையின்மேல்"

அதாவது பேதுரு என்றப் பாறையின்மேல்

என்று தான் ஆண்டவர் சொல்கிறார்.

ஆனால் பிரிவினை சபையினர் 
"Peter" என்ற வார்த்தைக்கு கிரேக்க மூலம் "Petros". 

 Petros என்றால் சிறிய கல் 
(“a small stone”) என்றுதான் பொருள்.

ஆகவே Peter என்றால் பாறை அல்ல,
பாறை என்ற வார்த்தை இயேசுவையே குறிக்கும் என்று வாதிடுகின்றனர்.

ஆனால் அவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள்.

 Peter" என்ற வார்த்தைக்கு கிரேக்க மூலம் "Petros". ஆக இருக்கலாம்.

ஆனால் இயேசு பேசியது அரமேய்க் மொழி, கிரேக்கம் அல்ல.

Peter" என்ற வார்த்தைக்கு அரமேய்க் மூலம் "கேபா ."
 
இயேசு பயன்படுத்திய வார்த்தை
 "கேபா ." "Petros".அல்ல.

" பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, "நீ யோவானின் மகன் சீமோன். இனி "கேபா" எனப்படுவாய் என்றார். "கேபா" என்றால் "பாறை" என்பது பொருள். 
(அரு. 1:42)

ஆக இயேசு யோவானின் மகனாகிய சீமோனுக்கு பாறை என்று தான் பெயரிட்டார்.

அந்தப் பாறையின் மீது தான் தனது திருச்சபையைக் கட்டினார்.

"விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார்."
(மத். 16:19)

இராயப்பருக்கும், அவரது வாரிசான பாப்பரசருக்கும் திருச்சபை மீது முழு அதிகாரம் உண்டு என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது.

"புனித பேதுருவிலிருந்து தொடங்கிய திருத்தந்தையர் வரிசையில் இன்று பணிப்பொறுப்பில் உள்ள திருத்தந்தை பிரான்சிசு 266ஆம் திருத்தந்தை ஆவார்."

ஏக, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்கத் திருச்சபை மட்டுமே இயேசுவால் நிறுவப்பட்ட ஒரே திருச்சபை,

அதன் ஒரே தலைவர் பாப்பரசர் என்பதை நினைவில் கொள்வோம்.

லூர்து செல்வம்.

விண்ணகத் தந்தையிடம் நாம் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள்.

விண்ணகத் தந்தையிடம் நாம் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள்.

கர்த்தர் கற்பித்த செபத்தின் முதல் பகுதியில் விண்ணகத் தந்தையைப் புகழ்ந்து விட்டு,

இரண்டாம் பகுதியில் பிள்ளைகளுக்குரிய பாசத்தோடு நமக்கு வேண்டியதைக் கேட்கிறோம்.

"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும்."

என்று தந்தையிடம் கேட்க வேண்டும் என்று இயேசு சொல்கிறார்.

 ,
 "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது" என்ற இயேசுவின் வார்த்தைகள் ஞாபகத்துக்கு வருகின்றன. (மத். 19:14)

குழந்தை பிறந்தவுடன் முதலில் தேடுவது தாய்ப்பாலைத்தான்.

குழந்தை அழுதவுடன் தாய் அதற்குப் பால் கொடுக்கிறாள்.

வயிறு நிறைந்தவுடன் குழந்தை தூங்க ஆரம்பித்து விடுகிறது.

திரும்ப பசிக்கும்போது தான் அழுகிறது.

நாள் முழுவதற்குமான பாலை குழந்தை ஒரே நேரத்தில் குடித்து விடுவதில்லை.

குழந்தை வளர்ந்து சிறியவன் ஆகும்போது கூட தனக்கு வேண்டியதைப் பெற்றோரிடம் கேட்கும் விசயத்தில் இதே நிலையைத்தான் குழந்தை கடைப்பிடிக்கிறது.

அப்பப்போதைக்கு வேண்டியதை அப்பப்போது கேட்கிறது.

அன்றன்றைக்கு வேண்டியதை அன்றன்றைக்குக் கேட்கிறது.

வருடம் முழுவதற்கும் வேண்டியதை ஒரே நேரத்தில் கேட்பதில்லை.

தனக்கு ஆண்டு முழுவதற்கும் தேவையானது பெற்றோரிடம் இருக்கிறது என்று அதற்குத் தெரியும்.

நாமும் நமக்கு வேண்டியதைத் தந்தையிடம் கேட்கும் விசயத்தில் இதே நிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

அதனால் தான் "எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும்." என்று தந்தையிடம் கேட்கச் சொல்கிறார்.

நாளைக்கு வேண்டியதை நாளைக்குக் கேட்டால் 

பெற்றோரிடம் இருக்குமோ இருக்காதோ என்று சந்தேகப்படுகிறவர்கள் தான்

 நாளைக்கு வேண்டியதை இன்றே கேட்பார்கள்.

குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் பெற்றோர் மீது சந்தேகமே வராது.

கடவுளின் பராமரிப்பின் மீது முழு நம்பிக்கை உள்ளவர்கள் அன்றாட உணவைத்தான் கேட்பார்கள்.

வருடம் முழுவதற்குமான உணவைச் சேமித்து வைக்கிறவனுக்கு கடவுளின் பராமரிப்பின் மீது நம்பிக்கை இல்லை.


உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. 

வானத்துப் பறவைகளையும், 
காட்டுமலர்ச் செடிகளையும்    
பராமரித்து வரும் கடவுள் 

அவரது சாயலில் படைக்கப்பட்ட நம்மைப் பராமரிக்க மாட்டாரா?


" அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்.

 அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்." ( மத். 6:33)

என்று இயேசுவே கூறியிருக்கிறார்.

உணவை மட்டுமல்ல, நமது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையுமே கடவுள் தருவார்,

நாம் அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடினால்.

"எங்களுக்குத் தீமை செய்தோரை நாங்கள் பொறுப்பது போல
எங்கள் பாவங்களை பொறுத்தருளும்."

என்று விண்ணப்பிக்கிறோம்.

இயேசு மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு, மரித்ததே நமது பாவங்களை மன்னிப்பதற்காகத்தான்.

நாம் இயேசுவின் சீடர்களாக வாழ வேண்டுமென்றால் நாம் நமக்கு விரோதமாக குற்றங்கள் புரியும் நமது அயலானை மன்னிக்க வேண்டும்.

"நாங்கள் எங்கள் அயலானை மன்னிப்பது போல எங்களை மன்னியும்" என்று தந்தையிடம் கேட்கிறோம்.

மன்னிக்கப் பிறந்தவர் கிறிஸ்து.
மன்னித்து வாழ்பவன்தான் கிறிஸ்தவன்.

"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்" என்று செபிக்கிறோம்.

சோதனைகள் வருவதைத் தவிர்க்க முடியாது.

இயேசுவே மூன்று முறை சோதிக்கப் பட்டார்.

சோதனைகளை வெல்வதற்கான அருள் வரத்தை தந்தையிடம் கேட்கிறோம்.

இவ்விசயத்தில் நாம் தந்தையுடன் ஒத்துழைக்க வேண்டும்.

நாம் சோதனைக்கான சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.

"சோதனையில் விழ விடாதேயும்" என்று கூறிக் கொண்டு 

பாவ சந்தர்ப்பங்களைத் தேடிப் போகக்கூடாது.

குடியிலிருந்து காப்பாற்றப்பட வேண்டுமானால் குடிகாரர்களின் உறவைத் தவிர்க்க வேண்டும்.

"தீமையினின்று எங்களை இரட்சித்தருளும்." என்று விண்ணப்பிக்கிறோம்.

தீமை என்றால் பாவம்.

நாம் பாவத்தில் விழாதபடி நம்மைக் காக்கும் படி தந்தையிடம்
வேண்டுகிறோம்.

பாவ நாட்டத்திலிருந்து நாம் விடுபட வேண்டுமானால் 

புண்ணியத்தை நாட வேண்டும்.

தற்பெருமை என்னும் பாவத்தில் விழாமலிருக்க வேண்டுமானால் 

தாழ்ச்சியோடு வாழ வேண்டும்.

விலக்கப்பட வேண்டிய தலையான பாவங்கள் 

1. அகங்காரம் 
2. கோபம் 
3. மோகம் 
4. லோபித்தனம் 
5. போசனப்பிரியம் 
6. காய்மகாரம் 
7. சோம்பல்.

வாழ வேண்டிய தலையான புண்ணியங்கள்.

1. தாழ்ச்சி
2. பொறுமை
3. கற்பு
4. உதாரம் 
5. மட்டசனம் 
6. பிறர்சிநேகம் 
7. சுறுசுறுப்பு.

புண்ணியங்களை வாழ்வோம்,
பாவங்கள் நெருங்காது.

செபம் என்றாலே இறைவனோடு ஒன்றித்து வாழ்வதுதான்.

கர்த்தர் கற்பித்த செபத்தை வாழ்வோம்.

விண்ணகத்தில் வாழும் தந்தையோடு நித்திய காலம் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, February 19, 2024

"மேலும் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்." (மத். 6:7)

'மேலும் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்." (மத். 6:7)

அளவை விட தரமே முக்கியம்.

கிழிந்த சட்டைகள் நூறு இருப்பதை விட நல்ல சட்டை ஒன்றே போதும்.

இந்த உலகியல் விதி ஆன்மீகத்தின் உயிர் நாடியான செபத்திற்கும் பொறுந்தும்.

சிலர் நமது செபத்திலுள்ள வார்த்தைகளுக்கு கடவுள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று நினைக்கிறார்கள்.

ஆகவே செபம் சொல்லும் போது 
சொற்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

உண்மையில் செபத்துக்கு சொற்களே தேவையில்லை.

இதயங்கள் ஒன்றிப்பதுதான் செபம்.

நமது இதயம் இறைவனது இதயத்தோடு ஒன்றிக்க வேண்டும்.

Our heart should get united with God's heart.

இதயங்கள் பேச வார்த்தைகள் தேவையில்லை.

அவைகள் பேசுவது ஆன்மீக மொழியில்.

ஆன்மீக மொழிக்கு எழுத்தும் இல்லை, வார்த்தையும் இல்லை,

உணர்வுகள் மட்டுமே இருக்கும்.

பேசத் தெரியாத ஒரு கைக்குழந்தை அதன் தாயின் முகத்தைப் பார்க்கும் போது அதன் முகம் அதன் உள்ளத்து உணர்வுகளைப் பிரதிபலிக்கும்.

அதன் முகத்தைப் பார்ப்பதே நமக்குப் பேரானந்தம்.

திவ்ய நற்கருணைப் பேழையின் முன் அமர்ந்து கொண்டு உள்ளத்தில் நற்கருணை நாதரைத் தியானிப்பதில் உள்ள ஆனந்தம்

வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே செபிப்பதில் இருக்காது.

நாம் மனிதர்கள். கருத்துக்களைப் பரிமாற வார்த்தைகளையே பயன் படுத்துகிறோம்.

அதற்காக அத்தியாவசியமான வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தி நமது ஆண்டவர்

"விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே" செபத்தைச் சொல்லித் தந்திருக்கிறார்.

அந்த செபத்தை ஒரு முறை பக்தி உணர்வோடு செபிப்பது ஒரு முறை பைபிள் முழுவதையும் வாசிப்பதற்குச் சமம்.

அந்த செபம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியது.

முதல் பகுதியில் நமது விண்ணகத்
தந்தையைப் புகழ்கிறோம்.

"விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே" 

என்று கூறும்போது 

மனிதகுலப் படைப்பை நினைவு கூறுகிறோம்.

எங்கள் என்ற பன்மை வார்த்தையைப் பயன்படுத்தியதன் மூலம்

 தந்தை இறைவன் (God the Father) மனுக்குலம் முழுமைக்கும் தந்தை என்பதையும்,

 அனைத்து மனிதர்களும் நமது சகோதர சகோதரிகள் என்பதையும்

ஏற்றுக் கொள்கிறோம்.

இதை ஏற்றுக் கொள்ளும் போது

நாம் நமது தந்தையைப் பிள்ளைகளுக்குரிய பாசத்தோடும்,

அனைத்து மனிதர்களையும் சகோதர பாசத்தோடும் நேசிக்க வேண்டும் என்பதையும் 

ஏற்றுக் கொள்கிறோம்.


"உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக"

என்று கூறும்போது 

கடவுளின் பெயர் புனிதமானது 

அதாவது

கடவுள் புனிதமானவர் என்பதை 
ஏற்றுக் கொள்கிறோம்.

தந்தை புனிதமாக இருப்பது போல் நாமும் புனிதமாக இருக்க வேண்டும் என்பதையும் 

ஏற்றுக் கொள்கிறோம்.

தந்தையைப் போலவே நாமும் இருக்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் ஆசை.

(Be perfect as your Heavenly Father is perfect.)

"உம்முடைய இராச்சியம் வருக" 
என்று கூறும்போது 

உலகமே இறைவனின் அரசாக மாற வேண்டும் என்ற நமது விருப்பத்தை தந்தைக்குத் தெரிவிப்பதோடு,

நாம் உலகின் இறுதி எல்கை வரை நற்செய்தியை அறிவிப்போம் என்று வாக்குறுதி கொடுக்கிறோம்.

"உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல
பூலோகத்திலும் செய்யப்படுவதாக"

என்று கூறும்போது

நாம் விண்ணகத் தந்தையின் விருப்பப்படி தான் உலகில் வாழ்வோம் என்று உறுதியளிக்கிறோம்.

நமது ஆண்டவர் இயேசு கற்பித்த செபத்தின் முதல் பகுதியில் நாம் தியானிக்கும் மறை உண்மைகள்,

1. விண்ணகத் தந்தைதான் பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்தார். நமது தந்தையை நமது முழு இதயத்தோடு நேசிக்க வேண்டும்.

2. மனிதர்கள் அனைவரும் ஒரே இறைவனின் பிள்ளைகள். அனைவரும் சகோதர சகோதரிகள். அனைவரும் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும்.

3.நமது தந்தை புனிதமானவர்.
நமது தந்தையைப் போலவே நாமும் புனிதமாக வாழ அழைக்கப் பட்டிருக்கிறோம்.

4.விண்ணரசு நம்முள் வந்து விட்டது. உலகின் இறுதி எல்கை வரை வாழும் அனைத்து மக்களும் இறையரசின் குடிமக்கள்.

5.மோட்சவாசிகள் அனைவரும் இறைவன் சித்தப்படி வாழ்வது போல உலக மக்கள் அனைவரும் இறைவன் சித்தப்படி வாழ வேண்டும்.

செபத்தின் முதல் பகுதியில் விண்ணகத் தந்தையைப் புகழ்ந்து விட்டு,

இரண்டாம் பகுதியில் நமக்கான மன்றாட்டைத் தொடர்கிறோம்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

Sunday, February 18, 2024

"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத். 25:40)

"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" 
(மத். 25:40)

''எனது சகோதரர் சகோதரிகளுக்கு செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்." என்று இயேசு சொல்கிறார்.

யார் இயேசுவின் சகோதரர் சகோதரிகள்?

தந்தை இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் இயேசுவின் சகோதரர் சகோதரிகள்.

அதாவது நமது தந்தையால் படைக்கப்பட்ட நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர் சகோதரிகள்.

இயேசுவின் சொற்படி நாம் ஒருவரை ஒருவர் நேசித்தால் இயேசுவை நேசிக்கிறோம்.

இயேசுவை நேசித்தால் மோட்சம் உறுதி.

இயேசுவின் வார்த்தைகளை அடிப்படையாக வைத்து சிந்தித்துப் பார்த்தால் மோட்சத்திற்குப் போவது எவ்வளவு எளிது,

எளிது மட்டுமல்ல,

இனியானது என்பது விளங்கும்.

யாராவது கரும்பு தின்னக் கூலி கேட்பார்களா?

கரும்பைக் கொடுத்து, தின்னக் கூலியும் கொடுத்தால் எப்படி இருக்கும்?

யாராவது வேண்டாம் என்பார்களா?

வாழ்க்கையிலேயே மிகவும் இனிமையான செயல் அன்பு செய்வதுதான்.

அன்பு செய்வது நமது இயல்பு.

பெற்ற பிள்ளையைத் தாயால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

குழந்தை பிறந்தவுடன் அது செய்யும் முதல் வேலை தன் தாயை நேசிப்பது தான்.

இயேசு நமக்கு அன்பு செய்ய இயல்பையும் கொடுத்து,

அன்பு செய்வதற்கு பரிசும் கொடுக்கிறார்.

சாதாரணப் பரிசு அல்ல, நித்திய பேரின்ப வாழ்வையே பரிசாகக் கொடுக்கிறார்,

கரும்பு தின்னக் கூலி கொடுப்பது போல.

எப்படி அன்பு செய்யச் சொல்கிறார்?

நம்மை நாம் நேசிப்பது போல.

கடவுள் எவ்வளவு இரக்கம் உள்ளவர் என்பதை நினைத்துப் பாருங்கள்!

நாம் செய்ய எளிதான, 
இயல்பான,
 இனிமையான, 
பள்ளிக்கூடப் படிப்பு தேவையில்லாத,
 சம்பளம் கொடுத்து பயிற்சி பெறத் தேவையில்லாத

 ஒரு வேலையை கொடுத்து,

அதற்கு சன்மானமாக நித்திய பேரின்ப வாழ்வைக் கொடுக்கிறார்,

பிரதிபலன் எதுவும் எதிர்பார்க்காமல்.

பிறரை நேசிப்பது கடினமான காரியம் அல்ல.

நம்மை நாம் நேசிப்பது போலவே பிறரையும் நேசிக்க வேண்டும்.

நம்மை நாம் நேசிப்பது கடினமான செயலா?

பசித்தவுடன் நாம் சாப்பிடுகிறோம்,
ஏனெனில் நாம் நம்மை நேசிக்கிறோம்.

இதைத் தானே மற்றவர்கள் விஷயத்திலும் செய்ய வேண்டும்!

நமக்கு நாம் உணவைக் கொடுப்பது போல மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும்,

 இதற்கான சன்மானம் நித்திய பேரின்ப வாழ்வு.

நாம் தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிப்பது போல,

 மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

இதற்கான சன்மானம் நித்திய பேரின்ப வாழ்வு.

நாம் சுகமில்லாமல் இருக்கும்போது மற்றவர்கள் நமக்கு ஆறுதல் கூற விரும்புகிறோம்,

அதே போல் மற்றவர்கள் சுகம் இல்லாமல் இருக்கும்போது நாம் அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும்.

 இதற்கான சன்மானம் நித்திய பேரின்ப வாழ்வு.

ஒரே வாக்கியத்தில் சொல்வதானால் 

நாம் நம்மை நேசிப்பது போல மற்றவர்களையும் நேசித்தால் நமக்கு நித்திய பேரின்ப வாழ்வு சன்மானமாகக் கிடைக்கும்.

மனிதர்கள் அனைவரும் இறைவனின் பிள்ளைகள்,

 ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகள்,

ஒருவரை ஒருவர் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் நேசித்தாலே போதும்,

 நித்திய பேரின்ப வாழ்வு.

கரும்பு தின்னக் கூலி,

அன்பு செய்ய நிலை வாழ்வு.

இறைவனது தாராளமன குணத்திற்காக அவருக்கு நன்றி சொல்லுவோம்.

லூர்து செல்வம்.

Friday, February 16, 2024

"பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்;"ம்ம(மாற்கு 1:13)

"பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்;"
(மாற்கு  1:13)

இயேசு முழுமையாகக் கடவுள். (Fully God)

இயேசு முழுமையாக மனிதன்.(Fully Man)

ஆள் ஒன்று, சுபாவம் இரண்டு.

கடவுள் என்ற வகையில் மனித   பலகீனங்களுக்கு அபபாற்பட்டவர்.

மனிதன் என்ற வகையில் பாவம் தவிர, மற்ற சகல மனித பலகீனங்களுக்கும் உட்பட்டவர்.

மனித பலகீனங்களை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

அவரது மனித நடவடிக்கைகள் எல்லாம் மனிதர்களாகிய நமக்கு ஆன்மீகப் பாடம் கற்பிப்பனவாகவே இருந்தன.

முப்பது ஆண்டுகள் தனது பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்த பின், திருமுழுக்கு அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற்றார்.

பின் தூய ஆவியால் பாலைநிலத்துக்கு அழைத்து வரப்பட்டார். 

நாம் தூய ஆவியுடன் தான் ஆன்மீக வாழ்க்கையை  ஆரம்பிக்க வேண்டும் என்பது நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
 
"பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; "
(மாற்கு  1:13)

இந்த வசனத்தில் குறிக்கப்பட்ட ஆண்டவரின் செயல்பாடுகள் நம்முடைய ஆன்மீக வாழ்க்கையின் முக்கிய கடமைகளைக் குறிக்கின்றன.

நமது ஆன்மீக வாழ்க்கையில் நமது பலவீனம் காரணமாக அநேக சோதனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது.

சோதிப்பவன் சாத்தான்.

ஒரு வகையில் நாம் சாத்தானோடு போரிட வேண்டியிருக்கிறது.

போர் இருவகை.

1. எதிரி நம் மீது போர் தொடுக்கும்போது நம்மை அவனிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக அவனோடு போரிடுவது ஒரு வகை.
(Defensive war)

 2. எதிரி நம்மை தாக்குமுன்பே நாம் தயார் நிலையில் இருந்து அவனைத் தாக்குவது இன்னொரு வகை. (Offensive war)

சாத்தான் இயேசுவைச் சோதனைகளால் தாக்க வருவது அவருக்குத் தெரியும்.

மத்தேயு நற்செய்தியை வாசித்தால் இயேசு என்னென்ன சோதனைகளை சந்திக்க நேர்ந்தது என்பது தெரியும்.

1. போசனப் பிரியம். (Gluttony)
2. வீண் புகழ் (vain glory)
3.பேராசை. (Greed)

இந்த சோதனைகளுடன் சாத்தான் அவரைத் தாக்க வருவதற்கு முன்னாடியே இயேசு தன்னை இவற்றிற்கு எதிராக தயார் படுத்திக் கொள்கிறார்.

நாற்பது நாட்கள் உண்ணா நோன்பு இருந்ததன் மூலம் போசனப் பிரியத்துக்கு எதிராகத் தன்னைத் 
தயார் படுத்திக் கொள்கிறார்.

தாழ்ச்சியுடன் தன்னைப் பாலை நிலத்தில் தனிமைப் படுத்திக் கொண்டு தவம் செய்து வீண் புகழுக்கு எதிராகத் தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறார்.

ஏழ்மையுடனும் எளிமையுடனும் நாற்பது நாட்கள் தவம் செய்ததன் மூலம் பேராசைக்கு எதிராகத் தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறார்.

சாத்தான் அவரை அணுகி, "நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்" என்றபோது,

 அவர் மறுமொழியாக; "'மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல; மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்' என மறைநூலில் எழுதியுள்ளதே" எனக்கூறி அந்த சோதனையை வெல்கிறார். 

 அலகை அவரை எருசலேம் . கோவிலின் உயர்ந்த பகுதியில்  நிறுத்தி, 


 ";நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; 

'கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். 

உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்' என்று மறைநூலில் எழுதியுள்ளது" என்று   சொன்ன போது. 


இயேசு அதனிடம்: "'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்' எனவும் எழுதியுள்ளதே" என்று சொல்லி அந்த சோதனையை வெல்கிறார். 

 அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, 

 அவரிடம், "நீர்    என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்" என்ற போது,


 இயேசு  "அகன்று போ, சாத்தானே,'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது" என்று 
கூறி அந்த சோதனையை வெல்கிறார். 

கடவுளாகிய இயேசுவுக்கு சோதனைகளை வெல்ல இவ்வளவு முயற்சி தேவை இல்லை.

அவரது அனுமதி இல்லாமல் சாத்தான் அவரை அணுக முடியாது.

அவர் இவ்வளவையும் செய்தது செயல் மூலம் நமக்கு ஆன்மீக பாடம் போதிக்கவே.
 
நமது ஆன்மீக அனுபவத்தில் சாத்தான் எந்தெந்த வகையில்,

எந்த புண்ணியங்களுக்கு எதிராக,

 நம்மைச் சோதிக்கிறான் என்று நமக்குத் தெரியும்.

நாம்  அந்த புண்ணியங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

நாம் எப்போதும் தாழ்ச்சியாக இருந்தால் தற்பெருமையால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

நாம் எப்போதும் அளவோடு சாப்பிட்டால் போசனப் பிரியத்தால் ஒன்றும் செய்ய முடியாது.

இறைவனுக்காக நாம் அனைவரையும் நேசித்தால் நம்மிடம் பழிவாங்கும் உணர்வு தோன்றாது.

தவ முயற்சிகள் செய்வது புண்ணியங்களில் பயிற்சி பெறுவதற்காகத்தான்.

அதற்காகத்தான் நமக்கு தவக்காலம் அளிக்கப்பட்டிருக்கிறது.

 இயேசு நாற்பது நாட்கள் உண்ணா நோன்பு இருந்தார்.

அதன் நினைவாக நாம் நாற்பது  நாட்கள் செப, தவ, தர்ம முயற்சிகளில் ஈடுபடுகிறோம்.

இதைத் தவக்காலம் என்று அழைக்கிறோம்.

ஆனால் உண்மையில் இந்த நாற்பது நாட்கள் மட்டுமல்ல,

நமது வாழ்க்கை முழுவதும் தவக்காலம்தான்.

விண்ணக வாசல் நெருங்கும் வரை, 

அதாவது நமது மரணம் வரை, 

நான் செபம் செய்யவும்,
 தவம் செய்யவும்,
 தர்மம் செய்யவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

திருமண விழாவின் போது விருந்து உண்ணும் நாம் வாழ்நாள் முழுவதும் சாப்பிடத் தானே செய்கிறோம்.

அதேபோல் தான் இயேசுவின் மரண நாளுக்காக நம்மைத் தயாரிக்க தவம் செய்வது போல

 நமது மரணத்துக்காக நம்மைத் தயாரிக்க மரணம் வரை தவம் இருக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை மாலை மட்டுமல்ல நமது வாழ்நாளே சிலுவைப் பாதை தான்.

உண்மையில் இயேசுவின் சிலுவைப் பாதை அவர் மாட்டுத் தொழுவத்தில் அன்னை மரியாளின் வயிற்றிலிருந்து பிறக்கும் போது ஆரம்பித்து விட்டது.

இயேசு பிறந்து குழந்தையாக இருக்கும்போதே அவரது தாயின் மடியில் இருந்தது போலவே

அவர் மரித்து அடக்கம் பண்ணப் படுவதற்கு முன்னாலும் தாயின் மடியில் அமர்ந்தார்.

குழந்தை இயேசு தாயின் முத்தத்தைப் பெற்று நடப்பதற்காகத் தரையில் இறங்கியது போல 

தாயின் முத்தத்தைப் பெற்று உயிப்பதற்காகக் கல்லறைக்குள் இறங்கினார்.

உயிர்த்த பின் முதலில் தனது அன்னைக்குதான் காட்சியளித்தார்.

அதனால் தான் அன்னை மரியாள் மற்ற பெண்களைப் போல் கல்லறைக்கு வரவில்லை

நாமும் கல்லறைக்குள் இறங்கும் வரை இயேசுவைப் போல தவம் செய்ய வேண்டும்.

அப்போதுதான் இயேசுவுடன் நித்திய பேரின்ப வாழ்வில் பங்கு பெறுவோம்.

லூர்து செல்வம்.

Thursday, February 15, 2024

"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை." (லூக்.5:31)

"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை." (லூக்.5:31)


 இயேசுவால் 'என்னைப் பின்பற்றி வா' என்று அழைக்கப்பட்ட லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரியவிருந்து அளித்தார். 

வரி தண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்திருந்தார்கள். 


பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், 

"வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?" என்று கேட்டார்கள். 

பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் வரிதண்டுபவர்களைப் பிடிக்காது.

வரிதண்டுபவர்கள் பாவிகள் என்பது அவர்களுடைய எண்ணம்.

லேவி என்ற மத்தேயு இயேசுவையும் அவருடைய சீடர்களையும் விருந்துக்கு அழைத்தார்.

அவர்கள் விருந்துக்கு வந்திருந்தார்கள்.

 பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் ஏன் வந்தார்கள்?

இயேசுவின் நடவடிக்கைகளில் குற்றம் கண்டு பிடிப்பது மட்டுமே அவர்களது வேலை.

அதற்காகத்தான் இயேசு சென்ற இடமெல்லாம் அவர்களும் சென்றார்கள்.

''வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?" என்று அவர்கள் சீடர்களிடம் கேட்டார்கள். 

அவர்களும் பாவிகள் தான்.

பொதுவாக மற்றவர்களிடம் குறை காண்பவர்கள் தங்கள் குறைகளைப் பார்க்க மாட்டார்கள்.

அதனால் தான் பாவிகளாகிய அவர்கள் வரிதண்டுபவர்களைப் பாவிகள் என்று அழைத்தார்கள்.

இயேசு அவர்களுடைய கேள்விக்கு மறுமொழியாக,


 "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 

நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்" என்றார். 

பாவிகளோடு உண்பதேன் என்ற கேள்விக்கு இயேசு பதில் சொன்னார்.

இயேசுவைப் பொறுத்த‌ மட்டில் மனிதர்கள் அனைவருமே
 பாவிகள் தான்.

மனிதர்கள் அனைவரையும் பாவத்திலிருந்து மீட்கவே மனிதனாகப் பிறந்தார்.

வரி தண்டுபவர்கள் மட்டுமல்ல பரிசேயர்களும் மீட்கப்பட வேண்டியவர்களின் வட்டத்துக்குள் வருகிறார்கள்.

ஆனால் அவர்கள் அதை உணரவில்லை.

காரணம் அவர்களிடம் இருந்த
 தற்பெருமை. (Pride)

தலையான பாவங்களுள் முதன்மையானது.

லூசிபர் சாத்தானாக மாற காரணமானது.

பாவிகள் பாவத்திலிருந்து மீட்கப்பட வேண்டுமானால் அவர்கள் முதலில் தாங்கள் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நோயாளிகள் தங்களிடம் நோய் இருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஏற்றுக்கொண்டால் தான் மருத்துவரைத் தேடுவார்கள்.

ஏற்றுக்கொள்ளாவிட்டால் அது குணமாக முயற்சி எடுக்க மாட்டார்கள், நோயிலேயே சாவார்கள்.

தங்களிடம் நோய் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டவர்களின் நோயை இயேசு குணமாக்கினார்.

தங்களது பாவத்தை ஏற்றுக் கொண்டவர்களை அவர் மன்னித்தார்.


பரிசேயர்களும், மறை‌நூல் அறிஞர்களும் தங்களைப் பரிசுத்தவான்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

பரிசுத்தராகிய இயேசுவையே பாவி என்று எண்ணும் அளவிற்கு அவர்களது தலைக்கனம் உச்சத்தில் இருந்தது.

இறை மகனாகிய இயேசு தன்னை இறைமகன் என்று வெளிப்படுத்தியதையே அவர்கள் தேவதூசனம் என்று கருதினார்கள்.

அவர்களது தற்பெருமை எண்ணங்கள் தான் இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்லும் அளவிற்கு இட்டுச் சென்றன.

"நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்" என்ற இயேசுவின் வார்த்தைகள் நமக்கு ஆறுதல் அளிக்கின்றன. 

நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

நம்மைத் தேடித்தான் இயேசு உலகிற்கு வந்தார் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம்.

நமக்காகவே திவ்ய நற்கருணைப் பேழையில் இரவும் பகலும் காத்துக்கொண்டிருக்கிறார் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம்.

நமது பாவங்களிலிருந்து இயேசு விடுதலை கொடுக்கிறார் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம்.

இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்வதால் தான் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

இந்த மகிழ்ச்சியை நம்மிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது.

இயேசுவால் இப்போது ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சி நமது எதிர்கால விண்ணக வாழ்வின் போது பேரின்பமாகத் தொடரும்.

இயேசுவிடமிருந்து மட்டுமல்ல பரிசேயர்களிடமிருந்தும் நாம் ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் இயேசுவைப்போல் தாழ்ச்சி உள்ளவர்களாக வாழ வேண்டும்.

தற்பெருமை அழிவுக்கு இட்டுச் செல்லும் என்பதை பரிசேயர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இயேசு வரி தண்டுபவர்களின் வீட்டில் மட்டுமல்ல பரிசேயர்களின் வீட்டிலும் விருந்து உண்டிருக்கிறார்.

ஒரு பரிசேயரின் வீட்டில் விருந்து உண்ணும் போது தான் பாவியான ஒரு பெண் அவருடைய காலடிகளைத் தன் கண்ணீரால் நனைத்து, தன் கூந்தலால் துடைத்து,

தனது பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்டாள்.

இயேசு அவளுடைய பாவங்களை மன்னித்தார்.


''ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்; இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். " (லூக். 7:47)

ஒரு தாய் சுகமாக இருக்கிற தனது பிள்ளைகளை விட நோயில் வருந்துற பிள்ளைகளைத் தான்

 அதிகமாக தனது அன்பை வெளிப்படுத்திக் கவனிக்கிறாள் என்பது நமது அன்றாட அனுபவம்.

இயேசு வரி தண்டுபவர்கள் மீது எவ்வளவு அன்பு கொண்டிருந்தாரோ அதே அளவுக்கு பரிசேயர் மீதும் அன்பு கொண்டிருந்தார்.

இயேசு சிலுவையில் அறையப்பட காரணமாக இருந்தவர்கள் பரிசேயர்கள்.

அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது 

தான் சிலுவையில் அறையப்பட காரணமாக இருந்தவர்களை மன்னிக்கும் படி தனது தந்தையிடம் வேண்டினார்.

வரி தண்டுபவர்களை மட்டுமல்ல அனைத்து பாவிகளையும் மீட்கவே இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தார்.

தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காகவும் அவர் மரித்தார்.

ஏனெனில் அவர்களையும் படைத்தவர் அவரே.

நாம் நாம் பாவிகள், மீட்கப்பட வேண்டியவர்கள்.

நம்மைச் சுற்றி வாழ்பவர்களும் பாவிகள், அவர்களும் மீட்கப்பட வேண்டியவர்கள்.

நம்மை நாம் நேசிப்பது போல அவர்களையும் நேசிக்க வேண்டும்.

நாம் மீட்படைய விரும்புவது போல் அவர்களும் மீட்படைய நாம் விரும்ப வேண்டும்.

கிறிஸ்தவர்களை விரும்பாத ஒரு இனம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

அவர்களை எதிர்த்துப் போராட வேண்டுமா?

 அல்லது

 அவர்களுக்காக செபிக்க வேண்டுமா?

இயேசு அவர் சாக வேண்டும் என்று விரும்பியவர்களை எதிர்த்துப் போராடவில்லை,

அவர்களுக்காக செபித்தார்.

 நாம் இயேசுவைப் பின்பற்றுபவர்கள் என்பதை செயலில் காண்பிப்போம்.

நமது எதிரிகளை எதிர்த்து போராடுவதைக் கைவிட்டு விட்டு அவர்களுக்காக செபிப்போம், அவர்களை மன்னிப்போம்.

இந்தியாவில் கிறிஸ்தவம் வளர வேண்டுமா?

வேத சாட்சிகளின் இரத்தம் கிறிஸ்தவத்தின் வித்து என்பதை நினைவில் கொள்வோம்.

உலக மக்கள் அனைவரும் பாவ நோயுள்ளவர்கள் தான்.

அனைவரையும் தேடித்தான் இயேசு உலகிற்கு வந்தார்.

லூர்து செல்வம்.

விண்ணகப் பாதை.

விண்ணகப் பாதை.

ஒரு ஊருக்கு வழி கேட்க வேண்டுமானால் அந்த ஊர்க்காரரிடம் கேட்க வேண்டும்.

மற்றவர்களை விட அவருக்குதான் மிகச் சரியான வழி தெரியும்.

மண்ணில் பிறந்து மண்ணிலேயே வாழும் நாம் விண்ணகம் செல்ல யாரிடம் வழி கேட்கலாம்?

விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்த ஒருவர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவரிடம் சென்று கேட்போமா?

யார் அவர்?

சுமார் 2024 ஆண்டுகளுக்கு முன் விண்ணிலிருந்து இறங்கி வந்து

நமது ஆலய நற்கருணைப் பேழையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசுவிடம் சென்று கேட்போம்.

"இயேசுவே, முதலில் உமக்கு எனது பணிவன்பான ஆராதனை.

அடியேன் விண்ணகம் செல்ல ஆசைப்படுகிறேன்.

அங்கிருந்து இறங்கி வந்த உமக்கு தான் அங்கே செல்ல சரியான வழி தெரியும் என்று சொல்கிறார்கள்.

வழியைச் சொல்லி கொஞ்சம் உதவி செய்யுங்களேன்!"

"'கொஞ்சமல்ல, நிறையவே உதவி செய்கிறேன்.

நான் அங்கிருந்து இறங்கி வந்ததே உங்களை அங்கு அழைத்துச் செல்வதற்காகத்தானே."

"அப்படியா? விண்ணகத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும்?"

""விண்ணகம் செல்ல விரும்புவோர் முதலில் என் சீடர்களாக மாற வேண்டும்.

அப்புறம் என் பின்னால் வந்தால் போதும்."

''உமது சீடர்களாக மாற என்ன செய்ய வேண்டும்?"


"என்னைப் பின்பற்ற விரும்புவோர் தங்கள் நலம் துறந்து தங்கள் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும்."

"அப்படியானால் நீங்கள் செல்லும் பாதை சிலுவைப் பாதையாக அல்லவா இருக்கும்."

"'இருக்குமென்ன, விண்ணகப் பாதையே சிலுவைப் பாதைதான்."

"ஆண்டவரே, நீங்கள் சிலுவையைச் சுமந்து சென்றது பிலாத்துவின் அரண்மனையிலிருந்து கல்வாரி மலைக்குத்தானே .

கல்வாரி மலையிலா விண்ணகம் இருக்கிறது?"

"'எதற்காகச் சிலுவையைச் சுமந்து கொண்டு கல்வாரி மலைக்குப் போனேன்?"

"சிலுவையில் அறையப்பட்டு .உங்களையே எங்களுக்காக தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுக்க."

"'எதற்காகப் பலி?''

"எங்களது பாவங்களுக்குப் பரிகாரமாக."

"'எதற்காகப் பரிகாரம்?"


"நாங்கள் பாவ மன்னிப்புப் பெறுவதற்காக."

"'எதற்காகப் பாவ மன்னிப்பு?"


"பாவ மன்னிப்பு பெற்றால்தான்
விண்ணக நிலை வாழ்வுக்குள் நுழைய முடியும்."

"'இப்போ சொல்லு, எதற்காக நான் சிலுவையைச் சுமந்து கொண்டு கல்வாரி மலைக்குச் சென்றேன்?"

"நாங்கள் விண்ணக நிலை வாழ்வுக்குள் நுழைவதற்காக."

"'இப்போது புரிகிறதா விண்ணக வாழ்வுக்குள் நுழைவதற்கான வழி சிலுவைப் பாதை தான் என்று?"

"ஆண்டவரே நீங்கள் மரத்தாலான சிலுவையைச் சுமந்து சென்றீர்கள். 

நாங்களும் மரத்தாலான சிலுவையைச் சுமந்து செல்ல வேண்டுமா?"

"'சிலுவை ஒரு அடையாளம். அதை சுமக்கும் போது நான் பட்ட அளவு கடந்த வேதனை தான் உண்மையான சிலுவை.

வேதனையைப் பாவ பரிகாரத்துக்காக அனுபவிப்பது தான் சிலுவை. 

உனது வாழ்வில் நீ அனுபவிக்கும் துன்பங்களையும், 

அவற்றால் ஏற்படும் வேதனையையும் 

உனது பாவங்களுக்கும், உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக ஏற்றுக்கொண்டு 

அதைப் பரம தந்தைக்கு ஒப்புக்கொடுத்தால் அது சிலுவை.

நீ காலையில் எழும்போது என்ன செபம் சொல்லிக் கொண்டு எழுகிறாய்?"

''என் மேல் சிலுவை அடையாளம் வரைந்து கொண்டு,

" தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே, ஆமென்" என்று சொல்லிக் கொண்டே எழுகிறேன்."

"'அதன் பொருள் என்னவென்று தெரியுமா?"

"தெரியாது ஆண்டவரே. அனேக செபங்களை பொருள் தெரியாமல் தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

அதன் பொருளை சொல்லித் தாருங்கள்."

"'நீ வரைகிற சிலுவை அடையாளம் நான் என்னையே உனது பாவங்களுக்குப் பரிகாரமாக சுமந்து மரித்த சிலுவையையும்,

நீ சுமக்கப் போகும் சிலுவையையும், அதாவது படப் போகும் துன்பங்களையும் குறிக்கும்.

அவற்றை உனது பாவங்களுக்கும், உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக

தந்தை, மகன், தூய ஆவிக்கு ஒப்புக்கொடுக்கிறாய்."

"அதாவது ஒவ்வொரு நாளின் அனுபவங்களையும் அனைவரின் பாவங்களுக்குப் பரிகாரமாக கடவுளுக்கு ஒப்பு கொடுக்கிறேன், சரியா?"

"'சரி. அப்படி நீ ஒப்புக் கொடுப்பதன் மூலம் நீ நாள் முழுவதும் சிலுவையைச் சுமக்கிறாய்.

சிலுவையைச் சுமந்து கொண்டு என்னைப் பின்பற்றுகிறாய்."

"ஆனால் நான் பொருள் தெரியாமல் அல்லவா அந்த செபத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்."

"'இனியாவது பொருளை சிந்தித்துக் கொண்டே செபத்தைச் சொல்லு.''

"அப்படியானால் நான் இதுவரை சொன்ன செபத்திற்கு பலன் இல்லாமல் போயிருக்குமோ?''

"'ஒரு LKG குழந்தை பள்ளிக்கூடம் முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து அப்பாவிடம்,

"அப்பா, அப்பா எங்க டீச்சர் பீஸ் கேட்டாங்க." என்று சொன்னாள்.

அப்பா "நாளை வந்து கொடுக்கிறேன்" என்று சொன்னார்.

குழந்தை "பீஸ்னா என்னப்பா?" என்று கேட்டாள்.

குழந்தை பொருள் தெரியாமல் சொன்னாலும் 

அதன் மீது அன்புள்ள தந்தை

 பொருளை உணர்ந்து அதன்படி செயல்படுகிறார்.

ஒவ்வொரு இல்லத்திலும் இது நடக்கிறது.

நான் உனது இரக்கம் உள்ள கடவுள். உனக்கு எவ்வளவு ஞானம் இருக்கிறது என்று எனக்குத் தெரியும்.

நீ உண்மையான பக்தியுடன் செபித்தால்

பொருள் தெரியாமல் செபித்தாலும்
உனது பக்திக்கு உரிய பலன் கிடைக்கும்.

பொருளோடு செபித்தால் பலனின் அளவு அதிகமாகும்.

நீ ஏதாவது என்னிடம் கேட்டால் என்ன கேட்கிறாய் என்று உனக்குத் தெரிய வேண்டும்.

நீ என்னிடம் பேசும் போது உனது மனது ஒரு நிலைப் பட்டிருக்க வேண்டும்.

அதாவது உனது மனதில் என்னையும் நீ கேட்பதையும் தவிர வேறு எந்த எண்ணமும் இருக்கக் கூடாது.

எப்போதாவது lens வைத்து பேப்பரை எரித்திருக்கிறாயா?" 

"எரித்திருக்கிறேன். சூரிய ஒளியில் பேப்பரை வைத்துக் கொண்டு

 மேலே ஒரு லென்சை பிடித்துக் கொள்வேன்.

லென்ஸ் வழியாகச் செல்லும் சூரிய ஒளி பேப்பரின் மேல் ஒரு புள்ளியில் குவிந்து விழுந்தால்

சூரிய வெப்பத்தால் பேப்பர் தீப்பிடிக்கும்."

"'உனது செபமும் என் மேல் அப்படி விழ வேண்டும்."

"மனதை ஒரு நிலைப்படுத்தி,

சிலுவை அடையாளம் வரைந்து

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் 

அன்றைய நாளின் எல்லா அனுபவங்களையும் தமதிரித்துவ கடவுளுக்கு ஒப்புக் கொடுத்தால்

 அன்றைய அனுபவங்கள் எல்லாம் சிலுவையாக மாறிவிடுமா?"

"'மாறிவிடும்."

"எனது சிலுவையைச் சுமந்து கொண்டு உங்கள் பின்னால் வருவது இவ்வளவு எளிதான காரியமா?

 எனக்குத் தெரியாமல் போய்விட்டதே!

எனது வாழ்வின் ஒவ்வொரு அனுபவத்தையும் இனிமேல் மனுக்குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுப்பேன்.

எனது துன்பங்களை எல்லாம் சிலுவைகளாக மாற்றுவேன்.


"தங்கள் நலம் துறந்து தங்கள் சிலுவையைத் தூக்கிக்கொண்டு"

என்று சொன்னீர்களே'

'தங்கள் நலம் துறந்து' என்றால் என்ன பொருள்?"

"என்னைப் பின்பற்ற வேண்டும் என்றால் எனது விருப்பப்படி தான் நடக்க வேண்டும். 

உனது விருப்பப்படி அல்ல.

அதுதான் தவம்.

நீ ஆசைப்படுவதை மற்றவர்களுக்குக் கொடுத்து உதவுவது தான் தர்மம்.

உனது ஆசையை விட்டுக் கொடுத்தால்தான் தர்மம் செய்ய முடியும்.

நீ உழைத்து ஈட்டும் பொருளை உனக்காக மட்டும் செலவழிக்க ஆசைப்பட்டால் தர்மம் செய்ய முடியாது."

"இப்பொழுது புரிகிறது, ஆண்டவரே.

நல்ல மனம் இருந்தால் சிலுவையைச் சுமப்பது எளிது.

இனிமேல் எனது எல்லா அனுபவங்களையும் மனுக் குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுப்பேன்.

எனது ஆசைகளை ஒறுத்து  தவமும், ஊருக்குத் தர்மமும் செய்வேன்.

இந்த நொடி முதல் எனது வாழ்க்கை முழுவதையும் பாவப் பரிகாரப் பலியாக உமக்கு ஒப்புக்கொள்கிறேன்."

"'எனது உதவி உனக்கு எப்போதும் இருக்கும்."

"நன்றி, ஆண்டவரே."

லூர்து செல்வம்.

Wednesday, February 14, 2024

''நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்" என்றார். (தொடக்கநூல் 3:19)

"நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்" என்றார். 
(தொடக்கநூல் 3:19)


கடவுள் தன்னோடு விண்ணகத்தில் வாழ்வதற்காகத்தான் மனிதனைப் படைத்தார்.

அவனது உடலை மண்ணிலிருந்து படைத்தார்.

ஆனால் மனிதன் தான் செய்த பாவத்தினால் விண்ணக வாழ்வுக்குரிய தகுதியை இழந்தான்.

மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட உடல் மண்ணுக்கே திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

அந்நிலை ஏற்படுவதற்குக் காரணம் அவனுடைய பாவம்.

பாவத்திலிருந்து அவனது ஆன்மாவை மீட்பதற்காக இறைமகன் மனுமகனாகப் பிறந்தார்.

நமது ஆன்மா இறைவனுடைய மூச்சிலிருந்து உண்டானது.

"அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்." (தொடக்கநூல் 2:7)

மனித உடல் மண்ணுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டாலும் 

இறைவனின் உயிர் மூச்சால் படைக்கப்பட்ட ஆன்மாவாவது இறைவனோடு ஒன்று சேர வேண்டும் என்பதற்காகத்தான் இறை மகன் மனு மகனாகப் பிறந்து, பாடுகள் பட்டு மரித்தார்.

இயேசுவின் பாடுகளை நினைத்து 
வழிபட நம்மை தயாரிக்க வேண்டிய தவக்காலத்தின் ஆரம்பத்தில் 

நமது உடலுக்கு ஏற்பட்ட நிலையை நினைவு கூறுவதற்காகவே சாம்பல் புதனை நேற்று கொண்டாடினோம்.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக நாம் செய்ய வேண்டிய தவ முயற்சிகளை சாம்பல் குறிக்கிறது.

உயிர்ப்பு விழாவிற்கு முந்திய 40 நாட்கள் மட்டுமல்ல, நமது வாழ்நாளெல்லாம் நமக்குத் தவக்காலம் தான்.

இயேசு உலகுக்கு வந்து பாடுகள் பட்டு மரித்து உயிர்த்தது

நாமும் அவரைப் போலபாடுகள் பட்டு மரித்து 

இறுதி நாளில் உயிர்த்து 

அவரோடு விண்ணக வாழ்வில் ஐக்கியமாக வேண்டும் என்பதற்காகத்தான்.

நமது செப, தவ, தர்ம முயற்சிகளால் பயன்பெற போவது நாம் தான், இயேசு அல்ல.

இயேசு சர்வ வல்லப கடவுள்.

நித்திய காலமாக தனது பண்புகளில் பரிபூரணமாக இருப்பவர்.

அவருக்கு நம்முடைய உதவிகள் எதுவும் தேவையில்லை.

அவரால் படைக்கப்பட்ட நமக்கு தான் அவருடைய அருள் உதவி தேவைப்படுகிறது.

அவரோடு நாம் ஐக்கியமாகி நித்திய பேரின்ப வாழ்வு வாழ நமக்கு அவரது உதவி ஒவ்வொரு வினாடியும் தேவைப்படுகிறது.

அதற்காகத்தான் அவரை நோக்கி செபிக்கிறோம்.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தவம் செய்கிறோம்.

அவரது கட்டளைப்படி நமது அயலானோடு நம்மிடம் உள்ளவற்றைப் பகிர்ந்து கொள்கிறோம்.

எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக செபிக்கிறோமோ, தவம் செய்கிறோமோ, தர்மம் செய்கிரோமோ

அவ்வளவுக்கவ்வளவு நமது நித்திய பேரின்பத்தின் அளவு அதிகமாக இருக்கும்.

நமது நித்திய பேரின்பத்தின் அளவு அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக 

நாம் செபம், தவம், தர்மம் செய்தால் அதில் சுயநலம் அல்லவா இருக்கிறது 

என்று நண்பர் கூறுகிறார்.

ஒரு முக்கியமான மறையுண்மையை நினைவில் வைத்துக் கொண்டு சிந்தித்தால் உண்மை புரியும்.

கடவுள் நம்மை அவரது சாயலில் படைத்தார்.

அவரது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

அவற்றில் மிக முக்கியமான பண்பு அன்பு.

கடவுள் அன்பு மயமானவர்.

நித்திய காலமாக வாழும் தந்தைக்கும், அவர் நித்திய காலமாக பெறும் மகனுக்கும் இடையே நித்திய காலமாக நிலவும் அன்பு தான் பரிசுத்த ஆவி.

தந்தை, மகன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்று ஆட்களும் ஒருவருள் ஒருவராக வாழ்வதோடு

 ஒருவரையொருவர் நித்திய காலமாக அளவில்லாத விதமாய் நேசிக்கிறார்கள்.

மூவருக்குள்ளும் நிலவுவது ஒரே அன்பு, ஆகவே மூவரும் ஒரே கடவுள்.

கடவுள் தன்னைத் தானே நேசிப்பது போலவே அவரால் படைக்கப்பட்ட நம்மையும் அளவு கடந்த விதமாய் நேசிக்கிறார்.

அவர் நமக்குக் கொடுத்துள்ள இரண்டு கட்டளைகளில் இரண்டாவது கட்டளை,

நீ உன்னை நேசிப்பது போல உன்னுடைய அயலானையும் நேசி.

நம்மை நாம் நேசிக்காவிட்டால் நமது அயலானை எப்படி நேசிக்க முடியும்?

நம்மை நாம் நேசிப்பது நமது பிறரன்புக்கு அடிப்படை.

ஆகவே நம்மை நாமே நேசிப்பதில் சுயநலம் மட்டுமல்ல பிற நலமும் கலந்திருக்கிறது.

சுய அன்பும், பிறரன்பும் சேர்ந்தவர்கள் தான் நாம்.

நாம் இறைவனை நேசித்தால் நம்மையும் நேசிப்போம் பிறனையும் நேசிப்போம்.

தன்னைத் தானே நேசிக்கும் கடவுள் அதே நேசத்தோடு நம்மையும் நேசிக்கிறார்.

பரிபூரண அன்புடன் நித்திய காலம் வாழும் கடவுள் நமக்காக மனிதனாகப் பிறந்தார்.

நாம் அவரோடு நித்தியகாலம் பேரின்ப வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகப் பிறந்தார்.

அவரது சாயலில் படைக்கப்பட்ட நாம் அவருக்காக வாழ வேண்டும்.

அவருக்காக வாழும்போது நமக்காகவும் வாழ்கிறோம்.

எப்படி சுய அன்பையும் பிறரன்பையும் பிரிக்க முடியாதோ 

அப்படியே நமது அன்பையும் இறை அன்பையும் பிரிக்க முடியாது.

இறையன்போடு நமது அன்பு ஐக்கியமாவது தான் மோட்சம்.

ஆகவே நாம் நமக்காக,
 நாம் மோட்சத்திற்குப் போக வேண்டும் என்பதற்காக வாழ்வதில் சுயநலம் இல்லை.

 ஏனெனில் நாம் இறைவனது விருப்பத்தைத் தான் நிறைவேற்றுகிறோம்.

கணவன் மனைவிக்காக வாழ்கிறான், மனைவி கணவனுக்காக வாழ்கிறாள்,

இருவர் அன்பிலும் சுயநலம் இல்லை.

ஏனெனில் அவர்கள் ஒருவரோடொருவர் ஐக்கியமாக வாழ்கிறார்கள்.

இயேசு மணவாளன், அவரது திருச்சபை (நாம்)மணவாட்டி.

இருவரும் ஒரே உடல், ஒரே உயிர்.

இயேசு நமக்காக வாழ்கிறார்,
நாம் இயேசுவுக்காக வாழ்கிறோம்,

நாம் அவரது விருப்பப்படி  அவரோடு ஐக்கியமாவதற்காக வாழ்வதில் சுயநலம் இல்லை.

எவ்வளவுக்கு எவ்வளவு நாம் பரிசுத்தத்தனத்தில் வளர்கிறோமோ 

அவ்வளவுக்கு அவ்வளவு நாம் இயேசுவை மகிமைப்படுத்துகிறோம்.


எவ்வளவுக்கு எவ்வளவு நாம் பிறரன்பில் வளர்கிறோமோ

அவ்வளவுக்கு அவ்வளவு நாம் இயேசுவை மகிமைப்படுத்துகிறோம்.

நமது தெருவுக்கு தண்ணீர் லாரி வந்திருக்கிறது.

ஒவ்வொருவரும் ஒரு குடம் தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம் என்று தண்ணீர் கொண்டு வருபவர் சொன்னால்

நாம் எப்படிப்பட்ட குடத்தை எடுத்துச் செல்வோம்?

எவ்வளவுக்கு எவ்வளவு நமது குடம் பெரியதாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு அதிகமாகத் தண்ணீர் கிடைக்கும்.


 நமது உள்ளத்தில் இறைவனிடமிருந்து எவ்வளவு அருளை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்று இறைவன் சொல்கிறார்.

நாம் நமது உள்ளத்தை 
பெரியதாக்கிக்கொண்டு இறைவனிடம் செல்வோம்.

 நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக செபம், தவம், தர்மம் செய்கிறோமோ

அவ்வளவுக்கு அவ்வளவு நமது உள்ளம் பெரியதாகும்.

ஆகவே வருகின்ற நாற்பது நாட்கள் மட்டுமல்ல, 

நமது வாழ்நாள் முழுவதும் எவ்வளவு அதிகமாக செபம், தவம், தர்மம் செய்ய முடியுமோ அவ்வளவு அதிகமாகச் செய்வோம்.

விண்ணகத்தில் நமது பேரின்பமும் அவ்வளவு பெரியதாக இருக்கும்.

 நமது ஒவ்வொரு செயலையும் இறைவனின் மகிமைக்காக செய்வதே செபம்.

நமது ஆசைகளை ஒறுத்து, அயலானின் ஆசைகளை நிறைவேற்றுவதே தவமும், தர்மமும்.

ஒவ்வொரு வினாடியும் செபம் செய்வோம்.

ஒவ்வொரு வினாடியும் தவம் செய்வோம்.

ஒவ்வொரு வினாடியும் தர்மம்
 செய்வோம்.

நமது உடல் மண்ணுக்குள் போனால் போகட்டும், ஆன்மா விண்ணுக்குள் போகும்.

லூர்து செல்வம்.