Tuesday, August 10, 2021

கடவுளால் செய்ய முடியாதவை.(தொடர்ச்சி)

கடவுளால் செய்ய முடியாதவை.
(தொடர்ச்சி)



"நினிவே நகரம் தனது பாவங்களுக்காக அழிக்கப்படும் என்று கடவுள் யோனாஸ் தீர்க்கதரிசி மூலமாக அந்நகர மக்களுக்கு அறிவிக்கிறார்.

தீர்க்கதரிசியின் அறிவிப்பைக் கேட்ட  நினிவே நகர மக்கள் உடனே பாவங்களுக்காக மனஸ்தாப படுகிறார்கள்.


மக்களின்  மனஸ்தாபத்தைக் கண்ட கடவுள் தீர்க்கதரிசி வழியாக சொல்லி அனுப்பியதைச் செய்யாமல் நினிவே நகரைக் காப்பாற்றி விடுகிறார்.


( அவர்களுக்குச் செய்யப் போவதாகச் சொல்லியிருந்த தீங்கைக் குறித்துக் கடவுள் தம் மனத்தை மாற்றிக் கொண்டு, அதைச் செய்யாமல் விட்டார்.")
(யோனாஸ். 3:10)

"கடவுள் தம் மனத்தை மாற்றிக் கொண்டு, அதைச் செய்யாமல் விட்டார்"

என்று பைபிளே சொல்கிறது.

பைபிள் சொல்வதை நான் சொல்லக் கூடாதா?"

", முதலில் நாம் கூறும் ஒப்புமையைக் கேள்.

அதற்குப் பிறகு அடுத்த கேள்வியைக் கேள்.

ஒரு மாணவன் ஹாஸ்டலில் தங்கி கல்லூரியில் படிக்கிறான்.

ஆனால் அவன் அடிக்கடி கல்லூரியைக் கட் அடித்து விட்டு சினிமாவிற்கு போனதால் ஒழுங்காக படிக்கவில்லை.

விஷயமறிந்த தந்தை,

"நீ கல்லூரியை கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு போவதால் அடுத்த Term முதல் உனது  கல்லூரி படிப்பு கட் ஆகிறது."

என்று ஒரு நண்பர் மூலம் பையனுக்குச் சொல்லிவிடுகிறார்.

தந்தையின் முடிவை கேட்ட மகன், மனம் மாறி,  சினிமாவுக்கு போவதை நிறுத்திவிட்டு ஒழுங்காக படிக்க ஆரம்பிக்கிறான்.

Term முடிவில் வீட்டுக்கு விடுமுறைக்கு வந்தபோது தனது தவறுக்காகத் தந்தையிடம் மன்னிப்பு வேண்டுகிறான்.

மகனை படிப்பிலிருந்து நிறுத்துவதற்காக நண்பர் மூலம் தந்தை செய்தி அனுப்ப வில்லை.

அப்படி பயம் காட்டினால் மகன் திருந்திவிடுவான் என்ற உறுதியான நம்பிக்கையோடுதான் நண்பர் மூலம் செய்தி அனுப்பி இருந்தார்.

இந்தக் கோணத்தில் நினிவே நிகழ்ச்சியை நினைத்துப் பார்.

நினிவே  நகரைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் கடவுளின் நித்திய திட்டம்.

யோனாசை அனுப்பினால் நினிவே திருந்தி விடும் என்பது கடவுளுக்கு நித்திய காலமாகவே தெரியும். 

நினிவே நகரை மனம் திருப்பவே அவர் யோனாஸ் தீர்க்கத்தரிசியைப் பயன்படுத்துகிறார்.

நினிவே நகரை அழிக்காமல் விட்டது புதிய திட்டம் அல்ல, நித்திய கால திட்டம்.

ஆகவே கடவுள் மாறவில்லை.''


"நீங்கள் சொல்வது  புரிகிறது. ஆனாலும், பைபிள் சொல்வதை  அப்படியே   ஏற்றுக் கொள்ளக் கூடாதா?"

", பைபிள் என்றால் என்ன?"

"இறைவாக்கு. இறைவன் நமக்குச் சொல்லுகிற செய்தி."

",இறைவன் நமக்கு சொல்ல விரும்புகின்ற செய்தியை நமது மொழியிலுள்ள வார்த்தைகள் தாங்கி வருகின்றன.

 அதாவது வார்த்தைகள் வாகனம், இறைச்செய்தி அதில் பயணித்து நம்மிடம் வருகிறது.

 நமக்கு முக்கியம் வார்த்தைகளா? இறைச் செய்தியா?"

" நமக்கு முக்கியம் இறைச்செய்திதான்."

",அப்படியானால் வார்த்தைகள் கொண்டு வருகின்ற இறைச்செய்தி என்னவென்று புரிந்து கொள்ள வேண்டுமே  தவிர 

.வார்த்தைகளை மட்டும் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது.

இயேசு பெண்ணிடமிருந்து பிறந்தவர் தானே."

"ஆமா. அதிலென்ன சந்தேகம்?"

",எனக்கும் சந்தேகம் ஏதுமில்லை.
ஆனால் இயேசு,

"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பெண்களிடம் பிறந்தவர்களுள் அருளப்பருக்கு மேலானவர் யாருமில்லை" என்கிறார்.

அப்படியானால் அருளப்பர் இயேசுவை விட மேலானவரா?

வார்த்தைகள் அப்படித்தானே சொல்கின்றன."

"அதெப்படி? அருளப்பரின் பெருமையை அழுத்திச் சொல்வதற்காக ஆண்டவர் இப்படிச் சொன்னார்.

அதுகூட தாழ்ச்சியின் பெருமையை விளக்குவதற்காகத்தான் அப்படி சொன்னார்.

" ஆயினும் கடவுளுடைய அரசில் மிகச் சிறியவன் அவரினும் பெரியவன்."

முதலில் அருளப்பரின் பெருமையை அழுத்திச் சொல்லிவிட்டு,

தொடர்ந்து தாழ்ச்சி உள்ளவரின் பெருமையை அழுத்திச் சொல்கிறார்."

", உலகின் முடிவு நாளை பற்றிப் பேசும்போது ஆண்டவர்,

"அந்நாளோ நாழிகையோ ஒருவனுக்கும் தெரியாது: தந்தைக்குத் தெரியுமேயன்றி, வானதூதருக்கும் மகனுக்குங்கூடத் தெரியாது." (மத். 24:36)

என்று சொல்கிறார்.

தம திரித்துவத்தில் மூன்று ஆட்களுக்கும் ஒரே ஞானம் என்று சொல்கிறோம்.

ஆனால் ஆண்டவர் தந்தைக்கு தெரிவது மகனுக்குத் தெரியாது என்கிறார்.

அப்படியானால் தந்தையை விட மகன் குறைந்தவரா?"

"இல்லவே இல்லை.

'உலகம் அழியும் நாள் கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

 அதை வேறு யாருக்கும் சொல்லக்கூடாது.

 கடவுளாகிய நான் அதை யாரிடமும் சொல்ல மாட்டேன்.

 ஆகவே அதைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்.'

 என்ற பொருளில் அப்படிச் சொன்னார்.

அதிகாரப்பூர்வமாக மதிப்பெண்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்னால்

 எந்த மாணவனாவது ஆசிரியரிடம் சென்று,

"எனக்கு எத்தனை மார்க், சார்?"

 என்று கேட்டால் அவர் "எனக்குத் தெரியாது" என்றுதான் சொல்வார்."

'' ஒரே ஒரு கேள்வி கேட்கலாமா?"

",இது என்ன கேள்வி? எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேள்.  ஆனால் கேட்பதைத் தரமாட்டேன்."

"அது எனக்கும் தெரியும்.  கேள்வி கேட்டால் பதிலைத்தான் தருவீர்கள்.

இயேசு சொல்வதைச் செய்பவர்.

 'தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்ய ' என்று சொல்லியிருக்கிறார். 

 அப்படியானால் பாவம் செய்தவர்களுக்குத்தானே முதலில் மோட்சத்தைக் கொடுக்க வேண்டும்! 

ஏன் நரகத்துக்கு அனுப்புகிறார்?"

", இயேசு யாரையும் நரகத்திற்குள் தள்ளுவது இல்லை.

 பாவம் செய்பவர்கள்தான் தங்களுடைய முழு சுதந்திரத்தைப் பயன்படுத்தி 

இயேசுவை வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்கள்.

கடவுள் அவர்களுடைய சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை.
அதிலும் என்றென்றும் மாற்றமில்லை.

 இயேசு உடன் இல்லாமலிருப்பது தான்   நரகம்.

நரகத்தில் இருப்பவர்கள் இயேசுவைப் பிரிந்து இருக்கிறார்கள். 

ஆனால் இயேசுவின் அன்பு உறவில் எந்த மாற்றமும் இல்லை. கடவுள் என்றென்றும் மாறாதவர்.

கடவுள் அருகில் இருந்தும் அவரைப் பார்க்க முடியாதுதான் மிகப் பெரிய துன்பம்.

மோட்சத்தில்  நித்திய பேரின்பம்.
நரகத்தில் நித்திய பெருந்துன்பம்."

"உலகில் இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கையைவிட ஏற்றுக்கொள்ளாதவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் இருக்கும்.

அவர்களோடும் இயேசு இருக்கிறார்.

அவரால் அவர்களுக்கு என்ன நன்மை?"

",அவருடைய அளவுகடந்த இரக்கத்தினால்தான் அவர்கள் செய்கின்ற பாவங்கள் மத்தியிலும்  உலகில் உயிர் வாழ்கின்றார்கள்.

அவர்கள் மனம் மாறினால் அவர்களுக்கு நித்தியத்துக்கும் நல்லது.

மாறா விட்டாலும் இயேசு அவர்களைக் கட்டாயப்படுத்த மாட்டார்.

"படைக்கப்பட்ட அனைவரும்  இரட்சிக்கப்பட்டு விடுவார்களா?"

",இது கடவுளிடம் மட்டுமே  கேட்கப்பட வேண்டிய கேள்வி.

அவருக்கு மட்டுமே அனைத்தும் தெரியும்.

நாம் மோட்சத்துக்கு சென்றவுடன் கடவுளிடம் கேட்போம்.

 இப்போது நாம் மோட்சத்திற்கு போகும் முயற்சியில் இறங்குவோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment