Monday, August 16, 2021

கடவுளால் படைக்கப்பட்ட அனைவரையும் நேசிப்போம்.

கடவுளால் படைக்கப்பட்ட அனைவரையும் நேசிப்போம்.



"ஏங்க, நீங்க English வாத்தியார்தானே?"

",யார் சொன்னா? நான் தமிழ் வாத்தியார்."

".பொய் சொல்றீங்க."

", ஏண்டி, நான் பிறந்தது தமிழ் நாடு,
வளர்ந்தது தமிழ் நாடு, தாய் மொழி தமிழ். நான் எப்படிடி English வாத்தியாரா இருக்க முடியும்?"

"நீங்க பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்கு English பாடம் எடுக்கல?"

",English பாடம் எடுத்தா English  வாத்தியாரா? England ல பிறந்த வாத்தியார்தாண்டி English  வாத்தியார்.

நான் தமிழ் நாட்டில பிறந்தவன். ஆகவே தமிழ் வாத்தியார்தான்.

அதாவது,
ஆங்கில பாடம் நடத்தும் தமிழன்."

"ஒரு நாள் சாமியார் பிரசங்கத்தில் சொன்னார்:

ஞானஸ்நானம் பெற்றவர்களெல்லாம் கிறிஸ்தவர்கள் அல்ல.
 
கிறிஸ்துவை வாழ்பவர்கள்தான் கிறிஸ்தவர்கள்."

", ஏண்டி, திடீரென்று பிரசங்கத்துக்குத் தாவிட்ட!"

"நான் ஒண்ணும் தாவல. 

English பாடம் எடுத்தா English  வாத்தியாரா? என்று நீங்கள் சொன்னதைக் கேட்ட உடனே எனக்கு சாமியார் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.''

",உண்மையான கிறிஸ்தவன் யார்?"

"கிறிஸ்துவை வாழ்பவன்தான் உண்மையான கிறிஸ்தவன்."

", இந்த கேள்விக்குப் பதில் சொல்.

ஏன் கடவுள் மனிதனைத் தன் சாயலில் படைத்தார்?"

"தான் மனிதனில் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக."


", அதாவது,

ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப்  பார்க்கும்போது அவனில் கடவுளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக.

 ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நேசிக்கும்போது கடவுளை நேசிக்கிறோம் என்பதை உணர்வதற்காக.

யாரை வெறுத்தாலும் நாம் கடவுளையே வெறுக்கிறோம் என்பதை உணர்வதற்காக.

யாருக்கு என்ன செய்தாலும் அதை இறைவனுக்கே செய்கிறோம் என்பதை உணர்வதற்காக.

இயேசு அறிவுறுத்தியது போல ஒவ்வொருவரும் பரம தந்தையைப் போல நிறைவாக இருக்கவேண்டும் என்பதற்காக.

" வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."(மத். 5:48)

"இதன்படி பார்த்தால் எவனொருவன் இன்னொருவனிடம் கிறிஸ்துவை பார்க்கிறானோ அவனே
நல்ல கிறிஸ்தவன்."

",இன்னுமொரு படி மேலே போய் சிந்தித்தால்,

 ஒருவன் முதலில் தான் தன்னுடைய நடத்தையால் கிறிஸ்துவாக மாற வேண்டும்.

 தொடர்ந்து தனது ஒவ்வொரு அயலானிடமும் தன்னையே பார்க்க வேண்டும்.

 அதாவது தன்னில் வாழ்கின்ற கிறிஸ்து அவனிடமும் வாழ்வதைப் பார்க்க வேண்டும்.

 அதாவது கிறிஸ்துவையும் கிறிஸ்தவனையும் பிரிக்க முடியாது."

"இப்போது  ஒன்று புரிகிறது. நமது அயலானில் நம்மைப் பார்த்தால்தான்  நாம் நம்மை நேசிப்பது போல நம் அயலானையும் நேசிக்க முடியும்.

அது மட்டுமல்ல,  நம்மில் கிறிஸ்து இருந்தால்தான் நாம் உண்மையான அன்போடு அயலானை நேசிக்க முடியும்." 

",கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்களும் மற்றவர்களை நேசிக்கின்றார்கள் அது எப்படி?" 

" கடவுள் எல்லா மனிதர்களையும்,

 தன்னை மறுப்பவர்களையும்கூட,

 தன் சாயலில்தான் படைத்தார்.

 படைக்கும்போது அவர்களையும் அன்பு என்ற பண்போடுதான் படைத்தார்.

 அன்புதான் மனிதனுக்கு கடவுளின் சாயலைக் கொடுக்கிறது. 

 கடவுளை  ஏற்றுக் கொள்பவன்தான் அவர் தந்த அன்பை அவருக்காகப்  பயன்படுத்துகிறான்.

அவருக்காகப்  பயன்படுத்துபவன்தான்  அவர் தரும் நிலை வாழ்வுக்கு ஏற்றவன்."

",கடவுளை  ஏற்றுக் கொள்ளாதவன்.
அவர் தந்த அன்பை தன் சொந்த திருப்திக்காகப் பயன்படுத்துகிறான்.

தன் சொந்த திருப்திக்காகப் பயன்படுத்துகிறவன் அவர் தரும் நிலைவாழ்வுக்கு ஏற்றவன் அல்ல.

ஒரு ஒப்புமை.

அரசு நடந்தும் பள்ளியில்
 படித்து முடித்தவன் ,அரசு ஊழியம் செய்தால், அரசு தரும் சம்பளத்தைப் பெறுவான்.

சுயமாக ஏதாவது வேலை செய்தால் அரசு சம்பளம் தராது.

அதேபோல்தான்,   இறைவனுக்காக அயலானை நேசிப்பவன் இறையரசில் நுழைவான்.       

 சொந்த திருப்திக்காக நேசிப்பவனுக்கு 
அவனது திருப்திதான்  அரசு."

"ஒரு சின்ன சந்தேகம்.

 நாம் மற்றவர்களில் கடவுளின் கைவண்ணத்தைப் பார்க்க வேண்டும் என்பது உண்மைதான்.

 ஆனால் சாத்தானின் பிள்ளைகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்,

அதாவது,

 இறைவனுக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆட்களில் எப்படி இறைவனை காண்பது?"

",கடவுள் யாரையும் கெட்டவர்களாக படைப்பதில்லை.

சவுளிக்கடைக்குச் சென்று புதிதாக Dress எடுத்து வருகிறோம்.

புதிய dress ல். அழுக்கு ஏதும் இல்லை. ஆனால் அதைப் பயன்படுத்தும்போது அழுக்காகி விடுகிறது.

அழுக்கான dress ஐ என்ன செய்கிறோம்?"

"துவைத்து அழுக்கு நீக்கி பயன்படுத்துவோம்."

",அழுக்கு என்பதற்காக தூர போட மாட்டோமே!"

"அழுக்கு தான் நீக்கப்பட வேண்டியது. dress அல்ல."

",அதே போல் தான் மனிதன் கெட்டு விட்டாலும் நீக்கப்பட வேண்டியது கெட்ட குணம் மட்டும்தான். மனிதன் அல்ல.

  நமது அயலான் கெட்டவனாக இருந்தாலும் நாம் அவனை நேசிக்கத் தான் வேண்டும்.

கெட்ட குணத்தை நீக்க அவனுக்கு உதவ வேண்டும்.

எந்தச் காரணத்தை  முன்னிட்டும் அவனை வெறுக்கக் கூடாது,

 ஏனென்றால் அவன் கடவுளின் படைப்பு.

கடவுளின் படைப்பை நேசிக்காதவன் கடவுளையே நேசிக்கவில்லை.

கடவுளே பாவிகளாகிய நம்மை தேடித்தான் உலகிற்கு வந்தார்.

பாவிகளை தேடித்தான் அவரது சீடர்களை அனுப்பினார். நாமும் அவரது சீடர்கள்தான் என்பதை மறந்து விடக்கூடாது.

ஆகவே கடவுளால் படைக்கப்பட்ட அனைவரையும் நேசிப்போம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment