Tuesday, June 8, 2021

"விளக்கைக் கொளுத்தி மரக்காலின்கீழ் வைக்கமாட்டார்கள்:"(மத். 5:15)

"விளக்கைக் கொளுத்தி மரக்காலின்கீழ் வைக்கமாட்டார்கள்:"
(மத். 5:15)

மக்களை பார்த்து,

 "நானே உலகின் ஒளி:" 

என்று கூறிய இயேசு,

"உலகிற்கு ஒளி நீங்கள்."

என்றும் கூறுகிறார்.


 "நானே உலகின் ஒளி:"

என்று கூறிவிட்டு,

 "என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான். உயிரின் ஒளியைக் கொண்டிருப்பான்."

என்கிறார்.

"உலகிற்கு ஒளி நீங்கள்."

என்று கூறிவிட்டு,

"மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, வானகத்திலுள்ள உங்கள் தந்தையை மகிமைப்படுத்தும்படி, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்வதாக."
என்கிறார்.

இயேசு உயிர்த்த திருநாள் அன்று இரவு குருவானவர் புதிய நெருப்பை உண்டாக்கி அதைக்கொண்டு பாஸ்கா மெளுகுதிரியை ஏற்றுவார்.

அது இயேசுவே ஒளி என்பதற்கு அடையாளம்.

பாஸ்கா மெளுகுதிரியை ஏற்றிய பின் நாம் ஒவ்வொருவரும் அதிலிருந்து நமது மெழுகுதிரியை ஏற்றுவோம்.

அது கிறிஸ்துவின் ஒளி நம்மிடமும் வந்து விட்டது என்பதற்கு அடையாளம்.

ஒரு மெழுகு திரியிலிருந்து உலகில் உள்ள அத்தனை மெழுகுதிரிகளுக்கும் ஒளியை ஏற்றிக் கொள்ளலாம்.

இது ஒளியின் பண்பு.

ஒளி இருக்கும் இடத்தில் இருள் இருக்க முடியாது.

ஒளியில் நடப்பவன் சரியான வழியில் நடப்பான்.

இயேசுவாகிய ஒளியில் நடந்தால்தான் நமது ஆன்மிகப் பாதையில் சரியாக  நடந்து விண்ணகத்திற்குச் செல்வோம்.

இயேசுவின் ஒளியில் நாமும் ஒளி ஏற்றிகொண்டால்

நம்மிடம் ஒளிர்வதும் இயேசுவின் ஒளியே.

இயேசுவின் ஒளியோடு நாம் நடக்கும் பாதையில் நடப்பவர்களும் சரியான பாதையில் நடந்து விண்ணகம் அடைவார்கள்.

இயேசுவின் ஒளியை பெற்ற நாம் 
அது மற்றவர்கள் மேலும் படும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒளியை ஏற்றி அதை மரக்காலில் மூடி வைத்துவிட்டால் அது யாருக்கும் தெரியாது, அதனால் யாருக்கும் பயனில்லை.

"மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, வானகத்திலுள்ள உங்கள் தந்தையை மகிமைப்படுத்தும்படி, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்வதாக."

என்று இயேசு சொல்கிறார்.

மறு கிறிஸ்துவாக மாறுபவன் தான் கிறிஸ்தவன்.

கிறிஸ்துவின் ஒளி நம்மில் பிரகாசிக்கும் போது நம்மை பார்ப்பவர்கள் கிறிஸ்துவைப் பார்ப்பார்கள்.

நமது நற்செயல்களைப் பார்ப்பவர்கள் அவற்றில் கிறிஸ்துவின் செயல்களைப் பார்ப்பார்கள். 

நமது நற்செயல்களில் கிறிஸ்து பிரதிபலிக்கும்போது 

அவர் மகிமை படுத்தப் படுகிறார்.

கிறிஸ்து மகிமை படுத்தப்படும்போது வானகத் தந்தையும் மகிமைப் படுத்தப் படுகிறார்.

நாம் கிறிஸ்துவை இரண்டு வழிகளில் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.

நமது வாய்வழி வார்த்தைகள் வழியாக நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவித்து கிறிஸ்துவை அறிமுகப்படுத்தலாம்.

அல்லது 

நமது வாழ்க்கையின் வழியாக கிறிஸ்துவை அறிமுகப்படுத்தலாம்.

முதல் வழியை விட இரண்டாவது வழி அதிக சக்தி உள்ளது.

கிறிஸ்துவை வாய்வழியாக அறிவித்துவிட்டு அதன்படி நாம் நடக்காவிட்டால் நமது வார்த்தைகளுக்கு சக்தி இல்லை.

எப்படி வாழ வேண்டும்?

இயேசு எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு சொல்லி இருக்கிறாரோ அதேபோன்று வாழ வேண்டும


" நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன்: 

நீங்கள் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள். 

நான் உங்களுக்கு அன்புசெய்ததுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள்.

35 நீங்கள் ஒருவர் மீதொருவர் அன்புகொண்டிருந்தால் தான், நீங்கள் என் சீடர் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வார்கள்."

எல்லோரிடமும் அன்புடனும், இரக்கம், பரிவு, மன்னிப்பு, பொறுமை, நம்மை வெறுப்பவர்களையும் நேசித்தல், தீமைக்கு நன்மை செய்தல் போன்ற அதன் பண்புகளுடனும் வாழ்ந்தால்,

நமது எல்லாப் பண்புகளும் இயேசுவிடமிருந்து தான் வந்தன என்பதை நம்மோடு பழகுகிறவர்கள் அறிந்து கொள்வார்கள்.


குன்றின்மேல் வைக்கப்பட்ட ஒளி எல்லோருக்கும் ஒளி தருவது போல,

இயேசுவைப்போல் வாழ்பவர்கள் எல்லோருக்கும் இயேசுவை தருவார்கள்.

நாம் இயேசுவாக வாழ்ந்தால்தான் நம்மை பார்ப்பவர்கள் இயேசுவாக வாழ ஆசைப்படுவார்கள்.

இயேசுவாக வாழ்ந்தால்தான் நாமே விண்ணுலகம் செல்ல முடியும்.

இயேசுவாக வாழ்வோம்.

இயேசுவை உலகிற்குத் தருவோம்.

அனைவரும் விண்ணகம் செல்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment