Saturday, June 12, 2021

"பின்பு அவர் அவர்களோடு புறப்பட்டு நாசரேத்துக்கு வந்து அவர்களுக்குப் பணிந்திருந்தார்."(லூக்.2:51)

"பின்பு அவர் அவர்களோடு புறப்பட்டு நாசரேத்துக்கு வந்து அவர்களுக்குப் பணிந்திருந்தார்."
(லூக்.2:51)

 "பன்னிரண்டு வயதில் காணாமல்போன இயேசுவைக் கண்டு மாதாவும் சூசையப்பரும் துக்கமும் சந்தோஷமும் அடைந்ததைத் தியானிப்போமாக."

ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்லும் போது இயேசுவின் வாழ்வில் நடந்த இந்நிகழ்வை   தியானிக்கிறோம்.

நமது தியானத்திற்கு எழுத்து வடிவம் கொடுத்துப் பார்ப்போம்.

இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது நடக்கும்போது திருவிழாவின் முறைப்படி திருக்குடும்பத்தினர் யெருசலேமுக்குச் சென்றனர்.

"ஏண்டா கோவிலுக்கே வர மாட்டேன் என்கிறாய்." என்று ஒரு நண்பனிடம் கேட்கும்போது அவன் சொல்கிறான், 

. "கோவிலில் மட்டுமா கடவுள் இருக்கிறார்? அவர் எங்கும் இருக்கிறார். எனக்குள்ளும் இருக்கிறார். ஆகவே நான் எங்கு இருந்தாலும் அங்கிருந்து கடவுளை வழிபடுவேன்."


திருவிழாவின்போது கோவிலுக்குச் சென்ற இயேசுவைப் பார்த்து,

"ஆண்டவரே, நீர் கடவுள். எங்கும் இருக்கிறீர். எதற்காக திருவிழா சமயத்தில் நாசரேத்து ஊரிலிருந்து யெருசலேமில் உள்ள கோவிலுக்கு செல்கிறீர்?  நீர் இருக்கும் இடம்தானே கோவில்!" என்று கேட்டால், அவர் என்ன சொல்லுவார்?

"தம்பி, கடவுளாகிய நான் மனிதனாக யூத குலத்தில், யூத சமயத்தில் பிறந்திருக்கிறேன்.

நான் பிறந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும் உனக்காக, நீ செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காகப் பிறந்திருக்கிறேன்.

நான் யூத சமயத்தில் பிறந்திருப்பதால் சமய   ஒழுங்குப் படி நான் திருவிழாவிற்கு கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

மத ஒழுங்குப் படி ஒவ்வொரு மனிதனும் நடக்க வேண்டும்.

அதில் நான் உனக்கு முன்மாதிரிகளாக இருக்க வேண்டாமா?

நான் கடவுள் என்று எனது அம்மாவுக்கு தெரியும்.

ஆனாலும் நான் குழந்தையாய் இருக்கும்போது என்னை எனக்கே  ஒப்புக்கொடுக்க என்னை கோவிலுக்கு எடுத்துச் சென்றது உனக்குத் தெரியாதா?"

என்றுதான் சொல்லுவார்.

அதே இயேசுவின் சீடர்களாகிய நாம் அவருடைய திருச்சபையின் ஒழுங்குகளின்படி நடக்க வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொள்வோம்.

திருநாட்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது சிறுவன் இயேசு யெருசலேமிலேயே தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.

எருசலேமில் தங்கி என்ன செய்து கொண்டிருந்தார்?


கோவிலில் அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்பதும், அவர்களை வினவுவதுமாய் இருந்தார்.

கோவிலில் இருந்தவர்கள்   அவர்களிடம்  கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்துக் கொண்டிருந்தார்கள்.

இயேசு அவர்கள் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்தது மட்டுமல்ல, அவரே கேள்விகள் கேட்டார்.

பன்னிரண்டு வயது சிறுவன். அவர் இறைமகன் என்று போதகர்களுக்குத் தெரியாது. 

ஆகவே பன்னிரண்டு வயது சிறுவனின் கேள்விகளில் இருக்கும் ஞானத்தைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

நாம் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்குச் செல்கிறோம்.

அன்று இறைவனுக்காக ஒதுக்கப்பட்ட நாள்.

என்றாவது திருப்பலி முடிந்த பின் சிறிது நேரம் கோவிலில் தங்கி, பூசையும், பிரசங்கமும் வைத்த பங்கு குருவிடம் நமது ஞான அறிவில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டிருக்கிறோமா?

தினமும் பைபிள்  வாசிக்கிறோம். நாம் வாசிக்கிற வசனங்களில் நமக்கு விளக்கம் தேவைப்படுகிற வசனங்கள் எதுவும் இருந்ததில்லையா?

விளக்கம் கேட்டால் அதைத் தர பங்கு குரு எப்போதும் தயார் நிலையில் இருக்கிறார். அவரைப்
 பயன்படுத்தியிருக்கிறோமா?

ஞாயிற்றுக்கிழமை திருப்பலி முடிந்தபின் ஞான உபதேசம் கற்க வேண்டும் என்று 
இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்.

திருநாட்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது ஒரு நாள் கழித்துதான் இயேசு தங்களோடு இல்லை என்பதை மாதாவும் சூசையப்பரும் கண்டுபிடித்தார்கள்.

இயேசுவை மூன்று நாள் தேடி இறுதியில் கோவிலில் அவர் இருப்பதைக் கண்டார்கள்.

நமது ஆன்மீக வாழ்விலும் கூட இது மாதிரியான அனுபவங்கள் ஏற்படுவது உண்டு.

இயேசு நமது உள்ளமாகிய கோவிலில்தான் இருப்பார்.

 வேண்டுமென்றே, 

நம்முடைய உண்மையான பக்தியையும், விடாமுயற்சியையும் சோதிப்பதற்காகவே,

நம்முடைய எண்ணங்களில் படாமல் இருப்பார்.

நம்முடைய செபங்கள் எதுவும் கேட்கப்படாதது மாதிரி தோன்றும். 

 ஆண்டவர் நம்மைக் கைவிட்டு விட்டது மாதிரி தோன்றும்.

இத்தகைய ஆன்மீக அனுபவத்தை "இருண்ட இரவு" என்று அழைப்பார்கள்.

அந்த ஆன்மீக இருட்டிலும் இயேசு  நம்மோடுதான் இருப்பார்.

அப்படிப்பட்ட சமயங்களில் நமது செப முயற்சிகளை கைவிடாமல் அவரை தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.

இறுதியில் எப்படியாவது அவரை காண்போம். நமது எல்லா   செபங்களுக்கும் மொத்தமாக சேர்த்து பலன் தருவார்.


இயேசுவை கண்டவுடன்
அவருடைய தாய் அவரைப் பார்த்து,

 " மகனே, ஏன் எங்களுக்கு இப்படிச் செய்துவிட்டாய் ? இதோ! உன் தந்தையும் நானும் உன்னை ஏக்கத்தோடு தேடிக்கொண்டிருந்தோமே! " என்றாள்.

அதற்கு அவர், "ஏன் என்னைத் தேடினீர்கள் ? என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்கவேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா ?" என்றார்.

 அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை.

மாதா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தன்னுள்ளத்தில் கொண்டிருந்தாள்."

நமக்கும் சில சமயங்களில் இறை வார்த்தைகளின் உண்மையான பொருள் புரிவதில்லை.

இயேசுவைப் பெற்ற தாய்க்கே அவர் சொன்னது விளங்கவில்லை எனும்போது, 

நமக்கு  விளங்காதிருப்பதில் அதிசயம் ஒன்றுமில்லை.

மாதா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தன்னுள்ளத்தில் கொண்டிருந்தது போல,

புரியாத இறை வார்த்தைகளையும் நமது மனதில்  நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

விசுவாச சத்தியங்கள் எல்லாம் நமது மனித புரிதலுக்கு அப்பாற்பட்டவை.

இயேசுவால் வெளிப்படுத்தப்பட்டவை  என்பதற்காக அவர் மேலுள்ள நம்பிக்கையில் அவற்றை நாம் விசுவசிக்கிறோம்.

நமது விசுவாசத்தில் உறுதியாய் இருக்க வேண்டும்.


பின்பு அவர் அவர்களோடு புறப்பட்டு நாசரேத்துக்கு வந்து அவர்களுக்குப் பணிந்திருந்தார்.

இயேசு உலகில் வாழ்ந்தது 33 ஆண்டுகள்.

இதில் நற்செய்தி பணிக்காக அவர் எடுத்துக் கொண்டது மூன்று ஆண்டுகள்.

பாடுகள் படவும், மரணம் அடையவும் அவர் எடுத்துக்கொண்டது ஒரு நாள்.
(வியாழன் இரவு, வெள்ளி பகல்)

இந்த ஒரு நாளுக்காகத் தான் அவர் 33 ஆண்டுகள் வாழ்ந்தார்.

இந்த 33 ஆண்டுகளில் நற்செய்திக்காக எடுத்துக் கொண்ட மூன்று ஆண்டுகள் போக

 மீதி 30 ஆண்டுகள் அவர் செய்த ஒரே வேலை தனது பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடந்ததுதான்!

சர்வலோகத்தையும் படைத்து ஆண்டு வரும் சர்வ வல்லப கடவுள் 30 ஆண்டுகள் கீழ்ப்படிந்து நடந்தது  அவரால் படைக்கப்பட்ட இரண்டு மனிதர்களுக்கு!

இதிலிருந்து கீழ்ப்படிதலின் மகத்துவம் என்னவென்று நமக்கு புரிகிறது.

எல்லா போதனைகளையும் 
தான் முன்மாதிரியாக சாதித்து காண்பித்தார்.

கீழ்ப்படிதலையும் சாதித்துவிட்டுதான் போதிக்கிறார்!

உலகில் எத்தனையோ சபைகள், அமைப்புகள் தோன்றி மாறிப் போயிருக்கின்றன அல்லது மறைந்து போயிருக்கின்றன.

இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட ஏக, அப்போஸ்தலிக்க, பரிசுத்த, கத்தோலிக்க திருச்சபை மட்டும்

 அது தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை விசுவாசத்தில் மாறாமல் வளர்ந்து கொண்டு வருகிறது என்றால்

 அதன் காரணம் அதன் அங்கத்தினர்கள் இயேசுவால் நியமிக்கப்பட்ட ஒரே தலைவருக்கு கீழ்ப்படிந்து வாழ்வதால்தான்!

கீழ்ப்படிய விருப்பமில்லாதவர்கள் சபையை விட்டு வெளியேறி விடுவார்கள்.

நமது ஆன்மீக வாழ்க்கைக்கு அடிப்படையே விசுவாசத்திற்கு அடுத்து கீழ்ப்படிதல் தான்.

கீழ்ப்படிதல் இருப்பதால்தான் தாய்த் திருச்சபை சொல்வதை தாழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறோம்.

திருச்சபையில் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வரும் துறவற சபைகள் கற்பு, தரித்திரம், கீழ்ப்படிதல் ஆகிய மூன்று வார்த்தைப்பாடுகள்  எடுத்து அவற்றிற்கு கட்டுப்பட்டு நடக்கிறார்கள். ஆன்மீக வாழ்வில் முன்னேறுகிறார்கள்.

திருக்குடும்பத்தைப் பாருங்கள்.

மூவரும் கற்புநெறி தவறாதவர்கள்.

ஏழைகள்.

கீழ்ப்படிதல் உள்ளவர்கள்.

தலைவராகிய சூசையப்பர் இறைவன் விருப்பத்தை இறைத்தூதர் மூலமாக அறியும்போது கேள்வி கேட்காமல் கீழ்ப்படிகிறார்.

மாதாவும் இயேசுவும் அவருக்கு கீழ்ப்படிந்து நடக்கிறார்கள்.

இயேசு இருவருக்கும் கீழ்ப்படிகிறார்.

திருக்குடும்பம்தான் உலகில் தோன்றிய முதல் துறவற சபை என்று கூறலாம்.

நமது ஆன்மீக வாழ்வில் தவறே செய்யாமல் சரியான பாதையில் நடக்க வேண்டுமென்றால் நமக்கு ஒரு ஆன்மீக குருவைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

அவரது சொற்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

பங்கு மக்களுக்கு பங்குக்குருதான் ஆன்மீக வழிகாட்டி.

உடல் நலத்தை பொறுத்தமட்டில் குடும்ப மருத்துவருடைய சொற்படி நடப்பது போல,

ஆன்மீக நலத்தை பொறுத்தமட்டில்
 பங்குக்குருவின் சொற்படி நடக்க வேண்டும்.


பன்னிரண்டு வயதில் காணாமல்போன இயேசுவைக் கண்டு மாதாவும் சூசையப்பரும் துக்கமும் சந்தோஷமும் அடைந்ததை ஒழுங்காக தியானித்தால்

திருக்குடும்பம் எப்போதும் நம்முடனே இருக்கும்.

இயேசு, மரி, சூசை துணை.

லூர்து அந்தோனி.

No comments:

Post a Comment