Sunday, January 31, 2021

இறைக் குடும்ப உறவு.(தொடர்ச்சி)

இறைக் குடும்ப உறவு.
(தொடர்ச்சி)


"இறந்தவர்களை உங்களால் பார்க்க முடியாது.

உங்களோடு பேச அவர்களுக்கு வாய் இல்லை.

நீங்கள் அவர்களோடு பேசுவது போல் கற்பனை செய்து கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன்."

"நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் 
புனிதர்கள்களோடு நாங்கள் கொண்டிருக்கும் உறவு ஆன்மீக உறவு.

இரண்டு ஆன்மாக்கள் பேசுவதற்கு வாய் தேவை இல்லை. நமக்கு உள்ள புத்தி, மனது, இதயம் (உடல் இதயம் அல்ல) என்ற மூன்றும் ஆன்மாவை சேர்ந்தவை

புத்தி சிந்திக்கிறது. மனது சிந்தனைகளை சேமித்து வைக்கிறது. இதயம் நேசிக்கிறது.

உத்தரிக்கிற நிலையில் அல்லது விண்ணகத்தில் இருக்கிற நமது உறவினரோடு

 நமது மனது மூலமாக எண்ணங்களை பரிமாறிக் கொள்ளலாம்.

எண்ணங்களை பரிமாற வேண்டுமென்ற நோக்கத்தோடு நினைத்தாலே நமது எண்ணங்கள் அவருடைய மனதுக்கு மாற்றப்படும்.

நாம் இறைவனோடு ஜெபிப்பதும் இதே முறையில் தான்.

இறைவனுக்கு நாம் சொல்லாமலேயே நமது மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியும்.

ஆனாலும் நாம் நமது எண்ணங்களை இறைவனிடம் தெரிவிக்க நமது மனதைத்தான் பயன்படுத்த வேண்டும்.

அதனால்தான் ஜெபம் உள்ளத்தில் இருந்து வர வேண்டும் என்று சொல்லுகிறோம்.

உள்ளத்தில் வேறு எதையாவது நினைத்துக் கொண்டு வாய் வழியாக எதைச் சொன்னாலும் அது ஜெபம் ஆகாது.

புனிதர்களை நோக்கி நாம் ஜெபிக்க வேண்டும் என்றாலும் நமது உள்ளத்தை அவர்களது உள்ளத்தோடு இணைத்து நமது எண்ணங்களை பரிமாறிக் கொள்ள வேண்டும்.

இந்த முறையில் தான் வார்த்தைகளே இல்லாத தியானமும் செபமாக மாறுகிறது. 

விண்ணகத்தில் உள்ளவர்களோடு நமது கருத்துக்களை நம்முடைய மனது மூலமாகத்தான் பரிமாறிக் கொள்கிறோம்.

புரிந்துகொள்ள மனது உள்ளவர்களுக்கு இது புரியும்."

"இப்போது நாம் இருவரும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்கிறோம்.

நான் உங்களிடம் பேசும்போது நீங்கள் நான் சொல்வதை கவனித்துக் கொண்டிருந்தால் இன்னொருவர் உங்களோடு பேச முடியாது.

அதாவது ஒரு நேரத்தில் ஒருவரோடு ஒருவர் மட்டும்தான் பேச முடியும்.

ஆனால் உலகிலுள்ள அத்தனை பேரும் ஒரே நேரத்தில் அன்னை மரியாளிடம் ஜெபிக்கும்போது அவர்களால் எப்படி அத்தனை பேருடைய ஜெபங்களையும் கவனிக்க முடியும்?"

"இதை புரிந்துகொள்ள சில அடிப்படை உண்மைகள் தெரிந்திருக்க வேண்டும்.

உலகில் நாம் இடத்தில் (space,) 
காலத்தில் (time) வாழ்கிறோம்.

ஒரு பொருள் இருக்கும் இடத்தில் இன்னொரு பொருள் இருக்க முடியாது. 

ஒரு நேரத்தில் ஒரு இடத்தில்தான் இருக்க முடியும்.
அதாவது ஒரே நேரத்தில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இருக்க முடியாது.

ஆனால் விண்ணகத்தில் இடமுமில்லை, காலமும் இல்லை.

விண்ணகம் ஒரு வாழ்க்கை நிலை. (State of life)


ஒரு ஊசி முனையில் கோடானுகோடி பங்கில் ஒரு பங்கு இடத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

விண்ணக வாசிகள் அனைவரும் இருப்பதற்கு அவ்வளவு இடம் கூட தேவையில்லை. இடமே தேவையில்லை.

காலம் இல்லாததால் நேர இடைவெளியும் கிடையாது,

ஆனாலும் அவர்களைப் பற்றி பேசும்போது நமது மனித அனுபவ அடிப்படையில் பேசினால்தான் நமக்குப் புரியும். ஆனால் மனித அனுபவம் அவர்களுக்கு பொருந்தாது.

மனித அனுபவத்தில் நாம் ஒருவரோடு பேச வேண்டும் என்றால் அவர் நமது அருகில் இருக்க வேண்டும்.

நமது அனுபவ அடிப்படையில் அன்னைமரியாளோடு அது நாம் பேசவேண்டும் என்றால் அன்னை நமக்கு அருகே இருக்க வேண்டும்.

நாம் பேச நினைக்கும் போது மரியாளின் மனது நமக்குள் இருக்கும்.

நாம் அன்னையோடு பேசும் அதே நேரத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு நபரும் பேச வேண்டுமென்றால் 

விண்ணக நிலையில் கால, இட இடைவெளியில் இல்லாததால் அன்னையின் மனது அங்கும் இருக்கும்.

எத்தனை பேர் பேசினாலும் அத்தனை பேர் மனதிலும் அன்னையின் மனது இருக்கும்.


அன்னையின் மனதிற்கு வந்த அத்தனை விண்ணப்பங்களும் இறைவனின் பாதத்தில் உடனே சமர்ப்பிக்கப்படும்.


இந்த விளக்கம் ஒவ்வொரு புனிதருக்கும் பொருந்தும்."

"கால இடைவெளி இல்லை என்பதை கொஞ்சம் புரியும்படியாக சொல்லுங்களேன்."

"நல்ல கள்ளன் விண்ணகம் போய் எத்தனை ஆண்டுகள் இருக்கும்?"

"1,988 ஆண்டுகள் ஆகின்றன."

"இப்போது நீங்கள் மோட்சத்திற்கு போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்."

"ஹலோ! என் மேல உங்களுக்கு என்ன கோபம்?"

" மோட்சத்திற்கு போகிறீர்கள்
என்றுதானே சொன்னேன்."

"சரி, விளக்குங்கள்."

"உலக கணக்குப்படி 1,988 ஆண்டுகள் கழித்து போயிருந்தாலும் நித்திய கணக்கு படி நல்ல கள்ளன் கூட தான் போயிருப்பீர்கள்.

 இருவருக்கு மத்தியிலும் ஒரு வினாடி கூட இடைவெளி இல்லை."

"நான் நம்ப மாட்டேன்."

"அது உங்கள் இஷ்டம். கடவுள் காலங்களுக்கு அப்பாற்பட்டவர்.

நாம் காலத்தில் வாழ்பவர்கள்.
காலத்திற்கு துவக்கமும் உண்டு, முடிவும் உண்டு.

கடவுள் நித்தியத்தில் வாழ்பவர்.

நித்தியத்திற்கு துவக்கமும் இல்லை. முடிவும் இல்லை.

நமக்கு புரியும்படியாக சொல்வதானால் அவர் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்பவர்.

கடவுள் மோயீசனுக்குத் தன்னை அறிமுகப்படுத்தும்போது

"இருக்கிறவர் நாமே." (யாத். 3:14)

என்றுதான் கூறினார்.

நமது கால கணக்குப்படி ஒரு கோடி ஆண்டுகளுக்கு பின்னால் நடக்கப்போகும்  நிகழ்ச்சிகளும்,

 ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளும் கடவுள் மனதில் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன.

கி.மு. நூறுகோடிக்கும்,
கி.பி.நூறுகோடிக்கும் இடையில் ஒரு வினாடி கூட இடைவெளி இல்லை.

காலத்தை ஒரு கோட்டிற்கு ஒப்பிட்டால் நித்தியத்தை ஒரு புள்ளிக்கு ஒப்பிடுவார்கள்."

"சொல்வது புரிகிறது. சொல்லப்படுவதுதான் புரியவில்லை.

பரவாயில்லை. அடுத்த கேள்வி.

கடவுள் மாறாதவர் தானே!"

" ஆமா. கடவுள் மாறாதவர்."

"நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நித்திய திட்டம் (Eternal plan) வைத்திருப்பார் அல்லவா?"

"ஆமா."

"மாறாத கடவுள் புனிதர்களின் பரிந்துரையை கேட்டு எப்படி தன் திட்டத்தை மாற்றுவார்?

மாற்றவே மாட்டாரென்றால் புனிதர்கள் பரிந்துரைத்து என்ன பயன்?"


"நாம் திட்டங்கள் தீட்டுவதற்கும் கடவுள் திட்டம் போடுவதற்கும். பார தூர வித்தியாசம் உள்ளது. 

மாதத்திற்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.

 மாத சம்பளம் எவ்வளவு என்று நமக்கு தெரியும்.

 என்ன செலவுகள் மாதத்தில் இருக்கும் என்பதை அனுமானித்து

 அதன் அடிப்படையில் வரவு, செலவு சேமிப்பு திட்டம் தயாரித்து வைத்திருப்போம்.

 16ஆம் தேதி செலவு எதிர்பாராத செலவு ஒன்று வந்து நமது சேமிப்பை சாப்பிட்டு விடும்.

ஆனால் இறைவன் சர்வ ஞானம் உள்ளவர். 

காலங்களுக்கு முன்னரே, நித்திய காலமாக 

எப்பெப்போ என்ன நடக்கும்,

தங்கள் சுதந்தரத்தைப் பயன்படுத்தி
 யார் யார் எப்படி எப்படி செயல்படுவார்கள்,

யார் யார் என்னென்ன உதவி கேட்டு ஜெபிப்பார்கள்,

 என்றெல்லாம் அவருக்கு நித்திய காலமாகவே தெரியும்.

  யார் யாருடைய ஜெபத்தை எந்த அளவு நிறைவேற்ற வேண்டும்

 யார் யாருடைய ஜெபத்தை, அவர்களின் நலன் கருதி, நிறைவேற்றக் கூடாது

 என்று நித்திய காலமாகவே திட்டமிட்டு விடுவார்.

  இன்றைய ஜெபத்திற்கான பதில் நித்திய காலமாகவே இறைவனிடம் தயாராக இருக்கிறது.

ஆதாம் ஏவாளுடைய பாவம் காலத்தில் நடந்தது.

அவர்கள் பாவம் செய்வார்கள் என்று நித்தியமாகவே இறைவனுக்குத் தெரியும்.

ஆகவேதான் மீட்பரை அனுப்புவதற்காக திட்டமும் நித்திய காலமும் தயாராக இருந்தது.

(நான் எழுதுவது காலத்தில், ஆகவேதான் வினைச்சொல்லை இறந்த காலத்தில் போட்டிருக்கிறேன்.

 உண்மையில் இறைவனுக்கு இறந்தகாலம், எதிர்காலம் எதுவும் கிடையாது.

நிகழ்காலம் என்ற வார்த்தை கூட காலத்தை சேர்ந்தது. நித்தியத்திற்கு பொருந்தாது. ஆனாலும் நமக்கு அந்த வார்த்தையை விட்டால் வேறு வார்த்தை கிடையாது. ஆகவே தான் இறைவன் நிகழ்காலத்தில் செயல்படுகிறார் என்கிறோம்.)

ஒருவன் பல ஆண்டுகள் பாவ வாழ்க்கை வாழ்ந்து விட்டு இன்று பாவசங்கீர்த்தனம் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

இன்று குருவானவர் கொடுக்கும் பாவ மன்னிப்பு இறைவனிடம் நித்திய காலமாகவே தயாராக இருக்கிறது.

இறைவன் தனது முன்னறிவைப் பயன்படுத்தி நித்திய காலமாக திட்டமிடுவதால் அவர் மாறுவது இல்லை."

"நாங்கள் இறைவனிடம் நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கிறோம். 

புனிதர்களைத்
 தேடுவதில்லை, எங்கள் விண்ணப்பங்களை இறைவன் ஏற்கமாட்டாரா?" 

"ஏற்கமாட்டார் என்று சொன்னேனா?

விண்ணகத் தந்தையை நோக்கி ஜெபிக்க இயேசுவே கற்றுக் கொடுத்திருக்கிறார்.

இறை குடும்பத்தைச் சேர்ந்த அனைவரோடும் உறவு வைத்துக்கொள்ள ஆசைப் பட்டால் 

புனிதர்களோடும் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள். 

'அப்பாவிடம் மட்டும்தான் பேசுவேன். வேறு ஒருவர் கூடவும் பேச மாட்டேன்' என்று நீங்கள் சொன்னால் நான் என்ன செய்ய முடியும்?

நாங்கள் குடும்ப உறவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

 ஆகவேதான் புனிதர்களோடும் தொடர்பு வைத்திருக்கிறோம்."

லூர்து செல்வம்.

Saturday, January 30, 2021

இறைக் குடும்ப உறவு.

இறைக் குடும்ப உறவு.


"ஹலோ, சார், ஒரு நிமிஷம்."

"ம்...சொல்லுங்க."

"கால் உளைகிறது உட்காருங்கள்."

"உங்களுக்கு கால் உளைந்தால் நீங்கள்தான் உட்கார வேண்டும்."

"நின்று கொண்டே பேசினால் உங்களுக்கும் கால் உளையும்."

"ஹலோ! நான் 36 ஆண்டுகள் நின்றுகொண்டே பாடம் நடத்தியவன்."

"அது அப்போ! இப்போ நீங்கள் Retired! அங்க வார்த்தையிலேயே tiredஇருக்கிறது பார்த்தீர்களா!

நிறைய கேள்விகள் வைத்திருக்கிறேன் உங்களிடம் கேட்பதற்கு."

"சரி, உட்கார்ந்தாச்சு. கேளுங்க."

"நம்மைப் படைத்த கடவுளுக்கு நம்மைப் பற்றி எல்லாம் தெரியுமா. தெரியாதா?"

"தெரியும்."

"நமது தேவைகளைப் பற்றி?"

"தெரியும்."

"நம்மைக் கேளாமல்தானே நம்மைப் படைத்தார்?"

"ஆமா."

"நம்மைக் கேளாமல்தானே நமக்குத் தேவையானவற்றைத் தந்தார்?"

"ஆமா."

"இன்னும் தருவாரா? தரமாட்டாரா?"

"தருவார்."

"பிறகு ஏன் அவரிடம் அதைத் தாரும், இதைத் தாரும் என்று கேட்டு தொந்தரவு படுத்துகிறோம்?"

"என் பதில் இருக்கட்டும். நீங்கள் கடவுளிடம் கேட்கிறீர்களா? இல்லையா?"

"கேட்கிறேன்."

"ஏன் கேட்கிறீர்கள்?"

"சார் கேள்வி கேட்டது நான்."

"தெரியும், இப்போது கேட்பது நான். சொல்லுங்கள், நீங்கள் ஏன் கடவுளிடம் வேண்டியதைக் கேட்கிறீர்கள்?"

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று இயேசு தானே சொன்னார்.
 அதனால் தான் கேட்கிறேன்."

"உங்கள் கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டீர்கள் என்னை விடுங்கள். வேலை இருக்கிறது."

"ஏன் அப்படி சொன்னார் என்றுதான் கேட்கிறேன்."

"நீங்கள். ஒரு பெண்ணை நேசிக்கிறீர்கள்."

"ஹலோ அபத்தமாக ஏதாவது சொல்லாதீர்கள். எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்."

"நான் இல்லை என்று சொன்னேனா? பெண்ணை என்று தானே சொன்னேன். உங்கள் மனைவி ஒரு பெண் இல்லையா?"

"என் மனைவி மட்டுமல்ல அம்மாவும் ஒரு பெண்தான், மகளும் ஒரு பெண்தான், எல்லோரையும் நான் நேசிக்கிறேன். 

ரைட். சொல்லுங்க."

"நீங்கள் நேசிப்பவர்களிடமிருந்து என்ன எதிர்பார்ப்பீர்கள்?'

 "அவர்களும் என்னை நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேன்." 

"உங்களது மனைவி உங்களிடம் ஒரு நாள் பேசாமல் இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?"

 "கவலையா இருக்கும்."

" ஏன்?"

"நாம் நேசிப்பவர்கள் நம்மிடம் பேசாவிட்டால் எங்கே நமது உறவுக்குப் பங்கம் வந்துவிடுமோ என்று பயம் வரும்.

ஒரு நண்பனை
வழியில் சந்தித்தால் கூட,

 அவனிடம் பேச எதுவும் இல்லாவிட்டாலும், சும்மாவாவது

" எப்படி இருக்க? தூரமா போற?" என்று ஏதாவது பேசுவோம்."

"அப்போ உரையாடல் உறவை வளர்க்கும்."

"ஆமா."

"கடவுளுடன் நமக்குள்ள உறவு வளர வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?"

"அவரோடு நாம் பேசவேண்டும்."

"அப்போ உங்கள் கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரிகிறது.

 நேரம் போவதற்காக என்னை உட்கார வைத்து ஏதாவது கேட்க வேண்டும் என்பதற்காக கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் அப்படித்தானே?"

"அப்படி இல்லை.

 கடவுள் நம்மோடு பேசுகிறார், நாமும் அவரோடு பேச வேண்டும் என்று எனக்கு தெரியும்.

 ஆனால் நமக்கு என்ன வேண்டும் என்று அவருக்கு தெரிந்திருக்கும் போது

 ஏன் நம்மை பார்த்து

" எங்களுக்கு அன்றன்றுள்ள உணவை இன்று தாரும் என்று கேட்கச் சொன்னார்?

கேட்காதவர்களுக்கும் கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறார்!"

"குழந்தை ஏன் அம்மாவிடம் பால் கேட்டு அழுகிறது?"

"பசி."

"Suppose, ஒவ்வொரு முறையும் அது அழுமுன்னே நீங்களே அதற்கு வேண்டிய பாலை பாட்டில் மூலமாக கொடுத்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும்."

" குழந்தை என்னை மட்டும் தேடும். அம்மாவைத் தேடாது."

"குழந்தை மட்டுமல்ல பெரியவர்களாகிய நாமும் அப்படித்தான்.

 நாம் கடவுளிடம் கேட்க வேண்டிய அவசியமே ஏற்படாவிட்டால் காலப்போக்கில் நாம் கடவுளையே மறந்து விடுவோம்.

நீங்கள் சுவாசிப்பதற்கென்றே கடவுள் நிறைய பிராணவாயுவைப் படைத்து உலகத்தில் பரவ விட்டிருக்கிறார்.

 என்றாவது சுவாசிப்பதற்கு பிராணவாயு தந்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறி இருக்கிறீர்களா?"

"இல்லை." 

"Supposeசில நிமிடங்கள் பிராண வாயுவே இல்லாமல் போய்விட்டது என்று வைத்துக்கொள்வோம். என்ன செய்வீர்கள்?"

"'ஆண்டவரே காப்பாற்றும்' என்று அவரிடம்தான் கேட்போம்."

"Correct. உங்களுக்கு இப்போ புரிந்திருக்கும்

 நம்மை அவரிடம் உதவி கேட்கும் படியான சூழ்நிலையை அவர் உருவாக்குவது நாம் அவருடன் கொண்டுள்ள உறவை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான்.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவர் நம்மீது கொண்டுள்ள அன்பு தான்.

கடவுள் ஒவ்வொரு வினாடியும் நம்முடன் உறவுடன்தான் இருக்கிறார்.

நாம் கேளாமலேயே நமக்கு அவரால் தந்து கொண்டே இருக்க முடியும். 

தந்து கொண்டே இருக்கவும் செய்கிறார். 

ஆனாலும் சில சமயங்களில் நம்மிடம் தேவைகளை உருவாக்குவது 

நாம் அவரைத் தேடி போய்,

 அவரிடம் நமக்கு வேண்டியதைக் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான். 

நாம் கேட்பதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது அவர் நமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருப்பதற்காக அவருக்கு நன்றி கூற வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளைப் புகழவேண்டும், போற்றவேண்டும், ஆராதிக்க வேண்டும்."

"இவ்வளவு நேரமும் நீங்கள் சொன்னது சரிதான்.

ஆனால் கத்தோலிக்கர்கள் ஆகிய நீங்கள் வேண்டாத ஒன்றையும் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
'
 கடவுளோடு பேசுவது சரி, அவரிடம் நமக்கு வேண்டியதை கேட்பது சரி.

அவர் நம்மை தனக்காகத்தான் படைத்தார். இவ்வுலக வாழ்வு முடிந்ததும் நித்திய காலமும் அவரோடு தான் வாழ வேண்டும். ஆகவே அவருடன் நமது உறவை வளர்ப்பது சரி.

ஆனால் நம்மோடு வாழ்ந்து, மரித்த,

 நம்மைப் போன்றவர்களாகிய புனிதர்களோடு உறவை வளர்க்க பாடு படுகிறீர்களே, அதுதான் எதற்கு என்று எனக்கு புரியவில்லை."

"அங்கோடு சுற்றி, இங்கோடு சுற்றி
இங்கேதான் வருவீர்கள் என்று எனக்குத் தெரியும்.

நீங்கள் இவ்வளவு நேரம் போட்டது இதற்கான முன்னுரையைத்தான் என்று எனக்கு தெரியும். 

நானும் இதற்காகத்தான் காத்திருந்தேன்.

என்ன சொன்னீர்கள்?

'ஆனால் நம்மோடு வாழ்ந்து, மரித்த,
நம்மைப் போன்றவர்களாகிய புனிதர்களோடு ...'

நம்மோடு வாழ்ந்தவர்களை மரித்த உடன் மறந்துவிட வேண்டும் என்கிறீர்களா?"

"உலக ரீதியாக அவர்களை ஞாபகத்தில் வைத்திருக்கிறோம்,

 அவர்களுடைய வரலாற்றை கூட எழுதுகிறோம்,'

அவர்களைப் பற்றி பெருமையாக பேசுகிறோம்.

 அதெல்லாம் சரி. ஆன்மீக ரீதியாக நமக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு?"

"உங்களதுஅயலானை நீங்கள் நேசிப்பது உலக ரீதியாகவா ஆன்மீக ரீதியாகவா?"

"உங்கள் கேள்வி புரியவில்லை."

"புரியாது. ஏனெனில் உங்களுக்கு அது புரிய வேண்டும் என்று விருப்பம் இல்லை."

"யார் சொன்னது?"

"நான்தான் சொல்கிறேன். இங்கு உங்களோடு நான் மட்டும்தானே இருக்கிறேன்.

ஆரம்பத்திலேயே 'வேண்டாத ஒன்றை' என்று நீங்கள் பேச ஆரம்பிக்கும் போதே எனக்கு புரிந்து விட்டது 

நான் சொல்லப் போவது உங்களுக்கு புரியாது என்று.

புரிந்து கொள்ள ஆசை இருந்தால் தொடர்ந்து பேசுவோம்.

புரிய கூடாது என்ற தீர்மானத்தோடு பேசுபவர்களிடம் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை. வருகிறேன்."

"ஹலோ, உட்காருங்கள். கேள்வியை கொஞ்சம் மாற்றிக் கேளுங்கள்."

"நமது அயலானோடு நாம் கொண்டிருப்பது ஆன்மீக உறவா? உலகியல் உறவா?"
.

".இரண்டும் தான்."

"நாம் இப்போது பேசிக் கொண்டிருப்பது ஆன்மீகமா லெளகீகமா?"

"ஆன்மீகம்தான்."

"இறைவனோடு கொண்டுள்ள உறவு மட்டுமல்ல ,

அவரால் படைக்கப்பட்ட நமது அயலானோடு கொண்டுள்ள உறவும் ஆன்மீக உறவுதான்.

"உன்னை போல் உன் அயலானையும் நேசி," இந்த கட்டளையை கொடுத்தது உலகம் அல்ல. 

இறைவன். 

இது ஆன்மாக்களுக்கு இடையிலான உறவு,

 ஆகவே அயலாரை நேசிப்பது ஆன்மீக உறவு.

 ஆன்மா அழிவதில்லை, ஆகவே ஆன்மீக உறவும் அழியாது.

 இவ்வுலகில் மட்டுமல்ல மறுவுலகிலும் தொடரும்.

 ஒரு குடும்பத்தில் ஒரு நபர் வெளிநாட்டில் இருந்தாலும் அவர் குடும்பத்தினரே,

  விண்ணில் இருப்பவர்களும் மண்ணில் இருப்பவர்களும் ஒரே தந்தையின் பிள்ளைகளே.


இறைத் தந்தையின் குடும்பத்தை சேர்ந்தவர்களே.

வெளிநாட்டிலுள்ள உங்களது உறவினரோடு நீங்கள் உரையாடுவது இல்லை?

அதே போல்தான் நாம் விண்ணிலுள்ள நமது சகோதரர்களோடு உரையாடலாம்.

அவர்கள் நமது தந்தையிடம் நமக்காகப் பரிந்து பேசலாம்.

பரிந்து பேச முடியாது என்பவர்கள் இறைவனை தந்தையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம்.

பட்டப்பகலில் கண்ணை மூடிக்கொண்டு 'இருட்டி விட்டது' என்று கூறுபவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள்."

".ஏற்றுக்கொள்கிறேன். 
ஆனாலும்......."

(தொடரும்)

லூர்து செல்வம்

கிறிஸ்துவின் அன்பில் வளர்வோம்.

கிறிஸ்துவின் அன்பில் வளர்வோம்.



கிறிஸ்துவாக வாழாதவன்
 தன்னை கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொள்வதில் அர்த்தம் இல்லை.

கிறிஸ்துவாக வாழ்வது எப்படி?

"நீங்கள் ஒருவர் மீதொருவர் அன்புகொண்டிருந்தால் தான், நீங்கள் என் சீடர் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வார்கள்."
(அரு.13:35)

கிறிஸ்துவின் அன்பினால் இயங்கினால்தான் நாம் கிறிஸ்தவர்கள்.

கடவுள் = கிறிஸ்து = அன்பு.

அன்பே கடவுள்.
கிறிஸ்து கடவுள்.

ஆக நமது வாழ்வு கிறிஸ்துவினால் இயக்கப்பட்டால்தான் நாம் கிறிஸ்தவர்கள்.

அதாவது அன்பினால் இயக்கப்பட்டால்தான் நாம் கிறிஸ்தவர்கள்.

கிறிஸ்துவின் அன்பு எப்படிப்பட்டது?

கிறிஸ்துவின் அன்பு நிபந்தனைகள் அற்றது.

அன்பு செய்வது அவரது இயல்பு.

அவரால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

நித்திய காலமாக தன்னையே அன்பு செய்கிறார்.

 தன்னால் படைக்கப்பட்ட அனைவரையும் அன்பு செய்கிறார்.

அவரால் படைக்கப்பட்ட சம்மனசுக் களையும் மனிதர்களையும் அவர் நித்திய காலமாக அன்பு செய்கிறார்.

அவர் மாறாதவர், ஆகவே அவரது அன்பும் மாறாதது.

உதாரணத்திற்கு,

Lucifer என்ற சம்மனசை படைத்தவர் அவர் தான்.

Lucifer தான் தன்னை இறைவனுக்கு சமமாக நினைத்த அகம்பாவத்தினால் சாத்தானாக மாறினான்.

 Luciferமாறி இருக்கலாம். ஆனால் இறைவனின் அன்பு மாறவில்லை.


Lucifer ஐ எப்படி அன்பு செய்தாரோ அதே போல்தான் சாத்தானையும் அன்பு செய்கிறார்.

இறைவன் ஒளி மயமானவர்.

ஒளி மாறவில்லை.

ஆனால் சாத்தான் அந்த ஒளியை ஏற்றுக்கொள்ளவில்லை, ஆகவே தான் இருளாக இருக்கிறான்.

"அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரோனை உதிக்கச் செய்கிறார். நீதியுள்ளோர் மேலும் நீதியற்றோர் மேலும் மழை பொழியச் செய்கிறார்."
(மத்.5:45)

இறைவன் அவரை ஏற்றுக் கொள்ளும் நல்லவர்களையும்,

 ஏற்றுக்கொள்ளாத தீயவர்களையும் அன்பு செய்கிறார்.

நல்லவர்கள் அவரது அன்பை ஏற்றுக் கொள்வதால் பயன் அடைகிறார்கள்,

 தீயவர்கள் அவளது அன்பை ஏற்றுக் கொள்ள மறுப்பதால் பயன் அடைவதில்லை.

நாம் நல்லவர்களையும் கெட்டவர்களையும்,

 நமக்கு நன்மை செய்கின்றவர்களையும், தீமை செய்கின்றவர்களையும்,

 நம்மை நேசிக்கின்றவர்களையும், வெறுப்பவர்களையும்,

  ஒன்று போல் அன்பு செய்தால்தான் நாம் கிறிஸ்தவர்கள்.

"உங்கள் பகைவர்களுக்கு அன்புசெய்யுங்கள். உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
28 உங்களைச் சபிக்கிறவர்களுக்கு ஆசிகூறுங்கள். உங்களைத் தூற்றுவோருக்காகச் செபியுங்கள்."
(லூக்.6:27, 28)

"உங்களுக்கு அன்பு செய்பவர்களுக்கே நீங்கள் அன்பு செய்தால், அதனால் உங்களுக்கு என்ன பலன்? 
பாவிகளும் தமக்கு அன்பு செய்பவர்களுக்கு அன்பு செய்கின்றனரே."
(லூக்.6:32)

ஆக நிபந்தனை எதுவும் விதிக்காமல்

 சகோதரனை அன்பு செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அன்பு செய்ய வேண்டும். 

நாம் எப்படி அன்பு செய்ய வேண்டும் என்று நம் ஆண்டவர் கூறியிருக்கிறார்?

 "உன்னை நீ அன்பு செய்வது போல் உனது அயலானையும் அன்பு செய்."

 ஆக, நாமே நம்மை அன்பு செய்வது அன்பின் துவக்கம்.

 அதன்பின் அதே அன்பை மாற்றம் இல்லாமல் மற்றவர்கள் மேலும் செலுத்துவது.

Charity begins at home.

நம்மை நாமே அன்பு செய்யும்போதுதான் அன்பு என்றால் என்ன என்பது நமக்குத் தெரியும். எப்படி செய்ய வேண்டும் என்பதுவும் தெரியும்.

நமக்கு நாமே நல்லதை விரும்புவோமா?
தீயதை விரும்புவோமா?

அன்பு நன்மையைத்தான் விரும்பும்.

ஆகவே நம்மை நாம் அன்பு செய்வதுபோல் அயலானை அன்பு செய்தால் 

அயலானுக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்ற நோக்கோடுதான் செய்வோம்.

நம்மிடம் குற்றம் குறைகள் இருந்தாலும்

 மற்றவர்கள் அதை பொருட்படுத்தாது

 நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புவோம்.

அதேபோல்

மற்றவர்களிடம் குற்றம் குறைகள் இருந்தாலும்

  அவற்றைப் பொருட்படுத்தாது

 அவர்களை மன்னித்து நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வுலக வாழ்வின் இறுதியில் நாம் விண்ணகம் செல்ல வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம்.

அந்த ஆசையை நம்மோடு நிறுத்திக் கொள்ள கூடாது.

அனைவரும் இவ்வுலக வாழ்வின் இறுதியில் விண்ணகம் செல்ல வேண்டும் என்றுதான் நாம் ஆசைப்பட வேண்டும்.

அதுதான் உண்மையான அன்பு.

ஆசையை செயலாக்க வேண்டும்.

அதாவது மற்றவர்கள் விண்ணகம் செல்ல உதவியாக 

அவர்களுக்கு இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.

 அது நமது அன்பின்பாற்பட்ட கடமை.

நற்செய்தியை நமது வாழ்வின் மூலமும், வார்த்தையின் மூலமும், செயலின் மூலமும் அறிவிக்க வேண்டும்.

நாம் நல்லவர்களாக வாழ வேண்டும் என்பது நமக்காக மட்டுமல்ல

 நம்மை சார்ந்து இருப்பவர்கள் காகவும் சேர்த்துதான்.

நாம் நல்லவர்களாக வாழ்ந்தால்,

நம்மை சார்ந்து இருப்பவர்களும் நம்மை பின்பற்றியே நல்லவர்களாக வாழ்வார்கள்.


ஒரு நறுமணமுள்ள ரோஜா மலரை பீரோவில் உள்ள நமது ஆடைகளோடு வைத்தால்,  ரோஜாவின் மணம் நமது ஆடைகளையும் சேர்ந்துவிடும்.

நாம் அவற்றை அணிந்தால் நமது அருகில் இருப்பவர்களுக்கும் அந்த மணம் இலவசமாக கிடைக்கும்.

மனிதன்  ஒரு சமூகப் பிராணி.

தான் பெற்ற இன்பத்தை பிறரும் பெறவேண்டும் என்று ஆசைப்படுபவன்.

நாம் பெறப்போகும் மோட்ச இன்பத்தை மற்றவர்களும் அடைய வேண்டும் என்று ஆசைப்பட வேண்டாமா?

நாம் மற்றவர்களோடு பேசும்போது அரட்டை அடிப்பதற்குப் பதிலாக வாழ்க்கையின் விசுவாச அனுபவங்களை பகிர்ந்து 
கொள்ளலாமே!

விசுவாச அனுபவங்கள் மூலம் நமது விசுவாசத்தை பகிர்ந்து கொள்வதால் நமது விசுவாசத்தால் மற்றவர்களும் பயன் பெறுவார்கள்.

 அன்புச் செயல்கள்( good works) மூலமும் நாம் நற்செய்தியைப் பரப்பலாம்.

செயல் இல்லாத அன்பு செத்த அன்பு என்பார்கள்.

பசியாக உள்ளவன் அருகே அமர்ந்து,

"நான் உன்னை மிகவும் அன்பு செய்கிறேன்" 

என்று கூறிக்கொண்டே ,

அவனோடு பகிர்ந்து கொள்ளாமல் நாம் மட்டும் உணவைத் தனியாக உண்டு கொண்டே இருந்தால்.

 நமது செயல் அவனது மனதில் என்ன எதிர்வினைகளை ஏற்படுத்தும்?

உண்மையான அன்பு தன்னையும் பகிர்ந்து கொள்ளும், தனது உடமைகளையும் பகிர்ந்து கொள்ளும்.

இறைவன் தனது அன்பின் காரணமாக நம்மை படைக்கும்போது தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.


ஒரு கோடீஸ்வரன் தனது ஏழை நண்பர்களுடன் தன்னிடம் உள்ள விலை உயர்ந்த வசதிகளைப் பகிர்ந்து கொள்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஏனெனில் அவன் பெரிய பணக்காரன்.

ஆனால் அவன் தனது ஏழை நண்பனுடைய வசதிகள் இல்லாத கஷ்டங்கள் நிறைந்த வாழ்வில் பங்கெடுக்க ஆசைப்படுவது தான் அதிசயம்.

அதே போன்றது தான் சர்வ வல்லப கடவுள் தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டதோடு நில்லாமல்,

மனிதர்களாகிய நமது பண்புகளை தான் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டதும்.  

அவர் நித்தியர், துவக்கமும் முடிவும் இல்லாதவர். காலத்திற்கு அப்பாற்பட்டவர்.

நாம் காலத்தில் வாழ்கின்ற துவக்கமும் முடிவும் உள்ள மனிதர்கள்.

நமக்கு அவரது நித்திய வாழ்வில் பங்கு தருவதற்காக நமது அநித்திய வாழ்வில் அவர் பங்கெடுத்துக் கொண்டார்.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பாற்பட்டவர் 

நம்மை போல பிறந்து இறப்பதற்கு ஆசைப்பட்டு 

நம்மை போல மனிதனாக பிறந்து, காலத்தில் வாழ்ந்து, பிறந்த 33-வது வயதில் இறந்தார்.

 அவர் மனிதனாக பிறந்தாலும்

 கடவுள் மரியாளின் வயிற்றில் பிறந்தார், 

கடவுள் சிலுவையில் மரித்தார் என்றுதானே சொல்கிறோம்!

 பிறப்பும் இறப்பும் மனித சுபாவத்திற்கு உரியவை.

 ஆகவே பிறப்பதற்கும் இறப்பதற்குமென்றே கடவுள் மனித சுபாவத்தை ஏற்றுக் கொண்டாரே!

கடவுளால் வளர முடியாது, ஏனெனில் அவர் முழுமையானவர். முழுமைக்கு வளர்ச்சி கிடையாது.

நாம் குறைவானவர்கள். நமக்கு வளர்ச்சி உண்டு.

நம்மை போல வளர வேண்டும் என்று ஆசைப்பட்டது குறைவுள்ள மனித சுபாவத்தை ஏற்றுக்கொண்டாரே!

"இயேசு வளர வளர ஞானத்திலும் முதிர்ந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் மேன்மேலும் உகந்தவரானார்."
(லூக்.2:52)

கடவுள் கஷ்டப்பட முடியாது. கஷ்டங்கள் மனித சுபாவத்திற்கு உரியவை.

நம் மீது கொண்ட அன்பின் காரணமாக நம்மைப்போல கஷ்டப்பட வேண்டும் என்பதற்காகவே மனித சுபாவம் எடுத்தாரே!

கடவுள்தான் பூங்காவனத்தில் இரத்த வியர்வை வியர்த்தார்!

கடவுள்தான் கைது செய்யப்பட்டார்!

கடவுள்தான் பிலாத்துவினாலும் ஏரோதுவினாலும் அவமானப்படுத்தப்பட்டார்! 

கடவுள்தான் பாரமான சிலுவையை சுமந்தார்!

கடவுள்தான் சிலுவையில் அறையப்பட்டார்!

தேவசுபாவத்தில் கஷ்டப்பட முடியாத காரணத்தால் கஷ்டப்படுவதற்காகவே நம்மைப்போல் மனிதன் ஆனார்!

நம்மைப் போல் கஷ்டப்பட்டு சாக வேண்டும் என்று அவருக்கு என்ன அவசியம் வந்தது?

அவரது அன்பின் ஆழமும், வேகமும் அப்படி அவரை செய்ய செய்தது!


இதேபோன்ற அன்பினால் தான் நாம் நமது அயலானை அன்பு செய்ய வேண்டும்.


இயேசு நமக்காக   கஷ்டப்பட்டதுபோல் நாமும் நமது அயலானுக்காக கஷ்டப்பட தயாராக இருக்க வேண்டும்.

அன்னை தெரெசாவையும், Stan Swamy யையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.

கிறிஸ்துவின் அன்பில் வளர்வோம்.

லூர்து செல்வம்.

Thursday, January 28, 2021

*அறிவோம், வாழ்வோம்.*

 
       *அறிவோம், வாழ்வோம்.*


"ஹலோ! மிஸ்டர்! கோவிலுக்குப் போய்விட்டு வருகிறீர்களா?"

"ஆமா."

"கையில் பைபிள் இருக்க, அதுதான் கேட்டேன்."

"ஹலோ! என்னிடம் இருப்பது ஒரு பைபிள்தான்! அதை உங்ககிட்ட தந்துவிட்டு நான் எங்கே போவேன்!"

"மிஸ்டர்! நான் உங்க பைபிளைக் கேட்கல. கையில் பைபிள் இருக்கிறதினாலே கோவிலுக்குப் போய்விட்டு வருகிறீர்களான்னு கேட்டேன்."

"ஏன், பைபிள் இல்லாம கோயிலுக்குப் போகக் கூடாதா?"


" போகலாமே! கத்தோலிக்கர்கள் பைபிளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கேள்விப்பட்டேன். 

ஆகவேதான் உங்கள் கையில் பைபிளை பார்த்தவுடன் ஆச்சரியமாக இருந்தது."

"என்ன கேள்விப்பட்டீர்கள்?"

"பைபிளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று."

"உண்மைதான்."

"உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி."

"முழு பதிலையும் கேட்டால் அப்புறம் நன்றியை வாபஸ் பெற்றுக் கொள்வீர்கள்."

"அது என்ன முழு பதில்?"

"பைபிளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதை வாழ்வதற்கு அதிக கொடுக்கிறோம்."

"அப்போ நாங்கள் வாழவில்லையா?"

"நான் உங்களைப் பற்றி ஒன்றும் பேசவே இல்லையே! நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன். அவ்வளவுதான்."

"பைபிள் வாசிக்காமல் எப்படி அதன்படியே வாழ முடியும்?" 

"நான் வாசிக்க கூடாது என்று சொல்லவில்லையே. வாசிப்பதை விட வாழ்வுதான் முக்கியம் என்று சொன்னேன்.

சாப்பிடுவதை விட சாப்பிட்டது ஜீரணிப்பது தான் அதிக முக்கியம் என்று சொல்வது மாதிரி.

 ஜீரணிக்கும்படியாக சாப்பிட வேண்டும்.

அதேபோல் வாழும் படியாக பைபிளை வாசிக்க வேண்டும்."

"நாங்கள் வாசிக்கும் அளவிற்கு நீங்கள் வாசிப்பது இல்லை. அதுதான் உண்மை."

"உண்மைதான்."

"நாங்கள் பைபிளை cover to cover thorough ஆக வைத்திருக்கிறோம்.

எதைப்பற்றி கேட்டாலும் அது பைபிளில் எங்கே இருக்கிறது அல்லது இல்லை என்று உடனே சொல்லிவிடுவோம். உங்களால் முடியுமா?"

"முடியாது."

''முடியாது என்று சொல்வதற்கு வெட்கமா இல்லை?"

"உண்மையை ஒத்துக் கொள்வதற்கு எதுக்குங்க வெட்கம்?

இறுதிநாளில் கடவுளிடம் கணக்கு கொடுக்கும்போது 

அவர் என்னிடம் 

"எத்தனை முறை பைபிள் வாசித்திருக்கிறாய்?

 எத்தனை வசனங்கள் மனப்பாடமாகத் தெரியும்?

எந்தெந்த வசனம் எங்கெங்கே இருக்கிறது என்று தெரியுமா?

 பைபிளை பற்றி உன்னால் எவ்வளவு நேரம் பேச முடியும்?"

 என்று என்னுடைய பைபிள் அறிவைப் பற்றி எல்லாம் கேட்க மாட்டார்.

" உனது அயலானை எப்படி நேசித்தாய்? யார் யாருக்கு உதவி செய்தாய்"

 என்று எனது அன்பு செயல்களை பற்றி மட்டும்தான் கேட்பார்."


"அப்படி என்றால் பைபிள் அறிவு முக்கியம் இல்லை என்று சொல்கிறீர்களா?"

"அப்படிச் சொல்லவில்லை.

 அறிவைவிட வாழ்க்கைதான் முக்கியம் என்று சொல்கிறேன்.

ஆகாய விமானத்தில் பிரயாணம் செய்தால் தான் அமெரிக்காவிற்கு போக முடியும்.

ஆனாலும் ஆகாய விமானத்தைவிட அமெரிக்காதான் முக்கியம்.

கட்டளைப்படி வாழ்ந்தால்தான் கடவுளிடம் போகமுடியும்,

 ஆனாலும்

 கட்டளையை விட கடவுள்தான் முக்கியம்.

 ஒரு விஷயம் தெரியுமா?

 நம்மைவிட சாத்தானுக்கு பைபிளைப் பற்றிய அறிவு மிக அதிகம்."


"அப்போ நாங்கள் எல்லாம் சாத்தான்களா?"

"ஹலோ! நான் நம்மைவிட என்றுதான் சொன்னேன்.

எங்களைவிட என்று சொல்லவில்லை.

 சொல்லாததை எல்லாம் சொன்னதாக கற்பனை செய்யக்கூடாது.

அறிவை விட வாழ்க்கை முக்கியம் என்பதை விளக்க அந்த ஒப்புமையை சொன்னேன்.

கிராமங்களில் படிப்பறிவே இல்லாத பாமர மக்களில் அனேகர் படிப்பறிவு உள்ளவர்களை விட அதிக பக்தியாக வாழ்கின்றார்கள்.

அறிவு மூளை சம்பந்தப்பட்டது. 
வாழ்க்கை அன்பு சம்பந்தப்பட்டது.

இரண்டுக்கும் காரண, காரிய தொடர்பு இல்லை.

 அறிவே இல்லாதவன் கூட அன்பு உள்ளவனாக இருக்கலாம்.

நாம் பைபிள் வாசிக்க வேண்டியது அறிவை பெருக்கிக் கொள்வதற்காக அல்ல.

அன்பை பெருக்கிக் கொள்வதற்காக மட்டுமே."

"சரி, அதை விடுங்க நீங்கள் பைபிளை எப்படி வாசிக்கிறீர்கள்?"

"தாய்த் திருச்சபையை தந்திருக்கிற வாசக குறிப்புகளின்படி அந்தந்த நாளுக்கு குறிக்கப்பட்டிருக்கிற வாசகங்களை வாசிக்கிறேன்."

"அதாவது அதிகார வாரியாக வாசிப்பது இல்லை, சரியா?"

"சரி."

"நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருந்தால் நிறைய வாசிக்கலாமே!

 எதற்காக ஒவ்வொரு நாளும் சில வசனங்களை மட்டும் வாசிக்க வேண்டும்?"

"பள்ளிக்கூடத்திற்கு போயிருக்கிறீர்களா?"

"எதற்காக சம்பந்தம் இல்லாத கேள்வி?"

"பள்ளிகூடத்தில் படித்திருந்தால் ஒவ்வொரு வகுப்பிலும் அதற்கு குறிப்பிடப்பட்ட பாடத்திட்டத்தின்படி தான் படிக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பீர்கள்."

"எதற்கும் எதற்கும் முடிச்சுப் போடுகிறீர்கள்?"

"உங்களுக்கு புரிய வைக்க வேண்டுமே, அதற்காகத்தான்.

 அந்தந்த நாளைக்கான வாசக குறிப்புகளின் படி நாம் ஒழுங்காக வாசித்தாலே

 மூன்று வருடங்களுக்குள் நற்செய்தி நூல்கள் முழுவதையுமே படித்திருப்போம்.

வீட்டில் உணவு இருக்கிறது என்பதற்காக

 காலை உணவையும்,
 மதிய உணவையும்,
 இரவு உணவையும்
 இடைவெளி விடாமல் யாரும் சாப்பிடமாட்டார்கள்.

 சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதற்கு இடைவெளி வேண்டும்.

அன்றன்று வாசிக்கிற வாசகங்கள் படி அன்றன்று வாழ்ந்தாலே போதும்."

"நிறைய வாசிப்பவர்கள் அதன்படி வாழ மாட்டார்கள் என்கிறீர்களா?"

"அப்படிச் சொல்லவில்லை.

உங்கள் மனைவி வீட்டில் ஒரு டின் நிறைய முறுக்கு செய்து வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

 தினம் ஒன்றோ இரண்டோ சாப்பிடுவீர்களா?

 அல்லது தொடர்ந்து டின் காலியாகும் வரை சாப்பிட்டு கொண்டே இருப்பீர்களா?"

"யாருமே பைபிளை மொத்தமாக படிக்கக் கூடாது என்கிறீர்களா?"

"தேர்வுக்காக தயாரிப்பவர்கள் படிக்கலாம், படிக்க வேண்டும்.

அவர்களும் அன்றன்றய வாழ்வுக்கு அன்றன்றய வாசகங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்."

"தேர்வுக்காக தயாரிப்பவர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் பைபிளை முழுமையாக வாசிக்க கூடாதா?" 

"வாசிக்கலாம். வாசித்தால் உங்களைப் போன்றவர்கள் கேள்விகள் கேட்கும்போது பதில் கூற வசதியாக இருக்கும், உதவியாகவும் இருக்கும்.

ஆனால் என்னை போல சாதாரணமானவர்களால் உங்களைப் போன்ற முற்றிலும் கற்றவர்களோடு வாதாட முடியாது."

"கிண்டலா? நான் முற்றிலும் கற்றவன் என்று உங்களிடம் சொன்னேனா?"

"அப்போ பைபிளை முற்றிலும் கற்க வில்லையா?"

"வாசித்திருக்கிறேன். வாதாடுவதை விட்டுவிடுகிறேன். பைபிளை பற்றி ஒன்றிரண்டு வார்த்தைகள் சொல்லுங்கள்."

"பைபிள் என்றால் இறை வாக்கு.
 நாம் கையில் வைத்திருக்கும் பைபிள் அதன் எழுத்து வடிவம்.

இறைவாக்கு நமக்கு தரப்பட்டிருப்பது அதை அறிந்து நாம் வாழ்வதற்காகத்தான்.

வாழப்படாத பைபிள் அறிவினால் யாருக்கும் பயன் இல்லை.

இறைவாக்கை அறிவோம்.
 அதன்படி வாழ்வோம்."

லூர்து செல்வம்.

மாங்கொட்டை கற்பிக்கும் பாடம்.


மாங்கொட்டை கற்பிக்கும் பாடம்.



நன்கு பழுத்த மாம்பழம் ஒன்றை மரத்திலிருந்து, பறித்து பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை கையில் வைத்திருக்கிறேன்.

மாங்கொட்டையின் வயது என்ன?

யாராலும் அளவிட முடியாது.

எப்போது இறைவன் மாமரத்தை படைத்தாரோ அன்றிலிருந்து அதன் வயது ஆரம்பம் ஆகிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளா? கோடிக்கணக்கான ஆண்டுகளா? தெரியவில்லை.

முதல் மரத்தின் விதை பூமியில் விழுந்து, முளைத்து, மரமாகி, பூத்து, காய்த்து, பழுத்து,

அப்பழம் பூமியில் விழுந்து, முளைத்து, மரமாகி, பூத்து, காய்த்து, பழுத்து,

இவ்வாறாக கோடிக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற, இன்னும் வாழப் போகிற மாமர வம்சத்தில் இருந்து கிடைத்த மாங்கொட்டை.

முதல் மரத்தில் உண்டான மாங்கொட்டையின் அத்தனை குணங்களும் இதில் நூற்றுக்கு நூறு அப்படியே இருக்கின்றன.


ஆரம்ப காலம் முதல் இன்றைய வரை கோடிக் கணக்கான ஆண்டுகளில் பூமி எத்தனையோ வகை மாற்றங்களை சந்தித்திருக்கும்.

 ஆனால் மாறிக்கொண்டே இருக்கும் பூமியில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் மாமர வம்சம் ஈன்றெடுத்த இந்த மாங்கொட்டை 

தனது குணங்களில் ஆரம்பநிலையில் இருந்தது போலவே இன்றும் இருக்கிறது. இன்னும்  இருக்கும்.

 மாமரம் தன்னுடைய வேர்களை பூமிக்குள் ஆழமாக செலுத்தி தனக்கு வேண்டிய உணவை உரம் வாயிலாக பெற்றுக் கொண்டிருக்கிறது.

 பூமியில் மாற்றத்திற்கு ஏற்ப உரங்களின் தன்மை மாறலாம். 

 ஆனால் மாமரம் அந்த உரத்தை உணவாக்கும் போது அதை தனதாக்கிக் கொள்கிறது.

 அதாவது மரம் உரத்திற்கு ஏற்ப மாறவில்லை, உரம்தான் மரமாக மாறுகிறது.

ஆகவேதான் கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் மாங்கொட்டையின் குணம் ஆரம்ப நிலையில் உள்ளது போலவே இன்னும் இருக்கிறது.

எதற்காக இந்த மாங்கொட்டை கதை?

நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இயற்கையிலிருந்து

1 அதைப் படைத்த இறைவனைப் பற்றி அறிகிறோம்.

2 அதை நமது வாழ்வுக்கு பயன்படுத்திக் கொள்கிறோம்.

3நமது இறை வழிபாட்டில் அதை பயன்படுத்திக் கொள்கிறோம்..

4 அதன் மூலம் நமது வாழ்க்கைக்கான பாடத்தை கற்றுக் கொள்கிறோம். 


1 இயற்கைக்கு வயது இருக்கிறது. ஆரம்ப காலம் என்று ஒன்று இருக்கிறது. அது தானாக தோன்றி இருக்க முடியாது. அதற்கான காரண கர்த்தா ஒருவர் வேண்டும். அவர்தான் காரணங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட கடவுள்.
Causeless Cause.

2. கடவுள் நம்மை படைப்பதற்கு முன்னால் இயற்கையை படைத்தார். அதை நாம் பயன்படுத்தி அவருக்காக வாழ்வதற்காகப் படைத்தார்.

நமக்கு வேண்டிய உணவை தருவது இயற்கை.

உடையைத் தருவது இயற்கை.

இருப்பிடத்தைத் தருவது இயற்கை.

நமது உலக வாழ்விற்கான அனைத்தையும் தருவது இயற்கை.

3.நாம் இறைவனை வழிபடும் போது அவருக்கு நன்றி செலுத்தும் முகமாக 

அவர் நமது பயன்பாட்டிற்குக் தந்திருக்கும் இயற்கைப் பொருள்களை அவருக்கு காணிக்கையாக ஒப்புக்கொள்கிறோம்.


4.இயற்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் மிகப்பெரிய பாடம்:

இயற்கை மாறிக் கொண்டே இருந்தாலும் மாறாத விதிகளுக்கு கட்டுப்பட்டு இயங்குகிறது.

இறைவன் அதைப் படைக்கும்போது என்ன விதிகளைக் கொடுத்திருந்தாரோ அதே விதிகளை இன்னும் மாற்றமில்லாமல் கடைபிடித்து வருகிறது.

காலத்தின் நோக்கில் இயற்கை விதிகள் மிகவும் பழமையானவை.

பழமையாக இருந்தாலும் அவற்றை அப்படியே கடைப்பிடித்து வருவதால்தான் இயற்கையின் இயக்கத்தில் எந்தவித குழப்பமும் ஏற்படவில்லை.

பழமையை விரும்பாதவர்களுக்கு இது கற்பிக்கும் பாடம் இதுதான்.

கத்தோலிக்க திருச்சபையின் பழமை அதாவது பாரம்பரியம் அதை நிறுவிய நமது ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவில் ஆரம்பிக்கிறது.

இயேசு கடவுள்,

 கடவுள் மாறாதவர்.

ஆகவே இயேசுவும் மாறாதவர்.

 அவர் தந்த வாழ்க்கை விதிகளும் மாறாதவை.

அவர் நமக்கு கற்பித்த வேத சத்தியங்களும் மாறாதவை.

புகைவண்டி அசைந்து ஓடவேண்டுமானால் அது எதன் மேல் ஓடுகிறதோ அது, அதாவது, தண்டவாளம் அசையாமல் இருக்க வேண்டும்.

கொடி அசைந்து ஆடி பறக்க வேண்டுமென்றால் கொடிக்கம்பம் அசையாமல் இருக்க வேண்டும். 

நாம் வீட்டிற்குள் ஓடி ஆடி விளையாட வேண்டுமென்றால் வீட்டின் அஸ்திவாரம் அசையாமல் இருக்க வேண்டும்.

அதே போல்தான் கிறிஸ்தவர்களாகிய நாம் ஆன்மீக வாழ்வில் மாற்றங்களோடு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால்,

 கிறிஸ்துவின் போதனையின் பொருள் மாறாமல் இருக்க வேண்டும்.

ஒரு உதாரணத்திற்கு:

திருமணம் ஒரு தேவ திரவிய அனுமானம்.

கிறிஸ்துவின் போதனையின் அடிப்படையில் ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவ ஆண் மற்றொரு ஆணை திருமணம் செய்வது இயற்கைக்கு மட்டுமல்ல,

 கிறிஸ்துவின் போதனைக்கும் எதிரானது.  

 கிறிஸ்துவின் போதனையின் அடிப்படையில் கிறிஸ்தவ திருமண உறவை முறிக்க சட்டத்திற்கு அதிகாரம் இல்லை.

கிறிஸ்தவ சட்டங்களின் அடிப்படையில் திருமணமான ஒருவன் அரசாங்க நீதிமன்றத்தில் திருமண முறிவு பெற்றாலும் கிறிஸ்தவ விதிப்படி அது செல்லாது.

 அப்படிப்பட்டவன் உலக விதிப்படி மறுமணம் செய்து கொண்டால் அவன் வாழ்வது விபச்சார வாழ்க்கை.

செயற்கைக் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதும் , வயிற்றில் இருக்கும் குழந்தைகளை அழிப்பதும் கிறிஸ்தவ போதனைக்கு எதிரான செயல்கள்.

(ஒரு முறை குமுதம் பத்திரிகையில் கேள்வி-பதில் பகுதியில் ஒருவர் ஒரு கேள்வி கேட்டிருந்தார்:

"குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?"

அவருக்கு ஆசிரியரின் பதில்:

"ஒன்றுமே செய்ய வேண்டாம்!"

இதுதான் இயற்கையான முறை.)


கிறிஸ்தவ மறைக்கு எதிரான செயல்களை அரசாங்கம் அனுமதித்தாலும், இறைவன் அனுமதிப்பது இல்லை.

நாம் கீழ்ப்படிய வேண்டியது இறைவனுக்கு.

இயேசுவின் போதனைகளைத் தான் அவருடைய சீடர்கள் மக்களுக்கு போதித்து அவற்றின்படி மக்களை வாழ வைத்தார்கள்.

உலகெங்கும் போய் கிறிஸ்துவின் போதனைகளைப் போதித்தார்கள்.

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான சமூக கலாச்சார பழக்க வழக்கங்கள் இருக்கும்.

இயேசுவின் போதனையை ஏற்றுக்கொண்ட மக்கள் தங்கள் சமூக கலாசார பழக்க வழக்கங்களை கிறிஸ்துவின் போதனைகளுக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டார்கள்.

அதாவது அவர்களது கலாசாரத்தை கிறிஸ்தவ கலாச்சாரமாக மாற்றி கொண்டார்கள்.

கிறிஸ்துவின் போதனைகளை கலாசாரத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவில்லை.

நாம்தான் கிறிஸ்துவின் போதனைகளுக்கு ஏற்ப வாழ வேண்டுமே தவிர,

 கிறிஸ்துவின் போதனைகளை நமது விருப்பத்திற்கு ஏற்ப மாற்ற கூடாது.

எப்படி பூமியின் மேல் இருக்கும் மாமரம்,

 தனது வேர்களை பூமியின் ஆழத்தில் செலுத்தி,

 அங்குள்ள உரத்தை உணவாக மாற்றி உண்டு வளர்ந்து பலன் தருகிறதோ,

அதேபோல்

கிறிஸ்துவின் போதனைகளின் மேல் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நாம்

 நமது விசுவாச வேர்களை கிறிஸ்துவின் போதனைகளுக்குள் ஆழமாக வளர விட்டு,

அங்கிருந்து மாறாத கிறிஸ்துவின் போதனை ஆகிய உணவை உட்கொண்டு வளர்ந்து பலன் தர வேண்டும்.

நமது வாழ்க்கையாகிய மரத்தில் புதிய தளிர்கள் விடலாம்,

 ஆனால் அவையெல்லாம் பழைய, மாறாத கிறிஸ்துவின் போதனைகளை உயிராகக் கொண்டவையாய் இருக்க வேண்டும்.

விஞ்ஞானம் நமது உலகியல் வாழ்வில் எண்ணற்ற நன்மையான மாற்றங்களை புரிந்திருக்கலாம்.

ஆனால் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் நமது மெய்ஞான வாழ்வின் குறுக்கே வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை திருப்பலி கண்டு, சுவாமியின் பிரசங்கத்தைக் கேட்டு, இயேசுவை உணவாக உட்கொண்டு பக்தி உணர்ச்சியோடு வீட்டுக்கு வருவோம்.

உணவு உண்டவுடன் பொழுது போவதற்காக டிவியை போடுவோம்.

அவ்வளவுதான், டிவியில் வரும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை மனநிலையையே முழுமையாக மாற்றி விடும்.

பக்தி இருந்த இடத்தை கேளிக்கை ஆக்கிரமித்துக் கொள்ளும்.

விஞ்ஞானத்தின் விளைவான டிவி நமது மெய்ஞானத்தை சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடும்!

 YouTube ல் திருப்பலியை பார்க்க எண்ணி உள்ளே நுழைவோம்.

பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதற்கு அருகில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கும்,


 கொஞ்சம் இறங்கி நாமும் அதற்குள் எட்டிப் பார்ப்போம்.

 பிறகு திருப்பலியை விட்டுவிட்டு பட்டிமன்றங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகளை, அரசியல் நிகழ்ச்சிகள், எல்லாம் சேர்ந்து நமது நேரத்தை சாப்பிட்டு விடும்.

ஏறக்குறைய எல்லோருமே ஒரு பேயை நமது பாக்கெட்டில் தூக்கிக் கொண்டு அலைகிறோம், smart phone என்ற பெயரில்!

இந்த விஞ்ஞானத்தின் விளைவுகள் எல்லாம் முற்றிலும் தவறானவை என்று சொல்ல வரவில்லை.


இவற்றை சரியாக பயன்படுத்தினால் இவை மிகச்சிறந்த நற்செய்தி பரப்பும் கருவிகளாகப் பயன்படும்.

ஆனால் நாம் இவற்றைச் சரியாக பயன்படுத்த வேண்டும் என்றால் 

விசுவாசத்தில் நன்கு வேர் ஊன்றியவர்களாக இருக்க வேண்டும்.

அதாவது நவீனம் கலவாத விசுவாசத்தில்.

ஒருவர் மாதாவின் சுரூபத்தின் முன், மாதாவை நோக்கி நின்றுகொண்டு கரம் குவித்து பக்தி பாடல் ஒன்று பாடுகிறார். 


இன்னொருவர் அதே பாடலை பூங்கா ஒன்றில் நடனம் ஆடிக்கொண்டு பாடுகிறார்.

முந்தியது பழமை.

பிந்தியது புதுமை.

நின்றுகொண்டு கரம் குவித்துபாடும் போது நமது கவனம் பாட்டில் இருக்கும்.

ஆடிக் கொண்டு பாடும் போது நமது கவனம் ஆட்டத்தில் இருக்கும்.

சில பக்தி பாடல்களை இயற்கை காட்சிகளை பின்னணியாக வைத்து அதில் ஆடுபவர்களை பாட வைத்திருப்பார்கள்.

பார்வையாளர்களின் ரசனையை நடனமும் இயற்கை காட்சிகளும் பாடல்களும் பங்கு வைக்க வேண்டியிருக்கும்.

திருப்பலி நிறைவேற்றும் பீடத்தைக் கூட அளவுக்கு மீறி அலங்கரிக்க கூடாது என்று சொல்வார்கள்.

 ஏனென்றால் திருப்பலி காண்பவர்களின் கவனம் சிதறும்,

பழமைவாதிகள் பக்திக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்,

 நவீன வாதிகள் ரசனைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்..

திருமண வீட்டில் பெண்ணை பார்ப்பவர்கள் அவளது முகத்தை பார்ப்பதைவிட நகைகளையும் ஆடை அழகையும்தான் அதிகம் பார்ப்பார்கள்.

பெண்ணைப் பற்றி யாரும் விசாரிக்க மாட்டார்கள்.

"எத்தனை பவுன் நகை போட்டிருப்பார்கள்?" 

"சேலை என்ன விலை இருக்கும்? " போன்ற கேள்விகளைத் தான் மற்ற பெண்கள் கேட்பார்கள்.

நவீன முறையில் பாடப்படும் பக்தி பாடல்களுக்கும் இது பொருந்தும்.

புதுமை விரும்பிகள் நான் கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஆனாலும் மனதில் பட்டதைக் கூறுகிறேன்:

பழமையிலிருந்து துளிர்விடும் புதுமைதான் விசுவாசத்தைக் காக்கும்.

லூர்து செல்வம்.

Tuesday, January 26, 2021

பழமையும், புதுமையும்.(தொடர்ச்சி)

பழமையும், புதுமையும்.
(தொடர்ச்சி)


சுனாமியால் ஏற்பட்ட அலைகள் முட்டி மோதி எழுந்து அகப்பட்டதை எல்லாம் மூழ்கடித்து கொண்டிருக்கும் பரந்த கடலைப் போல 

நவீன சுனாமியால் பழமைகள் ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் உலகமாகிய கடலில்தான் இராயப்பர் படகு பயணித்துக் கொண்டிருக்கிறது.

அன்று காற்றாலும் கடல் அலைகளாலும் பாதிக்கப்பட்டு தத்தளித்துக் கொண்டிருந்த

படகில் பயணித்த அப்போஸ்தலர்களின் நிலையில்தான் இன்று நாம் இருக்கிறோம்.

இயேசு நம்மோடு தான் பயணிக்கிறார்.

ஆனாலும் நாம் அப்போஸ்தலர்கள் கத்தியது போலவே

"குருவே, குருவே, மடிந்துபோகிறோம்" எங்கு கத்திக் கொண்டிருக்கிறோம்.

அந்த அளவிற்கு புதுமை அலைகள் நம்மை தாக்கிக் கொண்டிருக்கின்றன.

இராயப்பர் படகுக்கு எந்தவித ஆபத்தும் வராது என்பது நமக்குத் தெரியும்.

 ஏனெனில் அதில் நம்மோடு பயணித்துக் கொண்டிருப்பவர் சர்வ வல்லபராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து .

ஆனாலும் நமது விசுவாசப் பற்றாக்குறை காரணமாக அப்போஸ்தலர்களிடம் நிலவிய அதே பயம் நம்மிடமும் நிலவுகிறது.

அன்று படகிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது போலவே 

நமது படகிற்குள்ளும் புதுமை என்னும் தண்ணீர் புகுந்திருக்கிறது.

ஆகவேதான் பழமைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் நம்மவர்களிடையே நிலவுகிறது.

கத்தோலிக்க திருச்சபை ஆரம்பத்திலிருந்தே பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.


பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காததினால்தான் நமது பிரிவினை சகோதார்கள் ஆயிரக்கணக்கான சபைகளாக சிதறுண்டு கிடக்கின்றனர்.


 நாம் பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால்தான் உலகம் முழுவதும் ஒரே சபையாக இயங்கி வருகிறோம்.

ஆனாலும் நம்மிடையேயும் புதுமை விரும்பிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மாற்றங்கள் அவசியம்தான்.

 கடவுள் ஒருவரே மாறாதவர். அவர் நிறைவானவர், ஆகவே அவரால் மாற முடியாது.

 ஆனால் நாம் குறைவானவர்கள். வளர வேண்டும். மாற்றங்கள் ஏற்படாமல் வளர முடியாது.

 ஆனால் மாற்றங்களால் தளர்ச்சியும் ஏற்பட முடியும். 

ஆகவே நாம் செய்யும் மாற்றங்கள் வளர்ச்சிக்கு இட்டுச் செல்கின்றனவா, தளர்ச்சிக்கு இட்டுச் செல்கின்றனவா என்று என்று கண்டுபிடிக்கும் திறன் நமக்கு வேண்டும்.

ஒரு உதாரணத்துக்கு


திவ்ய நற்கருணையில் இயேசு மெய்யாகவே பிரசன்னமாய் இருக்கிறார்.

 திவ்ய நற்கருணை இயேசுதான்.

முன்பு கோவிலில் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு செல்லும்போது,

 திவ்ய நற்கருணைக்கு நேராக வரும்போது,

 முழங்கால் படியிட்டு (Genuflect)ஆராதனை செய்ய வேண்டும் என்ற ஒழுங்கு இருந்தது. 

முழங்கால் படியிட்டு ஆராதிக்கும் போது திவ்ய நற்கருணையை கடவுள் என்று ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் இப்போது முழங்காலில் இருந்து எழுதுவதற்குப் பதிலாக

 குனிந்து அவரை தலை வணங்கினால் போதும் என்று நமது பழக்கத்தை மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

முன்பு முழங்காலிலிருந்துதான் திவ்ய நற்கருணையை நாவில் வாங்க வேண்டும் என்ற ஒழுங்கு இருந்தது. 

 இப்போது நின்றுகொண்டு கையில் வாங்கினால் போதும் என்று மாற்றி இருக்கிறோம்.

முன்பு எழுந்தேற்றத்தின் போது மக்கள் அனைவரும் 

"என் ஆண்டவரே, என் தேவனே'' என்று பக்தி பரவசத்தோடு சொல்லுவது வழக்கம்.

ஆனால் இப்போது அந்த சமயத்தில் அமைதி காத்து மனதுக்குள்ளாகவே சொல்லிக் கொள்கிறோம்.

இவை திவ்ய நற்கருணை பக்தியின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான மாற்றங்களா?

சிந்தித்து பார்ப்பதில் தவறு இல்லை.

நமது மக்கள் பிரிவினைச் சபையினர் நடத்தும் ஆவிக்குரிய கூட்டங்களுக்கு செல்வதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

நம்மவர் நடத்தும் ஜெப கூட்டங்களுக்கும் வருவார்கள்.

இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு மக்களுடைய மனப்பக்குவம் மாறிவிட்டது!

நமது ஜெப கூட்டங்களுக்கு ஒழுங்காக வரும் ஒரு பெண்மணி

 தன் மகளை பிரிவினை சபையைச் சேர்ந்த மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டாள்.

" ஏனம்மா இந்த விபரீதம்?" என்று கேட்டேன்.

 அவர் சொன்ன ஒரே பதில்,

 "இரண்டு பக்கமும் ஒரே இயேசு ஆண்டவர்தானே இருக்கிறார்!"


நாம் பிரிவினை சபையார் நம்மோடு இணைய வேண்டும் என்பதற்காக அவர்களோடு நட்பு பாராட்டுகிறோம்.

 ஆனால் அவர்கள் நமது நட்பை தவறாகப் பயன்படுத்தி நம் மக்களை அவர்கள் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

பாரம்பரியத்திற்கு திருச்சபை முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை மறுக்க முடியாது.

 ஆனாலும் நவீனமும் உள்ளே நுழைந்துவிட்டது என்பதையும் மறுக்க முடியாது.


நம்மை வழி நடத்துபவர்களில் கூட 

நிறைய பேர் புதுமை விரும்பிகளாக (Progressives)
மாறிவிட்டார்கள்.


அவர்களுக்கும் பழமை விரும்பிகளுக்கும் (Conservatives) இடையில் ஒரு மவுன போராட்டம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

சாதாரண மக்களிடையேயும் இரண்டு வகையினரும் இருக்கிறார்கள்.

எதைப்பற்றியும் கவலைப்படாத மூன்றாவது வகையினரும் இருக்கிறார்கள்.


கீழப்பாவூரில் பிறந்த ஒருவர் சென்னையில் குடியேறினால்

அவரிடம்,

 "என்ன காரணத்திற்காக சென்னையில் குடியேறி இருக்கிறீர்கள்?" என்று கேட்கலாம்.


ஆனால் அவர் பிறந்த ஊரிலேயே குடியிருந்தால்

 அவரிடம்,

 "ஏன் வேறு ஊருக்குச் சென்று குடியேறவில்லை?"

 என்று கேட்கக் கூடாது.

அதுபோல்,

திருச்சபையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருபவர்களைப் பார்த்து,

 "தங்கள் மாற்றங்களுக்கான சரியான காரணம் என்ன?"

என்று நாம் கேட்கலாம்.

 அவர்கள் காரணத்தை விளக்க கடமைப்பட்டுள்ளார்கள்.


ஆனால் பாரம்பரியப்படி வாழ்பவர்களைப் பார்த்து

 "நீங்கள் ஏன் புதுமைக்கு மாறவில்லை"
 என்று கேட்க முடியாது.

புதுமை விரும்பிகள் கொண்டுவரும் புதிய மாற்றங்களால் திருச்சபைக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்படத் தேவையில்லை.

 ஏனெனில் திருச்சபை பரிசுத்த ஆவியானவரின் பாதுகாப்பில் இருக்கிறது.

 பரிசுத்த ஆவியானவருக்கு ஏதாவது ஆபத்து வந்தால்தான் திருச்சபைக்கும் ஆபத்து வர வாய்ப்பு இருக்கும்.


ஆனால் பரிசுத்த ஆவி சர்வ வல்லப கடவுள், ஆகவே அவருக்கு ஆபத்து எதுவும் வர முடியாது.

 ஆகவே திருச்சபைக்கும் ஆபத்து எதுவும் வர முடியாது.

நாமும் எந்த பயமும் இல்லாமல்

 திருச்சபையின் பாரம்பரிய போதனைப்படி

 விசுவசிப்போம்,

 நம்புவோம்,

அன்பு செய்வோம்,

 தேவ திரவிய அனுமானங்களை ஒழுங்காகப் பெறுவோம்,

நல்ல கிறிஸ்தவர்களாய் வாழ்வோம்,

நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது.

நம்மைச் சுற்றி உள்ளவர்களையும்  வாழவைப்போம்.

தண்டின் மேல் உள்ள விளக்கு சுற்றிலும் ஒளி தருவது போல நமது விசுவாச வாழ்வின் ஒளி மற்றவர்கள் மேலும் வீசும்படி வாழ்வோம்.

நாம் மட்டுமல்ல, அனைவரும் மீட்பு அடையவேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.

இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்ற பாடுபடுவோம்.

லூர்து செல்வம்.

பழமையும், புதுமையும்.

பழமையும், புதுமையும்.



நாம் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எப்படிப்பட்ட நிகழ்காலம்?

நவீனங்கள் நிறைந்த நிகழ்காலம்.

பழையன எல்லாம் ஒதுக்கப்பட தக்கவை என்று எண்ணுகின்ற நிகழ்காலம்.

எதிர்காலத்தை பற்றி கவலைப்படாத நிகழ்காலம்.

ஒழுக்க நெறிகளுக்கு அடங்கி போக விரும்பாத நிகழ்காலம்.

ஏன் ஒழுக்க நெறிகளுக்கு அடங்கி போக விரும்பாத நிகழ்காலம்?

ஒழுக்க நெறிககள் பழைய காலத்தில் வகுக்கப்பட்டவை.

 ஆகவே அவை நிகழ்காலத்திற்குப் பொருந்தாதவை என்ற எண்ணம் அநேகருடைய மனதில் முளைக்க ஆரம்பித்துவிட்டது.

"இப்படித்தான் நடக்க வேண்டும்" என்று கூறுபவை ஒழுக்க நெறிகள்.

"எப்படியும் நடக்கலாம்" என்று கூறுவது நவீனம்.

ஒழுக்க நெறிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து பழகிய மக்களும்,

 அவற்றிற்கு கட்டுப்பட தேவையில்லை என்று எண்ணுகின்ற மக்களும் ஒன்றாக வாழவேண்டிய அவலம்தான் நிகழ்காலம்!

ஓடுகின்ற தண்ணீரோடு போகிறவர்கள் நிகழ்கால எண்ணம் உடையோர்.

 எதிர் நீச்சல் போட்டுக் கொண்டிருப்பவர்கள் கடந்தகால எண்ணம் உடையோர்.

ஒரு புகைவண்டியில் பயணம் செய்துகொண்டிருந்த மூவர் பேசிக்கொள்கிறார்கள்:

"சார் நீங்க எங்கே போகிறீர்கள்?"

"சென்னைக்கு."

"நீங்கள்?"

"திருவனந்தபுரத்திற்கு."

"உலகில் வசதிகள் எவ்வளவு பெருகிவிட்டன!

 எதிரெதிர் திசையில் உள்ள இரண்டு ஊர்களுக்கு ஒரே நேரத்தில், ஒரே புகை வண்டியில் பிரயாணம் செய்யக் கூடிய அளவிற்கு விஞ்ஞானம் முன்னேறி விட்டது!"

இன்றைய உலகில் நாம் இப்படித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

நச்சுத்தன்மை வாய்ந்த, 
ஒழுக்க நெறிகளுக்கு விரோதமான,
இறைநம்பிக்கை அற்ற,
நிகழ்காலத்தில், 

பழையன விரும்பிகள் எதிர்நீச்சல் தான் போட வேண்டியிருக்கிறது.

நவீன உலகினருக்கு பழமை வாய்ந்த கத்தோலிக்க விதிமுறைகள் ஒத்துப் போவதில்லை.

2021 ஆண்டுகளாக கிறிஸ்துவின் போதனைகளை மாற்றமின்றி ஏற்று அனுசரித்து வரும் கத்தோலிக்கர்களின்
 உலகப் பார்வைக்கும்,

கிறிஸ்துவின் போதனைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களின் உலகப் பார்வைக்கும்,

பாரதூர வித்தியாசம் இருக்கிறது.


கிறிஸ்துவின் பார்வையில் உலகம் நமக்காக படைக்கப்பட்டது. 

நாம் உலகிற்காக படைக்கப்படவில்லை.

நாம் விண்ணக வாழ்விற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோம்.

 விண்ணக வாழ்வை அடைய நாம் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு கருவி மட்டுமே இவ்வுலகம்.

நாம் இவ்வுலகில் வாழ்கிறோம், ஆனால் இவ்வுலகை சார்ந்தவர்கள் அல்ல.

  விண்ணக பேரின்பத்தை நோக்கி பயணிக்கிறோம்.

                 * * *
ஆனால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத உலகோர் உலகை எப்படி பார்க்கிறார்கள்?

உலகில் வாழவும் அதை ஆளவும் மட்டுமே அவர்கள் உலகிற்குள், வந்திருக்கிறார்கள். .

இவ்வுலகில் புகழை நிலைநாட்ட கூடிய அளவிற்கு வாழ வேண்டும்.

  எல்லோரும் இவ்வுலகின் மன்னர்கள்.

இவ்வுலகை சார்ந்தவர்கள் இவ்வுலகிலுள்ள இயற்கை வளங்களை எவ்வளவுக்கு எவ்வளவு பயன்படுத்துகிறார்களோ  


அவ்வளவுக்கு அவ்வளவு
 மகிழ்ச்சியாகவும் வசதிகளோடும் வாழலாம் என்று எண்ணுபவர்கள். அவர்களுக்கு விண்ணகத்தை பற்றி கவலை இல்லை.

இவ்வுலக இன்பங்களை நோக்கியே பயணிக்கிறார்கள். .
         * * *

ஆக, பேரின்பத்தை நோக்கி பயணிப்பவர்களும், சிற்றின்பத்தை நோக்கி பயணிப்பவர்களும் ஒரே உலகில் தான் பயணிக்க வேண்டியிருக்கிறது.

உலகமாகிய ஆற்றில் சிற்றின்பத்தை நாடி வேகமாக செல்லும் மக்கள் வெள்ளத்திற்கு இடையே 

பேரின்பத்தை நோக்கி செல்பவர்கள் எதிர்நீச்சல் போட வேண்டியருக்கிறது.

ஏனெனில் இரண்டும் எதிர் எதிர் துருவங்களில் உள்ளன.


கிறிஸ்துவை ஏற்றுக் கொள்பவர்களுக்கு மரணம் விண்ணகத்தின் வாசல்.

ஆகவே அது வரும்போது மகிழ்ச்சியோடு வரவேற்பார்கள்.

 ஆனால் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு மரணம்
சிற்றின்பத்தின் முடிவு.

ஆகவே அதை நினைத்து பயப்படுகிறார்கள்.

மரணத்தை கண்டு பயப்படுபவர்களும், மகிழ்ச்சி அடைபவர்களும் ஒரே உலகில் ஒன்றாக வாழ வேண்டி இருக்கிறது.

கிறிஸ்துவை ஏற்றுக் கொள்பவர்கள் அவரால் அனுமதிக்கப்பட்ட துன்பங்களை மனதார ஏற்றுக் கொள்வார்கள்.
ஏனெனில் இவ்வுலகத் துன்பங்கள் மறுஉலகில் பேரின்பங்களாக மாறும்.


ஆனால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் துன்பங்களை கண்டு பயப்படுவார்கள். ஏனெனில் அவைகள் சிற்றின்பத்திற்கு எதிரானவை.

இரு வகையினரும் ஒன்றாகவே வாழ வேண்டியிருக்கிறது.

மாறாத இறைவனின் மாறாத கட்டளைகளைப் பின்பற்றி வாழ்பவர்களும்,

 மாறிக்கொண்டே இருக்கும் உலகின் மாறிக்கொண்டே இருக்கும் நெறிகளை பின்பற்றுபவர்களும் 

சேர்ந்து வாழ்வதில் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது.

ஒரே அறையில் இரண்டு நண்பர்கள் சேர்ந்து தங்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

ஒருவர் Serials, games போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விரும்பாதவர். அவரது கடமை சார்ந்த செயல்களை மட்டும் செய்பவர். நிறைய வாசிப்பவர்.

அடுத்தவர் Serials, games போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மட்டும் தனது பொழுதை போக்குவர்.

இப்படி எதிர் எதிர் குணங்கள் உள்ள இருவர் ஒன்றாக தங்குவதில் உள்ள நன்மை, 

பயனுள்ள காரியங்களை மட்டும் செய்பவரைப் பார்த்து காலப்போக்கில் பயனற்ற விதமாய் பொழுதை போக்குவர் திருந்த வாய்ப்பு இருக்கிறது.


அதிலுள்ள தீமை,

  பயன் அற்ற விதமாய், ஜாலியாய் பொழுதுபோக்குபவரைப் பார்த்து, 

அடுத்தவருக்கு  தானும் அதே போல மாற சோதனை ஏற்படவும் , அதில் விழவும் வாய்ப்பு இருக்கிறது.


அதாவது எதிர்நீச்சல் போடுபவர் ஆற்றோடு போகவும் வாய்ப்பு இருக்கிறது.

இத்தகைய மாற்றங்கள் ஏற்படுவதை நாம் கண்கூடாகவே பார்த்திருக்கின்றோம்.

கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் நம்பிக்கை உள்ளவர்களின் வாழ்க்கையைப் பார்த்து மனந்திரும்பி கடவுளுக்காக வாழ்வதையும் பார்த்திருக்கிறோம்.

பக்தியோடு வாழ்பவர்கள் கூட  உலகத்தால் பாதிக்கப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

Monday, January 25, 2021

வரவேற்போம் இறைவனை இதயத்திற்குள்.

வரவேற்போம் இறைவனை இதயத்திற்குள்.



எழுத ஆரம்பிக்கும்போதே உயர்நிலைப் பள்ளி அனுபவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

Hostel வில் Director சுவாமியிடம் பேச வேண்டும் என்றால் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும்.

 ஒன்பதாவது வகுப்பில் பள்ளியில் வந்து சேரும் மாணவர்களுக்கு ஆரம்பநிலையில் ஆங்கிலத்தில் பேச வராது.

 ஆகவே என்ன பேச வேண்டுமோ அதை பழைய மாணவர்களின் உதவியால் ஆங்கிலத்தில் எழுதி, மனப்பாடம் செய்து கொண்டு சுவாமியிடம் செல்வோம்.

 மனப்பாடம் செய்ததை சுவாமியிடம் சொல்வோம்.

அவர் ஏதாவது விளக்கம் கேட்டால்,

அவர் கேட்டதை அப்படியே மனப்பாடம் செய்துகொண்டு 

வெளியே வந்து பழையபடி அதற்காக பதிலை ஆங்கிலத்தில் தயாரித்துக் கொண்டு சுவாமியிடம் செல்வோம்.

இப்படி திரும்பத் திரும்ப சென்று வந்து

 ஒரு சிறு அனுமதி பெற அரை மணி நேரம் ஆகும்..

இது ஆரம்ப நிலையில்,

  ஒரு ஆண்டு கழித்து எங்களால் மற்றவர்களுக்கு உதவ முடியும்.


இறைவனோடு பேச வேண்டும் அவரை வாழ்த்த வேண்டும். அவருக்கு நன்றி கூற வேண்டும். நமக்கு வேண்டியதை அவரிடம் கேட்க வேண்டும். நமது உணர்வுகளை அவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சுருக்கமாக இறைவனிடம் ஜெபிக்க வேண்டும்.

எவ்வாறு ஜெபிக்கிறோம்?

சுயமாக ஜெபிக்கிறோமா?

 பிறர் உதவியுடன் ஜெபிக்கிறோமா?


எழுத வாசிக்க தெரியாதவர்களுக்குக் கவலை இல்லை.

 அவர்கள் சுயமாகத்தான் ஜெபிப்பார்கள்.

 மனதில் உள்ளதை அப்படியே இறைவனிடம் கொட்டுவார்கள்.

 வார்த்தைகள் கிடைக்காவிட்டால் இறைவனே நினைத்துக் கொண்டே இருப்பார்கள்.

 அவர்கள் செய்வது தான் உண்மையான ஜெபம்.


ஜெபிப்பதற்கு ஜெப புத்தகத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு தான் பிரச்சனை.

புத்தகத்தில் உள்ள ஜெபங்களை வேறு யாரோ எழுதி இருப்பார்கள்.

அவர்களது உணர்வுகளை கொட்டி எழுதி இருப்பார்கள்.


அதைப் பார்த்து ஜெபிப்பவர்கள் எழுதப்பட்டுள்ள வார்த்தைகளை வாசித்து மட்டும் விட்டு போவார்களானால் அவர்கள் செய்வது ஜெபம் அல்ல.

ஜெப வார்த்தைகள் உள்ளத்திலிருந்து உணர்வு பூர்வமாக வெளிவர வேண்டும்.

அவற்றோடு நமது இதயமும் ஒன்றித்திருக்க வேண்டும்.

புத்தகத்தை உதவிக்கு மட்டும் வைத்துக் கொள்ளலாமே தவிர ஜெபத்தை நாம்தான் உணர்வு பூர்வமாக சொல்ல வேண்டும்.

அதுதான் உண்மையான ஜெபம்,

புத்தகத்தின் உதவி இல்லாமலேயே நமது உணர்வுகளுக்கு நாமே சொந்தமாக வார்த்தைகளைக் கொடுத்து 

உணர்வுகளையும் வார்த்தைகளையும் கலந்து இறைவனிடம் சமர்ப்பிப்பது தான் உண்மையான உணர்வு பூர்வமான ஜெபம்.

நாடகங்களில் பேசுபவர்கள் வசனகர்த்தா எழுதிக்கொடுத்த வார்த்தைகளை மாறாமல் அப்படியே பேசுவார்கள்.

பேசுவதை உணர்ச்சிகரமாக பேசினால் நாடகத்தை பார்ப்பவர்கள் ரசிப்பார்கள்.

ஆனால் நண்பர்களுடன் நாம் இயல்பாக பேசும்போது யாரும் எழுதிக்கொடுத்த வசனங்களை பயன்படுத்துவது இல்லை.

உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளை மட்டும் தான் பயன்படுத்துவோம்.

இறைவனிடம் பேசும் போதும் அதே முறையைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்.

இறைவன் நமது வார்த்தைகளின் அழகை அல்ல, அவை வெளிப்படுத்தும் உணர்வுகளைத் தான் விரும்புகிறார்.

உணர்வுபூர்வமான ஜெபம்தான் உண்மையான ஜெபம்.


இறைவனை நோக்கி ஜெபிக்கும்போது ஒரு அடிப்படை இறை உண்மையை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

விண்ணக தந்தையை நோக்கி ஜெபித்தாலும்,

இயேசுவை நோக்கி ஜெபித்தாலும்,

பரிசுத்த ஆவியை நோக்கி ஜெபித்தாலும்

நாம் மூவொரு கடவுளை நோக்கிதான் ஜெபிக்கிறோம் என்கிற உணர்வு நம்மிடம் இருக்க வேண்டும்.

"விண்ணகத் தந்தையே உமது நாமம் தூயது என போற்றப்பெறுக."

என்று நாம் ஜெபிக்கும்போது தந்தைக்குள் மகனும் இருக்கிறார், தூய ஆவியும் இருக்கிறார் என்ற உணர்வு இருக்க வேண்டும்.

"இயேசுவின் திரு இருதயமே" என்று ஆரம்பித்து இயேசுவை நோக்கி ஜெபிக்கும்போது இயேசுவினுள் தந்தையும் இருக்கிறார், தூய ஆவியும் இருக்கிறார் என்ற உணர்வு இருக்க வேண்டும்.

அவ்வாறே,

"பரிசுத்த ஆவியே தேவரீர் எழுந்தருளி வாரும்." என்று துவங்கி தூய ஆவியை நோக்கி ஜெபிக்கும்போது. 

தூய ஆவிக்குள் தந்தையும் இருக்கிறார், மகனும் இருக்கிறார்,
என்ற உணர்வு இருக்க வேண்டும்.

ஒரே கடவுள்தான் மூன்று ஆட்களாக இருக்கிறார்.

கடவுளைப் பங்கு போட முடியாது.

ஒரு நாளை ஆரம்பிக்கும் போதும்,
முடிக்கும்போதும்,

இரவில் தூங்க ஆரம்பிக்கும் போதும், தூங்கி கண் விழிக்கும் போதும்,

நாளினுள் ஒவ்வொரு வேலையை ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும்,

"தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே ஆமென்."

எனக்கூறி திரியேக தேவனை நம்மோடு இருக்க அழைக்கிறோம்.

எதற்காக அவரை அழைக்கிறோம்?

அவரை அழைத்து பக்கத்தில் வைத்துக்கொண்டு நமது இஷ்டம் போல் செயல்படவா?

நமது ஒவ்வொரு செயலையும் அவர் ஆசீர்வதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தானே அவரை அழைக்கிறோம்!

அவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு,

 அவருக்கு விருப்பம் இல்லாத ஒரு காரியத்தை செய்து கொண்டு,

 அவரை நோக்கி 

"ஆண்டவரே, நான் செய்வதை ஆசீர்வதியும்" என்று கேட்டால் 

அது அவரைக் கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்துவது போல் இருக்காதா?



காலையில் எழுந்தவுடன் திரியேக தேவனை நோக்கி "என்னோடு வாரும்'' என்று அழைத்துக் கொண்டு, 

நேரே மனைவியிடம் போய்,

"ஏண்டி காலையில் டீ கொண்டு வரவில்லை?"

எங்கு சண்டை போட ஆரம்பித்தால்,

"ஏண்டா, உன் மனைவி கூட சண்டை போடுவதற்கா என்னைத் துணைக்குக் கூட்டிக்கொண்டு வந்தாய்?"

என்ற அவரது கேள்வி நமது காதில் விழ வேண்டும்.

நாமும், "ஆண்டவரே நீர் என்னுடன் இருப்பது ஞாபகம் இல்லாமல்

 தெரியாத்தனமாக எனது மனைவியுடன் சண்டை போட்டு விட்டேன்.

 மன்னிக்கவும்.

 இதோ அவளிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

 இனிமேல் எக்காரணத்தை முன்னிட்டும் மனைவியுடன் சண்டை போட மாட்டேன்."

என்று அவரிடம் வாக்குக் கொடுக்கவேண்டும்.

'"இங்கே பார், இன்று முழுவதும் நான் உன்னோடுதான் இருக்கிறேன். எங்கு சென்றாலும் எனக்குப் பிடிக்காத எதையும் செய்யக்கூடாது."

என்று அவர் கூறுவது நமது காதில் விழ வேண்டும்.

 அதை அன்று முழுவதும் கருத்தில் கொள்ள வேண்டும்.


இதே போன்று நாம் தப்பு செய்யும் போதெல்லாம் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதற்கும், 

நம்மை நாமே திருத்திக் கொள்வதற்கும் உதவியாக இருக்க தான் காலையில் எழுந்தவுடன் அவரை நம்மோடு இருக்க அழைக்கிறோம்.


நாம் சாப்பிட ஆரம்பிக்கும் போது அவரை அழைத்து பக்கத்தில் அமர வைத்துக் கொள்கிறோம். 

அவரை பக்கத்தில் வைத்துக்கொண்டே அவர் தந்த உணவை குறை சொல்லிக் கொண்டிருந்தால் அவர் மகிழ்ச்சி அடைவாரா?

திரியேக தேவனை நாம் அழைக்கும் போது நமது இருதயத்திற்குள் வரும்படி அமைக்கவேண்டும்.

இருதயம் நமது அன்பின் இருப்பிடம்.

 நம்முடைய ஒவ்வொரு செயலின் தன்மையும் நம்முடைய அன்பை பொருத்தே இருக்கும்.

மிகுந்த அன்புடன் செய்யப்படும் ஒரு செயல் இறைவனுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.

அன்பு குறைய குறைய செயலின் நல்ல தன்மையும் குறைந்து கொண்டே வரும்.

இதயம் வெறுமையாய் இருக்க முடியாது.

அன்பே இல்லாத இடத்தில் அதன் எதிர்க் குணம் இருக்கும்.

அன்பின் எதிர்க் குணத்தோடு செய்யப்படும் செயல் புண்ணியத்திற்கு எதிர்ப் பதமாக இருக்கும், அதாவது, பாவமாக இருக்கும்.

இறைவன் நமது இருதயத்தில் இருந்து, அவரோடு நாம் நெருக்கமான உறவோடு இருந்தால் நம்மிடம் அன்பு மிகுதியாக இருக்கும்.

மிகுதியான அன்போடு செய்யப்படும் செயல் அன்பில் வாழும் இறைவனுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

  நமது செயல் இறைவனுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இறைவனை நமது இருதயத்திற்குள் வரவேற்க வேண்டும்.


இருதயத்திலிருந்து தான் நமது செயல்களுக்கான தூண்டுதல்கள் (Inspirations) எழும்.

நமது இருதயத்தில் இறைவன் இருந்தால் நம்மை நற்செயல்கள் செய்யும்படி தூண்டிக் கொண்டே இருப்பார்.

 நம்மால் அவரது தூண்டுதல்களை தட்ட முடியாது.

ஆகவே எப்போதும் நாம் நற்செயல்கள் புரிந்து கொண்டே இருப்போம்.

 அதாவது நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நற்செயலாக மாறிக்கொண்டே இருக்கும்.

நற்செயல்கள் அன்பின் விளைவு.

 அன்பு இறைவனிடம் இருந்து வருவது.

இதயத்தில் இறைவன் இருந்தால் நமக்கு .அன்புக்கு பஞ்சமே இருக்காது.

ஆகவே,
 
இதயத்துள் வரவேற்போம் இறைவனை!

அன்புடன் வாழ்ந்திடுவோம்
என்றென்றும்!

லூர்து செல்வம்.

Sunday, January 24, 2021

"ஆயினும் உமது சொல்லை நம்பி வலைகளைப் போடுகிறேன்."(லூக்.5:5)

"ஆயினும் உமது சொல்லை நம்பி வலைகளைப் போடுகிறேன்."
(லூக்.5:5)


இராயப்பரும், வியாகப்பரும், அருளப்பரும் கெனேசரேத்து ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

மீன்கள் கிடைக்கவில்லை.

படகை விட்டு இறங்கி வலைகளை அலசிக்கொண்டிருக்கின்றனர்.

அப்போது ஏரிக்கரையில் நின்று கொண்டிருக்கிற இயேசு இராயப்பரின் படகைக் கரையிலிருந்து சற்றே தள்ளச் சொல்லி, 

  படகில் 
அமர்ந்து கொண்டே  கூட்டத்திற்குப் போதித்துக் கொண்டிருக்கிறார்.

போதித்து முடிந்ததும் இராயப்பரிடம், "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய் மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்று கூறுகிறார். .


இராயப்பர், "குருவே, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை:

 ஆயினும் உமது சொல்லை நம்பி வலைகளைப் போடுகிறேன்" என்கிறார்.

இராயப்பர் பிறப்பிலேயே ஒரு மீனவர். ஆனால் இயேசு ஒரு தச்சர்.

ஆனாலும் இயேசு சொன்னதற்கு அப்படியே கீழ்ப்படிகிறார்.

ஏனெனில் இராயப்பருக்கு இயேசு மெசியா என்பது ஏற்கனவே தெரியும்.


 இராயப்பர் இயேசுவைச் சந்திப்பதற்கு முன்னாலேயே

 அவருடைய சகோதரராகிய பெலவேந்திரர் அவரை சந்தித்து, அவரோடு தங்கி, அவர் மெசியா என்பதை அறிந்து கொண்டார்.

அவர்தான் இராயப்பரிடம் "மெசியாவைக் கண்டோம்" என்று கூறி இயேசுவிடம் அழைத்துவந்தார். 

இயேசு அவரை உற்றுநோக்கி, "நீ அருளப்பனின் மகனாகிய சீமோன், கேபா எனப்படுவாய்" என்றார். 

கேபா என்பதற்கு இராயப்பர் என்பது பொருள்.

முதல் சந்திப்பிலேயே இயேசு அவருக்கு இராயப்பர் என்று பெயரிட்டதிலிருந்து,

அவரைத்தான் திருச்சபையின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று ஏற்கனவே இயேசு தீர்மானித்துவிட்டது தெரிகிறது.

அதன் பிறகு நடந்தது தான் இந்த ஏரிகரை சந்திப்பு.

இப்போது இயேசு இராயப்பரது படகில் இருந்து தான் மக்களுக்கு நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்தார்.

நமது தாய் திருச்சபைக்கு 'இராயப்பர் படகு' என்ற ஒரு செல்லப் பெயர் உண்டு.

மீனே கிடைக்காமல் வலைகளை அலசிக் கொண்டிருந்த இராயப்பரிடம் இயேசு

"ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய் மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்"

என்று சொல்கிறார்.


இரவு முழுவதும் பாடுபட்டும் ஒன்றும் கிடைக்காவிட்டாலும் இயேசு சொன்ன ஒரே காரணத்திற்காக கடலில் சென்று வலையை வீசுகிறார்.

ஏராளமாக மீன்கள் கிடைக்கின்றன.

அடுத்து அவர் சொன்ன வார்த்தைகள்தான் அவரை தாழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு போய் விட்டன.

ஏற்கனவே அவருக்கு இயேசு மெசியா என்று தெரியும்.

இயேசுவை சந்திக்கும் முன்னாலேயே பெலவேந்திரர் மூலம் அறிந்துகொண்ட செய்தி அது.

தான் கடவுளின் முன்னால் நிற்கக்கூட தகுதியற்ற ஒரு பாவி என்பதை மனமாற ஏற்றுக் கொள்கிறார்.

ஆகவேதான்,

"ஆண்டவரே, பாவியேனை விட்டு அகலும்" என்று கூறுகிறார்.


இயேசுவுக்கு மிகவும் பிடித்தமான புண்ணியம் தாழ்ச்சி.

"தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்: தன்னைத் தாழ்த்துகிறவனோ உயர்த்தப்பெறுவான்."
(லூக்.14:11)

என்பது இயேசுவின் போதனை.

 தன்னைத் தானே தாழ்மையாக நினைத்துக்கொண்டிருந்த இராயப்பரைத் திருச்சபையில் மிக உயர்ந்த பதவிக்கு இயேசு உயர்த்துகிறார்.

அதற்கு ஆரம்ப கட்டமாகத் தான் இராயப்பரை நோக்கி,

"அஞ்சாதே, இன்று முதல் நீ மனிதர்களைப் பிடிப்பவன் ஆவாய்"
என்கிறார்.

அவர்கள் படகுகளைக் கரைச் சேர்த்ததும், யாவற்றையும் துறந்து அவரைப் பின்தொடர்கிறார்கள்.  .

இயேசுவின் ஒவ்வொரு செயலும் அவரது நித்திய திட்டத்தின்படி தான் நடக்கின்றது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம்.


இந்த நிகழ்ச்சி இராயப்பரின் மிக ஆழமான விசுவாசத்தையும் காண்பிக்கிறது.


இயேசு சொல்வது கட்டாயம் நடக்கும் என்று இராயப்பர் உறுதியாக நம்பினார்.
 
அந்த நம்பிக்கைக்கு ஆதாரம் இயேசுதான் மெசியா என்ற
 விசுவாசம்.

விசுவாசத்தினால் ஆகாதது எதுவுமில்லை என்ற ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


நாம் பைபிள் வாசிப்பதற்கும்,

 மற்ற வரலாற்று நூல்களையோ அல்லது செய்தி தாள்களையோ வாசிப்பதற்கும் பாரதூர வித்தியாசம் இருக்கிறது.

வரலாற்று நூல்களில் வரும் வரலாற்று மனிதர்களும், 

வரலாற்று நிகழ்ச்சிகளும்,

செய்தி தாள் விசயங்களும் 

நமது அறிவுக்கு (knowledge) நல்ல விருந்து.

அவற்றிலிருந்து சில பாடங்களைக் கூட கற்றுக் கொள்ளலாம்.

வரலாறு நமது மூளையை தொடும் அளவிற்கு நம்முடைய இருதயத்தை தொடாது.

ஆனால் பைபிள் வரலாற்றை கற்பிப்பதற்காக தரப்பட்டது அல்ல.

அதில் அடங்கியுள்ள வரலாற்றை விட, அது தரும் செய்தியே (message) நமக்கு முக்கியம்.

பைபிளில் இருந்து நாம் பெறும் செய்தி இறைச்செய்தி. (Divine message)

அது தொட வேண்டியது நம்முடைய மூளையை அல்ல, நம்முடைய இதயத்தை.

இதயத்துடிப்பு தான் நமது வாழ்விற்கு ஆதாரம்.

இறைச்செய்திதான் நமது ஆன்மீக வாழ்விற்கு ஆதாரம்.

இயேசு ஒரு வரலாற்று நாயகர்.

ஆனால் அவரது வரலாற்றை விட அவரது போதனைதான் நமக்கு முக்கியம்.

நற்செய்தி நூலில் உள்ள ஒரு நிகழ்வை நாம் வாசிக்கும்போது அந்நிகழ்வு நமக்கு தரும் செய்தியை நாம் கிரகிக்க
 வேண்டும்.

கிரகிக்கப்பட்ட செய்தி நமது ஆன்மீக வாழ்வை இயக்க வேண்டும்.

மாறாக அது நாம் தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவதற்கும்,

பட்டிமன்றங்களில் பேசுவதற்கும்,

கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும்,

சொற்பொழிவு ஆற்றுவதற்கும்,

விவாதங்கள் செய்வதற்கும் 

மட்டும் பயன்பட்டு,

நமது வாழ்க்கையை இறைவனுக்காக வாழ பயன்படா விட்டால் 

நாம் நற்செய்தி வாசித்தும் பயனில்லை.

நாம் வாசித்த ஏரிக்கரை நிகழ்ச்சியிலிருந்து

 நாம் பெறும்,

நமது இதயத்தை தொட்டு இயக்க வேண்டிய இறைச்செய்தி எது?

இராயப்பரின் விசுவாசம், தாழ்ச்சி.


இரவு முழுவதும் தேடியும் மீன் கிடைக்காத அதே ஏரிப் பகுதியில் வலையை வீசும் படி இயேசு சொல்கிறார்.

இயேசு சொன்ன ஒரே காரணத்திற்காக விசுவாசத்தோடு வலையை வீசுகிறார்.

வலை கிழியக்கூடிய அளவிற்கு மீன் அதிகமாக கிடைக்கிறது.

இராயப்பரிடம் இருந்த அதே அளவு விசுவாசம் நம்மிடம் இருக்கிறதா?

இயேசு நம்மோடு இருந்து 

நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் நம்மை வழிநடத்துகிறார் என்ற விசுவாசம் நம்மிடம் இருந்தால்

 நமக்கு எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் சிறிது கூட நம்மிடம் இருக்காது.


உண்மையான விசுவாசம் இருந்தால் 
.
மருத்துவரீதியாக குணமாக்க முடியாத ஏதாவது நோய் நமக்கு வந்தால் கூட 

இறைவன் கையில் பாரத்தைப் போட்டுவிட்டு அச்சமின்றி வாழ்வோம்.

இவ்வுலகில் வாழ்ந்தாலும், 
மறு உலகில் வாழ்ந்தாலும் 

நாம் வாழ்வது இயேசுவுடன் தான் என்ற விசுவாசம் நமக்கு இருந்தால் மரணத்தை கண்டு பயப்பட மாட்டோம்.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் வெற்றிகளும், தோல்விகளும் நம்மை எந்த விதத்திலும் பாதிக்காது.

ஏனெனில் இரண்டுமே இயேசுவின் கைகளிலிருந்துதான் வருகின்றன.

ஆழ்ந்த விசுவாசம் உள்ளவன் தன் வாழ்வில் என்ன நேர்ந்தாலும் இயேசுவுக்கு நன்றி சொல்வான்.

''இயேசுவை விசுவசித்தும் எனக்கு துன்பங்கள் வருகின்றனவே,"

 என்று ஒருவன் எண்ண ஆரம்பித்தால் அவனிடம் விசுவாசம் இல்லை என்றுதான் அர்த்தம்.


"நான் பாவி, இயேசுவின் முன் நிற்கவே தகுதியற்றவன்"

என்று எண்ண துவங்கிய அந்த வினாடியே இயேசுவின் முன் நிற்க முழுத் தகுதியையும் பெற்று விடுகிறார் இராயப்பர்.   

அந்த தாழ்ச்சிதான் அவரை திருச்சபையின் தலைவர் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியது.

ஆனால் திருச்சபையின் தலைவராக வேண்டும் என்பதற்காக தாழ்ச்சியாய் இருக்கவில்லை.
 
தாழ்ச்சிக்குக் கிடைத்த பரிசு தலைமை பதவி.

நாமும் உயர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தாழ்ச்சியாய் இருக்கக் கூடாது.

தாழ்ச்சி இயேசுவுக்கு பிடித்தமான புண்ணியம் என்பதற்காக, இயேசுவுக்காக,

 தாழ்ச்சியாய் இருக்க வேண்டும்.

மற்றவர்கள் நம்மை கேவலமாக நடத்தும்போது நாம் அதை மனமாற ஏற்றுக் கொண்டு,

பிலாத்துவின் முன்னும் ஏரோதுவின் முன்னும் அவமானமாக நடத்தப்பட்டாலும் நமக்காக அதை ஏற்றுக்கொண்ட,

இறைமகன் இயேசுவுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

அவரைப்போல நடத்தப்படுவதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தமைக்கு இயேசுவுக்கு நன்றி கூற வேண்டும்.

வாசிப்போம்,

 யோசிப்போம்

விசுவசிப்போம்.

லூர்து செல்வம்.

Friday, January 22, 2021

"உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே" (லூக்.4:12)




 "உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே" 
(லூக்.4:12)


மனித குலத்தை மீட்க வந்த இறைமகன் இயேசு தான் இவ்வுலகில் வாழ்ந்த 33 ஆண்டுகளின் ஒவ்வொரு விநாடியும் நாம் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக வாழ்ந்து காண்பித்தார்.

அவர் போதனையாளராக மட்டுமல்ல சாதனையாளராகவும் வாழ்ந்தார்.

அவர் ஏழையாகப் பிறந்தது, ஏழையாக வளர்ந்தது, 
ஏழையாக வாழ்ந்தது, 
ஏழையாக மரித்தது எல்லாம் 

ஏழ்மையின் மகத்துவத்தை நமக்கு செயல் மூலம் போதிப்பதற்காக தான்.


சர்வ வல்லமை உள்ள கடவுள் சக்தி இல்லாத மனிதராகப் பிறந்து நம்மைப் போலவே வாழ்ந்தது நமக்கு செயல் மூலம் தாழ்ச்சி என்னும் புண்ணியத்தை போதிப்பதற்காகத்தான்.

சென்ற இடமெல்லாம் மனிதருக்கு நன்மைகள் செய்தே வாழ்ந்தது நமக்கு பிறர் சிநேகத்தை எவ்வாறு செயலாக்க வேண்டும் என்பதை செயல் மூலம் காண்பிப்பதற்காகத் தான்.

கடவுளாகிய அவர் நித்திய காலமும் தன்னோடு உரையாடிக் கொண்டு தான் இருக்கிறார்.

 ஆயினும் இவ்வுலகில் செபத்திற்காக அவர் நேரத்தை ஒதுக்கியது

 ஜெபத்தின் முக்கியத்துவத்தை நமக்கு செயல் மூலம் காண்பிப்பதற்காகத்தான்.

தன்னையே பாடுபடுவதற்கும், சிலுவை மரணத்திற்கும் உட்படுத்தியது 

நம்மை மீட்பதற்காக மட்டுமல்ல,

நாம் நமது வாழ்வில் துன்பங்களையும், மரணத்தையும் எவ்வாறு பாவ பரிகார செயல்களாகவும், 

தியாகச் செயல்களாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை காண்பிப்பதற்காகவும்தான்.

அவர் கடவுள், ஆகவே ஞானஸ்நானம் பெற வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.

 ஆயினும் அதையும் நமக்கு முன்மாதிரியாக இருப்பதற்காகத்தான் ஏற்றுக்கொண்டார்.

அவ்வாறேதான் பொதுவாழ்க்கையில் ஈடுபட ஆரம்பிப்பதற்கு முன்னால் 40 நாட்கள் உபவாசம் இருந்தார்.

பொதுவாழ்வில் ஈடுபடும் போது நமக்கும் சோதனைகள் வரும் என்பதை தெரிவிப்பதற்காகவும்,

சோதனைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நமக்கு போதிப்பதற்காகவும் 

தன்னையே பசாசினால் சோதிக்கப்படுவதற்கு உட்படுத்திக் கொண்டார்.

பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும், என்னென்ன குணங்கள் இருக்க கூடாது என்பதை நமக்கு போதிப்பதற்காகத்தான் மூன்று வகையான சோதனைகளுக்கு தன்னையே உட்படுத்திக் கொண்டார்.

உபவாச நாட்களில் அவர் ஒன்றும் உண்ணவில்லையாகையால் 

அந்த நாட்கள் கழிந்ததும், அவருக்குப் பசியெடுத்தது.

தனது வல்லமையை கல்லை அப்பமாக மாற்றி உண்ண பயன்படுத்த வேண்டும் என்று பசாசு அவரைச் சோதிக்கிறான்.

ஒன்றும் இல்லாமையிலிருந்தது உலகத்தை படைத்த அவருக்கு கல்லை அப்பமாக மாற்றுவது ஒரு பெரிய காரியமே இல்லை.

ஆயினும் இயேசு, "மனிதன் உயிர் வாழ்வது அப்பத்தினால் மட்டுமன்று" என எழுதி இருக்கின்றதே" என்றார்.

இந்த சோதனையை எதிர்கொண்ட விதத்திலிருந்து நமக்கு என்ன பாடத்தை இயேசு கற்பிக்கிறார்?

பொதுவாழ்வில் ஈடுபடுவோர் இறைவனுக்காக வாழ்வதற்காக தங்களை அர்ப்பணித்துக் 
கொள்பவர்கள்.

இவர்களது வாழ்வின் ஒரே குறிக்கோள் இறைவார்த்தையை செயல்படுத்த உழைக்க வேண்டும் என்பதுதான்,

உண்ண உணவும்,
உடுக்க உடையும், 
இருக்க இடமும் 
இன்னோரன்ன சகல வசதிகளும் இலவசமாக கிடைக்கும் என்பதற்காக பொது வாழ்வில் தங்களை ஈடு படுத்தக் கூடாது.

பொதுவாழ்வு தங்களுக்கு வாழ்க்கை வசதிகளை சம்பாதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இடம் அல்ல.

வாழ்க்கை வசதிகளைப் பற்றி கவலைப்படாமல், இறைப் பணிக்காக மட்டும் 

(இரைப் பணிக்காக அல்ல)

 அர்ப்பணித்து வாழ்வதே பொதுப்பணி.

அரசியல் வாழ்வு கூட ஒரு பொதுப் பணி தான். அதை நம்மவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும்,

 எப்படி எல்லாம் வாழக்கூடாது என்பதற்கு உதாரணமே இக்காலத்திய அரசியல் வாழ்வு தான்.

இறைப்பணிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ள விரும்புகிறவர்கள் 

வாழ்க்கை வசதிகளை எதிர்பார்க்க கூடாது.

இயேசு எவ்வாறு ஏழ்மையாக வாழ்ந்தாரோ அதேபோன்று ஏழ்மையாக வாழ வேண்டும்.

"இயேசு அவனை நோக்கி, "நரிகளுக்கு வளைகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" என்றார்."
(லூக்.9:58)

இப்பாடத்தை இறைபணியினர் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இயேசு முதல் சோதனைக்கு தன்னை உட்படுத்தினார்.


"பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலக அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி,

6 "இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும், இவற்றின் மகிமையையும் உமக்குக் கொடுப்பேன். ஏனெனில், இவை யாவும் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 

"என் விருப்பம்போல் எவருக்கும் இவற்றைக் கொடுக்கமுடியும்.


7 எனவே நீர் தெண்டனிட்டு என்னை வணங்கினால் இவையாவும் உம்முடையவை ஆகும்" என்றது.

இரண்டாவது சோதனை அதிகாரத்தையும், அதன் மகிமையையும் பற்றியது.


அதிகாரத்தையும், மகிமையையும் குறிக்கோளாகக் கொண்டு யாரும் இறைப்பணியிலோ, மற்றப் பொதுப்பணிகளிலோ ஈடுபடக்கூடாது,

இயேசு தனது பொதுவாழ்வின் போது யார் மீதும் அதிகாரம் செலுத்தவில்லை.

தனது அப்போஸ்தலர்களைக்கூட தனது நண்பர்களாகத்தான் கருதினார்.


"உங்களை நான் இனி ஊழியர் என்று சொல்லேன்: 

ஏனெனில், தலைவன் செய்வது இன்னது என்று ஊழியனுக்குத் தெரியாது. 

ஆனால் உங்களை நண்பர்கள் என்றேன்:" (அரு.15:15)

கடவுளாகிய அவர் மீது எந்த அதிகாரமும் இல்லாத பிலாத்துவின் அதிகாரத்துக்கு கூட இயேசு கட்டுப்பட்டு தன்னையே சிலுவை மரணத்திற்கு உட்படுத்தினார்.

மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தலாம், அதிகாரம் செய்வதினால் தங்களுக்கு புகழ் கிடைக்கும் என்று நினைப்பவர்கள் பொது வாழ்விற்கு வரக்கூடாது.

கடைசி இரவு உணவின்போது இயேசு தனது சீடர்களின் பாதங்களை கழுவும்போது

 அவரிடம் என்ன மனநிலை இருந்ததோ அதே நிலை பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு இருக்க வேண்டும்.

"உங்களுள் பெரியவன் சிறியவன்போலவும், தலைவன் பணிவிடை புரிபவன்போலவும் இருக்கட்டும்."


"நானோ உங்கள் நடுவே பணிவிடை புரிபவனைப் போல் இருக்கிறேன்."
(லூக்.22:26,27)

"பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சீடர்களுடைய பாதங்களைக் கழுவி, இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்."


"ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் ஒருவருடைய பாதங்களைக் கழுவவேண்டும்."
(அரு.13 : 5, 14)

அதிகாரத்தையும் சுய புகழையும் விரும்புகிறவன் இறைப்பணிக்கு ஏற்றவன் அல்ல,

அடுத்து மூன்றாவது சோதனையாக:


"பின்னர் அலகை அவரை யெருசலேமுக்குக் கூட்டிச் சென்று, கோயிலில் முகட்டில் நிறுத்தி, " நீர் கடவுளின் மகனானால் இங்கிருந்து கீழேகுதியும்.

10 ஏனெனில், " உம்மைக் காக்கும்படி தம் தூதர்களுக்குக் கட்டளையிடுவார் " என்றும்,

11 "உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்" என்று எழுதியுள்ளது" என்றது."
(லூக்4: 9-11)

கோயில் முகட்டிலிருந்து கீழே குதிப்பதனால் உறுப்படியாக ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை.

 பயனற்ற சாதனை புரிவதில் பெருமை கொள்பவர்கள் தான் இத்தகைய காரியங்களை செய்வார்கள்.

இறைப் பணியில் ஈடுபடுவோர் ஆன்மாக்களுக்கு பயன்படத்தக்க காரியங்களில் தங்களது கவனத்தை முழுவதும் செலுத்த வேண்டுமே தவிர

 ஆன்மீக ரீதியாக பயனில்லாத உலக ரீதியாக பெருமை தேடித் தரக்கூடிய செயல்களில் நேரத்தை வீணாக்கக்கூடாது.

ஆண்டவர் இறைப் பணியினரிடம் "எத்தனை கட்டடங்கள் கட்டினீர்கள்,

 எத்தனை விழாக்கள் கொண்டாடினீர்கள் " என்று கேட்கப்போவதில்லை,

 "எத்தனை ஆன்மாக்களை மனம் திருப்பினீர்கள்" என்றுதான் கேட்பார்.

 மூன்றாவது சோதனையிலிருந்து நாம் இந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆண்டவர் தனது பொது வாழ்வின் போது நிறைய புதுமைகள் செய்தார்.

 எதற்காக?

மக்களது விசுவாசத்தை அதிகப் படுத்துவதற்காக.

அவர்களது உடல் நோயையும் ஆன்மீக நோயையும்

 குணப்படுத்துவதற்காக.

அவரை மெசியா என்று மக்கள் அறிந்து கொள்வதற்காக.

தனக்கு புதுமைகள் செய்ய தெரியும் என்று பீற்றிக் கொள்வதற்காக அல்ல. 


"நான் அவற்றைச் செய்தால்,

 என்னை விசுவசிக்காவிட்டாலும், என் செயல்களையாவது விசுவசியுங்கள்: 

இங்ஙனம், தந்தை என்னிலும், நான் தந்தையிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்,"
(அரு.10:38)



மேலும் ஒரு பார்வை:

"நீர் கடவுளின் மகனானால்"

என்று சாத்தான் முதலாவது மூன்றாவது சோதனைகளில் குறிப்பிடுகிறது.

சாத்தானுக்கு புத்தி கொஞ்சம் கம்மி.

உலக மீட்பர் பிறந்திருக்கிறார் என்று செய்தி வானத்திலிருந்து பூமிக்கு வந்த உடன், 

உலக மக்கள் மீட்பு அடையாமல் இருப்பதற்காக,

 அவரை கொன்றுவிட வேண்டும் என்று தீர்மானித்தது.

அதற்காக ஏரோதுவின் மூலம் முயன்றது.

முயற்சி பயனளிக்கவில்லை.

எகிப்திலிருந்து இயேசு திரும்பியவுடன் 30 ஆண்டுகள் மறைந்த வாழ்வு வாழ்ந்தார்.


பொது வாழ்விற்காக வெளியே வந்தவுடன் இயேசுவைக் கண்காணிக்க ஆரம்பித்தது.


அவர் இறைமகன் தானா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக இயேசுவை சோதித்தது.

ஆகவேதான் "நீர் கடவுளின் மகனானால் அப்பமாக மாறும்படி இந்தக் கல்லுக்குச் சொல்லும்".

"நீர் கடவுளின் மகனனானால் இங்கிருந்து கீழேகுதியும்."

என்று சோதித்தது.

ஆனால் மூன்றாவது சோதனையின்போது,

"உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே"

என்று இயேசு சொன்னவுடன் அவர் கடவுள் என்பதை உறுதி செய்து கொண்டது.

"சாத்தானுக்கு புத்தி கொஞ்சம் கம்மி" என்று சொன்னேன். அதற்கு காரணம் இருக்கிறது.


இயேசுவைக் கொன்றுவிட்டால் மக்களை மீட்பு அடையாமல் செய்துவிடலாம் என்பது அதன் திட்டம்.

 ஆனால், ஐயோ பாவம், அவர் தனது உயிரை கொடுத்துதான் மக்களை மீட்க போகிறார் என்ற விவரம் அதற்கு தெரியாமல் போய்விட்டது!

 தன் தலையிலேயே தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது போல

 அவரை யூதர்களின் மூலம் கொன்று 

எல்லா மக்களுக்கும் மீட்பு கிடைக்க சாத்தானே உதவியாக இருந்தது!

கடவுள் சாத்தானை தோற்கடிக்க சாத்தானையே பயன்படுத்திக்கொண்டார்!

"இதை எல்லாம் சொன்னது யார்?" என்று கேட்கக்கூடாது.

 சூழ்நிலையை வைத்து நாம் கணிக்கக் கூடிய ஒரு கணிப்பு, அவ்வளவுதான்.

அது இயேசுவை மட்டுமல்ல,

 இன்றும் அவரை பின்பற்றுகிற நம்மையும் தொடர்ந்து சோதித்து கொண்டுதான் இருக்கிறது.

 நாம் நம்மை முழுவதும் இயேசுவின் கரங்களில் ஒப்படைத்து விட்டால்,

 சாத்தானின் சோதனைகளிலிருந்து நமக்கு வெற்றி மேல் வெற்றியை இயேசு பெற்றுத்தருவார்.

லூர்து செல்வம்.

Thursday, January 21, 2021

"ஓய்வுநாளில் எது செய்வது முறை? நன்மை செய்வதா, தீமை செய்வதா?"(மாற்கு.3:4)

"ஓய்வுநாளில் எது செய்வது முறை? நன்மை செய்வதா, தீமை செய்வதா?"
(மாற்கு.3:4)

 "ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார்."

"அவ்வேழாம் நாளை ஆசீர்வதித்துப் பரிசுத்தமாக்கினார்."
(ஆதி.2: 2,3)

என்ற இறை வாக்குகள் நமக்கு தரும் இறை செய்தி:

 ஓய்வு நாள் இறைவனுக்கு உரிய பரிசுத்தமான நாள்.

ஓய்வு நாளின் நோக்கம் நாம்   இளைப்பாறுவது அல்ல.

அது முற்றிலும் இறைவனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்.


தினமும் சாப்பிடுகிறோம், ஆனால் திருவிழா காலங்களில் சாப்பிடுவதற்கும், தினமும் சாப்பிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா,


அதேபோல,

எல்லா நாட்களையும் ஆண்டவருக்காகத்தான் வாழ்கிறோம்.

எல்லா நாட்களிலும் செபிக்கிறோம்.

எல்லா நாட்களிலும் பைபிள் வாசிக்கிறோம்.

அதோடு வாழ்வதற்கு வருமானம் தேடி ஆற்றும் கடமைகளையும் நிறைவேற்றுகிறோம்.

மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கூடம் போகிறார்கள்.

வியாபாரி கடைக்குப் போகிறான்.
'
விவசாயி வயலுக்குப் போகிறான்.

அரசியல்வாதி கட்சிக் கூட்டங்களுக்குப் போகிறான்.

etc. etc.

ஆனால், ஓய்வு நாளில் வருமானம் தேடி ஆற்றும் கடமைகளை பொட்டலம் கட்டி பரணில் போட்டுவிட்டு, பக்தி முயற்சிகளை மட்டும் செய்ய வேண்டும்.

பைபிள் வாசித்தல், தியானித்தல், திருப்பலிக்குச் செல்லுதல் ஆகியவற்றோடு,

அந்த வாரத்தில் யாரோடாவது சமாதானக் குறைவு ஏற்பட்டிருந்தால் வலிய சென்று சமாதானம் செய்து கொள்ளுதல்,

தேவைப்படுவோருக்கு உதவுதல்,

நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறுதல்,

நற்செய்தி அறிவித்தல்,

கோவிற்பணி,

ஞானவாசகம்

போன்ற முழுக்க முழுக்க ஆன்மீகப் பணிகளை மட்டும் செய்ய வேண்டும்.

பெற்றோர் அன்று பிள்ளைகளிடம் ஞான காரியங்களைப் பற்றி மட்டுமே பேச வேண்டும்.

நாம் வழக்கமாக செய்வது என்ன?

திருப்பலி முடிந்தவுடன் கசாப்புக் கடைக்குப் போய் mutton வாங்கி சமையலுக்குக் கொடுத்துவிட்டு,

ஹாயா உட்கார்ந்து

TV. பார்த்தல்,

தியேட்டருக்குப் பகல் காட்சிக்கு செல்லுதல்,

Smart phone ஐ நோண்டுதல்,

 அரட்டை அடைத்தல்,

தூங்குதல்

போன்ற ஆன்மீகத்திற்குச் சம்பந்தம் இல்லாத, பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் மட்டும் நேரத்தை வீணாக்குகிறோம், அதாவது, பயன்படுத்துவது இல்லை.

இப்பொழுதெல்லாம் திருமணங்கள் கூட ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கின்றன.

ஆண்டவருக்காக செலவழிக்க வேண்டிய நாளை

 விருந்து உண்ணவும், 

வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், 

நண்பர்களோடு அரட்டை அடிக்கவும் செலவழிக்கிறோம்.  

அதுவும் கிறிஸ்மஸ், புத்தாண்டு, ஈஸ்டர் போன்ற திருநாட்களில் நடுச் சாம பூசைக்குப் போனால், அன்று பகல் முழுவதும் தூங்குவோம், சாப்பிடும் நேரம் தவிர.

நடுச் சாம பூசைக்குப் போய் விட்டு

பகல் முழுவதும் தூங்கினால்,

நடுச் சாம பூசைக்குச் சென்றதில் அர்த்தமே இல்லை.

தூங்குவாற்காகவா இயேசு பிறந்தார்?

சாப்பிடுவதற்காக மட்டுமா இயேசு உயிர்த்தார்?

சுருக்கத்தில்,
ஆண்டவருக்கான ஓய்வுநாளை நமக்கான ஓய்வுநாளாக, பொழுது போக்கு நாளாக ஆக்கிக் கொள்கிறோம்.

கேட்டால், "வாரத்தில் ஆறு நாட்களும் உழைத்து விட்டு, ஒரு நாள் ஓய்வு எடுத்தால்தானே அடுத்த ஆறு நாளும் உழைக்க முடியும்!" என்போம்.

பைபிளில் 

"ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார்." 

என்று போட்டிருப்பது, அன்று நாமும் உழைப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு,

அவருக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற செய்தியை நமக்கு அறிவிப்பதற்காகத்தான்.

உண்மையில் கடவுளால் ஓய்வு எடுக்க முடியாது.

அவர் ஒவ்வொரு வினாடியும் 
தான் படைத்தவற்றை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

கடவுள் ஓய்வே எடுக்காமல் அவரால் படைக்கப்பட்ட நமக்கு நன்மையை மட்டும் செய்து கொண்டிருக்கிறார்.

நாம் ஓய்வு நாளை மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Sundays must be utilised for doing good works.

பரிசேயர்கள் ஓய்வு நாளில் வேலை செய்ய கூடாது என்பதில் மட்டும் குறியாக இருந்தார்களே தவிர நன்மை செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தவில்லை.

ஒரு நாள் இயேசு செபக்கூடத்திற்கு வந்தபோது அங்கே சூம்பிய கையன் ஒருவன் இருப்பதைப் பார்த்தார்.


பரிசேயர்கள் அவர்மேல் குற்றஞ்சாட்டும்படி, ஓய்வுநாளில் குணமாக்குவாராவென்று பார்த்துக் கொண்டே இருந்தனர்.

அவர்கள் முன்னாலேயே சூம்பிய கையனைக் குணமாக்கினார்.

இதனால் கோபம் அடைந்த 
பரிசேயர்கள் வெளியே போய், ஏரோதியரோடு சேர்ந்து 

அவரை எப்படித் தொலைக்கலாமென்று அவருக்கெதிராக உடனே ஆலோசனை செய்தனர்.

ஆண்டவர் ஓய்வுநாளில் ஒரு நல்ல காரியம் செய்ததற்காக அவர் மீது குற்றம் சாட்டினார்கள்.

ஓய்வு நாளுக்கு ஆண்டவரே அவர்தான்.

அவரால் நல்லது மட்டுமே செய்ய முடியும்.

நாம் யாருடைய பக்கம்? 

நன்மை செய்த இயேசுவின் பக்கமா?

நன்மை செய்வது பாவம் எனக் கருதிய பரிசேயர்கள் பக்கமா?

நாம் ஓய்வுநாளில் பிறர் பணி எதுவும் செய்யாமல் ஓய்வு மட்டும் எடுத்துக்கொண்டிருந்தால் 

நாம் பரிசேயர்கள் பக்கமே நிற்கிறோம்.

பரிசேயர்கள் ஓய்வுநாளில்  நன்மை செய்வதைப் பற்றி அக்கரை காட்டவில்லை.

நன்மை செய்த இயேசுவையும்  விரும்பவில்லை.

அதாவது இயேசுவின் செயல்பாடுகளில் குற்றம் காண்பவர்களாக மட்டுமே இருந்தார்கள்.

ஓய்வுநாளை ஆண்டவருக்காக செலவழிக்காதவன் அவருக்கு எதிராக செலவழிக்கிறான்.

"என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்."
(மத்.12:30)

ஓய்வுநாளில் ஆண்டவரோடு மட்டுமே நாம் இருக்க வேண்டும்

 ஆண்டவரோடு இல்லாவிட்டால் அவருக்கு எதிராக இருக்கிறோம் என்றுதான் அர்த்தம்.

ஆன்மீக வாழ்வில் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்.

 முன்னேறாதவன் பின்னால் செல்கிறான்.

ஆண்டவர் ஓய்வு நாளை ஆசீர்வதித்துப் பரிசுத்தமாக்கினார்.

நாமும் பரிசுத்தத்தனத்தில் வளர அதை பயன்படுத்துவோம்.

லூர்து செல்வம்.