Tuesday, September 30, 2025

அதற்கு திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார். (லூக்கா நற்செய்தி 10:37)




அதற்கு திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார். 
(லூக்கா நற்செய்தி 10:37)

 
இயேசு, "உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" என்று கூறியபோது 

திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரிடம் 

 "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று  கேட்டார். 


அதற்குப் பதில் அளிக்கும் வகையில் இயேசு நல்ல சமாரியன் உவமையைக் கூறினார்.

 "ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார்.

 அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். 

இயேசுவின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு நயம் இருக்கும்.

எருசலேம் ஆலய நகரம், ஆன்மீக வாழ்வைக் குறிக்கிறது.

எரிக்கோ ஒரு வியாபார நகரம், லௌகீக வாழ்வைக் குறிக்கிறது.

கள்வர் லௌகீக வாதிகள், ஆன்மீகத்துக்கு எதிரிகள்.

ஆன்மீகம் சார்ந்த பக்தி வாழ்க்கையை விட்டு விட்டு லௌகீகம் சார்ந்த வாழ்க்கைக்குத் திரும்பும் போது இந்த விபத்து நடக்கிறது.

ஆன்மீகத்திலேயே இருந்திருந்தால் ஆண்டவர் துணையோடு பத்திரமாக இருந்திருப்பார்.

லௌகீக வாதிகளுக்குதான் ஆன்மீக விபத்துக்கள் ஏற்படும்.

அடிபட்டுக் கிடந்தவர் வழியாக ஒரு குருவும், லேவியர் ஒருவரும் வருகிறார்கள்.

இருவருமே இனரீதியாக யூதர்கள். அடிபட்டுக் கிடப்பவரும யூதர்.  அவர்கள் அடிபட்டுக் கிடப்பவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை.

அதாவது அவரைத் தங்கள் அயலானாக ஏற்கவில்லை.

மூன்றாவதாக ஒரு சமாரியர் வருகிறார்

அவர் அடிபட்டுக் கிடப்பவர் மீது பரிவு கொண்டு,   

அவரது காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். 

மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, "இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்கிறார். 

 இந்த உவமையைக் கூறிய பின் இயேசு ஒரு கேள்வி கேட்கிறார்,

"கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" 

அதற்கு திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்கிறார்.

 இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறுகிறார். 

மனிதர்கள் ஒவ்வொரும் அவரவர் அயலானுக்கு உதவி செய்ய வேண்டும்.

அயலான் என்றால் அதே இனத்தைச் சேர்ந்தவன் என்று அர்த்தம் அல்ல.

அதே சமயத்தைச் சேர்ந்தவன் என்றும்  அர்த்தம் அல்ல.

இரத்த உறவினன் என்றும் அர்த்தம் அல்ல.

இறைவனால் அவரது சாயலில் படைக்கப்பட்டவன், அதாவது அன்பும், இரக்கமும் உள்ளவன்.

அன்பும், இரக்கமும் உள்ளவன் தான் அயலானுக்குரிய கடமையைச் செய்ய முடியும்.

குருவும், லேவியரும் அடிபட்டுக் கடந்தவனைப் போல் யூதர்கள் தான், ஆனால் அன்பும், இரக்கமும் இல்லாதவர்கள்.

ஆகவே தங்கள் இனத்தவனுக்கு உதவி செய்யவில்லை.

ஆனால் அன்பும் இரக்கமும் உள்ள சமாரியர் இனம் பார்க்காமல் வேற்று இனத்தவருக்கும் உதவி செய்கிறார்.

இயேசு ஏன் அடிபட்டுக் கிடந்தவருக்கு அயலான் யார் என்று கேட்கிறார்?

எல்லோரும் மனிதர்கள் தான், மனிதனுக்குரிய பண்புகள் உரியவர்கள் தான் மனிதர் என்று அழைக்கப்பட ஏற்றவர்கள். அன்பு இல்லாதவர் மனிதர் என்ற பெயருக்கு அருகதை அற்றவர்.

அதேபோல நமக்கு அடுத்து இருப்பவர்கள் அனைவரும் அயலான்கள்தான் என்றாலும் 
அயலானுக்குரிய பண்பாகிய இரக்கம் உள்ளவர்கள் தான் அப்பெயருக்கு ஏற்றவர்கள்.

அதை நமக்கு உணர்த்தவே இந்த உவமை. 

இரக்கம் உள்ள சமாரியரே அயலான் என்ற பெயருக்கு ஏற்றவர்.

 இன, மத, சமூக வேறுபாடுகள் இல்லாமல், தேவைப்படும் அனைவருக்கும் நாம் உதவ வேண்டும் என்பதே இந்த உவமையின் முக்கியக் கருத்து.

அடிபட்டுக் கிடந்தவர் எருசலேமிலிருந்து எரிக்கோவுக்குப் பயணிப்பவர்,

அதாவது பக்தி நிறைந்த ஆன்மீக வாழ்வை விட்டுப் பாவ வாழ்க்கையை நோக்கிப் பயணிப்பவர்,

ஒரே வார்த்தையில் நல்லவரல்ல.

உதவி செய்பவர் இரக்கம் உள்ளவராக இருந்தால் உதவி தேவைப்படுபவர் எப்படி பட்டவர்களாக இருந்தாலும், நல்லவராக இருந்தாலும் கெட்டவராக இருந்தாலும் உதவி செய்வார்.

இயேசு இரக்கம் உள்ளவர், நாம் பாவம் செய்தவர்கள் ஆனால் நல்லவராகிய இயேசு கெட்டவர்களாகிய நம்மை ஒவ்வொரு வினாடியும் பாதுகாத்து பராமரித்து வருகிறார். 

அவரது அன்பைப் பார்த்து நாம் மனம் திரும்ப வேண்டும்.

நல்ல சமாரியன் மூலம் இயேசு நமக்கு கற்பிக்கும் பாடம் என்ன?

நாம் இரக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.  

நமது பிறர் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நமது இரக்கத்தின் காரணமாக அவர்களுக்கு உதவ வேண்டும்.

அதனால் தான் இயேசு

"நீரும் போய் அப்படியே செய்யும்" என்கிறார்.

நாமும் அப்படியே செய்வோம்.

லூர்து செல்வம்

Monday, September 29, 2025

இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, (லூக்கா நற்செய்தி 9:51)



இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, 
(லூக்கா நற்செய்தி 9:51)

இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் எது?

 இயேசுவுக்கு மட்டுமல்ல அனைத்து மனிதர்களுக்கும் அவர்களுடைய ஆன்மா சரீரத்தை விட்டுப் பிரியும் நாள் தான் விண்ணேற்றம் அடையும் நாள்.

மனிதனின் ஆன்மா உடலோடு இருக்கும் போது அது மண்ணுலகில் இருக்கிறது.

அது உடலை விட்டுப் பிரிந்தவுடனே உடல் மண்ணுக்கும்,
ஆன்மா விண்ணுக்கும் போகும்.

அப்படியானால் புனித வெள்ளி தான் இயேசு விண்ணேற்றம் அடையும் நாள்.

புனித வெள்ளி இயேசுவின் மரணநாள். 

வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணிக்கு இயேசு மரித்த வினாடியில் 

அவரது ஆன்மா பாதாளங்களில் இறங்கி 

அங்கு மெசியாவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பழைய ஏற்பாட்டு ஆன்மாக்களோடு விண்ணக வாழ்வுக்குள் நுழைந்தார்.

இயேசுவோடு மரித்த நல்ல கள்ளனும் அவரோடு விண்ணகம் அடைந்தார்.

(அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார்.)
(லூக்கா நற்செய்தி 23:43)


புனித வியாழன் இறுதி இரவு உணவு நாள்.

புனித வெள்ளி மரண நாள்.

இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, 

இறுதி இரவு உணவிற்கு (Last Supper) இடம் ஏற்பாடு செய்வதற்காக  தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். 

அவர்கள் சமாரியருடைய ஓர் ஊர் வழியாகப் போகத் தீர்மானித்தார்கள். 

ஆனால் சமாரியர்கள் அவ்வழியே செல்ல அனுமதிக்கவில்லை.

ஆகவே வேறோரு ஊர் வழியாக எருசலேமுக்குச் சென்றார்கள்.

சமாரியர்களுக்கு எருசலேமைப் பிடிக்காது.

சமாரியர் கலப்பின யூதர்கள்.

சமாரியர்கள் யோசேப்பின் பிள்ளைகளான எப்பிராயீம் (Ephraim) மற்றும் மனாசே (Manasseh) ஆகிய கோத்திரங்களின் நேரடி வம்சாவளியினர்.

அசீரிய படையெடுப்பின் போது 
இவர்களுக்கும் அசீரியர்களுக்கும் ஏற்பட்ட திருமண உறவின் காரணமாக பிறந்த கலப்பின மக்கள் இவர்கள்.

இவர்கள் எருசலேம் ஆலயத்திற்குச் செல்லவில்லை.    

கெரிசிம் மலையில் (Mount Gerizim) வழிபாடு செய்தார்கள்.

இவர்களும் மெசியாவின் வருகையை எதிர்பார்த்தார்கள்.

முன்பு ஒரு முறை இயேசு ஒரு சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் கேட்டபோது 

அவள் இயேசுவிடம், "கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்" என்று சொன்னாள். 

 "உம்மோடு பேசும் நானே அவர்" என்று இயேசு சொன்னார்.

அதன்பிறகு இயேசு சமாரியாவில் நற் செய்தி அறிவித்தார்.

ஆனால் இறுதி இரவு உணவுக்காக எருசலேம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது சமாரியா ஊருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் கோபமுற்ற யாக்கோபும் யோவானும் "ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?" என்று கேட்டார்கள். 

இது அவர்கள் ஆன்மீக வாழ்வில் முதிர்ச்சி அடையவில்லை என்பதைக் காட்டுகிறது.

இரக்கம் உள்ள இயேசு 
 அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார். 

இயேசு சமாரிய மக்களையும் நேசித்தார். அவர்களுக்காகவும் தான் அவர் பாடுகள் பட்டு மரிக்கப் போகிறார். 

அதனால் தான் சமாரியாவை அழிக்க விரும்பிய அருளப்பரையும் யாக்கோபையும் அவர் கடிந்து கொண்டார்.

இது இயேசு நமக்கு கற்பிக்கும் பாடம். 

நாம் பகைவர்களையும் மன்னிக்க வேண்டும். 

அவர்கள் கெட்டவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் அழிந்து போக நாம் ஆசைப்படக்கூடாது. 

அவர்களும் வாழ வேண்டும். 

இப்போது கட்டுரையின் தலைப்பில் உள்ள விண்ணேற்றம் என்பது பற்றி சிறிது தியானிப்போம்.

இயேசுவின் விண்ணேற்ற விழாவை அவர் உயிர்த்த 40வது நாள்   கொண்டாடுகிறோம்.

40 நாட்கள் அவ்வப்போது சீடர்களுக்குக் காட்சி கொடுத்த இயேசு அதற்குப் பிறகு காட்சி கொடுக்கவில்லை என்பதையே இந்த விழா குறிக்கிறது.

ஆனால் அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது,

"தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் "என்று கூறிய வினாடி இயேசுவின் ஆன்மா விண்ணகத் தந்தையிடம் சென்று விட்டது.

விண்ணகம் எங்கு இருக்கிறது? 

எங்கு என்ற வினாச் சொல் லௌகீக உலகில் ஒரு இடம் எங்கு இருக்கிறது என்பதைப் பற்றி அறிய, கேட்கப் பயன்படுத்தப்படுகிறது.

இது முழுக்க முழுக்க மண்ணுலகைச் சார்ந்த சொல்.

நம்மிடம் வேறு சொல் இல்லாததால் விண்ணுலகைப் பற்றி அறியவும் இந்தச் சொல்லைப் பயன்படுத்திகிறோம்.

விண்ணுலகம் இடம், காலத்துக்கு அப்பாற்பட்டது.

கடவுள் எங்கும் இருக்கிறார் என்ற உண்மையை நமது லௌகீகப் பொருளில் புரிந்து கொள்ளக்கூடாது. 

உலகம் சடப் பொருளால் ஆனது.

சடப் பொருள் இடத்தை அடைக்கும் தன்மை கொண்டது. 

ஒரு பொருள் இருக்கும் இடத்தில் இன்னொரு பொருள் இருக்க முடியாது. 

கடவுள் சடப்பொருள் அல்ல, ஆவி. 

ஆவி இருக்க இடம் தேவையில்லை.

அப்படியானால் கடவுள் எப்படி எங்கும் இருக்கிறார்? 

கடவுள் தனது வல்லமையால் எங்கும் இருக்கிறார். 

பிரபஞ்சம் முழுவதும் அவரது வல்லமைக்கு உட்பட்டது. 

அவரன்றி சடப் பொருளாகிய  ஒரு அணுவும் அசையாது.


நமது ஆன்மாவைப் போலவே இயேசுவின் ஆன்மாவும் ஆவி.

ஏற்றம் என்றால் ஏறிச் செல்வது.

விண்ணேற்றம் என்றால் விண்ணுக்கு ஏறிச் செல்வது.

நமது மொழியில் சடப் பொருள்தான் ஏறிச் செல்ல முடியும்.

இயேசுவின் ஆன்மா எப்படி ஏற முடியும்?

இது லௌகீக மொழியை ஆன்மீகம் பற்றி பேச பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்.

நாம் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

விண்ணகம் ஒரு இடமல்ல, வாழ்க்கை நிலை.

மனிதர்களாகிய நாம் மரிக்கும் போது நமது ஆன்மா விண்ணக நிலையை அடைகிறது.

இயேசு மரித்த உடனே அவரது ஆன்மா விண்ணக நிலையை அடைந்தது.

இயேசு மூன்றாம் நாள் உயிர்க்கும் போது ஆவியின் நிலையை (Spiritualized body) அடைந்த உடலோடு உயிர்த்தார்.

 நாற்பது நாட்கள் சீடர்களுக்குக் காட்சி கொடுத்த போதும் விண்ணக நிலையில் தான் காட்சி கொடுத்தார், அன்னை மரியாள் வேளாங்கண்ணியில் காட்சி கொடுத்தது போல. 

இயேசுவைப் போலவே நாம் மரிக்கும்போதும் நமது ஆன்மா மட்டும் விண்ணக நிலையை அடையும். 

உலகின் இறுதி நாளில் ஆவி நிலையில் உள்ள உடலோடு உயிர்ப்போம்.

விண்ணகத்தில் நமது ஆன்மாவும், உடலும் வாழ இடம் தேவையில்லை.

இயேசுவுடன் நித்திய நிலைவாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்

Sunday, September 28, 2025

மேலும் "வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று அவரிடம் கூறினார். (அரு.1:51)

 

மேலும் "வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று அவரிடம் கூறினார். 
(அரு.1:51)

ஏற்கனவே இயேசுவை அறிந்திருந்த பெத்செய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பு(அரு.1:44) 

கானா ஊரினரான நத்தனியேலை
(அரு.21:2)  
இயேசுவிடம் அழைத்து வந்தார்.


நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு,

 "இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்" என்று அவரைக் குறித்துக் கூறினார். 
(அரு.1:47)



நத்தனியேல், "என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என்று இயேசுவிடம் கேட்டார். 

இயேசு, "பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்" என்று பதிலளித்தார். 

அத்தி மரத்தின் அடியில் அமர்ந்து யூதர்கள் பைபிள் வாசிப்பது வழக்கம்.

ஒரு வேளை அவர் பைபிள் வாசித்துக் கொண்டிருந்திருக்கலாம்.

அப்போது பிலிப்பு அவரை அழைத்திருந்திருக்கலாம்.

அவர் இருந்த இடத்தை இயேசு சொன்னவுடனே

நத்தனியேல் அவரைப் பார்த்து, "ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்றார். 

அதற்கு இயேசு, "உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்" என்றார். 

வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று அவரிடம் கூறினார


இயேசு குறிப்பிட்ட இந்த வார்த்தைகள் யாக்கோபின் கனவை நினைவூட்டுகின்றன.

 யாக்கோபு பெத்தேலில் இருந்தபோது ஒரு கனவு கண்டார்.

 அந்தக் கனவில், தரையிலிருந்து வானம் வரை ஒரு ஏணி நீட்டிக்கப்பட்டிருந்தது. 

அதில் கடவுளின் தூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர். 

அந்த ஏணியின் உச்சியில் கடவுள் நின்று பேசினார். (தொடக்கநூல் 28:12-13).

யாக்கோபின் கனவில், அந்த ஏணி பூமியையும் பரலோகத்தையும் இணைத்தது.

 கடவுளின் தூதர்கள் வானத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்தனர். 

ஆனால், இயேசு கூறிய வார்த்தைகளில், தூதர்கள் "மனுமகன் மீது ஏறி இறங்குவார்கள்".


இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஒரு முக்கியமான மறைப்பொருள் தெளிவாகிறது:


யாக்கோபின் கனவில், ஏணியானது பூமியையும் பரலோகத்தையும் இணைத்தது.


இயேசுவின் காலத்தில், அவரே அந்த ஏணியாக, அதாவது பரலோகத்தையும் பூமியையும் இணைக்கும் ஒரே வழியானவராக இருக்கிறார்.


இஸ்ரயேலின் வம்சத்தில் மீட்பர் பிறப்பார் என்பது கடவுளின் திட்டம்.

 யாக்கோபுக்குக் கடவுள் கொடுத்த பெயர்தான் இஸ்ரேல். 

எனவே, இஸ்ரயேலின் கனவை விவரித்த வார்த்தைகளை இயேசு தன்னையே விவரிக்கப் பயன்படுத்தியதன் மூலம், இஸ்ரயேல் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மீட்பர் நான்தான் என்று இயேசு மறைமுகமாக உணர்த்துகிறார். 

அவரே கடவுளையும் மனிதனையும் இணைக்கும் ஒரே பாலம்.

நத்தனியேல் இயேசுவைச் சந்தித்த நிகழ்வைப் பற்றி நாம் தியானிக்கும்போது,

 நமது ஆன்மிக வாழ்வில் என்ன முன்னேற்றத்தை இந்த தியானம் தரும் என்பதைப் பார்ப்போம்.


​முதலில், பிலிப்புதான் நத்தனியேலுக்கு இயேசுவைப் பற்றிச் சொல்லி, அவரை இயேசுவிடம் அழைத்து வந்தார்.

​இயேசுவுக்கு நத்தனியேலைப் பற்றி ஏற்கனவே தெரியும், 

ஆனால் இயேசுவைப் பற்றி நத்தனியேலுக்கு எதுவும் தெரியாது. 

"நாசரேத்திலிருந்து நல்லது ஏதாவது வர முடியுமோ?" என்று அவர் கேட்டதிலிருந்து இது தெளிவாகப் புரிகிறது.

​பிலிப்பு இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே தனது நற்செய்திப் பணியைத் தொடங்கிவிட்டார். 

அவர்தான் நத்தனியேலுக்கு இயேசுவைப் பற்றி அறிவித்து, அவரை இயேசுவிடம் அழைத்து வந்தவர். 

அதற்கான உந்துதலை இயேசுவே கொடுத்திருக்க வேண்டும்.


​நத்தனியேல் இயேசுவிடம் வந்தவுடன், "தான் தான் உலகின் மீட்பர்" என்ற உண்மையை இயேசு மறைமுகமாக அறிவித்துவிட்டார்.

 விண்ணகத்துக்குச் செல்வதற்கான ஏணி இயேசுதான் என்பதை நத்தனியேலுக்கும் நமக்கும் அவர் உணர்த்திவிட்டார்.

​நாம் திருமுழுக்கு பெற்ற நாளிலிருந்தே இயேசுதான் உலகின் மீட்பர் என்பது நமக்குத் தெரியும். 

ஆனால், நாம் பைபிளை வாசிக்கும்போதுதான் அதைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்ள முடிகிறது.


​நமது ஆன்மிக வாழ்வின் நோக்கமே விண்ணகத்திற்கு ஏறிச் செல்வதுதான்.

 அதற்கான ஏணி இயேசு மட்டுமே. 

நாமும் இயேசுவாக மாறினால் மட்டுமே இறைவனின் தூதர்கள் நம் மீதும் ஏறி இறங்குவார்கள்.

​ஏனெனில், மனுமகன் மீது ஏறி இறங்கும் தூதர்கள், அவரோடு ஒன்றித்திருக்கும் நம் மீதும் ஏறி இறங்குவார்கள்.

 நாம் இயேசுவோடு ஒன்றித்து வாழ்வதுதான் மிக முக்கியம்.


​இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் நாம் உணவாக உட்கொள்வதன் நோக்கமும் அதுதான்.

 நாமும் விண்ணக வாழ்வின் சுவையை இந்த பூமியிலிருந்தே சுவைக்க ஆரம்பிப்போம்.


​நமது தியானம் செயலாக மாறுவது எப்படி?

​அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

​நத்தனியேலைப் போல ஆர்வத்துடன் பைபிள் வாசிக்க வேண்டும்.

​பிலிப்புவைப் போல, இயேசுவை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி, 

அவர்களை இயேசுவிடம் அழைத்து வர வேண்டும்.

​இயேசுவைப் போல வாழ்ந்து, நமது பண்புகளால் அவராகவே மாற வேண்டும்.

நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் இயேசுவாக மாறி வாழ்வோம்,

இவ்வுலகிலும், விண்ணுலகிலும். 

லூர்து செல்வம்.

Saturday, September 27, 2025

அதற்கு ஆபிரகாம், "மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். (லூக்கா நற்செய்தி 16:25)



அதற்கு ஆபிரகாம், "மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். 
(லூக்கா நற்செய்தி 16:25)

செல்வர், ஏழை இலாசர்‌ உவமையில் இயேசு  ஏழைகள் மீது இரக்கம் இன்றி தன் சிற்றின்ப வாழ்வையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் செல்வந்தனுக்கும்,

துன்பத்தை மட்டுமே அனுபவித்து வாழும் ஏழைக்கும் 

மறுவுலகில் எப்படிப்பட்ட வாழ்க்கை கிடைக்கும் என்று தெளிவுபடுத்துகிறார்.

உவமையில் செல்வந்தன் செய்த பாவங்களையோ, ஏழை செய்த புண்ணியங்களையோ இயேசு குறிப்பிடவில்லை.

"செல்வர்   விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். 

 ஏழை இலாசர்  உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். 

செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளைத் தின்று  பசியாற விரும்பினார். ஆனால் அவர் விருப்பம் நிறைவேறவில்லை.

 ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். 

செல்வர் இறந்தார். அவர் 
பாதாளத்தில் வதைக்கப் பட்டார். அதுவே அவருக்கு நிரந்தரமாகிவிட்டது.

இந்த உவமையினால் இயேசு சொல்லித் தரும் பாடம்,

உலகில் செல்வம் மிகுதியால் உண்டு குடித்து அதனால் கிடைக்கும் சிற்றின்பத்தில் மட்டும் மூழ்கி இருப்பவர்களுக்கு ஆன்மீக வாழ்வில் ஆர்வம் இருக்காது. 

லௌகீக வாழ்வில் மட்டும் ஆர்வம் உள்ளவர்களுக்கு விண்ணுலக வாழ்வு சாத்தியமில்லை. 

ஆனால் ஏழ்மையிலும் ‌ பாவம் செய்யாமல் வாழ்ந்து தங்கள் ஏழ்மையை இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக்கொள்கிறவர்களுக்கு விண்ணுலக நிலை வாழ்வு உறுதி.

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. 
(மத்தேயு நற்செய்தி 5:3)

செல்வர்  நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். 

ஆனால் மிகுதியான உடைமைக்குச் சொந்தமான அவர் தனது உணவை பசியோடு இருந்த ஒரு ஏழையோடு பகிர்ந்து கொள்ளவில்லை.

பகிர்ந்து கொண்டிருந்தால் அது கடவுளோடு பகிர்ந்து கொண்டதாக இருந்திருக்கும்.

உறுதியாக அவருக்கு ஆபிரகாம் மடியில் இடம் கிடைத்திருக்கும்.

அவரிடமிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்வோம்.

நம்மிடம் என்ன இருந்தாலும் அது கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்டதே.

கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட எதுவும் நமது பயன்பாட்டுக்காக மட்டுமல்ல.

நமது அயலானோடு பகிர்ந்து கொள்ளவும் தான்.

நாம் நம்மை நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்பது இயேசுவின் கட்டளை.

நமக்கு பசிக்கும் போது நமக்கு நாமே உணவு கொடுக்க ஆசைப்படுகிறோம்.

அப்படியானால் நமது அயலானுக்குப் பசிக்கும் போது அவனுக்கு நாமே உணவு கொடுக்க நாம் ஆசைப்பட வேண்டும்.

அந்த ஆசை வந்தால்தான் நாம் நமது அயலானை நேசிக்கிறோம் என்று அர்த்தம்.

அந்த ஆசை வந்தால் நம்மால் தனியாகச் சாப்பிட முடியாது.

அப்படிப் பகிர்ந்து உண்ணாமல் தாங்களாகவே அவ்வளவையும் சாப்பிடுகிறவர்கள் உவமையில் வரும் செல்வனை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஏழை இலாசரிடமிருந்து என்ன பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்?

ஏழ்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏழ்மையால் வரும் துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வதோடு அவற்றை இறைவனுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்க வேண்டும்.

இருக்கிறவன் இருப்பதைக் காணிக்கையாகக் கொடுக்கிறான்.

இல்லாதவன் இல்லாமையைக் 
காணிக்கையாகக் கொடுக்க வேண்டும்.

கடவுள் விரும்புவது நாம் கொடுக்கும் பொருளை அல்ல,
கொடுக்கிற மனதை.

இறைவனுக்கு காணிக்கை கொடுக்க வேண்டும் என்ற ஆசை மனதில் இருக்க வேண்டும்.

இயேசுவின் திரு விருந்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் அதற்காக ஆசைப்படுவதை "ஆசை‌ நன்மை" (Spiritual Communion) என்போம்.

இப்போது ஒரு கேள்வி எழும். உவமையைக் கூறிய இயேசு 

செல்வருக்குப்  பெயர் கொடுக்காமல்

ஏழைக்கு ஏன் இலாசர் என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்?

 "லேசரஸ்" (Lazarus) என்ற சொல்லுக்கு "கடவுள் என் உதவி" என்பது பொருள்.

எபிரேய மொழியில், 'எல்' (El) என்றால் 'கடவுள்' என்றும், 'அசார்' (azar) என்றால் 'உதவி' என்று பொருள்.

ஏழைகள் தாங்கள் ஏழ்மையோடு இருப்பதற்காக வருந்தக் கூடாது, மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதை வலியுறுத்த 

ஏழைக்கு "கடவுள் என் உதவி" என்ற பொருளில் இலாசர் என்ற பெயரைக் கொடுத்தார்.

செல்வர் பணம் உள்ளவர், அவ்வளவு தான்.

தங்களிடம் உள்ள பற்றை அவர்கள் விட்டு விட்டால் அவர்கள் ஏழையரின் உள்ளத்தோராக (Poor in spirit),

அதாவது கடவுளின் உதவியைப் பெற்றவர்களாக மாறி விடுவார்கள்.

கடவுள் ஏழைகள் பற்றிய தனது கருத்தை நமக்குப் புரிய வைக்கவே

செல்வருக்குப் பெயர் கொடுக்காமல் ஏழைக்கு இலாசர் என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்.

நம்மிடம்  செல்வம் இருந்தாலும் அதன் மேல் பற்று இல்லாமல் 

எளிய மனத்தவராய்

 இருப்பதை பிறரோடு பகிர்ந்து வாழ்வோம்.

நமது இறைவனோடு ஒன்றித்து வாழும் நித்திய பேரின்ப வாழ்வு உறுதி.

லூர்து செல்வம்

Friday, September 26, 2025

"நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்" என்றார். (லூக்கா நற்செய்தி 9:44)


"நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 9:44)

இயேசு இவ்வார்த்தைகளைத் தனது சீடர்களிடம் கூறினார்.

பேய் பிடித்த ஒருவனை இயேசு குணமாக்கிய போது 

மக்கள் கடவுளின் மாண்பைக் கண்டு மலைத்து நின்றார்கள். இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். 

அந்த சந்தர்ப்பத்தில் இயேசு  தம் சீடர்களிடம், தான் படப்போகும் பாடுகள் பற்றி கூறுகிறார்.

ஏன் இந்த சந்தர்ப்பத்தில் கூறுகிறார்?

இயேசு தனது புதுமைகள் மூலம் தான் வல்லமை கொண்ட மெசியா என்பதைச் சீடர்களுக்கு எண்பித்துக் கொண்டிருக்கிறார்.

அதே சமயத்தில் தான் புதுமைகள் செய்வதற்காக உலகுக்கு வரவில்லை,

மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகள் பட்டு மரிப்பதே தான் உலகுக்கு வந்ததன் நோக்கம் என்பதைச் சீடர்களுக்குப் புரிய வைப்பதற்காக 

புதுமை செய்தவுடனே சீடர்களிடம் 

"நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்" என்கிறார். 

ஆனால் அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை.

காரணம் இயேசு தனி இஸ்ரேல் இராச்சியம் அமைத்து அதை ஆள்வார் என்று ஏற்கனவே அவர்கள் மனதில் பதிந்திருந்த எண்ணம்

 அவர் பாடுகள் படுவார் என்ற‌ உண்மையை அவர்கள் உணர்ந்து கொள்ளாதவாறு தடுத்தது.

ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள். 

சீடர்களைப் போலவே நாமும் சில சமயங்களில் இயேசுவைத் தவறாகப் புரிந்து கொள்கிறோம்.

இயேசு நமது அரசர், ஆனால் அவருடைய அரசு இவ்வுலகைச் சார்ந்தது அல்ல, விண்ணுலகைச் சார்ந்தது.

சீடர்களைப் போலவே நாமும் இயேசு இவ்வுலகில் ஆட்சி செலுத்தப் போகிறார் என்று தவறாக எண்ணி

இவ்வுலகைச் சார்ந்த உதவிகளையே கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் எதைக் கேட்டாலும் அது விண்ணக வாழ்வைச் சார்ந்ததாக இருந்தால்தான் தருவார்.

இயேசு இவ்வுலகில் தான் பிறந்தார், இவ்வுலகில் தான் வாழ்ந்தார், 

ஆனால் இவ்வுலகுக்காக பிறக்கவில்லை, இவ்வுலகுக்காக வாழவில்லை.

பிறகு எந்த உலகுக்காக?

விண்ணுலகுக்காக.

அவர் நித்திய காலமும் விண்ணுலகில்தானே வாழ்ந்து வருகிறார்.

மண்ணுலகில் வாழும் நம்மை அவர் வாழும் விண்ணுலகுக்கு அழைத்துச் செல்வதற்காக மண்ணுலகில் மனிதனாகப் பிறந்தார்.

ஆகவே நமது வாழ்வின் நோக்கம் விண்ணுலகம் தான்.

தென்காசிக்குச் செல்வதற்காக மதுரையில் Train ஏறுபவன் தென்காசிக்குத்தானே டிக்கெட் எடுக்க வேண்டும்?

மதுரையிலிருந்து மதுரைக்கே டிக்கெட் எடுப்பவனை என்ன சொல்வோம்?

முட்டாள் என்று சொல்வோம்.

நாமும் அநேக சமயங்களில் முட்டாள்களாகவே செயல்படுகிறோம்.

விண்ணக வாழ்வுக்காகப் படைக்கப்பட்ட நாம் நம்மைப் படைத்த கடவுளிடம் விண்ணகம் செல்வதற்கு வேண்டியதைக் கேட்காமல் இந்த உலகில் வாழ்வதற்கான உதவிகளை மட்டும் கேட்டால் நாமும் முட்டாள்கள் தானே.

இந்த முட்டாள்தனத்திலிருந்து நம்மை விடுவித்து விண்ணகத்துக்கு அழைத்துச் செல்லவே இறைமகன் மனிதனாகப் பிறந்தார்.

அதற்காக அவரைக் கொல்லத் தேடுபவர்கள் கையில் தன்னை ஒப்படைக்க வேண்டும், அவர்கள் கையில் பாடுகள் பட்டு, நமது ஆன்மீக மீட்புக்காக மரிக்க வேண்டும் என்று தனது சீடர்களிடம் கூறினார்.

நாம் உலகில் ஈட்டுகிற பணம், சொத்து போன்றவை நமக்கு எக்காலமும் பயன்படாது.

இந்த உண்மையை உணர்ந்து இயேசு எதற்காக வந்தாரோ அதற்காக வாழ இயேசுவின் உதவியைக் கேட்டு மன்றாடுவோம்.

லூர்து செல்வம்

Thursday, September 25, 2025

அப்போது அவர்களை நோக்கி, "பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். (லூக்கா நற்செய்தி 9:3)



அப்போது அவர்களை நோக்கி, "பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். 
(லூக்கா நற்செய்தி 9:3)


இயேசு தனது சீடர்களை மக்களுக்கு நற் செய்தியை அறிவிக்க அனுப்பும் போது அவர்கள் வசம் கொடுத்து அனுப்பியது இரண்டு விடயங்கள் தான்.

1. அறிவிக்க வேண்டிய நற் செய்தி.

2. பேய்களை அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும், அதிகாரமும்.

பயணத்தின் போது ஒரு அங்கியைத் தவிர வேறு எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று பணித்தார்.

ஏன் இந்தக் கட்டுப்பாடு?

ஏன் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்று கட்டளையிட்டார்?

சீடர்களுக்குக் கொடுக்கப்பட பணி நற் செய்தி அறிவிப்பு.

பள்ளிக்கு வரும் மாணவன் கல்வி சார்ந்த பொருள்களை மட்டும் பள்ளிக்குக் கொண்டு வர வேண்டும்.

சம்பந்தம் இல்லாத பொருட்களை எடுத்துச் சென்றால் அவனது கவனம் அவற்றின் மேல் தான் இருக்கும், கல்வியின் மீது இருக்காது.

ஆண்டவர் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கூறிய பொருட்கள் நற் செய்தி அறிவிப்போடு நேரடித் தொடர்பு இல்லாதவை.

அவை கட்டாயம் தேவைப்பட்டால் நற் செய்தியைக் கேட்கும் மக்கள் கொடுத்து உதவுவார்கள்.

இயேசு நற் செய்தி அறிவித்த காலத்தில் மக்கள் அளித்த உணவைத் தான் உண்டார்.

அவர் உணவைப்  பற்றிக் கவலைப்படவில்லை.

உணவு கிடைக்காவிட்டால் பட்டினி தான்.

ஒரு முறை பசியாக இருந்ததால் ஒரு அத்தி மரத்தில் பழம் தேடிய செய்தி பைபிளில் இருக்கிறது.

"மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று. 

இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை.
(மாற்கு நற்செய்தி 11:12,13)


"அன்று ஓர் ஓய்வுநாள். இயேசு வயல்வழியே சென்று கொண்டிருந்தார். பசியாயிருந்தால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர்."
(மத்தேயு நற்செய்தி 12:1)

அன்று இயேசுவுக்கும், சீடர்களுக்கும் யாரும் சாப்பிடக் கொடுத்திருக்க மாட்டார்கள்.

பசியாக இருந்ததால் சீடர்கள் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர்.

ஆக அவர்களுக்கு நற் செய்தி அறிவிப்பின் அளவுக்கு உணவு முக்கியமானதல்ல.

ஆன்மீக உணவாகிய இறை அருள் தான் முக்கியம்.

நற் செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கும் போதே இறை அருள் கிடைத்துக்‌ கொண்டிருக்கும்.

அன்று சீடர்களுக்குக் கொடுக்கப்பட அறிவுரை நமது குருக்களுக்கும் பொருந்தும்.

"நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும்." ‌என்பது நமது திருச்சபை நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளை.

அவர்களுக்கு உரிய அத்தனை உடைமைகளையும் துறந்து விட்டு தான் நற் செய்திப் பணி புரிய வந்திருக்கிறார்கள்.

அவர்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கூட நிவர்த்தி செய்ய வேண்டியது நாம் தான்.

திருப்பலிக்கென்று நாம் கொடுக்கும் பணம் அந்த நோக்கத்திற்காகத் தான்.

என்ன பணிக்காக திருச்சபை பங்குக் குருக்களை நமக்குத் தந்திருக்கிறது?

இயேசு சீடர்களை அனுப்பிய அதே பணிக்காகத்தான்.

1.  நற் செய்தியை நமக்கு அறிவிக்க.

2. பேய்களை அடக்கவும் பிணிகளைப் போக்கவும்.

இரண்டுமே முழுக்க முழுக்க ஆன்மீகப் பணிகள்.

1. திருப்பலியின் போது மட்டுமல்ல,

 தமது இல்லங்களைச் சந்திக்க வரும்போதும், 

நாம் குருவானவரிடம் ஆன்மீக ஆலோசனை பெற அவரைச் சந்திக்கும் போதும்

 நற் செய்தியை மையமாக வைத்து தான் நம்மோடு பேசுவார்.

ஆனால் நம்மில் அநேகர் பங்குக் குருவை ஆன்மீக ஆலோசகராக (Spiritual Director) பயன்படுத்துவதில்லை.

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலை கேட்க,

நமது கல்லூரிகளில் Admission கிடைக்க சிபாரிசுக் கடிதம் வாங்க

போன்ற காரியங்களுக்காகவே பங்குக் குருவை அணுகுகிறார்கள்.

இயேசு அதற்காக குருக்களை நம்மிடம் அனுப்பவில்லை. 

திருப்பலி நிறைவேற்றுதல், இயேசுவை நமக்கு உணவாக தருதல், 
நமது பாவங்களை மன்னித்தல், 
தேவத் திரவிய அனுமானங்களை நிறைவேற்றுதல் போன்ற ஆன்மீக பணிகளுக்காகவே 
இயேசு அவர்களை நம்மிடம் அனுப்பியுள்ளார்.

2. நமது ஆன்மாவை சாத்தானின் பிடியிலிருந்து விடுவிப்பதும்,

பாவம் என்ற ஆன்மீக 
நோயிலிருந்து நம்மை குணமாக்கவும் இயேசு அவர்களை நம்மிடம் அனுப்பியுள்ளார்.

இந்த பணிகள் சிறப்பாக நிறைவேற வேண்டுமென்றால் 
பள்ளிக்கூடங்களின் நிர்வாகப் பிடியிலிருந்தும்,

 பங்கை சார்ந்த நிலங்களின் நிர்வாகப் பிடியிலிருந்தும் நமது குருக்களை  ஆயர் விடுவிக்க வேண்டும்.

அப்போதுதான் அவர்களால் முழுநேர ஆன்மீக பணி செய்ய முடியும். 

நமது ஞான மேய்ப்பர்களை  முழுக்க முழுக்க ஆன்மீகப் பணிக்காக பயன்படுத்திக் கொள்வோம்.

அவர்களை நமது குடும்ப உறுப்பினர்களாக பாவித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வோம். 

அவர்களுக்குச் செய்யும் உதவி இயேசுவுக்கு நாம் செய்யும் உதவி.

லூர்து செல்வம்.

Wednesday, September 24, 2025

இதைக் கேட்ட இயேசு சிறுமியின் தந்தையைப் பார்த்து, "அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்" என்றார். (லூக்கா நற்செய்தி 8:50)



இதைக் கேட்ட இயேசு சிறுமியின் தந்தையைப் பார்த்து, "அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 8:50)

தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் மரணப் படுக்கையில் இருந்த தன் மகளைக் குணமாக்க இயேசுவை அழைத்துச் சென்று கொண்டிருந்த போது மகள் இறந்து விட்டதாகச் செய்தி வந்தது.

அப்போது இயேசு சிறுமியின் தந்தையை நோக்கி,

"அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்" என்றார். 

அதன் பின் அவளது வீட்டுக்குச் சென்று அவளுக்கு உயிர் கொடுத்தார்.

நாம் இப்போது இயேசுவின் வார்த்தைகளை நமது தியானத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

இயேசுவின் வார்த்தைகள் உயிருள்ளவை.

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் கூறப்பட்ட வார்த்தைகள் அதே போன்ற எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தும்.

சாகக் கிடந்த சிறுமியின் தந்தை எதற்காக இயேசுவிடம் வேண்டினாரோ அது நிறைவேற வாய்ப்பு இல்லை என்ற செய்தி வந்த பிறகும்

இயேசு வேண்டியவரை நோக்கி,

"அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்" என்கிறார்.

இதேபோன்ற சூழ்நிலைகள் நமது வாழ்விலும் வரலாம்.

ஒருவர் ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

நேர்காணப் போகுமுன் அதிகாலையில் எழுந்து பைபிளைத் திறந்து அன்றைய வாசகத்தை வாசித்து விட்டு,

 காலையில் ஆறு மணிக்கே நற்கருணை நாதரைச் சந்திக்கிறார்.

நேர் காணல் காலை பத்து மணிக்கு.

"ஆண்டவரே, நான் வேலைக்கு விண்ணப்பித்திருப்பது உமக்குத் தெரியும். நான் வேலை சம்பந்தமான நேர்காணலுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.

நேர் காணலில் நான் வெற்றி பெறவும், வேலை கிடைக்கவும் எனக்கு உதவி செய்யும்."

நேர் காணப் போய்க் கொண்டிருக்கும் போது காலை எட்டு மணியளவில் ஒரு கார் நடு ரோட்டில் நின்று கொண்டிருந்தது.

சிறிது விலகி தனது பைக்கை நிப்பாட்டி விட்டு காருக்குள் எட்டிப் பார்த்தார்.

காரை ஓட்டி வந்தவர் Wheelல் குப்புறப் படுத்திருந்தார்.

வேறு யாரும் காருக்குள் இல்லை.

இது எப்படி நிகழ்ந்தது அவரால் யூகிக்க முடியவில்லை.

கதவிலுள்ள கண்ணாடி திறந்திருந்தது.

அருகில் யாருமில்லை.

உடனே இவர் தன் பைக்கை ஒரு ஓரத்தில் நிப்பாட்டி விட்டு,

கதவுத் திறப்பு வழியே காருக்குள் ஏறி, படுத்திருந்தவரை கட்டப்பட்டு தூக்கி Driver seat ஓரமாக உட்கார வைத்து விட்டு காரை அருகிலிருந்த மருத்துவ மனைக்கு ஓட்டிச் சென்று, அங்கு நின்ற சிலர் உதவியுடன் படுத்திருந்தவரை மருத்துவ மனையில் admit செய்தார்.

மருத்துவர் வந்து அவரைக் காப்பாற்றி விட்டார்.

அவர் எழுமட்டும் அவர் அருகில் அமர்ந்திருந்தார்.

மணி ஒன்பது ஆகிவிட்டது.

நடந்ததை எல்லாம் அவரிடம் சொன்னார்.

அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

"தம்பி, கடவுளுக்கு நன்றி. உன் Bike ரோட்டோரம் கிடக்கிறது. நீ என் காரில் நேர் காணச் செல்."

இவர் காரில் சம்பந்தப்பட்ட அலுவலகம் செல்லும் போது மணி பத்தரை.

நேர் காணலில் கலந்து கொள்ள முடியவில்லை.

"ஆண்டவரே, உம்மால் நல்லது மட்டுமே செய்ய முடியும்.
ஆபத்தில் இருந்த ஒருவருக்கு உதவி செய்ய உதவியதற்கு நன்றி."

என்று கூறி விட்டு காரில் மருத்துவ மனைக்கு வந்து Car Driver டம் எல்லா விபரங்களையும் கூறிவிட்டு,

அவரோடு ரோட்டுக்கு வந்து பைக்கை எடுத்துக் கொண்டு நேரே கோவிலுக்குச் சென்று 

நற்கருணை நாதரைச் சந்தித்து நன்றி கூறிவிட்டு வீட்டுக்கு வந்தார்.

பைபிளைத் திறந்து காலையில் வாசித்த வசனத்தை திரும்பவும் வாசித்தார்.

""அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்"

"ஆண்டவரே, என்ன நேர்ந்தாலும் என் நம்பிக்கையை இழக்க மாட்டேன்.

நீர் நல்லதை மட்டுமே செய்வீர்.
என்ன நேர்ந்தாலும் உமக்கு நன்றி கூறுவேன்."

இது நடந்த இரண்டாவது நாள் அவர் எதிர்பாராத வகையில் அவருக்கு ஒரு Courier post வந்தது.

திறந்து பார்த்தார்.

நியமன உத்தரவு.
(Appointment order)

அவர் வண்ணப்பிக்காத கம்பெனியிலிருந்து.

உதவி நிர்வாகியாக.

அவர் விண்ணப்பித்திருந்த கம்பெனி வாக்களித்ததிலிருந்து இரு மடங்கு சம்பளம்.

நற்கருணை நாதரைச் சந்தித்து நன்றி கூறிவிட்டு 

உத்தரவில் இருந்து விலாசத்திற்குச் சென்றார்.

நிர்வாகி நாற்காலியில் அமர்ந்திருந்தவர் அன்று மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்ற அதே நபர்.

"சார், நீங்களா!!"

"நானே தான். அமருங்கள்."

"நான் இதை எதிர் பார்க்கவில்லை.இறைவனுக்கு நன்றி, உங்களுக்கும் நன்றி."

"அன்று மருத்துவ மனையில் உங்களோடு பேசிக் கொண்டிருந்த போது அறிந்த விபரங்ஙளின் அடிப்படையில் உத்தரவை அனுப்பினேன்.

அன்று என் மேல் கோபம் வந்ததா?"

"எதற்கு?"

"என்னால்தானே நீங்கள் விண்ணப்பித்த வேலை கிடைக்கவில்லை."

"உங்களால் அல்ல. கடவுளால். நடப்பதெல்லாம் அவரது சித்தப்படிதானே நடக்கும்.

நீங்கள் அவரது சித்தம் நிறைவேற அவர் பயன்படுத்திய கருவி.

எனக்கு நீங்கள் வேலை தருவீர்கள் என்று நம் இருவருக்கும் தெரியாது.

ஆனால் இது கடவுளின் நித்திய காலத் திட்டம்."

"அன்று காரில் நான் வந்து கொண்டிருந்த போது ஒரு மாதிரி வந்தது.

உடனை brake போட்டு வண்டியை நிறுத்தி விட்டு wheel ல் சாய்ந்து கொண்டேன்.

அப்புறம் என்ன நடந்தது என்று மருத்துவ மனையில் தான் தெரியும்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எனக்கு மயக்கம் வரச் செய்தவர் கடவுள், உங்களை அனுப்பியவரும் கடவுள். இது உங்கள் நம்பிக்கை."

"சத்தியமாக. நம்மை ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வழி நடத்துபவர் அவர்தான்."

"நமது கம்பெனியையும் லாபகரமான முறையில் வழி நடத்த கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்."

"கடவுளுடைய திட்டம் நமக்கு உதவிகரமாகவே இருக்கும். கடவுளால் நல்லதை மட்டுமே செய்ய முடியும்."

கடவுளை‌ நம்புவோம்.

அவரால் நமக்கு நன்மையை மட்டுமே செய்ய முடியும் என்று நம்புவோம்.

நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும்.

என்ன நடந்தாலும் நல்லதாகவே இருக்கும்.

லூர்து செல்வம்.

Tuesday, September 23, 2025

ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக்கொள்ளப்படும். " (லூக்கா நற்செய்தி 8:18)



ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக்கொள்ளப்படும். " 
(லூக்கா நற்செய்தி 8:18)

குருவானவர் மறையுரையின் போது இயேசுவின் நற்செய்தியை நமக்கு விளக்கும் நாம் காது கொடுத்து கேட்கிறோம்.

நாம் கேட்கும் விளக்கம் நமது மனநிலையைப் பொறுத்துப் பலன் தரும்.

ஒரு பாத்திரத்தின் வாய் மூடியிருக்குமானால் அதில் ஊற்றும் தண்ணீர் பாத்திரத்துக்குள் போகாது.

வீணாய் தரையில் விழும்.

அதுபோல நமது மனம் நற் செய்தியை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தால் மட்டுமே நற் செய்தியால் நமக்குப் பலன் உண்டு.

போதிப்பதால் மட்டும் எந்தப் பயனும் ஏற்படாது.

கேட்பவர் மன நிலை எப்படி இருக்க வேண்டும்?

முதலில் நற் செய்தியின் மேல் ஆர்வம் இருக்க வேண்டும்.

திறந்த மனதுடனும், கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடனும் கேட்பவர்கள் தான் அந்த செய்தியின் முழு நன்மையையும் பெறுவார்கள்.

விருப்பம் இல்லாமல் வேறு வழியின்றி கேட்பவர்கள் நற் செய்தியால் எந்தப் பயனும் பெற மாட்டார்கள்.

"உள்ளவருக்குக் கொடுக்கப்படும்;

 இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்."

நற் செய்தியை ஏற்று அதை வாழ்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு  நற் செய்தியும், அதன் பயனும் தாராளமாகக் கொடுக்கப்படும்.


ஆர்வம் இல்லாதவரிடமிருந்து அவர்களிடம்  ஏற்கனவே இருக்கும் சிறிதளவு நற் செய்தி ஞானமும்  எடுத்துக்கொள்ளப்படும்.

ஒரு முறை ஆர்வம் இருந்து அதனால் கிடைத்த ஞானம்

ஆர்வம் போகும் போது அதோடு சேர்ந்து போய்விடும்.

ஆன்மீக வாழ்வில் ஆன்மீக ஆர்வம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும்.

அப்பப்போ வந்து காணாமல் போகும் ஆர்வத்தினால் எந்த பயனும் இல்லை.

The good news and its generous benefits are brought forth only through unending love and perseverance for God's word. 

கடவுளின் வார்த்தையின் மீது இடைவிடாத அன்பைக் கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே நற்செய்தியையும் அதன் நன்மைகளையும் தாராளமாகப் பெற முடியும்.

இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பதில் ஆர்வம் வேண்டும்.

அதை நமது வாழ்வாக மாற்ற‌ ஆசையும் முயற்சியும் இருக்க வேண்டும்.

இறை வார்த்தையை ஆர்வத்தோடு ‌கேட்டு அதை வாழ முயற்சிப்பவர்கள் இறை வாழ்வுக்குத் தங்களை முற்றிலும் அர்ப்பணிப்பார்கள்.

அர்ப்பண வாழ்வு அவர்களுக்கு நித்திய பேரின்ப வாழ்வை ஈட்டித் தரும்.

சாப்பிடும் போது நமது கவனம் முழுவதும் ருசித்துச் சாப்பிடுவதில் மட்டும் இருக்கும்.

சாப்பிடும் போது வேறு எந்த வேலையையும் செய்ய மாட்டோம்.

அதேபோல் நற் செய்தி வாழ்வுக்காக நம்மை அர்ப்பணித்து விட்டால் வாழ்நாள் முழுவதும் நற்செய்தியை வாழ்வதில் மட்டும் நமது கவனம் இருக்கும். 

நமது செயல்கள் அனைத்தும் நற்செய்தியிலிருந்து பிறக்கும் நற்செயல்களாகவே இருக்கும்.

அன்னை மரியாள், 
"இதோ ஆண்டவருடைய  அடிமை." என்று தனது வாழ்வை இறைப் பணிக்கு அர்ப்பணித்த வினாடியிலிருந்து 

வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கு மட்டுமே பணிபுரிந்தாள்.

இயேசு எந்த காரணத்துக்காக உலகுக்கு வந்தாரோ அது நிறைவேறும் வரை மனரீதியாக அவரோடு ஒன்றித்துப் பயணித்தாள்.

கருவறையிலிருந்து பிறந்தவுடன் தன் மடியில் தாங்கிய குழந்தை இயேசுவை

 அவருடைய சிலுவை மரணத்துக்கு பின்னும் தன் மடியில் தாங்கியே கல்லறைக்கு அனுப்பினார்.

நாமும் தாயைப் போல் பிள்ளைகளாக வாழ்வோம். 

நற் செய்திக்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வோம்.

லூர்து செல்வம்

Monday, September 22, 2025

படகு போய்க் கொண்டிருந்தபோது அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார். அப்பொழுது ஏரியில் புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள். (லூக்கா நற்செய்தி 8:23)



படகு போய்க் கொண்டிருந்தபோது அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார்.
 அப்பொழுது ஏரியில் புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள். 
(லூக்கா நற்செய்தி 8:23)

நாம் இன்று தியானத்துக்கு எடுத்துக் கொள்ளும் வசனம்,

"படகு போய்க் கொண்டிருந்தபோது அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார்."

பைபிள் வசனங்களைத் தியானிக்கும் போது இயேசு சர்வ வல்லப கடவுள் என்ற இறை உண்மையை மையமாக வைத்துக் கொண்டு தான் தியானிக்க வேண்டும்.

படகில் ஏறியது இறை இயேசுவும் அவருடைய சீடர்களும்.

 படகில் ஏறியதும், "ஏரியின் அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்" என்று சொன்னவர் அவர்தான்.

அதாவது சீடர்களை ஏரியின் அழைத்துச் சென்றவர் இயேசு.

அழைத்துச் சென்றவர் ஏன் தூங்கினார்?

இயேசு கடவுள் என்ற கோணத்திலிருந்து சிந்தித்தால், 

கடவுள் எதையும் திட்டமிடாமல் செய்ய மாட்டார் என்ற உண்மையை மையமாக வைத்து தான் தியானிக்க வேண்டும்.

கடவுள் நித்தியர். அவருடைய திட்டங்கள் எல்லாம் நித்தியகால திட்டங்களாகவே இருக்கும். 

நாம் ஒரு நாள் காலையில் எழுந்து,

''நாம் இன்று பூசைக்கு மலைக் கோவிலுக்குப் போவோம்" என்று திட்டமிடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். 

ஒரு வினாடியில் நாம் போடும் திட்டம் கூட கடவுளின் நித்திய கால திட்டத்தின் அடிப்படையில் தான் இருக்கும். 

கோவிலுக்குப் போகும்போது ஏதாவது ஒரு எதிர்பாராத நிகழ்வு நடந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். 

நமக்கு அது எதிர்பாராத நிகழ்வு. ஆனால் அது கடவுள் நித்திய காலமாக திட்டமிட்ட நிகழ்வு. 

இயேசுவும் சீடர்களும் கடலில் பயணித்துக் கொண்டிருந்த போது 

 ஏரியில் புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள். 

இதைச் சீடர்கள் படகில் ஏறும்போது எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் இயற்கை நிகழ்வுகள் அனைத்தும் இறைவன் திட்டப்படி தான் நடக்கும்.

சீடர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இயேசு தூங்கினார். அவருடைய திட்டப்படி புயல் வீசியது.

என்ன பாவம் கற்பிக்க?

புயல் வீசும் போது சீடர்கள் இயேசுவிடம்  வந்து, "ஆண்டவரே, ஆண்டவரே, சாகப் போகிறோம்" என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். 


அவர் விழித்தெழுந்து காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் கடிந்துகொண்டார். 

உடனே அவை ஓய்ந்தன; அமைதி உண்டாயிற்று. 

சீடர்கள் பயந்து தன்னை எழுப்ப வேண்டும் என்பதற்காகத்தான் இயேசு தூங்கினார். 

இயற்கை நிகழ்வுகள் அவருடைய கட்டுப்பாட்டில் தான் இருந்தன என்ற உண்மையையும்,

அவர் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற உண்மையையும், 

அவர் அவர்களுக்கு எந்த விதமான ஆபத்தையும் வரவிட மாட்டார் என்ற உண்மையையும்

அவர்களுக்குப் போதிப்பதற்காக ஏரிப் பயணத்தைத்   இயேசு திட்டமிட்டார்.

"காற்றுக்கும் நீருக்கும் கட்டளையிடுகிறார். அவை இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" 

என்று அவர்கள் கூறுவதிலிருந்து இயற்கை இயேசுவுக்குக் கட்டுப்பட்டது என்ற உண்மையைப் புரிந்து கொண்டார்கள் என்பது தெரிகிறது.


ஆனால் அவர்கள், 

"இவர் யாரோ?" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டதிலிருந்து அவர்களுக்கு இன்னும் அவர் மீது உறுதியான விசுவாசம் ஏற்படவில்லை என்பதும் தெரிகிறது. 

ஆனால் இயேசுவுக்கு இந்த உண்மையும் நித்திய காலமாக தெரியும். 

சீடர்கள் தங்கள் நிலையை உணர்வதற்காகவே இயேசு இப் பயணத்தைத் திட்டமிட்டார்.

ஏரிப் பயண நிகழ்வு சீடர்களுக்குப் போதிக்க இயேசுவால் நிகழ்ந்தது.

ஆனால் சீடர்களுக்கு மட்டுமல்ல. நமக்காகவும் தான்.

நாம் வாசித்துப் பயன் பெறவே இதைச் சீடர்கள் நற் செய்தி நூலாக எழுதினார்கள்.

ஒவ்வொருவர் வாழ்விலும் தற்செயல் நிகழ்வுகள், 
எதிர் பார்த்ததற்கு எதிரான நிகழ்வுகள், 
நோய் நொடிகள், 
விபத்துக்கள் போன்றவை நடப்பதுண்டு.

பாவம் மட்டுமே நாம் நமது விருப்பப்படி செய்வது, 

மற்ற நிகழ்வுகள் எல்லாம் இறைவனது நித்திய காலத் திட்டத்துக்கு உட்பட்டவை.

நாம் எந்த நாட்டில், 
எந்த ஊரில் 
யாரிடமிருந்து, 
எப்போது பிறக்க வேண்டும், எவ்வளவு காலம் வாழ வேண்டும், 
எப்போது மரணிக்க வேண்டும் என்று நித்திய காலமாகத் திட்டமிடுபவர் கடவுளே.

நாம் நம்முடைய சுதந்திரத்தைப் பயன்படுத்தி பாவத்தை விலக்கி, நல்லவர்களாக வாழ வேண்டும்.

நல்லவர்களாக வாழ வேண்டிய சூழ்நிலைகளை கடவுள் ஏற்படுத்திக் கொடுப்பார்.

பாவ சந்தர்ப்பங்கள் சாத்தானின் வேலை.

அவற்றிலிருந்து தப்பிக்க கடவுள் வழி காட்டுவார்.

அவ்வழியே நடக்க அருளையும் தருவார்.  அதன்படி நடக்க வேண்டியது நமது கடமை.

நமக்கு நோய் நொடிகள் போன்ற துன்பங்களை கடவுள் அனுமதிப்பது நாம் அவரைத் தேடவும், நம்பிக்கையோடு வாழ நமக்கு உதவுவதற்காகவும் தான்.

வாழ்க்கையில் ஏற்படும் தோல்வி கூட வெற்றிக்குக் காரணமாக இருக்கும்.

ஆகவே என்ன நேர்ந்தாலும் நன்மைக்கே என ஏற்றுக் கொண்டு இறைவனுக்குப் பிரியமானவர்களாக நாம் வாழ வேண்டும்.

என்ன வாழ்க்கை நிலை நமக்குக் கிட்டுகிறதோ அது இறைவனின் திட்டம் என்பதை ஏற்றுக் கொண்டு அன்பு செய்து நற்செயல்கள் புரிந்து வாழ்வோம்.

அதுதான் நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்லும்.

லூர்து செல்வம்.

Sunday, September 21, 2025

அவர் அவர்களைப் பார்த்து, "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்றார். (லூக்கா நற்செய்தி 8:21)



அவர் அவர்களைப் பார்த்து, "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 8:21)

இறையியல் படி‌

 இயேசுவுக்கு 
தேவ சுபாவத்தில் தந்தை இருக்கிறார், தாய் இல்லை,

மனித சுபாவத்தில் தாய் இருக்கிறாள், தந்தை இல்லை.

ஆன்மீக வாழ்வில் இயேசுவோடு ஒன்றித்த நமது ஆன்மீக வாழ்வில் இறை வார்த்தையை வாழ்கின்ற அனைவரும் 

இயேசுவின் தாய்களும், சகோதர, சகோதரிகளும்.

அன்னை மரியாள் விண்ணகத் தந்தையிடமிருந்து கபிரியேல் தூதர் கொண்டு வந்த நற் செய்தியை வாழ்ந்தாள்.

 "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று மரியாள் சொன்ன வினாடியில் இயேசு அவள் வயிற்றில் மனித உரு எடுத்தார். 

முதலாளியின் சொல்லுக்கு அப்படியே கீழ்ப்படிபவன்தான் அடிமை.

மரியாள் இறைவனின் வார்த்தையை மட்டும் தான் வாழ்ந்தாள்.

தனக்காக மட்டும் உழைப்பவனுக்கு ஒரு அப்பா, ஒரு அம்மா.

ஆனால் ஊருக்காக உழைப்பவனுக்கு ஊரிலுள்ள அனைவரும்
 அப்பா, அம்மாக்கள் தான்.

அறிவியல் ரீதியாக உயிரியல் படி(Biologically) பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெற்றவள் மட்டுமே அம்மா.

ஆனால் ஆன்மீக ரீதியாக (Spiritually) யாரெல்லாம் இறையன்பாலும், அதிலிருந்து பிறந்த பிறரன்பாலும் இயக்கப் படுகிறார்களோ அவர்களெல்லாம் ஒருவருக்கொருவர் அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உறவினர்கள்.

மரியாள் மட்டும் உயிரியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் இயேசுவுக்கு அம்மா.

இறை வார்த்தையை வாழும் நம்மைப் பொறுத்தமட்டில் நமது ஆன்மீக உயிரான அன்பின் அடிப்படையில்

அன்பின் உருவாகிய இயேசு உட்பட நாம் அனைவரும் குடும்ப உறவினர்கள்.

ஆன்மீக ரீதியாக இயேசு தம் ஒவ்வொருவருக்கும் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா.

நமது அனைத்து உறவினர்களும் அவர்தான்.

நாமும் அவருக்கு தந்தை தாய் சகோதர சகோதரிகள் ஆகிய உறவினர்கள்.

உயிரியல் ரீதியான உறவு உயிர் உடலை விட்டு பிரிந்தவுடன் முடிந்து விடும்.

ஆன்மீக ரீதியான உறவு இவ்வுலகில் மட்டுமல்ல விண்ணுலகிலும் நித்திய காலம் நீடிக்கும்.

இயேசுவை நோக்கி செபிக்கும் போது, "எங்களைப் பாவத்திலிருந்து மீட்க உங்கள் உயிரையே பலியாக்கிய அன்பு அண்ணா." என்று அழைக்கலாம். 

இது பைபிள் ரீதியாக இயேசு நம்மோடு பகிர்ந்து கொண்ட உறவு.

"இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்"

இந்த உறவு நெருக்கமாக நீடிக்க வேண்டுமென்றால் நாம் பாவ மாசு இல்லாமல் பரிசுத்தர்களாக இயேசுவின் வார்த்தைகளை நமது வாழ்வாக்க வேண்டும்.

"தாயைத் தண்ணீர்க் கிணற்றில் பார்த்தால் மகளைப் பார்க்க வீட்டுக்குப் போக வேண்டாம்"

என்ற ஒரு பழ மொழி உண்டு.

தாயைப் போல பிள்ளை என்ற நம்பிக்கையிலிருந்து பிறந்த பழமொழி.

இதன் அடிப்படையில் பார்த்தால் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இயேசுவைப் போல் இருக்க வேண்டும்.

நம்மைப் பார்ப்பவர்கள் நம்மில் இயேசுவைப் பார்க்க வேண்டும்.

நம்மைப் பார்த்து இயேசு எப்படிப் பட்டவர் என்று மற்ற மக்கள் அறிந்து கொள்ளும் அளவுக்கு நமது வாழ்க்கை இருக்க வேண்டும்.

பாடுகளின் போது பரிசேயர்கள் அவரை‌ எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவமானப் படுத்தினார்கள்.

மற்றவர்கள் நம்மை அவமானப் படுத்தும் போது நாம் அமைதி காத்தால் நாம் இயேசுவின் சகோதரர்கள்.

நம்மை யாராவது ஒரு கன்னத்தில் அறைந்தால் நாம் மறு கன்னத்தையும் காட்டினால்  நாம் இயேசுவின் சகோதரர்கள்.

நமக்குத் தீமை செய்தவர்களை நாம் மன்னித்தால்  நாம் இயேசுவின் சகோதரர்கள்.

"விண்ணகத் தந்தையே, உமது திருமகனும், எங்கள் சகோதரருமாகிய இயேசுவைப்போல் நாங்களும் வாழ எங்களுக்கு அருள் தாரும்.'' 

லூர்து செல்வம்.

.

Saturday, September 20, 2025

நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள். (லூக்கா நற்செய்தி 16:8)



நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள். 
(லூக்கா நற்செய்தி 16:8)

வாழ்க்கையை முன்மதியுடன்
வாழ வேண்டும்.

நமது வாழ்க்கைப் பயணத்தின் இலக்கை முதலில் அறிந்து அதை அடைவதற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு வாழ வேண்டும்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு இலக்கு இருக்கும்.

மனிதர்களை லௌகீக வாதிகள், ஆன்மீக வாதிகள் என இரண்டு வகையினராகப் பிரிக்கலாம்.

லௌகீக வாதிகள் உலகைச் சார்ந்து வாழ்பவர்கள்.

இவர்களுடைய வாழ்க்கையின் இலக்கு பொருள் ஈட்டுவதும், உலகைச் சார்ந்த வசதியோடு வாழ்வதும்
தான்.

அதை மையமாக வைத்தே அவர்களுடைய திட்டமிடலும், செயல்படுவதும் இருக்கும்.

ஆன்மீக வாதிகள் இறைவனைச் சார்ந்து வாழ்பவர்கள்.

விண்ணக வாழ்வை மையமாக வைத்தே அவர்களுடைய திட்டமிடலும், செயல்படுவதும் இருக்கும்.

இறைவனோடு வாழும் நித்திய பேரின்ப வாழ்வுதான் இவர்களுடைய வாழ்க்கையின் இலக்கு.

நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர் உண்மையில் இயேசு இறைவனின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள்   அதிக முன்மதியுடன் செயல்படுகிறார்கள் என்று கூறுகிறார்.

நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர் தனது வசதியான வாழ்வுக்காக தனது முதலாளிக்கே துரோகம் செய்யத் தயங்கவில்லை.

அவர் தன்னுடைய முன்மதியை தவறான வகையில் பயன்படுத்துகிறார்.

நமது அனுபவத்தில் இறைவனின் மக்கள் உலகின் மக்கள் அளவு முன்மதியுடன் செயல்படவில்லை.

இறைவனின் மக்களின் வாழ்வின் நோக்கம் விண்ணக வாழ்வு.

பணம் ஈட்டுவதோ, வசதியாக வாழ்வதோ அவர்களுடைய வாழ்க்கையின் நோக்கம் அல்ல.

ஆனால் திரு முழுக்குப் பெற்று இறைவனுக்காக வாழ்கிறோம் என்று சொல்பவர்கள் கூட 

இறைவனுக்காக இவ்வுலகப் பொருளையும், வசதியான வாழ்க்கையையும் தியாகம் செய்யத் தயாராக இல்லை.

இறை அருளை ஈட்ட வேண்டுமென்றால் பொருளை தியாகம் செய்ய வேண்டும்.

நம்மிடம் உள்ள பொருளை ஏழை எளியவர்களோடு பகிர்ந்து கொண்டால் தான் இறை அருள் கிடைக்கும்.

வாழ்க்கை வசதிகளை விட்டுக் கொடுத்தால் தான் இறைவனுக்கு ஊழியம் செய்ய முடியும்.

9 மணி வரை தூங்க ஆசைப்படுபவன் அந்த ஆசையைத் தியாகம் செய்யா விட்டால் காலை எட்டு மணித் திருப்பலியில் கலந்து கொள்ள முடியுமா?

என்ன கட்டங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் இறைவன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தால் தான் இயேசுவின் திரு விருந்தில் கலந்து கொள்ள முடியும்.

திருமணம் ஒரு திரு அருட்சாதனம், 

லௌகீக நிகழ்வு அல்ல.

ஒரு ஆணையும் பெண்ணையும் ஒரு குடும்பமாக இணைத்து வைப்பது இறைவன்.

அவர்களுடைய இணைப்பின் படைப்பு நிகழ்வில் இறைவனோடு சேர்ந்து செயல் புரிவது.

முழுக்க முழுக்க ஆன்மீக ரீதியானது.

திருமண உறவில் லௌகீகத்துக்கு சிறிது கூட இடமில்லை.

இறைவன் படைக்கும் ஆன்மாவுக்கு உடலைத் தயாரிக்க வேண்டியது இவர்களுடைய இறைப் பணி.

இது மிகவும் புனிதமான பணி.

லௌகீக வாதிகள் திருமணத்தை லௌகீகக் கண் கொண்டு பார்க்கிறார்கள். அதனால் தான் அவர்கள் திருமண ஏற்பாட்டில் அழகுக்கும், பணத்துக்கும், நகை நட்டுகளுக்கும், ஆடம்பரத்துக்கும அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். லௌகீக காரணங்ஙகளால் இணையும் தம்பதியர் அதே காரணங்களுக்காகப் பிரிந்தும் போகிறார்கள்.

ஆனால் கத்தோலிக்கத் திருமணத்தில் முக்கியத்துவம் பெறுபவர் கடவுள் மட்டுமே.

திருமணத் தம்பதியர் இணைவதும் அவருக்காகத்தான், வாழ்வதும் அவருக்காகத் தான். அவர் இணைத்த திருமண பந்தத்தை எந்த மனித சக்தியாலும் பிரிக்க முடியாது.


அழகு, பணம், நகை நட்டுகள், ஆடம்பரம் போன்ற லௌகீகப் பொருட்களுக்கு ஆன்மீகத்தில் முக்கியத்துவம் இல்லை.

அவை புனிதமான திருமண உறவைப் பாதிக்கக் கூடாது.

ஆனால் பக்தியுள்ள கத்தோலிக்கர்கள் கூட இந்த விசயத்தில் அஞ்ஞானிகளைப் போல செயல்படுவது தான் வருத்தத்துக்குரிய விசயம்.

கத்தோலிக்கர்களாகிய நாம் இயேசுவின் நற்செய்தியை மட்டும் மையமாக வைத்து,

விண்ணக வாழ்வை நோக்கமாகக் கொண்டு 

முன்மதியுடன் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Friday, September 19, 2025

" எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர். (லூக்கா நற்செய்தி 8:16)



"எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர். 
(லூக்கா நற்செய்தி 8:16)

 "நானே உலகின் ஒளி" என்ற இயேசு

 நம்மை நோக்கி" நீங்கள் உலகின் ஒளியாக இருக்கிறீர்கள்." என்றும் கூறினார்.

அவருடைய ஒளியை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

அன்பே உருவானவர் இயேசு.
அதேபோல் 
ஒளியே உருவானவர் இயேசு.

அவருடைய பண்புகளை எல்லாம் நம்மோடு பகிர்ந்து கொண்டதால் நாம் அவருடைய சாயலில் இருக்கிறோம்.

கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்வதானால்,

நம்மை இயேசுக்களாகப் படைத்திருக்கிறார்.

அவரும் ஒளி, நாமும் ஒளி.

பொருட்களைக் கண்ணுக்குத் தெரிய வைப்பது ஒளியின் தன்மை.

ஒளி இல்லாமல் எந்த பொருளையும் பார்க்க முடியாது. 

ஒரு பொருளை அது உள்ளபடியே பார்க்க வேண்டும் என்றால் அதன் மேல் ஒளிபட வேண்டும்.

ஒளியின் உதவியால்தான் உண்மையை உண்மையாக உணர முடியும். 

இயேசு நம்மோடு பகிர்ந்து கொண்ட ஒளியால் தான் அவரையே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 

இயேசு நம்மோடு பகிர்ந்து கொண்ட ஒளி நமது அயலான் மேல் பட வேண்டும்.

அதாவது நமது ஒளி எல்லோர் மீதும் படும்படியாக இருக்க வேண்டும்.

யாராவது ஒளி தரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடி வைபாபார்களா?

ஒளியை ஏற்றி அதை மூடி வைப்பதும் ஒளியை ஏற்றாதிருப்பதும் ஒன்றுதான்.

‌விளக்கை ஏற்றி விளக்குத் தண்டின் வைத்தால்தான் அறை முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.

அறையில் உள்ள எல்லா பொருள்களும் நமது கண்களுக்கு தெரியும்.

நாமும் ஒளியாக இருக்கிறோம்.

நாம் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு முன்மாதிரியாக வாழ வேண்டும் என்றால் நாம் செய்வது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும். 

நாம் நல்லவர்களாக வாழ்வது மற்றவர்களுக்குத் தெரிந்தால் தான் அவர்கள் நம்மைப் பின்பற்றி நல்லவர்களாக வாழ்வார்கள்.

நம்மை விளம்பரப்படுத்துவதற்காக மற்றவர்கள் முன் செயல்களை செய்யக்கூடாது. 

விளம்பரம் வியாபாரத்திற்கு உரியது. 

நமது நற்செயல்களைப் பார்த்து மற்றவர்களும் நற்செயல்களைப் புரியும் படி அவர்களுக்கு முன் மாதிரியாக வாழ வேண்டும்.

விளம்பரத்திற்காக எதைச் செய்தாலும் ஆன்மீக ரீதியாக எந்த பயனும் இல்லை. 

மற்றவர்கள் நம்மை பார்த்து செயல்படும்படி முன் மாதிரி கையாக வாழ்ந்தால் நமக்கு விண்ணகத்தில் சன்மானம் காத்திருக்கும்.

ஒரு செயல் நல்லதா கெட்டதா என்பதை அதன் நோக்கம் தீர்மானிக்கும். 

பிறர் மீது நமக்குள்ள அன்பின் மிகுதியால்  அவர்கள் நலமாக வாழ மருத்துவமனை நடத்தினால் அது சேவை.

சுய விளம்பரத்துக்காக நடத்தினால் வியாபாரம்.

நம்மிடமுள்ள அன்பு, இரக்கம் போன்ற நற்பண்புகளையும், திறமைகளையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய நற்பண்புகளால் மற்றவர்களும் பயன்பெற வேண்டும்.

கடவுள் இரக்கம் உள்ளவர், அவரது இரக்கத்தை நம்மை பாவத்திலிருந்து மீட்பதற்காக பாடுகள் பட்டு மரிக்க பயன்படுத்தினார்.

அவரது தாராள குணத்தை நம்மோடு அவரது பண்புகளை பகிர்ந்து கொள்ள பயன்படுத்தினார். 

நாமும் நமது அயலானோடு நமக்கு உரியது அனைத்தையும் பகிர்ந்து கொள்வோம். 

இயேசுவாக வாழ்வோம். 

லூர்து செல்வம்.

Thursday, September 18, 2025

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும். (லூக்கா.8:15)

 

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும். 
(லூக்கா.8:15)

இயேசு நற் செய்தியை விதைக்கு ஒப்பிடுகிறார்.

மனித மனத்தை நிலத்துக்கு ஒப்பிடுகிறார். 

நற்செய்தி விதை முளைத்து வளர்ந்து பலன் தருவது அது விழும் மனித மனதின் தன்மையை பொறுத்தது.

நற்செய்தி நல்ல விதைதான். 

ஆனால் அது நமக்கு பயன் அளிக்க வேண்டும் என்றால் நமது மனது நல்ல மனதாக இருக்க வேண்டும். 

நல்ல மனது என்றால்? 

லௌகீக எண்ணங்களாலும் ஆசைகளாலும் நிரம்பிய மனது நல்ல மனது அல்ல. 

ஆன்மீகம் சார்ந்த எண்ணங்கள் மட்டுமே உதிக்கும் மனது நல்ல மனது.

லௌகீக மனதில் நற்செய்தி விதை விழுந்தால் உலகைச் சார்ந்த எண்ணங்கள் அது முளைத்து வளர விடாமல் அமுக்கி விடும்.

ஆன்மீக மனம் எப்போதும் இறைவனைச் சார்ந்த செய்திகளுக்காக ஏங்கி காத்துக் கொண்டிருக்கும்.

ஆன்மீக மனமுடையன் திருப்பலிக்குச் செல்லும்போது இன்று குருவானவர் இன்றைய நற்செய்தி வாசகத்துக்கு என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார் என்பதை எதிர்பார்த்துச் செல்வான். 

குருவானவரின் நற்செய்தியைச் சார்ந்த மறையுறையைக் கூர்ந்து கவனிப்பான். 

கேட்ட விளக்கத்தை அன்று முழுவதும் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் வாழ்ந்து கொண்டிருப்பான்.

"தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது."
(லூக்கா நற்செய்தி 14:27)

இந்த நற்செய்தி வசனத்திற்கான விளக்கத்தை திருப்பலியின் போது மறையுரையில் கேட்டான் என்று வைத்துக்கொள்வோம் 

அன்று முழுவதும் தான் சந்திக்கும் அத்தனை துன்பங்களையும் சிலுவைகளாக ஏற்றுக்கொண்டு தனது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுத்துக் கொண்டிருப்பான்.

உணவு நேரத்தில் அவன் எதிர்பார்க்கும் அளவுக்கு உணவில் ருசி இல்லை என்று வைத்துக் கொள்வோம், 

அவனது எதிர்பார்ப்புக்கு எதிராக இருப்பதால் அது ஒரு துன்பம் தான். 

அத்துன்பத்தை இயேசுவின் சிலுவைப் பாடுகளோடு ஒன்றித்து தனது பாவங்களுக்குப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக் கொடுப்பான். 

அலுவலகத்தில் அவனது கவனக்குறைவின் காரணமாக நிர்வாகியிடம் திட்டு வாங்க வேண்டியிருந்தது என்று வைத்துக் கொள்வோம்.

அதையும் சிலுவையாக ஏற்று இறைவனுக்கு ஒப்புக் கொடுத்து விடுவான்.

ஒரு செயல் சிலுவையாக மாறுவதற்கு நோய் நொடிகள், வலிகள், வேதனைகள் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

அவையும் சிலுவை தான். 

நமது விருப்பத்திற்கு மாறாக ஏதாவது ஒரு சிறிய நிகழ்வு நடந்தால் கூட அதை சிலுவையாக மாற்றிக் கொள்ளலாம். 

தந்தையிடமிருந்து எதிர் பார்த்துக் கொண்டிருந்த கடிதம் வரவில்லை.

அதனால் ஏற்படும் சிறிய வருத்தத்தை சிலுவையாக மாற்றி இறைவனுக்கு ஒப்பு கொடுத்து விடலாம்.

"உன் பகைவனை நேசி, உனக்குத் தீமை செய்தவனுக்கு நன்மை செய்."

இது மனதில் விழுந்த நற்செய்தி விதை என்று வைத்துக் கொள்வோம்.

அதற்காக பகைவனையும் தீமை செய்தவனையும் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை.

யாரும் நமக்குத் தெரியாமலேயே நமக்கு ஏதாவது தீங்கு செய்திருக்கலாம். 

ஆகவே நாம் சந்திக்கும் அனைவரிடமும் முகமலர்ச்சியோடு பழகி, அனைவருக்கும் நன்மை செய்தால் நாம்  நற்செய்தியை வாழ்வாக்குகிறோம்.

"அனைவருக்கும்" என்று சொல்லும் போது தீமை செய்தவர்களும் அதற்கு அடங்கி விடுகிறார்கள்.

நற்செய்தி விதைக்கு ஏற்ற நல்ல நிலமாக நமது மனதை பேண வேண்டியது நம்முடைய கடமை. 

ஆன்மீக வாழ்வுக்கு எதிரான அத்தனை பற்றுகளும் நமது மனதை பாதிக்காமல் பார்த்துக் கொண்டாலே போதும். 

விவசாயி நிலத்தில் களை முளைக்காமல் பார்த்துக் கொண்டாலே விவசாயப் பயிர் நன்கு வளர்ந்து பலன் தரும்.

நமது மனதை நல்ல விளை நிலமாகப் பேணிக் காப்போம்.

நற் செய்திப் பயிர் செழித்து வளர்ந்து மிகுந்த பலன் தரும்.

லூர்து செல்வம்.

Wednesday, September 17, 2025

அதற்குப்பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். (லூக்கா.8:1)



அதற்குப்பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். 
(லூக்கா.8:1)

இயேசு 30 வயதுவரைத் திருக் குடும்பத்தில் வாழ்ந்தார்.

யோசேப்பும், அன்னை மரியாளும் அவரை நன்கு கவனித்துக் கொண்டார்கள்.

யோசேப்பு இறந்தவுடன் தாயின் பராமரிப்பில் வாழ்ந்தார்.

31வது வயதில் பொது வாழ்வுக்கு வந்தார்.

திருக்குடும்பத்தில் இருந்த போது தங்க வீடு இருந்தது.

பராமரிக்க அன்னை இருந்தாள்.

ஆனால் பொது வாழ்வில் தங்க சொந்த வீடு இல்லை.

ஊர் ஊராகச் சென்று நற் செய்தியை அறிவித்தார்.

பகலில் நற் செய்தியை அறிவித்துவிட்டு இரவு முழுவதும் செபித்தார்.

அவர் தாயையும் வீட்டையும் விட்டு வந்தது போலவே பெற்றோரையும், உறவினர்களையும், வீட்டையும் மற்ற உடமைகளையும் விட்டு வந்த பன்னிரண்டு சீடர்களும் அவரோடு இருந்தார்கள்.

அவர்களுடன் பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், 

ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்,


ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும்,

 சூசன்னாவும்,

 தாயின் இடத்திலிருந்து தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள். 

சென்ற இடமெல்லாம் நற் செய்தி அறிவித்ததோடு, நோயாய் இருந்தவர்களைக் குணமாக்கினார்.

அவர்களில் சிலர் அவரைப் பின் பற்றினர்.

உதாரணத்துக்கு இயேசு மகதலா என்ற மீன் பிடிக்கும் கிராமத்துக்கு நற் செய்தியை அறிவிக்கச் சென்ற போது அங்கு  மீன் பிடிப்பதைத் தொழிலாகக் கொண்ட ஒருவரின் மகள் மரியாவுக்கு ஏழு பேய்களிலிருந்து விடுதலை கொடுத்தார்.

அவள் நன்றி உணர்வோடு அவரைப் பின் சென்று அவருக்குச் சேவை செய்தார்.

இயேசு நற் செய்திப் பணியின் போது அவருடைய சீடர்கள் பிற்காலத்தில் எப்படிப் பணி புரிய வேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக வாழ்ந்தார்.

இது பற்றிய வசனங்களை வாசித்தால் மட்டும் போதாது.

அவற்றைத் தியானித்து இயேசுவை நமது வாழ்வாக்க வேண்டும்.

எப்படி இயேசுவை வாழ்வது என்பது பற்றித் தியானிப்போம்

இயேசுவை வாழ்வது என்றால் இயேசுவாக வாழ்வது,

 இயேசுவின் பண்புகளுடன் வாழ்வது, 

இயேசுவைப் பிரதிபலித்து வாழ்வது.

30 ஆண்டுகள் தனது தாய்க்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார் என்றால் இயேசு எந்த அளவுக்கு மாதாவை நேசித்தார் என்று புரிந்து கொள்ளலாம்.

ஆனால் பொது வாழ்வுக்கு வரும்போது மாதாவை விட்டு தான் வந்தார்.

அவருடைய சீடர்களும், சீடத்திகளுமே அவருடன் சென்றார்கள்.

நாம் நமது பெற்றோரை, சகோதர சகோதரிகளை மிகவும் நேசிக்கலாம்.

ஆனால் பொது வாழ்வுக்கு வரும்போது பொது நன்மைக்காக உழைக்க வேண்டியது நமது கடமை.

நமது காலத்தில் வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இயேசு தன் தாயை நேசித்தது போலவே நம் அனைவரையும் நேசிக்கிறார்.

உண்மையில் நம்மைப் பார்க்க வருவதற்காகத்தான் தன் தாயையே படைத்தார்.

பாவிகளாகிய மீட்பதற்காகத்தான் இயேசு தாயிடமிருந்து பிறந்தார்.

இதிலிருந்து நாம் என்ன ஆன்மீக பாடம் கற்றுக் கொள்கிறோம். 

பாவிகள் மனம் திரும்ப விருப்பத்தோடு உழைப்பவர்கள் தான் உண்மையிலேயே மாதா பக்தர்கள்.


 மங்கள வார்த்தை செபம் சொல்லும் ஒவ்வொரு முறையும்

"பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்களது மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்."
என்று சொல்கிறோம்.

எனக்காக என்று சொல்லவில்லை,

 "எங்களுக்காக அதாவது எனக்காகவும் எனது பிறர் அனைவருக்காகவும்."

இயேசு தனது நன்மைக்காக மாதாவிடம் பிறக்கவில்லை.

பாவிகளாகிய நமக்காக பிறந்தார். 

தனக்காக அன்றி மற்றவர்களுக்காக பாடுகள் பட்ட முதல் மாதா பக்கர் ‌(அன்னையின் மீது பாசம் உள்ளவர்) இயேசு. 

நமது பாவ மன்னிப்புக்காக மட்டும் அல்லாமல், அனைத்து மக்களின் பாவ மன்னிப்புக்காகவும் வேண்டுபவர்கள் தான் உண்மையான மாதா பக்தர்கள். 

இதற்காகத்தான் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது தனது அன்னையை நமது அன்னையாக இயேசு தந்தார்.

"மாதாவின் மைந்தன் ஆகிய நான் உலக பாவிகளின் மீட்புக்காக எனது உயிரை பலியாக்குகிறேன்.

என் அன்னையை உங்களது அன்னையாக தந்து விட்டேன். 

இனி நீங்களும் மாதாவின் மைந்தர்கள்தான்.

என்னைப் போல நீங்களும் உலகில் உள்ள அத்தனை பாவிகளும் மனம் திரும்ப உங்களது உயிரையும் பலியிட தயாராக இருங்கள்."

இது இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது நமக்கு அளித்த வேண்டுகோள். 

இயேசுவின் வேண்டுகோளை நிறைவேற்றுவோம்.

இயேசுவின் நற்செய்தி பயணத்தின் போது அவரோடு சென்றவர்கள் அவருடைய சீடர்கள். 

நாமும் இயேசுவின் சீடர்கள்தான். 

சீடர்களாக செயல்படுகிறோமா அல்லது சீடர்கள் என்ற பெயரோடு மட்டும் வாழ்கிறோமா?

நமது உடைமை பொருட்களை விட்டு விட்டு அவரைப் பின்செல்கிறோமா?

அல்லது நமது உடைமைகளையும் சுமந்து கொண்டு அவரைப்  பின் செல்கிறோமா?

நமது உடைமைகளையும் சுமந்து கொண்டு அவரைப்  பின் சென்றால் நமது கவனம் நமது உடைமைகள் மேல் தான் இருக்கும், இயேசுவின் மேல் இருக்காது. 

கோவிலில் வழிபாடு நடந்து கொண்டிருக்கும் போது தங்களது வீட்டு பிரச்சனைகளை பற்றி அசை போட்டுக் கொண்டிருக்கும் மக்கள் தங்கள் உடைமைகளை சுமந்து கொண்டு கோவிலுக்கு வந்திருப்பவர்கள்.

அப்படிப்பட்டவர்கள் எப்படி இறை வழிபாட்டில் தங்களை முழுவதும் ஈடு படுத்த முடியும்?

அன்பு, இரக்கம் போன்ற ஆன்மீக உடைமைகளோடு மட்டும் இயேசுவைப் பின்பற்றுவோம்.

சீடர்கள் தங்கள் உடைமைகளை எல்லாம் விட்டு விட்டு இயேசுவின் பின் சென்றார்கள்.

சீடத்திகள் எவ்வாறு சென்றார்கள்?

பெண்களுக்குள்ள தாய்மைக் குணத்தோடு தங்ஙள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.

அவர்களிடமிருந்து நாம் கற்கும் பாடம்,

நாமும் நமது உடைமைகளைக் கொண்டு‌ இயேசுவுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். 

விண்ணகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசுவுக்கு எப்படி பணிவிடை செய்வது?

நமது அயலானுக்குச் செய்யும் உதவிகளை இயேசுவுக்கே செய்கிறோம். 

நமது ஞான மேய்ப்பர்களுக்கு பணிவிடை செய்யும்போது இயேசுவைக்கே செய்கிறோம்.

இயேசுவின் திரு விருந்தில் பங்கேற்று, நம் உள்ளத்தில் வரும் இயேசுவிடம் நம்மையே பலியாக ஒப்புக் கொடுப்பதும் அவருக்கு நாம் செய்யும் சேவை தான்.


லூர்து செல்வம்

Tuesday, September 16, 2025

இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். (லூக்கா.7:38)


இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். 
(லூக்கா.7:38)

பரிசேயருள் ஒருவரின் அழைப்பை ஏற்று இயேசு   அவருடைய  வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார். 

 பாவியான பெண் ஒருவர் . இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பதை அறிந்து   

 நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்து,


இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து  அழுது கொண்டே நின்றார்;

 அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து,

 தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். 

அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, "இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; 

இவள் பாவியாயிற்றே" என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். 

இயேசுவை விருந்துக்கு அழைத்த பரிசேயர் இயேசுவை கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லை.

"இவர் ஓர் இறைவாக்கினர் என்றால்," என்று அவர் நினைத்ததைப் பார்த்தால் இறைவாக்கினர் என்று உறுதியாக ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

ஒருவருடைய வார்த்தைகளுக்கோ, செயல்களுக்கோ பொருள் காண்பது அவர் யார் என்பதை வைத்து தான்.

பொதுவாகப் பரிசேயர்கள் இயேசுவின் வார்த்தைகளிலும் செயல்களிலும் குறை காண்பதிலேயே குறியாக இருந்தார்கள்.

அதற்காகக் கூட இயேசுவை விருந்துக்கு அழைத்திருக்கலாம்.

தான் பாவங்களை மன்னிக்க வல்ல கடவுள் என்று அவனுக்கு அறிவுறுத்துவதற்காகக் கூட 
இயேசு பாவியாகிய பெண் அங்கு வர அனுமதித்திருக்கலாம்.

பரிசேயரிடம் நமது நேரத்தை வீணாக்காமல் பாவியான பெண்ணின் செயலைப் பற்றித் நியானிப்போம், ஏனெனில் நாம் பாவிகள்.

பரிசேயர், "இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே" என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.

இயேசுவுக்கு அந்தப் பெண் பாவி என்பது தெரியும்.
நித்திய காலமாகத் தெரியும்.


அவர் பாவிகளைத் தேடித்தானே உலகுக்கு வந்தார்?

பாவங்களுக்கு மன்னிப்புப் பெறுவதற்காகவே அவரைத் தேடி வந்தவரைப் பற்றிக் கடவுளாகிய அவருக்குத் தெரியாமலிருக்குமா?

பாவியாகிய பெண் தன்னைத் தொட அனுமதித்ததன் மூலம் இயேசு நமக்கு என்ன நற் செய்தியை அறிவிக்கிறார்?

இறைமகன் மனுமகனாகப் பிறந்ததே பாவிகளாகிய நம்மை மன்னிப்பதற்காகத்தான்.

மனிதனாகப் பிறக்காமல் விண்ணிலிருந்தே நமது பாவங்களை மன்னித்திருக்க முடியாதா?

முடியும். அவர் நினைத்தால் எல்லாம் முடியும்.

பின் ஏன் நம்மைத் தேடி உலகுக்கு வந்தார்?

நண்பர் அவர் வீட்டுத் திருமண விழாவுக்கு வந்து மண மக்களை வாழ்த்தும்படி அழைத்திருக்கிறார்.

வாழ்த்துக்களை WhatsApp மூலமும், பரிசுப் பொருளை Courier மூலமும் அனுப்ப முடியாதா?

முடியும். நமக்கும் போக்குவரத்து செலவு மிச்சம்.

பிறகு ஏன் திருமண வீட்டுக்குப் போகிறோம்?

நேரடியாகச் சென்றால்தான் நமது அன்பின் தன்மை அவர்களுக்குப் புரியும்.

அதேபோல, கடவுள் மனிதனாகப் பிறக்காமலே நமது பாவங்களை மன்னித்திருக்கலாம்.

அவர் பாடுகள் பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனாலும் நமது மேல் அவர் கொண்டுள்ள அளவு கடந்த அன்பை தனது செயல் மூலம் காண்பிக்கவே கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

 ''நான் உங்களை நேசிக்கிறேன் " என்று மட்டும் கூறும் ஒருவர் மீது நமக்கு ஏற்படும் அன்பை விட

நமக்காகத் தனது உயிரையே தியாகம் செய்து நம்மைக் காப்பாற்றிய ஒருவர் மீது நமக்கு அதிக அன்பு ஏற்படும் அல்லவா?

அதேபோல கடவுள் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே நம்மைப் படைத்தது போல நமது பாவங்களையும் மன்னித்து விட்டால் நமது உள்ளத்தில் உதிக்கும் அன்பை விட

விண்ணிலிருந்து நாம் இருக்கும் மண்ணுக்கு இறங்கி வந்து,

 நம்மோடு நாமாக வாழ்ந்து,

 நமக்காகப் பாடுகள் பட்டு,

சிலுவையில் அறையப்பட்டு,

மரித்துத் தன் அன்பை வெளிப்படுத்தியதால்

நமது உளளத்தில் அவர்மீது ஏற்படும் அன்பு பல மடங்கு அதிகமாக இருக்கும்.

அவர் நம்மைத் தேடி வந்தது போல நாமும் அவரைத் தேடிச் செல்ல வேண்டும்.

இயேசுவைத் தேடிப் பரிசேயர் வீட்டுக்கு வந்த பாவியைப் போல 

பரிசுத்தராகிய இயேசுவின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கக் தகுதி இல்லாவிட்டாலும் பின்னால் நின்றாவது,

அவருக்கு எதிராக நாம் செய்த அனைத்துப் பாவங்களுக்காகவும் மனத்தாபப் பட்டு, அழுது
தண்ணீர் சிந்தி, நமது கண்ணீரால் அவரது பாதங்களைக் கழுவ வேண்டும்.

இயேசு நம்மை நோக்கி,

"மகனே, நீ என் மீது கொண்ட அன்பினால் உந்தப்பட்டு எனக்கு விரோதமாக செய்த பாவங்களுக்காக மனத்தாபப் படுகிறாய்.

நான் உன் பாவங்களை மன்னிக்கிறேன்.

இனி பாவம் செய்யாதே.

சமாதானமாகப் போ." என்பார்.

நாம் எத்தனை பாவங்கள் செய்திருந்தாலும், எவ்வளவு பெரிய பாவங்கள் செய்திருந்தாலும் நமது மனத்தாபக் கண்ணீரில் அவை எல்லாம் கரைந்து போகும்.

அது சரி, அன்று இயேசு உலகில் இருந்தார். அந்தப் பெண் அவரிடம் சென்று அழுதாள்.

இப்போது இயேசு விண்ணகம் சென்று விட்டாரே, நாம் எங்கு சென்று கண்ணீர் விட?

"இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" இவை இயேசுவின் வார்த்தைகள்.

அன்று மட்டுமல்ல, இன்றும் இயேசு நம்மோடு தான் இருக்கிறார்.

1. திவ்ய நற்கருணையில்.
2. நம்முடைய குருக்களின் உருவில்.

நம்மை ஆன்மீகத்தில் வழி நடத்திக் கொண்டிருக்கும் குருக்களில் நாம் இயேசுவைக் காண வேண்டும்.

"எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும்."
(அரு. 20:23)

இது நமது குருக்களுக்கு இயேசு கொடுத்திருக்கும் அதிகாரம்.

நாம் நமது குருக்களிடம் பாவ சங்கீர்த்தனம் செய்யும் போது இயேசுவிடம் தான் செய்கிறோம்.

இயேசு தான் நமது பாவங்களை மன்னிக்கிறார்.

பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெற்றுக் கொள்வோம்.

பரிசுத்தர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.


Monday, September 15, 2025

இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு "நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை" என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். (லூக்கா.7:32)



இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு "நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை" என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். 
(லூக்கா.7:32)



நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் ஊரில் சிறுவர்கள் சேர்ந்து விளையாடும் ஒரு விளையாட்டு,

ஒரு பையன் சப்தமாகக் கூறுவான்,

"எல்லோரும் வாங்கடா வீடு கட்டுவோம்."

உடனை எல்லோரும் தனித்தனியாகவோ, ஓரிருவர் சேர்ந்தோ மணலால் வீடு கட்டி, சோறு பொங்கி, கறி வைத்து சாப்பிட்டு விளையாடுவோம்.

திடீரென்று ஒருவன் எழுந்து,

"வாங்கடா எல்லோரும் வீட்டை அழிப்போம்" என்று கத்துவான்.

உடனே அனைவரும் எழுந்து கால்களால் வீடுகளை அழித்து விட்டு அவரவர் வீடுகளை நோக்கி ஓடுவோம்.

இயேசுவின் காலத்தில் யூத சிறுவர்கள் விளையாடும் ஒரு விளையாட்டு:

திருமண வீட்டில்  சில சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் குழல் ஊதுவார்கள்.

இதன் மூலம் மற்ற சிறுவர்களை நடனமாட அழைப்பார்கள். 

எல்லா சிறுவர்களும் குழல் ஊதுவதற்கு ஏற்ப நடனம் ஆடுவார்கள்.

இது ஒரு திருமண விழாக் கால விளையாட்டு.

துக்க வீட்டில்  சில சிறுவர்கள் ஒப்பாரி வைப்பார்கள்.   

 இதன் மூலம் மற்ற சிறுவர்களை துக்கத்தில் பங்கேற்க அழைக்கிறார்கள்.

மற்ற சிறுவர்கள் ஒப்பாரிக்கு ஏற்ப அழுவார்கள்.

இயேசு அவர் காலத்திய மக்களை

 விளையாட்டில் குழல் ஊதும்போது கூத்தாடாத,

ஒப்பாரி வைக்கும் போது அழாத சிறுவர்களுக்கு ஒப்பிடுகிறார்.

அதாவது அன்றைய தலைமுறை மக்களின் மனநிலையையும், ஆன்மீகப் பிடிவாதத்தையும் விளக்க இந்த விளையாட்டை ஒரு உருவகமாகப் பயன்படுத்துகிறார்.

இந்த விளையாட்டு திரு முழுக்கு யோவான்  மற்றும் இயேசுவின் நற்செய்திப் பணியைக் குறிக்கிறது. 

யோவான் தன்னுடைய கடுமையான தவ வாழ்வின் மூலம் 

 மக்கள் கடவுளின் வருகைக்காக மனந்திரும்பி, மகிழ்ச்சியோடு ஆயத்தமாக வேண்டும் என்று 

 குழல் ஊதி கூத்தாட அழைக்கும் சிறுவனைப் போல அழைத்தார்.

ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

மாறாக  உணவு அருந்தாமலும் 
திராட்சை மது குடிக்காமலும் அழைத்த அவரை, "பேய் பிடித்தவன்" என்று மக்கள் அழைத்தார்கள். 

இயேசு பாவம் செய்தவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் அன்போடு ஏற்றுக்கொண்டார்.

அவருடைய செயல் மூலம் 

மக்கள் பாவத்திற்காகவும், மனித மனதுடைய கடினத்தன்மைக்காகவும் வருந்த வேண்டும் என்று 
 ஒப்பாரி வைத்து அழ அழைக்கும் சிறுவனைப் போல‌ அழைத்தார்.

மக்கள் அவர் அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

மாறாக அவரை , "இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்" என்று அழைத்தார்கள். 


விளையாட்டு உருவகத்தின் மூலம் இயேசு சொல்ல வந்த செய்தி,

 இயேசுவின் காலத்து மக்கள், யோவானின் செய்தியையும் ஏற்கவில்லை, இயேசுவின் செய்தியையும் ஏற்கவில்லை.

இந்த வசனத்தை தியானிக்கும் போது நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்,

இன்று நமக்கு நற் செய்தியை அறிவிப்பவர்கள் இயேசுவின் பிரதிநிதிகளாகிய குருக்கள்.

அவர்கள் நற் செய்தியை அறிவிக்கும் போது நாம் செய்ய வேண்டியது நற் செய்தியைக் கேட்பது, அதைத் தியானிப்பது, அதை வாழ்வாக்க வேண்டியது மட்டுமே.

அக்காலத்து யூதர்கள் செய்தது போல நற் செய்தியை அறிவிப்பவர்களை விமர்சிப்பது அல்ல.

பரிசேயர்கள் இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றது நற் செய்தியை கேட்க அல்ல, அவரைக் குறை சொல்ல.

குருவானவர் திருப்பலியின் போது பிரசங்கம் செய்யும் போது சிலர் குருவானவர் கூறுவதில் கவனம் செலுத்த மாட்டார்கள்.

அவர் கூறும் விதத்தில் குறைகள் இருக்கிறதா என்பதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை பிரசங்கம் வீண்.

ஆசிரியரது போதனையைக் கவனியாமல் அவரது கண், மூக்கு, செவி, வாயை ஆராய்ந்து கொண்டிருப்பவனுக்கு போதனை வீண்.

அன்று இயேசுவை குறை  சொல்லிக் கொண்டு திரிந்தவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.

திரும்பவும் அறைய வேண்டாம், Please.

லூர்து செல்வம்.

Sunday, September 14, 2025

"இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார்."(அரு.19:26)

"இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார்."
(அரு.19:26)


இயேசு சிலுவையில்  அறையப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தபோது  

சிலுவை அருகில் 

இயேசுவின் தாயும், 

தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும்,

 மகதலா மரியாவும்

 அருளப்பரும் 

நின்று கொண்டிருந்தனர். 



இயேசு தம் தாயை நோக்கி  அருளப்பரைக் காண்பித்து  , "அம்மா, இவரே உம் மகன்" என்றார். 

பின்னர் அருளப்பரை நோக்கித் தன் தாயைக் காண்பித்து "இவரே உம் தாய்" என்றார். 

அந்நேரமுதல் அருளப்பர் அன்னை மரியாளைத் தம் வீட்டில் ஏற்றுக் கொண்டார்.

தனது 33 ஆண்டுகால வாழ்வில் 30 ஆண்டுகள்தான் தன் தாயுடன் நசரேத்தில் வாழ்ந்தார்.

மூன்று ஆண்டுகள் பொது வாழ்வின் போது கலிலேயா, சமாரியா, யூதேயா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நற் செய்தியை அறிவித்தார்.

அவர் தங்குவதற்குத் தனியாக  சொந்த வீடு இல்லை.

"மனு மகனுக்குத் தலை சாய்க்கக்கூட இடமில்லை.''

கப்பர்நாகூம் வரும் போது இராயப்பரோடு அவருடைய மாமியார் வீட்டில் தங்குவார்.

அன்னை மரியாள் நாசரேத்தில் தனியாகத்தான் இருந்தாள்.

அவ்வப்போது இயேசு நற் செய்தியை அறிவித்த இடத்துக்கு வந்து அவரைப் பார்த்துச் செல்வாள்.

அவளது தங்கை மரியாளும் நசரேத்தில் இருந்தாள்.

 யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் தங்கை மரியாளின் பிள்ளைகள்.

அவர்களுள் யாக்கோபும், யூதாவும் இயேசுவின் சீடர்கள்.

 அன்னை மரியாளுக்கு இயேசுவைத் தவிர வேறு பிள்ளைகள் இல்லை.

அவள் முக்காலமும் கன்னி.

ஆகவேதான் இயேசு தன் மரண நேரத்தில் தன் தாயை அருளப்பரின் பொறுப்பில் ஒப்படைக்கிறார்.

அருளப்பர் சீடர்களின் சார்பாக அன்னை மரியாளைத் தாயாக ஏற்றுக் கொள்கிறார்.

இயேசு விண் எய்தியபின் அன்னை மரியாள் தான் சீடர்களை ஆன்மீகப் பாதையில் வழி நடத்தினார்.

தூய ஆவியின் வருகைக்குப் பின் சீடர்கள் உலகின் பல் வேறு பகுதிகளுக்குச் சென்று நற் செய்தியை அறிவித்தார்கள்.

அருளப்பர் இப்போது துருக்கி என்று அழைக்கப்படுகிற, சின்ன ஆசியாவில் உள்ள எபேசு நகரில் தங்கி நற் செய்தி அறிவித்தார்.

அன்னை மரியாள் தன் மரணம் வரை எபேசு நகரில்   அருளப்பரின் இல்லத்தில்தான் தங்கியிருந்தாள்.

புனித அருளப்பர்  தனது சொந்த நாட்டிலிருந்து  புறப்பட்டு, சுமார் 1800 கிலோமீட்டர் தூரம் பயணித்து
இன்றைய துருக்கியில் உள்ள எபேசு நகரில் நற்செய்தியை அறிவித்தார்.

இது அக்காலத்தில், போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவாக இருந்த ஒரு காலத்தில், அவர் மேற்கொண்டது ஒரு மாபெரும் பயணமாகும். 

இது அவரது விசுவாசத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

அன்னை மரியாளும் பிரயாணத்தின் கட்டங்களை எல்லாம் தாங்கிக்கொண்டு அருளப்பருடன் எபேசு நகருக்குச் சென்றிருக்கிறார்.

நாமும் இயேசுவின் சீடர்கள்தான். 

இயேசு தனது அன்னையை நமக்கும் தாயாகத் தந்திருக்கிறார்.

ஆகவே நாமும் அன்னை மரியாளின் பிள்ளைகள் தான், 

அன்று இயேசுவின் 12 சீடர்களுக்கும் ஆன்மீகப் பாதையில் வழி காட்டியது போல அன்னை நமக்கும் வழி காட்டிக் கொண்டிருக்கிறார்.

நமக்கு எப்படி வழி காட்டுகிறார்?

அன்னையின் பக்தர்கள் அன்னையைப் பற்றித் தியானித்துக் கொண்டே செபித்தால் 

அவள் இயேசுவின் பாதையில் எப்படி நடந்தாள் என்பதை உணர்ந்து நாமும் அவ்வழி நடப்போம்.

செபமாலை செபிப்பதன் நோக்கமே 

கபிரியேல் தூதர் அன்னைக்கு மங்கள வார்த்தை சொன்ன வினாடியிலிருந்து 

அன்னை விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டப்பட் வினாடி வரை அன்னை ஆன்மீகப் பாதையில் எப்படி நடந்தாள் என்பதை உணர்ந்து நாமும் அவ்வழி நடப்பதுதான்.

முதல் பத்து மணித் தியானத்தின் போது அன்னை தன்னை எவ்வாறு இறைப்பணிக்கு அடிமையாக அர்ப்பணித்தாள் என்பதை உணர்வோம்.

இரண்டாவது பத்து மணித் தியானத்தின் போது அன்னை எப்படி பிறரன்புப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்தாள் என்பதை உணர்வோம்.

மூன்றாவது பத்து மணித் தியானத்தின் போது ஒரு மாட்டுத் தொழுவத்தை ஒரு இரவு தங்குமிடமாக ஏற்றுக் கொண்ட தாழ்ச்சியை உணர்வோம். இயேசு அங்கேயே பிறந்தார்.

நான்காவது பத்து மணித் தியானத்தின் போது  மரியாள் தான் பெற்ற பிள்ளையைக் கடவுளுக்கு ஒப்புக் கொடுப்பதைத் தியானிக்கும் போது நமது பிள்ளைகளில் ஒன்றை இறைப்பணிக்கு அர்ப்பணிக்க ஆசை வர வேண்டும்.

ஐந்தாவது பத்து மணித் தியானத்தின் போது நாம் எப்போதும் இயேசுவைத் தேடிக்கொண்டேயிருக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் உதிக்க வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு பத்து மணித் தியானத்தின் போதும் அன்னையின் ஒரு பண்பு நம் மனதில் பதிந்து நம்மை வழி நடத்தும்.

அன்னையுடன் பயணித்தால் விண்ணக வாழ்வு உறுதி.

லூர்து செல்வம்

Saturday, September 13, 2025

தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். (அரு.3:16)



தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். 
(அரு.3:16)

அளவு கடந்த அன்பு கடவுளின் இயல்பு.

எதிர் எதிரான இரண்டு பண்புகள் கடவுளிடம் இருக்க முடியாது.

வெறுப்பு  அன்புக்கு எதிரான பண்பு.

ஒருவரை  நேசித்துக் கொண்டே வெறுக்க முடியாது.

கடவுள் அன்பால் நிறைந்தவர்.
God is full of love.

தண்ணீரால் நிறைந்த ஒரு பாத்திரத்தில் வேறு எதுவுக்கும் இடமில்லை.

அவரோடு என்றென்றும் ஒன்றித்து பேரின்ப வாழ்வு வாழவே கடவுள் மனிதனைப் படைத்தார்.

கடவுள் மனிதனைத் தன் சாயலாகப் படைத்தார்.

அவனோடு தனது பண்புகளைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் பகிர்ந்து கொண்டுள்ள பண்புகளில் ஒன்று பரிபூரண சுதந்திரம்.

ஆகவே கடவுளைத் தேர்வு செய்யவோ, வேண்டாமென்று தள்ளவோ அவனுக்கு பரிபூரண சுதந்திரம் உண்டு.

கடவுளைத் தேர்வு செய்வது மோட்சம். வேண்டாம் என்று தள்ளுவது நரகம்.

நமது முதல் பெற்றோர் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்ததால் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் சேர்த்து நிலை வாழ்வு பெறும் தகுதியை இழந்தனர்.

ஆனாலும் அளவு கடந்த அன்பு நிறைந்த கடவுள் மனிதன் இழந்த தகுதியை மீட்டுக் கொடுக்க தனது ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.

மனிதனாகப் பிறந்த இறைமகன் தனது சிலுவை மரணத்தின் மூலம் இழந்த தகுதியை மீண்டும் பெற,

அதாவது பாவத்திலிருந்து மீட்புப் பெற, வழி வகுத்தார்.


தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு 


அந்த மகனையே தந்தை சிலுவை மரணத்துக்குக் கையளித்தார்.

அந்த அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.

பாவத்தின் விளைவு மரணம், ஆன்மீக மரணம்.

பாவத்தின் விளைவாக ஆன்மா மரணிக்கிறது, அதாவது நிலை வாழ்வை இழக்கிறது.

இறை மகன் தனது மரணத்தின் மூலம் நமது ஆன்மீக மரணத்தை வென்றார்.

நாம் நிலை வாழ்வு பெற என்ன செய்ய வேண்டும்?

மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு நமது மீட்பராக ஒரு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஏற்றுக் கொண்டு அவர் காட்டும் வழி நடக்க வேண்டும்.

இப்போது ஒரு உண்மை புரிந்திருக்கும்,

இயேசு உலகிற்கு வந்தது நம்மை மீட்க, நமக்குத் தண்டனைத் தீர்ப்பு அளிக்க அல்ல.

இதை இயேசுவே சொல்கிறார்,


"உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்."
(அரு.3:17)

ஆசிரியர் வகுப்புக்கு வருவது மாணவனுக்கு கல்வி அறிவு புகட்ட, அவனை Fail ஆக்க அல்ல.

தேர்வில் எழுதியுள்ள பதில்கள் சரியாக இருந்தால் ஆசிரியர் மதிப்பெண் கொடுப்பார்.

தவறாக இருந்தால் மதிப்பெண் கொடுக்க மாட்டார்.

போதிய மதிப்பெண் கிடைத்தால் மாணவன் வெற்றி பெறுவான்,

கிடைக்காவிட்டால் தோல்வி அடைவான்.

மாணவனது தோல்விக்குக் காரணம் மாணவன்தான், ஆசிரியர் அல்ல.

ஏனெனில் பதில்கள் அவனுடையவை. அவைதான் ஆசிரியர் தரும் மதிப்பெண்களைத் தீர்மானிக்கின்றன.

அதேபோல்தான் நாம் செய்யும் பாவ, புண்ணியங்கள்தான் நமது எதிர்கால நித்திய வாழ்வைத் தீர்மானிக்கின்றன.

நாம் நித்திய காலமும் இறைவனோடு ஒன்றித்து வாழ்வோமா, அல்லது அவரின்றி வாழ்வோமா என்பதை நமது வாழ்வுதான் தீர்மானிக்கிறது.

கடவுள் மதிப்பெண் போடும் ஆசிரியர் மாதிரிதான்.

நமது வாழ்வு நற்செயல்களால் மட்டும் நிறைந்திருந்தால் அவரால் நித்திய பேரின்ப மதிப்பெண்களைக் கொடுப்பார்.

சர்வ வல்லப கடவுளால் முடியாத சில காரியங்களும் இருக்கின்றன.

அவரால் மாற முடியாது.
துன்பப்பட முடியாது.
சாக முடியாது.
யாரையும் வெறுக்க முடியாது.
தங்கள் பாவங்களுக்காக உத்தம மனத்தாபப்படுவோரை அவரால் மன்னியாமலிருக்க முடியாது.
ஒரே வரியில் அவரது பண்புகளுக்கு எதிராக அவரால் செயல்பட முடியாது.

தேவ சுபாவத்தில் அவரால் துன்பப்படவும், மரிக்கவும் முடியாத காரணத்தால் தான் அவர் நமது பாவங்களுக்குத் துன்பப்பட்டு மரித்துப் பரிகாரம் செய்ய மனிதனாகப் பிறந்தார்.

அதாவது மனித சுபாவத்தையும் ஏற்றுக் கொண்டார்.

இயேசு தேவ சுபாவமும் மனித சுபாவமும் கொண்ட கடவுள்.

கடவுளாகிய இயேசு தனது மனித சுபாவத்தில்தான் பாடுகள் பட்டு மரித்தார்.

மனித சுபாவத்திலும் அவர் கடவுள் தான்.
   
ஆகவே தான் அவர் "உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, 

 அதை மீட்கவே  உலகிற்கு வந்தார்."

இறைவனின் அன்புக்குத் தண்டிக்கத் தெரியாது,

மன்னித்து ஏற்றுக் கொள்ளவே தெரியும்.

ஆகவே நமது பாவங்களுக்காக உத்தம மனத்தாபப்பட்டு மன்னிப்பு கேட்போம்.

உறுதியாக மன்னிக்கப்படுவோம். 

விண்ணக வாழ்வுக்குள் ஏற்றுக்கொள்ளப்படுவோம்.

இறை மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழிய மாட்டார்,

 நிலைவாழ்வு பெறுவார்.

லூர்து செல்வம்.

Friday, September 12, 2025

"நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, "ஆண்டவரே, ஆண்டவரே" என ஏன் கூப்பிடுகிறீர்கள்?" (லூக்கா.6:46)

"நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, "ஆண்டவரே, ஆண்டவரே" என ஏன் கூப்பிடுகிறீர்கள்?"
(லூக்கா.6:46)

சிலர் நினைக்கிறார்கள் காலை, மாலை செபம் சொல்லுதல், 
திவ்ய நற்கருணையைச் சந்தித்தல், 
திருப்பலிக்குச் செல்லுதல், திரு விருந்து அருந்துதல் ஆகியவற்றில் மட்டும் கிறித்தவனாக வாழ்வது அடங்கியிருக்கிறது என்று.

நமது இந்த ஆன்மீக செயல்பாடுகளில் இயேசுவை நோக்கி,

"ஆண்டவரே, ஆண்டவரே" எனக்   கூப்பிட்டு நமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கின்றோம்.

இயேசு நாம் அவரை "ஆண்டவரே, ஆண்டவரே" என்று அழைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.

நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, "ஆண்டவரே, ஆண்டவரே" என ஏன் கூப்பிடுகிறீர்கள்?"

என்று தான் கேட்கிறார்.

அவர் சொல்பவற்றைச் செய்து கொண்டு அவரை "ஆண்டவரே" என்று அழைத்து மன்றாட வேண்டும்.

அவர் நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்? 

இறைவனையும் நமது அயலானையும் நேசிக்க வேண்டும். 

நேசித்துக்கொண்டு மற்ற வழிபாடுகளைச் செய்ய வேண்டும். 

இறைவனை நேசித்தால் அவருக்கு எதிராகப் பாவங்கள் செய்ய மாட்டோம்.

அயலானை நேசித்தால் அவனுக்கு தேவைப்படும்போது உதவி செய்வோம். 

பாவங்களைப் பற்றியும் பிறரன்புப் பணிகளைப் பற்றியும் கவலைப்படாமல் 

காலை மாலை செபத்திலும் மற்ற பக்தி முயற்சிகளிலும் மட்டும் ஆர்வம் காட்டினால்

அந்த ஆர்வத்தினால் ஆன்மீக ரீதியாக எந்த பயனும் இல்லை. 


கணவனும் மனைவியும் அதி காலையில் எழுந்து சண்டை போட்டுக் கொண்டே திருப்பலிக்குச் சென்றால் சமாதானம் இல்லாமல் ஒப்புக் கொடுக்கப்படும் பலியை தந்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

சமாதான குறைவு காரணமாக குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசாமல் தனித்தனியே காலை மாலை செபம் சொன்னால் அந்த செபம் கேட்கப்பட மாட்டாது.

ஆன்மீக வாழ்வுக்கு அன்பு தான் உயிர். 

அன்பு இல்லாத ஆன்மீகம் உயிரில்லாத ஆன்மீகம்.

அது ஆன்மீகமே அல்ல. 

கடவுள் இருக்கிறார் என்று ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது. 

சாத்தானும் கூட அதை ஏற்றுக் கொள்கிறது.

கடவுளை அன்பு செய்ய வேண்டும். நமது அன்பு அவரது கட்டளைகளைக் கடைபிடிப்பதில் பிரதிபலிக்க வேண்டும். 

பெற்ற தந்தையையும் தாயையும் மதிக்க வேண்டும் என்பது கடவுளின் கட்டளை. 

பெற்றோருக்கு உண்ண உணவு கூட கொடுக்காத மகன் இயேசுவின் திருவிருந்தை அருந்தி என்ன பயன்?

பசித்திருக்கும் அயலானுக்கு உணவு கொடுக்காதவன் கோயில் உண்டியலில் காணிக்கை போட்டு என்ன பயன்?

திருவிழா கொண்டாடுபவர்கள் வரி போடும்போதும் சண்டை, வரி பிரிக்கும் போதும் சண்டை,
திருவிழா கொண்டாட்டத்தில் போட்டி, வரவு செலவு முடிக்கும் போதும் சண்டை, 

இதற்கிடையில் கொண்டாடப்படும் திருவிழா ஆண்டவருக்குப் பிடித்தமானதாக இருக்காது. 

அன்பு இருக்கும் இடத்தில் சமாதானம் இருக்கும். போட்டி இருக்காது. 

சமாதானமாக செய்யப்படும் வழிபாடு தான் இறைவனுக்கு ஏற்றது.

காலை மாலை செபம் சொல்ல வேண்டும், 

திருப்பலியில் கலந்து, திருவிருந்து அருந்த வேண்டும், 

திருவிழாக்கள் கொண்டாட வேண்டும்,

இவற்றையெல்லாம் இறையன்புடனும் பிறர் அன்புடனும் செய்ய வேண்டும்.

அன்பு இன்றி அனைத்தும் வீண்.

"நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். 


இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. 


என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை. 
(1 கொரிந்தியர் 13:1-3)

லூர்து செல்வம்.

Thursday, September 11, 2025

"நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? (லூக்கா.6:41)

"நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? 
(லூக்கா.6:41)

 காலில் பட்ட சகதியைச் சகதியால் கழுவ முடியுமா?

சுத்தமான தண்ணீரால் தான் சகதியைக் கழுவ முடியும்.

இலக்கணமே படிக்காதவன் மொழித் தேர்வுக்கான விடைத்தாளை மதிப்பீடு செய்ய முடியுமா?

எதைச் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு நாம் தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

உலகெங்கும் சென்று நற் செய்தியை அறிவியுங்கள் என்று அவருடைய சீடர்களாகிய நமக்கு இயேசு கட்டளை கொடுத்திருக்கிறார்.

அந்தக் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. 

அந்தக் கடமையை நிறைவேற்ற முதலில் நாம் நற்செய்தியை அறிந்திருக்க வேண்டும்.

அடுத்து நற்செய்தியை வாழ வேண்டும்.

நற்செய்தியை அறிந்து வாழ்பவர்கள் மட்டும் தான் அதை அறிவிக்க முடியும். 

தன்னை சுற்றியுள்ளோரை பகைத்துக் கொண்டு அவர்களோடு  சண்டை போட்டுக் கொண்டிருப்பவனால் 

மற்றவர்களை பார்த்து "பகைவர்களை நேசியுங்கள், உங்களுக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள்." என்று கூற முடியுமா? 

உங்கள் அயலானை நேசியங்கள் என்று கூற முடியுமா?

நம்மைச் சுற்றி வாழும் கெட்டவர்களை திருத்த வேண்டும் என்றால்  முதலில் நாம்‌ நல்லவர்களாக வாழ வேண்டும்.

கோவில் பக்கமே போகாதவன் மற்றவர்களிடம் "ஞாயிறு திருப்பலிக்கு செல்லுங்கள்'' என்று அறிவுரை கூற முடியுமா?

நாம் திருந்தி வாழாமல் மற்றவர்களை திருத்த முற்பட்டால் அவர்கள் நம்மை பார்த்து

"நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?"

என்ற நற் செய்தி வசனத்தை‌ நம்மை நோக்கிக்  கூறுவார்கள்.

மற்றவர்களைப் பற்றி இழிவாகப் பேசுவதற்கு அவர்களுடைய குற்றம் குறைகளைக் காண முயற்சி செய்யக் கூடாது.

அவர்களை குற்றங்களிலிருந்து விடுவித்து அவர்களை நல்லவர்களாக மாற்றும் நல்ல எண்ணத்தோடு குற்றம் குறைகளை கவனிக்கலாம்.

மருத்துவர் ஒருவரை குணமாக்க அவரது நோய் நொடிகளைப் பற்றி ஆராய்வது போல நாம் மற்றவர்கள் விடயங்களில் நல்ல நோக்கத்தோடு தலையிடலாம்.

அவர்க்கு முன் நாம் ஆன்மீகச் சுத்தம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நமது வாழ்வில் தவறுகள் இல்லாதிருந்தால் தான் நம்மால் மற்றவர்களுடைய தவறுகளை சுட்டி காண்பிக்க முடியும்.

சதா இருமிக் கொண்டிருக்கும் மருத்துவர் இருமலுக்கு மருந்து சொல்ல அருகதை அற்றவர்.
 

மழைக்குக் கூட பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்காதவரிடம் சென்று 

'எனக்கு ஒரு கடிதம் எழுதித் தர  முடியுமா? என்று யாராவது கேட்பார்களா?

வகுப்பில் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கூற வேண்டுமென்றால் 

ஆசிரியர் தயாரிப்புடன் வகுப்புக்குள் நுழைய வேண்டும்.

நினைவில் வைத்துக் கொள்வோம்.

சமூகத்தைச் சீர்திருத்த நினைக்குமுன் நம்மை நாமே சீர்திருத்திக் கொள்வோம்.

லூர்து செல்வம்.