Thursday, April 10, 2025

"ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்" என்றார்."(அரு.10:38)

"ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்" என்றார்."
(அரு.10:38)


''நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" என்று இயேசு சொன்னவுடன் யூதமதப் பெரியவர்கள் அவர்மீது எறிய கற்களை எடுத்தனர். 

அவர்கள் இயேசுவை இறைமகனாக ஏற்றுக் கொள்ளவில்லை.

அவர் சொன்னதை நம்பாவிட்டாலும் அவரது செயல்களைப் பார்த்தாவது நம்பியிருக்க வேண்டும்.

அவரை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல அவரைத் கொல்லவும் தீர்மானித்து விட்டார்கள்.

தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க வல்ல இறைவன் அவர்களது இந்த பாவகரமான செயலை நமது ஆன்மீக மீட்பின் கருவியாக மாற்றி விட்டார்.


"என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்."

என்ற வேத வாக்கை நமது வாழ்க்கையை மையமாக வைத்து தியானிப்போம்.

அன்று யூதர்கள் மத்தியில் நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருந்த அதே இயேசு 

இன்று நம் ஒவ்வொருவரின் உள்ளத்தில் இருந்து கொண்டு

 ஒவ்வொரு வினாடியும் நம்மோடு பேசிக்கொண்டும் 

நம்மை வழி நடத்திக் கொண்டும்தான் இருக்கிறார்.

நமக்கு வேண்டிய அறிவுரைகளை நல்கிக் கொண்டுதானிருக்கிறார்.

உள்ளத்தில் அவர் பேசுவது நமது கருத்தில் விழுகிறதா?

பேசுவது மட்டுமல்ல, ஒவ்வொரு வினாடியும் நமது வாழ்வில் செயல் புரிந்து கொண்டிருக்கிறார்.

ஆன்மீகத்தில் ஒரு அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பரிபூரண சுதந்திரத்துடன் செயல்படும் மனிதன் என்ற முறையில் சிந்திக்கிறோம், சொல்கிறோம், செய்கிறோம்.

ஆனால் இறைவனால் படைக்கப்பட்ட மனிதன் என்ற முறையில் நாம் மட்டும் செயல்படவில்லை, நம்மைப் படைத்த இறைவனும் நம்மில் செயல் புரிகிறார்.

நாம் எப்படி சிந்திக்க வேண்டும், பேச வேண்டும், செயல்பட வேண்டும் என்பதற்கான இறைவன் கொடுத்த சட்டம் இருக்கிறது.

இறைவன் கொடுத்த சட்டத்திற்கு உட்பட்டு தான் நாம் சிந்திக்க வேண்டும், பேச வேண்டும், செயல்பட வேண்டும்.

இறைவனுக்கு யாரும் கட்டளை கொடுக்க முடியாது.

அனைத்துக்கும் அப்பாற்பட்டவர் கடவுள்.

அவர் அவருடைய விருப்பப்படி தான் செயல் புரிகிறார். 

அவருடைய விருப்பத்திற்கு எதிராக நாம் செயல்படுவது தான் பாவம். 

கடவுளால் பாவம் செய்ய முடியாது, அதாவது, அவரால் அவரது விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட முடியாது.

நமது ஆன்மீக வாழ்வில் நாம் சுதந்திர உணர்வோடு செயல்படுவது போல, கடவுள் பரிபூரண சுதந்தரத்தோடு செயல் புரிகிறார். 

ஆன்மீக வாழ்வில் நாம் இறைவனுடைய விருப்பத்துக்கு இணங்க சிந்திக்க வேண்டும், பேச வேண்டும், செயல்பட வேண்டும். 

எதிராகச் செயல்பட்டால் விண்ணக வாழ்வை இழக்க நேரிடும்.

நமது வாழ்வில் நமது விருப்பத்துக்கு மாறாக நடக்கும் சில செயல்களை நாம் தற்செயலாக நடப்பவை என்று நினைப்போம்.

ஆனால் எதுவும் தற்செயலாக நடப்பதில்லை.  

ஒரு திட்டத்தோடு காரில் பயணித்துக் கொண்டிருப்போம்.

ஆனால் எதிர்பாராமல் கார் டயர் பங்சராகிவிடும்.

இது தற்செயல் நிகழ்ச்சி என்று நாம் நினைக்கிறோம்.

ஆனால் நமது வாழ்வில் தற்செயல் நிகழ்ச்சி எதுவும் கிடையாது.

எது நடந்தாலும் அது நமது நன்மைக்காக இறைவன் அனுமதிக்கும் நிகழ்ச்சியாகவே இருக்கும்.

டயர் பங்சராகிப் பயணம் ரத்தாவது நமது ஆன்மீக நன்மைக்காகத்தான் இருக்கும்.

சில சமயங்களில் இயற்கை நிகழ்வுகள் கூட நமது திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

திடீரென்று பெய்யும் மழை கூட நம் திட்டத்தை மாற்றிவிடும்.

இயற்கை இறைவனுக்குக் கட்டுப்பட்டது.

ஆன்மீகத்தை மறந்து அறிவியல் ரீதியாக மட்டும் பார்ப்பவர்களுக்கு  புயல், வெள்ளம், மலைச் சரிவு, நில நடுக்கம் போன்ற இயற்கை நிகழ்வுகள் அழிவை ஏற்படுத்துவன போல் தோன்றும்.

ஆனால் இயற்கையில் ஏற்படுபவை மாற்றங்கள்,
 அழிவு அல்ல.

ஒரு காலத்தில் கடலின் ஆழத்தில் இருந்த பாறை இயற்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் உயர்ந்த இமயமலையாக மாறியது.


கன்னியாகுமரிக்கு தெற்கிலிருந்த நிலப்பகுதி கடலுக்கு அடியில் சென்று விட்டது.

இதெல்லாம் மாற்றங்கள், அழிவு அல்ல.

நாம் உண்ணும் உணவு வயிற்றில் சீரணமாகி உடல் வளர்ச்சிக்கு வேண்டிய சத்தாக மாறுகிறது.

வேண்டாதது கழிவாக வெளியேற்றப்படுகிறது.

அப்படியானால் இயற்கை நிகழ்வுகளின் போது ஏற்படும் மனித மரணங்கள்?

மரணத்தை வாழ்க்கையின் முடிவு என எண்ணுபவர்கள் அதை அழிவு எனக் கருதுவார்கள்.

உண்மையில் மரணம் முடிவு அல்ல, வாழ்க்கை நிலை மாற்றம்.

இவ்வுலக வாழ்வை விட்டு விண்ணக வாழ்வுக்குள் நுழைய உதவும் நிகழ்வுதான் மரணம்.

ஞாயிறு விடுமுறை. திங்கள் கிழமை பள்ளிக்குப் போக வேண்டும்.

பள்ளிக் கூடம் போக விரும்பாத வர்கள் தான் திங்கள் பிறக்கும் போது வருந்துவார்கள்.

விண்ணக வாழ்வை விரும்பாதவர்கள் தான் மரணத்தை விரும்ப மாட்டார்கள்.

எந்த சூழ்நிலையில் மனிதன் பிறக்க வேண்டும் என்று திட்டமிட்ட இறைவன் தான் எந்த சூழ்நிலையில் அவன் இறக்க வேண்டும் என்பதையும் திட்டமிட்டிருப்பார்.

பாவம் மட்டும் தான் ஆன்மீகத்தில் அழிவு, ஏனெனில் அது இறைவன் விருப்பத்துக்கு எதிரானது.

பாவமின்றி வாழ்பவர்கள் மரணத்துக்கு ஏன் பயப்பட வேண்டும்?

சுனாமியின் போது நாம் மரணம் அடைய வேண்டும் என்பது இறைவன் திட்டமானால்

புன்முறுவலோடு ஏற்றுக் கொள்வோம்.

சாப்பாட்டை இலையில் தந்தால் என்ன, தட்டில் தந்தால் என்ன!

சாப்பிடக்கூடிய உணவாக இருக்க வேண்டும், அவ்வளவுதான்.

இயேசுவுக்கு மரணம் சிலுவை வழியே வந்தது.

சிலுவை புனிதப் பொருளாக மாறிவிட்டது.

நமக்கு எந்த வழியே மரணம் வந்தாலும் அது விண்ணகத்துக்கு கடவுள் நமக்குக் காட்டும் வழி.


இறைவன் தனது செயல்கள் மூலமாக நம்முடன் பேசும்போது அவருக்கு செவி கொடுப்போம்.

அவர் சொல்வதை  நம்புவோம்.

அவர் காட்டுகிற வழி எந்த வழியாக இருந்தாலும் அதன் வழியே நடப்போம்

"நானே வழி" என்கிறார்.

அவர் எந்த உருவில் வந்தாலும் அவர் வழியே சென்றால் நித்திய வாழ்வை அடைவது உறுதி.

"வழியும் உண்மையும் வாழ்வும் நானே." (அரு.14:6)

லூர்து செல்வம்.

Wednesday, April 9, 2025

"என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்." (அரு.8:51)

"என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்." (அரு.8:51)

"என்றுமே சாகமாட்டார்கள்" ‌‌என்று சொன்னது யூத மதப் பெரியவர்களுக்குப் புரியவில்லை.

காரணம், இயேசு பேசியது ஆன்மீகம். ஆனால் அவர்கள் அதைப் புரிந்து கொண்டது லௌகீகத்தில்.

வாழ்வு, மரணம் என்ற வார்த்தைகளுக்கு லௌகீகத்தில் பொருள் வேறு, ஆன்மீரத்தில் பொருள் வேறு.

கடவுள் நமது முதல் பெற்றோர்களிடம் விலக்கப்பட்ட மரத்தின் கனிடைத் தின்றால் "சாகவே சாவீர்கள்" என்று கூறியிருந்தார்.

அவர்கள் அக்கனியைத் தின்ற போது லௌகீக ரீதியில் சாகவில்லை. உயிர் வாழ்ந்து பிள்ளைகள் பெற்றார்கள்.

ஆனால் பாவத்தினால் அவர்களுடைய ஆன்மா மரணம் அடைந்தது. அதாவது பாவத்தினால் அவர்கள் தேவ இஸ்டப்பிரசாதத்தை (Sanctifying grace) இழந்து அவர்களுடைய ஆன்மா மரணம் அடைந்தது.

மனுக்குலத்தை ஆன்மீக மரணத்திலிருந்து மீட்கவே இறைமகன் மனுமகன் ஆனார்.

இப்போது கூட நாம் சென்மப் பாவத்தோடு பிறப்பதால் மரண நிலையில் உள்ள ஆன்மாவோடு தான் பிறக்கிறோம். 

திருமுழுக்குப் பெறும்போது சென்மப் பாவம் மன்னிக்கப்பட்டு நாம் ஆன்மீகத்தில் உயிர் பெறுகிறோம். 

அதன் பிறகு தான் ஆன்மீக வாழ்வு வாழ ஆரம்பிக்கிறோம். 

திருமுழுக்கு பெறாமல் ஆன்மீக வாழ்வு வாழ முடியாது. 

சென்மப் பாவ மாசு இல்லாமல் உற்பவித்த ஒரே பெண்மணி அன்னை மரியாள் மட்டுமே.

"என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று இயேசு கூறியது ஆன்மீகப் பொருளில்.

அவர் கூறியதன் பொருள்,

"என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே பாவம் செய்ய மாட்டார்கள். ஆகவே அவர்கள் நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வார்கள்."

இயேசுவின் வார்த்தையைக் கடைப்பிடிக்காதபோது தான் பாவம் நுழைகிறது.

நாம் பாவம் செய்யாமல், பரிசுத்தமாக வாழ வேண்டுமென்றால் இயேசு அளித்த நற்செய்தியின்படி வாழ வேண்டும்.

இதைப் புரிந்து கொள்ளாத யூதர்கள்

"ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் என் வார்த்தையைக் கடைப் பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே!

எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்கள்." ( 8:52,53)

அவர்கள் இயேசுவை மனிதனாக மட்டும் பார்த்தார்கள், அவரை இறை மகன் என்று ஏற்றுக் கொள்ளவில்லை.

இயேசு அவர்களிடம் தான் கடவுள் என்று கூறும் பொருளில், "ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறினார். (8:58)

நாம் ஒவ்வொரு நாளும்,

"பரலோகத்தையும், பூலோகத்தையும், காணப்படுபவை, காணப்படாதவை ஆகிய எல்லாவற்றையும் படைத்த சர்வ வல்லபரான பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.  

சர்வேசுரனுடைய ஏக பேறான சுதனும், ஆண்டவருமான இயேசு கிறீஸ்துவையும் விசுவசிக்கிறேன்.."

என்று விசுவாசப் பிரமாணத்தில் சொல்கிறோம்.

ஆனால் நமது விசுவாசம், உண்மையானதா, சொல்லளவில்  தானா?

நமது விசுவாசம், உண்மையானதாக இருந்தால் ஏன் திவ்ய நற்கருணையை முழங்கால்படியிட்டு ஆராதிக்காமல்,
 அவர் முன் தலையை மட்டும் வளைக்கிறோம்?

திவ்ய நற்கருணையை வாங்கும் போது ஏன் முழங்காலில் இருக்காமல் ஏதோ சாக்லட் வாங்குவது போல நட்டமாய் நின்று, கையில் வாங்குகிறோம்?


திவ்ய நற்கருணையை வாங்கிய பின் ஏன் முழுப் பூசையும் முடியும் முன் கோவிலை விட்டு வெளியேறுகிறோம்?

 ஒரு காலத்தில் பீடத்தின் மையத்தில் இயேசு வசிக்கும் திவ்ய நற்கருணைப் பேழை இருந்த இடத்தில் ஏன் பைபிள் Standஐ வைத்து விட்டு 
திவ்ய நற்கருணைப் பேழை ஓரத்தில் வைக்கிறோம்?

எத்தனை பேர் திருப்பலிக்கு முன் பாவ சங்கீர்த்தனம் செய்து விட்டு, திரு விருந்தில் கலந்து கொள்கிறோம்?

சோறு சாப்பிடுமுன் கையைச் சுத்தம் படுத்தும் நாம் ஏன் ஆண்டவர் நமக்குள் வருமுன் நமது ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும் என்று நினைப்பதில்லை?

"இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். 
(மத்தேயு நற்செய்தி 28:20 )

அன்னை மரியாளின் வயிற்றில் உற்பவித்துப் பிறந்து,

 திருக்குடும்பத்தில் வளர்ந்து,

மூன்று ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்து,

நமக்காகப் பாடுகள் பட்டு,

சிலுவையில் அறையப்பட்டு மரித்து,

மரித்த மூன்றாம் நாள் உயிர்த்த அதே இயேசு, 

அதே உடலோடும், ஆன்மாவோடும் நம்மோடு வாழ்கிறார்

என்ற எண்ணம் ஒவ்வொரு வினாடியும் நம்முடன் இருக்க வேண்டும்.

இருந்தால் நமது வாழ்வே வித்தியாசமாக இருக்கும்.

லூர்து செல்வம்.

Tuesday, April 8, 2025

"அதற்கு இயேசு, "பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."(அருளப்பர் நற்செய்தி 8:34)

"அதற்கு இயேசு, "பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
(அருளப்பர் நற்செய்தி 8:34)

"இதோ, ஆண்டவருடைய அடிமை."
என்று அன்னை மரியாள் கூறினாள்.

மேய்ப்பவன் கட்டுப்பாட்டுக்குள் வாழும் ஆடு தொலைந்து போகாது.

சுதந்தரமாக வாழ்பவர்களை விட அடிமைகளாக வாழ்பவர்கள் வழி தவறிப் போக மாட்டார்கள்.

ஆனால் எப்படிப்பட்ட வழி என்பது அவர்கள் யாருடைய அடிமைகள் என்பதைப் பொறுத்தது.

நல்லவர்களுக்கு அடிமைகளாக வாழ்பவர்கள் நல்ல வழியை விட்டு தவறிப் போக மாட்டார்கள்.

கெட்டவர்களுக்கு அடிமைகளாக வாழ்பவர்கள் தீமையை விட்டு வெளியேற மாட்டார்கள்.

அன்னை மரியாள் ஆண்டவருக்கு அடிமையாக வாழ்ந்தாள், ஆகவே விண்ணகப் பாதையை விட்டு விலகாமல் வாழ்ந்தாள்.

நாமும் நமது தாயைப் பின்பற்றி நம்மைப் படைத்தவருக்கு அடிமைகளாக வாழ வேண்டும்.

பாவம் இறைவனுக்கு எதிரான செயல்.

பாவத்துக்கு அடிமையாக இருப்பவர்கள் பாவத்தின் தந்தையாகிய சாத்தானின் அடிமைகள்.

சாத்தானின் அடிமைகளாக வாழ்பவர்கள் சாத்தானின் இருப்பிடமாகிய நரகத்துக்கு இட்டுச் செல்லும் பாதையில் நடப்பார்கள்.

பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என்று ஆண்டவர் சொல்லும்போது 

பாவத்திற்கு அடிமையாக வாழ்பவர்கள் வாழ்வின் இறுதி வரை அப்படியே வாழ்ந்து மரித்தால் நித்தியமும் நரக நிலையில் வாழ நேரிடும்.

பாவத்திலிருந்து நம்மை மீட்கவே இறைமகன் மனுமகனாகப் பிறந்தார்.

நம்மைப் பாவத்திலிருந்து மீட்க  இயேசு என்ன செய்தார்?

முதலில் தனது பாடுகள் மூலமும் சிலுவை மரணத்தின் மூலமும் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்தார்.

அடுத்து திருமுழுக்கு மூலம் நமது சென்மப் பாவத்திலிருந்து நமக்குத் விடுதலை கொடுத்தார்.

அடுத்து நாம் செய்கின்ற பாவங்களுக்காக மனத்தாபப்பட அருள் வரத்தைக் கொடுத்து, பாவ சங்கீர்த்தனம் என்னும் திரு அருட்சாதனத்தின் மூலம் நமது பாவங்களை மன்னிக்கிறார்.

திரும்பவும் பாவம் செய்யாதிருக்க வேண்டிய ஆன்மீக சக்தியைப் பெறவும், நற்செயல்கள் செய்து புண்ணிய வாழ்வில் வளர வேண்டிய சக்தியைப் பெறவும் திவ்ய நற்கருணை மூலம் தன்னையே நமக்கு உணவாகத் தருகிறார்.

உறுதிப் பூசுதல் என்னும் திரு அருட்சாதனமும் அருள் வாழ்வில் நாம் வளரப் போதுமான திடனைத் தருகிறது.

இத்தனை உதவிகளையும் இயேசு செய்கிறார். 

நாம் அவரோடு ஒத்துழைக்க வேண்டும்.

பாவ சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.

சோதனைகளை வெல்ல போதுமான அருள் வரம் கேட்டு இறைவனை மன்றாட வேண்டும்.

இயேசு கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொன்னது இறைவனது அருள் வரங்களைக் கேட்கத்தான்.

நாம் அவற்றை விட்டு விட்டு வேறு என்னவெல்லாமோ கேட்கிறோம்.

பாவங்களிலிருந்து விடுதலை பெற்றால் மட்டும் போதாது.

புண்ணிய வாழ்வில் வளர வேண்டும்.

நமது பிறரன்புச் செயல்கள் தான் புண்ணிய வாழ்வில் நம்மை வளர்க்கும்.

பிறரன்புச் செயல்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் புண்ணிய வாழ்வில் முன்னேறிக் கொண்டேயிருக்க வேண்டும்.

வாழ்வின் இறுதிவரை ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.

வளர்ச்சி இவ்வுலகில் வாழும் வரைதான். விண்ணக வாழ்வில் வளர்ச்சி கிடையாது.

ஆன்மீக வாழ்வில் எவ்வளவு வளர முடியுமோ அவ்வளவு வளர்ந்து விட வேண்டும்.

வளர்ச்சிக்கு ஏற்ப விண்ணக பேரின்பமும் அதிகமாகும்.

பாவத்திலிருந்து விடுதலை பெறுவோம்.

ஆன்மீகத்தில் வளர்வோம்.

லூர்து செல்வம்.

Monday, April 7, 2025

ஆ! என்ன ருசி!!

ஆ! என்ன ருசி!!


நம்முடைய ஒவ்வொரு எண்ணம், சொல் மற்றும் செயலுக்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும்.

நாம் உண்பது ஒரு செயல்.

எதற்காக உண்கிறோம்?

பதில் மிகவும் சிறியது.

நாம் வாழ்வதற்காக 

நாம் உயிர் வாழ நமது உடல் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

நமது உடல் ஆரோக்கியமானதாக இருந்தால் நாம் நீண்ட நாள் வாழலாம்.

நமது உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்திருப்பது?

சத்துள்ள உணவை உண்பதன் மூலம்.

ஆனால் நாம் உண்ணும் போது நமது உடல் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.

நாம் ருசியாக உண்பதில்தான் குறியாக இருக்கிறோம்.

ருசியான உணவுகள் பல சமயங்களில் உடலுக்குக் கேடு விளைவிப்பவை என்பதை மறந்து விடுகிறோம்.

  நாவினால் மட்டுமே ருசியை உணரமுடியும்.

ஆனால் உணவு நாவில் சில வினாடிகளே தங்குகிறது.

நாவிற்கு சிறிது ருசியை அளித்து விட்டு, சீரண உறுப்புகளை நோக்கி நகர்ந்து விடுகிறது.

அங்கு ருசிக்கு வேலையில்லை.

ஆனால் என்ன பொருள் உணவுக்கு ருசியைக் கொடுத்ததோ அதற்குதான் அங்கு வேலை.

அப்பொருள் பிரச்சினை அற்றதாக இருந்தால் அதனால் அங்கு எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் அது கேடு விளைவிப்பதாக இருந்தால் அதனால் உடல் நலன் பாதிக்கப்படுகிறது.

வழக்கமாக ருசி தரக்கூடிய பொருட்கள் இரசாயனப் பொருட்கள். (Chemicals) அவை நாவுக்கு ருசியை அளிக்கும். உடல் நலனைப் பாதிக்கும்.

நாம் நீண்ட நாள் வாழ விரும்புகிறோம். ஆனால் ருசிக்குக் காட்டும் ஆர்வத்தை ஆரோக்கியம் தரும் உணவுக்குக் காட்டுவதில்லை.

விளைவு?

நாம் உண்ணும் உணவு உடல் நலனைப் பாதிக்கிறது.

நம்மை நோய் நொடிகளுக்குள் தள்ளி விடுகிறது.

அப்புறம் அவற்றிலிருந்து வெளி வரவே வாழ்கிறோம்.

மீதி உள்ள நாட்களில் இரசாயனப்  பொருட்களையே மருந்து என்ற பெயரில் சாப்பிடுகிறோம்.

அதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு நோய்க்கான மருந்து side effects என்ற பெயரில் பல நோய்களுக்குக் காரணமாகிறது.

அப்புறம் நோயே நமது வாழ்க்கையாகி விடுகிறது.

அப்படியே ஆன்மீகத்துக்கு வருவோம்.

நாம் உலகில் வாழ்கிறோம். ஆனால் உலகுக்காக வாழ்வில்லை.

 உலகம் நமக்குச் சொந்தமானதல்ல.

நாம் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

ஆனால் நீண்ட என்றால்?

உண்மையில் நீண்ட நாள் என்பதற்குப் பொருளேயில்லை.

ஐந்து ஆண்டுகளை விட பத்து ஆண்டுகள் நீளமானது.

பத்து ஆண்டுகளை விட இருபது ஆண்டுகள் நீளமானது.


இருபது ஆண்டுகளை விட ஐம்பது ஆண்டுகள் நீளமானது.


ஐம்பது ஆண்டுகளை விட எழுபது ஆண்டுகள் நீளமானது.

எழுபது ஆண்டுகளை விட எண்பது ஆண்டுகள் நீளமானது.

இப்படியே கூட்டிக் கொண்டே போகலாம்.

ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவர் நீண்ட நாள் வாழவில்லை.

நாம் உலகில் வாழ்வதன் நோக்கம் நித்திய கால ( முடிவில்லாத) வாழ்வுக்கு நம்மைத் தயாரிக்க.

முடிவில்லாத வாழ்வு இவ்வுலகில் வாழ முடியாது.

விண்ணகத்தில்தான் வாழ முடியும்.

இவ்வுலக வாழ்வின் முடிவுதான் விண்ணக வாழ்வின் ஆரம்பம்.

ஆகவே இவ்வுலகில் நமது சிந்தனை, சொல், செயல் எல்லாம் விண்ணக வாழ்வையே நோக்கமாகக் கொண்டனவாக இருக்க வேண்டும்.

ஆனால் நாம் எப்படி வாழ்கிறோம்?

நாம் வாழும் இந்த உலகம் நிரந்தரமானது அல்ல என்பது தெரிந்தாலும்,

அது நிரந்தரமானது என்று நினைத்து தானே வாழ்கிறோம்.

இந்த உலகில் வாழ்வதற்காகத் தானே சாப்பிடுகிறோம்.

இந்த உலகில் வாழ்வதற்காகத் தானே உடற்பயிற்சி செய்கிறோம்.

இந்த உலகில் வாழ்வதற்காகத் தானே படிக்கிறோம், 
பட்டம் பெறுகிறோம், 
வேலை தேடுகிறோம்,
 வேலை செய்து சம்பளம் வாங்குகிறோம், 
முடிந்தால் கிம்பளமும் வாங்குகிறோம், 
 பணத்தைச் சேமித்து வீடு கட்டுகிறோம், 
சொத்து சேர்க்கிறோம், 
நோய் நொடிகள் வந்தால் நமது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சேர்த்த சொத்தை எல்லாம் செலவழிக்கிறோம்.

நிரந்தரமற்ற உலகில் 
அது நிரந்தரமானது போல வாழ்கிறோம்.

நிரந்தரமான மறுவுலக வாழ்வைப் பற்றி நினைக்கிறோமா?

நினைத்தால் இவ்வுலக வாழ்வைப் பற்றி கவலைப்படாமல் மறுவுலகிற்காக வாழ ஆரம்பித்திருப்போமே!

அப்படியானால்,

சாப்பிடக்கூடாதா?
படித்து பட்டம் பெறக்கூடாதா?
வேலை தேடக்கூடாதா?
சம்பளம் வாங்கக்கூடாதா?
பணம் சேமிக்க் கூடாதா?
வீடு கட்டக்கூடாதா?
நோய் நொடிகள் வந்தால் மருத்துவம் பார்க்கக் கூடாதா?

எல்லாம் செய்யலாம்.
செய்வதை எல்லாம் மறுவுலக வாழ்வுக்காகச் செய்ய வேண்டும்.

இவையெல்லாம் இவ்வுலக வாழ்வுக்கு உதவுவதற்காக செயல்பாடுகள்.

அவற்றை எப்படி மறுவுலக வாழ்வுக்காகச் செய்வது?

நாம் இவ்வுலகில் படைக்கப்பட்டது மறுவுலக வாழ்வுக்காக.

அதாவது, இவ்வுலகில் நாம் வாழ்வது மறுவுலக வாழ்வுக்காக.

அதாவது, நாம் உண்பது, உடுப்பது, உறங்குவது, படிப்பது, பட்டம் பெறுவது etc. etc. எல்லாம் மறுவுலக வாழ்வுக்காகத்தான்.


"இறைவா, நான் இந்த செயலை உமக்காக, 
உமது அன்புக்காக, 
உம்மோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வதற்காக, 
அதற்கு இடையூறாக இருக்கும் என் பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுக்கிறேன்."

என்ற கருத்தோடு நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும்.

அப்படிச் செய்தால் நமது ஒவ்வொரு செயலும் ஒரு செபமாக மாறிவிடும்.

நாம் சுவாசிப்பது கூட நாம் இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கும் காணிக்கையாகவும், செபமாகவும் மாறிவிடும்.

ஒரே வாக்கியத்தில் இறைவனுக்காக வாழும் வாழ்வே செபம் தான்.

நமக்காக நாம் வாழும் வாழ்வு நாவில் படும் தேன் போல் கொஞ்ச நேரமே ருசிக்கும்.

இறைவனுக்காக வாழும் வாழ்வு நித்திய காலமும் ருசிக்கும்.

வாழ்வோம் இறைவனுக்காக.
இறைவனுக்காக மட்டும்.

நமது வாழ்க்கை மூலம் இறைவனையே ருசித்துப் பார்ப்போம்.

"ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர்."
(திருப்பாடல்கள் 34:8)

Taste and see how sweet the Lord is.

லூர்து செல்வம்.

Sunday, April 6, 2025

"ஆனால் நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்புச் செல்லும். ஏனெனில் நான் தனியாகத் தீர்ப்பு வழங்குவதில்லை; என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார்."(அருளப்பர் நற்செய்தி 8:16)



"ஆனால் நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்புச் செல்லும். ஏனெனில் நான் தனியாகத் தீர்ப்பு வழங்குவதில்லை; என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார்."
(அருளப்பர் நற்செய்தி 8:16)

"நீங்கள் உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள். நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை."
(அருளப்பர் நற்செய்தி 8:15)

என்று சொன்ன இயேசு ஏன் தொடர்ந்து 

"நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்புச் செல்லும்."  என்கிறார்?

இது ஒரு நண்பர் எழுப்பிய கேள்வி.

இருவர் எதைப்பற்றியாவது உரையாடிக் கொண்டிருந்தால் இடையிடையே கேள்விகள் எழுவது இயல்பு.

கேள்விகளே இல்லாமல் உரையாட முடியாது.

நாம் தீர்ப்பு என்ற வார்த்தையை நீதிமன்றங்களில் பயன்படுத்துகிறோம்.

நீதிமன்றங்களில் தீர்ப்பு கூறும் அதிகாரம் நீதிபதிக்கு மட்டுமே உண்டு.

வழக்கு தொடரப்பட்ட ஆள் குற்றவாளியா இல்லையா என்பது பற்றி தீர்ப்பு வழங்குபவர் நீதிபதி தான்.

குற்றம் நிரூபிக்கப் பட்டால் தண்டனை வழங்குவார், 

நிரூபிக்கப் படாவிட்டால் விடுதலை அளிப்பார்.

சட்டத்தை உருவாக்குபவர்களுக்கு மட்டுமே தீர்ப்புக் கூறும் அதிகாரம் உண்டு.

சட்டம் இயற்றுவது அரசாங்கம்.

அரசாங்கம் செய்ய வேண்டிய நீதி வழங்கும் வேலையை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி செய்கிறார்.

ஆன்மீகத்தில் நம்மைப் படைத்து நாம் அனுசரிக்க கட்டளைகளைத் தந்தவர் கடவுள்.

அவருக்கு மட்டுமே நமக்குத் தீர்ப்பு கூற அதிகாரம் உண்டு.

அதனால்தான் 

"நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்புச் செல்லும்."  என்கிறார்.

ஆனால் அவர் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை.

"நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை."
(அருளப்பர் நற்செய்தி 8:15)

அப்படியானால் இறுதி நாள் தீர்ப்பு அவரது வார்த்தைகள்?

"ஆகவே, நம்முள் ஒவ்வொருவரும் தம்மைக் குறித்தே கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பர்."
(உரோமையர் 14:12)

இது இறைவாக்கு.

இறுதி நாளில் மனிதர்கள் தான் தங்கள் கணக்கைக் கொடுப்பர்.

மனிதன் கொடுக்கும் கணக்குப்படி  அவன் தவறு செய்திருந்தால் அதன் 
விளைவுகளுக்கு அவன்தான் பொறுப்பு.

கணிதத் தேர்வில் சம்பந்தப்பட்ட மாணவர் எழுதும் தவறான விடைகளுக்கு மதிப்பீடு செய்யும் ஆசிரியரால் மதிப்பெண் கொடுக்க‌ முடியாது.

பரிசுத்தத் தனத்தோடு மரிக்கும் மனிதன் வாழும் போதே மோட்ச வாழ்வைத் தேர்வு செய்து கொண்டான்.


சாவான‌ பாவத்தோடு மரிக்கும் மனிதன் வாழும் போதே பேரிடர் வாழ்வைத் தேர்வு செய்து கொண்டான்.

இறுதி நாளில் அவரவர் தேர்வு செய்த இடத்துக்குப் போவார்கள்.

இதுதான் அவனே அவனுக்குக் கொடுக்கும் தீர்ப்பு.

இயேசு மீட்கவே வந்தார். ஆனால் மனிதன் மறுத்து விட்டால் அவர் என்ன செய்வார்?

அவன் ஆசைப்படி விட்டு விடுவார்.

அவனது சுதந்திரத்தில் குறுக்கிட மாட்டார்.

அவர் சிலுவையில் தன் உயிரைத் தியாகம் செய்து பெற்றுத் தரும் மோட்ச வாழ்வை மனிதன் வேண்டாம் என்று சொன்னால் அவர் என்ன செய்வார்?

''தாகமாய் இருந்த எனக்குத் தண்ணீர் தந்தவர்கள் என்னுடன் வாருங்கள்.

தராதோர் நீங்கள் தேர்வு செய்துள்ள இடத்துக்குக் போங்கள்."

இயேசுவின் வார்த்தைகளின் பொருள் இதுதான்.

கடவுள் நமக்குத் தீர்ப்பு அளிப்பதில்லை, நாம்தான் நமக்குத் தீர்ப்பு அளித்துக்‌ கொள்கிறோம்.

நமது முதல் பெற்றோருக்கு கடவுள் அளித்த கட்டளையையும், அவர்கள் செய்வதையும் சிந்தித்துப் பார்த்தால் இது புரியும்.

கடவுள் கொடுத்த முதல் கட்டளை என்ன?

"ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்"; என்று கட்டளையிட்டுச் சொன்னார்."
(தொடக்கநூல் 2:17)

கட்டளையையும் அதை மீறினால் என்ன விளையும் என்பதைக் கடவுள் கூறிவிட்டார்.

தாய்‌ மகனிடம், ''கடையில் சாப்பிடாதே, சாப்பிட்டால் வயிற்று‌ வலி வரும்." என்று கூறுகிறாள்.

மகன் கடையில் சாப்பிட்டால் வயிற்று‌ வலி வரும் என்று தெரிந்தும் அவன் கடையில் சாப்பிட்டு வயிற்று வலியை வரவழைத்துக் கொண்டால்,

அது தாய் கொடுக்கும் தண்டனை அல்ல.

அவனே அவனுக்குக் கொடுக்கும் தண்டனை.

நமது முதல் பெற்றோருக்கு கடவுள் கொடுத்த கட்டளை என்ன?

''நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்."

விலக்கப் பட்ட கனியைத் தின்றால் மரணம் வரும் எனத் தெரிந்தும் அவர்கள் அதைத் தின்றால் அதற்கு என்ன அர்த்தம்?

அவர்களே மரணத்தை வரவழைத்துக் கொண்டார்கள் என்று தான் அர்த்தம்.

அவர்களே தங்கள் மேல் தீர்ப்பிட்டுக் கொண்டார்கள்.

தீர்ப்பின்படி அவர்கள் அடைந்தது ஆன்மீக மரணம்.

கடவுளின் அருள் என்ற அருளுடன் உயிரோடு இருந்த அவர்கள் பரிபூரண சுதந்திரத்துடன் அவர்கள் செய்த செயலால் இறை அருளை இழந்து ஆன்மீக மரணம் அடைந்தார்கள்.

அவர்கள் தங்கள் மீது வரவழைத்துக் கொண்ட ஆன்மீக மரணத்திலிருந்து, அதாவது பாவத்திலிருந்து, அவர்களை மீட்க 

அவர்களுக்குக் கட்டளை கொடுத்த இறைவனே மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டுத் தன் சிலுவை மரணத்தால் அவர்கள் செய்த பாவத்துக்குப் பரிகாரம் செய்தார்.

அவரே தீர்ப்பு வழங்கியிருந்தால் இதைச் செய்திருப்பாரா?

மனிதன் தன் மீது தானே அளித்துக் கொண்ட தீர்ப்பிலிருந்து அவனை விடுவிக்கவே இறைவன் மனிதன் ஆனார். 

அவர் மனிதன் மீது தீர்ப்பளிக்க அல்ல, அவனை பாவத்திலிருந்து மீட்கவே தன் ஒரே மகனை தந்தை இறைவன் உலகுக்கு அனுப்பினார்.

நாம் பாவம் செய்யும் போதெல்லாம் நம் மீது நாமே தீர்ப்பு எழுதிக் கொள்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம். 

பாவத்தைத் தவிர்ப்போம்.

இறைவன் காட்டிய வழியில் நடக்கவும், பரலோக வாழ்வுக்காக நம்மை நாமே தயாரிப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருப்போம். 

பசித்தோர்க்கு உணவளித்தல், தாகம் உள்ளவர்களுக்குத் தண்ணீர் கொடுத்தல், 
உடை இல்லாதவர்களுக்கு உடை அளித்தல்
ஏழைகளுக்கு உதவுதல், 
சுகம் இல்லாதவர்களுக்கு ஆறுதல் கூறுதல்,
சிறையில் உள்ளவர்களைச் சென்று பார்த்தல்,
தேடி வந்தவர்களை உச்சரித்தால்,
நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல் 

போன்ற பிறரன்பு செயல்களைச் செய்து, இறைவனை அன்பு செய்து வாழ்வோம்.

நித்திய பேரின்ப வாழ்வை இறைவன் நம்மோடு பகிர்ந்து கொள்வார். 

லூர்து செல்வம்.

Saturday, April 5, 2025

"உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" (அருளப்பர் நற்செய்தி 8:7)

 "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" 
(அருளப்பர் நற்செய்தி 8:7)

மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, 

"போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள். 

இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?"  என்று கேட்டனர். 

அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக  இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள்.

"கல்லால் எறிந்து கொல்ல வேண்டாம்."   என்று அவர் சொன்னால் அவர் "மோசேயின் சட்டத்தை மீறுகிறார்" என்று குற்றம் சாட்டலாம்.

"கொல்லுங்கள்" என்று சொன்னால் "இரக்கத்தைப் போதிக்கிறார், ஆனால் அவரிடம் இரக்கம் இல்லை." என்று குற்றம் சாட்டலாம்.

இந்த நோக்கத்தோடு தான் கேட்டார்கள்.

இயேசுவோ குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார். 


முதலில் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.

மறைநூல் அறிஞரும் பரிசேயரும்

"இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள்."

என்று குற்றம் சாட்டினார்கள்.

ஆனால் பெண் தனியாக விபச்சாரம் செய்ய முடியாது. குற்றவாளியைப் பிடிப்பதானால் ஆணையும் பிடித்து கொண்டு வந்திருக்க வேண்டும்.

அவர்களுடைய நோக்கம் இயேசுவிடம் குறை காண்பதே.

அவரோ அவர்கள் எதிர்பார்த்த எந்த பதிலையும் கூறாமல் எதிர் பாராத ஒன்றைக் கூறினார்.

"உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" என்று அவர்களிடம் கூறினார். 

அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார். 


இயேசு நிமிர்ந்து பார்த்து, "அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?" என்று கேட்டார். 

அவர், "இல்லை, ஐயா" என்றார். இயேசு அவரிடம் "நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்" என்றார்.

அவர்கள் அவளைப் பிடித்து வந்ததால் ஒரு நன்மை விளைந்தது.

அவள் பாவ மன்னிப்புப் பெற்றாள், திருந்தினாள்.

இந்த நிகழ்விலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம்.

ஒவ்வொருவரும் அவரவர் ஆன்மாவின் நிலையைப் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அது அவர்களது ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும்.

சிலர் தன் இலையில் என்ன இருக்கிறது, என்ன தேவை என்பதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

மற்றவர்கள் இலையையே பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அவன் என்ன சாப்பிகிறான், எப்படிச் சாப்பிடுகிறான் என்பதையே பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் முதலில் நாம் ஒழுங்காகச் சாப்பிட வேண்டும்.

மற்றவர்களை‌ நேசிக்க வேண்டும், ஆனாலும் உன்னை நீ நேசிப்பது போல உன் அயலானை நேசி என்று ஆண்டவர் கூறியிருப்பதை மறந்து விடக்கூடாது.

மற்றவர்கள் நல்லவர்களாக‌வாழ வேண்டும் என்று ஆசைப்படுவது தப்பில்லை, ஆனால் முதலில் நாம் நல்லவர்களாக வாழ வேண்டும்.

மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க ஆசைப்படுவது நல்லதுதான். ஆனால் முதலில் நாம் நற்செய்தியை அறிந்திருக்க வேண்டும். 

மற்றவர்கள் பாவம் செய்யாமல் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவது நல்லதுதான். ஆனால் மற்றவர்களுடைய பாவங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய நமக்கு உரிமை இல்லை.

அவரவர் ஆன்மாவை அவரவர்  பரிசோதனை செய்ய வேண்டும், மற்றவர்களது ஆன்மாக்களை அல்ல. 

நம்மிடம் ஆயிரம் குறைகளை வைத்துக்கொண்டு மற்றவர்களது குறைகளைச் சுட்டிக் காண்பிக்க கூடாது.

அதைத்தான் மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் செய்தார்கள். 

எல்லோருடைய ஆன்மாக்களின் நிலையும் ஆண்டவருக்குத் தெரியும்.


பாவம் இல்லாதவர் முதலில் 
அந்தப் பெண்மேல் கல் எறிய வேண்டும் என்பது இயேசுவின் விருப்பமா?

 இல்லவே இல்லை.

பின் ஏன் அப்படிச் சொன்னார்?

அவர் கடவுள். அவர் மனிதனாகப் பிறந்தது பாவங்களை மன்னிக்க, பாவியைத் தீர்ப்பிட அல்ல.

"உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்." 
(அருளப்பர் நற்செய்தி 3:17)

"இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்" 
(லூக்கா நற்செய்தி 19:10)

ஆகவே அவள்மீது குற்றம் சாட்டியவர்களே குற்றவாளிகள் என்று அவருக்குத் தெரியும்.

அவர்கள் கல் எறிய மாட்டார்கள் என்றும் அவருக்குத் தெரியும்.

ஆகவே தான் துணிந்து

"உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" என்று சொன்னார்.

நாம் அனைவருமே பாவிகள்,  யாரையும் தீர்ப்பிட நமக்கு உரிமை இல்லை.

நமக்குள் பார்ப்போம்.
 நமக்குள் இருக்கும் அழுக்கை அப்புறப்படுத்துவோம்.

இது நமது கடமை.

லூர்து செல்வம்.

Friday, April 4, 2025

செபமாலை - வல்லமை வாய்ந்த செபம்.


செபமாலை - வல்லமை வாய்ந்த செபம்.

செபமாலைக்கும், மற்ற செபங்களுக்கும் இடையில் மாபெரும் வித்தியாசம் இருக்கிறது.

மற்ற செபங்களில் யாரை நோக்கி செபிக்கிறோமோ அவர்களும் நாமும் மட்டும் பங்கு பெறுகிறோம்.

ஆனால் செபமாலையில் விண்ணுலகில் வாழ்பவர்களும் நம்மோடு சேர்ந்து செபிக்கிறார்கள்.

நமது செபம் அன்னை மரியாள் வழியாக பரிசுத்த தம திரித்துவத்துக்குதான்.

முதலில் நமது விசுவாசத்தை அறிக்கையிட்டு விட்டு, பரலோத்தையும், பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையை அழைக்கிறோம்.

தந்தை நமது மனக் கண் முன்பு வருகிறார். தந்தை இருக்கும் இடத்தில் மகனும் இருப்பார், தூய ஆவியும் இருப்பார். நமது செபம் போய்ச் சேர வேண்டிய இடம் பரிசுத்த தம திரித்துவம்தான்.

அதற்காக ஒரு ஐம்பத்து மூன்று மணி செபமாலையில் ஆறு முறை தந்தையை அழைக்கிறோம்.

தந்தை வந்தவுடன் அவரை ஆராதித்துக் கொண்டே கோடிக்கணக்கான சம்மனசுக்களும் வந்து விடுவார்கள்.

கோடிக்கணக்கான விண்ணவர்கள் முன்னிலையில் தான் நாம் செபிக்கிறோம்.

முதலில் அன்னை மரியாளை நோக்கி நமக்காக செபத்தை ஆரம்பிப்பவர் கபிரியேல் சம்மனசு.

"அருள் நிறைந்த மரியே வாழ்க.
கர்த்தர் (இயேசு) உம்மோடு இருக்கிறார்."

அடுத்து புனித எலிசபெத்தம்மாள் செபத்தைத் தொடர்கிறாள்.

'' பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப் பட்டவள் நீர். உமது திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப் பட்டவர்."

அடுத்து நாம் தொடர்கிறோம்.

"புனித மரியாயே, இறைவனின் தாயே, பாவிகளாகிய எங்களுக்காக இப்போதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும்.    ஆமென்."

இந்த செபத்தை 53 முறை சொல்கிறோம்.

ஒன்றைக் கவனிக்க வேண்டும்.

கோடிக்கணக்கான சம்பனசுக்கள் முன்னிலையில், பரிசுத்த தம திரித்துவக் கடவுளை நோக்கி,

கடவுளின் தாய் வழியாக,

கபிரியேல் தூதரோடும், எலிசபெத்தம்மாளோடும் சேர்ந்து செபிக்கிறோம்.

உலக மக்கள் அனைவருக்காகவும் செபிக்கிறோம்.

"'எங்கள்' மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும்."

ஒரு மங்கள வார்த்தை செபத்தில் மூன்று முறை அன்னை மரியாளை நினைவு கூறுகிறோம், மூன்று முறை இயேசுவை நினைவு கூறுகிறோம்.

நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொண்டு, மரண நேரத்தில் நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டுகிறோம்.

இப்படி 53 முறை வேண்டுகிறோம்.

நமது செபத்தை அனைத்து சம்மனசுக்கள், குறிப்பாக கபிரியேல் தூதர், எலிசபெத்தம்மாள் ஆகிய அனைவரும் அன்னை மரியாள் வழியாக கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கிறார்கள்.

செபமாலை சொல்வது ஒருவராக இருந்தாலும் அதை இறைவனிடம் எடுத்துச் செல்வோர் கோடிக்கணக்கானோர்.

கூர்ந்து கவனிக்க வேண்டும்.

நாம் வாழ்வது எதற்காக?

விண்ணக வாழ்வுக்காக.

விண்ணக வீட்டுக்கு வாசல் எது?

நமது மரணம்.

விண்ணக வீட்டுக்கு வாசல் வழியாக விண்ணகத்துக்குள் அழைத்துச் செல்ல வேண்டுமென்று கோடிக்கணக்கான பேர் அன்னை மரியாள் வழியாக நமக்காக சிபாரிசு செய்கிறார்கள்.

நாம் தினமும் 203 மணி செபமாலை செபித்தால் தினமும் கோடிக்கணக்கான சிபாரிசுகள் விண்ணகம் தந்தையை நோக்கி பறந்து கொண்டிருக்கும்.

இன்னும் ஒன்றையும் கவனிக்க வேண்டும்.

நாம் 203 மணி செபமாலை செபிக்கும் போது 

அன்னைக்கு கபிரியேல் தூதர் மக்கள் வார்த்தை சொன்ன வினாடியிலிருந்து

அவள் விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டப்படும் வினாடி வரை அவளுடனே பயணித்துக் கொண்டே செபிக்கிறோம்.

விண்ணக வாழ்வுக்குள் நமது பயணம் தொடரும்.

பக்தியுடன் செபமாலை செபிக்கும் நாம் நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைவது நூற்றுக்கு நூறு உறுதி.

தினமும் செபமாலை சொல்வோம்.

நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைவோம்.

நம்மோடு சேர்ந்து செபமாலை செபித்த விண்ணவர்கள் நம்மை வரவேற்க விண்ணக வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

லூர்து செல்வம்.

Thursday, April 3, 2025

"உலகு உங்களை வெறுக்க இயலாது; ஆனால் என்னை வெறுக்கிறது. ஏனெனில் உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக்காட்டி வருகிறேன். (அருளப்பர் நற்செய்தி 7:7)


"உலகு உங்களை வெறுக்க இயலாது; ஆனால் என்னை வெறுக்கிறது. ஏனெனில் உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக்காட்டி வருகிறேன். 
(அருளப்பர் நற்செய்தி 7:7)

உலகெங்கும் வாழும் யூதர்கள் மூன்று முக்கியமான திருவிழாக்களைக் கொண்டாட செருசலேமில் கூடுவது வழக்கம்.

1.பாஸ்கா: யூதர்கள் எகிப்திலிருந்து விடுதலை பெற்றதன் நினைவாக.

2. கூடாரப் பண்டிகை: விடுதலை பெற்று வரும்போது பாலைவனத்தில் கூடாரங்கள் அமைத்து தங்கியதன் நினைவாக.

3. பெந்தகோஸ்தே பண்டிகை:

சினாய் மலையில் இஸ்ரவேலர்களுக்கு தோரா (சட்டம்) வழங்கப்பட்டதின் நினைவாக.

செருசலேம் யூதேயாவில் உள்ளது.

அன்னை மரியாளின் தங்கை மக்களில் இருவர் (யாக்கோபும், யூதாவும்) இயேசுவின் சீடர்களாக இருந்தனர்.


கூடாரத் திருவிழா வந்த போது கலிலேயாவில் போதித்துக் கொண்டிருந்த இயேசுவை
அவர்கள் திருவிழாவுக்குப் போகச் சொன்னார்கள்.

ஆனால் அவர் 

உலகு உங்களை வெறுக்க இயலாது; ஆனால் என்னை வெறுக்கிறது. ஏனெனில் உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக்காட்டி வருகிறேன். 


நீங்கள் திருவிழாவுக்குப் போங்கள்; நான் வரவில்லை. ஏனெனில், எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை" என்றார். 
(அருளப்பர் நற்செய்தி 7:7,8)

அவர் நேரம் என்று கூறியது அவரது சிலுவை மரணத்துக்கான நேரத்தை.    அவர் மனிதனாகப் பிறந்தது அதற்காகத்தானே.

அவரைப் பிடிக்காதவர்கள் அவரைக் கொல்ல வழி தேடிக் கொண்டிருந்தார்கள்.

தனக்குரிய நேரம் வரும் வரை தன்னை அவர்களிடம் கையளிக்க அவர் விரும்பவில்லை.

அவர் அனுமதி இன்றி அவர்மேல் யாரும் கைவைக்க முடியாது.

"என்னை வெறுக்கிறது. ஏனெனில் உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக்காட்டி வருகிறேன்."

என்று அவர் கூறியதன் பொருள்?

தங்கள் குறைகளைச் சுட்டிக் காட்டுபவர்களை வெறுப்பது உலக மக்களின் இயல்பு.

குறைகளைச் சுட்டிக் காட்டுபவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காகத்தான்.

இயேசு திருச் சட்டத்தின்படி வாழாத மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் ஆகியோர் அதன்படி வாழ்வதற்காக அவரது குறைகளைச் சுட்டிக் காண்பித்தார்.

ஆகவே அவர்கள் அவரை வெறுத்ததுமல்லாமல் அவரைக் கொல்ல வழி தேடிக் கொண்டிருந்தார்கள்.

அவரது பாடுகளுக்கும் சிலுவை மரணத்துக்கும் அவர்கள் தான் காரணமாக இருந்தார்கள்.

அவரது பாடுகளுக்காக அவர் குறித்து வைத்திருந்த நேரம் வரும் வரை அவர் அவர்கள் கையில் அகப்பட்ட வில்லை.

இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் நம்மைப் பற்றி கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம்.

நாம் இயேசுவின் வழியில் நடக்க முயற்சி செய்யும் கிறிஸ்தவர்கள்.

நமது நாட்டில் ஒரு பிரிவினர் ஏன் கிறிஸ்தவர்களை வெறுக்கிறார்கள்?

நாம் கிறிஸ்தவ நெறிகளைப் பின்பற்றும் படி மற்றவர்களுக்கு அறிவுறுத்துவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

உலகின் செயல்கள் தீயவை என்பதை நாம் சுட்டிக் காண்பிப்பது உலகுக்குப் பிடிக்கவில்லை.

"நற்செய்தியை அறிவியுங்கள்" என்பது இயேசு நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளை.

நற்செய்தியை அறிவிக்க வேண்டியது நமது கடமை.

இக்கட்டளையை நிறைவேற்றியதற்காக ஆயிரக்கணக்கான நம்மவர்கள் வேத சாட்சிகளாக   மரித்திருப்பது நமக்குத் தெரியும்.

மரணம் விண்ணகம் செல்வதற்கான வாசல்.  அதன் வழியாகத்தான் இவ்வுலகில் இருந்து விண்ணகத்துக்குள் நுழைய முடியும்.

அதைத் திறந்து விடுவோர் நம்மை வெறுப்பவர்களாக இருந்தாலும் நமக்கு மகிழ்ச்சி தான்.

இயேசு தனது மரணத்தின் மூலமாக நம்மை மீட்டார்.

அதற்குத் தாங்கள் அறியாமலே உதவியவர்கள் யார்?

மனுக் குலத்தின் பாவத்துக்குக் காரணமாக இருந்த சாத்தானும், அவனால் ஏவப்பட்டவர்களும் தான்.


அன்று  உலகின் செயல்கள் தீயவை என்பதை இயேசு எடுத்துக்காட்டியதால் அவரை உலகம் வெறுத்தது.

இன்று அதே காரணத்துக்காகத் தான் உலகம் நம்மை வெறுக்கிறது.

ஒரு வகையில் நாம் இயேசுவாக மாறுகிகிறோம்.

அதற்காக நாம் மகிழ வேண்டுமா?
வருந்த வேண்டுமா?

"மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். 

அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்."
(லூக்கா நற்செய்தி 6:22,23)

"உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். 

நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது. 
(அருளப்பர் நற்செய்தி 15:18,19)

கிறிஸ்தவர்கள் என்பதற்காக யாரும் வெறுத்தால் மகிழ்ச்சியாக இருப்போம்.

லூர்து செல்வம்.

Wednesday, April 2, 2025

"யோவான் பகர்ந்த சான்றை விட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்."(அருளப்பர் நற்செய்தி 5:36)


"யோவான் பகர்ந்த சான்றை விட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்."
(அருளப்பர் நற்செய்தி 5:36)

யாராவது நம்மிடம் எதையாவது சொன்னால் அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்பது நமது வழக்கம்.

 குளக்கரையில் குணமானவர்  தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதமதத் தலைவர்களுக்கு அறிவித்தபோது

ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள். 


இயேசு அவர்களிடம், "என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன்" என்றபோது

அவர்கள் அவர் ஓய்வு நாள் சட்டத்தை மீறியதோடு நில்லாமல், கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று கூறித் தம்மையே கடவுளுக்கு இணையாக்கியதால் யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள். 



இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது; "மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார்" என்று கூறினார்.

 மேலும் இயேசு தான் இறைமகன் என்பதற்கு தனது செயல்களே ஆதாரம் என்கிறார்.

உலகியலில் கூட ஒருவரின் தன்மையை மதிப்பிடுவற்கு அவரது சொற்களை விட செயல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

பெருந்தலைவர் காமராஜருக்கு சில அரசியல்வாதிகளைப் போல் கவர்ச்சிகரமாகப் பேசத் தெரியாது.

கவர்ச்சிகரமாகப் பேசுபவர்கள் ஓட்டுக்காப் பேசுவார்கள்.

பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இருக்காது.

ஆனால் காமராஜர் சொல்வதைச் சாதிப்பார்.

இயேசு இறைமகன்  என்பதற்கு அவருடைய போதனையும், சாதனையும்தான் ஆதாரம்.

அவரது புதுமைகள் மனித சக்திக்கு அப்பாற்பட்டவை.

தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றிய புதுமையே அவருடைய சீடர்கள் அவர்மீது கொண்டிருந்த விசுவாசத்தை உறுதிப் படுத்தியது.

சீடர்கள் அவரை இறைமகன், மெசியா என்று விசுவசித்து தான் அவரைப் பின்பற்றினர்.

"நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்."

என்று திருமுழுக்கு அருளப்பர் சொன்னதைக் கேட்ட அந்திரேயா அதை ஏற்றுக் கொண்டு தனது சகோதரர் சீமோனிடம் வந்து 

 "மெசியாவைக் கண்டோம்" என்றார். 
(அருளப்பர்1:41)


நத்தனியேல் அவரைப் பார்த்து, "ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்றார். 
(அருளப்பர் நற்செய்தி 1:49)

அவர் செய்த புதுமை அவர்களது விசுவாசத்தை உறுதிப் படுத்தியது.

''இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்."
(அருளப்பர் நற்செய்தி 2:11)

இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தது, நோயாளிகளைக் குணமாக்கியது போன்ற புதுமைகளின் நோக்கம் அவர்களுக்கு உதவி செய்வது மட்டுமல்ல,

சம்பந்தப் பட்டவர்களுக்கும், மற்றவர்களுக்கும் விசுவாசத்தை ஊட்டி, விசுவாசத்தின் காரணமாக அவர்கள் மீட்பு பெறுவதும் தான்.

மனித குலத்தை பாவத்திலிருந்து மீட்டு அவர்களை விண்ணக வாழ்வுக்கு அழைத்துச் செல்லவே இறைமகன் மனிதனாகப் பிறந்தார்.

இறைமகன் மனுவுரு எடுத்தது புதுமைகள் செய்வதற்காக அல்ல.

தன் மீது மக்களுக்கு விசுவாசம் ஏற்படவே புதுமைகள் செய்தார்.

வகுப்பில் ஆசிரியர் மாணவர்களுக்கு கதைகள் சொல்வது பாடத்தைப் புரிய வைக்க.

மாணவர்கள் கதைகளை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு பாடத்தை மறந்து விடக்கூடாது. 

ஒரு முறை நான் மூன்றாவது வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் நடத்திய போது,

"கிராம நிர்வாக அதிகாரியின் வேலை மக்களிடமிருந்து நில வரியை வசூலிப்பது.

நிலவரி கொடுக்காதவர்கள் வீட்டிலிருந்து தலையாரி சட்டி பானைகளை அள்ளி தெருவில் போடுவதைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டபோது 

மாணவர்கள், "பார்த்திருக்கிறோம்." என்றார்கள். 

"மக்கள் நிலவரியை ஒழுங்காகக் கட்ட வேண்டும்.

நிலவரியை வசூலிப்பது தான் கிராம நிர்வாக அதிகாரியின் வேலை."

அந்த ஆண்டு இறுதித் தேர்வில் சமூக அறிவியல் பாடத் தேர்வில் 
ஒரு கேள்வி: 

"கிராம நிர்வாக அதிகாரியின் வேலை என்ன?"

சில மாணவர்கள்,  "வீட்டிலிருந்து  சட்டி பானைகளை அள்ளி தெருவில் போடுவதுதான் கிராம நிர்வாக அதிகாரியின் வேலை." என்று எழுதியிருந்தார்கள்.

எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

இந்த மாணவர்களைப் போன்றவர்கள் தான் 

விசுவாச வாழ்வைப் பற்றி கவலைப்படாமல் உதவிகளை கேட்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழும் கிறிஸ்தவர்கள்.

ஞாயிறு திருப்பலிக்குப் போகாமல் கோடி அற்புதர் புனித அந்தோனியாரைத் தேடி செவ்வாய்க் கிழமை மட்டும் திருப்பலிக்குப் போகின்றவர்களும் இப்படிப்பட்டவர்கள் தான்.

பொது வாழ்வின் போது இயேசு செய்த எல்லா புதுமைகளும் மக்கள் தன்னை மீட்பராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். 

பிலாத்துவின் அரண்மனையில் 
"அவரை சிலுவையில் அறையுங்கள்." என்று மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் கத்திய போது 

"அவர் எங்கள் அரசர்.  அவரை விட்டு விடுங்கள்." என்று குரல் கொடுக்க அவரிடம் உதவி பெற்ற யாருமே அங்கே இல்லை என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.

அன்னை மரியாளுக்கும் அவரோடு இருந்த மற்ற பக்தியுள்ள பெண்களுக்கும் மனித குல மீட்புக்காகவே இயேசு பலியாகப் போகிறார் என்ற உண்மை தெரியும். ஆகவே அவர்கள் பலியைத் தந்தை இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கவே அங்கு வந்தார்கள்.

ஆனால் உதவி பெற்ற மற்ற சாதாரண மக்கள்? 

மக்களை விடுங்கள், இயேசுவின் சீடர்கள்? 

இயேசுவைக் கைது செய்த போதே ஓடிப் போய்விட்டார்கள்.

"அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள்."
(மத்தேயு நற்செய்தி 26:56)

"இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின் மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக் கொண்டு அவர் பின்னே சென்றார்; அவரைப் பிடித்தார்கள். 

ஆனால் அவர் துணியை விட்டு விட்டு ஆடையன்றித் தப்பி ஓடினார். 
(மாற்கு நற்செய்தி 14:51,52)

அவர் நற்செய்தியை எழுதிய மாற்கு என்று விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள்.

 இராயப்பரும் இயேசுவை மூன்று முறை மறுதலித்தார்.

ஒன்றை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இயேசு செய்த புதுமைகள் இறைமகன் என்று சந்தேகமின்றி நிருபிக்கின்றன.

இயேசு புதுமைகள் மட்டும் செய்யவில்லை.

அவர் போதனைகளை எல்லாம் சாதித்துக் காட்டினார்.

ஏழ்மையைப் பற்றி போதித்தவர் அவரே ஏழையாக வாழ்ந்தார்.

பகைவர்களை நேசிக்கச் சொன்னவர் பாவத்தினால் அவரைப் பகைத்த நமக்காகத்தான் தன்னையே பலியாக ஒப்புக் கொடுத்தார்.

தீமைக்கு நன்மை செய்யச் சொன்னவர் தன்னைப் பாடுபடுத்தி சிலுவையில் அறைந்த அனைவரையும் மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார்.

பசித்தவர்களுக்கு உணவளிக்கச் சொன்னவர் அப்பங்களைப் பலுகச் செய்து தனது போதனைகளைக் கேட்டவர்களுக்கு உணவளித்தார்.

ஆக தனது சிந்தனை, சொல், செய ல் ஆகியவற்றின் மூலம் தன்னை இறைமகன் என்பதை நிருபித்தார்.

இயேசுவிடமிருந்து நாம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

 நாம் நமது சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றின் மூலம் இயேசுவின் சீடர்களாக வாழ வேண்டும்.

நாம் கிறிஸ்தவன் என்று சொன்னால் மட்டும் போதாது.

அவரது போதனைகளை நாம் செயல் படுத்த வேண்டும்.

கடவுளை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிப்பதோடு

நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நேசிக்க வேண்டும்.

நமது பிறரன்புச் செயல்கள் மூலம் மற்றவர்கள் நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று அறிய வேண்டும்.

லூர்து செல்வம்.

Tuesday, April 1, 2025

அன்புக்கு வயது இல்லை.


அன்புக்கு வயது இல்லை.


கடவுளை  அன்பு செய்யவும், அவருக்கு சேவை செய்யவும், அதன் மூலம் அவரோடு நித்திய வாழ்வைப் பெறவும் அவர் நம்மைப் படைத்தார்.


இந்த உலகில் நமது செயல்கள் அனைத்தும்  கடவுளின் மேலான மகிமையையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

 நமது திருமண வாழ்க்கையும் நமது வாழ்க்கை நிகழ்வுகளுள் ஒன்றுதான்.


திருமண அருட்சாதனத்தை நிறுவியவர் கடவுளே.


எனவே திருமணமான தம்பதியினர் கடவுளுக்காக, கடவுளுக்காக மட்டுமே வாழ  வேண்டும்.

ஒருவரையொருவர் திருமணம் செய்வதன் மூலம், கடவுளின் மீட்புத் திட்டத்தில்   பங்கு வகிக்க அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

அவர்களுடைய திருமண வாழ்வுதான் அவர்களது மீட்புக்குக்கான வழி.

திருமணத்திற்கான முதல் நிபந்தனை அன்பு.

கணவன் மனைவிக்கு இடையேயான அன்பு தெய்வீக அன்பைப் பிரதிபலிக்க வேண்டும்.

கடவுளின் அன்பு அளவில்லாதது,  நிபந்தனையற்றது.

திருமண அன்புக்கு எல்லை கிடையாது.

திருமண அன்பிற்குள் நிபந்தனைகள் நுழையக்கூடாது.
No if clause in marital relationship.

'நீ எனக்குக் கீழ்ப்படிந்தால் நான் உன்னை காதலிப்பேன்', 

'நீங்கள் சுறுசுறுப்பாக இருந்தால்தான் நான் உங்களை விரும்புவேன்'

போன்ற நிமந்தனைகளுக்கு அன்பில் இடமில்லை.

கடவுள் நம்மை நிபந்தனையின்றி நேசிக்கிறார்.

அவரை நேசிக்காத பாவிகளையும் அவர் நேசிக்கிறார்.

திருமணமான தம்பதியினர் எப்படி அன்பு செய்ய ஆரம்பிக்கிறார்களோ அப்படியே இறுதிவரை அன்பு செய்ய வேண்டும். 

(The married couple should always be beginners in love.)


''உங்கள் வயது?"

"எண்பது."

"உங்கள் மனைவியை எப்படி அன்பு செய்கிறீர்கள்?"

"திருமணத்தன்று நேசித்தது போலவே இன்றும் நேசிக்கிறேன்.

நாங்கள் அன்பில் எப்போதும் இளைஞர்கள் தான்."

"எத்தனை வயது இளைஞர்கள்?"

"20 வயது. அன்புக்கு வயது கிடையாது."


நாம் சிலுவை அடையாளம் போடும் போதெல்லாம்,

 "ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும், எப்பொழுதும், அநாதி சதாகாலமும் இருக்கும்படியே.

ஆமென்.

என்று சொல்கிறோம்.

இதை நாம் கடவுளைப் பற்றி கூறுகிறோம்.

இயேசு, "உங்கள் பரலோகத் தந்தை நிறைவுள்ளவராக இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாக இருங்கள்" என்று கூறியுள்ளார். (மத்தேயு 5:48)

நம்முடைய அன்பு பரிசுத்த திரித்துவத்திற்குள் இருக்கும் அன்பைப் போல இருக்க வேண்டும்.

கத்தோலிக்க அன்பு தனித்தன்மை வாய்ந்தது.


கடவுள் மீதான அன்பும்,
 அயலார் மீதான அன்பும் கிறிஸ்தவ தம்பதியரின் அன்பில் சந்திக்கின்றன.


முந்தையது அவர்களை கடவுளுடன் ஒன்றிணைக்கிறது,

 பிந்தையது அவர்களின் குழந்தைகள் மற்றும் அவர்கள் உறுப்பினராக இருக்கும் சமூகத்துடன் ஒன்றிணைக்கிறது.


கிறிஸ்தவ அன்பு கடவுளையும் அவருடைய குழந்தைகளையும் அரவணைக்கிறது, 

அவர்கள் நம் அயலார்கள்.


ஒரு கணவர் கூறினார், "கடவுளின் இதயத்தில் இருக்கும் அன்புடன் என் மனைவியை நேசிக்க விரும்புகிறேன். 

அதை  நானாக எப்படிச் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, 

எனவே அதை கடவுளிடமிருந்தே  கற்றுக்கொள்ள  என் வாழ்நாள் முழுவதும் முயன்று  கொண்டிருக்கிறேன்."


தம்பதியினர் தங்கள் அன்பை கடவுளுடைய அன்பாக மாற்ற கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இந்த பிரார்த்தனை அவர்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும்.

அவர்கள் ஒன்றாக பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒன்றாக பிரார்த்தனை செய்யும் குடும்பம் ஒன்றாக இருக்கும்.

திருமணமான தம்பதியினர் எது செய்தாலும் கடவுளின் முன்னிலையில் செய்யப்படுகிறது.

அவர்கள் தங்கள் அனைத்து செயல்களிலும் இதை நினைவில் வைத்திருந்தால், அவர்கள் தங்கள் திருமண கடமைகளைச் செய்யும்போது பாவங்களுக்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டார்கள்.

குழந்தை கருத்தரிப்பதை செயற்கையாகத் தடுப்பது பாவம் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

                   **

"மூன்றாவது குழந்தை உண்டாகாமல் இருக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?"

"ஒன்றுமே செய்ய வேண்டாம்!"
  
                **

கருக்கலைப்பு ஒரு கொலை என்பதால் அதுவும் ஒரு பாவம்.


அவர்கள் என்ன செய்தாலும் திருச்சபையின் கட்டளைகளுக்கு எதிராகச் செய்யக்கூடாது.

அவர்கள் கடவுளுக்காக, கடவுளுக்காக மட்டுமே வாழ வேண்டும்.

லூர்து செல்வம்.

Monday, March 31, 2025

"ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய் விட்டார்."(அருளப்பர் நற்செய்தி 5:13)



"ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய் விட்டார்."
(அருளப்பர் நற்செய்தி 5:13)

பெத்சதாக் குளக் கரையில் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமின்றி படுத்ருந்த ஒருவருக்கு இயேசு யார் என்றே தெரியாது.

அவருக்கு இயேசுவின் மேல் விசுவாசம் இருந்திருக்காது.

தெரியாத ஒருவரை எப்படி விசுவசிக்க‌ முடியும்?

ஆனாலும் அவர் கேளாமலேயே இயேசுவே முன் வந்து அவரை விசாரித்து குணமாக்குகிறார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

மக்களில் அநேகருக்கு கடவுளைப் பற்றி தெரியாவிட்டாலும் கடவுளுக்கு உலகிலுள்ள அனைவரைப் பற்றியும் தெரியும்.

ஏனெனில் அனைவரையும் படைத்தவர் அவர்.

தன்னை அறிந்து விசுவசிப்பவர்களுக்கு மட்டுமல்ல
விசுவசியாதவர்களுக்கும் கடவுள் உதவி செய்கிறார்.

உலகில் நடைபெறும் அத்தனை நன்மைகளுக்கும் காரணம் அவரே.

சுகமில்லாதவர்கள் சுகம் பெற மருத்துவ மனைக்குச் செல்கிறார்கள்.

மருந்து கொடுப்பது மருத்துவராக இருக்கலாம்.

குணமளிப்பவர் கடவுளே.

குணமாகாவிட்டால்?

அதுவும் கடவுள் சித்தம்தான்.

அவர் சித்தமின்றி அணுவும் அசையாது.

அதனால் என்ன நேர்ந்தாலும் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும்.


நீண்ட நாள் நோயாளி குணமானதை இன்னொரு கோணத்திலிருந்தும் பார்க்கலாம்.

" இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, "இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்" என்றார்."

அவர் பாவம் செய்யக் கூடாது என்று அவருக்குப் புத்திமதி சொல்லும்  நோக்கத்தோடு தான் இயேசு அவரைக் குணமாக்கியிருக்கிறார்.

அவர் நோயில் விழுந்தது கூட‌ கடவுளின் திட்டமாக இருக்கலாம்.

அவரைப் பாவ வாழ்க்கையிலிருந்து மனம் திருப்புவதற்காக அவருக்கு நீண்ட கால நோயைக் கொடுத்திருக்கலாம்.,

 பின் அவரைக் குணமாக்கி, புத்திமதி சொல்லி, 
அவரை நல்லவராக வாழ வைத்திருக்கலாம்.


நமக்கு என்ன நேர்ந்தாலும் அது நாம் கடவுளைத் தேட வைப்பதற்காக அவர் போடும் திட்டமாகத்தான் இருக்கும்.

நமக்கு துன்பம் எதுவும் வராவிட்டால் நாம் நம்மைப் படைத்தவரை மறக்க நேரிடலாம்.

அவரை மறக்காமலிருக்கவே அவர் நமக்குத் துன்பங்களை அனுமதிக்கலாம்.

எதையும் கடவுளின் கண்ணோக்கிலிருந்து பார்க்க வேண்டும்.

கடவுள் நம்பிக்கையே இல்லாத ஒருவர் பைக்கில் போகும்போது பைக் சறுக்கிக் கீழே விழுந்து விட்டார்.

விழும்போது அவர் வாயிலிருந்து அவரே அறியாமல் வந்த வார்த்தை, "கடவுளே!"

நாம் மறந்தாலும் கடவுள் நம்மை மறக்க மாட்டார்.

லூர்து செல்வம்.

Sunday, March 30, 2025

"இயேசு அவரிடம், "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்."(அருளப்பர் நற்செய்தி 4:50)


"இயேசு அவரிடம், "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்."
(அருளப்பர் நற்செய்தி 4:50)

இயேசு கலிலேயாவில் போதித்துக்  கொண்டிருந்த போது அரசு அலுவலர் ஒருவர் அவரிடம் வந்து,

சாகும் தருவாயில் இருந்த தன் மகனைக் குணமாக்க வரும்படி வேண்டினார்.

இயேசு அவரிடம்,   "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்றார்.

 அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.

அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவர் மகன் சுகம் அடைந்து விட்டான் என்ற செய்தி வந்தது.

இப்புதுமை விசுவாசத்தின் மகத்துவத்தை வலியுறுத்துகிறது.

விசுவாசம் என்றால்?

கடவுள் உண்மையே உருவானவர்.
(God is truth itself.)

அவர் தன்னை தானே வெளிப் படுத்தினாலன்றி அவரைப் பற்றி யாராலும் எதுவும் அறிய முடியாது.

இயேசுவின் வருகைக்கு முன் தன்னுடைய தீர்க்கத் தரிசிகளின் வாயிலாக கடவுள் தன்னை வெளிப்படுத்தினார்.

அவர் வெளிப்படுத்திய உண்மைகள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் அடங்கியுள்ளன.

பழைய ஏற்பாடு - 46 புத்தகங்கள்.

மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு தனது பொது வாழ்வின் போது தன்னைப் பற்றிய இறையியல் உண்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்தினார்.

அவரது வாழ்க்கையே ஒரு இறையியல் வெளிப்பாடு.

பொது வாழ்வின் போது வெளிப்படுத்திய உண்மைகள் பைபிளின் புதிய ஏற்பாட்டில்  அடங்கியுள்ளன.

புதிய ஏற்பாட்டில் - 27 புத்தகங்கள்.

பைபிளில்  73 புத்தகங்கள்.

அவர் இராயப்பரின் தலைமையில் நிறுவிய கத்தோலிக்கத் திருச்சபையின் மூலமாகவும் தன்னைப் பற்றிய‌ உண்மைகளை வெளிப்படுத்தினார்.

இவை கத்தோலிக்கத் திருச்சபையின் பாரம்பரியத்தில்
அடங்கியுள்ளன.

இறைவனால் வெளிப்படுத்தப் பட்ட உண்மைகளை ஏற்று, அவற்றின் படி வாழ்வது விசுவாச வாழ்வு.

விசுவாசத்தையும் வாழ்க்கையையும் பிரிக்க முடியாது.

விசுவாசப் பிரமாணத்தை வாயினால் சொல்லிக் கொண்டு, அதன்படி வாழாதவன் விசுவாசி அல்ல.

கடவுளிடம் கேட்டது கிடைக்க வேண்டுமென்றால் நாம் விசுவாச வாழ்வு வாழ்பவர்களாக இருக்க வேண்டும்.

நாம் வாயினால் சொல்லும் விசுவாசப் பிரமாணத்துக்கும் நமது வாழ்க்கைக்கும் சமபந்தம் இல்லாவிட்டால் 

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்ற இறை வாக்குக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாமல் போய் விடும்.

இறைவாக்கு நாம் வாழ்வதற்காகத் தரப்பட்டுள்ளது. அதை வாழாமல் இறைவனிடம் கேட்பது பாடப்புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டு அதைப் படிக்காமல்  தேர்வு எழுதுவதற்குச் சமம்.

சிலர் பாடப் புத்தகத்தை தன் தலையணையாக வைத்துக் கொண்டு தூங்கினால் பாடமெல்லாம் தலைக்குள் ஏறிவிடும் என்று நினைக்கிறார்கள்.

பைபிளைக் கையில் வைத்துக் கொண்டால் மட்டும் போதாது, அதை வாழ வேண்டும்.

ஒவ்வொரு நாளும் காலையில் பைபிளை வாசிப்போம், பகலில் அதை வாழ்வோம்.

நாம் கேட்பது கிடைக்கும்.

ஆனால் நாம் கேட்பது இறைவாக்குக்கு எதிரானதாக இருந்து விடக்கூடாது.

இறைவாக்கு, நமது வாழ்க்கை, நமது விருப்பம் மூன்றும் இணைந்திருக்க வேண்டும்.

கேட்பது இறைவாக்குக்கு ஒத்திருக்க வேண்டும்.

இறை விருப்பத்துக்கு எதிரானதாக நமது விருப்பம் இருந்து விடக்கூடாது.

அப்போது தான் நமது வாழ்க்கையும் இறைவனுக்கு ஏற்றதாக இருக்கும்.

வேலை தேடுகிறவன் செய்தித் தாளில் விளம்பரப் பகுதியைப் பார்ப்பான்.

அரசியலில் ஆர்வம் உள்ளவன்
முன்னால் TV இருந்தால் அரசியல் செய்திகளைப் பார்ப்பான்.

பொழுதுபோக முன்னால் TV இருந்தால் படம் , சீரியல் பார்ப்பான்.

ஆன்மீக வாழ்வில் ஆர்வமுள்ளவன் ஆண்டவரிடம் 
விசுவாச வாழ்வு சார்ந்த உதவிகளைக் கேட்பான்.

"தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி! " 
(லூக்கா நற்செய்தி 11:13)

விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது  உறுதி!

நாமும் கேட்போம்.

விசுவாசத்தோடு கேட்போம்.

விசுவாச வாழ்வுக்கு அவசியமான உதவிகளைக் கேட்போம்.

நாம் கேட்பது உறுதியாகக் கிடைக்கும்.

கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும்.

லூர்து செல்வம்.

Saturday, March 29, 2025

"நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்."(2 கொரிந்தியர் 5:21)



"நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்."
(2 கொரிந்தியர் 5:21)

இவை புனித சின்னப்பர் கொரிந்தியருக்கு, அதோடு நமக்கும், எழுதிய வார்த்தைகள்.

ஒரு ஊரில் ஒரு பெரிய செல்வந்தர் இருந்தார்.

அவருக்கு ஒரு தென்னந் தோப்பு இருந்தது.

ஒரு நாள் ஒரு பையன் இளநீர் குடிக்க ஆசைப்பட்டு தென்னந் தோப்புக்குப் போய் ஒரு குட்டையான மரத்தில் ஏறி, ஒரு தேங்காயைப் பறித்துப் போட்டான்.

அவன் மரத்திலிருந்து இறங்கி தேங்காயை எடுத்துக் கொண்டிருந்த போது காவல் காரன் பார்த்து விட்டான்.

அவன் பார்த்ததைப் பையன் பார்த்து விட்டான்.

உடனே தேங்காயை எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தான்.

காவல்காரன் அவனை விரட்டிக் கொண்டு ஓடினான்.

பையன் வேகமாக ஓடி வீட்டுக்குள் நுழைந்து விட்டான்.

பேப்பர் வாசித்துக் கொண்டிருந்த அப்பாவிடம் நடந்ததைச் கூறி விட்டு, அவனது அறைக்குள் புகுந்து கதவை உட்புறம் பூட்டி விட்டான்.

கொஞ்ச நேரத்தில் காவல் காரன் வந்து,

"உங்கள் பையன்  எங்கள் தோட்டத்தில் தோட்டத்தில் தேங்காய்த் திருடி விட்டான். அவனை வெளியே அனுப்புங்கள்."

"நான் இளநீர் வாங்கி வா என்று அனுப்பினேன். என் ஆசையை நிறைவேற்ற அவன் தேங்காய் திருடியிருக்கிறான்.

குற்றம் என்னுடையது.

ஏதாவது தண்டனை கொடுக்க வேண்டுமென்றால் எனக்குக் கொடுங்கள்."

"ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டுங்கள். பையனை விட்டு விடுகிறோம்."

தந்தையும் மகன் சார்பில் மன்னிப்புக் கேட்டு விட்டு ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் கட்டினார்.

"இனி பையனைத் தோட்டத்தின் பக்கம் வர விடாதீர்கள். வந்தால் பிடித்துப் போலீசிடம் ஒப்படைத்து விடுவோம்."

"இனி வர மாட்டான்."

காவல்காரன் போய் விட்டான்.

இவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த பையனுக்கு அழுகை அழுகையாய் வந்தது.

வெளியே வந்து,

"அப்பா, மன்னித்துக் கொள்ளுங்கள். நான் செய்த குற்றத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டு, நான் அனுபவிக்க வேண்டிய தண்டனையை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள்.

நான் பறித்த தேங்காயும் வேண்டாம். இனி இந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்.

மன்னித்துக் கொள்ளுங்கள்."

தேங்காயை வீசி எறிந்து விட்டான்.

"மன்னிப்புக் கேட்டு திருந்தியிருக்கிறாய்.   நல்ல பையன். இனி தப்பு செய்யக்கூடாது."

"செய்ய மாட்டேன், அப்பா.


கடவுளுக்கு விரோதமாகப் பாவம் செய்தது நாம்.

நாம் செய்ய வேண்டிய பரிகாரத்தைச் செய்தது இறைமகன்.

பரிகாரம் செய்வதற்காக மனிதனாகப் பிறந்து,

நமது பாவச் சுமையை முழுவதும் சிலுவை வடிவில் சுமந்து,

பாவச் சுமையோடு கல்வாரி மலையில் ஏறி,

அதே சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு,

சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போதே நம்மை மன்னிக்கும் படி தந்தையிடம் வேண்டி,

தன்னை நமது பாவங்களுக்காகப் பலியாக ஒப்புக் கொடுத்தார்.

இயேசு தனது தந்தையிடம் வேண்டும் விதத்தைப் பாருங்கள்.

நாம் ஏதாவது தப்பு செய்யும் போது நமது அம்மா அப்பாவிடம் நமக்காகப் பரிந்து பேசும்போது,

"பையன் தெரியாமல் செய்து விட்டான், மன்னியுங்கள்." என்று சொல்வது போல,

இயேசுவும் நம் விண்ணகத் தந்தையிடம்,

"தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார்."
(லூக்கா நற்செய்தி 23:34)

இவ்வார்த்தைகளில் இயேசு நம்மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பும், இரக்கமும் வெளிப்படுகிறது.

உலகம் உண்டான நாள் முதல் உலகம் முடியும் வரை வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப்போகும் அத்தனை கோடி மக்களின் கோடிக்கணக்கான பாவங்களும் தந்தையால் மன்னிக்கப்பட இந்த சிறு செபம் போதுமானது.

இது அவ்வளவு வல்லமை உள்ள செபம்.

அத்தனை கோடி மக்களுக்கான மன்னிப்பும் தந்தையிடம் ரெடி.

நாம் கேட்டுப் பெற வேண்டும்.

"கேளுங்கள், கொடுக்கப்படும்."

இயேசுவின் சிலுவைப் பலியால் தந்தையிடம் தயாராக உள்ள பாவ மன்னிப்பை நாம் கேட்டுப் பெற வேண்டும்.

வெயில் காலத்தில் அம்மா வெற்றுக் காலோடு வெயில் சுடச்சுட மைல்கணக்கில் நடந்து எடுத்து வந்து வீட்டில் வைத்திருக்கும் தண்ணீரை

ஒரு தம்ளரை எடுத்து கோதிக் குடிக்க மனமில்லாதவர்களை என்ன செய்யலாம்?

தந்தையின் பாவ மன்னிப்பு கத்தோலிக்க திருச்சபையையின் குருக்களிடம் தயார் நிலையில் உள்ளது.

பாவ சங்கீர்த்தனத்தின் மூலம் அதைப் பெற்று பரிசுத்தவான்களாக மாறுவோம்.

விண்ணக வாழ்வைச் சுதந்தரித்துக் கொள்வோம்.

கேட்போம்.

பெறுவோம்.

லூர்து செல்வம்.

Friday, March 28, 2025

"ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" என்றார். " (லூக்கா நற்செய்தி 18:13)


"ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" என்றார். " 
(லூக்கா நற்செய்தி 18:13)

நமது செபங்களிலே மிகச் 
சிறியதும், மிகச் சக்தி வாய்ந்ததுமான செபம்,

"கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்." என்ற மன வல்லப செபம் தான்.

இந்த சிறிய செபத்தில்,
1. நம்மைப் படைத்து பராமரித்து வரும் கடவுளை ஏற்றுக் கொள்கிறோம்.

2. நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். 

3. கடவுள் இரக்கம் உள்ளவர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். 

4. கடவுள் நமது பாவங்களை மன்னிப்பார் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். 

5. பாவத்தில் விழுந்தாலும் கடவுள் உதவியோடு எழுந்து நடக்க முடியும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். 

பாவத்தில் விழுந்தவர்கள் எழுந்து நடக்க இயேசு உதவுவார் என்பதற்கு அடையாளமாகத்தான் அவர் நமது பாவங்களுக்காகப் பரிகாரம் செய்து நம்மை மீட்பதற்காக பாரமான சிலுவையச் சுமந்து சென்ற போது மூன்று முறைகள் சிலுவையின் பாரத்தால் கீழே விழுந்து எழுந்து நடந்தார்.

"இறைவா, பாவத்தில் விழாமல் புண்ணிய வாழ்க்கை வாழ்ந்து உம்மோடு பேரின்ப வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் என்னைப் படைத்தீர்.

ஆனால் நான் உமது விருப்பத்துக்கு மாறாக பாவத்தில் வீழ்ந்தேன்.

இதற்கு எனது பலகீனத்தைக் காரணம் சொல்ல மாட்டேன்.

ஏனேனில் எனது ஆன்மீக சக்தியை அதிகரிக்க நீர் அருள் வரங்களைக் தந்து உதவுவதோடு, ஆன்மீகச் சத்துணவாக உம்மையே எனக்குத் தந்து கொண்டிருக்கிறீர்.

எனது பாவத்துக்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம்.

ஆண்டவரே நீர் அளவில்லாத இரக்கம் உள்ளவர்.

"எழுந்து வா, மகனே." என்று உதவிக் கரம் நீட்டுகிறீர்.

இவ்வளவு அன்பும் இரக்கமும் உள்ள தந்தைக்கு விரோதமாக பாவம் செய்து விட்டேனே என்று உண்மையாகவே மனத்தாபப் படுகிறேன், அப்பா.

உமது அளவு கடந்த இரக்கத்தால் என் மீது இரங்கி என் பாவங்களை மன்னியும், தேவனே.

நான்பாவி, பெரும் பாவி.

ஆனால் உமது இரக்கம் என் பாவத்தை விடப் பெரியது.

பாவிகளாகிய எங்கள் பாவங்களை மன்னிப்பதற்கென்றே நீர் நிறுவியுள்ள பாவ சங்கீர்த்தனத்தின் மூலம் என் பாவங்களை அறிக்கையிடுகிறேன்.

இனி பாவம் செய்வதில்லை என்று உறுதி கூறுகிறேன்.

என்னைப் பாவத்தில் விழாதபடி பாதுகாக்க உமது அருள் வரத்தைத் தந்தருளும், சுவாமி.

எனக்கு உத்தம மனத்தாபத்தைத் தந்து உதவிய உமக்கு நன்றி."

பாவம் கடவுளுக்கு விரோதமாகச் செய்யப் படுகிறதா?

நமது அயலானுக்கு விரோதமாகச்
செய்யப் படுகிறதா?

நமக்கு விரோதமாகச்
செய்யப் படுகிறதா?

கடவுளுக்கு விரோதமாகச் செய்யப் படுவது தான் பாவம்.

அவரது கட்டளைகளை மீறுவது தானே பாவம்.

ஆனால் கடவுள் நமது பாவத்தால் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்.

அவர் மாறாதவர்.

ஆதாம் ஏவாள் பாவம் செய்தபோது பாதிக்கப்பட்டது அவர்களும் அவர்களது பிள்ளைகளாகிய நாமும் தான்.

ஆகவே கடவுளுக்கு விரோதமாகப் பாவம் செய்யும்போது நமக்கும் விரோதமாகப் பாவம் செய்து கொண்டிருக்கிறோம்.

ஏனெனில் பாவம் இல்லாமல் இறந்தால் விண்ணக பேரின்ப வாழ்வை அடையப் போவதும், பாவத்தோடு இறந்தால் விண்ணக பேரின்ப வாழ்வை இழக்கப் போவதும் நாம்தான்.

மண்ணை அள்ளித் தன் முகத்தில் எறிந்தால் எறிந்தவன் கண் தான் தெரியாது.

பத்துக் கட்டளைகளில் முதல் மூன்று கட்டளைகள் தான் இறைவனைச் சார்ந்தவை.

மற்ற ஏழும் நமது அயலானைச் சார்ந்தவை.

அவற்றை மீறும் போது நமது அயலானுக்கு எதிராகச் செயல்படுகிறோம்.

நமது அயலான் கடவுளுடைய பிள்ளையாக இருப்பதால் அவனுக்கு எதிராகச் செயல்படும் போது கடவுளுக்கு எதிராகச் செயல்படுகிறோம்.

அயலானுக்கு எதிராகப் பாவம் செய்து விட்டால்,

அந்தப் பாவத்துக்கு மன்னிப்புப் பெற வேண்டுமென்றால் முதலில் அயலானிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு அப்புறம் கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

அயலானோடு சமாதானமானால்தான் கடவுளோடு சமாதானமாக முடியும்.

அயலான் நமக்கு எதிராகப் பாவம் செய்து விட்டால்,

அவன் நம்மிடம் மன்னிப்புக் கேட்காவிட்டாலும் நாம் அவனை மன்னித்து விட வேண்டும்.

அவனை மன்னித்தால் தான் கடவுள் நம்மை மன்னிப்பார்.

பிறர் மீது வன்மத்தை வைத்துக்கொண்டு பாவ சங்கீர்த்தனம் செய்தால் பயன் இல்லை.

"எங்களுக்கு எதிராகப் பாவம் செய்தவர்களை நாங்கள் மன்னிப்பதுபோல எங்கள் பாவங்களை மன்னியும்" என்று தினமும் கடவுளிடம் வேண்டுகிறோம்.

"ஆண்டவரே, எனக்கு எதிராகப் பாவம் செய்த அனைவரையும் நான் மன்னித்து விட்டேன். தயவுசெய்து நீர் எனது எல்லா பாவங்களையும் மன்னியும்."

லூர்து செல்வம்.

Thursday, March 27, 2025

அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது" என்று கூறினார். (மாற்கு நற்செய்தி 12:33)



அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது" என்று கூறினார். 
(மாற்கு நற்செய்தி 12:33)

"அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று இயேசுவிடம் கேட்ட மறைநூல் அறிஞர் 

இறைவனை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்க வேண்டும், நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானை நேசிக்க வேண்டும் என்று இயேசு கூறியதைக் கேட்ட பின் இவ்வாறு கூறினார்.

அவர் கூறிய வார்த்தைகளைத் தியானிப்போம்.

"கடவுடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், 

தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் 

எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது"

ஒவ்வொரு மனிதனும் முழுமையாகக் கடவுளால் படைக்கப்பட்டான்.

அவன் முழுமையாகக் கடவுளுக்குச் சொந்தம்.

அவனுடைய ஒரு சிறு முடி கூட அவனுக்குச் சொந்தமானது அல்ல.

கடவுளுக்குச் சொந்தமான ஒவ்வொரு உறுப்பையும் அவன் கடவுளுக்காக மட்டும் பயன்படுத்த அவன் கடமைப் பட்டிருக்கிறான்.

மனிதன் உயிர் வாழ நூறு சதவீதம் அத்தியாவசியமான இருதயம் முற்றிலும் கடவுளுக்குச் சொந்தம்.

இருதயம் அன்பின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது.

அப்படியானால் நமது அன்பு முழுவதும் கடவுளுக்கே சொந்தம் என்பது சொல்லாமலே விளங்கும்.

கடவுள் அன்பு மயமானவர்.

அவரது அன்பைத் தான் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடவுள் நம்மை அளவில்லாத விதமாய் அன்பு செய்கிறார்.

நாம் நமது இதயத்தை அவரை மட்டும் அன்பு செய்யப் பயன்படுத்த வேண்டும்.

ஆகவேதான் 

"உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக" என்று இயேசு கூறுகிறார்.

நமது உள்ளம் உணர்வுகளின் (Feelings, emotions) இருப்பிடம்.

மனம் எண்ணங்களின் (Thoughts) இருப்பிடம்.

எண்ணங்களும், உணர்வுகளும் தொடர்புடையவை.

ஆருயிர் நண்பனை நினைத்துப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுகளுக்கும்,

நம்மைக் கெடுப்பதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் பகைவனை நினைத்துப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுகளுக்கும்

உள்ள வித்தியாசம் நமக்குத் தெரியும்.

நமது மனது கடவுளைப் பற்றிய எண்ணங்களால் நிறைந்திருக்க வேண்டும்.

அந்த எண்ணங்கள் உள்ளத்தை பக்தி உணர்ச்சிகளால் நிறப்பும்.

நமது உள்ளத்தையும், மனதையும் முழுவதுமாகக் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

ஆற்றல்=சக்தி.

நமது முழு சக்தியையும் பயன்படுத்தி கடவுளை நேசிக்க வேண்டும்.

முழு இருதயத்தையும், முழு உள்ளத்தையும், முழு மனதையும், முழு ஆற்றலையும் கடவுளுக்குக்‌ கொடுத்தபின் நம்மையும், பிறனையும் எதைக்கொண்டு அன்பு செய்ய?

நாம் கடவுளுக்குச் சொந்தம். அவருள் வாழ்கிறோம். நாம் கடவுளை நேசிக்கும் போது அவருள் வாழும் நம்மையும் பிறனையும் சேர்த்து தான் நேசிக்கிறோம்.

 நீரால் நிறைந்த ஒரு பெரிய அண்டாவுக்குள் ஒரு சிறிய தம்ளரைப் போட்டுவிட்டால் தம்ளரும் நிறைந்து விடுகிறது அல்லவா?

நாம் கடவுளை நேசிக்கும் போது அவருள் வாழும் நம்மையும், நமது பிறனையும் நேசிக்கிறோம்.

கடவுளைக் கண்ணால் பார்க்க முடியாது.

கண்ணால் காணக்கூடிய நமது பிறனை நேசிக்கும் போது கடவுளையும் நேசிக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது பிறன்மீது நமக்கு அன்பு ஏற்படாவிட்டால் நாம் கடவுளை அன்பு செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது பிறனுக்கு நாம் செய்யும் உதவிதான் நாம் கடவுளுக்குக் கொடுக்கும் காணிக்கை.

பிறனுக்குக் கொடுக்காமல் அதை கோயில் உண்டியலில் போட்டால் உண்டியல் நிறையும், அதைக் கடவுள் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

நாம் கடவுளுக்குச் செலுத்தும் பலிகளை விட நாம் செய்யும் அன்பு தான் பெரியது.

கடவுளையும், பிறனையும் நேசிக்காமல் நாம் செலுத்தும் பலியை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் 
கடவுளையும், பிறனையும் அன்பு செய்வோம்.

அதற்குப் பின்தான் மற்றதெல்லாம்.

லூர்து செல்வம்.

Wednesday, March 26, 2025

"என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்."(லூக்கா நற்செய்தி 11:23)



"என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்."
(லூக்கா நற்செய்தி 11:23)

அரசியல் ரீதியாக கூட்டுச் பேராக் கொள்கை என்று ஒரு கொள்கை உண்டு.

எந்த அணியிலும் சேராமல் நடுநிலை வகிக்கும் கொள்கை.

நேருவின் தலைமையில் இந்தியா இந்த கொள்கையைப் பின்பற்றியது.

அமெரிக்காவும், ரஷ்யாவும் அரசியலில் போட்டி போட்டுக் கொண்டிருந்த காலம்.

இந்தியா எந்த நாட்டோடும் கூட்டுச் சேரவில்லை.

அது அரசியலில் நல்ல கொள்கை.

ஆனால் ஆன்மீகத்தில் இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாது.

மக்களை விண்ணக பேரின்ப வாழ்வுக்கு வழி நடத்தும் இயேசுவின் தலைமையில் ஒரு அணி.

மக்களை பேரிடர் நிலைக்கு வழி நடத்தும் சாத்தானின் தலைமையில் ஒரு அணி.

நம்மால் ஒரு அணியில் தான் அங்கம் வகிக்க முடியும்.

நாம் இயேசுவின் அணியில் இருந்தால் விண்ணக வாழ்வை நோக்கி நடை போடுவோம்.

சாத்தானின் அணியில் இருப்பவர்கள் பேரிடர் நிலையை நோக்கி நடை போடுவார்கள்.

இரண்டில் ஒன்றிலும் சாராமல் ஒருவன் வாழ முடியாது.

இயேசுவின் அணியில் இல்லாதவர்கள் சாத்தானின் அணியில் இருப்பார்கள்.

திருமுழுக்குப் பெற்று, சாவான பாவம்  இல்லாமல், புண்ணிய வாழ்வு வாழ்பவர்கள் இயேசுவின் அணியில் இருக்கிறார்கள்.

சாவான பாவத்தில் விழுந்த வினாடியில் சாத்தான் அணிக்கு மாறிவிடுகிறார்கள்.

பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெற்ற வினாடியில் இயேசுவின் அணிக்கு மாறிவிடுகிறார்கள்.

இதைத் தான் இயேசு 
"என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்." என்கிறார்.

"என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்."

இயேசுவோடு இணைந்து இருப்பவர்கள் மக்களுக்கு முன் மாதிரியாகயாக வாழ்வார்கள்.

இயேசுவை விட்டு விலகி வாழ்பவர்கள் தங்கள் துர்மாதிரிகையான வாழ்க்கை மூலம் மற்றவர்களையும் கெடுத்து விடுவார்கள்.

இயேசுவின் அணியில் இருப்பவர்கள் தங்கள் ஆன்மீக வாழ்வில் முன்னேறிக் கொண்டேயிருக்க வேண்டும்.

அதாவது பாவமின்றி இருந்தால் மட்டும் போதாது, நற் செயல்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் புண்ணிய வாழ்வில் முன்னேற வேண்டும்.

முன்னேறாதவன் பின்னடைகிறான்.

முன்னேறாமலும் பின்னடையாமலும்
வாழ முடியாது.

Our spiritual life cannot be static.
We keep on moving, either forward or backward.

முன்னேறிக் கொண்டே யிருப்பவர்கள் புனித நிலையை அடைவார்கள்.

பின்னடைந்து 
கொண்டிருப்பவர்கள் பாவத்தில் விழ நேரிடும்.

விவசாயி தான் பயிரிடப் போகும் நிலத்தை முதலில் பண்படுத்துகிறான். 

அதாவது பயிர்த் தொழிலுக்குக் கேடு விளைவிக்கும் முட்செடிகள், புல்பூண்டுகள், கற்கள்‌ போன்றவற்றை அப்புறப் படுத்துகிறான்.

அதன்பின் பண்படுத்தப்பட்ட நிலத்தில் பயிரிடுகிறான்.

பண்படுத்தப்பட்ட நிலத்தைப் பயிர் செய்யாமல் அப்படியே போட்டுவிட்டால் பழைய படி புல் முளைக்க ஆரம்பிக்கும்.

அதேபோல் தான் ஆன்மீகத்தில் முதலில் பாவத்திலிருந்து விடுதலை பெறுவதன் மூலம் ஆன்மாவைப் பண்படுத்த வேண்டும்.

அடுத்து புண்ணியங்கள் புரிந்து ஆன்மீகத்தில் வளர  வேண்டும்.

ஆன்மீகத்தில் வளராவிட்டால் பாவங்கள் நுழைய ஆரம்பிக்கும்.

பயிர் செய்யப்பட்ட நிலத்தில் களை எடுத்தி, கொத்திக் கொடுப்பது போல, 

ஆன்மீக வாழ்விலும் அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கப் போகும் முன் ஆன்மப் பரிசோதனை செய்து, அன்று செய்த பாவங்களுக்கு மனத்தாபப்பட்டு மன்னிப்புப் பெற்ற பின்தான் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.

இரவில் நாம் நினையாத நேரத்தில் இறைமகன் நம்மை அழைக்க வந்தால் அவருடன் போக தயார் நிலையில் தான் தூங்க வேண்டும்.

காலையில் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் கண்விழித்து பகலில் இறையன்புப் பணிகளிலும், பிறரன்புப் பணிகளிலும் ஈடுபட வேண்டும்.

அன்று பகல் முழுவதும் நாம் செய்தவற்றை இரவு செபத்தின் போது இறைவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

இப்படித் தினமும் செய்தால் ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டேயிருப்போம்.

ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டே வாழ்வோம்.

லூர்து செல்வம்

Tuesday, March 25, 2025

"எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்."(மத்தேயு நற்செய்தி 5:19)

"எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்."
(மத்தேயு நற்செய்தி 5:19)

நல்லொழுக்கப் பாட வகுப்பில் ஆசிரியர்,

"உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நல்லொழுக்கம்.

நல்லொழுக்கம் உள்ளவர்களாக வாழ ஆன்மீகம் சார்ந்த இறைவனது கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்,

மனசாட்சியின் குரலுக்கு செவி கொடுத்து அதன்படி வாழ வேண்டும்.

உடல் ஆரோக்கியம் உள்ளவர்களாக வாழ உடல் ஆரோக்கியம் சார்ந்த பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

புகை பிடித்தல், மது அருந்துதல் போன்றவை உடல் நலனுக்கு கேடு விளைவிப்பவை.

பீடி, சிகரட் போன்றவைகளைக் கையால் தொடக்கூட கூடாது......"

அன்று நண்பகல் உணவுக்குப் பின் ஒரு மாணவன் பாடத்தில் ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்ய ஆசிரியரைத் தேடி ஆசிரியர்கள் அறைக்குச் சென்றான்.

சென்றவன் திரும்பி விட்டான்.

சக மாணவன் ஒருவன்,

''என்னடா, சந்தேகம் தீர்ந்ததா?"

"இல்லை. புதியதொரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது."

''ஆசிரியரைப் பார்த்தாயா?"

"பார்த்தேன், ஆகவேதான் புதிய சந்தேகம்."

"என்னடா சொல்ற?"

"ஆசிரியர் கையில் சிகரெட். வாயிலிருந்து சுருள் சுருளாகப் புகை. அறை முழுவதுமே புகை.
அவர் போதித்ததையே செய்ய முடியாத அவரால் எப்படி நம் சந்தேகத்தைத் தீர்க்க முடியும்?"

சொல்லும் செயலும் ஒத்து வராத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல!

ஆண்டவர் இயேசு தான் போதித்ததை எல்லாம் அவரது வாழ்க்கையில் நடந்து காட்டினார்.

"ஏழைகள் பாக்கியவான்கள்" என்றார்.

அவரே ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாக மரித்தார்.

"பகைவர்களை நேசியுங்கள்." என்றார்.

நமது பாவங்களால் அவரைப் பகைத்த நம்மை நேசித்ததுமல்லாமல் நாம் செய்த பாவங்களுக்கு அவர் உயிரைக் கொடுத்து பரிகாரம் செய்தார்.

"உங்களுக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள்." என்றார்.

அவரைக் கற்றூணில் கட்டி வைத்து அடித்தவர்களையும், முள்முடி சூட்டி அடித்தவர்களையும், 
அவர்மீது பாரமான சிலுவையை ஏற்றியவர்களையும், 
சிலுவையில் அறைந்தவர்களையும், 
அவரது பாடுகளுக்குக் காரணமான அனைவரையும் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போதே மன்னித்து விட்டார்.

நாம் அவருடைய சீடர்கள். அவரது நற்செய்தியை நற்செய்தியை மற்றவர்களுக்குப் போதிக்கப் கடமைப் பட்டவர்கள்.

நாம் முதலில் நற்செய்தியை நமது வாழ்வாக மாற்றுவோம்.

அப்புறம் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்போம்.

மற்றவர்கள் நமது வாழ்வில் இயேசுவைக் காண வேண்டும்.

அப்போது தான் நாம் போதிப்பதை மற்றவர்கள் நம்புவார்கள்.

சாதித்துப் போதிப்பவர்களுக்குதான் விண்ணகத்தில் முதல் இடம்.

லூர்து செல்வம்.

Monday, March 24, 2025

பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். (லூக்கா நற்செய்தி 1:38)


பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 1:38)

"ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்."
(லூக்கா நற்செய்தி 1:26)

செக்கரியாவுக்கு இறைச் செய்தியை அறிவித்த அதே வானதூதர் கபிரியேல் 

அதிலிருந்து ஆறாம் மாதத்தில் நசரேத்தூரில் வாழ்ந்து கொண்டிருந்த மரியாளுக்கு இறைச் செய்தியை அறிவிக்க வருகிறார்.

அவர் கூறிய  வார்த்தைகள் அனைத்தும் இறைவனால் அனுப்பப்பட்டவை.

அனுப்பப்பட்ட செய்தி என்ன?

மனுக்குலத்தின் மீட்பராக உலகில் பிறக்கப் போகும் மீட்பருக்கு மரியாள் தாயாக வேண்டும்.

"நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்ற வார்த்தைகள் மூலம் இறைச்செய்தியை மரியாள் ஏற்றுக் கொள்கிறாள்.

ஆண்டவரின் அடிமை -

பிறக்கப் போகும் இயேசுவுக்கு அவள் தாய்.

அதே சமயத்தில் அவருடைய அடிமை.

பிறக்கப் போகும் மகனுக்கு அடிமையாக வாழப்போகும் தாய்.

எசமானனின் எண்ணங்களை உத்தரவுகளாக ஏற்றுக் வாழ்பவள் அடிமை.

எசமானனின் எண்ணங்களையும், சொற்களையும் அப்படியே ஏற்றுக் கொண்டு செயல் புரிபவள் அடிமை.

அப்படியானால் இயேசுவின் எண்ணங்களை மரியாள் ஆரம்பம் முதலே அறிந்திருக்க வேண்டும்.

இயேசு  உலகுக்கு வந்ததன் நோக்கம், அவர் செய்யப் போகின்றவை, அவருக்குச் செய்யப்படப் போகின்றவை அனைத்தையும் அவர் அவளோடு பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

அவரது பொது வாழ்க்கையைப் பற்றியும், தனது பாடுகளைப் பற்றியும், தனது சிலுவை மரணத்தைப் பற்றியும் அவர் அன்னையுடன் வாழ்ந்த போதே தெரிவித்திருக்க வேண்டும்.

அவர்களது முப்பது ஆண்டு கால கருத்துப் பரிமாற்றத்தில்  தன் பாடுகளின்போது எப்படிச் செயல்பட வேண்டுமென்று இயேசு அன்னையிடம் சொல்லி அவளையும் தனது பாடுகளாக்காகத் தயாரித்திருக்க வேண்டும்.

ஒருவர் தான் கோயிலில் பலியிடப் போகும் ஆட்டைத் தானே வளர்ப்பதைப் போல

இறைவனின் செம்மறியை அன்னை மரியாள் வளர்த்திருக்க வேண்டும்.

மரியாள் மூன்று வயது முதல் கோவிலில் வளர்ந்தவள்.

பைபிளின் பழைய ஏற்பாட்டு இறைச் செய்தியை எல்லாம் கோவிலில் பாடமாகப் படித்தவள்.

மெசியாவைப் பற்றி முற்றிலும் அறிந்தவள்.

அவர் எங்கே பிறப்பார், எப்படி வாழ்வார், எப்படி பலியிடப் படுவார் என்பவை பற்றிய இறை வாக்கினர்களின் முன்னறிவிப்புகளை எல்லாம் பாடமாகக் கற்று, விசுவாசமாக ஏற்றுக் கொண்டவள்.

தான் மெசியாவின் தாயாகப் போவது  அப்போது அவளுக்குத் தெரியாது.

அக்காலத்திய கன்னிப் பெண்கள் மெசியாவின் தாயாக ஆசைப் பட்டதாகக் கூறுவார்கள்.

ஆனால் மரியாளுக்கு அப்படி ஆசை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் பிறக்கப்போகும் மெசியா அவளைத்தான் தன் தாயாகத் தேர்ந்தெடுத்தார்.

மரியாள் தன்னை மட்டுமல்ல தன் மகனையும் இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்தாள்.

இயேசுவின் முப்பதாவது வயதில் மரியாள் தன் மகனை பொது வாழ்வுக்கு அர்ப்பணித்து விட்டாள்.

அதன்பின் இயேசு நசரேத்தூரில் வாழவில்லை.

அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். 
(மத்தேயு நற்செய்தி 4:13)

மரியாளுக்கு மகனைப் பார்க்க ஆசை வரும்போது அவர் போதித்துக் கொண்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்து விட்டு வருவாள்.

 "இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தபோது, சீடர்கள் பன்னிருவரும் அவருடன் இருந்தனர். 

பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், 

ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் 

ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும்

 சூசன்னாவும்

 மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள். 
(லூக்கா நற்செய்தி 8:1-3)

மேற்கூறப்பட்ட பெயர்களில் அன்னையின் பெயர் இல்லை.

ஆகவே அவள் மகனைப் பொதுவாழ்வுக்கு அர்பணித்து விட்டாள் என்பது தெளிவாகிறது.

பார்க்க ஆசை வரும்போது வந்து பார்த்து விட்டுப் போவாள்.

பாஸ்கா விழாவின் போது இரவு உணவிற்கு சீடர்கள் மட்டுமே வந்திருந்தனர்.

இயேசு இரத்த வியர்வை வியர்த்த போது மரியாள் இல்லை.

மூன்று சீடர்கள் மட்டுமே உடனிருந்தார்கள்.

இயேசு கைது செய்யப்பட்டு பிலாத்துவின் அரண்மனையில் விசாரிக்கப் பட்டதிலிருந்து கல்லறையில் அடக்கம் பண்ணப்படும் வரை மரியாள் மகனோடு இருந்தாள்.

 கற்றூணில் கட்டப்பட்டு அடிபட்டு, தலையில் மும்முடி சூட்டப்பட்டு அடிபட்ட‌ இயேசு 

மரியாள் வயிற்றில் அவளது இரத்தமும் சதையுமாக, அவள் சாப்பிட்ட உணவால் வளர்ந்த மகன், அவளது சதையும், இரத்தமும்.

ரோமை வீரர்கள் இயேசுவை‌ அடித்த ஒவ்வொரு அடியும் மரியாள் பெற்ற உடலில் விழுந்தது.


அவர்கள் மிதித்த மிதிகளை மரியாள் பெற்ற உடல் வாங்கியது.

அவர்கள் துப்பிய எச்சில் மரியாள் பெற்ற உடலில்  விழுந்தது.

அவள் பெற்ற பிள்ளைக்கு மரணத் தீர்ப்பு கிடைத்தது.

அவள் உதிரத்தில் வளர்ந்த உடலிலிருந்து இரத்தம் சிந்தி ஆறாக ஓடியது.

சிலுவையைச் சுமந்தது அவள் பெற்ற உடல்.

மூன்று முறை சிலுவையின் பார்த்தால் தரையில் விழுந்தது மரியாள் பெற்ற  உடல்.

சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டது மரியாள் பெற்ற  உடல்.

இரத்தத்தை முழுவதும் முழுவதும் சிந்திய பின் சிலுவையில் தொங்கியது மரியாள் பெற்ற  உடல்.

இயேசு பட்ட வேதனையை எல்லாம் மரியாளும் பட்டாள்.

இயேசு மரணம் அடைந்த பின் இயேசுவின் உடல் அவளுடைய மடியில் கிடத்தப் பட்டது.

33 ஆண்டுகளுக்கு முன் அவளது வயிற்றில் 10 மாதங்கள் இருந்த அதே உடல்.

பிறந்தவுடன் மடியில் தவழ்ந்த அதே உடல்.

"இது என் உடல். இது என் இரத்தம்" என்று அவள்தான் முதலில் கூறியிருப்பாள்.

இறந்த பின் மடியில் இருந்த உடலைப் பார்த்து அதே வார்த்தைகளை நினைத்திருப்பாள்.

ஆக மகனோடு சேர்ந்து அன்னையும் பாடுபட்டாள்.

இயேசு தான் பாடுபடும்போது என்னவெல்லாம் நடக்கும் என்று ஏற்கனவே தனது அன்னையிடம் கூறியிருப்பார். 

ஆகவே பாடுகள் ஆரம்பிக்கும் போது மரியாள் பிலாத்துவின் அரண்மனைக்கு வந்து விட்டாள். 

அது முதல் இயேசு பட்ட ஒவ்வொரு அடியையும், 

வாங்கிய ஒவ்வொரு மிதியையும்,

  சுமந்த சிலுவையையும், 

அவர் சிலுவையின் பாவத்தால் கீழே விழுந்ததையும், 

ஆடைகள் களையப்பட்டதையும்,

 ஆணிகளால் சிலுவையில் அறையப்பட்டதையும், ‌ 

அவர் சிலுவையில் தொங்கியதையும், 

விலாவில் ஈட்டியால்,  குத்தப்பட்டதையும்,

 இறுதியில் சிந்திய கடைசித்  துளி ரத்தத்தையும், 

அவரது மரணத்தையும் 

நமது பாவங்களுக்கு பரிகாரமாக விண்ணகத் தந்தைக்கு ஒப்புக்கொடுத்தாள்.

இயேசு தன்னையே ஒப்புக்கொடுத்தது போல, அன்னை மகனை ஒப்புக்கொடுத்தாள்.

தாய்த்திருச்சபை அன்னை மரியாளை Co-redemptrix என்று அழைப்பது சாலப் பொருந்தும்.

இயேசுதான் மீட்பர். அவர்தான் நமக்காகப் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

அதில் மாற்றுக் கருத்து இல்லை.

கடவுளின் மீட்புத் திட்டத்துடன் சுதந்திரமாக ஒத்துழைத்தவர்  கடவுளின் தாயாகிய அன்னை மரியாள்.

இயேசுவின் துன்பத்தில், குறிப்பாக சிலுவையில் அறையப்பட்டபோது, மரியாள் தன் மகனின் பாடுகளிலும் துன்பத்திலும் பங்கு கொண்டாள்.

கடவுளின் தாயாக, மரியாள் மனிதகுலத்தின் சார்பாக பரிந்து பேசுகிறாள்.

இயேசு தனது தாயை நமது தாயாகத் தந்திருகாகிறார்.

நமது மீட்புக்காக தாய் மூலமாக மகனிடம் வேண்டுவோம்.

லூர்து செல்வம்

Sunday, March 23, 2025

"அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்."(லூக்கா நற்செய்தி 4:30)



"அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்."
(லூக்கா நற்செய்தி 4:30)

இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். 

"ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர். பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் 



ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். " 

என்று வாசித்து விட்டு 

"நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" என்றார். 

"இவர் யோசேப்பின் மகன் அல்லவா? "எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினாலும் 

ஆன்மீக ரீதியாக அவர்களுக்கு விசுவாசம் ஏற்படவில்லை.

அவர்கள் அவரை யோசேப்பின் மகனாகப் பார்த்தார்கள், இறை மகனாகப் பார்க்கவில்லை.

அவர் மீது சீற்றங் கொண்டு

 எழுந்து, அவரை அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். 

ஆக அவரது சொந்த ஊரினரே அவரைக் கொல்ல முயன்றனர்.

நமக்காகத் தன் உயிரைக் கொடுக்கவே உலகுக்கு வந்தாலும் அதற்குரிய நேரம் வரும் வரை பொறுத்திருக்க வேண்டியதிருந்தது.

அவராகக் கொடுத்தாலன்றி அவர் உயிரை யாராலும் எடுக்க முடியாது.

அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார். 

அவர்களால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

அவர் மீது விசுவாசம் கொள்ள முடியாமைக்கு எது காரணமாக இருந்திருக்கும்?

அவருக்கு முப்பது வயது ஆகும் வரை அவர் அவர்களோடு யோசேப்பின் மகனாகவே வாழ்ந்திருக்கிறார். 

அன்னை மரியாளின் தங்கை மரியாளின் (குளோப்பாவின் மனைவி.யோவான் நற்செய்தி 19:25) மக்களாகிய யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோரும் அவரோடு வாழ்ந்தவர்கள் தான்.

ஆக நாசரேத்தூர் மக்கள் அவரைத் தங்களோடு வாழ்ந்தவராகத்தான் கருதினார்கள்.

இயேசு முப்பது வயது வரை வாழ்ந்தது மறைந்த வாழ்வு.

அன்னை மரியாளுக்கும், யோசேப்புக்கு மட்டுமே அவர் இறைமகன் என்று தெரியும்.

சாத்தானுக்குக் கூட தெரியாது.
ஆகவே இயேசு நாற்பது நாட்கள் நோன்பிருந்த பின்

 அவர் மனிதனாகப் பிறந்த இறைமகன் தானா என்பதை உறுதி செய்து கொள்ள அது

"நீர் இறைமகன் என்றால்" என்று சொல்லி சோதனையை ஆரம்பித்தது.

"உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' என்று சொன்னவுடன் அவர் இறைமகன் என்பதை உறுதி செய்து கொண்டது.

அதன் பின்பு அவரைக் கொல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தது.

அதாவது தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே நமது மீட்புக்கு உதவி செய்ய ஆரம்பித்தது.

எந்த சாத்தான் நம்மைப் பாவத்தில் விழத்தாட்டியதோ அதே சாத்தான் இயேசு தனது சிலுவை மரணத்தால் நம்மை மீட்க உதவியது என்றால் ஆச்சரியமாக இல்லை!!!

இதன் மூலம் கடவுள் எல்லாம் வல்லவர், தீமையிலிருந்தும் நன்மையை வரவழைக்கக் கூடியவர் என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம்.

நமது வட நாட்டில் கிறிஸ்தவ மத எதிர்ப்பாளர்கள் எத்தனை கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்திருப்பார்கள்!!!

அதனால் வேத சாட்சிகளாகக் கொல்லப் பட்ட அத்தனை பேரும் உலகத் துன்ப வாழ்வுக்கு "டாட்டா" காட்டி விட்டு நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைய அவர்கள் உதவி செய்திருக்கிறார்கள்!!!

வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை விட விசுவாசத்துக்காக மரித்தவர்கள் பாக்கியவான்கள்.

மத விரோதிகள் நம்மைக் கொன்று விடுவார்களே என்று பயப்பட வேண்டாம்.

மரணம் வரக்கூடிய நேரத்தில் தான் வரும்.

அது மத விரோதிகளால் வந்தால் நாம் பாக்கியவான்கள்.

வருவது வரட்டும்.

துன்பங்களா? நோய் நொடிகளா?

அவை உடலுக்கு வலியைக் கொடுக்கலாம், 

அவற்றைச் சிலுவைகளாக ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தால் அவை நாம் இறைவனோடு நெருக்கமாக வாழ நமக்கு உதவும் ஆசீர்வாதங்கள்.

யாரும் நம்மை அவமானப் படுத்துகிறார்களா?

அதை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தால் அது அவமானம் அல்ல, ஆசீர்வாதம்.

யாராவது நம்மைப் பற்றி தப்பாக பேசுகிறார்களா ?

பரிசேயர்கள் இயேசுவைப் பற்றி பேசியதை விடவா அதிகமாக பேசிவிடப் போகிறார்கள்? 

இயேசு நமக்காக அவற்றைப் பொறுத்துக் கொண்டார். 

நாம் அவருக்காக அனைத்தையும் பொறுத்துக் கொள்வோம்.

இயேசுவுக்காக வாழ்பவர்களுக்கு உலகமே ஒரு ஆசீர்வாதம் தான்.

நாம் இறைவனுக்காக, ‌‌இறைவனுக்காக மட்டுமே வாழ்வோம்.

லூர்து செல்வம்.