Saturday, March 8, 2025

"மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை" என மறைநூலில் எழுதியுள்ளதே" (லூக்கா நற்செய்தி 4:4)


 "மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை" என மறைநூலில் எழுதியுள்ளதே" 
(லூக்கா நற்செய்தி 4:4)

மனிதன் ஆன்மாவோடும், உடலோடும் படைக்கப்பட்டவன்.

ஆன்மா ஆவி. (Spirit)
உடல் சடப்பொருள். (Matter)

ஆன்மாவும் வாழ வேண்டும்.
உடலும் வாழ வேண்டும்.

ஆன்மா அழியாதது, உடல் வாழ்ந்து முடிந்த பின்பும் ஆன்மா அழியாமல் நித்திய காலமும் வாழும்.

ஆன்மாவின் வாழ்க்கையை ஆன்மீக வாழ்வு(Spiritual life) என்போம்.

உடலின் வாழ்க்கை உலகில் முடிந்து போவதால் அதை லௌகீக வாழ்வு(Worldly life) என்போம்.

உடல் மண்ணிலிருந்து உருவாக்கப் பட்டதால் அது வாழ மண்ணிலிருந்து வரும் உணவுப் பொருள் தேவை. சாத்தான் இயேசுவைச் சோதிக்கும் போது குறிப்பிடும் 'அப்பம்' மண்ணில் விளையும் கோதுமையிலிருந்து தயாரிக்கப் படுவது.

ஆன்மா நித்திய விண்ணக வாழ்வுக்காக இறைவனின் சாயலில் படைக்கப்பட்டதால் அது வாழ இறைவனின் அருள்தான் உணவு. இறைவன் வார்த்தையின் படி ஆன்மா வாழ்ந்தால் அதற்கு இறையருள் உணவாகக் கிடைக்கும்.

இயேசு நாற்பது நாள் எதுவும் சாப்பிடாமல உபவாசம் இருந்த பின் அவரைச் சோதித்த சாத்தான்

 "நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்" என்றது. 

இயேசு,"மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை" என மறைநூலில் எழுதியுள்ளதே"
(இணைச் சட்டம் 8:3)

என்ற இறைவாக்கைப் பதிலாகச் சொன்னார்.

"மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார்" என்பது இறைவாக்கு.

இயேசு மனிதனுடைய ஆன்மீக வாழ்வைக் குறிப்பிடுகிறார். 

ஆன்மீக வாழ்வு தான் மனிதனுடைய உண்மையான வாழ்வு.

அதற்கு உதவவே உடல், உதவி முடித்துவிட்டு அது மண்ணுக்குள் போய்விடும்.

ஆன்மா அதன் வாழ்வைத் தொடரும்.

மனிதனை மனிதனாக்குவது அவனை இயக்கிக் கொண்டிருக்கும் அவனது ஆன்மா.

மனிதன் வாழ வேண்டுமென்றால் 
ஆன்மீக ரீதியாக அவனுடைய ஆன்மா வாழ வேண்டும் என்பது பொருள்.

உடல் வாழ்வது லௌகீக வாழ்வு.

லௌகீக வாழ்வு இவ்வுலகில் முடிந்துவிடும், மறு உலகில் தொடராது. 

அப்பம் அழியக்கூடியது, அதை உண்ணும் உடலும் அழியக் கூடியது.

ஆனால் ஆன்மீக வாழ்வுக்கு முடிவு இல்லை. 

இவ்வுலகில் உடலோடு வாழும் ஆன்மா இவ்வுலக வாழ்வு முடிந்தவுடன் மறுவுலக நிரந்தரமான வாழ்வை ஆரம்பித்து விடும்.

இயேசு "மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார்" என்று சொன்னபோது 

மனிதனின் லௌகீக வாழ்வை விட ஆன்மீக வாழ்வே முக்கியமானது அதை வாழ்வதற்காகவே மனிதன் உலகில் பிறந்திருக்கிறான் என்பதை குறிப்பிடுகிறார்.

உணவு, உடை, இருப்பிடம் போன்ற பொருள் சார்ந்த தேவைகள் மனிதனின் உயிர்வாழ்விற்கு அவசியமானவை.

ஆனால், இந்தத் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்வது மனித வாழ்வின் முழுமையான அர்த்தத்தை தராது.

 அன்பு, கருணை, நம்பிக்கை, அமைதி போன்ற ஆன்மீகத் தேவைகளைப்    பூர்த்தி செய்வதன் மூலமே 

மனிதன் உண்மையான மகிழ்ச்சியையும் நிறைவையும் அடைய முடியும்.


கடவுளின் வார்த்தை மனிதனின் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்யுக்கூடியது.

 இதுதான் மனிதனுடைய ஆன்மாவை திடப்படுத்துவதோடு 
அதைச் சரியான விண்ணகப் பாதையில் வழி நடத்துகிறது.

நமது விசுவாசத்தையும் நம்பிக்கையையும், இறையன்பையும் வளர்த்து

 இயேசு பிறந்த நாளில் வான தூதர்கள் போற்றிய சமாதான வாழ்வை நமக்குத் தருகிறது. 

இறைவனோடு நாம் வாழும் சமாதான வாழ்வே நமக்கு நித்திய பேரின்ப வாழ்வை தரும்.

இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் எதைத் தேடி ஓடுகிறார்கள், 

இறைவனின் அருளையா, உலகின் பொருளையா?

படிப்பது, பட்டம் பெறுவது, வேலை தேடுவது அனைத்தும் பொருள் ஈட்டத்தானே!

பொருள் ஈட்டுவதில் தவறு இல்லை 

ஆனால் ஈட்டிய பொருளின் உதவியால் பிறருக்கு உதவி செய்வதன் மூலம் இறை அருளை ஈட்ட வேண்டும். 

ஆனால் நம்மில் அநேகர் பிறருக்கு உதவி செய்யாமல் பொருள் ஈட்ட மட்டும் உதவி செய்ய இறைவனை வேண்டுகிறார்கள்.

அருள் ஈட்ட உதவாத பொருள் waste!

பொருளும் இறைவன் தந்தது தான். 

பொருளை பிறர் அன்பு பணிகளில் செலவழித்து இறையருளை ஈட்டுவோம்.

ஈட்டுக அருளை 
பொருள் கொண்டு, 
ஈட்டாக்கால் பொருளால் 
என்ன பயன்?

மனிதன் அப்பத்தினால் அல்ல, இறையருளால் வாழ்கிறான். 

லூர்து செல்வம்

Friday, March 7, 2025

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. (லூக்கா நற்செய்தி 5:31)


இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 
(லூக்கா நற்செய்தி 5:31)

வரி தண்டுபவராக இருந்து இயேசுவின் அழைப்பை ஏற்று அவரை பின்பற்றிய மத்தேயு அவரை தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார்.

இயேசுவும் அழைப்பை ஏற்று பந்தியில் அமர்ந்தார்.

அவரோடு வரி தண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்தார்கள். 


பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும்
வரி தண்டுபவர்களைப் பாவிகளாக கருதினார்கள்.

 அவர்கள் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், "வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?" என்று கேட்டனர். 

அவர்கள் தாங்கள் மட்டுமே திருச்சட்டத்தை அனுசரிப்பதாகவும் மற்றவர்கள் அனுசரிக்கவில்லை எனும் கருதினார்கள். 

உண்மையில் அவர்கள் திருச்சட்டத்தை அதன் வார்த்தைகளின் படி (By its words) வாழ்ந்தார்கள், கருத்தின் படி அல்ல. (Not by its spirit)

இறைவன் முன்னால் அனைவரும் பாவிகள், அவர்கள் உட்பட.

சீடரிடம் கேட்ட கேள்விக்கு இயேசு பதில் அளித்தார்.

, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை."

ஆன்மீக ரீதியாக மக்கள் அனைவரும் பாவிகளே. 
(ஆன்மீக நோயாளிகள்.)

இயேசு ஆன்மீக மருத்துவர்.

, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை."

என்ற இயேசுவின் வார்த்தைகள் வரி தண்டுபவர்களுக்கு மட்டுமல்ல 

பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் 

உலகில் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப் போகிற அனைத்து மக்களுக்கும்  பொருந்தும்.

வசனத்தை வாசிக்கும் நாம் அதை நம்மோடு பொருத்திப் பார்க்க வேண்டும். 

நம்மை பாவ நோய் எந்த அளவுக்குப் பற்றிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டு பிடிக்க வேண்டும்.

சுகமின்மையை மட்டும் தரும் அற்பப் பாவ நோய் மட்டுமா,

ஆன்மீக மரணத்தை தரும் சாமான பாவ நோயுமா,

எந்த அளவுக்கு நோய் நம்மை பீடித்திருக்கிறது என்பதை எல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

சாமான பாவ நோயாக இருந்தால் உடனடியாக பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

அற்பப் பாவ நோய் மட்டும் இருந்தால் அதற்காகவும் மனத்தாபப்பட்டு, மன்னிப்புப் பெற்று அது தொடராதபடி கவனமாக இருக்க வேண்டும்.

அற்பப் பாவங்களை வெட்டி எறியாவிட்டால் அவை சாவான பாவத்துக்கு வழி விட்டு விடும்.

''நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 

நான் பாவிகளை தேடியே உலகுக்கு வந்தேன்" என்று ஆண்டவர் சொன்னால் அவர் பரிசுத்தவான்களை தேடி வரவில்லையா?

ஆதாம் ஏவாள் வழி வந்த அனைத்து மனிதர்களும் பாவிகள் தான். 

அன்னை மரியாள் விதிவிலக்கு. அவள்  சென்மப் பாவம் இன்றி பிறந்தது சுய சக்தியினால் அல்ல.

இயேசு தனது சிலுவை மரணத்தின் ஆன்மீக பலனை முன் விளைவாக (pre-effect) தன் தாய்க்குக் கொடுத்து அவளை சென்மப் பாவ மாசு இல்லாமல் உற்பவிக்கச் செய்தார்.

தனது தாயை சென்மப் பாவம் இன்றி படைத்தார்.

மற்ற அனைத்து மக்களும் சென்ம பாவத்தோடு உற்பவித்ததால் அவர்கள் அனைவரும் பாவிகளே.

"நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" . 
(மத்தேயு நற்செய்தி 9:13)
என்று இயேசு கூறியது உண்மைதான். 

நமது கத்தோலிக்க திருச்சபையையே 

"பாவிகளின் கூடாரம்"

 என்று தான் அழைக்கிறோம்.

எப்படி மருத்துவ மனைகளில் நோயாளிகள் மட்டும் குணம் அடைவதற்காக அனுமதிக்கப்படுகிறார்களோ 

அதேபோல திருச்சபையில் பாவ மன்னிப்பு பெற்று பரிசுத்தவான்களாக மாறுவதற்காக பாவிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கத்தோலிக்க திருச்சபைப் பாவிகளை பரிசுத்தவான்களாக மாற்றும் கூடாரம். 

யாரும் பிறக்கும் போதே பரிசுத்தவான்களாக பிறப்பதில்லை. 

இல்லாத பரிசுத்தவான்களைத் தேடி ஆண்டவர் உலகத்துக்கு வரவில்லை. 

இருக்கின்ற, வாழ்கின்ற பாவிகளைத் தேடியே ஆண்டவர் உலகத்துக்கு வந்தார்.

நம்மைத் தேடியே உலகத்துக்கு வந்தார்.

இதை நாம் உணர்ந்து இயேசுவின் கையால் பாவ மன்னிப்புப் பெற்று பரிசுத்தர்களாக மாறுவோம். 

பரிசுத்தர்கள் மட்டுமே வாழும் மோட்ச வாழ்வுக்கு நம்மை உரியவர்களாக மாற்றுவோம்.

லூர்து செல்வம்.

Thursday, March 6, 2025

"ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் ஆன்மாவை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"(லூக்கா நற்செய்தி 9:25)


"ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் ஆன்மாவை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"
(லூக்கா நற்செய்தி 9:25)

விலையுயர்ந்த கார் ஒன்றுக்கு உரிமையாளர் ஒருவர் காரில் அலுவலகம் சென்று காரை வெளியே நிறுத்தி விட்டு அவரது பணியைச் செய்து கொண்டிருந்தார்.

11 மணியளவில் சட்டைப் பைக்குள் கையை விட்டபோது கார்ச் சாவி இல்லை.

அறைக்குள் தேடிப் பார்த்தார், காணவில்லை.

எங்கோ தொலைந்து விட்டது.

"சரி, போனால் போகட்டும், இன்னொரு சாவி வீட்டில் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்."

என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, Peon ஐக் கூப்பிட்டு,

"உனது சைக்கிளில் எனது வீட்டுக்குச் சென்று எனது மனைவியிடம் எனது கார்ச் சாவியை வாங்கி வா" என்றார்.

அவனும் வாங்கி வந்தான்.

மாலையில் வேலை முடிந்து வீடு திரும்ப வெளியே வந்த போது காரைக் காணவில்லை.

கார்த் திருடனுக்கு இரண்டு சாவிகள் தேவையில்லை.

சாவி சிறியதுதான், ஆனால் அது இல்லாவிட்டால் காருக்கும் பாதுகாப்பு இல்லை, வீட்டுக்கும் பாதுகாப்பு இல்லை.

"சாவி தானே, போனால் போகட்டும்" என்று நினைப்பவன் தனது உடமைகளை எல்லாம் இழக்க நேரிடும்.

ஆன்மீக வாழ்வில் நமது ஆன்மாவின் பாதுகாப்பு தான் நமது பாதுகாப்பு, உண்மையில் நமது ஆன்மா தான் நாம்.

ஆன்மாவை இழக்கும் போது நாம் நம்மையே இழந்து விடுகிறோம்.

நாம் சாவான பாவம் செய்யும் போது நமது ஆன்மாவை இழக்கிறோம்.

ஆன்மீக வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல் ஒருவன் உலகத்துக்கே அதிபதி ஆகி விட்டாலும் அவனது பதவியால் அவனுக்கு எந்த ஆதாயமும் இல்லை.

ஞாயிறு திருப்பலியில் கலந்து கொள்ளாவிட்டால் சாவான பாவம்.

திருப்பலியில் கலந்து கொள்ளாமல் வியாபாரத்தில் இறங்குபவனுக்கு கோடிக்கணக்கில் ஆதாயம் கிடைத்தாலும் அதனால் அவனுக்கு எந்த ஆன்மீக ஆதாயமும் இல்லை.

"ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் ஆன்மாவை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"

என்ற இறைவாக்கு தான் 

கல்லூரிப் பேராசிரியர் சவேரியாரை வேத போதகராகவும், புனித சவேரியாராகவும் மாற்றியது.

ஆன்மாவும் உடலும் சேர்ந்தவன் தான் மனிதன்.

ஆனாலும், ஆன்மாவுக்காக உடல் படைக்கப்பட்டது, உடலுக்காக ஆன்மா படைக்கப்படவில்லை.

ஆன்மா வாழ உடல் உதவிகரமாய் இருக்க வேண்டும்.

ஆன்மா தான் வாழ உடலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாவம் இல்லாத ஆன்மா உயிரோடு இருக்கிறது.

உயிரோடு இருந்தால் மட்டும் போதாது அது வாழ வேண்டும், வளர வேண்டும்.

ஆன்மீகத்தில் வளர 
நற்செயல்கள் அவசியம்.

நற்செயல்கள் செய்ய உடல் ஆன்மாவோடு ஒத்துழைக்க வேண்டும்.

நற்செயல்களால் ஆன்மா புண்ணிய வாழ்வில் வளரும்.

உடல் இச்சைகளைப்
 பூர்த்தி செய்ய உடல் ஆன்மாவை அழைப்பதுதான் சோதனை.

சோதனையில் விழாதபடி ஆன்மா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விழுவது பாவம்.

உடல் இச்சைகளுக்கு ஆன்மா இணங்கினால் அது நித்திய பேரின்ப வாழ்வை இழக்க நேரிடும்.

ஆகவே, நாம் நமது வாழ்நாள் முழுவதும் ஆன்மாவைப் பத்திரமாகப் பாதுகாத்து வாழ்ந்தால், வாழ்வின் இறுதியில் உடல் மண்ணுக்குள் போனாலும் ஆன்மா விண்ணுக்குப் பறந்து  விடும்.

ஆன்மாவை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

1. உடலை ஒறுத்து உடல் இச்சைகளுக்கு Good bye சொல்ல வேண்டும்.

2. ஆன்மா இறைவனையும், அயலானையும் நேசித்து இறைப் பணிக்காகவும், பிறர் அன்பு பணிக்காகவும் மட்டுமே வாழ வேண்டும்.

3.விண்ணகத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவே மண்ணகத்தில் வாழ வேண்டும்.

4.உலகில் வாழ்ந்தாலும் உலகிற்காக வாழக்கூடாது.

5.சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் இயேசுவைப் பிரதிபலிக்க வேண்டும்.

6. நமது அயலானில் இயேசுவைக் காண வேண்டும்.

7. உலகை இழந்தாவது ஆன்மாவைக் காப்போம்.

லூர்து செல்வம்.

Wednesday, March 5, 2025

"மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது."(மத்தேயு நற்செய்தி 6:1)


"மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது."
(மத்தேயு நற்செய்தி 6:1)


"தாத்தா, "நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது."
என்று இயேசு சொன்னார்.

அதற்கு என்ன அர்த்தம்?"

"'ஒளியை யாரும் மறைக்க முடியாது.

ஒளி‌ பட்ட பொருட்கள் நமது கண்களுக்குத் தெரியும்.

நமது ஒளியில் மக்கள் தாங்கள் பின்பற்ற வேண்டிய இயேசுவைக் காண்பார்கள்.

நாம் நமது சிந்தனை, சொல், செயல்களால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ வேண்டும்.

நமது நற்செயல்கள் இயேசுவைப் பிரதிபலிக்க வேண்டும்.

நமது நற்செயல்களைப் பார்ப்பவர்கள் நம்மில் இயேசுவைக் காண வேண்டும்.

கண்டு நமது முன்மாதிரிகையைப் பின்பற்றி அவர்களும் இயேசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

போதுமா?"

"நமது நற்செயல்களைப் பார்த்தால் தானே நம்மில் இயேசுவைக் காண முடியும்?

எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். 

மரக்காலுக்குள் வைத்தால் விளக்கால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.

இதெல்லாம் புரிகிறது.

ஆனால் 

"மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள்."

இந்த வசனம் தான் புரியவில்லை.

மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் நம் அறச் செயல்களைச் செய்யாவிட்டால்

நம்மில் பிரதிபலிக்கும் இயேசுவை மக்கள் எப்படிப் பார்க்க முடியும்?"

"'உனக்கு இதுதான் பிரச்சினையா?

தினமும் சாப்பிடுகிறாயா?"

"தினமும் மூன்று வேளை சாப்பிடுகிறேன்."

"'ஏன் சாப்பிடுகிறாய்?"

"சாப்பிடாவிட்டால் எப்படி உயிர் வாழ முடியும்?"

"'கேள்விக்குப் பதில் சொல்லு."

"உயிர் வாழ்வதற்காகச் சாப்பிடுகிறேன்."

"'எப்படிப் பட்ட உணவைச் சாப்பிடுகிறாய்?"

"சத்துள்ள, ருசியான உணவைச் சாப்பிடுகிறேன்."

"'சத்துள்ள, சரி. எதற்கு ருசியான?"

'' ருசி இல்லாவிட்டால் எப்படிச் சாப்பிட முடியும்?"

"'ஒரு தட்டில் சத்துள்ள, ஆனால் ருசியில்லாத உணவு இருக்கிறது.

இன்னொரு தட்டில் இரசாயனப் பொருட்களால் ருசியேற்றப்பட்ட Fast food இருக்கிறது. 

இரண்டில் எதைச் சாப்பிடுவாய்?"

"முதல் தட்டிலுள்ள உணவைத் தான் சாப்பிடுவேன்.

இரசாயனப் பொருட்களால் ருசியேற்றப்பட்ட Fast food உடல் நலத்துக்குக் கெடுதி, மருந்தே இல்லாத நோய்களை உண்டாக்கும்."

"'Very good. இப்போ நீ கேட்ட கேள்விக்கு நீயே பதில் சொல்லி விடலாம்.

எங்கே, சொல்லு பார்ப்போம்."

"வழி தெரியவில்லை என்று சொன்னால் வழி காண்பிக்க 
கூட வருவீர்கள் என்று நினைத்தேன்.

நீங்கள் வழியைச் சொல்லிவிட்டு இந்த வழியே போ என்கிறீர்கள்.

பரவாயில்லை. போகிறேன்.

உயிர் வாழச் சாப்பிட வேண்டும், ருசிக்காக மட்டும் சாப்பிடக் கூடாது. 

ருசிக்காக மட்டும் சாப்பிட்டால் நீண்டநாள் உயிர் வாழ முடியாது,
நோய் வந்து குறுகிய காலத்துக்குள் சாக நேரிடும்.


அதேபோல  கடவுளுக்காக அறச் செய்ய வேண்டும். அவற்றைப் பார்க்கும் மக்கள் நம்மில் கடவுளைக் காண்பார்கள்.

மக்கள் பார்க்க வேண்டுமென்ற நோக்கத்தோடு அறச் செயல்களைச் செய்யக் கூடாது.

நமது நோக்கம் இயேசுவைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் நம்மை அல்ல.

அதாவது மக்கள் நம்மைப் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் முன் அறச் செயல்கள் செய்யக் கூடாது.

நாம் செய்வதை மக்கள் பார்ப்பார்கள், 

ஆனால், நம்மைப் பார்ப்பதற்காகச் செய்யக் கூடாது.

நமது செயல்களில் இயேசுவை, நம்மில் வாழும் இயேசுவைப், பார்ப்பதற்காகச் செய்ய வேண்டும்.

உயிர் வாழ்வதற்காகச் சாப்பிட வேண்டும்,

சாப்பிடுவதற்காக உயிர் வாழக் கூடாது.

போதுமா? இன்னுங் கொஞ்சம் வேணுமா?"

"'ஒரு உதாரணம் கொடுத்து விளக்கு."

"மருத்துவ மனைக்குச் சென்று சுகமில்லாதவர்களைப் பார்த்து ஆறுதல் கூறுவது ஒரு அறச் செயல்.

நாம் மனிதர்கள், ஆவி அல்ல. 
நாம் போவதை, வருவதை மக்கள் பார்க்கத்தான் செய்வார்கள்.
ஆனால் அவர்கள் பார்க்க வேண்டும், நம்மைப் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு செல்லக் கூடாது.

மற்றவர்கள் வர்கள் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சென்றால் நாம் செல்வதற்கு ஆன்மீக ரீதியாக எந்தப் பயனும் இல்லை.

நமது செயலின் தன்மையைத் தீர்மானிப்பது நமது உள்ளத்தில் உள்ள நோக்கம்.

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்”

நமது மனதில் மாசில்லா விட்டால் நாம் செய்வது அறச் செயல்.

மனதில் தற்பெருமை என்ற பாவம் இருந்தால் நாம் செய்வது அறத்துக்கு எதிரான செயல்.

நம்மைப் பற்றி நாம் பெருமையாகப் பேசிக்கொண்டு திரியக் கூடாது.

மற்றவர்கள் பேச வேண்டும் என்று ஆசைப்படவும் கூடாது."

"'Good. ஒரு முறை ஒரு உபதேசியார் கோவில் கட்டுவதற்கு நன்கொடை பிரிக்கச் சென்றிருந்தார்.

வசதியுள்ள ஒருவர் வீட்டுக்குச் சென்று, நன்கொடை நோட்டை அவர் கையில் கொடுத்து விட்டு,

"நீங்கள் தரும் தொகையை எழுதுங்கள். ஐயாயிரம் ரூபாயும், அதற்கு மேலும் எழுதினால் உங்கள் பெயர் கோயில் கல்வெட்டில் பொறிக்கப் படும்." என்றார்.

அவர் நோட்டில் பெயர் எழுதி,

4500 என்று எழுதி, ரூபாயைக் கையில் கொடுத்து விட்டார்.

"இன்னும் 500 எழுதினால் உங்கள் பெயர்......"

"மன்னிக்கவும், நான் கொடுப்பது கோவிலுக்குக் காணிக்கை, கல் வெட்டுக்கு அல்ல."

தனது பெயரை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகக் கொடுத்தால் அது அறச்செயல் அல்ல.

"மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள்.

செய்தால் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது." என்று ஆண்டவர் கூறுகிறார்.

நமது ஒவ்வொரு சொல்லும் விண்ணகத்‌ தந்தையின் மகிழ்ச்சிக்காக இருக்க வேண்டும்,

நம்மை நாமே மகிழ்ச்சிப் படுத்துத்துவதற்காக அல்ல.

நல்ல சமாரியன் உவமையில் அடிபட்டுக் கிடந்த மனிதனுக்கு உதவி செய்த சமாரியன் அவன்மீது கொண்ட இரக்கத்தின் காரணமாகவே உதவி செய்தான்.

அன்பிலிருந்து பிறந்தது இரக்கம்.

இறைவன் நம்மீது கொண்ட அளவு கடந்த அன்பின் காரணமாக பாவத்தால் அருள் வாழ்வை இழந்த நம்மீது இரங்கி மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு தன்னையே பலியாக்கி நம்மை மீட்டார்.

நமக்காகத் தன்னையே பலியாக்கியதால் அவருக்கு எந்த ஆதாயமும் இல்லை.

அவருடைய அன்பு நிபந்தனை அற்றது. 

தன்னுடைய அன்பைத்தான் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார். 

அந்த அன்பின் அடிப்படையில் அவரது சாயலில் வாழும் நாம் நமது அயலானுக்கு இரக்கத்தால் உந்தப்பட்டு உதவி செய்ய வேண்டும், சுய விளம்பரத்துக்காக  அல்ல.

இரக்கத்தினால் செய்யப்பட்ட உதவியில் அவன் இயேசுவைக் காண வேண்டும்.

இயேசுவைப்போல நாமும் இரக்கம் உள்ளவர்களாக இருப்போம். 

பிறர் மீது நாம் இரங்குவதில் விண்ணகத்திற்கு ஏறுவதற்கான ஏணி இருக்கிறது. 

லூர்து செல்வம்

Tuesday, March 4, 2025

"மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம்."(மத்தேயு நற்செய்தி 6:16)


"மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம்."
(மத்தேயு நற்செய்தி 6:16)

இன்று சாம்பற்புதன்.

தவக் காலத்தின் ஆரம்ப நாள்.

தவக் காலம் என்றால் தவம் செய்ய வேண்டிய காலம் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.

ஏனென்றால் நாம் நமது வாழ்நாள் முழுவதும், ஒவ்வொரு வினாடியும் 
தவம் செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம்.

நமது சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றை ஆன்மீக ரீதியாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான் தவம்.

அதற்காகத்தான் ஐம்புலன்களின் கட்டுப்பாடு.

இந்தத் தவத்துக்குக் காலவரையறை கிடையாது.

பார்க்கக் கூடாதவற்றைப் கண் பார்க்க ஆசைப்பட்டால் அதை அடக்குவதும்,

கேட்கக் கூடாதவற்றைப் காது கேட்க ஆசைப்பட்டால் அதை அடக்குவதும்,

பேசக் கூடாதவற்றைப் பேச வாய் 
ஆசைப்பட்டால் அதை அடக்குவதும்,

நினைக்கக் கூடாதவற்றை  நினைக்க மனது  
ஆசைப்பட்டால் அதை அடக்குவதும்,

அனுபவிக்கக் கூடாத இச்சைகளை உடல் 
அனுபவிக்க ஆசைப்பட்டால் அதை அடக்குவதும்,

தவ முயற்சிகளில் அடங்கும்.

பார்க்கக் கூடியவற்றை அளவோடு பார்ப்பதும்

பேசக் கூடியதை அளவோடு பேசுவதும்,

கேட்கக் கூடியதை அளவோடு கேட்பதும்,

சாப்பிடக்கூடியதை அளவோடு சாப்பிடுவதும், தவ முயற்சிகள் தான்.

நேரத்தை வீணாக்காமல் செபத்தில் ஈடுபடுவதும் தவமுயற்சிதான்.

நமது நேரத்தின் பெரும் பகுதியை நமக்காகச் செலவழிக்காமல் பிறர் அன்புப் பணிகளுக்காகச் செலவழிப்பதும் தவ முயற்சி தான்.

நமது விருப்பங்களைத் தியாகம் செய்து மற்றவர்களது விருப்பங்களை நிறைவேற்றுவதும் தவ முயற்சி தான்.

ஒரே வாக்கியத்தில், உடலையும் மனதையும் ஒறுத்து இறைவனுக்காகச் செய்யும் ஒவ்வொரு செயலும் தவ முயற்சிதான்.

இறைவனுக்காக வாழ்வதுதான் தவவாழ்வு.

இறைவனுக்காக வாழ்பவன் தன்னையே தியாகம் செய்து வாழ்வான்.

தியாகம் செய்வதில் தான் தவம் அடங்கியிருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் முழுவதும் தவம் செய்ய வேண்டுமென்றால் எதற்காகத் தனியே தவக் காலம்?

ஆண்டு முழுவதும் சாப்பிடுகிறோம், ஆனாலும் வீட்டு விழா நாட்களில் விசேடமாக விருந்து சாப்பிடுகிறோம் அல்லவா,  அதேபோல் தான்.

தவம் ஆன்மீக ரீதியானது.

எந்த ஆன்மீக விழாவுக்குத் தயாரிப்பதற்காகத் தவக் காலம்?

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்த புனித வெள்ளிக்காக நம்மைத் தயாரிக்கவா?

இயேசு உயிர்த்தெழுந்த விழாவுக்கு நம்மைத் தயாரிக்கவா?

இக்கேள்விக்கு விடை காணுமுன் வேறொரு கேள்வி.

பொதுவாக ஆண்டவர் மரித்த நாளை துக்கப் பண்டிகை என்று அழைப்போம்.

உலகியல் ரீதியாக பிறந்த நாளை மகிழ்ச்சியாகவும், இறந்த நாளைத் துக்கமாகவும்,  கொண்டாடுவது வழக்கம்.

கேட்கப் படக் கூடிய கேள்வி ஆன்மீக ரீதியானது.

உயிர்த்த ஞாயிறு மகிழ்ச்சியின் விழா. அதில் சந்தேகமில்லை.

ஆண்டவர் இறந்த நாள்?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

முகம் வாட்டமாய் இருந்தால் அகத்தில் வருத்தம், துக்கம் இருக்கிறது என்று அர்த்தம்.

ஒருவர் முகவாட்டமாய் இருந்தால் நாமும் முகத்தை வாட்டமாய் வைத்துக் கொண்டு, "வீட்டில் ஏதாவது பிரச்சினையா?" என்று கேட்போம்.

சாதாரணமாக அமர்ந்திருக்கிற ஆளிடம் போய், "ஏதாவது பிரச்சினையா?" என்று கேட்போமா?

புனித வெள்ளிக்காக நம்மைத் தயாரிக்க நோன்பு இருந்தால்,
அது துக்கப் பண்டிகையாக இருந்தால்

அதை நினைத்து நோன்பு இருந்தால் நமது முகம் எப்படி இருக்க வேண்டும்?

வாட்டமாய் இருக்க வேண்டும்.

ஆனால் இன்றைய நற்செய்தி வாசகம் சொல்கிறது,

"நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம்."

மனதில் நமது பாவங்களுக்காக மனத்தாபப்பட்டு, இறைவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக நோன்பை ஒப்புக்கொடுக்க வேண்டும்,

பாவங்கள் மன்னிக்கப்படும்போது ஆன்மீக மகிழ்ச்சி பிறக்கும்.

சிலுவையில் இயேசு மரித்த போது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது.

இது எதற்கு அடையாளம் ?


 யூத ஆலயத்தில், திரை என்பது மகா பரிசுத்த ஸ்தலத்தை சாதாரண மக்களிடமிருந்து பிரிக்கும் ஒரு தடையாக இருந்தது. 

இங்கு பிரதான ஆசாரியர் மட்டுமே செல்லலாம்.

இயேசுவின் மரணத்தின் மூலம், இந்தத் திரை கிழிந்தது, 

இது கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான தடை நீங்கியது என்பதைக் குறிக்கிறது.

ஒரே வரியில்,

நாம் மீட்கப் பட்டோம்.

நமது மீட்பு துக்கமான செய்தியா? மகிழ்ச்சியான செய்தியா?

சிலுவையில் தொங்கிய நல்ல கள்ளன் இயேசு மரித்தவுடன் அவரோடு விண்ணகம் சென்று விட்டான்.

இயேசுவின் காலத்தில் உயிர் வாழ்ந்தவர்களுள் சிலுவை மரணத்தால் முதலில் மகிழ்ந்தவன் நல்ல கள்ளன்.

" இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 23:43)

பேரின்ப வீட்டுக்கு அழுது கொண்டா போயிருப்பார்?

ஆன்மீக மகிழ்ச்சியோடு போயிருப்பார்.

கெட்ட கள்ளன்?

நாமும் ஆன்மீக ரீதியாக கள்ளர்கள், பாவிகள் தான்.

நாம் நல்ல கள்ளர்களாக இருந்தால் ஆன்மீக ரீதியாக இயேசு மரித்த நேரம் மகிழ்ச்சிகரமான நேரம் என்று நான் நினைக்கிறேன்.

உலகியல் ரீதியாக துக்கமான நேரம், ஆன்மீக ரீதியாக மகிழ்ச்சிகரமான நேரம்.

நமக்கும் இயேசு இடையில் தடையாக இருந்த திரை கிழிந்த நேரம்.

நாம் மனம் திரும்பிய பாவிகளாக மரித்தால் நமக்கும் இயேசுவுக்கும் இடையில் தடையாக இருக்கும் திரையாகிய உடலைக் கிழித்துக் கொண்டு நமது ஆன்மா இயேசுவோடு சேரும்.

நாம் இப்போது நோன்பு இருப்பது நாம் மனம் திரும்பி அருள் வாழ்வில் வளர்ந்து இயேசுவோடு இணைவதற்காகத்தான்.

அப்படி இணைய வேண்டுமானால் நாமும் நாம் சுமந்து சென்று கொண்டிருக்கும் சிலுவையில் மரிக்க வேண்டும்.

அதற்காகத்தான் நாம் சிலுவையைச் சுமந்து கொண்டு அவரைப் பின்பற்ற வேண்டும் என்கிறார்.

நாம் இருக்கும் நோன்பு நமது சிலுவை தான்.

முகவாட்டமாக அல்ல, முக மலர்ச்சியோடு நோன்பிருந்து,

நமது சிலுவையையும் மகிழ்ச்சி யாக சுமப்போம்.


இயேசு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்து போல நாமும் மரித்து உலக இறுதியில் உயிர்ப்போம்.

இயேசுவோடு இணைந்து நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

ஆக, இயேசு உயிர்த்தெழுந்த விழாவுக்கு நம்மைத் தயாரிக்கவே தவக்காலம்.

இயேசுவோடு மரித்து, இயேசுவோடு உயிர்க்கவே நோன்பு இருக்கிறோம்.

நாம் வருந்த வேண்டும், 
அழ வேண்டும், 
நாம் செய்த பாவங்களுக்காக. 

மகிழ வேண்டும் மீட்பு பெற்றமைக்காக.

லூர்து செல்வம்.

Monday, March 3, 2025

அப்போது பேதுரு அவரிடம், "பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" என்று சொன்னார். (மாற்கு நற்செய்தி 10:28)


அப்போது பேதுரு அவரிடம், "பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" என்று சொன்னார். 
(மாற்கு நற்செய்தி 10:28)

இயேசு சீடர்களிடம், "செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். 
அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்று கூறியபோது 

இராயப்பர் இயேசுவிடம்

"நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே"
கூறினார்.

"நாங்கள் செல்வந்தர்கள் அல்ல, இருந்தாலும் எங்களிடம் உள்ளதை எல்லாம் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியிருக்கிறோமே, எங்களுக்கு என்ன ஆகும்" என்ற பொருளில் கூறுகிறார்.

அதற்கு இயேசு‌ சீடர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் 

இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்." என்றார்.

இராயப்பர் சீடர்கள் விட்டு வந்த லௌகீகப் பொருட்களைக் குறிப்பிடுகிறார்.


இயேசு அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் ஆன்மீக பிரதிபலன்களைக் குறிப்பிடுகிறார்.

அவர்கள் விட்டு வந்தது  லௌகீக ரீதியிலான குடியிருந்த வீடு, பெற்றோர், உடன் பிறந்தோர் மற்றும் உடமைகள்.


பிரதிபலன்களாகக் கிடைக்கப் போவது உலகிலுள்ள அனைத்து உறவுகளும், ஆன்மீக ரீதியாக.

விட்டு வந்தது ஒரு வீடு. இனி நாட்டிலுள்ள அனைத்து வீடுகளும் அவர்களுடையவைதான், அதிலுள்ள அனைத்து மக்களும் அவர்களுடைய உறவினர்கள் தான். எல்லோரும் ஆன்மீக உறவினர்கள். எல்லோரும் இறையன்பினாலும், 
பிறரன்பினாலும் பிணைக்கப் பட்டவர்கள் 

உலகமே வீடு, வானமே கூரை, மக்கள் அனைவரும் உறவினர்கள்.

இயேசுவுக்காக வாழ வந்தவர்களுக்கு 
கிடைக்கவிருக்கும் முக்கிய மான பிரதிபலன் இன்னல்கள், துன்பங்கள்.

இயேசு துன்பங்களை அவரைப் பின்பற்றுபவர்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்களாக் குறிப்பிடுகிறார்.

அவர் பட்ட பாடுகளும், சிலுவை மரணமும் தான் நமக்கு மீட்பைப் பெற்றுத் தந்திருக்கின்றன.

ஆன்மீக ரீதியாக அவைகள் நமக்கு ஆசீர்வாதங்கள்.

இயேசுவின் பணியில் தங்களை அர்ப்பணித்திருக்கும் குருமார்கள் நம்மை சிலுவை அடையாளத்தால் தான் ஆசீர்வதிக்கிறார்கள். 

நாம் நமது நெற்றியில் சிலுவை அடையாளம் போடும்போது இயேசுவின் ஆசிர்வாதம் நமக்குக் கிடைக்கிறது.

துன்பங்களாகிய சிலுவைகளைச் சுமந்துகொண்டு தான் இயேசுவின் சீடர்களாக வாழ முடியும்.

இயேசுவின் வாழ்வில் சிலுவைக்குப் பின்தான் உயிர்ப்பு.

புனித வெள்ளிக்குப் பிறகுதான் உயிர்த்த ஞாயிறு.

நமக்கும் சிலுவையின் மூலம் தான் நித்திய பேரின்ப வாழ்வு. 

எந்த அளவுக்கு இந்த உலகில் இயேசுவுக்காகத் துன்பங்களை அனுபவிக்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு நித்திய பேரின்பமும் இருக்கும்.

உலகைத் துறந்து இயேசுவுக்காக வாழ்பவர்களுக்கு இவ்வுலகில் சிலுவை, மறு உலகில் நிலை வாழ்வு. 

லௌகீக ரீதியில் துன்பங்கள் நமது உடல் விருப்பத்திற்கு எதிரானவை.

உடலுக்கு வலியைக் கொடுக்கும் நோய் நொடிகள், பசி, பட்டினி போன்றவற்றையும்,

மற்றவர்கள் நமக்குத் தரும் துன்பங்களையும், 

இயேசுவுக்கு எதிரானவர்கள் நமக்கு தரும் தொந்தரவுகளையும், 

மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் செயல்பாடுகளால் நாம் படும் துன்பங்களையும் 

 பொறுமையுடன் சகித்துக் கொண்டு அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தால் அவை நாம் விண்ணக வாழ்வுக்குள் நுழைவதற்காக அருள் உதவியைப் பெற்றுத் தருகின்றன.

இந்த காலகட்டத்தில் இயேசுவுக்கு எதிரானவர்களால் ஏற்படும் துன்பங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

கோவில்கள் இடிக்கப்படுகின்றன. 

புனிதர்களின் சுருபங்கள் உடைக்கப்படுகின்றன.

வழிபாடு செய்பவர்கள் அடிக்கப்படுகின்றனர்.

இவற்றையெல்லாம் உலகம் தனது வெற்றியாகக் கருதுகிறது.

இவற்றை நாம் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கும் போது இவை நாம் பெரும் ஆன்மீக வெற்றிகள்.

நமக்காக இயேசு சிந்திய ரத்தம் நமக்கு மீட்பைத் தந்தது.

இயேசுவுக்காக நாம் சிந்தும் ரத்தம் திருச்சபையை வளர்க்கிறது.

இவ்வுலகில் நாம் படும் துன்பங்கள் தற்காலிகமானவை. 

ஆனால் அவற்றின் காரணமாக நாம் பெரும் மறு உலக வாழ்வு நிலையானது. 

இயேசுவுக்காகச் சொந்தங்களை விட்டு வருபவர்களுக்கு உலகமே சொந்தமாகி விடுகிறது. 

அன்று பன்னிரு சீடர்களும் தங்கள் வீடுகளையும் ரத்த உறவுகளையும் விட்டு வந்தது போல

இன்று நம்மிடையே பணியாற்றும் குருக்கள் தங்கள் வீடுகளையும் ரத்த உறவுகளையும் விட்டு வந்திருக்கிறார்கள். 

நாம் அவர்களுக்கு பெற்றோராகவும் சகோதர சகோதரிகளாகவும் செயல்பட வேண்டும். 

அவர்களை நமது குடும்பத்தின் அங்கத்தினர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். 

நமது ரத்த சொந்தங்களை நாம் நேசிப்பது போல ஆன்மீக சொந்தங்களாகிய அவர்களையும் நேசிக்க வேண்டும்.

நமது ஆன்மீக வாழ்வு பற்றி அவர்களோடு மனம் திறந்து பேச வேண்டும். 

நமக்காக வந்திருப்பவர்களை நம்மவர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். 

நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும் என்பது திருச்சபையின் கட்டளை.

நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அவர்களை நமது உடன் பிறந்தவர்களாக் கருத வேண்டும்.

இதுவே இயேசுவின் விருப்பம்.


இயேசுவின் விருப்பமே நமது விருப்பமாக இருக்க வேண்டும்.

விருப்பம் செயலாக மாற வேண்டும்.

லூர்து செல்வம்.

Sunday, March 2, 2025

"சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது."(மாற்கு நற்செய்தி 10:14)

"சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது."
(மாற்கு நற்செய்தி 10:14)

சிறு பிள்ளைகளைப் போன்றவர்களுக்கே மோட்ச பேரின்ப வாழ்வு உரியது.

பாவம் அற்றவர்கள் தான் மோட்சத்துக்குள் நுழைய முடியும்.

பாவம் என்றால் என்ன என்று தேரியாதவர்களால் பாவம் செய்ய முடியாது.

சிறு பிள்ளைகளுக்கு ஒழுக்க நெறிகளைப் பற்றியோ, கடவுளுடைய கட்டளைகளைப் பற்றியோ எதுவும் தெரியாது.

ஆகவே அவர்களால் அவற்றை மீற முடியாது. 

அவர்களுடைய ஆன்மா எப்போதும் பரிசுத்தமாக இருக்கும். 

அந்த நிலையில் அவர்கள் மரிக்க நேரிட்டால் விண்ணக வாழ்வை அடைவது உறுதி. 

இயேசு குழந்தையாக பிறந்த சமயத்தில்  ஏரோது மன்னனால் கொலை செய்யப்பட்ட அத்தனை மாசில்லாக் குழந்தைகளும் இப்போது விண்ணக பேரின்ப வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியவர்களும் சிறு பிள்ளைகளைப் போல பாவ மாசுமறு இல்லாமல் வாழ வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பம். 

சிறு பிள்ளைகள் மோட்சத்துக்குள் நுழைய உத்தரிக்கிற தலம் வழியாகச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

ஆனால் பெரியவர்களிடம் சாவான பாவம் இல்லாவிட்டாலும் அற்ப பாவங்கள் இருந்தால் அவர்கள் உத்தரிக்கிற தலம் சென்று உத்தரித்த பிறகு தான் விண்ணக வாழ்வுக்குள் நுழைய முடியும்.

நாம் விண்ணக வாழ்வுக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறோம், 

பாவம் இல்லாமல் மரிப்பவர்களுக்கு விண்ணக வாழ்வு உறுதி, 

மரிக்கும் சிறு பிள்ளைகள் உத்தரிக்கிற தலம் செல்லாமலேயே விண்ணக வாழ்வை அடைவார்கள் 

என்ற  மறை உண்மைகளின் அடிப்படையில் சிறிது தியானித்தால் நமது வாழ்க்கைக் கண்ணோட்டம் வித்தியாசமாக இருக்கும்.

ஒரு Wall poster ல் இவ்வாறு எழுதியிருந்தது:

"எங்கள் தந்தை இவ்வுலக துன்ப வாழ்வை விட்டு விட்டு நித்திய பேரின்ப வாழ்வை அனுபவிக்க இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை மிகவும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்."

யாராவது " நான் பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறேன் என்ற செய்தியை மிகவும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் " என்று சொன்னால் அவரைப் பற்றி என்ன நினைப்போம்?

அல்லது,

"எங்கள் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று கண்ணீரோடு கேட்டுக்கொள்கிறோம்" 

என்று அழைப்பு விடுப்பவர்களை பற்றி என்ன நினைப்போம்? 

மனக் கோளாறு உள்ளவர்கள் என்று தான் நினைப்போம்.

மகிழ்ச்சியான செய்தியை மகிழ்ச்சியாக அறிவிக்க வேண்டும்.

துக்கமான செய்தியை வருத்தத்தோடு அறிவிக்க வேண்டும்.

நித்திய பேரின்ப வாழ்வை அடைய இறைவனடி சேர்வது மகிழ்ச்சியான செய்தியா?துக்கமான செய்தியா?

பேரின்ப வாழ்வை துக்கமான செய்தி‌ என்று நினைப்பவர்களும் மனக் கோளாறு உள்ளவர்கள்தான்.

இரண்டு நண்பர்கள் இருந்தார்கள்.

இருவருக்கும் ஒரே வயது.

இருவரும் சிறு வயது முதலே நெருங்கிப் பழகி அன்பால் பிணைக்கப் பட்டிருந்தார்கள்.

எப்போதும் அவர்களை ஒன்றாகவே பார்க்கலாம்.

எப்போதும் மகிழ்ச்சியாக பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.

இருபது வயது நடக்கும் போது இருவரில் ஒருவர் எதிர் பாராத விதமாக ஒரு விபத்தில் இறந்து விட்டார்.

வீடே அழுகையில் மூழ்கிக் கிடந்தது.

எல்லோரும் அழுது கொண்டிருந்தபோது நண்பன் மட்டும் எப்போதும்போல 
மகிழ்ச்சியாக இருந்தான்.

இது மற்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஒருவர் அவனிடம், "நண்பன் இறந்து கிடக்கிறான். நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய்  உனக்கு உணர்ச்சியே இல்லையா?"

"உணர்ச்சி இருப்பதால் தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
நண்பன் நித்திய பேரின்ப வாழ்வை அனுபவிக்கச் சென்றிருக்கிறான்.

கடவுளிடம் சென்றிருக்கிறான்.

உண்மையான உணர்ச்சி இல்லாதவர்கள்தான் நண்பனின் பேரின்ப வாழ்வை நினைத்து மகிழாமல் அழுது கொண்டிருக்கிறார்கள்."

லௌகீக உள்ளத்தோர்க்கு இந்த பதில் விளங்காது.

உண்மையான ஆன்மீக வாதிகளுக்குப் புரியும்.

நமது வாழ்வின் அனுபவங்களை ஆன்மீக் கண் கொண்டு நோக்குவோம்.

லௌகீக தோல்விகள் கூட ஆன்மீக வெற்றிக்கு அடித்தளம் ஆகலாம். 

புனித பிரான்சிஸ் அசிசி இளைஞனாக இருந்தபோது அவரது பெற்ற தந்தை அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார். 

அவர் ''விண்ணகத் தந்தையே எனது தந்தை" என்று வாழ ஆரம்பித்தார். 

பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டே ஆன்மீக பணியாற்றினார். 

ஏழைகளின் சபையாகிய பிரான்சிஸ்கன் துறவற சபையை நிறுவினார்.

சிறு பிள்ளைகளின் மாசுமறுவற்ற தன்மை நமது ஆன்மீகமாக இருக்கட்டும்.


லூர்து செல்வம்.

Saturday, March 1, 2025

ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்" என்றார்."(மத்.26: 24)

"ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்" என்றார்."
(மத்.26: 24)

"தாத்தா,  போன வாரம் நீங்கள் என்னோடு பேசும்போது  யூதாஸ் பணத்துக்காக மட்டுமே இயேசுவை காட்டிக் கொடுத்தான்.
ஆகவே இயேசு மரண தீர்ப்பு இடப்பட்டு விட்டார் என்பதை கேள்விப்பட்டவுடன் 

"மாசில்லா ரத்தத்தை காட்டி கொடுத்து விட்டேனே!"

என்று மனம் வருந்தி பணத்தை வீசி எறிந்து விட்டு நாண்டு கொண்டு செத்தான்.

ஆனாலும் தனது பாடுகளுக்குக் காரணமான அனைவரையும் மன்னித்த இயேசு 

யூதாசின் இறுதி வினாடியில் அவனுக்கு பாவத்திற்கான மனஸ்தாபத்தை கொடுத்திருப்பார்,

அவனும் மனஸ்தாபப்பட்டிருப்பான் கடவுளும் அவனை மன்னித்திருப்பார்,

ஆகவே அவன் நரகத்துக்கு போயிருக்க மாட்டான், 

என்று சொன்னது நினைவிருக்கிறதா?"

"'ஆமா. அதற்கு என்ன இப்போ?"

"அதை என் நண்பனிடம் சொன்னேன்.

அவன் "ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்" என்ற இயேசுவின் வார்த்தைகளை காரணம் காட்டி 

யூதாஸ் மீட்பு அடைந்திருக்க மாட்டான் என்கிறான்.

அதற்கு உங்கள் பதில் என்ன?"

"'ஒருவரது வார்த்தைகளுக்கான பொருளை எதை அடிப்படையாக வைத்துக் காண வேண்டும்?"

"சொன்னவரின் குணத்தை."

"'நீ பாடம் படிக்காதிருப்பதை பார்த்து உன்னுடைய அப்பா,

'இப்படி படிச்சா கட்டாயம் நீ பரிட்சையில்  Fail ஆகி விடுவாய்"

என்று சொன்னால் அது சாபமா?"

"மகன் மீது அன்புள்ள தகப்பனால் மகனை சபிக்க முடியாது. நன்கு படிக்க வேண்டியது அவசியத்தை மகனுக்கு சொல்கிறார். அவ்வளவுதான்."

"'அப்படியானால் இயேசு அன்பே இல்லாதவர் என்று உன் நண்பன் நினைக்கிறானா?"

"அப்படி நினைத்திருக்க மாட்டான். அவன் வசனத்தை மட்டும் பார்த்திருப்பான்."

"'ஐயோ கேடு என்ற வார்த்தைகளை இயேசு வேறு எங்காவது பயன் படுத்தியிருக்கிறாரா?"

"பரிசேயர்களை பற்றி, மறைநூல் அறிஞர்களைப் பற்றி பேசும்போது இவ்வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்."

"'இயேசுவுக்கு அவர்கள் மீது அன்பு இல்லையா?"

"இயேசு கடவுள். அவரால் படைக்கப்பட்ட அனைத்து மக்களையும் அளவு கடந்த விதமாக அன்பு செய்கிறார்.

அவரால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

அன்பு அவருடைய இயல்பு."

"'பிறகு ஏன் இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்?"

"அவர்களுடைய வெளிவேடக்காரத் தனத்தின் தீமையைச் சுட்டிக் காட்ட, அவர்களை நல்லவர்களாக மாற்ற."


"'அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு யார் தெரியுமா?"

"தெரியுமே. யூதர்களின் தலைமைச் சங்க உறுப்பினர். ஒரு மறை நூல் அறிஞர். அவர் இயேசுவைப் பின்பற்றியவர்.
அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். இயேசு மரித்தபின் அவரது உடலை வாங்கி கல்லறையில் அடக்கம் செய்தவர் அவர்தான்."

"'அவர் மீட்படைந்திருப்பார் என்று நம்புகிறாயா? அவர் ஒரு பரிசேயர்."

"உறுதியாக நம்புகிறேன்."

"' ஆக, 'ஐயோ கேடு' என்ற வார்த்தைகளை இயேசு யாரையும் சபிப்பதற்காகப் பயன்படுத்தவில்லை.

சம்பந்தப்பட்டவர்களின் குற்றத்தின் கனாகனத்தை சுட்டிக் காண்பிக்கவே பயன்படுத்தினார்.

இப்போ சொல்லு, இயேசு யூதாசை பற்றி பேசும்போது ஏன் இந்த வார்த்தைகளை பயன்படுத்தினார்?"

"குருவைக் காட்டிக்கொடுத்தல் என்ற குற்றத்தின் கனாகனத்தைச் சுட்டிக் காண்பிக்கவே.

அது சரி. ஏன் "அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்" என்று சொன்னார்?"

"'யூதாஸ் தானாகவே பிறந்தானா?"

''இல்லை. கடவுள் படைத்ததனால் பிறந்தான்."

"'இயேசு, 'நான் அவனைப் படைக்காதிருந்தால் நலமாயிருந்திருக்கும்' என்று சொல்வாரா?"

"கட்டாயம் சொல்ல மாட்டார். கடவுளால் தவறு செய்ய முடியாது.

செய்ய முடியாத தவறைச் செய்யாதிருந்தால் நலமாக இருந்திருக்கும் என்று எப்படிச் சொல்வார்?

இதுவும் யூதாஸ் செய்யவிருந்த தவற்றின் கனாகனத்தை சுட்டிக் காட்டவே.

இப்போது புரிகிறது. இயேசுவின் வார்த்தைகளை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று புரிகிறது.

தாத்தா, இதே மாதிரியான வசனங்கள் பைபிளில் வேறு எங்காவது இருக்கின்றனவா?"

"'இதே மாதிரியான என்றால்?"

" பைபிளை ஒழுங்காக வாசிக்க தெரியாதவர்கள் தவறாக புரிந்து கொள்ளும் வசனங்கள்."

"'பைபிளைத் திறந்து தொடக்கநூல் 6 ஆம் அதிகாரம் 
6ஆம் வசனத்தை வாசி"

"மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது."

"'இப்போ கவனி. கடவுளால் மனம் வருந்த முடியுமா?"

"அவர் மகிழ்ச்சியே உருவானவர். அவரால் ஒருபோதும்  மனம் வருந்த முடியாது."

"'பிறகு ஏன் மோசே ஏன் இவ்வாறு எழுதினார்?"

"மண்ணுலகில் மனிதர் செய்த தீமைகளின் கனாகனத்தை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி எழுதினார்."

"'ஒரு தீமையின் தன்மையை புரிந்து கொள்ள அதை மிகைப்படுத்தி கூறுவதும்,

நன்மையின் தன்மையை புரிந்து கொள்ள உயர்வு நவிர்ச்சி அணியை பயன்படுத்துவதும் 

மனிதர்களுக்கு வழக்கம்.

பைபிள் மனித மொழியில் எழுதப் பட்டிருக்கிறது.

பைபிள் வாசிப்பவர்கள் உண்மையை அறிந்து கொள்ளும் நோக்கோடு வாசிக்க வேண்டும்.

மனதில் ஒரு தவறான எண்ணத்தை வைத்துக் கொண்டு அதற்கு ஆதாரம் தேட பைபிள் வாசிக்கக் கூடாது.

நமது பிரிவினைச் சகோதரர்கள் இப்படித்தான் வாசிக்கிறார்கள்.

அவர்களுக்கு அன்னை மரியாளைப் பிடிக்காது.

இயேசு தன் தாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறிக்கொண்டு அதற்கான ஆதாரங்களை பைபிளில் தேடி அலைகிறார்கள்.

கானாவூர்க் கல்யாணத்தில் இயேசு தன் அன்னையை, "பெண்ணே" (woman) என்று அழைத்ததை சுட்டி காண்பித்து,

'இயேசு மரியாளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் 'தாயே' என்றல்லவா அழைத்திருப்பார்?' என்கிறார்கள்.

ஆனால் 'பெண்ணே' என்ற வார்த்தையில் அடங்கி இருக்கும் மறை உண்மை நமக்குத் தெரியும்.

"உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள்  உன் தலையை நசுக்குவாள். 
(தொடக்கநூல் 3:15)

மேற்படி வசனத்தில் சாத்தானின் தலையை நசுக்கப் போவதாக கூறப்பட்டிருக்கும் பெண் தான் அன்னை மரியாள் (சென்மப்பாவ மாசின்றி பிறந்தவள்) என்ற மறை உண்மையை நமக்குப் புரிய வைக்கவே இயேசு 'பெண்ணே' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

அன்னை மரியாள் இரண்டாவது ஏவாள்.

அருள் நிறைந்தவள்.

இந்த மறை உண்மையை ஏற்றுக்கொள்ள விரும்பாத பிரிவினை சபையினர் தங்கள் விருப்பத்திற்கு அதற்கு பொருள் கொடுக்கின்றனர்.

நமது தாயைப் பற்றி பிள்ளைகளாகிய நமக்குத் தெரியும், மற்றவர்களைப் பற்றி நமக்கு கவலை இல்லை.


ஒருவர் இயேசுவை நோக்கி, "அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்" என்று கூறியபோது,

இயேசு தம் சீடர் பக்கம் கையை நீட்டி, "என் தாயும் சகோதரர்களும் இவர்களே. 

விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்று கூறிய வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி 

பிரிவினை சகோதரர்கள் இயேசு தனது சீடர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை தனது தாய்க்குக் கொடுக்கவில்லை, நாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.

இவர்கள் புத்தி இருந்தும் பயன்படுத்த தெரியாதவர்கள்.

பட்டினி கிடந்த ஒருவர் தனக்கு உணவு கொடுத்த பெண்ணைப் பார்த்து,
 
"நீங்கள் எனது தாய்" என்று கூறினால் தன்னை பெற்ற தாயை அவமதிப்பதாக அர்த்தமா?

இயேசு தனது சீடர்களை உயர்த்திப் பேசுவதால் தாயைக் குறைத்துப் பேசுவதாக அர்த்தம் ஆகாது.

அன்னை மரியாள் இயேசுவைப் பெற்றாள்,

சீடர்கள் அவரது வார்த்தைகளைச் செயல்களாகப் பெறப் போகிறார்கள்.

இயேசு தனது வார்த்தைகளால் வெளிப்படுத்துவது தனது தந்தையின் சித்தத்தைத் தான்.

அதை ஏற்றுக்கொள்ளும் தனது சீடர்கள் தந்தையின் சித்தத்தை தங்கள் வாழ்வாக்கப் போகிறார்கள்.

அன்னை மரியாள் தந்தையின் சித்தத்தை ஏற்றுக் கொண்டதால் தான் இயேசுவை பெற்றெடுத்தாள்.

சீடர்களும் தந்தையின் சித்தத்தை ஏற்றுக்கொண்டு,  இயேசுவைப் பெற்று

 உலகுக்குத் தரப்போகிறார்கள்.

இதனால் சீடர்கள் தாய்க்குரிய பெருமையை பெறுகிறார்கள்.

இன்று திருப்பலி பீடத்தில் இயேசுவைப் பெற்று நமக்குத் தருபவர் யார்?

குருவானவர் இயேசுவின் சீடர் தானே.

தந்தையின் சித்தப்படி நடந்தால் நாமும் இயேசுவுக்கு தாய் தான்.

தாயைப் போல பிள்ளை, அன்னை மரியாளைப் போல நாமும்."

லூர்து செல்வம்.

Friday, February 28, 2025

இறந்த பின் இயேசு செய்த முதல் புதுமை.

இறந்த பின்  இயேசு செய்த முதல் புதுமை.


"தாத்தா, நான் இப்போது கேட்கப் போகும் கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது."

"'அப்படி என்ன கடினமான கேள்வி?"

"கேள்வி இலேசானது தான்.
பதில் சொல்வதுதான் கடினம்."

"'முதலில் கேள்வியைக் கேள்."

"இயேசு அவரது சித்தப்படி வாழ்பவர்களுக்கு விண்ணக வாழ்வைப் பரிசாக அளிக்கிறார்.

அவரது தந்தையின் சித்தம் நிறைவேற அவருக்கு உதவியவர்களுக்கு என்ன பரிசு அளித்தார்?"

"' முதலில் அவருக்கு உதவி செய்தவர்கள் யார் என்று கூறு."

"இயேசு தனது சிலுவை மரணத்தின் மூலம் நம்மை மீட்கப் தானே உலகுக்கு வந்தார்?"

"'ஆமா."

"பரிசேயர்கள், சதுசேயர்கள், யூத சமயக் குருக்கள், போஞ்சு பிலாத்து, செந்தூரியன், படை வீரர்கள் ஆகிய அனைவரும் தானே அவரைச்  சிலுவையில் அறைந்தார்கள்."

"'ஆமா."

"அப்படியானால் இயேசு வந்த நோக்கம் நிறைவேற அவர்கள் உதவினார்கள் என்று தானே அர்த்தம்."

"'இயேசு தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க வல்லவர் என்று அர்த்தம்."

"அது சரிதான். ஆனாலும் அவர்கள் அவருக்கு எதிராகச்  செயல்பட்டிருக்கா விட்டால் அவரால் சிலுவையில் அறையப்பட்டு இறந்திருக்க முடியாதே."

"'வாதத்திற்காக நீ சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் இயேசு அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டார் என்பது எனக்குத் தெரியாதா?"

"மன்னித்தார் என்பது தெரியும்.
ஏற்றுக் கொண்டார் என்றால்?"

"' நமது பாவங்கள் மன்னிக்கப் பட்டால் நாம் எங்கே செல்வோம்?"

"மோட்சத்துக்கு. அவர்கள் மோட்சத்துக்குப் போய் விட்டார்கள் என்று சொல்கிறீர்களா?"

"'யாரும் நரகத்திற்குச் சென்றிருக்கிறார்கள் என்று சொல்ல நமக்கு உரிமை இல்லை.

கடவுளின் அளவுகடந்த இரக்கத்தினால் மோட்சத்துக்குச் சென்றிருக்கிறார்கள் என்று நம்பினால் தப்பில்லை."

"நீங்கள் சொல்வதை நிரூபிக்க ஒரு ஆதாரமாவது இருக்கிறதா?"

"' இயேசுவின் சிலுவை மரணத்தில் செந்தூரியனின் பங்கு என்ன என்று தெரியுமா?"

"செந்தூரியன் என்றால் நூறு ரோமைப் படை வீரர்களுக்குத் தலைவன்.

இங்கே, ஆளுநரின் பொறுப்பிலுள்ள படைத் தலைவன்.

இயேசுவைச் சுற்றூணில் கட்டி வைத்து அடித்தவர்களும், முள் முடி சூட்டி அடித்தவர்களும் படை வீரர்கள் தான்."

"'உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அத்தனை உறுப்புக்களும் இரத்த ஆறு ஓட காயங்கள் ஏற்படும் அளவுக்கு அடித்தார்கள்.

நமது பாவங்களுக்கு பரிகாரமாக சிந்தப்பட்ட இரத்தம்.

அவரது முகத்தில் எச்சில் துப்பி அசிங்கப் படுத்தியதுமல்லாமல் கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்தினர்.

பிலாத்து இயேசுவுக்கு சிலுவை மரணத் தீர்ப்பு அளித்தவுடன் அந்தப் பொறுப்பை செந்தூரியன் வசம் ஒப்படைத்தான்.

செந்தூரியனுக்கு ஒரு கண் தெரியாது.

இயேசுவின் மேல் பாரமான சிலுவையை ஏற்றினார்கள்.

தன் ரத்தத்தின் பெரும்பகுதியை அடிபடும் போதே இழந்துவிட்ட இயேசு உடலில் பலம் இல்லாததால் நடந்தபோது மூன்று முறை சிலுவையோடு கீழே விழுந்தார்.

கீழே விழுந்த மாட்டை  விவசாயி 
தார்க்கம்பால் குத்தி, சாட்டையால் அடித்து எழுப்புவது போல,

வீரர்கள் இயேசுவைக் காலால் உதைத்தும், சாட்டையால் அடித்தும் எழுப்பினர்.

அவர் நடந்து சென்று கொண்டிருந்த போதும் அவரைச் சாட்டையால் அடித்துக் கொண்டே சென்றனர்.

அன்னை மரியாள் தான் பத்து மாதம் சுமந்து பெற்று, பாலூட்டி, சீராட்டி,  உணவளித்து வளர்த்த தனது செல்ல மகனை வீரர்கள் அடித்த அடிகளின் வலியையும், சிலுவையையும் உள்ளத்தில் சுமந்து கொண்டு,

நமது பாவங்களுக்கு பரிகாரமாக தனது மகனின்  பாடுகளை விண்ணகத் தந்தைக்கு ஒப்புக்கொடுத்துக்கொண்டே பின்னால் நடந்து சென்றாள்.

அவளது உறவினப் பெண்களும் அவளோடு அழுது கொண்டு சென்றார்கள்.

கட்டப்பட்டு கல்வாரி மலையை அடைந்த பின் செந்தூரியன் தலைமையில் வீரர்கள் இயேசுவை ஆணிகளால் சிலுவையில் அறைந்தார்கள்.

ஆணிகளின் பின்பகுதியை மடக்குவதற்காக சிலுவையை குப்புற மாற்றி போட்டார்கள்.

இயேசுவின் உடல் தரையிலும், பாரமான சிலுவை அவர் மேலும் இருக்க,

ஆணிகளை பின்பக்கம் அடிக்கும்போது அவரது உடல் சிலுவையின் பாரத்தால் தரையோடு தரையாக நைந்து கொண்டிருந்தது.

மீதமிருந்த ரத்தமும் கல்வாரி மலையில் ஆறாக ஓடியது.

பின் சிலுவையை நட்டமாக நிறுத்தினார்கள்.

மீதம் இருந்த ரத்தம் காயங்கள் வழியே வடிந்து கொண்டிருந்தது.

இந்த நிலையிலும் இயேசு,

 "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று தந்தையை நோக்கி வேண்டினார்.

அவரும் அவரது பாடுகளுக்குக் காரணமான அனைவரையும் மனதார மன்னித்தார்.

பிற்பகல் மூன்று மணியளவில்,

"தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் "என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். 


இதைக் கண்ட செந்தூரியன்  "இவர் உண்மையாகவே நேர்மையாளர்" என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து  இறக்குவதற்குமுன் அவர்  இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்வதற்காக செந்துரியன் ஒரு ஈட்டியால் இயேசுவின் விலாப் பகுதியில் குத்தினான்.

இதயத்தில் கொஞ்சமாக மீதி இருந்த ரத்தம் தண்ணீரோடு வெளியேறியது.

அந்த ரத்தத்தின் ஒரு சொட்டு செந்தூரியனின் பார்வையற்ற கண்ணின் மேல் விழுந்தது.

செந்தூரியன் உடனே பார்வை பெற்றான்.

இறந்த பின்பும் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போதே இயேசு ஒரு புதுமை செய்து தனது சிலுவை மரணத்தை வழி நடத்திய செந்தூரியனின் கண்ணை குணமாக்கினார்.

இது அவர் இறந்த பின் செய்த முதல் புதுமை.

தனக்குத் தீமை செய்தவனுக்கு நன்மை செய்ய அவர் செய்த புதுமை.

 முற்றிலும் குணமடைந்த செந்தூரியன் மனம் திரும்பி தனது பதவியை விட்டுவிட்டு நற்செய்தியை பரப்பும் பணியில் ஈடுபட்டார்.

அது மட்டுமல்ல நற்செய்தி பணிக்காக வேத சாட்சியாக மரித்தார்.

அவர் தான் புனித லோஞ்சினுஸ்.
Saint Longinus.

இப்போது சொல்லு, இயேசுவின் இந்த செயலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?"

"எதிர்மறையாக செயல்பட்டாலும், தான் எந்த நோக்கத்துக்காக உலகுக்கு வந்தாரோ அது நிறைவேற உதவிய செந்தூரியனை மனம் திருப்பி,

அவரைப் புனிதராக மாற்றி
விண்ணக வாழ்வுக்குள் ஏற்றுக்கொண்டார்.

இப்போது புரிகிறது.

இயேசு தனக்கு தீமை செய்தவர்களைக் கூட மனம் திருப்பி அவர்களுக்கு விண்ணக வாழ்வைப் பரிசாக அளிப்பவர் என்று புரிகிறது."

"'செந்தூரியனின் மனமாற்றம் வரலாற்று பூர்வமான உண்மை. 
செந்தூரியன் அவர் வகித்த பதவியின் பெயர்.

புனிதராக அவர் பெயர் புனித லோஞ்சினுஸ். (Saint Longinus)

அவருடைய திருநாள் அக்டோபர் 16ஆம் தேதி கொண்டாடப்படுகிறது."

"பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் போன்ற மற்றவர்கள் என்ன ஆனார்கள்?"

"'மற்றவர்களும் மனம் திரும்பி மீட்படைய இயேசு தனது அருளுதவியை வழங்கியிருப்பார் என்று நாம் நம்பலாம்.

பிலாத்துவின் மனைவி Claudia Proccula புனித சின்னப்பரின் சீடத்தியாக மாறி நற்செய்திப் பணியாற்றினார்.

இயேசு தான் போதித்தவை எல்லாவற்றையும் சாதித்துக் காட்டினார் என்பதற்கு வரலாறு சான்று பகர்கிறது."

"எனது சந்தேகத்தைத் தீர்த்தமைக்கு நன்றி, தாத்தா."

லூர்து செல்வம்.

Thursday, February 27, 2025

"அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார். (மாற்கு நற்செய்தி 9:35)

"அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார். 
(மாற்கு நற்செய்தி 9:35)

இயேசுவின் சீடர்களுக்குள் ஒரு போட்டி,

"நம்முள் பெரியவர் யார்?"

இதை அவர்கள் இயேசு விடம் கேட்க வில்லை.

அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேசியது இயேசுவின் காதுகளில் விழுந்தது.

அவர்களுடைய கேள்விக்கு அவர்கள் கேட்காமலேயே இயேசு பதில் சொன்னார்.

உலகினர் யாரைப் பெரியவர் என்பார்கள்?

உயர்ந்த பதவியில் உளளவர்களை .

அந்த வகையில் இந்தியாவில் மிகப் பெரியவர் யார்?

பிரதம மந்திரி.


தமிழ்நாட்டில் மிகப் பெரியவர் யார்?

முதலமைச்சர்.

குடும்பத்தில்?

தந்தை.

நாம் யாரிடம் அதிகம் சொத்து இருக்கிறதோ, யாருக்கு அதிகம் வருமானம் வருகிறதோ அவரைப் பெரியவர் என்போம்.

இது உலகியல் ரீதியாக, நிரந்தரமற்ற வாழ்க்கை ரீதியாக.

ஆனால் இயேசுவின் பார்வை உலகியலுக்கு நேர் எதிர்மாறானது.

தாழ்ச்சியைப் புண்ணியங்களின் அரசி என்போம்.

யார் தங்களைப் பற்றி தாழ்வாகக் கருதுகிறார்களோ அவர்கள் தான் பெரியவர்கள்.

தாழ்ச்சியை இயேசுவே வாழ்ந்து காண்பித்தார்.

எல்லாம்வல்ல கடவுளாகிய அவர் உலகில் மனிதனாகப் பிறந்த போது ஒரு ஏழைப் பெண்மணியைத் தனது தாயாகத் தேர்வு செய்தார்.

அந்தத் தாய் தன்னை ஆண்டவரின் அடிமையாகக் கருதினாள்.

உலகத்துக் கே அதிபதியான அவர் ஒரு மாட்டுத் தொழுவில் பிறந்தார்.

அவரது பிறப்பைப் பற்றி ஏழை இடையர்களுக்கே முதலில் அறிவித்தார்.

யூதர்களின் அரசராகிய அவர் குற்றவாளிகளின் தண்டனைக் கருவியாகிய சிலுவையைத் தனது சிம்மாசனமாகத் தேர்ந்தெடுத்தார்.

இரும்பாலான மூன்று ஆணிகள் தான் அவருடைய அணிகலன்கள்.

அவரை அடக்கம் செய்த கல்லறை கூட அவருடையது அல்ல.

ஆக கருவரை முதல் கல்லறை வரை அவர் தாழ்ச்சியில் தான் வாழ்ந்தார்.

அவர் தான் உலகிலேயே பெரியவர்.


"ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராக இருக்கட்டும்."  என்ற அவருடைய போதனையை சாதனையாக்கினார்.

லௌகீகமும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று எதிர் மாறானவை.


லௌகீம் நிலையற்ற உலகையும், அழியும் உடலையும் சார்ந்தது.

ஆன்மீகம் ஆன்மாவையும், நிலை வாழ்வையும் சார்ந்தது.

லௌகீகத்தில் பொருள் பற்றுடன் நிறைய பொருள் ஈட்டுபவன் செல்வந்தன்.

ஆன்மீகத்தில் பொருள் பற்று அற்று, அருள் ஈட்டுபவனே அருளாளன்.

லௌகீகத்தில் அதிகாரமும், செல்வாக்கும் படைத்தவனே பெரியவன்.

ஆன்மீகத்தில் உலகில் தாழ்ந்திருந்து விண்ணக வாழ்வுக்கு ஏற்றவனே பெரியவன்.


"மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
(மத்தேயு நற்செய்தி 11:11)

லூர்து செல்வம்.

Wednesday, February 26, 2025

ஏன் யோசேப்பு குழந்தை இயேசுவையும், மாதாவையும் அழைத்துக் கொண்டு எகிப்துக்குச் சென்றார்?


ஏன் யோசேப்பு குழந்தை இயேசுவையும், மாதாவையும் அழைத்துக்  கொண்டு எகிப்துக்குச் சென்றார்?

"தாத்தா, இறை மகனும், மனு மகனும் ஒரே ஆள் தானே?"

"ஆமா, பரிசுத்த தமதிரித்துவத்தில் இரண்டாம் ஆள்.

 ஆள் ஒன்று, சுபாவம் இரண்டு.."


"' அப்படியானால் அவர் சர்வ வல்லவக் கடவுள் தானே."

"ஆமா, அதில் என்ன சந்தேகம்."

"'அவர் சர்வ வல்லவக் கடவுள் என்று அன்னை மரியாளுக்கும்,
யோசேப்புக்கும் தெரியும்தானே."

"நிச்சயமாக.

"அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். 

அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது"  கபிரியேல் தூதர் மரியாளிடம் சொன்னார் தானே.

'ஆமா."

"'ஆக, குழந்தை இயேசு என்றென்றும் ஆட்சி செலுத்தப் போகும் கடவுள் என்று மாதாவுக்கும் தெரியும், யோசேப்புக்கும் தெரியும்.

 ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, "நீர் எழுந்து
 குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்,"

என்று சொன்னபோது எல்லாம் வல்ல கடவுள் ஏன் மனிதனுக்குப் பயந்து ஓட வேண்டும் என்ற கேள்வி அவர் மனதில் எழவில்லையா?

தூதர் சொன்னவுடனே  இரவிலேயே யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு,  எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். 

கடவுளின் வல்லமை மீது மாதாவுக்கும், யோசேப்புக்கும் நிச்சயமாக விசுவாசம் இருந்திருக்கும்.

இருந்தும் ஏன் இரவோடு இரவாக எகிப்துக்குப் போனார்கள்?"

"மரியாளை மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்ட யோசேப்பு மனைவியை ஏன் ஏற்றுக்கொண்டார்?"

"'ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்."

"இதில் யோசேப்பின் என்ன பண்பு உனக்குத் தெரிகிறது?"

"'இறைவன் சித்தத்துக்குக் கீழ்ப்படியும் பண்பு."

"வெறுமனே கீழ்ப்படியும் பண்பு அல்ல, எதிர்க் கேள்வி கேட்காமல், விளக்கம் கேட்காமல் கீழ்ப்படியும் பண்பு.

துறவற சபையினர் கொடுக்கும் மூன்று வார்த்தைப் பாடுகளுள் ஒன்று கீழ்ப்படிதல்.

ஒரு முறை ஒரு சபையில் ஒரு 
நவசந்நியாசியை Novice Master அழைத்து, ஒரு விறகுக் கட்டையைக் கையில் கொடுத்து,

"இதைத் தோட்டத்தில் நட்டு, தினமும் ஒரு வாளித் தண்ணீர் ஊற்றி வாருங்கள்" என்றார்.

அவரும் அவர் சொன்னபடியே செய்து வந்தார்.

ஒரு நாள் வெளியிலிருந்து வந்த நண்பர் ஒருவர்,

"ஏன் விறகுக்கட்டைக்குத் தண்ணீர்  ஊற்றுகிறீர்கள்?"  என்று கேட்டார்.

"Novice Masterன் உத்தரவு"

" விறகுக் கட்டை தளிர்க்குமா?"

"தளிர்க்காது."

"தளிர்க்காது என்று தெரிந்தும் ஏன் தண்ணீர்  ஊற்றுகிறீர்கள்?" 

"அது தளிர்ப்பதற்காக 
ஊற்றவில்லை. 

Superior க்குக் கீழ்ப்படிவதற்காக ஊற்றுகிறேன்.

இறைவன் சித்தத்துக்கு எதிர் கேள்வி கேட்காமல் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்கு எங்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சி இது.

Blind obedience."

"'அப்படியானால் குழந்தை இயேசுவைக் காப்பாற்றுவதற்காகக் கூட்டிக்  கொண்டு போகவில்லையா?"

"நோக்கம் அதுதான். ஆனால் வழிமுறை? தனது விருப்பப்படி எல்ல, இறைவன் விருப்பப்படி.

நம்மை வழிநடத்துபவர் இறைவன் தான்.

நீ ஏன் இந்தியாவில் பிறந்தாய்?"

"'நான் பிறக்கவில்லை, படைத்தவர் என்னை இங்கே படைத்திருக்கிறார்."

"Correct. படைத்தவர் சித்தப் படி பிறந்த நீ படைத்தவர் சித்தப்படி தான் வாழ வேண்டும். யோசேப்பு அதைத்தான் செய்தார்.

எகிப்துக்கு போகச் சொன்னபோது போனார்,

 வான தூதர் குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். 

சென்றார்.


அங்கிருந்து கலிலேயாவுக்குப் போகச் சொன்னார்.

போனார்.

அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்கு குடியிருந்தார்.''

"' ஆக இறைவன் சித்தம் என்னவென்று தெரிந்தபின் அதன்படி தான் செயல்பட வேண்டும், நமது விருப்பப்படி அல்ல

ஆனால் இதுதான் இறைவன் சித்தம் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது?"

"இயேசு மூன்று வழிகளில் நம்மோடு இருக்கிறார்.

1. இறைவன் எங்கும் இருக்கிறார், ஆகவே நம்மோடும் இருக்கிறார்.

2. திவ்ய நற்கருணையில் நம்மோடு இருக்கிறார்.

3. நமது பாவங்களை மன்னிக்கவும், நமக்கு ஆண்டவரை உணவாகத் தரவும், நமக்கு நற்செய்தியை அறிவிக்கவும் அதிகாரம்  பெற்ற நமது பங்குத் தந்தை உருவிலும் 
நம்மோடு இருக்கிறார்.

ஆன்மீக வாழ்வில் நமது பங்குத் தந்தைதான் நமது ஆன்மீக வழிகாட்டி. 

உடல் சார்ந்த சுகமில்லாதவர்கள் எப்படி ஒரு குறிப்பிட்ட மருத்துவரிடம் தங்கள் உடலை பரிசோதித்துக் கொள்கிறார்களோ 

அதேபோல  நமது ஆன்மீக காரியங்கள் பற்றி அடிக்கடி பங்குத் தந்தையிடம் பேச வேண்டும்.

அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்பவர்களுக்கு இது எளிது.

அவர் காட்டும் வழி நமக்கு இறைவன் சித்தம்.

பங்குக் குருவின் ஆலோசனைப் படி ஆன்மீக வாழ்வு வாழ்பவர்களுக்கு மீட்பு உறுதி.

திருச்சபையின் போதனைப் படி பைபிள் வசனங்களை வாசித்து தியானிப்பவர்களுக்கு அந்த வசனங்கள் காட்டும் வழியே இறைவன் சித்தம்."

இரண்டு படகுகளில் கால்களை வைத்துக் கொண்டு கடலில் பயணிக்க முடியாது.

உலகப் படகை முற்றிலும் விட்டு விட்டு இராயப்பர் படகுக்குள் முற்றிலும் வந்து விட்டாலே நாம் இறைவன் சித்தப்படி தான் நடப்போம்.

"விண்ணகத் தந்தையே, விண்ணக வாசிகள் உமது 
சித்தப்படி நடப்பது போல நாங்களும் நடக்க உமது அருள் வரம் தாரும்."

லூர்து செல்வம்.

Tuesday, February 25, 2025

" பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்."(லூக்கா நற்செய்தி 6:37)

"பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்."
(லூக்கா நற்செய்தி 6:37)

நீதி மன்றத்தில் நீதிபதி எப்படி ஒருவர் குற்றவாளியா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறார்?

சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் .

சாட்சிகளின் வாக்குமூலம் தவறாக இருந்தால் தீர்ப்பும் தவறாகிவிடும்.

நாம் நீதிபதிகள் அல்ல. யாரையும் பற்றி விசாரிக்கவோ, தீர்ப்பளிக்கவோ நமக்கு அதிகாரம் இல்லை.

ஆனால் அநேக சமயங்களில் நமக்கு இல்லாத அதிகாரத்தை நாமே கையில எடுத்துக் கொள்கிறோம்.

சாட்சிகள் செய்ய வேண்டிய வேலையையும் நாமே செய்து கொள்கிறோம்.

நாமே தீர்ப்பையும் அளித்துக் 
கொள்கிறோம்.

நம்முடைய அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டு செயல்படுவது சட்டப்படி குற்றம்.

நீதிமன்றத்தில் சாட்சி கண்ணால் பார்த்ததன் அடிப்படையில் தான் சாட்சி சொல்ல வேண்டும்.

நாம் மற்றவர்ளுடைய வெளியரங்க நடவடிக்கைகளை மட்டும்தான் பார்க்க முடியும்.

உள்ளரங்கத்தை நம்மால் பார்க்க முடியாது.

ஆனால் நாமே யூகித்துக் கொள்கிறோம், 

நமது யூகம் சரி என்று கூற முடியாது.

ஒருவன் மதுக்கடை இருக்கும் தெரு வழியே போனாலே அவனைக் குடிகாரன் என்று தீர்மானித்து விடுகிறோம்.

ஆனால் யூகிக்கவோ, தீர்ப்பிடவோ நமக்கு அதிகாரம் இல்லை.

நாமே கடைக்கும் தெருவுக்கும் முடிச்சி போட்டு வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் யூகிக்கிறோம்.

ஒருவன் குற்றவாளியா, நிரபராதியா என்று தீர்மானிக்க வேண்டியது கடவுள் மட்டுமே.

ஒருவன் மரணிக்கும் போது அவனது ஆன்மா என்ன நிலையில் இருந்தது அவருக்கு மட்டுமே தெரியும்.

ஒருவரது நற்குணங்களை யூகிக்கலாம், அதைப் பற்றி பேசலாம், தப்பில்லை.

எதிர்மறைக் குணங்களை யூகிக்கவோ, அவற்றைப் பற்றி மற்றவர்களிடம் பேசவோ நமக்கு உரிமை இல்லை.

ஒருவரின் பெயரைக் கெடுப்பது எளிது, ஆனால் அதைச் சரி செய்வது மிகவும் கடினம்.

தண்ணீரைக் கொட்டுவது எளிது, கொட்டியதை அள்ளுவது முடியாத காரியம்.

பேப்பரைக் கிழித்துப் போடுவது எனது , ஒட்டுவது கடினம்.

ஒருவரது பெயரைக் கெடுத்தால் அதன் விளைவுகளுக்கு நாம்தான் பொறுப்பு.

இறுதி நாளில் இயேசுவின் தீர்ப்பு நமக்குச் சாததமாக இருக்க வேண்டுமென்றால்,

வாழும்போது நாம் யாரையும் பாதகமாகத் தீர்ப்பிடக் கூடாது.

லூர்து செல்வம்.

Monday, February 24, 2025

உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். (லூக்கா நற்செய்தி 6:28)


உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். 
(லூக்கா நற்செய்தி 6:28)

நாம் உலகில் வாழ்ந்தாலும் உலகத்துக்காக வாழவில்லை.

ஆவி (Spirit)யாகிய இறைவன் சடப்பொருளாலான உலகைப் படைத்தார்.

உலகிலுள்ள மண்ணால் ஒரு உருவம் செய்து, அதில் தன் உயிர் மூச்சை ஊதி மனிதனைப் படைத்தார்.  மனிதன் இரண்டு எதிர்ப்பொருட்களின் சங்கமம்.

சடப்பொருள் + ஆவிப் பொருள்.

மண்ணிலிருந்து எடுக்கப் பட்ட உடல் மண்ணுக்கே திரும்பி விடும்.    விண்ணகக் கடவுளின் மூச்சிலிருந்து உருவான ஆன்மா விண்ணுக்கே திரும்ப வேண்டும்.

எதிர் எதிரான இரண்டு பொருட்கள் இணைந்து,

எதிர் எதிர் பக்கம் செல்லவிருப்பதால் 

அதன் செயல் பாடுகளும் எதிர் எதிராகத் தான் இருக்கின்றன. 

உலகில் பாவம் பிறந்ததால் உலகம் = தீமையின் உருவகம்.

விண்ணிலிருந்து மீட்பு வந்ததால்
விண்ணகம் = நன்மையின் உருவகம்.

உலகம் தீமையைத் தான் செய்யும், நன்மை செய்தவர்களுக்கும் கூட அது தீமையையே செய்யும்.

நம் ஆண்டவர் சென்றவிடமெல்லாம் நன்மையையே செய்தார், உலகம் அவரைச் சிலுவையில் அறைந்தது.


விண்ணகம் நன்மையை மட்டுமே செய்யும், தீமை செய்பவர்களுக்கும் அது நன்மையையே செய்யும். நம் ஆண்டவர் அவரைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார்.


கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்-- இதுதான் உலகம்.

தருவதைக் கொடு.

அன்பைத் தந்தால் அன்பைக் கொடு.

அடி தந்தால் அடி  கொடு.

"ஏன்டா அவனைத் திட்டினாய்?"

."அவன் என்னைத் திட்டினான். நான் அவனைத் திட்டினேன்."

பழிக்குப் பழி வாங்குவது உலகம்.

இது உடலைச் சார்ந்தது.

ஆன்மா விண்ணிலிருந்து வந்து விண்ணுக்கே செல்ல வேண்டியது.

தீமைக்கு நன்மை செய்.
இதுதான் விண்ணக விதி

அடித்தால் அடியை வாங்கிக் கொண்டு பதிலுக்கு அரவணைப்பைக் கொடு.

திட்டினால் பதிலுக்கு அன்பாய்ப் பேசு.

யாராவது சாபம் போட்டால், அவனை ஆசீர்வதி.

நாம் பாவம் செய்த போது பதிலுக்கு நம்மை மீட்க வந்த இயேசு தந்த விதி இது.

தீமைக்கு நன்மை என்ற 
விண்ணக விதிப்படிதான் இயேசு சொல்கிறார்,

"உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்."

"என்னைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தேன்,

நீங்களும் உங்களுக்குத் துன்பம் கொடுப்பவர்களை மன்னியுங்கள்.

நான் அவர்களுக்காகத் தந்தையிடம் பரிந்து பேசினேன்.

நீங்களும் உங்களுக்குத் தீமை செய்பவர்களுக்காக தந்தையிடம் செபியுங்கள்."

நாம் விண்ணிலிருந்து இறங்கி வந்த இயேசுவின் விருப்பப்படி செயல்படுகிறோமா?

அல்லது,

உலகினர் செயல்படுவது போல செயல்படுவோமா?

நம்மைத் துன்புறுத்துவோர்க்காக,
நமது ஆலயங்களை எரிப்பவர்களுக்காக,
நாம  உரிமைகளை பறிப்பவர்களுக்காக

இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோமா?

அன்று இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது அவரை அறைந்தவர்களை மன்னித்தது போல 

இன்று நம்மை துன்புறுத்துவோரை மன்னிக்கிறோமா?

சிந்திப்போம்.

நம் ஆண்டவர் அறிவுரைப் படி செயல்படுவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, February 19, 2025

ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? (மாற்கு நற்செய்தி 8:36)



                                           

ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? 
(மாற்கு நற்செய்தி 8:36)


"For how does it benefit a man, if he gains the whole world, and yet causes harm to his soul?"(Mark 8:36)


புனித சவேரியாரை வேத போதகராக மாற்றிய இறைவாக்கு:

"மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் அவனுக்கு வரும் பயன் என்ன?"

என்ற இறை வசனம்தான் பொது மொழி பெயர்ப்பில்,


"ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?''

"ஆன்மாவை"  "வாழ்வையே" யாக மாறியிருக்கிறது.

"ஆன்மா" என்ற வார்த்தைக்கு ஒரு பொருள்தான் இருக்கிறது. இறைவனால் படைக்கப் பட்ட நமது ஆன்மா.

பாவத்திலிருந்து ஆன்மாவை மீட்கவே இறை மகன் மனுமகனாகப் பிறந்தார்.

மீட்கப் பட வேண்டியது நமது ஆன்மா.

ஆன்மாவை இழந்தால் = நாம் மீட்புப் பெறாவிட்டால்.

நாம் மீட்புப் பெறாவிட்டால், இந்த உலகத்தையே வென்று அதை நமதாக்கிக் கொண்டாலும் அதில் எந்தப் பயனும் இல்லை.
                   
                       ***

ஆனால் வாழ்வு என்றால் இவ்வுலக வாழ்வையும் குறிக்கலாம்,

மறுவுலக நிலை வாழ்வையும் குறிக்கலாம்.

மொழி பெயர்த்தவர்கள் 
"நிலை வாழ்வையே இழப்பாரெனில்"

என்றாவது மொழி பெயர்த்திருக்கலாம்.


உலகையெல்லாம் வெல்வதை விட தாங்கள் வாழ்வதே மேல் என்று இவ்வுலக வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்
இந்த வசனத்தைத் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்வர்.

இவ்வுலக வாழ்வை விட நிலை வாழ்வே மேல் என நம்புபவர்களுக்கு


"மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் அவனுக்கு வரும் பயன் என்ன?"

என்ற பழைய மொழி பெயர்ப்புதான் ஆதாரம்.


"I will put enmities between you and the woman, between your offspring and her offspring. She will crush your head" (Genesis 3:15)

"உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்; அவள் உன் தலையை  நசுக்குவாள்."
(ஆதியாகமம். 3:15 )

இது பழைய மொழிபெயர்ப்பு

உனக்கும் = சாத்தானுக்கும்.
பெண் = மரியாள்.
தலையை நசுக்குவாள் = உன்னால் அவளைத் தீண்ட முடியாது, அதாவது, பாவம் அவளை அணுகாது.

அன்னை மரியாள் சென்மப் பாவ மாசின்றி உற்பவித்தாள் என்பது இந்த இறை வசனம் ஆதாரம்.

ஆனாது பொது மொழிபெயர்ப்பில்,

உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" என்றார். 
(தொடக்கநூல் 3:15)

இதில் அவள் உன் தலையை நசுக்குவாள் என்ற வார்த்தைகள் இல்லை.


"நானே அமலோற்பவம்" என்ற அன்னை மரியாளின் வார்த்தைகளை நம்பாத பிரிவினை சபையாருக்கு பொது மொழிபெயர்ப்பு ஆதாரம்.

இப்போது சொல்லுங்கள்

பொது மொழி பெயர்ப்பு யாரைத் திருப்திப்படுத்த?

இது மட்டுமல்ல,

கபிரியேல் தூதரின் 

"அருள் நிறைந்தவரே வாழ்க"

என்ற வாழ்த்துரை

"அருள் மிகப் பெற்றவரே வாழ்க"

என்று மாற்றப் பட்டுள்ளது.


இதுவும் மரியாளின் மாசின்மையை நம்பாதவர்களுக்குச் சாதகமான மொழி பெயர்ப்பு.

கத்தோலிக்கர்களின் மிக முக்கியமான விசுவாச உண்மைக்கு பொது மொழி பெயர்ப்பு உலை வைத்திருக்கிறது.

புதுமை விரும்பிகளுக்கு ஒரு வேண்டுகோள்,

மாற்றங்கள் நமது விசுவாசத்தை பலப் படுத்துபவையாக இருக்க வேண்டும். விசுவாசம் குறைவதற்குக் காரணமாக இருக்கக் கூடாது.

நாவில் வாங்கிய நற்கருணை நாதரை கையில் வாங்குவதால் நற்கருணை பக்தி வளர்ந்து விடாது,

முழந்தாள் படியிட்டு ஆராதித்த நற்கருளை நாதரை தலை குனிந்து ஆராதிப்பதால் நற்கருணை பக்தி வளர்ந்து விடாது.

பீடத்தின் மையத்தில் இருந்த நற்கருணை நாதரை ஒரு பக்கத்துக்கு மாற்றுவதால் நற்கருணை பக்தி வளர்ந்து விடாது.

நமது ஆன்மீக வாழ்வின் மையம் திவ்ய நற்கருணைதான் என்பதில்
எந்த மாற்றமும் இல்லை.

லூர்து செல்வம்.

Tuesday, February 18, 2025

வியாழன்20. ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், "என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்று கடிந்துகொண்டார். (மாற்கு நற்செய்தி 8:33)

வியாழன்20.                                        

ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், "என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்று கடிந்துகொண்டார். 
(மாற்கு நற்செய்தி 8:33)

"ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று இயேசு சீடர்களைப் பார்த்து கேட்டபோது

சீமோன் பேதுரு,  "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார். 

அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். 

ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். 

எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."

என்று சொன்ன அதே இயேசு அதே சீமோனைப் பார்த்து,
 
"என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்."

என்று சொல்கிறார்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னால்

இயேசுவின் பார்வையில் 
பேறுபெற்றவனாக இருந்த சீமோன் எப்படி திடீரென்று சாத்தானாக மாறினார்?

இயேசு மெசியா. 

மெசியா உலகுக்கு வந்ததன் நோக்கம்

 பாடுகள் பட்டு,
 சிலுவையில் அறையப்பட்டு, மரித்து 
மனிதர் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்து 
அவர்களை பாவத்திலிருந்து மீட்டு நித்திய பேரின்ப வாழ்வுக்கு அழைத்துச் செல்ல.

இராயப்பர் இயேசுவை மெசியா என்று ஏற்றுக் கொண்டதால் அவரைப் பேறு பெற்றவர் என்று அழைத்தார்.

ஆனால் இயேசு பாடுகள் படக் கூடாது என்று தடுத்ததால் அவரைச் சாத்தான் என்று அழைத்தார்.

மனிதர் மீட்பு பெறக் கூடாது என்று,  அவர்களைப் பாவத்தில் விழச் செய்த சாத்தான் தானே விரும்புகிறது!

இயேசு இராயப்பரைப் பற்றி கூறிய வார்த்தைகள் அவருடைய சீடர்களாகிய நமக்கும் பொருந்தும்.

நாம் இயேசுவை உலகின் பாவங்களைப் போக்க வந்த மெசியா என்று ஏற்றுக் கொண்டு தான் திருமுழுக்கு பெற்று, கிறிஸ்தவர்களாக மாறினோம்.

அந்த வகையில் கிறிஸ்தவர்களாகிய நாம் பேறு பெற்றவர்கள்.

ஆனால் மீட்பு பெறும் வகையில் நாம் வாழாவிட்டால், நாம் சாத்தானுக்குச் சமமானவர்கள்.

இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக் கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள்.

அதன்படி வாழாதவர்கள் சாத்தான்கள்.

தனது பாவத்தினால் விண்ணகத்துக்குரிய நிலையை இழந்து பாதாளத்தில் வீழ்ந்தது சாத்தான்.

தன்னைப் போலவே மனிதர்களும் விழ வேண்டும் என்று அது விரும்புகிறது.

அன்று தனது சோதனையால் நமது முதல் பெற்றோரைப் பாவத்தில் விழச் செய்தது போல நமக்கும் சோதனைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

நாம் பலகீனமான மனிதர்கள்.

சோதனையில் விழாமலிருக்க நமக்கு உதவும்படி அருள் வரம் கேட்டு அடிக்கடி விண்ணகத் தந்தையிடம் செபிக்க வேண்டும்.

பாவத்தில் விழாமலிருந்தால் மட்டும் போதாது.   புண்ணியத்தில் வளர வேண்டும்.

அதற்காக நற்செயல்கள் செய்ய வேண்டும்.

நற்செயல்கள் செய்யவும் இறைவன் அருள் வேண்டும்.

அதற்காகவும் தந்தையிடம் வேண்ட வேண்டும்.

நாம் கர்ப்பித்த செபம் சொல்லும் போது முதலில்

 "எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்"

என்று வேண்டி விட்டு,

"தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்."

என்று வேண்டுகிறோம்.

இரண்டாவது வேண்டுதலை கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் அதற்குள் வேறொரு வேண்டுதலும் இருப்பது புரியும்.

வீட்டுக்கு வந்தவரிடம் வீட்டின் தலைவி,

"சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா?" என்று கேட்கிறாள்.

"திடப்பொருள் எதுவும் வேண்டாம்"
என்று வந்தவர் சொல்கிறார்.

அப்படியென்றால் என்ன அர்த்தம்?

" திரவமாக கொண்டு வாருங்கள்" என்று தானே அர்த்தம்.

"தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்."

தீமைக்கு எதிர்ப்பதம் நன்மை.

இந்த வேண்டுதலில் அடங்கியுள்ள மற்றொரு வேண்டுதல்

" நாங்கள் தீமை செய்யாமல் நன்மை செய்ய வரம் தாரும்."

அதாவது,

"நான் மற்றவர்களுக்கு நன்மை, அதாவது, உதவிகள் செய்ய வேண்டிய அருள் வரம் தாரும்."

மற்றவர்களுக்கு உதவி செய்வது தான் நற்செயல், ஆத்மாவுக்கு புண்ணியம் சேர்க்கும் செயல்.


நற்செயல்கள் இல்லாத விசுவாசம் செத்த விசுவாசம் என்பது இறைவாக்கு.

விவசாயி நிலத்தைப் பண்படுத்தினால் மட்டும் போதாது, பயிரேற்றவும் வேண்டும்.

விசுவாசி பாவம் செய்யாதிருந்தால் மட்டும் போதாது,   புண்ணியம் செய்ய வேண்டும்.

நாம் மணிக்கணக்காக வார்த்தைகளை அடுக்கிச் செய்யும் பெரிய செபங்களை விட

அளவில் சிறிய, ஆனால் அர்த்தம் பொதிந்த 'கர்த்தர் கற்பித்த  செபமே மிகச் சிறந்தது.

1. இறைபுகழ்.
2. உணவு வேண்டுதல்.
3. பாவமன்னிப்பு கேட்டல்.
4. பாவத்தில் விழாமலிருக்க பாதுகாப்பு வேண்டுதல்.
5. புண்ணியங்கள் செய்ய வரம் கேட்டல்.

முழுமையான ஆன்மீக வாழ்வுக்குத் தேவையான வரங்கள் அந்தனையையும் கேட்கிறோம்.

வரங்கள் அத்தனையையும் ஆண்டவர் தருவார்.

அவற்றை நாம் வாழ்ந்தால் பேறு பெற்றவர்கள்.

வாழாவிட்டால்?

இராயப்பரிடம் ஆண்டவர் கூறிய வார்த்தைகளை நினைவில் கொள்வோம்.

பேறு பெற்றவர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, February 17, 2025

புதன்19. பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். (மாற்கு நற்செய்தி 8:34)

புதன்19.                                                    

பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். 
(மாற்கு நற்செய்தி 8:34)

நாம் பிறந்து வளர்கின்ற அதே உலகில் தான் இயேசுவும் பிறந்து வளர்ந்தார். 

நாம் நடக்க வேண்டிய வாழ்க்கைப் பாதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

அவர் நடந்த பாதை வழியாகத் தான் நாம் நடக்க வேண்டும் என்பது அவர் விருப்பம்.

அவர் நடந்த பாதை சிலுவைப் பாதை.

சிலுவைப் பாதை தன்னலம் துறந்த பாதை.

அவர் கடவுள். அளவில்லாத வல்லமை உள்ளவர். பேரின்ப நிலையில் வாழ்பவர். துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

ஆனால் நம்மை மீட்பதற்காக மனிதனாய்ப் பிறந்த போது தனது இறைத் தன்மையில் உள்ள இத்தனை அம்சங்களையும் மனித சுபாவத்தில் துறந்தார்.

மனித சுபாவத்தில் சாதாரண மனித சக்தியோடு தான் வாழ்ந்தார். துன்பங்களை அனுபவிக்கும் உடலோடு வாழ்ந்தது மட்டுமல்ல, துன்பங்களை அனுபவித்தார்.

அவருக்கு மனித சுபாவத்தில் நம்மைப் போல துவக்கமும் (பிறப்பும்) முடிவும் (இறப்பும்) இருந்தது.

ஒரே வாக்கியத்தில்

தன்னலம் துறந்து, தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு நடந்தார்.

சர்வவல்வ கடவுள் வல்லமை இல்லாத மனிதனாய்ப் பிறந்தார்.

பேரின்ப வாழ்க்கை வாழ்பவர்
துன்ப வாழ்க்கை வாழ மனிதனாய்ப் பிறந்தார்.

ஆதியும் அந்தமும் இல்லாத கடவுள் பிறப்பும் இறப்பும் உள்ள மனிதனாய்ப் பிறந்தார்.

இவையெல்லாம் நமக்காக.

"கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. 

ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, 

சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். 
(பிலிப்பியர் 2:6-8)

"உண்டாகுக" என்ற ஒரே  வார்த்தையால் உலகை உண்டாக்கிய கடவுளுக்கு,

அவர் நினைத்தால் "அழிக" என்றே ஒரே வார்த்தையால் அழிக்கவும் முடியும்.

ஆனால் அதே கடவுள் பிலாத்துவின் அரண்மனையில் அடிக்கப்பட்ட அடிகளையும், தலையில் வைத்து அடிக்கப்பட்ட முள்முடியையும், செய்யப்பட்ட அவமானங்களையும், துப்பப்பட்ட எச்சிலையும் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டார்,

யாருக்காக?

நமக்காக

நாம் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக நமது நலனைத் துறந்து சிலுவையாகிய துன்பங்களைச் சுமக்கக் கூடாதா?

நமது சிலுவையை நாம் சுமந்து கொண்டு அவரைப் பின் தொடர்ந்தால்தான் நம்மைத் தன் சீடராக ஏற்றுக் கொள்வார்.

சாதாரண தலைவலி வந்தால் கூட அதைத் தாங்கிக் கொண்டு அதை அவருக்கு ஒப்புக் கொடுக்க மனதில்லாதவர்கள் எப்படி அவரது சீடராக இருக்க முடியும்?

சிறு நோய் நொடி வர்தாலும் மருத்துவ மனைக்கு ஓடும் நாம் ஒரு முறையாவது அதை கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கக் கோவிலுக்குப் போயிருக்கிறோமா?

குணமாக்கும்படி கேட்க கோவிலுக்கு போயிருக்கிறோம், 
ஒப்புக் கொடுக்க போயிருக்கிறோமா?

ஒரு ஐந்து நிமிடமாவது வலியை ஆண்டவருக்காக தாங்கிக் கொண்டிருக்கிறோமா?

துன்பங்களை தேடிப் போக வேண்டாம், வரும் துன்பங்களை ஏற்றுக் கொள்ளலாமே.

எப்போதாவது வகுப்பில் நாம் செய்யும் தவறுக்காக ஆசிரியர் நம்மை அடிக்கும் போது ஏற்படுகின்ற வலியை நமது பாவத்திற்குப் பரிகாரமாக ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறோமா?

என்ன துன்பம் வந்தாலும் அதை தனது பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசுவிடம் கொடுப்பவன்தான் அவருடைய உண்மையான சீடன்.

துன்பமே வேண்டாம் என்று சொல்பவன் இயேசுவின் சீடனாக இருக்க முடியாது.


இயேசு சிலுவையைத் தேடி வந்தார். நாம் தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை.

வரும் சிலுவைகளை மகிழ்ச்சியுடன் சுமந்தாலே போதும்.

லூர்து செல்வம்.

Sunday, February 16, 2025

செவ்வாய்18. 'மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்."(லூக்கா நற்செய்தி 6:22)

செவ்வாய்18.                                        

'மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்."
(லூக்கா நற்செய்தி 6:22)

இன்றைய காலக் கட்டத்தில் நமது நாட்டில் மணிப்பூர், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தப் படுவதைக் கண்டு மிகவும் வருந்துகிறோம்.

ஆண்டவர் சொல்கிறார்,

"மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்."

அதாவது இயேசுவின் சீடர்கள் அவர் பொருட்டு துன்புறுத்தப் படும் போது நாம் மகிழ வேண்டும்,
ஏனெனில் அவர்கள் பாக்கியவான்கள்.

துன்பப் படுத்துபவர்களை நினைத்து அல்ல,

துன்புரும் நம்மை நினைத்து

துன்புறுத்துவோருக்காக 
வேண்டிக் கொள்ள வேண்டும். நம்மை நினைத்து
மகிழ வேண்டும்.

உலகப் பார்வை வேறு, ஆன்மீகப் பார்வை வேறு.

ஐரோப்பாவில் எந்தெந்த நாடுகளில் கிறிஸ்தவர்கள் இரத்தம் சிந்தும் அளவுக்குத் துன்புறுத்தப் பட்டார்களோ

அந்த நாடுகளில் கிறித்தவம் வேகமாகப் பரவியது.

"வேத சாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து" என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்போது நம்மை திருச்சபையின் எதிரிகள் நம்மை எந்த அளவுக்கு துன்பப்படுத்துகிறார்களோ

 அந்த அளவுக்கு எதிர்காலத்தில் நாம் வேகமாக வளர்வோம்.

அன்று இயேசு பாடுகளுக்கும், சிலுவை மரணத்துக்கும் தன்னைத் தானே கையளித்தார்.

தன்னைத் தானே கையளித்திருக்காவிட்டால் அவரை எதிரிகளால் கைது செய்திருக்க முடியாது.

கையளித்தது மட்டுமல்ல, தனது சிலுவை மரணத்துக்குக் காரணமாக இருந்தவர்களை முழு மனதோடு மன்னித்தார்..

மன்னிப்பை அனுபவித்த, இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்திய செந்தூரியனும், அவனைச் சேர்ந்தவர்களும

 "இவர் உண்மையாகவே இறைமகன்" என்றார்கள். 

செந்தூரியன் மனம் திரும்பி நற்செய்தி அறிவிக்கும் பணியை ஏற்றுக் கொண்டார்.

திருச்சபையின் விரோதிகள் நன்மை துன்புறுத்தும் போது நமது எதிர் வினை (Reaction) மன்னிப்பாக இருந்தால் ஒரு நாள் அவர்கள் மனம் திரும்புவார்கள்.

தீமையை நன்மையால் வெல்லலாம்.

இன்று நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது இந்தியாவில் கிறிஸ்தவத்துக்கு எதிர் காலம் பிரகாசமாக இருக்கும் போல் தோன்றுகிறது.

முதல் நூற்றாண்டில் ரோமை மன்னர்கள்  கிறித்தவர்களைத் துன்புறுத்தினார்கள்.

இன்று ரோம் நகர்தான் திருச்சபையின் தலைநகராகத் திகழ்கிறது.

திருச்சடையே "ரோமன் கத்தோலிக்க திருச்சபை" என்று அழைக்கப் படுகிறது.

நாம் நம்மை மதத்தின் அடிப்படையில் துன்புறுத்துபவர்களுக்காக வேண்டிக் கொள்வோம்.

அவர்களும் நம்மோடு நித்திய பேரின்பத்தில் பெறுவார்கள்.

லூர்து செல்வம்

Saturday, February 15, 2025

திங்கள் 17. இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். (லூக்கா நற்செய்தி 6:21)

திங்கள் 17.                                               

இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். 
(லூக்கா நற்செய்தி 6:21)

கடவுள் நம்மை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகப் படைத்தாரா, அழுது கொண்டிருப்பதற்காகப் படைத்தாரா?

நமது உலக வாழ்வின் நோக்கம் வாழ்வின் இறுதியில் விண்ணகத்திற்குள் நுழைய நம்மையே தயாரிப்பதுதான்.

விண்ணக வாழ்க்கை மகிழ்ச்சியும், பேரின்பமும் நிறைந்தது.

விண்ணக பேரின்ப வாழ்வுக்காக படைக்கப் பட்டிருக்கும் நம்மைப் பார்த்து ஏன் இயேசு,

"அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்"  என்கிறார்?

எப்போதெல்லாம் அழுகை வரும்?

எதற்காகவாவது வருத்தப் படும்போது அழுகை வரும்.

துன்பப் படும் போது அழுகை வரும்.


எதையாவது இழக்கும் போது அழுகை வரும்.

உலகில் அநீதியைப் பார்க்கும் போது அழுகை வரும்.

பரிசுத்தமானவர்களால் மட்டும் விண்ணகத்துக்குள் நுழைய முடியும்.

பாவிகளால்?

பாவ நிலையில் விண்ணகத்துக்குள் நுழைய முடியாது.

அவர்கள் மரிக்கு முன் பாவ மன்னிப்பு பெற்றால் விண்ணகத்துக்குள் நுழைய முடியும்.

பாவ மன்னிப்பு பெற வேண்டுமென்றால் பாவங்களுக்காக மனத்தாபப்
பட வேண்டும்.

அதாவது, வருந்த வேண்டும்.

பாவங்களுக்காக வருந்தி அழுதால் பாவ மன்னிப்பு கிடைக்கும்.

பாவ மன்னிப்பு கிடைத்தால் விண்ணகம் செல்லலாம்.

அதனால் செய்த பாவங்களுக்காக அழுபவர்கள் பேறு பெற்றவர்கள்.

ஏனெனில் அவர்கள் விண்ணகத்தில் சிரித்து, மகிழ்ந்து வாழ்வார்கள்.

              **********


துன்பப்படும் போதும் அழுகை வரும். ஆனால் அந்த அழுகையினால் ஆன்மீக ரீதியாக என்ன இலாபம்?

நமக்கு மீட்பு எப்படிக் கிடைத்தது?

இயேசு நமக்காகப் பாடுகள் பட்டு,
அதாவது, துன்பப்பட்டு, 
மரித்ததனால்.

இயேசு அனுபவித்த துன்பங்கள் தான் நமக்கு மீட்பைப் பெற்றுத் தந்தன.

இயேசு தனது துன்பங்களை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக விண்ணகத் தந்தைக்கு ஒப்புக் கொடுத்தார்.

நாமும் நமது துன்பங்களையும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக விண்ணகத் தந்தைக்கு ஒப்புக் கொடுத்தால்

- நாம் பட்ட துன்பங்கள் விண்ணகத்தில் பேரின்பமாக மாறும்.

நமது துன்பங்கள் நமக்கு விண்ணக வாழ்வைப் பெற்றுத் தரும் ஆசீர்வாதங்கள்.

               **********


எதையாவது இழக்கும் போது அழுகை வரும்.

ஒன்றைப் பெற வேண்டுமானால் ஒன்றை இழக்க வேண்டும்.

முழுத் தேங்காயை இழக்காமல் சட்ணி வைக்க முடியாது.

விதை தன்னை இழந்தால் தான் மரமாக முடியும்.

கையிலுள்ள காசை இழக்காமல் கடையில் பொருள் வாங்க முடியாது.

இவ்வுலகப் பொருட்கள் மீதுள்ள பற்றை இழக்காமல் விண்ணகத்துக்குள் நுழைய முடியாது.

அருவியில் குளிப்பதற்காகக் குற்றாலத்துக்குப் போயிருக்கிறோம்.

அருவிக் குளிப்பு எவ்வளவு ஆனந்தமாக இருந்தாலும் அருவியை விட்டு வெளியேறி வீட்டுக்கு வரவேண்டும்.

வீடுதான் நிரந்தர உறைவிடம், குற்றால அருவி அல்ல.

அருவியை இழக்காவிட்டால் வீட்டை இழந்து விட வேண்டியது தான்.

உலக வாழ்வைப் பொறுத்த மட்டில் என்றாவது ஒரு நாள் அதை இழந்து தான் ஆக வேண்டும்.

வாழும் போதே பற்றின்மையைப் பயன் படுத்தி, உலக இன்பங்களை இழந்து வாழ்ந்தால் விண்ணகப் பேரின்பம் உறுதி.

                      *****

உலகில் அநீதியைப் பார்க்கும் போது அழுகை வரும்.

நீதி x அநீதி

உலகில் நாட்டின் சட்டங்களை மீறுபவர்களை நீதி மன்றங்கள் விசாரிக்கின்றன.

அப்படியானால் சட்டப்படி வாழ்வதுதான் நீதி.

ஆன்மீகத்தில் இறைவன் விருப்பப்படி வாழ்வதுதான் நீதி.

இறைவனுடைய விருப்பம் அவருடைய கட்டளைகளில் அடங்கியிருக்கிறது.

இறைவன் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்பவன் நீதிமான்.

நாம் நீதிமான்களாக இருந்தால்,

 அதாவது, 

இறைவனது கட்டளைகளை ஒழுங்காகக் கடைபிடித்து வாழ்பவர்களாக இருந்தால்,

கட்டளைகளை மீறி வாழும் மற்றவர்களைப் பார்க்கும் போது அழுகை வரும். 

ஏன்?

ஏனெனில் அவர்கள் தங்கள் நடத்தையால் நமது அன்பு தந்தையை மனம் நோகச் செய்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களை நாம் பார்த்தால் 

எல்லோரையும் படைத்த,

 எல்லோரையும் அளவு கடந்து அன்பு செய்கிற 

விண்ணகத் தந்தையை மனம் நோகச் செய்யக் கூடாது என்று

 அன்புடன் எடுத்துரைக்க வேண்டும்.

அவர்களை நமது தந்தையிடம் அழைத்து வர வேண்டும்,

அதாவது,

அவர்களை மனம் திருப்ப வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது நமது அழுகை சந்தோசமாக மாறும்.

அவர்களும், நாமும் விண்ணகத்தில் தந்தையின் மகிழ்ச்சியில் பங்கு பெறுவோம்.

லூர்து செல்வம்.

Friday, February 14, 2025

ஞாயிறு16. "இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை; "ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே."(லூக்கா நற்செய்தி 6:20)

ஞாயிறு16.                                                

"இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை; "ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே."
(லூக்கா நற்செய்தி 6:20)

ஏழைகள்

இயேசுவின் நற்செய்தியை கேட்பதற்காக குழுமியிருந்த பெரும் திறளான மக்கள் கூட்டத்தை பார்த்து அவர் கூறியது 

':ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே."

இதைக் கூறும்போது அவர் தன் சீடர்களைப் பார்க்கிறார்,

தான் கூறியதற்கு  அவர்கள் உதாரணம் என்ற பொருளில்.

ஏழைகள் என்றால் இல்லாதவர்கள். தங்களிடம் என்ன இருந்ததோ அதை விட்டு விட்டு இயேசுவைப் பின் பற்றியவர்கள் அவர்கள் .

உதாரணத்துக்கு மீனவர்களான சீமோன், அந்திரேயா, யாக்கோபு, அருளப்பர் ஆகியோர் தங்கள் வலைகளை விட்டு விட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள். 

உலக ரீதியாக பொருள் உள்ளவர்களை செல்வந்தர் எனவும் பொருள் இல்லாதவர்களை ஏழைகள் எதுவும் அழைப்போம்.

ஆனால் ஆன்மீகத்தில் இல்லாதவர்கள் என்றால் பற்று இல்லாதவர்கள்.

 ஒருவனிடம் பொருள் இருக்கும், ஆனால் அதன் மீது பற்று இருக்காது.

அதைப் பொருள் என்பதற்காக விரும்ப மாட்டான். கடவுள் அதை அவனுக்கு எதற்காகக் கொடுத்திருக்கிறாரோ அதற்காகப் பயன்படுத்துவான்.

இன்னொருவனிடம் பொருளும் இருக்காது பற்றும் இருக்காது.

இரு வகையினரும் ஏழைகள் தான்.

பொருள் மீது பற்று இல்லாதவர்களுக்கு மட்டும் இறைவன் மீது உண்மையான பற்று இருக்கும்.

அவர்கள் இறைவனைத் தங்கள்  அரசராக ஏற்றுக் கொள்கிறார்கள்:

இதைத்தான்  இயேசு,

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே."

உலகாட்சிக்கும், இறையாட்சிக்கும் என்ன வேறுபாடு?

உலகாட்சி உலக பொருட்களை (இடம், சொத்து, பணம்) மையமாகக் கொண்டு இயங்கும்.

உலகப் பொருட்கள் முடிவுக்கு உரியவை.

இறையாட்சி இறைவனுடைய அருளை மையமாகக் கொண்டு இயங்கும்.

இறையாட்சிக்கு உட்பட்ட அன்னை மரியாளை "அருள் நிறைந்த மரியே" என்று அழைக்கிறோம்.

உலகப் பொருட்களால் ஈர்க்கப் படாமல் இறையருளால் ஈர்க்கப் பட்டு வாழ்வோர் புனிதர்கள்.

உலகப் பற்றற்றோர் பேறு பெற்றோர் என்றால், உலகப் பற்று உள்ளவர்கள் அதற்கு எதிர் மாறானவர்கள்.

உலகப் பற்றற்றோருக்கு இறையாட்சி உரியது என்றால்,

உலகப் பற்று உள்ளவர்களுக்கு இறையாட்சி உரியது அல்ல.

அதனால்தான் ஆண்டவர்,
 "செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்கிறார். 
(மத்தேயு நற்செய்தி 19:24)

இவ்வசனத்தில் செல்வர் என்ற வார்த்தை செல்வத்தின் மீது பற்றுள்ளவர்களைக் குறிக்கும்.

                *      *     *    *
பட்டினியாய் இருப்போர்.
(Who are hungry)
பசியாக இருப்பவர்கள்.

எப்படி ஏழ்மை என்றால் ஆன்மீக ரீதியாக பொருட்பற்று இன்மையோ,

அதுபோல் பட்டினியாய் இருப்போர் ஆன்மீக ரீதியாக பசியாக உள்ளவர்கள்.


இயேசு  சாகும் தருவாயில் இருக்கும் போது    "தாகமாய் இருக்கிறது" என்றார்.

 இது உடல் சார்ந்த தண்ணீர் தாகம் அல்ல, ஆன்மீக தாகம்,
மீட்கப்பட வேண்டிய ஆன்மாக்கள் மீதான தாகம்.

அவர் சிலுவையில் அறையப்பட்டது ஆன்மாக்களின் மீட்புக்காக. ஆன்மாக்கள் மீட்கப் படும்போது தான் தாகம் தணியும்.

உடல் பசி உலகைச் சார்ந்த உணவின் மீதான பசி.

ஆன்மீகப் பசி இறையருள் மீதான பசி. இறை அருளாகிய ஆன்மீக உணவினால் தான் நமது ஆன்மா வாழ்கிறது.

சோதனைகளை வெல்ல வேண்டுமானால் இறை அருள் வேண்டும்.

செய்த பாவத்துக்கு மனத்தாபப் பட இறை அருள் வேண்டும்.

ஆன்மிகத்தில் வளர இறை அருள் வேண்டும்.

இறை அருளைப் பெற்று மீட்புப் பெற நமக்கு ஆசை இருக்க வேண்டும்.

அதேபோல மற்றவர்களுடைய ஆன்மாக்களும் மீட்புப் பெற வேண்டும் என்ற ஆசை நமக்கு இருக்க வேண்டும்.

ஆசை இருந்தால் தான் அதற்காக உழைப்போம்.

புனித தோமையார், புனித சவேரியார், புனித அருளானந்தர் போன்றவர்கள் நம் நாட்டுக்கு வந்தது அவர்களிடம்  இருந்த ஆன்மப் பசியின் காரணமாக.

ஆன்மீகப் பசி உள்ளவர்கள் நிறைவு பெறுவார்கள்.

உடல் பசி உள்ளவர்கள் நிறைவு பெற வேண்டும் என்றால் அவர்கள் வயிறார சாப்பிட வேண்டும்.

நிறைவு பெறுவார்கள் என்று சொன்னால் பசி தீர உணவு கிடைக்கும் என்பது பொருள்.

இயேசு பாவிகளை மீட்கவே சிலுவையில் பாடுகள் பட்டு தன் உயிரையே பலியாக்கினார்.

அவரது நோக்கத்தை நிறைவேற்ற  பாவிகளின் மீட்புக்காக நாம் முழு மனதோடு உழைக்கும் போது
 இயேசுவின் விருப்பத்தோடு ஒத்துழைக்கிறோம்.

ஆன்மீக ரீதியாக நாம் யாருக்காக உழைக்கிறோமோ அவர்கள் மீட்பு பெறுவார்கள். நாமும் விண்ணகத்தில் நிறைவு பெறுவோம்.

லூர்து செல்வம்.