"ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்" என்றார்."
(அரு.10:38)
''நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" என்று இயேசு சொன்னவுடன் யூதமதப் பெரியவர்கள் அவர்மீது எறிய கற்களை எடுத்தனர்.
அவர்கள் இயேசுவை இறைமகனாக ஏற்றுக் கொள்ளவில்லை.
அவர் சொன்னதை நம்பாவிட்டாலும் அவரது செயல்களைப் பார்த்தாவது நம்பியிருக்க வேண்டும்.
அவரை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல அவரைத் கொல்லவும் தீர்மானித்து விட்டார்கள்.
தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க வல்ல இறைவன் அவர்களது இந்த பாவகரமான செயலை நமது ஆன்மீக மீட்பின் கருவியாக மாற்றி விட்டார்.
"என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்."
என்ற வேத வாக்கை நமது வாழ்க்கையை மையமாக வைத்து தியானிப்போம்.
அன்று யூதர்கள் மத்தியில் நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருந்த அதே இயேசு
இன்று நம் ஒவ்வொருவரின் உள்ளத்தில் இருந்து கொண்டு
ஒவ்வொரு வினாடியும் நம்மோடு பேசிக்கொண்டும்
நம்மை வழி நடத்திக் கொண்டும்தான் இருக்கிறார்.
நமக்கு வேண்டிய அறிவுரைகளை நல்கிக் கொண்டுதானிருக்கிறார்.
உள்ளத்தில் அவர் பேசுவது நமது கருத்தில் விழுகிறதா?
பேசுவது மட்டுமல்ல, ஒவ்வொரு வினாடியும் நமது வாழ்வில் செயல் புரிந்து கொண்டிருக்கிறார்.
ஆன்மீகத்தில் ஒரு அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பரிபூரண சுதந்திரத்துடன் செயல்படும் மனிதன் என்ற முறையில் சிந்திக்கிறோம், சொல்கிறோம், செய்கிறோம்.
ஆனால் இறைவனால் படைக்கப்பட்ட மனிதன் என்ற முறையில் நாம் மட்டும் செயல்படவில்லை, நம்மைப் படைத்த இறைவனும் நம்மில் செயல் புரிகிறார்.
நாம் எப்படி சிந்திக்க வேண்டும், பேச வேண்டும், செயல்பட வேண்டும் என்பதற்கான இறைவன் கொடுத்த சட்டம் இருக்கிறது.
இறைவன் கொடுத்த சட்டத்திற்கு உட்பட்டு தான் நாம் சிந்திக்க வேண்டும், பேச வேண்டும், செயல்பட வேண்டும்.
இறைவனுக்கு யாரும் கட்டளை கொடுக்க முடியாது.
அனைத்துக்கும் அப்பாற்பட்டவர் கடவுள்.
அவர் அவருடைய விருப்பப்படி தான் செயல் புரிகிறார்.
அவருடைய விருப்பத்திற்கு எதிராக நாம் செயல்படுவது தான் பாவம்.
கடவுளால் பாவம் செய்ய முடியாது, அதாவது, அவரால் அவரது விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட முடியாது.
நமது ஆன்மீக வாழ்வில் நாம் சுதந்திர உணர்வோடு செயல்படுவது போல, கடவுள் பரிபூரண சுதந்தரத்தோடு செயல் புரிகிறார்.
ஆன்மீக வாழ்வில் நாம் இறைவனுடைய விருப்பத்துக்கு இணங்க சிந்திக்க வேண்டும், பேச வேண்டும், செயல்பட வேண்டும்.
எதிராகச் செயல்பட்டால் விண்ணக வாழ்வை இழக்க நேரிடும்.
நமது வாழ்வில் நமது விருப்பத்துக்கு மாறாக நடக்கும் சில செயல்களை நாம் தற்செயலாக நடப்பவை என்று நினைப்போம்.
ஆனால் எதுவும் தற்செயலாக நடப்பதில்லை.
ஒரு திட்டத்தோடு காரில் பயணித்துக் கொண்டிருப்போம்.
ஆனால் எதிர்பாராமல் கார் டயர் பங்சராகிவிடும்.
இது தற்செயல் நிகழ்ச்சி என்று நாம் நினைக்கிறோம்.
ஆனால் நமது வாழ்வில் தற்செயல் நிகழ்ச்சி எதுவும் கிடையாது.
எது நடந்தாலும் அது நமது நன்மைக்காக இறைவன் அனுமதிக்கும் நிகழ்ச்சியாகவே இருக்கும்.
டயர் பங்சராகிப் பயணம் ரத்தாவது நமது ஆன்மீக நன்மைக்காகத்தான் இருக்கும்.
சில சமயங்களில் இயற்கை நிகழ்வுகள் கூட நமது திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
திடீரென்று பெய்யும் மழை கூட நம் திட்டத்தை மாற்றிவிடும்.
இயற்கை இறைவனுக்குக் கட்டுப்பட்டது.
ஆன்மீகத்தை மறந்து அறிவியல் ரீதியாக மட்டும் பார்ப்பவர்களுக்கு புயல், வெள்ளம், மலைச் சரிவு, நில நடுக்கம் போன்ற இயற்கை நிகழ்வுகள் அழிவை ஏற்படுத்துவன போல் தோன்றும்.
ஆனால் இயற்கையில் ஏற்படுபவை மாற்றங்கள்,
அழிவு அல்ல.
ஒரு காலத்தில் கடலின் ஆழத்தில் இருந்த பாறை இயற்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் உயர்ந்த இமயமலையாக மாறியது.
கன்னியாகுமரிக்கு தெற்கிலிருந்த நிலப்பகுதி கடலுக்கு அடியில் சென்று விட்டது.
இதெல்லாம் மாற்றங்கள், அழிவு அல்ல.
நாம் உண்ணும் உணவு வயிற்றில் சீரணமாகி உடல் வளர்ச்சிக்கு வேண்டிய சத்தாக மாறுகிறது.
வேண்டாதது கழிவாக வெளியேற்றப்படுகிறது.
அப்படியானால் இயற்கை நிகழ்வுகளின் போது ஏற்படும் மனித மரணங்கள்?
மரணத்தை வாழ்க்கையின் முடிவு என எண்ணுபவர்கள் அதை அழிவு எனக் கருதுவார்கள்.
உண்மையில் மரணம் முடிவு அல்ல, வாழ்க்கை நிலை மாற்றம்.
இவ்வுலக வாழ்வை விட்டு விண்ணக வாழ்வுக்குள் நுழைய உதவும் நிகழ்வுதான் மரணம்.
ஞாயிறு விடுமுறை. திங்கள் கிழமை பள்ளிக்குப் போக வேண்டும்.
பள்ளிக் கூடம் போக விரும்பாத வர்கள் தான் திங்கள் பிறக்கும் போது வருந்துவார்கள்.
விண்ணக வாழ்வை விரும்பாதவர்கள் தான் மரணத்தை விரும்ப மாட்டார்கள்.
எந்த சூழ்நிலையில் மனிதன் பிறக்க வேண்டும் என்று திட்டமிட்ட இறைவன் தான் எந்த சூழ்நிலையில் அவன் இறக்க வேண்டும் என்பதையும் திட்டமிட்டிருப்பார்.
பாவம் மட்டும் தான் ஆன்மீகத்தில் அழிவு, ஏனெனில் அது இறைவன் விருப்பத்துக்கு எதிரானது.
பாவமின்றி வாழ்பவர்கள் மரணத்துக்கு ஏன் பயப்பட வேண்டும்?
சுனாமியின் போது நாம் மரணம் அடைய வேண்டும் என்பது இறைவன் திட்டமானால்
புன்முறுவலோடு ஏற்றுக் கொள்வோம்.
சாப்பாட்டை இலையில் தந்தால் என்ன, தட்டில் தந்தால் என்ன!
சாப்பிடக்கூடிய உணவாக இருக்க வேண்டும், அவ்வளவுதான்.
இயேசுவுக்கு மரணம் சிலுவை வழியே வந்தது.
சிலுவை புனிதப் பொருளாக மாறிவிட்டது.
நமக்கு எந்த வழியே மரணம் வந்தாலும் அது விண்ணகத்துக்கு கடவுள் நமக்குக் காட்டும் வழி.
இறைவன் தனது செயல்கள் மூலமாக நம்முடன் பேசும்போது அவருக்கு செவி கொடுப்போம்.
அவர் சொல்வதை நம்புவோம்.
அவர் காட்டுகிற வழி எந்த வழியாக இருந்தாலும் அதன் வழியே நடப்போம்
"நானே வழி" என்கிறார்.
அவர் எந்த உருவில் வந்தாலும் அவர் வழியே சென்றால் நித்திய வாழ்வை அடைவது உறுதி.
"வழியும் உண்மையும் வாழ்வும் நானே." (அரு.14:6)
லூர்து செல்வம்.