Saturday, April 27, 2024

ஆதிக் கிறிஸ்தவள்.

ஆதிக் கிறிஸ்தவள்.

"ஆதியிலே வார்த்தை இருந்தது."
இது இறை வாக்கு.

இங்கு 'ஆதியிலே' என்ற வார்த்தைக்கு துவக்கம் இல்லாத காலத்தில் என்று பொருள்.

அதற்கு இன்னொரு பொருளும் இருக்கிறது, துவக்கத்தில்.

"ஆதித் திருச்சபை." ஆரம்ப கால திருச்சபை.

திருச்சபையை நிறுவியவர் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

இயேசு திருச்சபையை நிறுவினாலும் தூய ஆவி அப்போஸ்தலர்கள் மீது இறங்கி வந்த பெந்தகோஸ்து‌ திருநாளில் தான் திருச்சபை பிறந்தது என்போம்.

ஏனெனில் அன்றுதான் அவர்கள் நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார்கள்.

அநேகர் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

ஆனாலும் இறைமகன் மனுமகனாக உற்பவித்த நாளே கிறிஸ்தவம் ஆரம்பித்த நாள் என்று கூறினாலும் அது உண்மைதான்.

ஏனெனில் கிறிஸ்துவே வழி, ஆகவே கிறிஸ்துவே கிறிஸ்தவம்.

கிறிஸ்தவர் யார்?

கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்.

ஆதிக் கிறிஸ்தவர், அதாவது முதல் கிறிஸ்தவர் யார்?

அன்னை மரியாள் தான் வரலாற்றில் முதல் கிறிஸ்தவள்.

கிறிஸ்து உற்பவித்த பின் அவள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவில்லை.

அவள் ஏற்றுக் கொண்டதால்தான் கிறிஸ்து உற்பவித்தார்.

கபிரியேல் தூதர் இயேசுவின் வருகை குறித்து மங்கள வார்த்தை சொன்னபோது

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது"

என்று சொன்ன பின்தான் இறைமகன் மனுமகனாக அவள் வயிற்றில் உருவெடுத்தார்.

அப்படியானால் மரியாள் முதல் கிறிஸ்தவள் மட்டுமல்ல,

கிறிஸ்து மனிதராக உற்பவிக்கு முன்பே கிறிஸ்தவளான முதல் கிறிஸ்தவள்.

மத்தேயு நற்செய்தியில் உள்ள இயேசுவின் மூதாதையர் பட்டியல்படி

 பழைய ஏற்பாடு 

'யாக்கோபின் மகன் யோசேப்போடு முடிவடைகிறது.

 புதிய ஏற்பாடு மரியாவிடமிருந்து ஆரம்பிக்கிறது.

மரியாளைக் கிறிஸ்தவள் ஆக்கியது 

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது"

என்ற அவளுடைய அர்ப்பண செபம்.

நாம் ஞானஸ்நானத்தின் போது,

பரிசுத்த ஆவி நம்மீது இறங்கி வரும் போது

கிறிஸ்தவர்கள் ஆகிறோம்.

வானதூதர் மரியாளிடம், 

"தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்."

மரியாளும் "
இதோ ஆண்டவருடைய அடிமை,"

என்ற அர்ப்பண செபத்தைச் சொல்கிறார்.

தூய ஆவி இறங்கி வருகிறார்.

மரியாளும் கிறிஸ்தவளாக, கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவளாக, மாறுகிறாள்.

அந்த வினாடியிலிருந்து ஒவ்வொரு வினாடியும் இயேசுவே அவளை வழி நடத்துகிறார்.

அந்த வினாடியிலிருந்து தாயும் மகனும் மகனின் நற்செய்தியை நமக்கு முன்மாதிரியாக வாழ ஆரம்பிக்கிறார்கள்.

உன் அயலானை நேசி.

இயேசு மரியாளின் வயிற்றில் உற்பவித்த வினாடியே நற்செய்தியை செயல் மூலம் போதிக்க ஆரம்பித்துவிட்டாள்.

எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசி.

உன்னை நீ நேசிப்பது போல உனது அயலானையும் நேசி.

இந்த இரண்டு கட்டளைகள் தான் இயேசுவின் நற்செய்தி போதனையின் மையம்.

இயேசு அவளது வயிற்றுக்குள் வந்த வினாடியே அவளது பிறர் அன்புப் பணியை ஆரம்பித்து விட்டாள்.

 மரியாள் புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்று,

 செக்கரியாவின் வீட்டை அடைந்து

 எலிசபெத்துக்கு ஏறக்குறைய மூன்று மாதங்கள் சேவை செய்தாள்.

ஏழைகள் பேறுபெற்றவர்கள்.

மரியாள் கோவிலில் வளர்ந்த ஒரு ஏழைப் பெண்மணி.

அவளுடைய கணவர் சூசை ஒரு ஏழைத் தச்சர்.

இயேசு பிறந்தது மாட்டுத் தொழுவத்தில்.

அவரது படுக்கை தீவனத் தொட்டி.

தானே மக்களின் ஆன்மீகத் தீவனமாகப் போகப்போவதின்
(நானே உயிருள்ள உணவு)
முன் அடையாளமாகவே படுப்பதற்குத் தீவனத் தொட்டியைத் தேர்ந்தெடுத்தார் போலும்.

முதலில் நற்செய்தி அறிவிக்கப் பட்டது ஏழை இடையர்களுக்கு.

முதன் முதலில் அவரைப் பார்க்க வந்தவர்களும் அவர்கள் தான்.

தந்தையின் சித்தப்படி நடக்க வேண்டும்.

தந்தையின் சித்தம் வான தூதர் மூலமாக அறிவிக்கப் பட்டது.

 ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, 

"நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான் என்றார்."


யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். 
(மத்தேயு நற்செய்தி 2:15,16)


நடைப் பயணம்.

வழியில் ஒரு திருடர் கூட்டம் அவர்களைச் சந்தித்தது.

ஒரு திருடனைக் குழந்தை இயேசுவின் கண்கள் கவர்ந்து இழுத்ததன.

குழந்தையின் அழகிலும், சிரிப்பிலும் மயங்கிப் போனான்.

அவன் மற்ற திருடர்களைப் பார்த்து,

"இவர்கள் மிக ஏழைகளாகத் தெரிகிறது. இவர்களிடமிருந்து எதையும் பறிக்க வேண்டாம்.

குழந்தை அழகாகச் சிரிக்கிறது.

நான் அதற்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு வருகிறேன்." என்று கூறிக்கொண்டே மரியாளிடம் வந்து,

"அம்மா, குழந்தையை கொஞ்ச நேரம் என்னிடம் தாருங்கள்."

குழந்தை இயேசுவும் கைகளை நீட்டினார்.

திருடன் அவரை இரு கரங்களால் வாங்கி,

மார்போடு அணைத்துக் கொண்டு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்.

குழந்தை இயேசுவும் பதிலுக்கு முத்தம் கொடுத்தார்.

திருடன் மகிழ்ச்சி பொங்க குழந்தையைத் தாயிடம் கொடுத்தான்.

குழந்தையை விட்டு பிரிய மனம் இல்லாமல் பிரிந்து போனான்.

திரும்பவும் அவன் இயேசுவைச் சந்தித்தான், 32 ஆண்டுகளுக்குப் பின், கல்வாரி மலையில்.

அங்கு என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும்.

பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நட.

அகில உலகத்தையே படைத்து ஆண்டு நடத்தி வரும் கடவுள் 30 ஆண்டுகள் தனது பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்.

அவருக்கு உணவூட்டி வளர்த்தவள் அன்னை மரியாள்.

உலகிலுள்ள அனைத்து மக்களிலும் மிக அதிக பக்தியுள்ள கிறிஸ்தவள் அவள்தான்.

கடவுளைப் பிரிந்து வாழ முடியாது.

இயேசுவுக்கு 12 வயது நடக்கும் போது ஒரு முறை மூன்று நாட்கள் கோவிலில் தங்கி விட்டார்.

அவர் கடவுள் என்பது மரியாளுக்குத் தெரியும்.

அவரால் தொலைந்து போக முடியாது என்றும் அவளுக்குத் தெரியும்.

ஆனாலும் அவரது பிரிவை அவளால் தாங்க முடியவில்லை.

கணவரோடு சேர்ந்து மூன்று நாட்களும் அவரைத் தேடினாள்.

மூன்று நாட்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment