Tuesday, April 23, 2024

"இயேசு அவரிடம், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை."(அரு. 14:6)

"இயேசு அவரிடம், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை."
(அரு. 14:6)

பன்னிரு சீடர்களுள் ஒவ்வொருவரும் ஒரு விசயத்தில் கெட்டியாக இருந்தார்கள்.

இராயப்பர் பதில் சொல்வதில் கெட்டி.

அருளப்பரும், யாகப்பரும் பதவி கேட்பதில் கெட்டி.

தோமையார் கேள்வி கேட்பதில் கெட்டி.

சந்தேகத் தோமையார் என்று பெயர் வாங்கியவர்.

உண்மையை உறுதியாகத் தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு சந்தேகம் வரும்.

மற்றவர்களும் உண்மையை அறிந்து கொள்ள அது உதவியாக இருக்கும்.

ஆண்டவர் "நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்" என்று 
சொன்னபோது

தோமையார் 

"ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது.

 அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?" 

என்று கேட்டார். 

அதற்கு ஆண்டவர் சொன்ன பதில் சீடர்களுக்கு மட்டுமல்ல அகில உலகத்தவருக்கும் வாழ்க்கைக்கு வழிகாட்டியான பதிலாக விளங்குகிறது.

"வழியும் உண்மையும் வாழ்வும் நானே.

 என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை."

நாம் உலகில் பிறந்தது வாழ.

பிறந்த அனைவரும் இறக்க வேண்டும் என்பது உறுதியாயினும் யாரும் இறக்க விரும்புவதில்லை.

மரணமின்றி வாழவே விரும்புகிறார்கள்.

அது இவ்வுலகில் முடியாது.

மறுவுலகில்தான் முடியும்.

இயேசு மறுவுலகிலிருந்து இவ்வுலகிற்கு வந்தவர்.

தந்தையிடமிருந்து வந்தவர்.

தந்தையிடம் போகப்போவதாகச் சொல்கிறார்.

"தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன.

 உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்.


நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்.

 அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். 


நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்" என்கிறார்."

தோமையாருக்குச் சிந்திக்கத் தெரிந்திருந்தால்,

"நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" என்று சொன்னீர்களே, அப்படியானால் தந்தை இங்கே தானே இருக்கிறார்"

என்று சொல்லியிருக்க வேண்டும்.

ஆனால் அவர்

"நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?"  என்று கேட்கிறார்.

இவ்வுலகில் வழி என்றவுடன் நம் மனதில் தெருவும் சாலையும் தான் ஞாபகத்துக்கு வரும்.

ஆனால் ஆண்டவர் கூறப்போகும் வழி விண்ணகத்துக்கான வழி.

விண்ணகம் உலகத்தைப் போல ஒரு இடம் அல்ல. அங்கு போக நேரமும் ஆகாது.

ஆண்டவர்,

"வழியும், உண்மையும், வாழ்வும் நானே. 

என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை" என்கிறார்.

தந்தையிடம் செல்வதற்கான வழி இயேசுவே.

சிறிது சிந்தித்துப் பார்த்தால் ஒரு உண்மை புரியும்.

தந்தையும் மகனும் ஒருவர் தான்.

 தந்தையுள் மகன் இருக்கிறார்,

மகனுள் தந்தை இருக்கிறார்.

மகனுள் இருக்கும் தந்தைக்கு வழி மகன்தானே!

இது உலகைச் சார்ந்த வழி அல்ல,
ஆன்மீக வழி.

It is a spiritual path, not a physical one.

ஆன்மீக வழி இயேசுவின்
ஆன்மீகப் போதனையில் அடங்கியிருக்கிறது.

இயேசுவின் போதனை வழி நடப்போர் விண்ணகத்தை நோக்கி நடக்கிறார்கள்.

இயேசுவின் போதனைப்படி வாழ்வோர் விண்ணக வாழ்வை அடைவர்.

விண்ணக வாழ்வு மனிதன் ஆசைப்படும் 

மரணமற்ற வாழ்வு.

நித்திய ஜீவிய வாழ்வு.

நிலை வாழ்வு.

இவ்வுலக வாழ்வு ஒருநாள் முடிவுக்கு வரும்.

நிலை வாழ்வு நிலையானது, முடிவில்லாதது, நிரந்தரமானது.

இயேசுதான் வாழ்வு.

வாழ்வை அடைய வழியும் இயேசுவே.

இயேசுவின் வழியாகத்தானே இயேசுவுக்குள் நுழைய முடியும்.

உலகில் நாம் அறிய வேண்டிய ஒரே உண்மை இயேசுவே.

நமது மொழியறிவு நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்லாது.

நமது புவியியல் அறிவு நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்லாது.

நமது அறிவியல் அறிவு நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்லாது.

நாம் வாங்கும் பட்டங்கள் நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்லாது.

இயேசு மட்டும் தான் நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்வார்.

ஏனெனில் இயேசு தான் விண்ணக வாழ்வு.

நாம் திருவிருந்தில் கலந்து கொள்ளும் போதெல்லாம் நமக்குள் விண்ணக வாழ்வு வருகிறது.

அந்த வகையில் கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வுலகில் வாழும் போதே விண்ணகத்தில் தான் வாழ்கிறோம்.

அந்த உணர்வோடு வாழ்கிறோமா?

இயேசுவோடு வாழ்வோம்.

இயேசுவுக்குள் வாழ்வோம்.

இயேசுவோடு இயேசுவுக்குள் வாழும் உணர்வோடு வாழ்வோம்.

விண்ணக வாழ்வை மண்ணகத்திலேயே அனுபவித்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment