Saturday, April 13, 2024

"அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். "(அரு.10:15)

''அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். "
(அரு.10:15)

இயேசு நமது ஆயன், நல்ல ஆயன்.

அவர் நம்மை அறிந்திருக்கிறார்.

அவர் நமது ஆயன் என்று நமக்குத் தெரியும்.

ஆனால் நாம் அவரை அறிந்திருக்கிறோமா?

தெரிந்திருப்பது வேறு.
அறிந்திருப்பது வேறு.

இயேசுவைப் பற்றி நமக்கு என்னவெல்லாம் தெரியும்?

இயேசு நம்மை பாவத்திலிருந்து மீட்க மனுமகனாகப் பிறந்த இறைமகன் என்று நமக்குத் தெரியும்.

அவர் நமக்காகப் பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தார் என்று நமக்குத் தெரியும்.

மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார் என்பதும் நமக்குத் தெரியும்.

இன்றும் திவ்ய நற்கருணையில்
நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதும் நமக்குத் தெரியும்.

ஆனால் இதெல்லாம் சாத்தானுக்கும் தெரியும்.

தெரிந்து அவனுக்கு என்ன பயன்?

இயேசுவைப் பற்றி நமக்குத் தெரிந்ததை எல்லாம் அறிந்திருக்கிறோமா?

தெரிந்தும், அறிந்தும் இருந்தால் தான் அது விசுவாசம்.

நமக்குத் தெரிந்ததை அறிந்திருக்கிறோமா,

அதாவது விசுவசிக்கிறோமா என்பதைச் சிறிது தியானிப்போம்.

புவியியல் படிக்கும் போது உலகம் உருண்டை என்று கூறுவது போல 

ஞானோபதேசம் படிக்கும் போது இயேசு இறைமகன் என்று கூறுகிறோம்.

உலகம் உருண்டை என்ற உண்மை நமது வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

 இயேசு இறைமகன் என்ற உண்மை நமது ஆன்மீக வாழ்க்கையில் எந்த மாற்றத்தையாவது ஏற்படுத்தியிருக்கிறதா என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு இறைமகன் என்ற மறையியல் உண்மை நமது விசுவாசமாக இருந்தால் அது நமது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியையும் இயக்க வேண்டும்.

சர்வ வல்லபரும், அளவற்ற அன்பும் உள்ள இறைமகன் தான் நமது உள்ளத்தில் இருந்து நமது ஒவ்வொரு அசைவையும் இயக்குகிறார் என்று நாம் உறுதியாக நம்ப வேண்டும்.

உடல் ரீதியாக ஏதோ ஒரு பிரச்சினை நமக்கு ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

இது இறைமகனால் ஆனது,
எல்லாம் நமது ஆன்மீக நன்மைக்கே என்ற எண்ணம் நமது உள்ளத்தில் இயல்பாகத் தோன்றினால் நாம் நமது விசுவாசத்தை வாழ்கிறோம்.

நாம் நமது விசுவாசத்தை வாழ்ந்தால் இயல்பாகவே கடவுளின் கட்டளைப்படி நடப்போம்.

என்ன நேர்ந்தாலும் கடவுளுக்கு நன்றி கூறுவோம்.

என்ன நேர்ந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறோமா?

என்ன நேர்ந்தாலும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோமா?

நினைத்துப் பார்ப்போம்.

அவர் நமக்காகப் பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தார் என்று நமக்குத் தெரியும். (We know. But mere knowledge cannot save us.)

"இயேசு எனக்காகப் பாடுகள் பட்டார், எனக்காக மரித்தார்"

என்ற உணர்வு நம்மிடம் இருக்கிறதா?

இருந்தால் நமக்கு வரும் துன்பங்களை மகிழ்ச்சியுடன்  ஏற்றுக்கொள்வோம்.

அவர் என்ன காரணங்களுக்காக பாடுகள் பட்டாரோ அந்த காரணங்களுக்காக ஏற்றுக்கொள்வோம்.

ஏற்றுக் கொண்டால் இயேசுவையும், அவர் நமக்காகப் பட்ட பாடுகளையும் ஏற்றுக் கொள்கிறோம்,

ஏற்றுக் கொள்ளா விட்டால் ஒரு சரித்திர உண்மையைத் தெரிந்து வைத்திருக்கிறோம், அவ்வளவு தான்.

அதில் எந்த வித ஆன்மீகப் பயனும் இல்லை.

"மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார் என்பதும் நமக்குத் தெரியும்."

இயேசு நமது உள்ளத்தில் உயிர்த்திருக்கிறாரா?

அப்படீன்னா?

இயேசு தனது மரணத்தினாலும், உயிர்ப்பினாலும் நமது ஆன்மீக மரணத்தை வென்றிருக்கிறார்.

நமது ஆன்மா சாவான பாவத்தில் விழுவதுதான் ஆன்மீக மரணம்.

அதிலிருந்து விடுதலை பெற்று எழுவது உயிர்ப்பு.

நாம் பாவ நிலையிலிருந்து விடுதலை பெறும்போதுதான் நாம் இயேசுவின் உயிர்ப்பின் பயனை அடைகிறோம்.

வருடக் கணக்காக பாவ சங்கீர்த்தனமே செய்யாமல் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற இயேசு சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்து கொள்பவர்களால் எந்த வித ஆன்மீகப் பயனும் பெற முடியாது.

அவர்களைப் பொறுத்தமட்டில் விழா என்றால் புத்தாடை அணிவது,  கோவிலுக்குப் போவது, மட்டன் பிரியாணி சாப்பிடுவது.

அவ்வளவு தான்.

இதனால் ஆன்மாவிற்கு என்ன பயன்?

உண்மையான கிறிஸ்தவனுக்கு விழா என்றால் 

நல்ல பாவ சங்கீர்த்தனம்,

திருப்பலி,

திவ்ய நற்கருணை விருந்து,

புண்ணிய வாழ்வு.

கிறிஸ்தவ வாழ்வே இதுதான்.

இயேசுவை அறிந்தவர்கள் இப்படித்தான் வாழ்வார்கள்.

"இன்றும் திவ்ய நற்கருணையில்
நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதும் நமக்குத் தெரியும்."


இது சாத்தானுக்கும் தெரியும்.

தேரிந்ததால்தான் தகுந்த முறையில் திவ்ய நற்கருணையை வாங்காமல்,

பாவத்தோடு வாங்கிய யூதாசுக்குள் அவன் புகுந்தான்.

இது நமக்கு ஒரு பாடம்.

 அன்னை மரியாளின் வயிற்றிலிருந்து பிறந்த அதே இயேசு.

30 ஆண்டுகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்த அதே இயேசு.

மூன்று ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்து, சென்ற இடமெல்லாம் நோயாளிகளைக் குணமாக்கிய அதே இயேசு.

புனித வியாழனன்று சீடர்களின் பாதங்களைக் கழுவி,

 திவ்ய நற்கருணையையும் குருத்துவத்தையும் ஏற்படுத்திய 
அதே இயேசு.

வெள்ளிக்கிழமை பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு அதில் மரித்த அதே இயேசு,

மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த அதே இயேசு 

திவ்ய நற்கருணையில் இருக்கிறார்.
(தொடரும்)

லூர்து செல்வம் 

No comments:

Post a Comment