Monday, April 29, 2024

இயேசுவின் விண்ணேற்றம்.

இயேசுவின் விண்ணேற்றம்.

இயேசுவின் உயிர்ப்புத் திருவிழாவோடு தொடர்புடைய முக்கிய விழாக்கள்.

1.பெரிய வியாழன் - திவ்ய நற்கருணைத் திருவிழா.

2. வெள்ளி - இயேசுவின் பாடுகள், சிலுவை மரணம்.

3.ஞாயிறு- இயேசுவின் உயிர்ப்பு.

4. உயிர்த்த 40 ஆம் நாள் - இயேசுவின் விண்ணேற்றம்.

எல்லா விழாக்களும் இயேசுவின் வாழ்வில் ஏற்கனவே நடந்த நிகழ்வுகள் .

இயேசு எப்போது விண்ணேற்றம் அடைந்தார்?

கேள்வி வினோதமாகத் தெரியும்.

ஏனெனில் உயிர்த்த நாற்பதாம் நாள் என்ற பதில் தயாராக இருக்கும்.

உயிர்த்த நாற்பதாம் நாள் விண்ணேற்ற விழாவைக் கொண்டாடுகிறோம்.

அப்படியானால்?

பதிலுக்குள் புகுமுன் சில அடிப்படை விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் பேசுவது மனித மொழி.

மனித அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள மனிதர்கள் பயன்படுத்தும் மொழி.

மனித அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட இறைவனைப் பற்றி பேசவும் நமது மொழியைத் தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

நமது மொழி நம்மைப் போலவே குறைபாடுகள் நிறைந்தது.

கடவுள் குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்.

அவரைப்பற்றி பற்றி பேசும் வார்த்தைகளுக்கு நமது மொழி அகராதிப்படி பொருள் கொடுத்தால் பொருள் முழுமையாக இருக்காது.

நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறோமோ அப்படிப் புரிந்து கொள்ள வேண்டும், நமது விருப்பப்படி அல்ல.

ஒரு சின்ன உதாரணம்.

 "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே."

என்று இயேசு நமது மொழியில் சொல்கிறார்.

மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு நமது வாழ்விடமாகிய மண்ணகத்தில் நின்று கொண்டு பேசுகிறார்.

இறைவன் வாழ்வது விண்ணகத்தில்.

நாம் வாழ்வது மண்ணகத்தில்.

மண்ணகமும், விண்ணகமும் நேர் எதிர் மாறானவை.

மண்ணகம் இடத்திற்கும், நேரத்திற்கும் உட்பட்டது.

மேடான இடத்திலிருந்து பள்ளமான இடத்திற்கு வருவதையே 'இறங்கி வருதல்' என்போம்.

ஆனால் இறைவன் வாழும் விண்ணகத்தில் இடமும் கிடையாது, நேரமும் கிடையாது.

அது ஒரு வாழ்க்கை நிலை, நித்தியமானது.

நமது மொழிப்படி இடத்திலிருந்து தான் இடத்துக்கு இறங்க முடியும்.

விண்ணகம் இடமல்ல, ஆகவே அங்கிருந்து இறங்க முடியாது.

ஆனால் இறைமகன் இறங்கி வந்தார் என்று சொல்கிறோம், 

ஏனெனில் இறைமகனைப் பற்றி பேச மனித மொழியில் பொருத்தமான வார்த்தைகள் இல்லை.

"இறைமகன் நமது உணவாக உலகில் பிறந்திருக்கிறார்" என்று புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் வாழ்வது மண்ணகம்.

2024 ஆண்டுகளுக்கு முன் இறைமகன் கன்னிமரியின் வயிற்றில் மனித உரு எடுத்து, மனிதனாகப் பிறந்து 33 ஆண்டுகள் வாழ்ந்தது நாம் வாழும் இந்த மண்ணகத்தில் தான்.

இந்த உலக வாழ்வு முடிந்தபின் இயேசு விண்ணேற்றம் அடைந்தார்.

இயேசு முழுமையாகக் கடவுள்,
முழுமையாக மனிதன்.

கடவுள் சுபாவத்தில் அவர் நித்தியமாக விண்ணகத்தில் வாழ்கிறார்.

விண்ணகம் ஒரு இடமல்ல, வாழ்க்கை நிலை.

நித்தியமாக விண்ணகத்தில் வாழ்கிறார் என்றால் நித்தியமாக கடவுளாக வாழ்கிறார் என்றுதான் பொருள்.

ஆக இயேசு தேவ சுபாவத்தில் நித்தியமாக விண்ணகத்தில் வாழ்கிறார். 

அதில் மாற்றமில்லை.

ஆனால் மனித சுபாவத்தில் 33 ஆண்டுகள் மண்ணகத்தில் நம்மைப் போல வாழ்ந்தார்.

மனித சுபாவத்தில் அவருக்கு ஒரு ஆன்மாவும், உடலும் இருந்தன.

ஆன்மா உடலோடு இருக்கும் மட்டும் உலகில் இருக்கும்.

உடலை விட்டு பிரிந்த வினாடியில் விண்ணகம் சென்று விடும்.

இயேசுவின் ஆன்மா எப்போது அவருடைய உடலை விட்டுப் பிரிந்தது?

"தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் "என்று இயேசு எப்போது உரத்த குரலில் கூறினாரோ 

 அப்போது இயேசுவின் ஆன்மா அவருடைய உடலை விட்டுப் பிரிந்தது.

அதாவது சிலுவையில் இயேசு மரித்த வினாடி அவரது ஆன்மா விண்ணகத்தில் இருந்தது. 

இயேசு நல்ல கள்ளனைப் பார்த்து

"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" 

என்று கூறியதை ஞாபகத்தில் கொள்வோம்.

"பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. 

தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார்."
(அரு. 13:1)

என்ற வசனத்தையும் ஞாபகத்தில் கொள்வோம்.

விசுவாசப் பிரமாணத்தில்

"பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடம் இருந்து
உயிர்த்தெழுந்தார்."

என்ற வசனத்தைச் செபமாகச் சொல்கிறோம்.

பாதாளத்தில்?

பாதாளம் என்பது ஒரு இடமல்ல.

இயேசு சிலுவையில் தன்னைப் பலிகொடுத்து மனிதர்களின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ததற்கு முன்னால் இறந்த ஆபிரகாம், ஈசாக்கு போன்ற நல்ல மனிதர்கள் மோட்சத்துக்கு போக முடியாதிருந்த வாழ்க்கை 
நிலைதான் பாதாளம்.

இயேசு தனது சிலுவை மரணத்தின் மூலம் அவர்களது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து விட்டதால் அவர்களை மோட்சப் பேரின்ப வாழ்வுக்குள் அழைத்துச் சென்றார்.

இயேசுவின் வளர்ப்புத் தந்தை சூசையப்பரும் அப்போதுதான் மோட்சத்துக்குச் சென்றார்.

அப்போது நல்ல கள்ளனுக்கும் மோட்ச பாக்கியம் கிடைத்தது.

எல்லாம் இயேசுவின் ஆன்மா அவரது உடலை விட்டுப் பிரிந்த வினாடியில் நடந்தது.

இப்போது ஒரு கேள்வி எழும்.

இயேசு மரித்தவுடன் விண்ணகம் சென்று விட்டால் ஏன் உயிர்த்த நாற்பதாம் நாள் விண்ணேற்ற விழாவைக் கொண்டாடுகிறோம்?

இயேசு மரித்தவுடன் அவரது ஆன்மா மட்டும் தான் விண்ணகம் சென்றது.

உயிர்த்த பின்புதான் ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் சென்றார்.

நாற்பது நாட்கள்?

உயிர்த்த பின் நாற்பது நாட்கள் தனது சீடர்களுக்கு அடிக்கடி காட்சி கொடுத்து அவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார்.

நாற்பது நாட்களுக்குப்பின் சீடர்களுக்குக் காட்சி கொடுப்பதை நிறுத்தி விட்டார்.

ஆகவே தான் உயிர்த்த நாற்பதாம் நாள் விண்ணேற்ற விழாவைக் கொண்டாடுகிறோம்.

இயேசு விண்ணகம் சென்று விட்டாலும் தனது ஆன்ம சரீரத்தோடு தொடர்ந்து
திருச்சபையில் நம்மோடு வாழ்ந்து வருகிறார், திவ்ய நற்கருணை மூலமாக.

இது இயேசு நம்மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பைக் காட்டுகிறது.

நமது அன்பை எப்படிக் காட்டப் போகிறோம்?

லூர்து செல்வம்.

Sunday, April 28, 2024

ஆதிக் கிறிஸ்தவள்.(தொடர்ச்சி)

ஆதிக் கிறிஸ்தவள்.
(தொடர்ச்சி)

மூன்று நாட்கள் மகனைத் தேடி மூன்றாம் நாள் அவரைக் கோவிலில் கண்டு பிடித்த
 மரியாள் அவரை நோக்கி,

 "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே" என்றார். 

அவர் அவர்களிடம் "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்றார். 

இயேசு அவரது தந்தையின் சித்தப்படி நடந்தார்.

மரியாள் ஒரு நல்ல கிறிஸ்தவள் செய்ய வேண்டியதைச் செய்தாள்,

இயேசுவைத் தேடினாள்.

நமது ஆன்மீக வாழ்விலும் இதே போன்ற சூழ்நிலை ஏற்படுவதுண்டு.

எவ்வளவு பக்தியாக இருந்தாலும் சில சமயங்களில் இயேசுவைக் காணாதது போன்ற உணர்வு ஏற்படும்.

அவரைப்பற்றி தியானிக்க முடியாதபடி மனதில் இருள் தோன்றும்.

அப்போது சோர்ந்து விடக்கூடாது.

கோவிலிலுக்குச் சென்று திவ்ய நற்கருணைப் பேழையைப் பார்த்துக் கொண்டிருந்தாலே இருள் விலக ஆரம்பித்து விடும்.

நாம் அவரைத் தேடிப் போக வேண்டும் என்பதற்காகவே இயேசுவே இப்படிப்பட்ட சூழ்நிலையை ஏற்படுத்துவார்.

நாம் மரியாளைப் போல இயேசுவைத் தேடி கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

வாழ்க்கையின் எந்த அந்தஸ்தைத்ன தேர்ந்தெடுத்தாலும் இறைவன் சித்தப்படி வாழ வேண்டியது நல்ல கிறிஸ்தவனின் கடமை.

மரியாள் திருமண அந்தஸ்தில் வாழ்ந்தாலும் கன்னிமை வார்த்தைப்பாடு கொடுத்திருந்தாள்.

ஆகவே அவள் கன்னியாய் வாழ வேண்டும் என்பது இறைவனின் சித்தம்.

மரியாளும் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே வாழ்ந்தாள்.

யார் யார் எப்போது பிறக்க வேண்டும், எப்போது இறக்க வேண்டும் என்பது இறைவனின் திட்டம்.

அதன்படி அவருக்கு மரணம் நெருங்கிய போது அவரைச் சாக விடாமல் காப்பாற்றும்படி கடவுளாகிய தன் மகனிடம் மரியாள் வேண்டவில்லை.

சூசையப்பர் இறைமகன் இயேசுவின் மடியில் தலை வைத்து பாக்கியமான மரணம் அடைந்தார்.

ஆகவே சூசையப்பரை நல்ல மரணத்தின் பாதுகாவலராக நமது தாய்த் திருச்சபை ஏற்றுக் கொண்டுள்ளது.

இயேசுவுக்கு 30 வயது நடக்கும் போது அன்னை மரியாள் தன் மகனைப் பொது வாழ்வுக்கு அர்ப்பணித்து விட்டாள்.

இயேசுவின் பொது வாழ்வின் ஆரம்பித்தில் அன்னை மரியாள் இயேசுவோடு கானாவூர் திருமணத்தில் கலந்து கொண்டாள்.

இயேசுவின் தாயாக மட்டுமல்ல ஒரு நல்ல கிறிஸ்தவளாக அவள் செய்ய வேண்டிய பணியைச்  செய்தாள்.

வெறும் விருந்தாளியாக மட்டுமல்ல பிறர் சிநேகம் மிக்க ஒரு நல்ல கிறிஸ்தவளாகச் செயல் பட்டாள்.

அவள் அப்படிச் செயல் பட்டிருக்கா விட்டால்

திருமண வீடு விருந்தினருக்கு திராட்சை ரசம் கொடுக்க முடியாத குடும்பம் என்ற கெட்ட பெயர் வாங்கியிருக்கும்.

அதைக் காப்பாற்றிய பெருமை பிறரன்பு மிகுந்திருந்த அன்னை மரியாளையே சேரும்.

"இவ்வாறு மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள்." என்று மத்தேயு குறிப்பிடுகிறார்.
 (12:46)

இயேசுவின் மூன்று ஆண்டு கால பொது வாழ்வின் போது இதே போன்று பல முறை மகனைப் பார்க்கச் சென்றிருக்கலாம்.

இயேசுவின் பாடுகளின் போது அவருடைய சீடர்கள் அவரை விட்டு ஓடிப்போய் விட்டார்கள்.

ஆனால் அன்னை மரியாள் ஆரம்பம் முதல் முடிவு வரை இயேசுவோடு இருந்தாள்.

அவரது வேதனை மிகுந்த பாடுகளை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக பரம தந்தைக்கு ஒப்புக் கொடுத்தாள்.

இறந்த இயேசுவை அவளது மடியில் கிடத்தியபோது

"இது என் உடல், என் இரத்தம்"

என்ற எண்ணம் அவள் மனதில் உதித்திருக்கும்.

தாயிடமிருந்து பெற்றதுதானே மகனின் உடலும் இரத்தமும்.

தனது உடலையும், இரத்தத்தையும் உலகின் பாவங்களுக்குப் பரிகாரமாக இறைத் தந்தைக்கு ஒப்புக் கொடுத்த ஒரே கிறிஸ்தவள் அன்னை மரியாள் தான்.

அவளைப் பின் பற்றி நாம் இந்த செபத்தை அடிக்கடி சொல்வோம்.

''நித்திய பிதாவே, 

உமது திருமகனும், எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் 

எங்கள் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக 

உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.

நித்திய பிதாவே, உமது திருமகனின் வேதனை மிகுந்த பாடுகளைப் பார்த்து

எங்கள் மேலும்,

எங்கள் குடும்பத்தின் மேலும்,

அகில உலகத்தின் மேலும்

இரக்கமாயிரும்."

இயேசு உயிர்த்து விண்ணெய்திய பின்

தனது மரணம் வரை அப்போஸ்தலர்கள் கூட இருந்து தாய் போல அவர்களை வழி நடத்தினாள்.

அப்போஸ்தலர்கள் மேல் பரிசுத்த ஆவி இறங்கிய பெந்தகோஸ்தே நாளன்று அன்னை மரியாளும் அவர்களுடன் இருந்தாள்.

சிலுவையடியில் அன்னை மரியாள் நின்று கொண்டிருந்தபோது அருளப்பர் மூலமாக அவளை இயேசு தனது திருச்சபைக்கே தாயாக்கினார்.

இன்று நமது சார்பாகத் தனது மகனிடம் பகிர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

அன்னை மரியாள் முதல் கிறிஸ்தவள் மட்டுமல்ல,

எல்லாரையும் விட மிக நல்ல கிறிஸ்தவள்.

Mother Mary is not only the first Christian, but the best Christian ever lived.

நாம் பின்பற்ற வேண்டிய மிகச்சிறந்த முன்மாதிரிகை.

She is the best example for us to follow.

தாயைப் போல பிள்ளை என்ற பழமொழியை மெய்யாக்குவோம்.

லூர்து செல்வம்.

Saturday, April 27, 2024

ஆதிக் கிறிஸ்தவள்.

ஆதிக் கிறிஸ்தவள்.

"ஆதியிலே வார்த்தை இருந்தது."
இது இறை வாக்கு.

இங்கு 'ஆதியிலே' என்ற வார்த்தைக்கு துவக்கம் இல்லாத காலத்தில் என்று பொருள்.

அதற்கு இன்னொரு பொருளும் இருக்கிறது, துவக்கத்தில்.

"ஆதித் திருச்சபை." ஆரம்ப கால திருச்சபை.

திருச்சபையை நிறுவியவர் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

இயேசு திருச்சபையை நிறுவினாலும் தூய ஆவி அப்போஸ்தலர்கள் மீது இறங்கி வந்த பெந்தகோஸ்து‌ திருநாளில் தான் திருச்சபை பிறந்தது என்போம்.

ஏனெனில் அன்றுதான் அவர்கள் நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார்கள்.

அநேகர் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

ஆனாலும் இறைமகன் மனுமகனாக உற்பவித்த நாளே கிறிஸ்தவம் ஆரம்பித்த நாள் என்று கூறினாலும் அது உண்மைதான்.

ஏனெனில் கிறிஸ்துவே வழி, ஆகவே கிறிஸ்துவே கிறிஸ்தவம்.

கிறிஸ்தவர் யார்?

கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்.

ஆதிக் கிறிஸ்தவர், அதாவது முதல் கிறிஸ்தவர் யார்?

அன்னை மரியாள் தான் வரலாற்றில் முதல் கிறிஸ்தவள்.

கிறிஸ்து உற்பவித்த பின் அவள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவில்லை.

அவள் ஏற்றுக் கொண்டதால்தான் கிறிஸ்து உற்பவித்தார்.

கபிரியேல் தூதர் இயேசுவின் வருகை குறித்து மங்கள வார்த்தை சொன்னபோது

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது"

என்று சொன்ன பின்தான் இறைமகன் மனுமகனாக அவள் வயிற்றில் உருவெடுத்தார்.

அப்படியானால் மரியாள் முதல் கிறிஸ்தவள் மட்டுமல்ல,

கிறிஸ்து மனிதராக உற்பவிக்கு முன்பே கிறிஸ்தவளான முதல் கிறிஸ்தவள்.

மத்தேயு நற்செய்தியில் உள்ள இயேசுவின் மூதாதையர் பட்டியல்படி

 பழைய ஏற்பாடு 

'யாக்கோபின் மகன் யோசேப்போடு முடிவடைகிறது.

 புதிய ஏற்பாடு மரியாவிடமிருந்து ஆரம்பிக்கிறது.

மரியாளைக் கிறிஸ்தவள் ஆக்கியது 

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது"

என்ற அவளுடைய அர்ப்பண செபம்.

நாம் ஞானஸ்நானத்தின் போது,

பரிசுத்த ஆவி நம்மீது இறங்கி வரும் போது

கிறிஸ்தவர்கள் ஆகிறோம்.

வானதூதர் மரியாளிடம், 

"தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்."

மரியாளும் "
இதோ ஆண்டவருடைய அடிமை,"

என்ற அர்ப்பண செபத்தைச் சொல்கிறார்.

தூய ஆவி இறங்கி வருகிறார்.

மரியாளும் கிறிஸ்தவளாக, கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவளாக, மாறுகிறாள்.

அந்த வினாடியிலிருந்து ஒவ்வொரு வினாடியும் இயேசுவே அவளை வழி நடத்துகிறார்.

அந்த வினாடியிலிருந்து தாயும் மகனும் மகனின் நற்செய்தியை நமக்கு முன்மாதிரியாக வாழ ஆரம்பிக்கிறார்கள்.

உன் அயலானை நேசி.

இயேசு மரியாளின் வயிற்றில் உற்பவித்த வினாடியே நற்செய்தியை செயல் மூலம் போதிக்க ஆரம்பித்துவிட்டாள்.

எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசி.

உன்னை நீ நேசிப்பது போல உனது அயலானையும் நேசி.

இந்த இரண்டு கட்டளைகள் தான் இயேசுவின் நற்செய்தி போதனையின் மையம்.

இயேசு அவளது வயிற்றுக்குள் வந்த வினாடியே அவளது பிறர் அன்புப் பணியை ஆரம்பித்து விட்டாள்.

 மரியாள் புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்று,

 செக்கரியாவின் வீட்டை அடைந்து

 எலிசபெத்துக்கு ஏறக்குறைய மூன்று மாதங்கள் சேவை செய்தாள்.

ஏழைகள் பேறுபெற்றவர்கள்.

மரியாள் கோவிலில் வளர்ந்த ஒரு ஏழைப் பெண்மணி.

அவளுடைய கணவர் சூசை ஒரு ஏழைத் தச்சர்.

இயேசு பிறந்தது மாட்டுத் தொழுவத்தில்.

அவரது படுக்கை தீவனத் தொட்டி.

தானே மக்களின் ஆன்மீகத் தீவனமாகப் போகப்போவதின்
(நானே உயிருள்ள உணவு)
முன் அடையாளமாகவே படுப்பதற்குத் தீவனத் தொட்டியைத் தேர்ந்தெடுத்தார் போலும்.

முதலில் நற்செய்தி அறிவிக்கப் பட்டது ஏழை இடையர்களுக்கு.

முதன் முதலில் அவரைப் பார்க்க வந்தவர்களும் அவர்கள் தான்.

தந்தையின் சித்தப்படி நடக்க வேண்டும்.

தந்தையின் சித்தம் வான தூதர் மூலமாக அறிவிக்கப் பட்டது.

 ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, 

"நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான் என்றார்."


யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். 
(மத்தேயு நற்செய்தி 2:15,16)


நடைப் பயணம்.

வழியில் ஒரு திருடர் கூட்டம் அவர்களைச் சந்தித்தது.

ஒரு திருடனைக் குழந்தை இயேசுவின் கண்கள் கவர்ந்து இழுத்ததன.

குழந்தையின் அழகிலும், சிரிப்பிலும் மயங்கிப் போனான்.

அவன் மற்ற திருடர்களைப் பார்த்து,

"இவர்கள் மிக ஏழைகளாகத் தெரிகிறது. இவர்களிடமிருந்து எதையும் பறிக்க வேண்டாம்.

குழந்தை அழகாகச் சிரிக்கிறது.

நான் அதற்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு வருகிறேன்." என்று கூறிக்கொண்டே மரியாளிடம் வந்து,

"அம்மா, குழந்தையை கொஞ்ச நேரம் என்னிடம் தாருங்கள்."

குழந்தை இயேசுவும் கைகளை நீட்டினார்.

திருடன் அவரை இரு கரங்களால் வாங்கி,

மார்போடு அணைத்துக் கொண்டு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்.

குழந்தை இயேசுவும் பதிலுக்கு முத்தம் கொடுத்தார்.

திருடன் மகிழ்ச்சி பொங்க குழந்தையைத் தாயிடம் கொடுத்தான்.

குழந்தையை விட்டு பிரிய மனம் இல்லாமல் பிரிந்து போனான்.

திரும்பவும் அவன் இயேசுவைச் சந்தித்தான், 32 ஆண்டுகளுக்குப் பின், கல்வாரி மலையில்.

அங்கு என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும்.

பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நட.

அகில உலகத்தையே படைத்து ஆண்டு நடத்தி வரும் கடவுள் 30 ஆண்டுகள் தனது பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்.

அவருக்கு உணவூட்டி வளர்த்தவள் அன்னை மரியாள்.

உலகிலுள்ள அனைத்து மக்களிலும் மிக அதிக பக்தியுள்ள கிறிஸ்தவள் அவள்தான்.

கடவுளைப் பிரிந்து வாழ முடியாது.

இயேசுவுக்கு 12 வயது நடக்கும் போது ஒரு முறை மூன்று நாட்கள் கோவிலில் தங்கி விட்டார்.

அவர் கடவுள் என்பது மரியாளுக்குத் தெரியும்.

அவரால் தொலைந்து போக முடியாது என்றும் அவளுக்குத் தெரியும்.

ஆனாலும் அவரது பிரிவை அவளால் தாங்க முடியவில்லை.

கணவரோடு சேர்ந்து மூன்று நாட்களும் அவரைத் தேடினாள்.

மூன்று நாட்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

Friday, April 26, 2024

"என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்."(அரு.15:2)

" என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்."
(அரு.15:2)

என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்."

 நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. 
(அரு.15:2,5)

கடவுள் மனிதர்களைப் படைப்பதற்கு முன்னால் தாவரங்களைப் படைத்தார்,

மனிதர்கள் பயன்படுத்துவதற்காகவும், அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவும்.

நாம் பயன்படுத்தும் எல்லா பொருட்களிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தாவரத்துக்கும் வேர்கள் உண்டு, கிளைகள் உண்டு.

வேர்கள் அவற்றுக்கு உணவு எடுத்துக் கொடுக்க, கிளைகள் உணவு தயாரிக்க, தங்களுக்கும், நமக்கும்.

இயேசு நமக்கும் அவருக்கும் உள்ள உறவை திராட்சைச் செடிக்கும் அதன் கொடிகளுக்கும் உள்ள உறவோடு ஒப்பிடுகிறார்.

திராட்சைச் செடி இயேசு,
நாம் அதன் கொடிகள்.

செடி கொடிகளுக்கு உணவை அனுப்புகிறது.

கொடிகள் அதைப் பயன்படுத்தி திராட்சைப் பழங்களைத் தயாரிக்கின்றன,

அதாவது பலன் தருகின்றன.

தாவரங்களின் கனி தராத பழைய கிழைகளைக் கத்தரித்து விட்டு விட்டால் தளிர்க்கும் புதிய கிளைகள் நன்கு பலன் தரும்.
 
இந்த அடிப்படையில் தான் ரோஜா செடிகளும், திராட்சைக் கொடிகளூம் கத்தரித்து விடப்படுகின்றன.

"என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார்.

 கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்."

என்று ஆண்டவர் சொல்கிறார்.


இதற்கான ஆன்மீக விளக்கம் என்ன?

நாம் ஞானஸ்நானத்தின் மூலம் ஆண்டவரோடு இணைக்கப் பட்டிருக்கிறோம்.

ஆகவே இயேசுவின் அருள் இயல்பாக நமக்குள் வர வேண்டும்.

ஆனால் உலக காரியங்களில் நாம் காட்டும் அக்கறை காரணமாக ஆண்டவரோடு நமக்குள்ள நெருக்கம்ற குறைகிறது.

இதனால் அருள் வரத்தும் குறைகிறது.

அருள் வரத்து குறையக் குறைய நாம் ஆன்மீக வாழ்வின் வேகமும் குறைகிறது.


வேகத்தை அதிகரிக்க ஆண்டவர் நமக்குத் துன்பங்களை அனுமதிக்கிறார்.

நாம் அவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்காக நாம் ஆண்டவரை நோக்கி செபிப்போம்.

அவர் நமது பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கத் தூண்டுவார்.

நாமும் பாவங்களுக்கு மனஸ்தாபப் பட்டு,

பாவ சங்கீர்த்தனம் செய்து,

பாவ மன்னிப்புப் பெற்று

பரிசுத்த நிலையில் வளர்வோம்.

இறையருள் வரத்தின் அளவு அதிகரிக்கும்.

ஆன்மீகத்தில்  மிகுந்த கனி கொடுக்க ஆரம்பிப்போம்.

இவ்வாறு தான் நமது ஆண்டவர் 
கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுகிறார்."

நாம் ஆன்ம வாழ்வில் அக்கறை காட்டாததன் காரணமாக பாவ நிலையில் விழ நேர்ந்தால் இறைவனோடு நமக்குள்ள உறவு முறிந்து விடும்.

அருள் நமக்கு முற்றிலுமாக நின்று விடும்.

 ஆன்மீக வாழ்வும் நின்று விடும்.

பாவ நிலையிலிருந்து நம்மை வெளிக் கொணர‌ இயேசு நமக்குத் துன்பங்களை அனுமதிக்கிறார்.

நாம் துன்பங்களிலிருந்து விடுதலை பெற இயேசுவை அணுகுவோம்.

அவர் நம்மை பாவ மன்னிப்பு பெற தூண்டுவார்.

அதற்கான அருள் வரத்தையும் தருவார்.

நாம் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெறுவோம்.

பாவ மன்னிப்பு பெற்றவுடன் அருள் நிலைக்குத் திரும்புவோம்.

அருள் வரத்து அதிகமாகும்.

ஆன்மீகக் கனி கொடுக்க ஆரம்பிப்போம்.



"நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது."

திராட்சைக் செடியோடு கிளைக் கொடிகள் இணைந்திருந்தால் தான் அவற்றால் கனி கொடுக்க முடியும்.

செடியை விட்டுக் கீழே விழுந்து விட்டால் அவை வாடி வதங்கிப் போகும்.

எருக்குழியில் போடப்படும்.

அதேபோல் கிறிஸ்துவர்கள் அருள் நிலையில் கிறிஸ்துவோடு இணைந்திருந்தால் தான் ஆன்மீக வாழ்வில் வளர்வதற்கான அருள் அவரிடமிருந்து அவர்களுக்குள் செல்லும்.

அவர்களும் ஆன்மீக வாழ்வில் வளர்வார்கள்.

அவர்கள் சாவான பாவம் செய்ய நேரிட்டால் கிறிஸ்துவுக்கும் அவர்களுக்கும் இடையிலான இணைப்பு அறுந்து விடும்.

அவரிடமிருந்து அருளுணவு அவர்களுக்குள் வராது.

அருளுணவு நின்று விட்டால் ஆன்மீக வாழ்வும் நின்று விடும்.

அவர்களால் ஆன்மீகக் கனி தர இயலாது.

நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெற்றபின்புதான் இணைப்பு மீண்டும் ஏற்படும்.

இயேசுவோடு ஒன்றித்து வாழ்பவர்கள் தரும் ஆன்மீக் கனிகளில் சில:

அன்பு,
பரிவு, 
இரக்கம், 
நல்லெண்ணம், 
மனத்தாழ்மை, 
கனிவு, 
பொறுமை, 
மன்னிப்பு,
 அமைதி, 
நன்றி உணர்வு
தாழ்ச்சி
கற்பு
விவேகம்
மட்டசனம் 
பிறர்சிநேகம் 
 சுறுசுறுப்பு
 மகிழ்ச்சி
சமாதானம், 
 தயவு, 
நற்குணம்,
 விசுவாசம், 
சாந்தம்,
 இச்சையடக்கம்

திராட்சை செடியோடு இணைந்த கொடிகள் கனிகள் தருவது போல

இயேசுவோடு இணைந்து  ஆன்மீகக் கனிகளால் நிறைந்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, April 24, 2024

"நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்."(அரு. 14:14)

"நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்."
(அரு. 14:14)



"எங்கள் வங்கியில் எவ்வளவு பணம் கேட்டு விண்ணப்பித்தாலும் உடனே கொடுக்கப்படும்,

கடனாக அல்ல, இலவசமாக.

என்ன காரணத்திற்காக என்ற விபரம் மட்டும் கொடுக்கப்பட வேண்டும்."

என்று ஒரு வங்கி விளம்பரம் செய்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

வங்கியின் முன் எவ்வளவு கூட்டம் அலை மோதும்!

"நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்."

என்று சர்வ வல்லவரான கடவுள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

வங்கியில் குறிப்பிட்ட அளவு தான் பணம் இருக்கும்.

ஆனால் அளவு கடந்த செல்வத்துக்கு உரிமையாளர் கடவுள்.

காலம் மாறும் போது வங்கியின் நடவடிக்கைகள் மாறும்.

ஆனால் இறைவன் என்றும் மாறாதவர்.

சொன்ன சொல் தவறாதவர்.

பணத்திற்காக வங்கியின் முன் அலை மோதுபவர்களில் எத்தனை பேர் அருளுக்காக இறைவன் முன்னால் 
அலை மோதுகிறோம்?

அவர் சொன்னதை நம்பி நம்மில் எத்தனை பேர் அவர் பெயரால் நமக்கு வேண்டியதை எல்லாம் கேட்கிறோம்?

"நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்."

நீங்கள், நாம்.


என் பெயரால், 
இயேசுவின் பெயரால்.

இயேசு நமக்காகப் பட்ட வேதனை மிகுந்த பாடுகளின் பெயரால்.

இயேசுவின் சிலுவை மரணத்தின் பெயரால்.

எதைக் கேட்டாலும், 
நாம் ஆன்ம சரீரத்தோடு இவ்வுலகில் வாழ்கிறோம்.

நமக்கு இரண்டு விதமான உதவிகள் ஒரே நோக்கத்திற்காகத் தேவைப் படுகின்றன.

நமது ஆன்மீக மீட்புக்குத் தேவையான இறைவனது அருள் சார்ந்த உதவிகள்.

நமது உடல் நலனுக்குத் தேவையான பொருள் சார்ந்த உதவிகள்.

இரண்டிற்கும் ஒரே நோக்கம் தான், விண்ணகப் பாதையில் வேக நடைபோட.

நாம் எந்த உதவியைக் கேட்டாலும் இறைவன் கட்டாயம் செய்வார்.

நமது ஆன்மா வாழ்வதுவிண்ணக‌ வாழ்வுக்காக.

நமது உடல் வாழ்வது ஆன்மீக வாழ்வில் நமது ஆன்மாவுக்கு உதவிகரமாய் இருப்பதற்காக.

ஆன்மா ஆன்மீக காரியங்களைச் சிந்திப்பதற்காக.

உடல் நமது சிந்தனையைச் சொல்லிலும், செயலிலும் வெளிப் படுத்துவதற்காக.

நாம் சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் ஆன்மீக வாழ்க்கை வாழ வேண்டும்.

ஆன்மீக வாழ்க்கை வாழ ஆண்டவரின் அருளுதவி வேண்டும்.

ஆண்டவரின் அருளுதவி இல்லாமல் நம்மால் உலகில் ஆன்மீக வாழ்வு வாழ முடியாது.

ஆன்மீக வாழ்வு வாழாமல் நம்மால் விண்ணக வாழ்வுக்குள் நுழைய முடியாது.

இது நமக்குத் தெரியும்.

விண்ணக வாழ்வுக்காகத்தான் நாம் ஒவ்வொரு வினாடியும் வாழ்கிறோம்.

இதுவும் நமக்குத் தெரியும்.

நாம் வாழும் ஒவ்வொரு வினாடியும் கடவுளுடைய அருள் உதவி நமக்குத் தேவை.

இதுவும் நமக்குத் தெரியும்.

தெரிந்தும் தெரியாதவர்கள் போல் வாழ்கின்றோம்.

இறைவாக்கை வாசித்த பிறகாவது தெரிந்ததைச் செயல் படுத்த ஆரம்பிக்கலாமா?

"ஒவ்வொரு வினாடியும் என் நலன் கருதி என்னுள் வாழும் என் தெய்வமே,

"என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்." என்று வாக்குக் கொடுத்தவரே,


தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே அதிகாலையில் படுக்கையை விட்டு எழுகிறேன்.

பகல் முழுவதும் உம் பெயரால் உமக்காகவே நான் வாழ அருள் புரிய வேண்டுகிறேன்.

நான் விடும் ஒவ்வொரு மூச்சும் உமக்காக.

என் மனதில் எழும் ஒவ்வொரு எண்ணமும் உமக்காக.

எனது ஒவ்வொரு அசைவும் உமக்காக.

உண்ணும் உணவும், உடுத்தும் உடையும் உமக்காக.

நடக்கும் நடையும் உமக்காக.

செய்யும் பணியும் உமக்காக.

எனது நினைவிலும், சொல்லிலும், செயலிலும் உமக்காகவே வாழ ஆசைப்பட்டாலும்

சுயமாக என்னால் ஒன்றும் செய்ய இயலாது.

ஒவ்வொரு வினாடியும் உமது அருளால் என்னை நிரப்பும்.

உமது அருளின் உதவியால் உமக்காக வாழ்வேன்.

நீண்ட நாள் வாழ வரம் கேட்கவில்லை.

பூரண சுகத்துடன் வாழ வரம் கேட்கவில்லை.

எவ்வளவு காலம் வாழ்ந்தாலும்,
எத்தகைய உடல்நலத்துடன் வாழ்ந்தாலும்

பாவமின்றி, பரிசுத்தனாய் வாழ வரம் தாரும்.

ஒவ்வொரு வினாடியும் எனது விண்ணகப் பாதையில் என்னை வழி நடத்தும்.

இவ்வுலகில் உமது விருப்பம் போல் வாழவும்,

மறுவுலகில உம்மோடு நித்திய காலம் வாழவும் வரம் தாரும்."

லூர்து செல்வம்

Tuesday, April 23, 2024

"இயேசு அவரிடம், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை."(அரு. 14:6)

"இயேசு அவரிடம், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை."
(அரு. 14:6)

பன்னிரு சீடர்களுள் ஒவ்வொருவரும் ஒரு விசயத்தில் கெட்டியாக இருந்தார்கள்.

இராயப்பர் பதில் சொல்வதில் கெட்டி.

அருளப்பரும், யாகப்பரும் பதவி கேட்பதில் கெட்டி.

தோமையார் கேள்வி கேட்பதில் கெட்டி.

சந்தேகத் தோமையார் என்று பெயர் வாங்கியவர்.

உண்மையை உறுதியாகத் தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு சந்தேகம் வரும்.

மற்றவர்களும் உண்மையை அறிந்து கொள்ள அது உதவியாக இருக்கும்.

ஆண்டவர் "நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்" என்று 
சொன்னபோது

தோமையார் 

"ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது.

 அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?" 

என்று கேட்டார். 

அதற்கு ஆண்டவர் சொன்ன பதில் சீடர்களுக்கு மட்டுமல்ல அகில உலகத்தவருக்கும் வாழ்க்கைக்கு வழிகாட்டியான பதிலாக விளங்குகிறது.

"வழியும் உண்மையும் வாழ்வும் நானே.

 என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை."

நாம் உலகில் பிறந்தது வாழ.

பிறந்த அனைவரும் இறக்க வேண்டும் என்பது உறுதியாயினும் யாரும் இறக்க விரும்புவதில்லை.

மரணமின்றி வாழவே விரும்புகிறார்கள்.

அது இவ்வுலகில் முடியாது.

மறுவுலகில்தான் முடியும்.

இயேசு மறுவுலகிலிருந்து இவ்வுலகிற்கு வந்தவர்.

தந்தையிடமிருந்து வந்தவர்.

தந்தையிடம் போகப்போவதாகச் சொல்கிறார்.

"தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன.

 உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்.


நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்.

 அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். 


நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்" என்கிறார்."

தோமையாருக்குச் சிந்திக்கத் தெரிந்திருந்தால்,

"நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" என்று சொன்னீர்களே, அப்படியானால் தந்தை இங்கே தானே இருக்கிறார்"

என்று சொல்லியிருக்க வேண்டும்.

ஆனால் அவர்

"நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?"  என்று கேட்கிறார்.

இவ்வுலகில் வழி என்றவுடன் நம் மனதில் தெருவும் சாலையும் தான் ஞாபகத்துக்கு வரும்.

ஆனால் ஆண்டவர் கூறப்போகும் வழி விண்ணகத்துக்கான வழி.

விண்ணகம் உலகத்தைப் போல ஒரு இடம் அல்ல. அங்கு போக நேரமும் ஆகாது.

ஆண்டவர்,

"வழியும், உண்மையும், வாழ்வும் நானே. 

என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை" என்கிறார்.

தந்தையிடம் செல்வதற்கான வழி இயேசுவே.

சிறிது சிந்தித்துப் பார்த்தால் ஒரு உண்மை புரியும்.

தந்தையும் மகனும் ஒருவர் தான்.

 தந்தையுள் மகன் இருக்கிறார்,

மகனுள் தந்தை இருக்கிறார்.

மகனுள் இருக்கும் தந்தைக்கு வழி மகன்தானே!

இது உலகைச் சார்ந்த வழி அல்ல,
ஆன்மீக வழி.

It is a spiritual path, not a physical one.

ஆன்மீக வழி இயேசுவின்
ஆன்மீகப் போதனையில் அடங்கியிருக்கிறது.

இயேசுவின் போதனை வழி நடப்போர் விண்ணகத்தை நோக்கி நடக்கிறார்கள்.

இயேசுவின் போதனைப்படி வாழ்வோர் விண்ணக வாழ்வை அடைவர்.

விண்ணக வாழ்வு மனிதன் ஆசைப்படும் 

மரணமற்ற வாழ்வு.

நித்திய ஜீவிய வாழ்வு.

நிலை வாழ்வு.

இவ்வுலக வாழ்வு ஒருநாள் முடிவுக்கு வரும்.

நிலை வாழ்வு நிலையானது, முடிவில்லாதது, நிரந்தரமானது.

இயேசுதான் வாழ்வு.

வாழ்வை அடைய வழியும் இயேசுவே.

இயேசுவின் வழியாகத்தானே இயேசுவுக்குள் நுழைய முடியும்.

உலகில் நாம் அறிய வேண்டிய ஒரே உண்மை இயேசுவே.

நமது மொழியறிவு நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்லாது.

நமது புவியியல் அறிவு நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்லாது.

நமது அறிவியல் அறிவு நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்லாது.

நாம் வாங்கும் பட்டங்கள் நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்லாது.

இயேசு மட்டும் தான் நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்வார்.

ஏனெனில் இயேசு தான் விண்ணக வாழ்வு.

நாம் திருவிருந்தில் கலந்து கொள்ளும் போதெல்லாம் நமக்குள் விண்ணக வாழ்வு வருகிறது.

அந்த வகையில் கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வுலகில் வாழும் போதே விண்ணகத்தில் தான் வாழ்கிறோம்.

அந்த உணர்வோடு வாழ்கிறோமா?

இயேசுவோடு வாழ்வோம்.

இயேசுவுக்குள் வாழ்வோம்.

இயேசுவோடு இயேசுவுக்குள் வாழும் உணர்வோடு வாழ்வோம்.

விண்ணக வாழ்வை மண்ணகத்திலேயே அனுபவித்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, April 22, 2024

'"என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார்."(அரு. 12:45)

"என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார்."
(அரு. 12:45)

இயேசுவைக் காண்பவர்கள் தந்தை இறைவனைக் காண்கிறார்கள்.

ஏனெனில் இருவரும் ஒரே கடவுள்.

தந்தை, மகன், தூய ஆவி மூவரும் மூன்று ஆட்கள், ஒரே கடவுள்.

மூவருக்கும் ஒரே ஞானம், ஒரே வல்லமை, ஒரே தேவ சுபாவம்.

பரிசுத்த தம திரித்துவத்தைப் நமக்கு ஏற்கனவே தெரியும்.

தெரிந்ததைப் பற்றி புதிதாக ஒரு கட்டுரை எதற்கு?

ஒரே உண்மையை வித்தியாசமான கோணங்களில் இருந்து பார்க்கலாம்.

இக்கட்டுரையில் நமது கோணத்திலிருந்து பரிசுத்த தம திரித்துவத்தைப் பார்ப்போம்.

From our point of view.

நாம் ஒவ்வொருவரும் ஒரு ஆள்.

ஒரே ஆளுக்குள் மூன்று தத்துவங்கள்.

மூன்று தத்துவங்கள் ஒரே ஆள்.

தம திரித்துவம், ஒரே கடவுள் மூன்று ஆட்கள்.

மனிதன், ஒரே ஆள், மூன்று தத்துவங்கள்.

சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்று தத்துவங்களை உடையவன் தான் ஒரு மனிதன்.

 கடவுளில் மூன்று ஆட்களுக்கும் ஒரே பண்பு.

மனிதனில் மூன்று தத்துவங்களுக்கும் ஒரே........?

ஒரே என்ன?

நமது மூன்று தத்துவங்களும் ஒரே என்னவாக இருந்தால் நாம் கடவுளின் சாயலைக் கொண்டிருப்போம்?

நமது சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒன்றாக இருந்தால்,

அதாவது,

நாம் சிந்திப்பதைச் சொல்லி, சொன்னதைச் செய்தால் 

நாம் கடவுளின் சாயலைக் கொண்டிருப்போம்.

உள்ளொன்றை வைத்துக் கொண்டு,

வேறொன்றை சொல்லி,

இன்னொன்றைச் செய்தால் கடவுளின் சாயல் இல்லை.

அரசியல் வாதிகளை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம்.

உள்ளத்தில்,

தேர்தலில் வென்று, பதவியில் அமர்ந்து பணம் சம்பாதிக்க வேண்டும். வசதியாக வாழ வேண்டும்.

சொல்லில்,

விலைவாசியைக் குறைப்போம். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம்.

செயலில்.

மக்களிடமிருந்து அதிக வரி வசூலிப்பார்கள்.  அவர்கள் வசதியாக வாழ்வார்கள்.

சிந்தித்ததைச் செயல்படுத்துவார்கள்.

ஆனால் 

சிந்தித்ததைச் சொல்ல மாட்டார்கள். சொன்னதைச் செய்ய மாட்டார்கள்.

அரசியல்வாதிகளிடம் கடவுளின் சாயல் இல்லை.

நாம் கிறிஸ்தவர்கள். நம்மிடம் கடவுளின் சாயல் இருக்கிறதா என்பதை பரிசோதித்துப் பார்ப்போம்.

இயேசுவின் போதனைகள் நமது சிந்தனையில் இருக்க வேண்டும்.

அவைகளே நமது சொல்லிலும் செல்லிலும் இருக்க வேண்டும்.

உங்கள் விரோதிகளை நேசியுங்கள்.

இது இயேசுவின் போதனை.

நம்மை பகைப்பவர்களை நாம் நேசிக்கின்றோமா?

சிந்தனையில் அவர்களை நேசிக்காதவர்களின்    ஆன்மீக வாழ்வு ஆரம்பிக்கவேயில்லை.

மனதில் பகையை வைத்துக் கொண்டு "நேசிக்கிறேன்" என்று சொல்பவர்கள் நடிகர்கள்.

சிந்தனையில் உள்ளது தான் செயலில் வரும்.

ஆனால் சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒத்து வராதவர்களிடம் கடவுளின் சாயல் இருக்க முடியாது.

கடவுளின் சாயல்  இருந்தால் தான்  அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ முடியும்.

ஆகவே இயேசுவின் போதனையை சிந்தனையில் கொள்வோம்.

அதையே பேசுவோம்.

அதையே செய்வோம்.

நித்திய பேரின்ப வாழ்வு நமக்குத் தான்.

திருப்பலிக்குச் செல்கிறோம்.

திருப்பலி நேரத்தில் கூட்டத்தோடு கூட்டமாகச் செபம் சொல்கிறோம்,

பாட்டுப் படிக்கிறோம், வாயினால்.

சிந்தனை வேறு எங்காவது இருந்தால்?

நாம் சொல்வது செபமும் அல்ல,
படிப்பது பாட்டும் அல்ல, வெறும் சப்தம்.

"நித்திய துதிக்குரிய" பாடி திவ்ய நற்கருணையை ஆராதிக்கிறோம்.

சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் ஆராதனை உணர்வு இருக்க வேண்டும்.

சிந்தனையிலும், சொல்லிலும் செப வார்த்தைகள்.

செயலில்?

திவ்ய நற்கருணையை ஆராதிக்கும்போது முழந்தாள் படியிட்டிருக்க வேண்டும்.

தூங்கும் போது படுத்த நிலை.

நடக்கும் போது நிமிர்ந்த நிலை.

சாப்பிடும் போது அமர்ந்த நிலை.

இறைவனை ஆராதிக்கும்போது முழந்தாள் படியிட்ட நிலை.

சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒன்றுபட்ட நிலையைச் சத்தியம் என்கிறோம்.

நல்லதை நினைத்து, நல்லதைச் சொல்லி, நல்லதைச் செய்பவனைச் சத்தியவான் என்கிறோம்.

அரசியலிலும் அது இருக்க வேண்டும் என்று காந்தி சொன்னார்.

ஆன்மீகத்தில் அப்படி இருக்க வேண்டும் என்று நம் ஆண்டவர் விரும்புகிறார்.

ஆண்டவரின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்.

லூர்து செல்வம்.

Sunday, April 21, 2024

கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை." (அரு. 10:13)(தொடர்ச்சி)

கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை." (அரு. 10:13)
(தொடர்ச்சி)

இதில் வேதனைக்குரிய விசயம் என்னவென்றால் பிரிவினை சகோதரர்களின் செபக் கூட்டங்களுக்குச் செல்லும் நம்மவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக நம்மவர்களும் அவர்களது பாணியைப் பின்பற்ற ஆரம்பித்திருப்பது தான்.

"சுகமளிக்கும் ஆவிக்குரிய கூட்டங்கள்"
(charismatic prayer meetings)
நம்மிடையே நம்மிடையே ஆரம்பிக்கப் பட்டிருப்பதன் நோக்கம் நம் மக்களை பிரிவினை சபையாரின் கவர்ச்சி செபக் கூட்டங்களுக்குப் போக விடாமல் தடுப்பது தான்.

பெந்தகோஸ்தே சபையினரின் ஆவிக்குரிய கூட்டங்களுக்குப் போகின்றவர்கள் உடல் சார்ந்த நோய்கள் குணமாவதற்காகப் போகின்றார்கள்.

குணம் பெற்றதாகச் சாட்சியும் கூறுகிறார்கள்.

அங்கு ஒரு முறை சென்றவர்கள் தொடர்ந்து போக ஆரம்பிக்கிறார்கள்.

நமது அருட்சாதனங்களை மறந்து விடுகிறார்கள்.

இதைத் தடுத்து நிறுத்தும் நல்ல நோக்கத்தோடு தான் நம்மவர்கள் சுகமளிக்கும் ஆவிக்குரிய கூட்டங்கள் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

முன்பெல்லாம் தியானக் கூட்டங்களில் அமைதி நிலவும்.

செபம் செய்யும் போது கை கூப்பிய நிலையில் இருந்தோம்.

செபம் சொல்லும் போது கைகளை உயர்த்தி ஆட்டுதல், தட்டுதல் போன்ற பழக்கங்கள் மற்றவர்களிடமிருந்து நம்மைத் தொற்றிக் கொண்டவை.

(Catholic charismatic prayer services are enthusiastic and involve energetic singing, hand clapping and praying with arms outstretched.)

இதில் தவறு ஒன்றுமில்லை.

ஆனால் ஆன்மீகக் கூட்டங்கள் ஆன்மீக சுகம் பெறுவதையே மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.

உண்மைதான், ஆண்டவர் தனது பொது வாழ்வின்போது அநேகருக்கு உடல் நலம் கொடுத்தார்.

நமது புனிதர்களும் தங்களை நோக்கி வேண்டுபவர்களுக்கு  உடல் நோய்களிலிருந்து விடுதலையை இயேசுவிடமிருந்து பெற்றுக் கொடுக்கிறார்கள்.

வேளாங்கண்ணி, உவரி, லூர்து நகர் போன்ற திருத்தலங்களில் நடக்கும் புதுமைகள் இதற்குச் சான்று.

ஆனால் அவை நமக்கு ஆன்மீக நலனில் அக்கறை கொள்ள வைப்பதற்காக.

பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்கு வந்து படிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக்கூடத்தில் உணவு போடுகிறார்கள்.

ஆனால் பள்ளிக்கு ஒருவன் சாப்பிட மட்டும் போய், படிக்காவிட்டால்?

செபக்கூட்டங்களுக்கு உடல்நலம் மட்டும் பெறுவதற்காகப் போகின்றவர்கள்

சாப்பிட மட்டும் பள்ளிக்குப் போகும் மாணவனைப் போன்றவர்கள்.

சுகமளிக்கும் ஆவிக்குரிய கூட்டங்களுக்குப் போகின்றவர்கள்

பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெறுவதையே முதல் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

செபக் கூட்டங்களுக்குப் போய் பாவ சங்கீர்த்தனம் செய்யாமல் வருபவர்கள்

குளிப்பதற்கு என்று ஆற்றுக்குப் போய் தண்ணீரில் இறங்காமல் வருபவர்களுக்குச் சமம்.

பைபிளை உலகுக்குக் கொடுத்தது கத்தோலிக்கத் திருச்சபை.

பைபிள் உருவான காலத்திலிருந்தே திருச்சபை அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

ஒவ்வொரு திருப்பலியிலும் பைபிள் வாசகங்கள் வாசிக்கப் பட்டு விளக்கப் பட்ட பின்புதான்

அப்பம் பிட்குதல் நடைபெற்றது.

ஆதித் திருச்சபையில் வீட்டுக்கு ஒரு பைபிள் இல்லை.

காரணம் அப்போது அச்சு இயந்திரம் கண்டு பிடிக்கப் படவில்லை.

கையெழுத்துப் பிரதி எடுப்பது மிகவும் கடினம்.

அச்சு இயந்திரம் கண்டு பிடிக்கப் பட்ட பின் முதல் முதல் அச்சடிக்கப் பட்ட புத்தகம் பைபிள் தான்.

 பிரிந்து போனவர்கள் பைபிளை மட்டும் எடுத்துக் கொண்டு அலைவதைப் பார்த்து விட்டு

நாம் அவர்கள் அளவுக்கு பைபிளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறிக்கொண்டு

வீட்டுக்கு ஒரு பைபிள், ஆளுக்கொரு பைபிள் என்று வற்புறுத்த ஆரம்பித்தனர்.

கொடுக்கவும் செய்தனர்.

இப்போது வீட்டுக்கொரு பைபிள் இருக்கிறது.

பூசைக்குப் பைபிளோடுதான் போகிறோம்.

பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது ஆசிரியர் நடத்துவதைக் கவனிக்க வேண்டும்.

புத்தகத்தைப் புறட்டிக் கொண்டிருக்கக் கூடாது.

பூசை நேரத்தில் பைபிள் வாசகங்களையும், குருவின் பிரசங்கத்தையும் காது கொடுத்து கூர்ந்து கவனிக்க வேண்டும்.

அப்போது பைபிளைப் புறட்டிக் கொண்டிருக்கக் கூடாது.

   பைபிளுக்கு  முக்கியத்துவம்
கொடுக்கப்படுவது நல்லதுதான்.

ஆனால் அநேகர்  நமது  வாழ்வின் மையமான திவ்ய நற்கருணைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதை நினைக்கும் போது கவலையாக இருக்கிறது.

பைபிளை மறக்காமல் கோவிலுக்கு எடுத்து வருபவர்களில் சிலர் பூசை ஆரம்பித்த பின்பு வருகிறார்கள்.

முழுப் பூசை காண்பதன்  முக்கியத்துவம் போய்விட்டது தான் கவலை அளிக்கிறது.

நற்கருணை வாங்கும் முறையும் கவலை அளிக்கிறது.

நண்பர்களோடு கை குலுக்க வலது கை.

பெரியவர்கள் தருவதை வாங்க வலது கை.

இடது கையில் வாங்கினால் அடி கிடைக்கும்.

சாப்பிட வலது கை.

தேசியக்கொடியை வணங்க வலது கை.

...........க்கு இடது கை.

நற்கருணை நாதரை வாங்க இடது கை.

நற்கருணை நாதருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்!

இறை வார்த்தைக்கு கொடுக்கிற மரியாதை வார்த்தையானவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதைக்கு நம்மை இட்டுச் செல்ல வேண்டும்.

பைபிள் வார்த்தையானவரின் வார்த்தை.

வார்த்தையானவர் நித்திய காலமாக இருக்கிறார்.

மனிதன் படைக்கப்பட்ட பின்பு அவரது வார்த்தை அவனுக்கு அவரால் அளிக்கப் பட்டது.

"ஆதியில் வார்த்தை இருந்தது."

வார்த்தை வார்த்தையானவரை, இறை மகனைக் குறிக்கும்.

அவர் நமக்குத் தந்த பைபிள் அவருடைய வார்த்தை.

வார்த்தையானவரிடமிருந்து வார்த்தை வந்தது.

வார்த்தையிலிருந்து 
வார்த்தையானவர் வரவில்லை.

ஆன்மீக வாழ்வின்  மையம் வார்த்தையானவருக்கா?

வார்த்தைக்கா?

சிந்திப்போம்.

ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி.

பாவூர்சத்திரம் பங்கில் முழங்கால் படியிட்டு நாவில் திவ்ய நற்கருணை வாங்க ஆரம்பித்து விட்டோம்.

இது பங்குத்தந்தை அருட்திரு ஜேம்ஸ் அடிகளாரின் சாதனை.

இறைவனுக்கு நன்றி.

லூர்து செல்வம்.

Saturday, April 20, 2024

"கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை."(அரு. 10:13)

"கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை."
(அரு. 10:13)

ஆயனுக்கு ஆடுகள் சொந்தம்.

ஆடுகளைப் பேணுவது மட்டுமே அவனது வாழ்க்கை.

ஆடுகளுக்கு எந்த வித ஆபத்தும் வராமல் பாதுகாப்பதில் கவனமாக இருப்பான்.

ஆகவே தன் சிந்தனையாலும், செயலாலும் எப்போதும் ஆடுகளுடனே இருப்பான்.

ஆனால் கூலிக்கு வேலை பார்ப்பவனுக்கு எப்போதும் கவனம் கூலியின் மேல்தான் இருக்கும்.

அவனைப் பொறுத்தவரை கூலிக்காக ஆடுகள்,
ஆடுகளுக்காகக் கூலியில்லை.

ஆடுகளால் கிடைக்கும் கூலியை விட வேறெங்காவது அதிகம் கூலி கிடைத்தால் அவற்றை விட்டு விட்டு அங்கே போய் விடுவான்.

நல்ல ஆயனாகிய இயேசு தனது நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்க தனது சீடர்களை அனுப்பினார்.

அவர் செய்த பணியைச் சீடர்கள் செய்தார்கள்.

அதற்காகத்தான் கத்தோலிக்க திருச்சபையை நிறுவி, அதன் தலைவராக இராயப்பரை நியமித்தார்.

இராயப்பரும், சீடர்களும், அவர்களுகாகுப் பின்னால் வந்த பாப்பரசர்களும், ஆயர்களும், குருக்களும்

இயேசுவின் இடத்திலிருந்து நல்லாயனுக்குரிய பணியைச் செய்து வருகிறார்கள்.

பதினாறாம் நூற்றாண்டில் கத்தோலிக்கத் திருச்சபையை விட்டுப் பிரிந்து சென்ற ஆயர்களும், குருக்களும்

திருச்சபையின் பாரம்பரியத்தை விட்டு விட்டு

பைபிளை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு,

இயேசு என்னும் பெயரையும் எடுத்துக் கொண்டு

கூலிக்கு ஆடுகளை மேய்க்கச் சென்று விட்டார்கள்.

அவர்களுடைய முக்கிய நோக்கம் காணிக்கை என்ற பெயரில் அவர்கள் வசூலிக்கும் கூலி.

அதற்கு அவர்கள் பயன்படுத்துவது பைபிளையும், இயேசு என்ற பெயரையும்.

அவர்கள் பயன்படுத்துவது உண்மையான பைபிள் அல்ல.

தங்கள் விருப்பப்படி மாற்றிக் கொண்ட பைபிள்.

அவர்கள் வழிபடுவது இறைமகன் இயேசுவை அல்ல.

இறைமகன் இயேசு தமது பாவங்களை மன்னிப்பதற்காக மனிதனாகப் பிறந்தார்.

அதற்காகத் தன்னையே சிலுவையில் பலியாக்கினார்.

பலிப் பொருளை உண்பதற்காகத் திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

தான் செய்ததை எல்லாம் செய்யும் வல்லமையைத் தனது சீடர்களுக்குக் கொடுத்தார்.

1.பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தையும்,

2.தன் பெயரால் திருப்பலி நிறைவேற்றும் அதிகாரத்தையும்,

3.திவ்ய நற்கருணையை அவருடைய அடியார்களுக்கு உணவாகத் தரும் அதிகாரத்தையும்

தனது சீடர்களுக்குக் கொடுத்தார்.

பாவ மன்னிப்பு கொடுக்கும் அதிகாரமும்,

திருப்பலி நிறைவேற்றும் அதிகாரமும்,

திவ்ய நற்கருணையை அவருடைய அடியார்களுக்கு உணவாகத் தரும் அதிகாரமும் உள்ளவர்கள் தான் அவருடைய சீடர்கள்.

இந்த குருத்துவ அதிகாரம் இயேசுவிலிருந்து தொடர்பு விடாமல் உலகம் முடியும் வரை இறங்க வேண்டும்.

இந்த மூன்று அதிகாரங்களையும் தனது சீடர்களுக்குக் கொடுத்த இயேசுவே இறைமகன் இயேசு.

நமது பிரிவினை சகோதரர்களுக்கு இந்த அதிகாரங்கள் இல்லை.

ஆகவே அவர்கள் போதிப்பது உண்மையான இயேசுவின் போதனைகளை அல்ல.

அவர்கள் இயேசுவால் அனுப்பப் பட்ட சீடர்கள் அல்ல,

ஆகவே உண்மையான ஆயர்கள் அல்ல.

அவர்கள் இயேசுவைப் பணம் சம்பாதிக்கப் பயன்படுத்தும் கூலிகள்

"நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆட்டுக் கொட்டிலில் வாயில்

(கத்தோலிக்க திருச்சபை)

வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். 

வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். 

அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார்."
(அரு. 10:1,2,3)

ஆக கத்தோலிக்க திருச்சபையில் உள்ள ஆயர்களே இறைமகன் இயேசுவால் அனுப்பப் பட்டவர்கள்.

கத்தோலிக்கர்களாகிய நாம் நமது ஆயர்களுக்கே செவி கொடுக்க வேண்டும்.

பிரிவினை சகோதரர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி அவர்கள் நடத்தும் நற்செய்திக் கூட்டங்களுக்குச் செல்லக்கூடாது.

அங்கே நமக்குப் பாவ மன்னிப்பும் கிடையாது,

திருப்பலியும் கிடையாது,

திவ்ய நற்கருணையும் கிடையாது.

உண்மையான இயேசுவின் போதனைகளும் கிடைக்காது.

பைபிள் வசனங்களுக்கு அவர்கள் அவர்கள் கொடுக்கும் விளக்கத்துக்கும், ஆண்டவரின் உண்மையான போதனைக்கும் சம்பந்தமே இருக்காது.

கத்தோலிக்கர்கள் பிரிவினை சகோதரர்களின் கூட்டங்களுக்குப் போவதும்,

மாணவர்கள் பள்ளிக்கூட நேரத்தில் சினிமா தியேட்டருக்குப் போவதும் ஒன்று தான்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

Friday, April 19, 2024

அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை. (அரு. 7:30)

அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை. 
(அரு. 7:30)


நாம் இடத்துக்கும், நேரத்திற்கும் உட்பட்டவர்கள்,

கடவுள் இடத்துக்கும்,நேரத்திற்கும் அப்பாற்பட்டவர்.

நித்தியர்.

அவர் நேரத்திற்கு அப்பாற்பட்டவராயினும்

நேரத்தைப் படைத்தவர் அவர்தான்.

நாம் வாழும் பிரபஞ்சம் படைக்கப் பட்ட போது நேரம் ஆரம்பமாயிற்று.

அவரால் படைக்கப்பட்ட நாம் அவரால் படைக்கப்பட்ட நேரத்துக்கு உட்பட்டு வாழ்கிறோம்.

காலங்களைக் கடந்தவர் காலத்திற்கு உட்பட்ட நம்மை மீட்பதற்காக

அவரே காலத்துக்கு உட்பட்ட மனிதராகப் பிறந்தார்.

குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் பிறந்தார்.

குறிப்பிட்ட காலம் வரை வளர்ந்தார், வாழ்ந்தார்,

குறிப்பிட்ட காலத்தில் பாடுகள் பட்டார்,

குறிப்பிட்ட காலத்தில் மரித்தார்.

படைக்கப்பட்ட நமது வாழ்க்கை நிகழ்வுகளுக்கும் அவரே காலம் குறித்திருக்கிறார்.

அவர் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட பெற்றோருக்குப் பிறந்தோம்.

நமது விருப்பப்படி பிறக்கவில்லை.

நமது கடந்த காலமும், நிகழ் காலமும் நமக்குத் தெரியும்.

எதிர் காலம் நமக்குத் தெரியாது.

அடுத்த வினாடி என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாது,  அவருக்குத் தெரியும்.

நமது பிறப்பின், நேரமும் இடமும் அவரது நித்திய காலத் திட்டம்.

‌நமக்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும் என்பதும் அவரது நித்திய காலத் திட்டம்.

பாவம் நமது தேர்வு, 

ஆனால் நாம் என்னென்ன தேர்வு செய்வோம் என்பது அவருக்கு நித்திய காலமாகத் தெரியும்.


நாம் என்னென்ன உதவிகள் கேட்போம் என்பதும் அவருக்கு நித்திய காலமாகத் தெரியும்.

நமக்கு என்னென்ன உதவிகள்
 எப்பெப்போ செய்ய வேண்டும் என்பதை அவர் நித்திய காலமாகத் திட்டமிட்டு விடுவார்.

இன்று, இந்த வினாடியில் நாம் அவரை நோக்கி வேண்டுவது அவருக்கு நித்திய காலமாகத் தெரியும்.

இதற்கான பதிலும் அவரிடம் நித்திய காலமாகத் தயார்.

அதற்காக அவர் நித்திய காலத்திலிருந்தே குறிப்பிடு வைத்திருக்கும் நேரத்தில் அது நமக்கு வரும்.

நித்தியரான அவரே மனிதனாகப் பிறந்த பின் தனக்காகத் தானே குறிப்பிட்ட நேரத்திற்காகக் காத்திருந்தார்.

பிறந்தபின் பொது வாழ்வுக்குள் நுழைய 30 ஆண்டுகள் காத்திருந்தார்.

பொது வாழ்வுக்குள் நுழைந்த பின் பாடுகள் பட்டு மரிக்க மூன்று ஆண்டுகள் காத்திருந்தார்.

ஆனால் அவருடைய சீடர்களாகிய நாம் எதை விரும்பினாலும் அது உடனே கிடைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.

இதை எழுதும்போது ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு பையன் அவனுடைய அம்மாவிடம் சென்று, 

"அம்மா, எனக்கு ஒரு குழந்தை வேண்டும்."  என்று கேட்டான்.

"அதற்கு நீ கல்யாணம் முடிக்க வேண்டும்."

"கல்யாணம் முடித்தால் குழந்தை கிடைக்குமா?"

"கட்டாயம் கிடைக்கும்."

ஒரு பெண்ணைப் பார்த்து அவனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.

முதலிரவில் மனைவியைப் பார்த்தவுடனே,

"எனக்கு ஒரு குழந்தை வேண்டும்."

"கட்டாயம் கிடைக்கும். ஆனால் அதற்கு பத்து மாதங்கள் காத்திருக்க வேண்டும்."

"அதெல்லாம் முடியாது. கல்யாணம் முடித்தால் குழந்தை கிடைக்கும் என்று அம்மா சொன்னார்கள்.

முதலில் குழந்தை, அப்புறம் தான் குடும்ப வாழ்க்கை.

இப்போது தூங்கப் போகிறேன். கையில் குழந்தையை வைத்துக் கொண்டு எழுப்பினால் தான் எழுந்திருப்பேன்."

என்று சொல்லி விட்டு தூங்க ஆரம்பித்தான்.

நமது செப விசயத்திலும் கடவுளிடமிருந்து இப்படித்தான் எதிர் பார்க்கிறோம்.

இப்போது நாம் செய்யும் செபம் கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

நாம் கேட்டதை எப்போது தரவேண்டும் என்று அவர் நித்திய காலமாகத் தீர்மானித்திருப்பார்.

அப்போது தான் தருவார்.

விசுவாசத்தின் தந்தை குழந்தைக்காக நூறு ஆண்டுகள் காத்திருந்தார்.

எலிசபெத்தம்மாள் முதல் குழந்தைக்காக கிழவி ஆகும் வரைக் காத்திருந்தாள்.

ஆனால் நமது அன்னை மரியாள் 13 வயதிலேயே, கன்னியாய் இருக்கும் போதே கருத்தரித்தாள்.

மரியாள் குழந்தை வரம் வேண்டி செபிக்கவில்லை,

மாறாக வாழ்நாள் முழுவதும் கன்னியாய் இருக்கப் போவதாக கடவுளுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தாள்.

கடவுள் அவளுடைய வாக்குறுதிக்கு பிரச்சினை வராமல் 

கன்னியின் வயிற்றில் தானே குழந்தையாய் உற்பவித்தார்.

ஆபிரகாம் கேட்டுக் குழந்தை வரம் பெற்றார்.

எலிசபெத் கேட்டுக் குழந்தை வரம் பெற்றார்.

கன்னி மரியாள் கேளாமலேயே குழந்தை வரம் பெற்றார்.

எது எப்போது நடக்க வேண்டும் என்று தீர்மானிப்பவர் கடவுள்.

அவரது தீர்மானம் நமது செபத்தின் விளைவாக இருக்கலாம்.

நாம் கேளாததாகவும் இருக்கலாம்.

அன்னை மரியாளைப் போல நாம் நம்மை முற்றிலுமாக இறைப் பணிக்கு அர்ப்பணித்து விட வேண்டும்.

இறைவன் தன் விருப்பத்தை நம் மூலம் நிறைவேற்றுவார்.

"உமது சித்தம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுவதாக''  மட்டும் நமது செபமாக இருந்தால் போதும்.

மரணத்தை நினைத்தவுடன் பயப்படுகிறவர்கள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள்.

அவர்கள் பயப்படத் தேவையில்லை.

"அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை."

என்று இறைவாக்கு கூறுகிறது.

அது நமக்கும் பொருந்தும்.

கடவுள் குறித்த நேரம் வரும் வரை நம்மை யாராலும், எதாலும் ஒன்றும் செய்ய முடியாது.

நமது நேரம் வரும் வரை எவ்வளவு பெரிய வியாதி வந்தாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

யாராலும் நமது உயிருக்கு ஆபத்து வர முடியாது.

ஆனால் நேரம் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாது.

அடுத்த வினாடியே வந்தாலும் வரலாம்.

ஆகவே பயம் இல்லாமல் எப்போதும் தயாராக இருப்போம்.

லூர்து செல்வம்.

Thursday, April 18, 2024

தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்."(அரு. 7:10)(தொடர்ச்சி)

தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்."
(அரு. 7:10)
(தொடர்ச்சி)


இயேசுவின் சொல்லும், செயலும் இரண்டு வகைகளில் நம்மைப் பாதிக்கின்றன.

1.நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு வழிகாட்டுகின்றன.

2. நமது வாழ்க்கை அனுபவங்களை அவரது வாழ்க்கை அனுபவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க உதவுகின்றன.

யாருடைய வாழ்க்கையின் தன்மையைப் பற்றியும் தீர்ப்புக் கூற மனிதருள் யாருக்கும் அதிகாரம் இல்லை.

நமது வாழ்க்கையின் தன்மையைத் தீர்மானிப்பது நமது அந்தரங்கம்.

நமது அந்தரங்கம் கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

நமது அந்தரங்கத்தில் தான் நமது செயல்களின் நோக்கம் இருக்கும்.

ஒருவன் டாஸ்மாக் கடைக்கு அடிக்கடி போகிறான் என்று வைத்துக் கொள்வோம்.

அதை வைத்து நாம் அவன் ஒரு குடிகாரன் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது.

அவன் எதற்குப் போகிறான் என்று அவனுக்கும், கடவுளுக்கும் மட்டுமே தெரியும்.

கிணற்றில் விழுந்து ஒருவன் தற்கொலை பண்ணிக் கொண்டான் என்பதற்காக

கிணற்றில் குதிப்பவர்களெல்லாம் தற்கொலை பண்ணிக் கொள்கிறார்கள் என்று முடிவு பண்ண முடியாது.

நாம் நமது மனசாட்சியின் படி ஒழுங்காக வாழும் போது மற்றவர்கள் நம்மைப் பற்றி அவதூறாகப் பேசினால் நாம் அதைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

நமது ஆண்டவரை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அவரையும் அப்படித்தான் பேசினார்கள்.

"யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ "அவன் பேய்பிடித்தவன்" என்கிறார்கள். 


 மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார்.

 இவர்களோ, "இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன்,

 வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்" என்கிறார்கள்."

இயேசு என்ன சொன்னாலும் செய்தாலும் அதில் குறை கண்டு பிடிப்பதையே பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் தொழிலாகக் கொண்டிருந்தார்கள்.

தான் இறைமகன் என்ற உண்மையைச் சொன்னபோது அவர் தேவதூசனம் சொல்வதாகச் சொன்னார்கள்.

ஓய்வு நாளில் நோயாளிகளைக் குணமாக்கியபோது மோயீசன் சட்டத்தை அவர் மீறுவதாகச் சொன்னார்கள்.

அவரைப்பற்றி எவ்வளவு குறை கூறினாலும் அவர் நல்லது செய்வதை நிறுத்தவில்லை.

அனைவருக்கும் நன்மையை மட்டும் செய்த அவரைக் கடைசியில் சிலுவையில் அறைந்து கொன்று போட்டார்கள்.


பச்சை மரத்துக்கே இக்கதி என்றால் பட்ட மரத்துக்கு எக்கதி!

நாம் மற்றவர்களைப் பற்றி தீர்ப்பு எதுவும் கூற வேண்டாம்.

ஆனால் மற்றவர்கள் நம்மைப் பற்றி தீர்ப்புக் கூறும் போது நாம் நமது ஆண்டவரை நினைத்துக் கொள்வோம்.

பாவமே செய்யாத அவரைச் சாவுக்குத் தீர்ப்பிட்டார்கள்.

அவர் மறுத்துப் பேசாமல் ஏற்றுக் கொண்டார் நமக்காக.

நாமும் நம்மைப் பற்றி மற்றவர்கள் தீர்ப்புக் கூறும் போது நமது பாவங்களுக்கும், உலகோர் செய்யும் பாவங்களுக்கும் பரிகாரமாக ஏற்றுக் கொண்டு

அதை நமது விண்ணகத் தந்தைக்கு ஒப்புக் கொடுப்போம்.

விண்ணகத் தந்தை எதைக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வார்.

ஒவ்வொரு நாளும் நாம் பைபிள் வாசிக்கும் போது நமது ஆண்டவரின் வாழ்க்கையோடு நமது வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

ஒத்துவராத நமது நடைமுறைகளை நமது ஆண்டவரின்வாழ்க்கையோடு ஒத்துவரும்படி மாற்றிக் கொள்வோம்.

இயேசுவின் நற்செய்தி வழி வாழ்வோம்.

நமது வாழ்க்கையை அவரது வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்து தவறுகள் இருந்தால் திருத்துவோம்.

இயேசுவின் வழி எவ்வழி
அவ்வழி நம் வழி.

லூர்து செல்வம்.

Wednesday, April 17, 2024

தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்."(அரு. 7:10)

"தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்."
(அரு. 7:10)



" இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை. "
(அரு. 7:1)

இயேசு யூதர்களுக்குப் பயந்தா யூதேயாவில் நடமாட விரும்பவில்லை?

அவர் கடவுள்.

ஒரே வார்த்தையில் அகில பிரபஞ்சத்தையும் ஆக்கவும் அழிக்கவும் வல்ல கடவுள்.

யாருக்கும் பயப்படத் தேவையில்லை.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் படுத்தப் படவும், கொல்லப்படவும் தன்னையே கையளிக்க மனிதனாகப் பிறந்த கடவுள்.

தேவ சுபாவத்தில் அவரால் பயப்படவே முடியாது.

மனித சுபாவத்தில் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காக

 பாவம் தவிர மற்ற அனைத்து மனித பலகீனங்களையும் மனமுவந்து ஏற்றுக் கொண்ட கடவுள்.

அந்த பலகீனங்களில் பயமும் ஒன்று.

ஆனால் அதைப் பாவப் பரிகாரமாக கெத்சமனி தோட்டத்தில் இரத்த வியர்வை வேர்க்கும்போது பயன்படுத்திக் கொண்டார்.

பயத்தின் காரணமாக இறைவன் விருப்பத்தை நிறைவேற்றாமல் நாம் செய்கின்ற பாவங்களுக்குப் பரிகாரமாக பயத்தினால் இரத்த வியர்வை வியர்த்தார்.

பாடுகள் படவே பயந்திருந்தால் மனிதனாகப் பிறந்திருக்கவே மாட்டார்.

தேவ சுபாவத்தில் அவரால் பயப்படவே முடியாது.

அப்படியானால் ஏன் 
யூதர்கள் அவரைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை?"

அவர் பாடுகளுக்கென்று குறித்திருந்த நேரம் வராததால்.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட வேண்டுமென்பது அவரது நித்திய காலத் திட்டம்.

அதற்காக அவராகவே குறித்திருந்த நேரத்தில் மனிதனாகப் பிறந்தார்.

பிறந்து பாடுகள் படுவதற்காக 33 ஆண்டுகள் காத்திருந்தார்.

33 வது வயதில் பாஸ்கா திருநாள் காலம்தான் அவர் குறித்திருந்த நேரம்.

அந்த நேரம் வரும் வரை அவர் கைது செய்யப்பட்டு விடக்கூடாது.

அதனால் தான் அதற்கு முன்னால் அவரைக் கைது செய்ய யூதர்கள் முயன்றும் அவர்களால் முடியவில்லை.

அவர்கள் அதற்கு முயற்சி செய்ய சந்தர்ப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் 

அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை. 

இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, "நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். 

அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும். 

ஏனெனில், பொது வாழ்வில் ஈடுபடும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே!" என்றனர். 

" அவருடைய சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை"
 (7:5)

யார் அவருடைய சகோதரர்கள்?

அன்னை மரியாளின் தங்கை மக்களாகிய யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர்.

இவர்களில் யாக்கோபு, , யூதா, சீமோன் ஆகியோர் இயேசுவின் சீடர்கள்.

. தங்கையின் பெயரும் மரியாள் தான்.

அவள் அன்னம்மாளின் இரண்டாவது மகள்.

குளோப்பாவின் மனைவி. 

குளோப்பா சூசையப்பரின் தம்பி.

சகோதரர்களின் அறிவுரைப் படி யூதேயாவுக்குச் செல்லாமல் 

அவர் கலிலேயாவிலேயே தங்கிவிட்டார். 

சீடர்கள் திருவிழாவுக்குச் சென்று விட்டார்கள்.

ஆனால் சீடர்கள் 
 திருவிழாவிற்குப் போனபின் இயேசு அவர்களுக்குத் தெரியாமல்,

யாருக்கும் தெரியாமல் திருவிழாவுக்குச் சென்றார்.

 
 திருவிழாவின்போது யூதர்கள் இயேசுவைத் தேடினார்ள். 

சிலர் அவரைக் கைது செய்வதற்காகத் தேடினார்ள்.

சிலர் அவர் பேசுவதைக் கேட்பதற்காகத் தேடினார்ள்.


மறைவாகச் சென்ற இயேசு
பாதித் திருவிழா நேரத்தில் கோவிலுக்குச் சென்று கற்பிக்கத் தொடங்கினார். 

சாதாரண மக்கள் அவர் பேசியதை விருப்பமுடன் கேட்டனர்.

ஆனால் பரிசேயர்களும் தலைமைக் குருக்களும் அவரைப் பிடித்து வரும்படி   காவலர்களை அனுப்பினார்கள். . 

ஆனால் காவலர்கள் அவரைப் பிடிப்பதற்குப் பதிலாக அவர் பேசியதை விருப்பமுடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இன்று வாசித்த வசனங்கள் பற்றி சிறிது தியானிப்போம்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

Tuesday, April 16, 2024

அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை." (அரு. 6:66)

" அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை."
(அரு. 6:66)

இயேசுவைத் தேடி வருபவர்களை இரு வகையினராகப் பிரிக்கலாம்.

ஒரு வகையினர் தங்கள் நலனுக்காக அவரைத் தேடி வருபவர்கள்.

மருத்துவரைப் பார்ப்பதற்காக மருத்துவ மனைக்குச் செல்பவர்கள் மருத்துவரைத் திருப்திப்படுத்துவதற்காகச் செல்லவில்லை.

தங்கள் நலன் கருதிச் செல்கிறார்கள்.

அவர்களுக்குத் திருப்தி ஏற்படாவிட்டால் போக மாட்டார்கள்.

அவ்வாறே தங்கள் நலனுக்காக மட்டும் இயேசுவைத் தேடி வருகின்றவர்கள் இருக்கிறார்கள்.

தாங்கள் ஆசைப்பட்டது நடக்கா விட்டால் இயேசுவை மறந்து விடுவார்கள்.

ஏதாவது நேர்ச்சை வைத்துக் கொண்டு திருத்தலங்களுக்குச் செல்பவர்களில் அநேகர் இப்படிப்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள்.

"என்ன வேளாங்கண்ணிக்கு?"

"ஒரு ஆண்குழந்தை வேண்டுமென்று அம்மாவிடம் கேட்டிருக்கிறேன்.

கிடைக்கும் வரை வேளாங்கண்ணிக்குத் திரு யாத்திரையாக வருவேன் என்று நேர்ந்திருக்கிறேன்."

"கிடைக்கா விட்டால்?"

"நம்பியவர்களை அம்மா கைவிட மாட்டாள்."

நம்பிக்கை சரிதான்.

சுயநலமில்லாத நோக்கம் இருந்தால் நலமாயிருக்கும்.

"குணம் பெறுவதற்காகவே இயேசுவைத் தேடி வந்தார்களே!

இயேசுவும் அவர்களைக் குணமாக்கினாரே."

"நலன் கருதித் தேடிச் செல்வது தவறில்லை.

தன்னலம் கருதாது இயேசுவை இயேசுவுக்காகத் தேடிச் செல்வது அதை விட நல்லது.

இரண்டாவது வகையினர் இயேசுவை அவருக்காகவே தேடிச் செல்வார்கள்.

முழுக்க முழுக்க இயேசுவுக்காகவே வாழ்வார்கள்.

ஒரு புனிதர்(பெயர் ஞாபகமில்லை)

"ஆண்டவரே, நீர் எனக்கு மோட்ச வாழ்வு தருவீர் என்பதற்காக உமக்கு ஊழியம் செய்யவில்லை.

நீர் எனது ஆண்டவர் என்பதற்காக மட்டுமே நான் உமக்கு ஊழியம் செய்கிறேன்."

கடவுள் நம் மீது கொண்ட அன்பினால் நம்மைப் படைத்தார்.

அன்பு மயமான அவரால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

அவரது அன்பை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதற்காகவே நாம் அன்பு செய்ய வேண்டும்.

அன்பு செய்யக் குறைந்தது இருவர் வேண்டும்.

அன்பு செய்பவர் மனதில் அன்பு செய்யப்படுபவர் மட்டுமே இருப்பார்.

அவருக்காக அன்பு செய்பவர் தன்னையே தியாகம் செய்ய தயாராக இருப்பார்.

கடவுள் அன்பு மயமானவர்.

அன்பே கடவுள்.

கடவுளிடம் அன்பு இல்லை.

கடவுள்தான் அன்பு.

God does not have love, He is love.

கடவுளாகிய அன்புக்குள் அவரால் படைக்கப்பட்ட நாம் இருக்கிறோம்.

அவருள் இருக்கும் நமக்காக அவர் எந்த அளவுக்குத் தனனையே தியாகம் செய்திருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

 துவக்கமும் முடிவும் இல்லாத கடவுள் நமக்காகப் பிறப்பும் இறப்பும் உள்ள மனிதனாகப் பிறந்தார்.

கஷ்டப்படவே முடியாத கடவுள் நமக்காக பாடுகள் படுவதற்காகவே மனிதனாகப் பிறந்தார்.

மரிக்க முடியாத கடவுள் நமக்காக மரிப்பதற்காகவே மனிதனாகப் பிறந்தார்.

எங்கும் நிறைந்துள்ள கடவுள் ஒரு நற்கருணைப் பேழைக்குள் நமக்காக வாழ்ந்து வருகிறார்.

நமது உடலுக்கு உணவு தருவதற்காக உலகைப் படைத்த கடவுள் 

நமது ஆன்மாவுக்கு உணவாகத் தன்னையே தருகிறார்.

இவ்வளவுக்கும் நம் அனைவரையும் அவரது உள்ளத்தில் சுமந்து கொண்டிருக்கும் அவரை

 நம்மில் அனேகர் தங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

அவரைத் தங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களையும் அவர் அன்பு செய்கிறார்.

நம்மால் அவருக்கு எந்த பயனும் இல்லை 

ஆனாலும் அவர் நம்மை தொடர்ந்து அன்பு செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு நண்பர் கேட்கிறார்,

"நிபந்தனை இன்றி நம்மை அன்பு செய்யும் அவர் ஏன் அவரை அன்பு செய்யும்படி நமக்கு கட்டளை கொடுத்திருக்கிறார்?

அது அன்பின் சுபாவம்.

உண்மையான அன்பினால் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

அன்பு செய்யப்பட ஆசைப்படாமலும் இருக்க முடியாது.

 நம்மை நித்திய காலம் அன்பு செய்யும் அவர் தனது அன்பை தனது தீர்க்கத் தரிசிகள் மூலம் சொல்லால் நமக்குத் தெரிவித்தார்.

மனிதனாகப் பிறந்து நமக்காக பாடுகள் பட்டு, மரித்து, உயிர்த்து தனது அன்பை செயல் மூலம் நமக்கு காட்டினார்.

இன்றும் திவ்ய நற்கருணை மூலம் அவர் நம்மிடம் செயல் புரிந்து கொண்டிருக்கிறார்.

 அன்பு செய்யப்பட ஆசைப்படுவது அன்பின்  இயல்பு.

By its nature love desires to be loved.

அதற்காகத்தான் கடவுளின் அன்புக் கட்டளை.

நம்மிடம் உண்மையான அன்பு இருந்தால் நம்மால் சொல்லாலும் செயலாலும் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

விளக்கால் ஒளி தராமல் இருக்க முடியுமா?

ஒளி தருவது விளக்கின் சுபாவம்.

குளிர்ச்சி தருவது தண்ணீரின் சுபாவம்.

சுடுவது வென்னீரின் சுபாவம்.

நேசிப்பதும், நேசிக்கப்படுவதும் அன்பின் சுபாவம்.

ஆகவே அன்பு மயமான கடவுள் தன்னால் படைக்கப்பட்ட அனைவரையும் அன்பு செய்கிறார்.

அனைவராலும் அன்பு செய்யப்பட ஆசையாக இருக்கிறார்.

ஆகவே அவரையும், அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் நாம் அன்பு செய்ய கடமைப் பட்டிருக்கிறோம்.

நாம் அன்பு செய்யப்பட ஆசைப்படுவதும் நமது இயல்புதான்.

By nature we long for love.

 அன்பு செய்யவும் அன்பு செய்யப்படவும் ஆசைப்படுவதால் தான் நம்மால் குடும்ப வாழ்க்கை வாழ முடிகிறது.

மனித சமுகம் இயங்க முடிகிறது.

அன்பு இல்லங்கள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்ற மனித நேய அமைப்புக்கள் இயங்குகின்றன.

பணத்தை மட்டும் மையமாகக் கொண்டு செயல்படும் ஸ்தாபனங்களால் மனித சமுதாயத்துக்கு எந்தப் பயனும் இல்லை.

இறையன்பினால் உயிரூட்டம்
பெறாத மனித அன்பினால் மனித இனத்துக்கு ஆன்மீக ரீதியாக எந்தப் பயனும் இல்லை.

சில மருத்துவ மனைகள் மக்களை குணப்படுத்துவதற்காக அல்ல,

பணம் ஈட்டவே இயங்குகின்றன.

சில கல்விக் கூடங்கள் கூட அப்படித்தான்.

இயேசு திவ்ய நற்கருணையைப் பற்றி பேச ஆரம்பித்தவுடன் அவரை விட்டுப் போனவர்கள் அவருடைய உண்மையான சீடர்கள் அல்ல.

லௌகீக உதவிகளை மட்டும் பெற அவர் பின்னால் சென்றவர்கள்.

வாசிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் புத்தகங்கள் பயன்படும்.

இறையன்பு உள்ளவர்கள் மட்டும் தான் இயேசுவால் ஆன்மீகப் பயன்பெறுவாராகள்.

பங்குச் சாமியாரை 'காக்கா' பிடித்தால் அவர் நடத்தும் பள்ளியில் வேலை கிடைக்கும் என்பதற்காக கோவிலுக்கு வருபவர்களுக்கு ஆன்மீக ரீதியாக என்ன பயன் கிடைக்கும்?

  "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."

என்று இராயப்பரைப் போல் நினைப்பவர்கள் மட்டும்தான் கோவிலாலும், அங்கு வாழும் இயேசுவாலும் பயன் பெறுவர்.

நாம் எப்படிப் பட்டவர்கள் என்று நாம் தான் சிந்தித்து அறிய வேண்டும்.

லூர்து செல்வம்.

ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்."(அரு. 6:38)

ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்."
(அரு. 6:38)

பரிசுத்த தம் திரித்துவத்தின் மூன்று ஆட்களுக்கும் ஒரே விருப்பம், ஒரே வல்லமை, ஒரே ஞானம்,

ஏனெனில் மூவரும் ஒரே கடவுள்.

ஏன் இயேசு "என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல" என்று கூறுகிறார்?

தந்தைக்கும் மகனுக்கும் தனித்தனியே சொந்த விருப்பங்கள் கிடையாது.

தந்தையின் விருப்பம்தான் மகனின் விருப்பம்.

மகனின் விருப்பம்தான் தந்தையின் விருப்பம்.

இருவருக்கும் ஒரே விருப்பம்.

ஒரே மாதிரியான விருப்பம் அல்ல,
ஒரே விருப்பம்.

கணவன், மனைவி இரண்டு பேர்.
இருவருக்கும் ஒரே மாதிரியான விருப்பங்கள் இருக்கலாம்,

ஒரே விருப்பம் இருக்க முடியாது,

ஏனெனில் அவர்கள் இருவர், ஒருவர் அல்ல.

இறைத் தந்தையையும், இறை மகனையும் பொறுத்த மட்டில் இருவரும் ஒரே கடவுள், ஆகவே ஒரே விருப்பம்.

ஆனால் நாம் எப்படி சிந்திக்க வேண்டும் என்று நமக்குப் போதிப்பதற்காகவே

"என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல" என்று ஆண்டவர் கூறுகிறார்.

நாம் எப்போதும் நம்மை மையமாக வைத்து சிந்திக்கக் கூடாது,

நம்மைப் படைத்த கடவுளை மையமாக வைத்து சிந்திக்க வேண்டும்.

கடவுள் நம்மைத் தனது சாயலில் படைத்திருக்கிறார்,

தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

நாம் கடவுளின் சாயல்.

கடவுள் தனது விருப்பங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

நாம் கடவுளையும், நமது அயலானையும் அன்பு செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம்.

இந்த விருப்பத்தை கட்டளை வடிவில் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

நாம் கடவுளுடைய விருப்பத்தை ஏற்றுக் கொண்டால் அது நமது விருப்பமாகவும் மாறி விடுகிறது.

அது நமது விருப்பம் என்றாலும் அது கடவுள் விருப்பம் என்பதற்காக அதை நிறைவேற்ற வேண்டும்.

அதாவது அது நமது விருப்பம் என்பதற்காக அல்ல,

கடவுளின் விருப்பம் என்பதற்காக நாம் அதை நிறைவேற்ற வேண்டும்.


"நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். "
(அரு. 14:15)

அதாவது நாம் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பித்தால் 

அவர்மீது அன்பு கொண்டிருப்பதாகப் பொருள்.

இரத்தினச் சுருக்கமாக சொன்னால்,

நாம் இறைவன் சித்தப்படி வாழ வேண்டும்.

நமது விருப்பப்படி அல்ல, இறைவன் விருப்பப்படி வாழ வேண்டும்.

என்ன வித்தியாசம்?

ஒரு ஒப்புமையால் விளக்குவோம்.

நமது அப்பா நம்மைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்திருக்கிறார்.

Term fees கட்டுவதற்காகப் பணம் தந்து விடுகிறார்.

அது யாருடைய பணம்?

அப்பாவுடைய பணம்.

அப்பாவுடைய பணத்தை நமது பெயரில் பள்ளியில் கட்டுகிறோம்.

அதை நமது பணமாகச் செலவழித்தாலும் அது அப்பாவுடைய பணம்தான்.

அதேபோல் கடவுளுடைய விருப்பத்தை நமது விருப்பமாக ஏற்று அதன் படி வாழ்ந்தாலும் 

நாம் கடவுளின் விருப்பப்படி தான் வாழ்கிறோம்.

நமது அன்னை மரியாளும் இறைவன் விருப்பத்தை அறிந்தவுடன்,

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகக் கடவது."

எனக் கூறித் தன்னை முற்றிலும் இறைப்பணிக்கு அர்ப்பணித்தாள்.

ஆன்மீகத்தில் எதிர் எதிரான இரண்டு விருப்பங்கள் நம்மைத் தங்களை நோக்கி ஈர்க்கின்றன.

நமது முதல் பெற்றோர் விலக்கப்பட்ட கனியைத் தின்னக் கூடாது என்பது இறைவனின் விருப்பம்.

அவர்கள் அதைச் சாப்பிட வேண்டும் என்பது சாத்தானின் விருப்பம்.

முதலில் இறைவனின் விருப்பப்படிதான் வாழ்ந்தார்கள்.

ஆனால் சாத்தான் அவர்களைச் சோதித்த போது அவனுடைய விருப்பத்தை ஏற்றுக் கொண்டார்கள். 

விளைவு?

அவர்கள் பாவத்தில் விழுந்தார்கள். 

இறைவனோடு அவர்களுக்கு இருந்த உறவு முறிந்தது.

நமது முதல் பெற்றோருக்கு இருந்த நிலைதான் இன்று நமக்கு.

இன்றும் சாத்தான் நம்மைச் சோதித்துக் கொண்டு தான் இருக்கிறது.

"எங்களை சோதனையில் விழ விடாதேயும்'' என்று நாம் தினமும் இறைவனிடம் வேண்டுகிறோம்.

சோதனையில் விழாதிருக்க வேண்டிய அருள் வரங்களை இறைவன் தந்து கொண்டு தான் இருக்கிறார்.

அந்த அருள் வரங்களைப் பயன்படுத்தி இறைவனோடு நமக்கு உள்ள உறவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

அதாவது இறைவன் விருப்பப்படி நடந்து அவரது பிள்ளைகளாக வாழ வேண்டும். 

இறைவன் விருப்பப்படி வாழ்வதுதான் நமது விருப்பமாக இருந்தாலும், 

அது நமது விருப்பம் என்பதற்காக அல்ல, 

இறைவனது விருப்பம் என்பதற்காக அதை நிறைவேற்ற வேண்டும். 

நமது விருப்பத்தின் அளவு மாறலாம், சில சமயங்களில் விருப்பமே மாறலாம். 

ஆனால் இறைவனின் விருப்பம் மாறாது. 

ஆகவே மாற்றத்திற்கு உட்பட்ட நமது விருப்பத்தின் படி அல்ல,

மாறாத கடவுளின் விருப்பத்தின் படியே நாம் வாழ வேண்டும்.

கடவுள் நம்மில்  வாழ வேண்டும்.

நம்மைப் பார்ப்பவர்கள் நம்மை அல்ல கடவுளைப் பார்க்க வேண்டும்.

நூறு சதவீதம் நாம் கடவுளைப் பிரதிபலிக்க வேண்டும்.

அதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை.

கிறிஸ்துவின் விருப்பப்படி வாழ்வதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை.

லூர்து செல்வம்.

Monday, April 15, 2024

"இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது."(அரு. 6:35)

"இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது."
(அரு. 6:35)

கலிலேயா கடற்கரையில் வைத்து இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவளித்த பின் இயேசுவும் சீடர்களும் மறுகரையில் உள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று விட்டார்கள்.

மக்கள் மறுநாள் காலையில் இயேசுவைத் தேடி கப்பர்நாகும் ஊருக்கே வந்து விட்டார்கள்.


 அப்பங்களை வயிறார உண்டதால்தான் தன்னைத் தேடுகிறார்கள் என்பதை அறிந்த இயேசு

" அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்.

 நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.

 அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்."

 என்று கூறினார்.


 அவர்கள் அவரை  நம்ப ஒரு அரும் அடையாளத்தை எதிர் பார்த்தார்கள்.


அவர்களது முன்னோர் பாலை நிலத்தில் வானிலிருந்து வந்த மன்னாவை உண்ட  அரும் அடையாளத்தை சுட்டிக் காண்பித்தார்கள்.

அவர்களுடைய எண்ணங்கள் சாப்பாட்டைச் சுற்றியே வலம் வந்து கொண்டிருந்தன!


 இயேசு அவர்களிடம்,

 "வாழ்வு தரும் உணவு நானே.

 என்னிடம் வருபவருக்குப் பசியே இராது;

 என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது." என்று கூறினார்.

இப்போது நமக்கு ஒன்று புரிய வேண்டும்.

இயேசு தானே வாழ்வு தரும் உணவு என்று கூற சந்தர்ப்பதை ஏற்படுத்தவே ஐந்து அப்பங்களைக் கொண்டு அத்தனை பேருக்கு உணவளித்தார்.

புத்தகம் எழுதுபவர்கள் முதலில் முன்னுரை எழுதுவது போல ,

ஐந்து அப்பங்களைக் கொண்டு 5000 பேருக்கு உணவளித்தது இயேசு திவ்ய நற்கருணையை ஏற்படுத்துவதற்கான முன்னுரை.

மக்கள் அவரிடமிருந்து எதிர்பார்த்தது உடற்பசி போக்கும் உணவை.

ஆனால் இயேசு வாக்களித்தது ஆன்மீக உணவை.

"நிலை வாழ்வு தரும் உணவு நானே.

 என்னை ஆன்மீக உணவாக உண்பவர்கள் உடற்பசியைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்."

உடலைச் சார்ந்த உணவு இவ்வுலகில் வாழப் பயன்படும்.

ஆனால் ஆன்மீக உணவாக இயேசுவை உண்பவர்கள் நிலை வாழ்வு வாழ்வார்கள்.

ஒரு வகையில் நாம் நித்திய மானவர்கள்.

கடவுள் நித்தியர்.

நித்திய காலமாக கடவுளுடைய உள்ளத்தில் எண்ணமாக இருந்தவர்கள் தான் நாம். 

கடவுள் நமக்குக் குறித்த காலத்தில் நாம் மனிதர்களாகப் பிறந்தோம்.

நாம் என்பது நமது ஆன்மாவை குறிக்கும். 

ஆன்மா என்றென்றும் அழியாது. 

அது என்றென்றும் இறைவனோடு நித்திய பேரின்பத்தில் வாழ வேண்டுமென்றால் 

அது ஆன்மீகத்தில் இறையருளில் வளர வேண்டும். 

அது ஆன்மீகத்தில் வளர்வதற்கான ஆன்மீக உணவு நமது ஆண்டவராகிய இயேசு.  

நம்மோடு உலகம் முடியும் மட்டும் வாழ்வதற்காகவும், 

நமக்குத் தன்னையே ஆன்மீக உணவாகத் தருவதற்காகவும் இயேசு திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

திருப்பலிக்குச் செல்லும்போதெல்லாம் திரு விருந்தில் கலந்து கொள்கிறோம்.

ஆன்மீக உணவாகிய இயேசு நமது ஆன்மாவோடு இரண்டறக் கலந்து விடுகிறார்.

அந்நிலையிலேயே வாழ்வைத் தொடர்ந்தால் நாம் நிலை வாழ்வு பெறுவது உறுதி.

நற்கருணை நாதர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

லூர்து செல்வம்.

Sunday, April 14, 2024

அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். "(அரு.10:15)(தொடர்ச்சி)

"அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். "
(அரு.10:15)
(தொடர்ச்சி)

திவ்ய நற்கருணையில் இயேசு இருக்கிறார்.

ஆனால் நற்கருணை முன்பும்,

நற்கருணையை வாங்கும் போதும்

இயேசுவுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கிறோமா?

நமது பள்ளிக்கூட விழாவிற்கு முதல் அமைச்சர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

விழா மேடையில் அவரும், பள்ளிக்கூட நிர்வாகி, தலைமை ஆசிரியர் போன்றவர்களும் அமர நாற்காலிகள் போடப் பட்டுள்ளன.

முதல் அமைச்சர் அமர்வதற்கான நாற்காலியை மையத்தில் போடுவோமா அல்லது ஒரு ஓரத்தில் போடுவோமா?

ஒரு காலத்தில் நற்கருணை பக்தி உச்சத்தில் இருந்த போது திவ்ய நற்கருணைப் பேழை பீடத்தின் மையப் பகுதியில் இருந்தது.

இப்போது பீடத்தின் மையத்தில் Bible Stand இருக்கிறது.

நற்கருணைப் பேழை ஒரு பக்கத்தில் இருக்கிறது.

நற்கருணை நாதரின் இடத்தை இறைவாக்கு அடங்கிய புத்தகம் பிடித்துக் கொண்டது.

மனுவுரு எடுத்த வார்த்தையானவருக்கு ஒரு பக்கத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நற்கருணை பக்தி வளர்ந்திருக்கிறதா,  தேய்ந்திருக்கிறதா?

ஒரு காலத்தில் நற்கருணை நாதரின் முன் முழங்கால்படியிட்டு எழுந்தோம்.

இப்போது நற்கருணை நாதரின் முன் தலை வணக்கம் மட்டுமே செய்கிறோம்.

Once we genuflected before Holy Eucharist, but now we merely bow our heads.

முழங்கால்படியிடுவது இறைவனுக்குக் கொடுக்கும் ஆராதனை வணக்கம்.

தலை வணங்குவது மனிதருக்குக் கொடுக்கும் சாதாரண வணக்கம்.

சாதாரண மனிதனுக்குக் கொடுக்கிற மரியாதையைக் கடவுளுக்குக் கொடுக்கிறோம்.

இறைமகனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை வளர்ந்திருக்கிறதா,  தேய்ந்திருக்கிறதா?

ஒரு காலத்தில் முழங்கால்படியிட்டு நற்கருணை நாதரை நாவில் வாங்கினோம்.

இப்போது நின்றுகொண்டு கையில் வாங்குகிறோம்.

நமது செயலை பக்தி தீர்மானிக்கவில்லை.

கொரோனா தீர்மானிக்கிறது.

மொத்தத்தில் நற்கருணை பக்தி நாளுக்கு நாள் வளர்வதற்குப் பதிலாக, தேய்ந்து கொண்டே வருகிறது.

நாம் திவ்ய நற்கருணையைத் தெரிந்து வைத்திருக்கிறோம்,

அறியவேயில்லை.

விசுவாசம் ஏற்றுக் கொள்வதில் மட்டுமல்ல, வாழ்வதிலும் அடங்கியிருக்கிறது.

யூதாஸ் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொண்டான்,

ஆனால்,

இயேசுவை வாழவில்லை.

நற்கருணை நாதரைப் பாவத்தோடு உட்கொண்டான்.

விளைவு நமக்குத் தெரியும் 


இயேசுவை நமது ஆயனாக ஏற்றுக் கொண்ட நாம் 

நல்ல ஆயனுக்குரிய குண நலன்களை அறிவோம்.

நல்ல ஆயனாகிய இயேசு ஆடுகளாகிய நமக்காக‌த் தம் உயிரைக் கொடுத்தார். 

எப்போதும் நம்மைக் கண்காணித்துக் கொண்டு நம்மோடு இருக்கிறார்.

 திருப்பலியின்போது அவரே நமக்கு உணவாக வருகிறார்.

அவருக்கு நம்மைப் பற்றி தான் ஓயாத சிந்தனை.

தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் அறிந்திருப்பதைப் போல

மகனாகிய அவர் நம்மை அறிந்திருக்கிறார்.

நமக்காக தனது உயிரையே சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்ததை நாம் அறிவோம்.

இப்படிப்பட்ட இறைமகனை ஆயனாகப் பெற்ற நாம் பாக்கியவான்கள் என்பதை உணர்கிறோமா?

அவர் நமக்குத் தன்னை முழுவதும் தந்திருப்பது போல 

நாம் நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவருக்கே கொடுத்திருக்கிறோமா?

நமக்காக அல்ல,

அவருக்காக மட்டுமே வாழ்கிறோமா?

ஆம் என்று பதில் வந்தால் நாம் அவரை அறிந்திருக்கிறோம்.

அதாவது, அவரை வாழ்கிறோம்.

லூர்து செல்வம்.

Saturday, April 13, 2024

"அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். "(அரு.10:15)

''அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். "
(அரு.10:15)

இயேசு நமது ஆயன், நல்ல ஆயன்.

அவர் நம்மை அறிந்திருக்கிறார்.

அவர் நமது ஆயன் என்று நமக்குத் தெரியும்.

ஆனால் நாம் அவரை அறிந்திருக்கிறோமா?

தெரிந்திருப்பது வேறு.
அறிந்திருப்பது வேறு.

இயேசுவைப் பற்றி நமக்கு என்னவெல்லாம் தெரியும்?

இயேசு நம்மை பாவத்திலிருந்து மீட்க மனுமகனாகப் பிறந்த இறைமகன் என்று நமக்குத் தெரியும்.

அவர் நமக்காகப் பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தார் என்று நமக்குத் தெரியும்.

மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார் என்பதும் நமக்குத் தெரியும்.

இன்றும் திவ்ய நற்கருணையில்
நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதும் நமக்குத் தெரியும்.

ஆனால் இதெல்லாம் சாத்தானுக்கும் தெரியும்.

தெரிந்து அவனுக்கு என்ன பயன்?

இயேசுவைப் பற்றி நமக்குத் தெரிந்ததை எல்லாம் அறிந்திருக்கிறோமா?

தெரிந்தும், அறிந்தும் இருந்தால் தான் அது விசுவாசம்.

நமக்குத் தெரிந்ததை அறிந்திருக்கிறோமா,

அதாவது விசுவசிக்கிறோமா என்பதைச் சிறிது தியானிப்போம்.

புவியியல் படிக்கும் போது உலகம் உருண்டை என்று கூறுவது போல 

ஞானோபதேசம் படிக்கும் போது இயேசு இறைமகன் என்று கூறுகிறோம்.

உலகம் உருண்டை என்ற உண்மை நமது வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

 இயேசு இறைமகன் என்ற உண்மை நமது ஆன்மீக வாழ்க்கையில் எந்த மாற்றத்தையாவது ஏற்படுத்தியிருக்கிறதா என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு இறைமகன் என்ற மறையியல் உண்மை நமது விசுவாசமாக இருந்தால் அது நமது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியையும் இயக்க வேண்டும்.

சர்வ வல்லபரும், அளவற்ற அன்பும் உள்ள இறைமகன் தான் நமது உள்ளத்தில் இருந்து நமது ஒவ்வொரு அசைவையும் இயக்குகிறார் என்று நாம் உறுதியாக நம்ப வேண்டும்.

உடல் ரீதியாக ஏதோ ஒரு பிரச்சினை நமக்கு ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

இது இறைமகனால் ஆனது,
எல்லாம் நமது ஆன்மீக நன்மைக்கே என்ற எண்ணம் நமது உள்ளத்தில் இயல்பாகத் தோன்றினால் நாம் நமது விசுவாசத்தை வாழ்கிறோம்.

நாம் நமது விசுவாசத்தை வாழ்ந்தால் இயல்பாகவே கடவுளின் கட்டளைப்படி நடப்போம்.

என்ன நேர்ந்தாலும் கடவுளுக்கு நன்றி கூறுவோம்.

என்ன நேர்ந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறோமா?

என்ன நேர்ந்தாலும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோமா?

நினைத்துப் பார்ப்போம்.

அவர் நமக்காகப் பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தார் என்று நமக்குத் தெரியும். (We know. But mere knowledge cannot save us.)

"இயேசு எனக்காகப் பாடுகள் பட்டார், எனக்காக மரித்தார்"

என்ற உணர்வு நம்மிடம் இருக்கிறதா?

இருந்தால் நமக்கு வரும் துன்பங்களை மகிழ்ச்சியுடன்  ஏற்றுக்கொள்வோம்.

அவர் என்ன காரணங்களுக்காக பாடுகள் பட்டாரோ அந்த காரணங்களுக்காக ஏற்றுக்கொள்வோம்.

ஏற்றுக் கொண்டால் இயேசுவையும், அவர் நமக்காகப் பட்ட பாடுகளையும் ஏற்றுக் கொள்கிறோம்,

ஏற்றுக் கொள்ளா விட்டால் ஒரு சரித்திர உண்மையைத் தெரிந்து வைத்திருக்கிறோம், அவ்வளவு தான்.

அதில் எந்த வித ஆன்மீகப் பயனும் இல்லை.

"மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார் என்பதும் நமக்குத் தெரியும்."

இயேசு நமது உள்ளத்தில் உயிர்த்திருக்கிறாரா?

அப்படீன்னா?

இயேசு தனது மரணத்தினாலும், உயிர்ப்பினாலும் நமது ஆன்மீக மரணத்தை வென்றிருக்கிறார்.

நமது ஆன்மா சாவான பாவத்தில் விழுவதுதான் ஆன்மீக மரணம்.

அதிலிருந்து விடுதலை பெற்று எழுவது உயிர்ப்பு.

நாம் பாவ நிலையிலிருந்து விடுதலை பெறும்போதுதான் நாம் இயேசுவின் உயிர்ப்பின் பயனை அடைகிறோம்.

வருடக் கணக்காக பாவ சங்கீர்த்தனமே செய்யாமல் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற இயேசு சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்து கொள்பவர்களால் எந்த வித ஆன்மீகப் பயனும் பெற முடியாது.

அவர்களைப் பொறுத்தமட்டில் விழா என்றால் புத்தாடை அணிவது,  கோவிலுக்குப் போவது, மட்டன் பிரியாணி சாப்பிடுவது.

அவ்வளவு தான்.

இதனால் ஆன்மாவிற்கு என்ன பயன்?

உண்மையான கிறிஸ்தவனுக்கு விழா என்றால் 

நல்ல பாவ சங்கீர்த்தனம்,

திருப்பலி,

திவ்ய நற்கருணை விருந்து,

புண்ணிய வாழ்வு.

கிறிஸ்தவ வாழ்வே இதுதான்.

இயேசுவை அறிந்தவர்கள் இப்படித்தான் வாழ்வார்கள்.

"இன்றும் திவ்ய நற்கருணையில்
நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதும் நமக்குத் தெரியும்."


இது சாத்தானுக்கும் தெரியும்.

தேரிந்ததால்தான் தகுந்த முறையில் திவ்ய நற்கருணையை வாங்காமல்,

பாவத்தோடு வாங்கிய யூதாசுக்குள் அவன் புகுந்தான்.

இது நமக்கு ஒரு பாடம்.

 அன்னை மரியாளின் வயிற்றிலிருந்து பிறந்த அதே இயேசு.

30 ஆண்டுகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்த அதே இயேசு.

மூன்று ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்து, சென்ற இடமெல்லாம் நோயாளிகளைக் குணமாக்கிய அதே இயேசு.

புனித வியாழனன்று சீடர்களின் பாதங்களைக் கழுவி,

 திவ்ய நற்கருணையையும் குருத்துவத்தையும் ஏற்படுத்திய 
அதே இயேசு.

வெள்ளிக்கிழமை பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு அதில் மரித்த அதே இயேசு,

மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த அதே இயேசு 

திவ்ய நற்கருணையில் இருக்கிறார்.
(தொடரும்)

லூர்து செல்வம் 

Friday, April 12, 2024

என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். (லூக்கா நற்செய்தி 24:39,40)

"என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். 

இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். 
(லூக்கா நற்செய்தி 24:39,40)



உயிர்த்த இயேசு தனது சீடர்களுக்குக் காட்சி கொடுத்தபோது அவர்களால் அவரை அடையாளம் காண முடியவில்லை.

அவர் அவர்களை நோக்கி,


 "நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்? 


என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்."

என்று கூறி தனது ஐந்து காயங்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.

இயேசுவின் இந்த சொற்களில் ஒரு முக்கியமான மறையுண்மை மறைந்திருக்கிறது.

அவரது வார்த்தைகளைச் சிறிது தியானித்தால் அந்த உண்மை முற்றிலும் வெளிப்படும்.

நாம் தோமையாரைச் "சந்தேகத் தோமையார்" என்று அழைப்பது வழக்கம்.


 "அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" என்ற அவரது வார்த்தைகளே அதற்குக் காரணம். 

ஆனால் அவரது இந்த வார்த்தைகளே நமது ஆன்மீக வாழ்வுக்கு அடித் தளமான மறையுண்மையை நாம் அறியக் காரணமாக இருந்தன.

சிலுவையில் அறையப்பட்டு இறந்த இயேசு உயிர்த்து விட்டார்.

உண்மைதான்.

ஆனால் நாம் உயிர்த்த இயேசுவைப் பார்க்கும்போது 

சிலுவையில் மரித்த இயேசுவை மறந்து விடக்கூடாது என்பதற்காக சிலுவையில் அவருக்குக் கிடைத்த ஐந்து காயங்களோடே உயிர்த்தார்.

தான் தான் இயேசு என்பதற்கு அடையாளமாகத் தனது ஐந்து காயங்களைத் தான் அவர் காண்பித்தார்.

நமது மீட்பர் ஐந்து காய இயேசு.

ஐந்து காயங்கள் இல்லையேல் மீட்பு இல்லை.

இது தான் இயேசுவின் வார்த்தைகளில் மறைந்திருக்கும் மறை உண்மை.

ஐந்து காயங்கள் இல்லையேல் உயிர்ப்பு கூட இல்லை.

ஒரு முறை ஞானோபதேச வகுப்பில் மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன்.

"இறுதி நாளில் நாம் உயிர்த்து மோட்சத்திற்குப் போக வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?"

ஒரு மாணவன் துடிப்போடு சொன்னான்,

"முதலில் நாம் சாக வேண்டும்."

சரியான பதில்.

இயேசுவே அதைத் தான் செய்தார்.

வெள்ளிக்கிழமை மரித்தார்.
ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தார்.

மரணம் இல்லையேல் உயிர்ப்பு இல்லை.

ஐந்து காயங்கள் இல்லையேல் மரணம் இல்லை.

முதலில் ஐந்து காயங்கள்,

அடுத்து மரணம்,

அடுத்து உயிர்ப்பு.

ஐந்து காயங்கள் இயேசு பட்ட பாடுகளுக்கு அடையாளம்.

நாம் கிறிஸ்தவர்களாக 
(கிறிஸ்து அவர்களாக)
வாழ வேண்டும் என்றால் 

நமது உடலில் இயேசுவின் உடலில் இருந்தது போல காயங்கள் இருக்க வேண்டும்,

அதாவது நாமும் அவரைப் போல பாடுகள் பட வேண்டும்.

பாடுகள் தான் நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்கு சான்று.

துன்பங்கள் எதுவும் இன்றி வாழ விரும்புகிறவன் கிறிஸ்தவனாக வாழ விரும்பவில்லை.

கிறிஸ்தவனாக வாழ விரும்பாதவன் சாத்தானுக்கு அடிமையாக வாழ விரும்புகிறான்.

இரண்டும் இல்லாத இடைநிலை வாழ்க்கை வாழ முடியாது.

தங்களை ஒறுத்து, தங்கள் சிலுவையைச் சுமந்து கொண்டு செல்பவர்கள் மட்டுமே இயேசுவின் சீடர்களாக வாழ முடியும்.

இயேசுவின் சீடர்களுக்கு மட்டுமே அவரோடு நித்திய பேரின்ப வாழ்வில் பங்கு உண்டு.

இந்தியாவின் அப்போஸ்தலர் புனித தோமையர்.

நாம் இந்தியர்கள்.

ஆகவே அவர் நமது அப்போஸ்தலர்.

அவரது சிந்தனை ஓட்டம் நம்மிடம் இருக்க வேண்டும்.

நம்மை நாமே பார்க்கும் போது நமது கண்களுக்கு நாம் கிறிஸ்தவர்களாகத் தெரிய வேண்டுமென்றால் 

நமது தோளில் இயேசுவின் சிலுவை தெரிய வேண்டும்.

நம்மை நாமே உற்று நோக்குவோம்.

நாம் சிலுவையை நேசித்தால்,

அதைச் சுமந்து கொண்டு வாழ்ந்தால் 

நாம் கிறிஸ்தவர்கள்.

முதலில் நாம் கிறிஸ்தவர்களா என்பதைக் கண்டறிவோம்.

அப்புறம் மற்றவர்களைக் கிறிஸ்தவர்களாக மாற்ற முயல்வோம்.

நடக்கத் தெரிந்தவனால்தான் நடைப்பயிற்சி கொடுக்க முடியும்.

ருசி பார்க்கத் தெரிந்தவனால்தான் ருசியாகச் சமைக்க முடியும்.

பாடம் தெரிந்தவரால்தான் பாடம் நடத்த முடியும்.

துன்பத்தை சிலுவையாக ஏற்றுக் கொள்பவரால்தான் இயேசுவை ஏற்றுக் கொள்ள முடியும்.

இயேசுவை ஏற்றுக் கொள்பவரால் தான் அவரை மற்றவர்களுக்கு அளிக்க முடியும்.

இயேசுவை மற்றவர்களுக்கு அளிப்பவர்கள் அவரது சீடர்கள்.

தோமையாரின் கண் நோக்கிலிருந்து நாம் இயேசுவின் சீடர்களா என்பதைக் கண்டறிவோம்.

இயேசுவின் காயங்களைப் பெறுவோம்,

அவரது சீடர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.