Tuesday, January 30, 2024

இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?" என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள். (மாற்கு நற்செய்தி 6:3)

இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?" என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள். 
(மாற்கு நற்செய்தி 6:3)

சென்ற இடமெல்லாம் புதுமைகள் செய்து ஏராளமான நோயாளிகளைக் குணமாக்கிய இறை மகனுக்கு 

சொந்த ஊரில் உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் செய்ய இயலவில்லை. 

சர்வ வல்லப தேவனாகிய அவருக்கு ஏன் சொந்த ஊரில் வல்ல செயல்கள் எதையும் செய்ய இயலவில்லை?

இரண்டு உள்ளங்கள் உறவில் இணைய வேண்டும் என்றால் இரண்டு உள்ளங்களும் ஒத்துழைக்க வேண்டும்.

ஒரு உள்ளம் ஒத்துழைத்து, அடுத்த உள்ளம் ஒத்துழைக்காவிட்டால் உறவு ஏற்படாது.

கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவும் அப்படித்தான்.

கடவுள் அன்பின் மிகுதியால் நம்மைப் படைத்தவர்.

நம் மீது அவர் கொண்ட அன்புக்கு என்றும் குறைவில்லை, மாற்றமும் இல்லை.

ஆனால் நாம் அவரது உறவை ஏற்றுக் கொள்ள மனம் உள்ளவர்களாக இருந்தால்தான் அவருக்கும் நமக்கும் இடையில் உறவு ஏற்படும்.

நம் மீது இறைவன் கொண்டுள்ள உறவுக்கு அடிப்படை அவர் நம் மீது கொண்டுள்ள மாறாத அன்பு.

நாம் அவரோடு உறவு கொள்ள வேண்டுமென்றால் நம்மிடம் இருக்க வேண்டிய அடிப்படை விசுவாசம்.

இறையன்பு அவரை நம்மோடு இணைக்கிறது.

விசுவாசம் நம்மை அவரோடு இணைக்கிறது.

நம்மிடம் விசுவாசம் இல்லையேல் நம்மால் அவரோடு உறவில் இணைய முடியாது.

சொந்த ஊரில் இயேசுவுக்கு புதுமைகள் செய்ய முடியாமைக்குக் காரணம் அங்கே உள்ள மக்களின் விசுவாசமின்மை.

அவர் 30 ஆண்டுகள் அங்கே மரியாளுக்கும், தச்சு வேலை பார்த்த சூசையப்பருக்கும் மகனாக வாழ்ந்தார்.

ஆகவே அங்கு வாழ்ந்த மக்கள் அவரை அப்படித்தான் ஏற்றுக் கொண்டார்களே தவிர இறை மகனாக ஏற்றுக் கொள்ளவில்லை. 

அன்னை மரியாளின் சகோதரியின் பெயரும் மரியாள்தான்.

அவளுடைய மக்கள் சின்ன யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர்.

அவர்கள் இயேசுவுக்கு சித்தி மக்கள், சகோதர உறவு உள்ளவர்கள். (Cousins of Jesus)

அவர்கள் வாழ்ந்த நாசரேத் ஊரில் தான் இயேசுவும் 30 ஆண்டுகள் தச்சனின் மகனாக வாழ்ந்தார்.

ஆகவே அங்குள்ள மக்கள் அவரைத் தச்சனின் மகனாகவும்,

 யாக்கோபு, யோசேப்பு, யூதா, சீமோன் ஆகியோரின் சகோதரனாகவும் (Cousin) பார்த்தார்களே தவிர 

இறை மகனாகப் பார்க்கவில்லை.

அதாவது அவரை மெசியா என்று விசுவசிக்கவில்லை.

ஒரு ஒப்புமை.

ஒரு கடைக்குப் போகிறோம். கடைக்காரர் விற்பதற்காக ஏராளமான பொருட்களுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

கடையில் உள்ள அத்தனை பொருட்களும் விற்பனைக்காகத்தான்.

நாம் கடையில் போய் நிற்கிறோம்.

கடைக்காரர் பொருட்களை விற்பதற்குத் தயாராக இருந்தும் நம்மால் பொருட்களை வாங்க முடியவில்லை.

ஏனெனில் நம்மிடம் பைசா இல்லை!

நமது ஆன்மீக வாழ்வில் நமக்கு உதவுவதற்காக இறைவன் அளவு கடந்த அருள் வரங்களுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

நமக்கு இறைவன் மீது விசுவாசம் இருந்தால் வேண்டிய அளவு அருள் வரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் விசுவாசம் இல்லாவிட்டால் எதையும் பெற முடியாது.

கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொன்ன இயேசு நாம் கேட்டதைக் கொடுப்பார், விசுவாசத்துடன் கேட்டால்.

ஆனால் நம்மில் சிலர் விசுவாசம் என்ற வார்த்தையின் பொருளைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்.

விசுவாசம் என்றால் என்ன?

ஒரு ஒப்புமை.

ஒரு தகப்பனார் தன் மகனைப் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிச் சென்று அங்கே ஒன்பதாவது வகுப்பில் Admission போடுகிறார்.

மகன் மாணவனாக மாறுகிறான்.

வகுப்பில் பாடம் நடத்துபவரை ஆசிரியராக ஏற்றுக்கொள்பவன் அவரது மாணவன்.

ஆனால் ஏற்றுக் கொண்டால் மட்டும் மாணவனாகி விடுவானா?

அவரை ஏற்றுக்கொள்வதோடு அவர் போதிக்கும் கல்விக்கு அவனை முற்றிலுமாக அர்ப்பணிக்க வேண்டும்.

அப்படி அர்ப்பணிக்காமல் தினமும் வகுப்புக்கு போய் வருவதாக மட்டும் இருந்தால் பெயருக்கு அவன் மாணவனாக இருக்கலாம், ஆனால் உண்மையில் மாணவன் அல்ல.

ஆசிரியரிடம் கல்வி கற்பவன் தான் மாணவன்.

ஆசிரியர் சொல்வதை ஒரு காது வழியே வாங்கி இன்னொரு காது வழியே விட்டு விடுபவன் மாணவன் அல்ல.

இயேசுவை விசுவசிப்பவன் விசுவாசி.

இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொள்வதோடு அவர் தரும் மீட்புக்கு தன்னையே அர்ப்பணித்து வாழ்பவன் தான் விசுவாசி.

இயேசுவை ஏற்றுக் கொள்கிறேன் என்று வாயினால் சொல்பவன் அதனால் மட்டும் விசுவாசி ஆகிவிட முடியாது.

தனது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் இயேசுவுக்குத் தன்னையே அர்ப்பணித்து 'வாழ்பவன்' தான் விசுவாசி.

Underline 'வாழ்பவன்'.

தனது விசுவாசத்தால் இயேசுவோடு ஒன்றித்து வாழ்பவன் 

அவர் என்ன சொன்னாலும்,

அவர் அவனில் எப்படி செயல் புரிந்தாலும் முழு மனதோடு ஏற்றுக் கொள்வான்.

பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணி புரிபவர் பள்ளிக்கூட மணி அடிப்பதற்கு முன் பள்ளியில் இருக்க வேண்டும்.

பள்ளிக்கூட மணிக்கு அவர் கட்டுப்பட வேண்டும்.

அவர் நினைக்கிற நேரத்திற்கு மணி அடிக்க முடியாது.

அதுபோல விசுவாசி இறைவனது விருப்பத்துக்கு கட்டுப்பட வேண்டும்.

இறைவனை அவனுடைய விருப்பத்துக்குக் கட்டுப்படுத்த விரும்பக் கூடாது.

"இறைவா, உமக்கு விருப்பம் இருந்தால் எனக்கு முதல் குழந்தையாக ஆண்மகனை தாரும்."

என்று அவரிடம் வேண்டினாலும்,

அவர் பெண் மகவைத் தந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குழந்தையையே தராவிட்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவன் தான் உண்மையான விசுவாசி.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment